பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

▼

பக்கங்கள்

▼

ஞாயிறு, 30 ஜூன், 2024

உயிரைக் கொடுத்தும் சமதர்மம் காப்போம் ! – தந்தை பெரியார்

 

உயிரைக் கொடுத்தும் சமதர்மம் காப்போம் ! – தந்தை பெரியார்

2024 ஏப்ரல் 16-30, 2024
உண்மை Unmai

சமதர்மம் என்பது பேத தர்மத்துக்கு மாறான சொல். இந்த இடத்தில் நாம் அதை எதற்குப் பயன்படுத்துகின்றோம் என்றால், மனித சமுதாய வாழ்க்கைக்கு – மனுதர்மத்திற்கு எதிர்தர்மமாகப் பயன்படுத்துகின்றோம். மனித சமுதாயத்தில் பேதநிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே மனுதர்மம் செய்யப்பட்டது.

பேத நிலைக்குக் காரணம் என்ன?

சமுதாயத்தில் பேத நிலையானது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
ஒன்று : மனிதன் பிறவியில் உயர் ஜாதியாய் அல்லது தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கின்றான் என்பது.
இரண்டு : மனிதன் (பிறவி காரணமாகவே) வாழ்வில் செல்வவானாய் ; ஏழையாய் வாழ்கின்றான் என்பது.
இந்த இரண்டும்தான் இன்றைக்கு உலகில் மனித சமுதாயத்துக்கு கவலையும் இழிவும் தந்து வருகின்றது. மனிதனுக்கு இழிவு ஏற்படக் காரணம் பிறவியினால் என்று ஏற்படுத்தப்பட்ட ஜாதி. மனிதனுக்குக் கவலை ஏற்படக் காரணம், செல்வத்தில் தனக்கு மேலானவன் உள்ளான் என்ற பேதத்தினாலானதுதான்.

அறிவின் பயன்?
இந்த ஜீவப் பிராணிகளில் அதிகமான அறிவு கொண்டவன் மனிதன் ஆவான். அந்த அறிவு மனிதனுடைய நன்மைக்குப் பயன்படுகின்றதா? தீமைக்குப் பயன்படுகின்றதா? என்று பார்த்தால் தீமைக்குப் பயன்படுகின்றது. தீமைக்குப் பயன்படுகின்ற காரணம், தனக்கு மேல் உயர்ந்த ஜாதி இருக்கின்றது என்ற அமைப்பும், தனக்கு மேல் செல்வவான் உயர் வாழ்வு வாழ்கின்றான், அதிக செல்வம் வைத்து இருக்கின்றான் என்ற எண்ணமுமேயாகும்!

பேதமில்லாதபோதுதான் கவலையற்ற நிலை

ஜாதி உயர்வு தாழ்வும் செல்வ உயர்வு தாழ்வும் இல்லாத இடத்தில் வாழ்வில் பேதமோ: கவலையோ ஏற்பட இடம் இருக்காது. வேறுவிதமான
குறைபாடுகள் பல மனிதனுக்கு இருந்தாலும் அதாவது நோய், வெய்யில், குளிர் முதலிய கஷ்டங்கள் தொல்லைகள் இருந்தாலும் அவை இயற்கையின் பாலபட்டவை ஆனதினால் அவைகளைப் பற்றி மனிதன் கஷ்டம் அடைந்தாலும் கவலைப்படுவது இல்லை.

ஜாதியும் செல்வமும் இயற்கை அல்லாமல் செயற்கையாய் ஏற்பட்டது ஆனதினால் மனிதன் கவலைப்படுகின்றான் அதனால்தான் செயற்கை முயற்சிகளால் இந்தப் பேதங்கள் ஒழிக்கப்படலாம் என்ற தன்மையில் இதற்குச் சமதர்மம் என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது.

உதாரணமாக நமது கையில் அய்ந்துவிரல்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுக்கு ஒன்று பேதம் காணப்படுகிறது. இந்தப் பேதத்தை நீக்க நாம் முயற்சிப்பது இல்லை. இந்தப் பேத அசவுகரியத்தாலும் நாம் கவலைப்படுவதும் இல்லை. காரணம் என்னவென்றால், இந்தப் பேதம் இயற்கையானது; நம்மால் பரிகரிக்க முடியாது. ஆகையால் நாம் அந்தப் பேதத்துக்கு ஏற்றபடி நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளுகின்றோம். மழைக்கு ஒதுங்கி நிற்கின்றோம்; குடை பிடித்துக் கொள்ளுகின்றோம். குளிருக்குப் போர்வை போட்டுக் கொள்ளுகின்றோம். வெய்யிலுக்கு நிழல் செய்து கொள்ளுகின்றோம்.

மனுதர்ம பேதநிலை செயற்கையே பேத தர்மமாகிய மனுதர்மத்தை நிலை நிறுத்த இயற்கைக் காரணம் ஒன்றும் சொல்லாமல் மனுதர்மவாதிகள் பேதமானது கடவுளால், மதத்தால், சாஸ்திரங்களால், ஒவ்வொரு மனிதனும் முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களால் (கர்மங்களால்) ஏற்பட்டவை என்று பொய்யான, காரணங்களைச் சொல்லி செயற்கை முறையில் ஏற்படுத்திவிட்டார்கள். அது போலவேதான் செல்வத்தையும், காரணம் சொல்லி உயர்வு தாழ்வு இருக்கும்படி செய்துவிட்டார்கள்.

சமதர்மத்துக்கான முயற்சி

இப்போது மனித சமுதாயத்தின் இழிவையும் குறைபாடு கவலையையும் ஒழிப்பதற்காகவே சமதர்மத்திட்டத்தை மனித சமுதாயத்தின் வாழ்வில் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றோம் இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு கடவுள், மத சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருக்கக்கூடாது. பேத அமைப்பு உள்ள சாஸ்திர சம்பிரதாய
முறைகளையும் ஸ்தாபனங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற – ஒழிக்கத் துணிவுகொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள்ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.

ஒரு மனிதன் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று முயற்சிப்பானேயானால் – கூறுவானேயானால் “ஜாதி கடவுளால் – மதத்தால் – சாஸ்திரத்தால் ஏற்படுத்தப்பட்டது. ஒழிக்கக்கூடாது” என்று கூறுவானேயானால் மக்களில் பெரும்பாலோர் கடவுள், மத, சாஸ்திரங்களில் நம்பிக்கை, பற்று உள்ளவர்களாக இருந்தால் அந்த இடத்தில் அவன் எப்படி ஜாதி ஒழிப்பை மேற்கொள்ள முடியும்.

கடவுள் நம்பிக்கை ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்

கடவுள், மதம், சாஸ்திரங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; அவற்றை நான் நம்புவது இல்லை; அப்படிப்பட்ட கடவுள், மத சாஸ்திரங்களை நான் பொருட்படுத்தமாட்டேன் என்று சொல்லத் துணிந்தால் ஒழிய, ஜாதியை ஒழிக்க முடியுமா? ஒழிக்கத்தான் அவனுக்குத் துணிவு வருமா?

“அரசு அன்றே கொல்லும்”
கடவுள், மத சாஸ்திரங்களைப் போலத்தான் அரசாங்கச் சட்டமும் இருந்து வருகின்றது கடவுள், மத சாஸ்திரங்களைவிட அரசாங்கத்துக்குப் பலம் அதிகம். கடவுள் மத சாஸ்திர சட்டங்களை மீறினால் அடுத்த ஜென்மத்தில்தான் தண்டனை என்பார்கள். அரசாங்கச் சட்டத்தை மீறினாலோ உடனே தண்டனை
வரும். அப்படி இருந்தும் நாம் பல காரியங்களுக்கு சட்டத்தை மீறுகின்றோம். அப்படி இருக்க அதைவிட சக்திக்குறைவானதாய் இருந்துவரும் பெரிதும் கற்பனையான கடவுள் மத சாஸ்திரங்களை மீறக்கூடாது என்று ஒருவன் கருதுவது மடமையும் கோழைத்தனமும் பலருக்குச் சுயநலமும் அல்லாமல் வேறு என்னவாய் இருக்க முடியும்?
சமதர்மவாதிக்குத் துணிவு வேண்டும்

ஆனாதினாலேயே சமதர்மவாதிகள் – சமதர்மம் காண முயற்சிப்பவர்கள் முதலில் கடவுள், மத சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையை மாற்றிக்கொண்டு சட்டம் மீறுவதனால் ஏற்படும் அரச தண்டனைக்கும் துணிந்து இறங்குவது அவசியமாகும். அந்த துணிவு ஏற்பட்ட இடங்களில்தான் சமதர்மம் ஏற்படும்; ஏற்பட்டும் இருக்கின்றன. நாட்டில் மனித சமுதாயத்தில் மனுதர்மம் என்னும் பேத தர்மம் ஏற்பட்டதற்கும் நிலைத்து இருப்பதற்கும் அரசாங்கமே காரணமாகும்.

