பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

▼

பக்கங்கள்

▼

சனி, 11 டிசம்பர், 2021

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஒரு சந்தேகம்
   December 11, 2021 • Viduthalai

 27.11.1927 - குடிஅரசிலிருந்து...

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும்  பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அன்னிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள். இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில்  இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது, ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத் தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப் பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்.

parthasarathy r நேரம் 4:39 AM கருத்துகள் இல்லை:
பகிர்

எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம் (1)



   December 11, 2021 • Viduthalai

06.11.1927- குடிஅரசிலிருந்து...

தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்திய நாடு முழுவதிலுமே இதுசமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதைப் பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு, வடதேசத்தில் உள்ள படகு ஓட்டும் கூட்டத்தாரான செம்படவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களைத் தீண்டுவதில்லை என்கின்ற வகுப்பாருக்கு படகு ஓட்டுவதில்லை என்று கட்டுப்பாடு செய்து கொண்டது யாவருக்கும் ஞாபகமிருக்கலாம். மறுபடியும், திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததும், அதற்கு சிறீமான் காந்தி மத்தியஸ்தராயிருந்து அரசாங்கத்தார் சீக்கிரம் அனுகூலம் செய்வார்கள் என்று ஒப்புக் கொண்டு இருப்பதும், புராணம், சாஸ்திரம் முதலிய குப்பைகளை எரிப்பதுடன், மத ஆச்சாரியார்கள் என்பவர்களையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று பம்பாய் மாணவர்கள் ஒன்று கூடி தீர்மானித்ததும், சென்னையிலும் அதுபோலவே பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில், மனிதனின் சுயமரியா தைக்கு விரோதமான மனுதர்ம சாஸ்திரம், புராணம் இவைகளைச் சர்க்கார் பறிமுதல் செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்ததும், தாழ்ந்த ஜாதி, தீண்டத்தகாத ஜாதி, சூத்திரன் ஆகிய வார்த்தைகளை உபயோகித்தால் அவர்களைக் கிரிமினல் சட்டப்படி தண்டிக்கச் சட்டமேற்படுத்த வேண்டும் என்று சொன்னதும், ஆதி திராவிடர்கள் என்கிற கூட்டத்தார் மகாநாட்டிலும் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கும் ஆதாரங்களையெல்லாம் பறிமுதல் செய்யவேண்டுமென்று பேசியதும், தீர்மானித்ததும் மற்றும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிலும், கும்பகோணம் நாடார் சமுக மகாநாட்டிலும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்ததும், பம்பாயிலுள்ள பல மக்களும் கோவிலுக்குள் போக சத்தியாக் கிரகம் ஆரம்பித்திருப்பதும், மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் பம்பாயிலுள்ள சென்னைப் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் உள்ள வித்தியாசத்தை ஒழிக்க ஜாதி சம்ஹார சங்கிர சங்கத்தார் சத்தியாக்கிரகம் செய்ய முன் வந்திருப்பதும், மற்றும் பம்பாயில் உள்ள பனஸ்வதி என்கின்ற ஆலயத்தில் தரிசனம் செய்ய ஆவலுள்ள யாரையும் உள்ளே விடாததற்காக அக்கோவிலையே பகிஷ்கரிக்க வேண்டுமென்று, முடிவுசெய்ததும், மகத் என்கின்ற இடத்தில் உள்ள பொதுக் குளத்தில் ஒரு கூட்டத்தாரை ஸ்நானம் செய்யவொட்டாமல் தடுப்பதை ஒழிக்க டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் சத்தியாக்கிரகம் செய்யப் போவதாய் ஏற்பாடு செய்து 500 ரூ. வசூலாயிருப்பதாயும் பல தொண்டர்களும் சேர்ந்திருப்பதாகவும் தினப்படி பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இது மாத்திரமல்லாமல், சமூகங்களில் உள்ள சில கொடுமைகளையும் விலக்குவதற்காக பெண்களைத் தயாரிப்பதான பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க செங்குந்த சங்கங்களும், சட்டசபை மசோதாக்களும் பறந்து கொண்டுமிருக்கின்றன. மது விலக்குக்கும் எங்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, நாட்டின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஆன வேலைகள் தீவிரமாய் நடை பெறுவதுடன், இன்னமும் ஒவ்வொருவருடைய கவனமும், உணர்ச்சியும் இதிலேயே செல்லும் குறிகளும் காணப்படுகின்றன.