என்றைய தினத்திலிருந்து நமக்கு அரசர்களின் சரித்திரம் தோன்றுகின்றதோ அன்று முதலே அரசர்களுக்கும் மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக இருந்து
வந்து இருக்கின்றது அந்த அரசாங்கங்களால்தான் மனுதர்மமும் ஜாதி பேதமும் செல்வ பேதமும் பாதுகாக்கப்பட்டு வந்து இருக்கின்றது. அதற்கு ஆதரவாக ஜாதியால் உயர்ந்த மக்களும், செல்வத்தால் உயர்ந்த மக்களும் அரசாங்கத்துக்குப் பாதுகாப்பு அளித்து வந்து இருக்கின்றார்கள்.

சமதர்மத்துக்கு அரசு இணக்கம்; பார்ப்பனர் செல்வர் எதிர்ப்பு !

இன்று நமது கிளர்ச்சிகளால் சமதர்மத்துக்கு அரசாங்கம் இணங்கி வந்தாலும் ஜாதியாலும், செல்வத்தாலும் உயர்ந்த மக்கள் சமதர்ம முயற்சியைக் கெடுக்க அரசாங்கத்தை எதிர்த்துத் தடை செய்ய முயற்சித்துத்தான் தீர்வார்கள். சமதர்மவாதிகள் தங்கள் சமதர்ம முயற்சி என்பதை சமதர்மத்தை எதிர்த்துத் தடை செய்யும் உயர்ஜாதிக்காரர்கள், செல்வவான்கள் ஆகியவர்களோடு போராடி அவர்கள் தடையைச் சமாளித்து சமதர்மம் ஏற்பட அரசாங்கத்துக்கு உடல் பொருள் ஆவியை இழக்கும் அளவுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது கடமை என்று உணரவேண்டியுள்ளது. சமதர்மத்துக்கு உயிரையும் பணயம் தரவேண்டிவரும் இதில் பலாத்காரம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுமானால் அவற்றிற்கும் சமதர்மவாதிகள் ஆயத்தமாகவே இருந்து சமாளிக்க வேண்டியதும் கடமையாகும்.”

( திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பிரச்சாரப் பயிற்சி முகாமில் தந்தை பெரியார் அவர்கள் 25.6.1965 அன்று ஆற்றிய அறிவுரை )

parthasarathy r நேரம் 9:53 AM கருத்துகள் இல்லை:
பகிர்

எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து சுமக்கிறானா?

பெரியார் பேசுகிறார் 


 பெரியார் மார்ச் 16-31,2023
உண்மை Unmai

தந்தை பெரியார்

என்னையோ அல்லது திராவிடர் கழகத்தாரையோ இன்று ஆரியம் தூற்றுகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்கள் கடவுளைப் பழிக்கிறோம் என்பதற்காகவே அல்ல. கடவுளுக்கேன் கோயில்கள், பூஜைகள், தேவடியாள்கள் என்று கேட்கிறோம் என்பதற்காகவோ அல்லது “நாங்கள் ஏன் சூத்திரர்கள் ? எங்கள் தாய்மார்கள் ஏன் சூத்திரச்சிகள்? எங்கள் தோழர்கள் ஏன் சண்டாளர்கள்? நீங்கள் மட்டுமேன் பிராமணர்கள்?” என்று வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்துக் கேட்பதால்தான். இதை அறியாமல் எங்களை நாஸ்திகர்கள் என்று நீங்களும் சேர்ந்து தூற்றுவீர்களானால் நான் என்ன கூற முடியும்? அந்த அளவுக்கு நமக்குள்ளாகவே அவன் உண்மைச் சூத்திரர்களை உண்டாக்கி நம்மை மானங்கெட்ட சமுதாயமாக்கி விட்டான் பார்ப்பான் என்றுதானே கூறமுடியும்?

என்னதான் மதத்திலோ கடவுளிடத்திலோ பக்தியிருந்தாலும் கூட, ஒருவனுக்கு மானமிருந்தால், தன் மகளை, தன் சகோதரியைக் கடவுளுக்கு என்று பொட்டுக் கட்டி, ஊருக்கு உபகாரத்திற்கு விடுவானா? எந்தப் பார்ப்பானாவது தன் மகளைக் கடவுளுக்குப் பொட்டுக் கட்டிக்
கொள்ள அனுமதித்திருக்கின்றானா? எந்தப்பார்ப்பானாவது தன் மகளைத் “தேவடியாளாக்கிக்” கடவுள் முன்னிலையில் சதிராட விட்டிருக்கிறானா? எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து அவன் சுமக்கிறானா? எந்தப் பார்ப்பானாவது உங்களைப் புரோகிதத்துக்கு வைத்து சடங்கு செய்து பார்த்ததுண்டா? மானமிருந்தால், அவன் உங்களை இவ்வளவு இழிவு படுத்தியிருக்கும்போதும், இழிவுபடுத்தி வரும்போதும், இன்னும் உங்கள் அறிவை அவனுக்கு அடிமைப் படுத்திவிட்டு அவன் உங்கள்மீது சவாரி செய்யப் பார்த்துக் கொண்டிருப்பீர்களா? இதைத்தானே நாங்கள் கேட்கிறோம்? இஷ்டப்பட்டால் நீங்கள் கோயிலுக்குப் போங்கள்.. வேண்டாமென்று கூறவில்லை. பக்தி பரவசமாகி, ஆனந்தக் கூத்தாடுங்கள். அதையும் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அந்த அழுக்குப் பிடித்த பார்ப்பானுக்கு ஏன் தலை வணங்குகிறீர்கள்? அவன் மொழிக்கு ஏன் அடிமையாகிறீர்கள்? என்றுதானே உங்களைக் கேட்கிறோம். இதுவா நாஸ்திகம்? இதுவா துவேஷம்?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஏன் அவர்கள் பாடுபடாமல் வாழக் கொடுத்து கும்பிட்டு, அவர்களின் “தாசிகளாக, தாசி மக்களாக” வாழவேண்டும்? அவர்கள் ஏன் உங்கள் காசை ஏமாற்றிப் பறித்துக்கொண்டும், பிராமணர்களாக _ உங்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக _ இருக்கவேண்டும் என்று தானே நாங்கள் கேட்கிறோம்? இந்த ஆரியக் கொடுமை ஏமாற்றம் என்றோ அழிந்திருக்காதா? ஆரியத்தை வளர்க்க உதவிய இக்கோயில்களும், இக்குழவிக்கல் சாமிகளும் சாஸ்திரங்களும் மத சம்பிரதாயங்களும் என்றோ இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுத் தரைமட்டமாகி இருக்காதா? நீங்கள் ஏன் ஈனமாய் மானமற்று வாழவேண்டும் என்று கேட்டால் அதற்கா என்மீது நீங்கள் பாய்வது? நீங்கள் ஏன் சூத்திரர்கள்? அவர்கள் ஏன் பிராமணர்கள் என்று கேட்டால் அதற்கா நீங்கள் என்மீது காய்வது?

அந்தப் பார்ப்பனர் ஒரு பெரிய சமுதாயத்தையே மதம் என்ற பேரால் கடவுள் என்ற பேரால் மானங்கெட்ட மடையர்களாக்கி. அவர்களில் தப்பித் தவறி ஓரிருவர் அறிவு கொண்டு சிந்திப்பார்களானால், அவர்கள் மீதும் அம்மடையர்களையே ஏவிவிட்டுக் கெடுத்து வருவானாகில், அதை நீங்களும் ஆதரித்து வருவதா? சற்றேனும் மான உணர்ச்சி இருந்தால், சிறிதாவது பகுத்தறிவு கொண்டு, பொறுமையோடு சிந்தித்துப் பாருங்களேன். உங்கள் மகான்களும் உங்கள் ரிஷிகளும் உங்களின் இந்த மானங்கெட்ட தன்மையைக் கண்டித்திருக்கிறார்களா? நீங்கள் அன்றாடம் தொழும் தெய்வங்களாவது இதைப் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? உங்கள் அரிசி பருப்பையெல்லாம் உண்டு வாழும் அத்தனை சாமிகளும் இன்று வரைக்கும் அந்த நாற்றம் பிடித்த பார்ப்பானைத்தானே தமக்குப் பூசாரியாக வைத்துக் கொண்டிருக்கின்றன? அய்யோ, பாவம்! வெறுங் கூழாங்கல்லைக் கடவுளென்று நம்பி நீங்கள் போனால் அதற்கு அந்த உயிரற்ற, பேச்சு மூச்சற்ற கல்லென்ன செய்தல் கூடும்?
அன்றைய ரிஷிகள், மகாத்மாக்கள்தான் தொலைந்து போகட்டுமென்றால், இன்றைய மகாத்மாக்கள், ரிஷிகள் மட்டுமென்ன, அவர்களை மிஞ்சிவிட்டனர்?

இந்த வர்ணாஸ்ரம தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் ஒரு வார்த்தை கூறியிருப்பார்களா  இந்தக் காந்தியார், இந்த இராஜகோபாலாச்சாரியார்? அவர்கள்தான் போகட்டுமென்றால், இந்த முனிசாமிப் பிள்ளையாவது, சிவஷண்முகம் பிள்ளையாவது கேட்டிருப்பார்களா, தான் ஏன் பஞ்சமன் என்று? இவர்கள் வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை கூறியிருந்தால்கூட, இவர்கள் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்க முடியாதே! இன்றுதான் என்ன? ஒருவார்த்தை எதிர்ப்பாகக் கூறி விட்டால்கூட, அன்றே பழிக்க ஆரம்பித்த விடுமே அவர்களை இந்த ஆரியப் புல்லுருவிக் கூட்டம்.! எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள்? ஆதரித்தவர்கள் என்ன ஆனார்கள்? என்று கூறுகிறேன், கேளுங்கள்.

ஆரியத்தை எதிர்த்த கபிலரை உங்களுக்குத் தெரியுமா? பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று கூறி ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவரை உங்களில் எத்தனைபேர் அறிவீர்கள்? அவர்கள் இயற்றிய அகவலை குறளைத்தான் உங்களில் எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? ஜாதியிரண்டொழிய வேறில்லை என்று நாலுஜாதி முறையை எதிர்த்த அவ்வையை உங்களுக்குத் தெரியுமா? இதற்கு மாறுபட்டு, ஆரியத்தை ஆதரித்த, அன்னக் காவடிப் பார்ப்பானைப் பிராமணன் என்று உயர்த்தி மதித்த, ஒரு “ராமனை”யோ ஒரு “கிருஷ்ணனையோ” உங்கள் வீட்டு மாட்டுக்காரப் பையனுக்குக்கூடத் தெரியுமே! திருடிய கிருஷ்ணனுடைய கீதை, ஒழுக்க ஈனமாக நடந்த கிருஷ்ணனுடைய கீதை, உங்களை “நான்தான் சூத்திரனாகப் படைத்தேன், நாலு வர்ணங்கள் உண்டு’’ என்ற கீதை, உங்களுக்குப் பிரார்த்தனைப் புத்தகம்! அவன் உங்கள் கலியுக தெய்வம்! ஆனால், அருள் கபிலனும் தெய்வப் புலவனாம் திருவள்ளுவரும் கலைப்பிறவி அவ்வையும் உங்களுக்குப் பறச்சி வயிற்றில் பிறந்தவர்கள் என்பதோடு அவர்களுடைய பாடல் உங்களுக்குத் தெரியாது.

அதாவது திருவள்ளுவர், கபிலர், அவ்வை ஆகியவர்கள் ஆதி என்ற சூத்திரச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவர்களாம். நீங்கள் போற்றும் தொல்காப்பியரும் ஆரியனுக்குப் பிறந்தவராம். அப்படிக் கெட்டிக்காரத்தனமாக எல்லா உயர்வுகளையும் தன் இனத்தவரே அடையவேண்டும் என்றும் அவன் பாடுபட்டு வரும் போது, அதைக் கண்டும் நீங்கள் வாளாவிருப்பீர்கள் ஆனால், உங்களை மானமுள்ள மக்களாக எப்படி மற்ற மக்கள் கருத முடியும்? மானமிருந்தால் தோழர்களே! நீங்கள் மனிதத்தன்மை பெற எங்களோடு ஒத்துழையுங்கள். இன்றேல் சற்று ஒதுங்கியாவது நில்லுங்கள். ஆரியத்திற்குக் கையாளாக விபீஷணர்களாகவோ, அநுமார்களாகவோ ஆகாதீர்கள்!
நீங்கள் ஏன் சூத்திரர்கள்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். சூத்திரர் என்றொரு வர்க்கம் இருப்பானேன் _ அதுவும் இந்த ஞானபூமியில்? இந்த புண்ணிய பூமியில் மட்டும் இந்த இழிவர்க்கம் இருப்பானேன்? வேறெந்த நாட்டிலாவது சூத்திரர்கள், பிராமணர்கள் உண்டா? நாகரிகமில்லாத முரட்டு மக்களான நீக்கிரோக்களில் கூட பிராமணன் – சூத்திரன் இல்லையே? இருளடைந்த பனிக்கட்டியினூடே பச்சையாக மக்களைத் தின்று வாழும் எஸ்கிமோக்களில்கூட இல்லையே இந்த உயர்வு தாழ்வு?

பாரதமாதா புத்திரன் என்று கூறிக்கொள்ளும் அன்பனே! பாரத மாதவுக்கு ஜே போடும் வீரனே! உன் பாரத மாதாவுக்கு மட்டும் எப்படி
நாலு அய்ந்து ஜாதிப் புத்திரர்கள் பிறந்திருக்க முடியும்? அப்படியானால் பாரதமாதா புத்திரர்
களுக்கு நாலு தகப்பன்மார்களா? ஒரே ஒரு ஜாதியா? எப்படி இருக்க முடியும்? இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? ஏன் இப்படிப் பித்தலாட்டம் செய்து ஒரு தாய்க்கு நாலு ஜாதிப் பிள்ளைகள் என்று மானமற்று எங்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்?
உங்களைச் சூத்திரர்கள் என்ற கூறுவது எது? இந்து மதம்தானே உங்களைச் சூத்திரர்-களாக்கி வைத்திருக்கிறது? நீ உன்னை இந்துவென்று கூறிக் கொள்வதால்தானேஅதன் வர்ணாஸ்ரம தர்மத்திற்குக் கட்டுப்பட்டாக வேண்டியிருக்கிறது? இந்து மதக் கடவுளை ஒப்புக் கொள்வதால்தானே நீ சூத்திரனாக்கப்பட்டிருக்கிறாய்? அதைக் கும்பிடப் போவதால் தானே கடவுள் அறைக்கு வெளியில் நின்று குனிந்து தாடையில் அடித்துக் கொள்ளுகிறாய் தம்பி!