இப்படி உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நாளையில், நம் நாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கியதை எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால், இவைகள் ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையாய் இருந்து கொண்டு மதம் போச்சு, கடவுள் போச்சு, கோவில் போச்சு, குளம் போச்சு, நாஸ்திக மாச்சுது என்பதாக ஓலமிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கப் பார்க்கின்றார்கள்.  மக்களின் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்படுத்துகிற இயக்கங்களை வைத்துக் கொண்டு, அதை அழிப்பதற்கும் முயற்சி செய்து கொண்டு, முட்டாள்களையும், அயோக்கியர்களையும், வயிற்றுச்சோற்றுக் கூலிகளையும் பொறுக்கி எடுத்துத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்குக் காசு, பணம், பட்டம், பதவி மற்றும் என்னென்னவோ முதலியவைகளை உதவி, இவற்றின் மீது ஏவிவிட்டு நாட்டில் கலகம் விளைவிப்பதும், மக்களுடைய கவனத்தைத் தப்பு வழியில் இழுத்து விடுவதுமான கொடுமைகள் ஒருபக்கம் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் காங்கிரசு என்றும், சுயராஜ்யம் என்றும் பித்தலாட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு, திருட்டுத்தனமாய்ச் சர்க்காருக்கு உள் ஆளாய் இருந்து உத்தி யோகங்கள் பெற்று, மாதம் 1000, 2000, 5000 சம்பளம் பெறுவதில் கவனம் செலுத்திக்கொண்டு ஈனவாழ்வு வாழ்வதையே பொதுநல சேவையாய் காட்டிக்கொண்டுமிருக் கிறார்கள். அத்தோடு அவர்கள் இழிதொழில் நிற்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை.

இவ்வளவு அக்கிரமங்களையும் செய்து கொண்டு இருப்பதல்லாமல், இதை யாராவது வெளியில் எடுத்துச்சொன்னால், அவர்களை வகுப்புத்துவேஷக் காரர்கள் என்றும், அசுரனென்றும், ராக்கதனென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதுமாயிருக்கின்றார்கள். இந்த விஷயங்களை உணருவதற்கு நமது நாட்டு மக்களுக்கு புத்தி இல்லாமல், இனியும் அப்பார்ப்பனர்களை நத்திக் கொண்டு பிழைக்கவே ஆசைப்படுகின்றார்கள். இந்த மக்களைப் பார்க்கும்போது, ஒரு வேசி வீட்டில் உள்ள வாலிபன் ஒருவன், வேசியான தன் தாயாருக்கோ, தமக்கைக்கோ ஆள்களைக் கூட்டிக்கொண்டு போவதையும், தூதுக்கடிதங்கள் கொண்டு போய் கொடுத்துப் பதில் வாங்கி வருவதையும் பார்ப்பது நமக்கு ஆச்சரியமாய்த் தோன்றவில்லை.


parthasarathy r நேரம் 4:36 AM 1 கருத்து:
பகிர்

வெள்ளி, 3 டிசம்பர், 2021

பெரியார் பேசுகிறார்: கார்த்திகை தீபம்


தந்தை பெரியார்

கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப் போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்களை டின் டின்னாய் கற்பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எறிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்-களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணெய் முதலியவைகளை ஊற்றியும், எள்ளு பொட்டணம், பருத்தி விதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்தச் சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே, இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்தப் பெருந்தொகைச் செலவில் நாட்டுக்கோ, மக்களுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜன-மாவது-முண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள்தனம் விளங்காமற் போகாது. அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம், கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேச-பக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படுகின்றது. இம்மதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இதை கவனித்து இம்மாதிரி-யான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும்விட எத்தனையோ மடங்கு பயன்தரக் கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.11.1930

* * *

ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்

எனக்குத் தெரிய எனது 14 வயது முதல் ஜாதிக்கு எதிரியாகவே இருந்து வந்து உள்ளேன். எனக்கு நினைவு தெரியாத காலமாகிய 7 வயது முதலே ஜாதிக்கு எதிர்ப்பாகவே இருந்து வருகின்றேன் என்றுதான் கூறவேண்டும்.