பித்தலாட்ட முட்டாள் தனமான கதையை நீ யோசித்துப் பார்! உன்னை உற்பத்தி செய்தவர் பிரம்மாவாம்! அந்தப் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்கள் பிராமணர்களாம். அவரின் தோளிலிருந்து வெளிப்பட்டவர்கள் சத்திரியர்களாம். அவரின் இடுப்பிலிருந்து வெளிப்பட்டவர்கள்தான் வைசியர்களாம். அவரின் காலிலிருந்து வெளிப்பட்டதால் தான் (நீ) சூத்திரனாம். பிரம்மாவிற்குப் பெண்டாட்டி ஒருத்தி இருக்கும்போது, புருஷனுக்கு இந்த வேலை எதற்கு? அது முடியுமா? பிரம்மா ஆணா பெண்ணா?அதுதான் போகட்டுமென்றாலும், பிறப்புவிக்கும் வசதி பல இடங்களில் ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? கீதையில் கிருஷ்ணன், தான் 4 ஜாதிகளைப் பிறப்பித்ததாகச் சொல்லுகிறானாம். 4 பேரையும் பிரம்மா பிறப்பித்து இருந்தால் பிராமணனுக்கு மாத்திரம் பிரம்ம புத்திரன், பிரம்ம குலத்தன் என்கின்ற பெயர் ஏன்? கீழ் பாகத்தில் பிறந்தால் மட்ட ஜாதியா? பலா மரம் அடியிலும் காய்க்கிறது. மேலும் காய்க்கிறது. தன்மையில் ருசியில் பேதமுண்டா? முட்டாள் தனத்துக்கும் அக்கிரமத்திற்கும் ஓர் எல்லை வேண்டாமா? பாடுபட்டு உழைத்துக் கோவில் கட்டிப் படியளக்கும் நம்மையா இந்தத் தெய்வங்கள் காலிலிருந்து பிறந்த மக்களாக ஆக்கவேண்டும்? பாடு உழைப்பு என்பதையே கண்டறியாத ஒரு காசுகூட தெய்வத்திற்கு என்று கொடுத்தறியாத, சாமியையும் ஏமாற்றி சாமிக்கு ஆக நாம் கொடுப்பதில் வயிறு வளர்க்கும் அவனையா தன் முகத்தில் இருந்து பிறந்த பிராமணனாக ஆக்கவேண்டும்? இதைச் செய்யும் அல்லது அனுமதிக்கும் ஒரு கடவுளும் நமக்குக் கடவுளாக இருக்கக்கூடுமா? நாம் தொட்டால் தன் உயிர் போய்விடும் என்று கூறும் கடவுளும் நமக்குக் கடவுளா?

என் வண்ணாரத் தோழனும் என் சக்கிலித் தோழனும்கூட இன்று தந்தி கொடுக்கலாம்; தொலைபேசியில் பேசலாம். அவர்களும்கூட ஆகாயக் கப்பலேறி உங்கள் தலை மீதும் உங்கள் சாமி தலை மீதும் உங்க சாமி கோயில் கோபுரங்களுக்கும் மேலே கூட பறக்கலாமே, 1 மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், இவற்றை எல்லாம் அநுபவிக்க அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கும் போது இந்த அசையாத குழவிக்கல் கடவுளை மட்டும் இந்த அழுக்குப் படிந்த பார்ப்பான் மட்டுமேவா தொடவேண்டும்? சூரத்திற்கும் வீரத்திற்கும், ஆற்றலுக்கும் அறிவுக்கும், ஆண்மைக்கும், அன்புக்கும், அழகுக்கும், அரசுக்கும் ஆகிய அத்தனைச் சிறப்புகளுக்கும் காரண பூதர்களாயிருந்த இருக்கிற மக்களின் சந்ததியார்களாகிய நாம் சூத்திரர்களாக்கப்பட்டது எந்தக் காலத்தில்? நம்மைச் சூத்திரர்களாக்கியது யார்? ஆரியரா? கடவுளா?

ஆரியர் இந்நாட்டில் குடியேறிய பின்னர் தானே அவர்கள் நம்மை வேசி மக்கள் என்று ஏசியிருக்கவேண்டும்? அதற்கு பின்புதானே நாம் சூத்திரர்கள் ஆனோம்? அதற்கு முன்பே நாம் சூத்திரர்களானால் நம்மை நம் கடவுளேவா வேசி மக்கள் என்று அழைத்திருக்கும்? அப்படி இருந்தாலும் அதை நாம் கடவுளென்றுதான் ஒப்புக்கொண்டிருப்போமா? ஆகவே, 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கேயோ மத்திய ஆசியாவிலிருந்து ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு புல் தரைதேடி பிச்சை எடுத்துப் பிழைக்க வந்த ஆரிய மலைவாசிக் கூட்டம்
தான், அவர்களின் யாகத்தையும் சோம சுராபானத்தையும் வெறுத்தமைக்காக நம் முன்னோர்களை வேசி மக்களென்று – சூத்திரர்களென்று பழித்தது.
அதை இந்தப் பகுத்தறிவு விஞ்ஞான காலத்திலும் மானமின்றி ஒப்புகொண்டு அவர்களுக்குத் தாசானுதாசர்களாய் இருந்து வருவதால் தான் இன்னும் அவர்கள் நம்மை ஏய்த்து வருகிறார்கள்? நீங்களும் ஏன் என்று கேளாது ஏமாந்த சோணகிரிகளாய் இருந்து வருகிறீர்கள். இதுவரை யார் சிந்தித்தார்கள், இவ்விழிவு பற்றி? ஏதோ நான் பலரைச் சேர்த்துக்கொண்டு இவ்விழிவு நீக்க வேலையையே முக்கியமாகக் கொண்டு பணியாற்றி வருவதால், சிலர் இவ்விழிவை உணர்ந்து பணியாற்ற வந்திருக்கிறீர்கள். இதைக் கண்ட ஆரியக் கூட்டம் தன்செல்வாக்கு அழிகிறதே என்று என்னைத் தூற்றுமானால், என் அன்பனே! நீயுமா அத்துடன் சேர்ந்து கூப்பாடு போடுவது? அவனுக்குத்தான் வருவாய் போய் விடுகிறதே, தன் உயர்வு போய்விடுகிறதே என்று வருந்தி வாய்குன்றி ஏதோ பிதற்றுகிறான். அவனுடைய தவற்றை நாங்கள் எடுத்துக் கூறினால், திராவிடனே உனக்கு என்னத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரவேண்டும்? நீ ஏனப்பா வேதனைப்படுகிறாய்? உனக்கு வேதனையாயிருந்தால் அவனுக்குப் போய் நியாயம் சொல்லி அவனை மாற்றிக்கொள்ளும் படி செய்யேன். அதை விட்டு விட்டு என் உயிரை ஏனப்பா வாங்குகிறாய்?

எனக்கு மட்டுமா பாடுபடுகிறேன்? உனக்கும் உன் குடும்பத்துக்கும் உன் சந்ததியாருக்கும் சேர்த்துத் தானப்பா நான் சூத்திரப்பட்டம் போகவேண்டுமென்று பாடுபடுகிறேன். ஜாதிப் பிரிவினை கூறும் இந்து மதத்தையும் அதற்கு ஆதாரமாயுள்ள சாஸ்திரங்களையும் புராணங்களையும் இவற்றை ஒப்புக்கொள்ளும் கடவுளையும் நான் குறைகூறினால் திராவிட காங்கிரஸ் தோழனே! உனக்கேன் தம்பி கோபம் வருகிறது? என்னைச் சூத்திரன் என்று இவை கூறுவது எனக்கு அவமானமாயிருந்து வருவதால் இவற்றிலுள்ள குறையை எடுத்துச் சொல்கிறேன். உனக்கு மானமில்லை யென்றால் உன்னை வேசி மகன் என்று இவை கூறுவதை நீ ஒப்புக்கொள்வதாயிருந்தால், ஒதுங்கியிரேன் ஒரு புறத்தில்!

(14.12.1947 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார்

சொற்பொழிவு) – ‘விடுதலை’, 23.12.1947

parthasarathy r நேரம் 9:48 AM கருத்துகள் இல்லை:
பகிர்

மூட நம்பிக்கைகளை மாய்த்து மனிதத் தன்மையை வளர்க்கவும்

 


பெரியார் பேசுகிறார் ! 

 ஜனவரி 1-15, 2023
உண்மை இதழ்

தந்தை பெரியார்

இது பகுத்தறிவுக் காலம்; புரட்சி யுகமாகும்; மூட நம்பிக்கைகள் சரிந்து பகுத்தறிவுக் கொள்கைகள் மலை போல வளரும் காலம் இது என்று குறிப்பிட்டு, அதற்குப் பல உதாரணங்களையும் எடுத்துச் சொன்னார்கள். அவதார புருஷர் வாக்கு, ரிஷிகள் வாக்கு, ராமன் வாக்கு என்பதெல்லாம் காற்றில் பறக்கின்றன. பிரபு வந்து சொன்னாலும் கோவிலை இனி எவனும் கட்டமாட்டான். இருக்கிற கோவில் போதும்; பள்ளிக்கூடம். ஆஸ்பத்திரி கட்டு என்றுதான் சொல்வான். இது புரட்சி யுகம் என்பதற்கு சக்கரவர்த்திகள், சமஸ்தானாதிபதிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.
இத்தகைய புரட்சிக் காலத்தில் நம்மை அதற்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்வது தான் புத்திசாலித்தனம். நாம் காட்டுமிராண்டிக் கொள்கைகளைக் கட்டி அழுது கொண்டிருத்தலாகாது.

தென்னாப்பிரிக்கா. இலங்கை, மலாயா முதலிய நாடுகளுக்கு எல்லாம் தமிழர்கள் சென்றது ஏன்? பிறந்த நாட்டில் அவர்கள் சூத்திரர்களாக, இழிமக்களாக ஆக்கப்பட்டதுதானே காரணம்? அந்தச் சூத்திரப் பட்டம் ஒழிந்து நம்மவர்களை மனிதராக்கத்தான் பாடுபடுகிறோம்.
திருக்குறளின் சிறப்புப் பற்றிப் பேசுகையில், “ஆயிரம் தடவை இராமாயணம் படிப்பதும் சரி; ஒரு தடவை திருக்குறள் படிப்பதும் சரி. இராமாயணத்தில் 100 பாடல் படிப்பதும் சரி; குறளில் ஒரு பாட்டு படிப்பதும் சரி. இராமாயணத்தால் அறிவு மழுங்கும்; குறள் படிப்பதால் அறிவு பெருகும்’’ என்றார்.
மக்களுடைய ஒழுக்க நெறியை வகுத்து மேன்மைப்படுத்துவது குறள் என்றார். மேலும் கூறுகையில், என்னைப் பணக்காரன் என்று சிலர் நினைக்கிறார்கள்; எனக்கு ஒன்றுமில்லை; இருக்கிற பணம் எல்லாம் இயக்கத்திற்குத் தான். எனக்கு ஒரு காசு கூட கிடையாது.
(27.12.1954 அன்று சிரம்பான் (மலாயா) பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் உரை
– ‘விடுதலை’, (2.1.1955)

பகுத்தறிவு ஒன்றே மனிதரின் சிறப்புக்குச் சான்று
‘அறிவு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. தாவரங்கள், பட்சிகள், மிருகங்கள் முதல் மனித சமுதாயம் வரை அறிவு என்பது பொதுவாக உள்ளது. ஆனால், இந்த அறிவானது அதனதற்கு வேண்டிய வாழ்க்கையைக் காப்பாற்ற மட்டும் வேண்டிய அளவு இயற்கையால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
மனிதன் தன்னைக் காப்பாற்ற மட்டும் போதிய அறிவை அடைந்து, அதற்கும் மேற்பட்ட அறிவையும் அடைந்திருக்கிறான். அப்படி அதிகமாக அடைந்துள்ள அறிவு தான் பகுத்தறிவு என்று சொல்லப்படுகிறது. மேன் மேலும் எதையும் ஆராய்ந்து அதன் பயனாக விஞ்ஞானத் துறையில் தன் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள முடிகிறது. பண்டைய காலத்தில் காட்டுமிராண்டிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் வாழ்ந்த மக்கள் இன்றைய தினம் மின்சார சாதனங்களையும், வைத்திய சாதனங்களையும் மற்றும் பலவிதங்களிலும் பயன்படுத்திக்கொண்டு மேன்மேலும் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வருகிறார்கள்.

ஆனால், மனித சமுதாயமல்லாத மற்ற மிருகங்கள் போன்ற ஜீவராசிகள் அப்பொழுது எப்படி வாழ்ந்தனவோ, அதேபோல் தான் இப்பொழுதும் வாழ்ந்து வருகின்றன. இதுதான் மனிதனுக்கும், மற்ற ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம்.
இதன்றி, எவனொருவன் பண்டைக் காலத்தில் உள்ள வாழ்க்கையையே மேற்கொண்டு கால மாறுதலுக்கு ஏற்றாற்போல் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லையோ, அவனுக்கும் மற்ற மிருக ஜாதிகளுக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. தொன்றுதொட்டுக் கையாண்டு வருவதையும், இதுதான் என்னுடைய மதத்தின் வழக்கம். சாஸ்திரத்தின் விதி என்று அநாகரிக ஆபாசங்
களைக் கடைப்பிடிப்பவனையுமே பகுத்தறிவு இல்லா ஜீவனுக்கு ஒப்பிடலாம். ஆகவே, பகுத்தறிவின் மேன்மை தெரிந்தவன் இதைப் புறக்கணிக்க மாட்டான்.

ஆனால், இந்நாட்டில் பகுத்தறிவுக்கு இடமளிக்காதவர்களும் எதையும் அறிவினால் ஆராயக் கூடாது என்று கூறுகிறவர்களும் பார்ப்பனர்கள்தான். அவர்கள் கூறுகிறவற்றையே நம்ப வேண்டும். அவற்றின் பித்தலாட்டங்களைக் கண்டித்துக் கேட்கக்கூடாது என்றும், உண்மையறிந்து அதன் வழியில் நடக்கக் கூடாது என்றும் கூறுகிறவர்கள் பார்ப்பனர்கள் தான். காரணம், அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே உண்மையை மறைத்து, பொய், பித்தலாட்டங்களுடன் வாழ்ந்தவர்கள்.

இன்றைய தினம் உண்மையை எடுத்துரைத்தால் அதனால் அவர்கள் வாழ்வதற்கே வழி இன்றிப் போய்விடுகிறது. உண்மையைக் கூறி வாழ முடியாதவர்கள் நேர்மையான முறையில் எதையும் செய்ய முடியாத ஏமாற்றுக்காரர்கள், இவர்களே அயோக்கியர்களின் பட்டியலில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள். இப்படிப்-பட்டவர்கள் இருப்பதால்தான் நம்மக்கள் பகுத்தறிவுக்குப் போதிய சுதந்திரம் கொடுக்க முடியாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியாமையில் மூழ்கி, பார்ப்பனர்களின் அடிமைகளாகவே வாழ்கின்றனர். எனவேதான், என்றைக்கு பார்ப்பனர்கள் இந்நாட்டை விட்டு அகற்றப்படுகிறார்களோ, அன்றுதான் நம் மக்கள் சுதந்திரமுடையவர்களாக ஆக முடியும்.
(திருப்பத்தூர் (வ.ஆ) பகுத்தறிவு மன்றத்தின் சார்பாக 9.2.1955 ‘நியூ’ சினிமா கொட்டகையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை
– “விடுதலை” 14.2.1955)

parthasarathy r நேரம் 9:25 AM கருத்துகள் இல்லை:
பகிர்

பெண்கள் புரட்சி செய்ய வேண்டும்! _ தந்தை பெரியார்

 

பெண்கள் புரட்சி செய்ய வேண்டும்! _ தந்தை பெரியார்


 மே16-31,2024
உண்மை Unmai

தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய, மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மை களையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்குச் சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

parthasarathy r நேரம் 9:16 AM கருத்துகள் இல்லை:
பகிர்

சனி, 29 ஜூன், 2024

பகுத்தறிவைப் பரப்புங்கள்

 


2024 கட்டுரைகள் பெரியார் மார்ச் 16-31, 2024
உண்மை Unmai

தந்தை பெரியார்

“நமது கேடுகளுக்கு எல்லாம் காரணம் மூடநம்பிக்கைகளும் முயற்சியின்மையுமே ஆகும். இதைப் போக்க ஒரே மருந்து மக்களை பகுத்தறிவாளர்களாக்குவதே. பகுத்தறிவைப் பரப்ப துணிவும் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறனும் வேண்டும். எதிர்நீச்சல் பணி இது! எதிலும் பற்றற்றவராகவும், தன்னலமற்றவராகவும், உண்மையாளராகவும் நடந்து, இன்சொல்லால் கழகக் கொள்கைகளை விளக்கி மக்களை ஈர்க்க வேண்டும்.

கழக நூல்களை நன்கு படித்தறிந்து சிந்தித்து- பிறருக்கும் படித்துக்காட்டி விளக்குங்கள்! அறிவுக்கு முதலிடம் அளித்து ஆராய்பவரே பகுத்தறிவுவாதியாக முடியும்; குற்றமற்ற நல்லோருடன் பழகி பிரச்சாரப்பணியை இடையறாது செய்யுங்கள்!”