நான் பள்ளிக்குப் போகும் போது குறவர் முதலிய கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் வீட்டில் எல்லாம் சோறு தின்று உள்ளேன். இது காரணமாகவே எங்கள் வீட்டில் என்னை வெளியில் வைத்து சாப்பாடு போட்டு இருக்கின்றார்கள். இம்மாதிரி செய்கையே என்னை ஜாதி ஒழிப்பு முயற்சியில் சிந்திக்கத் தூண்டியது.

தோழர்களே! ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு கொஞ்சம் தத்துவ ஞானம் வேண்டும். தத்துவ ஞானம் என்றால் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் கூறுகின்றாரே குப்பைத் தொட்டி தத்துவ ஞானம் அது அல்ல. தத்துவ ஞானம் பகுத்தறிவு வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றேன்.

ஜாதியை ஒழிக்கின்றவன் முன்னோர்கள் நடந்தது, சொன்னது, எழுதி வைத்தது என்பன போன்றவற்றை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.

நமக்கு எவனும் முன்னோர்கள் அல்லர். நாம்தான் வருங்காலத்தவர்களுக்கு முன்னோர்-கள் என்று கருதி காரியம் ஆற்ற வேண்டும். நமக்கு யார் முன்னோர்கள்? எதில் முன்னோர்கள்? எது முதல் முன்னோர்கள்?

தோழர்களே! தமிழர்களுடைய சரித்திரத்துக்கு கால வரையறையே இல்லையே! நமக்கே என்றால் பார்ப்பனப் புராணங்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?

திரேதா யுகம், கிரேதா யுகம் என்று எல்லாம் கூறி யுகத்துக்கு 1,00,000, 10,00,000 வருஷங்கள் என்று கணக்குப் போட்டுப் புளுகுவான்!

புத்தருக்குப் பிறகுதான் இந்த இராமாயண _ பாரதங்களும், புராணங்களும் ஏற்பட்டன. இராமாயணத்தில் பல இடங்களில் புத்தரைப் பற்றி பேசப்படுகின்றது. பாரதம், விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலியவற்றிலும் பேசப்படுகின்றது. ஏன் இப்படி என்றால் சங்கராச்சாரியார் கூறுகின்றார். இது ஒன்றும் முரண் அல்ல _ நாட்டின் ஒவ்வொரு யுகத்தின் போதும் ஒவ்வொரு புத்தர் தோன்றுவது உண்டு. இராமாயணத்தில் உள்ள புத்தர் அந்த யுகத்துப் புத்தர், பாரதத்தில் உள்ள புத்தர் பாரதகால யுகத்துப் புத்தர் என்று கூறுகின்றார்.

அப்படியே அந்த யுகங்கள் எல்லாம் உண்டு என்று வைத்துக் கொண்டு பார்த்தாலும், அந்தக் காலத்து மனிதர்களுக்கு எப்படி அறிவு மேலாக இருக்க முடியும்? இவன் குறிப்பிடும் யுககாலத்தில் மனிதன் புல்லாய் புழுவாய் இருந்தானோ? அல்லது குரங்காக இருந்தானோ?

நமக்கு வரும் எதிர்ப்பு எல்லாம் முன்னோர்கள் சங்கதி பற்றித்தான் வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயமரியாதைக் கலியாணம் செல்லாது என்று அய்க்கோர்ட்டில் தீர்ப்புக் கூறினான். இது செல்லாது என்பதற்கு எதை ஆதாரம் காட்டினான் தெரியுமா? நாரதர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். பராசரர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். ஆபத்ஸ்தம்பர், யாக்ஞவல்கியர் அப்படிச் சொல்லி இருக்கின்றார்கள். இவர்களுடைய முறைக்கு இந்தத் திருமணம் மாறாக இருப்பதால் இது செல்லாது என்று கூறியிருக்கின்றார்!