தோழர்களே! தாய்மார்களே! கழகக் கொள்கைகளை விளக்கி நமது தொண்டினை எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை கழகத்தோழர்களுக்கு விளக்கவே இங்கு கூடியிருக்கிறோம். நமது தோழர்கள் இதை நல்ல வண்ணம் பயன்டுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு நமது கொள்கைகளைப் பரப்புவார்கள் என்று நம்புகின்றேன். இன்றிருந்து இம்மாதம் முடிய திருச்சி மாவட்டத்தில் லால்குடி, கரூர், பெரம்பலூர், அரியலூர் முதலிய இடங்களில் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் அமைத்துக் கொள்கை விளக்கம் செய்ய இருக்கிறோம்.

நம் கழகக் கொள்கையினை முதலில் அறிந்து கொள்வது அவசியம். நம் கொள்கை என்னவென்றால் மூடநம்பிக்கை உள்ள மக்களை பகுத்தறிவுவாதிகளாக்க வேண்டும். நாம் கடவுள்துறை, மதத்துறைகளில் காட்டுமிராண்டிகளாக இருந்து வருகிறோம். காரணம், நாம் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்காததுதானாகும். நமக்குள்ள கேடுகள் அனைத்திற்கும் ஒரே மருந்து- சர்வநோய்களுக்கும் ஒரே மருந்து- சஞ்சீவி போன்ற பகுத்தறிவுதான்: அறிவைப் பயன்படுத்துவதுதானாகும்.
பகுத்தறிவைக் கொண்டு சிந்திப்பதை ஒப்புக்கொள்ளவும், அதை மக்களிடம் பிரச்சாரம் மூலம் பரப்பவும் தைரியம் வேண்டும்.

ஒரு பகுத்தறிவுவாதிக்கு எல்லா காரியங்களிலும் பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து, பகுத்தறிவுப்படி நாட்டைச் சீர்திருத்தி, பலன்பெற வேண்டுமானால் விஷயாதிகளில் எந்தவித பற்றுமிருக்கக்கூடாது. பகுத்தறிவுவாதிக்கு கடவுள் நம்பிக்கை, கடவுள் பற்றிருக்குமானால் அவனால் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கவோ அறியவோ முடியாது. அவனது நம்பிக்கை அவனை வழுவச் செய்துவிடும்.

மதநம்பிக்கை கொண்ட எவனும் பகுத்தறிவுவாதியாக முடியாது. ஜாதி, மதம், கடவுள் சாத்திரம் இவைகளில் எதில் பற்றிருந்தாலும் அவன் பகுத்தறிவுவாதியாக இயலாது. தனது அறிவுக்கு முதலிடம் கொடுத்து அதன்படி ஆராய்ந்து நடப்பவன்தான் பகுத்தறிவுவாதி ஆக முடியும்.

முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் பகுத்தறிவைப் பயன்படுத்தியதால்தான் சமுதாயத்துறை, விஞ்ஞானத்துறை, அறிவுத்துறை முதலிய எல்லாவற்றிலும் முன்னேறியுள்ளனர். பின்னடைந்த நாடுகளிலுள்ள மக்கள் பகுத்தறிவுக்கு முதன்மை கொடுக்காத காரணத்தால்தான் சகலதுறைகளிலும் பின்னடைந்துள்ளனர்.
திராவிடர் கழகத்தினருக்கு முதன்மையாகக் கடவுள் நம்பிக்கை கூடாது. அதுபோல்தான் ஜாதி, மதம், சாத்திரம், பழக்க வழக்கம், பெரியவர்கள் சொன்னது என்பதெல்லாம் அவனவன் அறிவுக்கு வசதிக்குத் தக்கபடி கற்பித்துக்கொண்டவையே கடவுள், மதம் என்பதெல்லாமாகும். இவை நாட்டுக்கு நாடு மாறுபட்டே காணப்படுகின்றன. இதில் உண்மையிருக்குமானால் சூரியன் இருக்கிறது. அது எங்கும் ஒரே தன்மையாகத்தான் இருக்கிறது .அதில் ஒன்றும் மாறுபாடு, விவகாரம் கிடையாது. எல்லா நாட்டுக்கும் எல்லா மதத்திற்கும் ஒரே தன்மையானதேயாகும்.
உண்மையில்லாததில்தான் விவகாரம்; மாறுபாடு இருக்கின்றன.

உண்மைக்கும் உண்மையில்லாததற்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய தொண்டு பொதுத் தொண்டு. நம்முடைய தொண்டிலிருந்து நாம் ஒரு பயனையும் எதிர்பார்ப்பதில்லை. உலகத்திலேயே நாம்தான் நம் தொண்டின் மூலம் எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காதவர்களாக இருக்கிறோம். அதனால்தான் நம்மால் பகுத்தறிவுவாதியாக இருக்க முடிகிறது.

நாம் சிந்திக்க, அதன்படி நடக்க, அதை மக்களிடம் பரப்ப துணிவுடன் முன்வரவேண்டும். இதை வளர்க்கவே இந்தப் பயிற்சி முகாமாகும். இதன் பொருட்டு இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மனமார வரவேற்பதோடு நீங்கள் அனைவரும் நான் சொல்லும் கருத்துகளைக் கவனமாகக் கேட்டு, அவைகளை உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து, உங்களுக்குச் சரியென்று பட்டவைகளை மக்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும் என்பதே எனது ஆசையாகும்.
நம் தொண்டு நாட்டு மக்களை பகுத்தறிவுவாதிகளாகத் திருத்த வேண்டும், பகுத்தறிவைப் பரப்ப வேண்டும் என்பதாகும். நமக்கு எதிரிகளாக உள்ளவர்களுக்கு நாட்டில் பல வசதிகள் இருக்கின்றன. அவர்களுக்கு மூடநம்பிக்கையை வளர்க்க கோயில்கள், உற்சவங்கள், கதாகாலட்சேபங்கள் இவைகள் துணையாக இருப்பதோடு, இதற்கு ஆதாரங்களாக பல புராணங்கள், இதிகாசங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நாட்டிலுள்ள பத்திரிகைகளில் 100ல் 99 ஆதரவாக இருக்கின்றன. நமக்கு உள்ளது ஒரே பத்திரிகைதான். அதையும் நம் தோழர்களே சரியாகப் படிப்பதில்லை. நம் கழகக் கொள்கை விளக்கப் புத்தகங்களை மக்களிடம் பரப்பவேண்டும்.

நாம் எதிர்நீச்சல்காரர்களாக இருக்கிறோம். நாம் சிறிது ஓய்ந்தாலும் நம் கருத்து மிக மிக பின்னோக்கிச் சென்றுவிடும். நம் தோழர்கள் தங்களிடம் மற்றவர்கள் குறை காண முடியாத அளவிற்கு நடந்து கொள்வதோடு, இதனால் பிழைக்கிறோம்- வயிறு வளர்க்கிறோம் என்று கருதாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.
எதிர்கட்சிக்காரர்களில் 1000இல் 999 பேர்கள் அயோக்கியர்களேயாவர். அவர்கள் அதன்மூலம் செல்வாக்கடைந்து வயிறு வளர்க்கின்றனர் என்றாலும் மக்கள் அதைக் கருதுவதில்லை. யாரோ செய்துவைத்த பிரச்சாரத்தால் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நாம் அப்படியல்ல, ஒரு சிறு குறைகூட மற்றவர்கள் சொல்லமுடியாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத் தொண்டாற்றுகிறவர்கள் தனது நேரத்தைப் பாழாக்கிக்கொண்டு தொண்டாற்றுகிறான். எந்த லாபத்தையும் கருதாமல் தொண்டாற்றுகிறான், தன் பொருளைச் செலவு செய்து தொண்டாற்றுகிறான், என்று பொதுமக்கள் கருதும் வண்ணம் தொண்டாற்ற வேண்டும் என்பதோடு, நம் கழகத்தோழர்கள் உண்மையாகத் தொண்டாற்றவேண்டும்.

நாட்டில் நம் கழகத்திற்குச் செல்வாக்கிருக்கிற தென்றால் அது நாம் எந்த சுயநலத்தையும் லாபத்தையும் கருதாமல் தொண்டாற்றுவதாலும் நாம் எவரிடத்திலும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் எங்கு சென்றாலும் நம் கொள்கைகளை வலியுறுத்துவதாலுமேயாகும்.

நாம் சொல்வது உண்மை. மனதில் பட்டதை மறைவில்லாமல் கூறுவதால்தான் நாம் நிமிர்ந்து நிற்கிறோம். அதனால்தான் அரசாங்கத்தையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் துணிவாகக் கண்டிக்கிறோம். அவர்களும் நமக்கு அஞ்சுகின்றனர். நமது கொள்கை தீவிரமாக இருப்பதாலும், மக்கள் கருதி வருவதற்கு மாறுபாடாக இருப்பதாலும் நாம் மிக ஜாக்கிரதையாக இருந்து தொண்டாற்ற வேண்டும்.

பொது மக்களுக்குக் கோபம் வராத வகையில் அவர்களின் மூடநம்பிக்கையையும் அவர்களை மற்றவர்கள் தங்களின் லாபத்திற்கு எப்படி பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதையும் தெளிவாக எடுத்து விளக்கவேண்டும். நான் தீவிரப் பிரச்சாரம் செய்கிறேனென்றால் நான் பல காலமாய் இதைப்பற்றிப் பிரச்சாரம் செய்து வருவதோடு, வயதானவன் என்ற காரணத்தால் மக்கள் என்மேல் ஆத்திரப்படுவதில்லை. ஏதோ பேசுகிறான் என்று எண்ணிச்சென்றுவிடுவர். சிந்திப்பவர்கள் நான் ஆத்திரப்படுவதன் காரணத்தை உணர்ந்து கொள்வர்.

நம் தோழர்கள் தவறாது ‘விடுதலை’ படிக்கவேண்டும். கழகக் கொள்கைகளை விளக்கியும் மூடநம்பிக்கைக் கருத்துகளையும் புராண ஆபாசங்கள் சாத்திரக்கேடுகள் முதலியனவற்றை விளக்கியும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம்.
அவைகளை நம் தோழர்கள் படிப்பதோடு பொது மக்களிடம் இவைகளை விளக்கி அவர்களின் மூடநம்பிக்கையை அகற்ற முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபோல் நம் மதம், சாத்திரம், புராணம் இவைகளைத் தாக்கி கிறிஸ்தவர்கள் முகமதியர்கள் எழுதிய புத்தகங்கள் யாவும் பயனற்றுப்போனதோடு அவர்களும் தற்போது அந்த முயற்சியினைக் கைவிட்டுவிட்டனர். நாம் தான் தொடர்ந்து இவைகளை மக்களிடம் விளக்கி வருகிறோமென்றால் அது மக்கள் நம்மிடம் வைத்துள்ள மரியாதையின் காரணமேயாகும்.

நாம் குற்றமில்லாதவர்களாக நடந்துகொள்வதோடு குற்றமுள்ளவர்களுடன் பழகாமலும் இருக்கவேண்டும்.

(18.6.1965 அன்று லால்குடி அருகில் டோல்கேட் பகுதியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தந்தை பெரியார் ‘பகுத்தறிவு’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரை.) 

parthasarathy r நேரம் 8:23 AM கருத்துகள் இல்லை:
பகிர்

அறிவு கொண்டு சிந்திப்பதே நாத்திகம்!

 


2024 பெரியார் பேசுகிறார் மார்ச் 1-15, 2024
உண்மை Unmai

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி-; உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.
பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைபடுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சியடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்து உள்ளார்கள்.

அறிவைத் தடை செய்யும் ஆயுதங்கள்

மக்களிடையே பகுத்தறிவைத் தடைபடுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படி செய்துவிட்டார்கள்.
பொதுவாக கடவுளைப் புகுத்தியவன் கடவுளுக்கு முதல் நிபந்தனையாக அறிவு கொண்டு கடவுள் பற்றி சிந்திக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஏற்படுத்தினான்.
கடவுள் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டமுடியாத வஸ்து – அறிவுக்கு எட்டமுடியாத வஸ்து; பஞ்சேந்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகும். கடவுள் இந்த அய்ந்துக்கும் எட்ட மாட்டார்; இந்த அய்ந்தும் கொண்டு தேடவும் கூடாது என்பதாகும்.

கடவுள், மதம், சாஸ்திரம்

இந்த இந்திரியங்களை எல்லாம் மீறி சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது. இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளைப் போட்டு கடவுளைச் சொன்னான்.
கடவுள் என்றால் ஒத்துக்கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டான்.
கடவுள் போலவே மதத்தைப் பற்றியும் என்ன என்று சிந்திக்காது, மதம் எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? என்ன ஆதாரம் என்று சிந்திக்கக்கூடாது. சிந்தித்தால் மதம் போய்விடும், எனவே, அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
கடவுள், மதம் போல சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது. எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றானோ அவன் நரகத்துக்குப் போவான் என்று எழுதி வைத்துள்ளனர்.

ஆதாரங்கண்டு தெளிந்த பகுத்தறிவு

எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும்.
நமது இழிநிலை, முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியது இல்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாக பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாக நழுவிவிடும்.
நமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும். அறிவுகொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும்.
கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது. எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகின்றது.

நமக்கு மட்டும் 1000 கடவுள்களா?

அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்த மற்ற உலகத்துக்கு ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள்; நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை. நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள்!’
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியது இல்லை; நமது நாட்டுக் கடவுள்களுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்!
மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள், யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையவன் என்று உண்டாக்கி இருக்கின்றார்கள். நமது நாட்டுக் கடவுளுக்கு இந்த ஒழுக்கம், நாணயம் யாதும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்ன என்ன குணங்கள் இருக்குமோ அதுகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கின்றார்கள்.
இப்படி, ஏராளமான பேதங்களும் நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும் காரியத்தில் கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்து இருக்கின்றார்கள்.

அப்படியே நம்புவது மூடநம்பிக்கை

இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை, நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து, ஏற்கின்றதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளுவதுதான் பகுத்தறிவு!
நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை!
உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக்கூடாது?
பஞ்சேந்திரியங்களுக்கும் மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள், ஏன் பயந்துகொண்டு மறைந்துகொண்டு இருக்கவேண்டும்?
சர்வசக்தி உள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அது எப்படி சர்வசக்தி உடையதாகும்?
அவர் ஒரு நல்ல கடவுள் என்று சொல்லி அவரால் ஒரு யோக்கியமான மனிதனை உற்பத்தி பண்ண முடியவில்லையானால் அது எப்படி நல்ல கடவுள் ஆகும்?

கேடுகளைத் தடுக்க முடியாதது கடவுளா?

கோயிலில் கடவுள் இருக்கின்றது; திருடன் புகுந்து நடு இரவில் பூட்டை உடைத்து பெண்டாட்டி சேலை, நகை முதலியவற்றைத் திருடிச் செல்லுகின்றான்; அதனைக் கடவுளால் தடுக்க முடியவில்லை; நாட்டில் நடக்கும்
கொலை, கொள்ளை, அக்கிரமங்கள் முதலியவற்றையும் தடுக்க இந்தக் கடவுளால் முடியவில்லை, இது எப்படி சர்வ வல்லமை உடைய கடவுள் ஆகும்?

ஒழுக்கமான கடவுள் உண்டா?

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே! சைவ சமயத்தில் கந்தன், முருகன், சுப்பிரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்குப் போட்டியாக வைணவத்தில் இராமன் என்று ஒரு கடவுள். இப்படியாக பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்தக் கந்தனைப் பற்றிய கதையும் அசிங்கம், ஆபாசமாக இருக்கும்; இராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக்கேடாக இருக்கும். காரணம், இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை.