இது எவ்வளவு முட்டாள் தனம்! இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் எந்தக் காலத்துப் பசங்கள்? இவர்களில் அனேகர் மனிதனுக்கே பிறக்கவில்லையே! கழுதைக்கும், கோட்டானுக்கும், மாட்டுக்கும், கிளிக்கும், மற்ற மற்றதுகளுக்கும் பிறந்த பசங்களா நம்முடைய முன்னோர்கள்? இவர்கள் காலத்தில் மனிதனுக்கு எவ்வளவு அறிவு இருந்து இருக்க முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

பாவம், புண்ணியம், முன் பின் பிறவிகள் என்பன எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனமானது _ ஒழிக்கத்தக்கது என்று உணர வேண்டும். இவை பற்றி மக்களுக்குத் தெளிவு உண்டாக்கும், பணியில் தீவிரமாக ஈடுபட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுகள் சம்பந்தமான அறிவு நூல்களைப் படித்து உணர வேண்டும்.

இன்றைக்கு உள்ள புரட்டுகள் எல்லா-வற்றையும்விட பெரிய புரட்டு இந்த 20ஆம் நூற்றாண்டிலும் ஜாதிக்கு ஆதாரமாக கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான் இவற்றை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியும் என்று நம்புவதாகும்.

15.12.1962 அன்று திருச்சி மாவட்டத்தில் கரூர் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை, 23.12.1962

- உண்மை இதழ், 16-30 நவம்பர் 2021

parthasarathy r நேரம் 10:48 PM கருத்துகள் இல்லை:
பகிர்

திங்கள், 29 நவம்பர், 2021

"என்றென்றும் 'சூத்திரனாக' இருப்பதைவிட மானக்கேடு வேறு என்ன?" (சட்ட எரிப்பு ஏன்?)


   November 28, 2021 • Viduthalai

 தந்தை பெரியார்

26ஆம் தேதி கிளர்ச்சியில்

நீதிமன்றத்தில் கூற வேண்டியது

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

பெரியார் அறிக்கை ('விடுதலை' 23-11-1957)

எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்) என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்; பார்ப் பானை ஏன் திட்ட வேண்டும்?" என்ற சிலர் கேட்கிறார்கள். எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்? ஏன் தன்னைப் பிராமணன் என்று  சொல்லிக் கொள்கிறான்? ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்? ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்? அவனுடைய  பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ளவேண்டும்? இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்ட சபையில் சிலர் பேசுகிறார்கள். எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்? அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்? இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?

எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்பு, சாஸ்திரம், புராணம், சட்டம் என்றால், நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம். மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமை) கிடையாது.

சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும். அவற்றி லெல்லாம் கைவைக்கக்கூடாது. என்றால் எப்படி ஒழியும்? கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமா? துஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல், மண், முள், காடு எல்லா வற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள், பாம்பு, கரடி, புலி எல்லாம் ஒழியும்? அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக் கிறார்களோ, என்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்; சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்; இவை தனிப்பட்ட உரிமைகள்; இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடை, கொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்! இராமனைக் கொளுத்தினோம்.

சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும். இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம். என்று 3ஆம் தேதி  (1957 - நவம்பர்) கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர் மானம் போட்டு 15 நாள் வாய்தா (காலக்கெடு) கொடுத்தோம்.

இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டது. நாம் கொடுத்த 15 நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமா? சாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!

இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறது; ஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்; இல்லை நெருப்பு வைக்கக்கூடாது  என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; அல்லது இருந் தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.

நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய். சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களுக்கும்

3 ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்; இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தா விட் டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!

சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார். அரச மைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள், நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்கான சட்டம் வகுத்துக் கொண்டார்கள் அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே தான் கொளுத்துகிறோம். கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?

இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதிவைத்துக் கொண்டுள்ளான். இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழ வேண்டுமென்று கொண்டு வந்து விடுவான்!

நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத் தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும் பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார்.

நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன் னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!

சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்? ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்; சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள். அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?

1957 - நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6 ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சி, குளித்தலை, பசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என்மீது கேசு (வழக்கு) போட்டிருக்கிறார்கள்.

சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன" என்று; "இல்லை இல்லை, கொல்லு! குத்து! என்று பேசி யிருக்கிறார்" என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசியபேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட் களைக் கொண்டு வாருங்கள்" என்று பத்திரிகைக் காரர்களை மந்திரி கேட்டார்; இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.

சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்று; இதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்) செய்திருக்கின்றனர்; அதன் பின்னர் மேலிடத்தி லிருந்து உத்தரவு வந்திருக்கிறது!  மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்கு) எடுத்து இருக்கிறார்கள்; மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்குத் தமிழ்நாடு சட்ட சபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்கு நாடாளுமன்றத்திலே சட்டம் செய்ய வெட்கம்; உலக மெல்லாம் தெரிந்துபோகுமே. தமிழ்நாட்டில் காந்தி  சிலையை உடைக்கிறார்கள்; அரசமைப்புச் சட்டத்தைக்  கொடியைக் கொளுத்துகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.

சட்டசபையிலே, என்மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்; எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் (நீதிமன்றத்தில்) இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்ல; மனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.

இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான். மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாது. இந்து மதம் உள்ளவரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்; ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்" என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையை) எடுக்க மறுத்தான். அந்த ஓட்டல் (உணவகம்) முன்மறியல் செய்து 800 பேர்வரை சிறைக்குச் சென்றி ருக்கின்றனர். நம்முடைய சர்க்கார் (அரசு) ஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள். மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத் துள்ளோமே என்கிறான். ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். நாம் இங்கே மறியல் செய்கிறோம்; அங்கே கேரள ஆட்சியில் சாதிச்சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.

நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம். நிலைமை மாறவில்லை. ஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். இதில் வெற்றிபெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப் போகிறோம்.

நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் "ஜவகர் லால் நேரு, ராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து, இவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்று; வேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்; சட்டத்தினாலேயே உயிர்வாழ்! மக்களுடைய அன்பினால், திருப்தியினால் நீ (அரசாங்கம்) உயிர்வாழப் போவதில்லை. சுதந்திரம் (விடுதலை) வந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்; இன்னமும் நாங்கள் சூத்திரர்கள் தான்; வடநாட்டானால் கொள்ளையடிக்கப் படத்தான்  இந்தச் சுதந்திரம் என்றால், நாங்கள்  சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்; எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்? எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?

போலீஸ்காரனுக்கு அடங்கி நட, சட்டத்திற்கு அடங்கி நட, என்று நான் சொல்கிறேன். இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்? இல்லை நான் சொல்வது பொதுமக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடு; அதில் 2 லட்ச மக்கள் திரண்டனர். அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும். இல்லை பொதுஜன வோட்டு எடு; சாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்று. ஒன்று மில்லை வெறும் அடக்குமுறை தான் என்றால் என்ன அர்த்தம்?

அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்டமுடியுமா? இந்த நிலை யில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப்போக நாம் துணிந்து விட வேண்டியதுதானே! மூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால்தானே நாம் மனிதர்!

ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26ஆம் தேதியன்று நாம் ஆயிரக் கணக்கில் கொளுத்த வேண்டும். இரகசியமாயல்ல, பகிரங்க மாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள்! கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்கு) அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!

"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்; இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாது. இதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்" என்று சொல்லுங்கள்

முக்கியமாக உள்ள கழகத்தோழர்கள் நூற்றுக் கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்; மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண் டும். கொளுத்திய அந்தத் துண்டு காகிதங்களையும் சாம் பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்) மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.

தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர், விலாசம் (முகவரி) எல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.

"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்; அதற்காக எந்த விலை கொடுக்கவும் நாங்கள் யார் என்பதை 26ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!

17-11-1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : ('விடுதலை'  22-11-1957)

parthasarathy r நேரம் 4:52 AM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.