கடவுள் பிறப்பு ஆபாசங்கள்

விஷ்ணு விபசாரத்தனம் செய்த சாபத்தின் பலனாக இராமனாகப் பிறந்தவன்.
கந்தன் பிறப்பும் ஆபாசமே! சிவனும், பார்வதியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போகம் பண்ணி அசிங்கம் ஆபாசமாகப் பிறந்தவன் கந்தன்; இப்படியேதான் மற்றக் கடவுள்கள் கதைகள் எல்லாம். எந்தக் கடவுள் கதையைப் பார்த்தாலும் கடவுளுக்கு சக்தி இல்லை என்பதை மனதில் கொண்டுதான் கதை எழுதி இருப்பான் என்றே தோன்றுகிறது.
கடவுள் கதை எழுதும்போதே துஷ்டர்களை அழிக்கவே கடவுள் தோன்றினார் என்கின்றான். ஏன் கடவுள் துஷ்டனைத் தோன்றாது இருக்கச் செய்திருக்கலாமே!
அதனை விட்டு, அவனைத் தோன்றச் செய்து, போர் தொடுத்து ஏன் ஒழிக்க வேண்டும்? ஏன் அதன் காரணமாகத் தொல்லை அடைய வேண்டும்?
மக்கள் அறிவு கொண்டு சிந்தித்தல் வேண்டும். அதுவே பகுத்தறிவை வளர்க்கும். பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பது கடவுள், மூடநம்பிக்கை, சிந்திக்க வொட்டாத நிலை.
சிந்தனையே அறிவு ! அதுவே மனித வாழ்வை உயர்த்தும்!

( திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் 24.6.1965 அன்று நடைபெற்ற பகுத்தறிவுப் பிரச்சாரப் பயிற்சி முகாமில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை) – விடுதலை 5.7.1965 )

parthasarathy r நேரம் 7:35 AM கருத்துகள் இல்லை:
பகிர்

அண்ணா முடிவெய்திவிட்டார் – அண்ணா வாழ்க! – பெரியார் இரங்கல்

 


 பிப்ரவரி 01-15, 2024 பெரியார் பேசுகிறார்
உண்மை Unmai

பெரியார் பேசுகிறார்

‘‘அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க.” அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய்வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.” ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.

யானறிந்த வரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.

இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் “மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்கமுடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார்.” எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்ட முடியாது.

இன்று மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் நானறிந்த வரை அண்ணா முடிவடைந்துவிட்டாரே. இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பதுதான். நான் சொல்லுவேன் “அண்ணா இறந்துவிட்டார். அண்ணா வாழ்க” என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும் (திருப்பமும்) இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்தே வரும். ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக, ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

அண்ணா நோய்ப்பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெருமானும், மாண்புமிகு மந்திரிமார்களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும் சிகிச்சை செய்வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி முதல் வேலூர் டாக்டர்களும் எடுத்துக்கொண்ட மனிதத்தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்துகொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரிகைக்காரர்களும், விஷயங்களை அவ்வப்போது மக்களுக்கக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும் மிகமிகப் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும்.
தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக்கொள்ளுகிறேன்.”

(3.2.1969 நள்ளிரவு 12.22 மணிக்கு தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா மறைவுற்றமைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தந்தை பெரியார் அவர்கள் 4.2.1969 அன்று சென்னை வானொலிமூலம் ஆற்றிய உரை. ♦

parthasarathy r நேரம் 4:59 AM கருத்துகள் இல்லை:
பகிர்

எனது பொங்கல் பரிசு – தந்தை பெரியார்

 


2024 பெரியார் பேசுகிறார் ஜனவரி 16-31, 2024
உண்மை Unmai

பெரியார் பேசுகிறார்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் பொங்கல் பண்டிகையைப் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.

பொங்கல் வாழ்த்துகள்

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு வேண்டு மானால் கூறுகிறேன். இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத்திரம் 450க்கு மேற்பட்டவை
களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)

இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திரமல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்கள்களைச் சேர்ந்தவர்களாகும். இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண்டாடியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண்டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளியையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளையும் வெறுத்து விலக்கி இருப்பது மகிழத்தக்கதாகும்.

தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண்டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக்கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மையாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றியறிவித்துக் கொள்ளக்கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால், அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன்வந்ததன் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந்ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது.  பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.

ஆதலால், பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால், பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அநேகமாய் விளங்குவீர்கள் என்று நம்பிக்கை கொள்ளுகிறேன் என்பது ஆகும்.

மற்றொரு வாழ்த்து

இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் காலமும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் துவக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏன் எனில், ஆரியர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு _  தமிழர்களுக்கு இழிவும் ஏற்படுவதற்கு ஆக எப்படி தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்
தான் ஆரியர்களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு வருபவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவைகள் கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்ம நூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.

இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர்களையும் அறிவற்ற தமிழ் மடையர்களையும் பல தந்திரங்களால் மானம், ஈனம் அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவைகள் சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய இரத்தத்திலும் கலக்கும்படி செய்துவிட்டார்கள்.

இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு ஜட்ஜ் பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலியவைகளை ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்பவன், பிரச்சாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கியனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளியாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுவான்_கருதப்படுகிறான்_ என்கின்ற தன்மைக்கு அவை வந்துவிட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்முகப்பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை_ தமிழர் சமுதாயத்தை இழிவிலிருந்தும் பிறவி அடிமைத்தன்மையிலிருந்தும் முன்னேற்றத் தடையிலிருந்தும் எந்த விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டி, அதற்கு ஆகத் தொண்டாற்றி மடிவது என் வாழ்நாளினுடையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை_ அதாவது, அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமாயணம், கீதை, பாரதம் ஆகியவைகளைத் தமிழர்களுடைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய முதலாய, இன்றியமையாத கடமை. எனவே, தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங்கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திரம், புராணம், இராமாயணம், பாரதம், கீதை முதலியவைகளுக்குப்   பதிலாக ஒரு நெறி, கலை, வழிகாட்டுவதற்கு என்று குறளைக் காட்டவேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.

குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழ மாட்டானா? வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லாவிட்டால் மனிதன் வாழலாம். ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால், ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக _ கடை மனிதனாக ஆக்கப்பட்டுவிட்டதால், ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப்படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள்ளும்படி செய்யப்பட்டிருப்பதால், அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவதற்கு ஒரு சாதனம் _ விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை _ கடைத் தன்மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும் அறிவு வருவதற்குக் குறளைத் தூண்டு கோல)_£கக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.

மாற்றுப் பண்டம்

நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்காக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்காக வேண்டும்? பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்காக வேண்டும்? என்பதை மனிதன் _ மானமுள்ள _ அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் _ திராவிடன் சிந்திக்கட்டும் என்பதுதான் எனது வேண்டுகோளும், ஆசையுமாகும். ஆகவே குறள், மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங்களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.

ஆகவே, இந்த ஆண்டு பொங்கல் ஆண்டு துவக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்துவரப்பட்டதேயாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்துவரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவைகள்போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந்தார்கள். அப்படியே பாரதம், கீதை, இராமாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாகக் கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும் குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று.

ஆனால், நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் அதற்குப் பதிலாகப் பொங்கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை _ கீதை, இராமாயணம், பாரதம் ஆகியவற்றை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச் செய்து விட்டு அதற்குப் பதிலாக அவைகள் இருந்த இடத்தில் குறளை _ குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால், தமிழர்களுக்கு இப்பொங்கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக்கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக்கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு _ அன்புக்கு _ நம்பிக்கைக்கு தட்சணையாகக் கொடுக்கிறேன்.

பதில் பரிசு தருவீர்களா?

இந்த எனது தட்சணையை, காணிக்கையைத் தமழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால், குறைந்த அளவு என்பால் அருளும், அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்டவேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள் கூர்ந்து கருணை கூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும் நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.

உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காணவேண்டுமானால் அவன் பார்ப்பனப்  பத்திரிகையை வாங்காதவன், ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.

தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கியக் காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய் சூத்திரச்சிகளாய் இருப்பதற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.
ஆதலால், தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும்தான். அதாவது,
1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி, பொங்கல் விழாக் கொண்டாடுவது.
2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலியவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்றுப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.
3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமிழர்கள் _ திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.

பொங்குக பொங்கல்!
பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!

– ஈ.வெ.ரா.
(விடுதலை -19.01.1969)

 

parthasarathy r நேரம் 1:37 AM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.