ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தேசீய கீத’ப் புரளி


தந்தை பெரியார்

(‘தேசீயகீதம்’ என்ற மதவாதப் பாடல் பற்றி இன்று சர்ச்சைப் புயல் வீசுகிறது. ஒன்றிய பிஜேபி அரசு சட்டம் செய்துள்ளது. இதுகுறித்து 1937ஆம் ஆண்டிலேயே கடுமையாக விமர்சித்த கட்டுரை இது)

ஆகஸ்டு 31ஆம் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கவுன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கிரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கிரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன் முதல் வெளிவந்தது.

முஸ்லீம்  சமூகத்தை அழிப்பதே “ஆனந்த மடத்தின்” நோக்கம். 168- வருஷங்களுக்கு முன் இருந்து வந்த இந்திய நிலைமையைப் பற்றியே “ஆனந்த மடம்” எழுதப்பட்டிருக்கிறது. கதாநாயகனான பவாநந்தன் வங்காள முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க எண்ணிப் படை திரட்டுகிறான். அவன் மஹேந்திரன் என்பான் ஒருவனைச் சந்தித்துத் தனது புரட்சிப் படையில் சேரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறான். பவாநந்தன் ‘வந்தே மாதர’ கீதம் பாடியபோது மஹேந்திரன் மதிமயங்கி அந்த கீதத்தை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொள்ளுகிறான். மஹேந்திரன் வேண்டிக் கொண்டபடியே பவாநந்தன் மீண்டும் பாடி தாய் நாட்டை முஸ்லீம் ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறுகிறான்.

சட்ட சபைகளில் ‘வந்தே மாதர’ கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்கவில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கிரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

 

“ஸ்டேட்ஸ்மன்” பத்திரிகையில் ஒரு முஸ்லீம்  நிருபர் எழுதிய கட்டுரை ஒன்றில் “ஆனந்த மடத்தி”லிருந்து பல மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் ஆட்சியை ஒழிக்க முயல்வது புத்திசாலித்தனமாகுமா என்று மஹேந்திரன் கேட்டபோது “நமது மதம் போச்சு, நமது வர்ணாச்சிரம தர்மம் போச்சு, இப்பொழுது நமது உயிருக்கும் கூட ஆபத்து நேரிட்டிருக்கிறது. இந்த முஸ்லீம்களை ஓட்டா விட்டால் ஹிந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது” என்றெல்லாம் பவாநந்தன் கூறி மஹேந்திரனை தன் வழி இழுக்க முயல்கிறான். “நீ ஒண்டியாக முஸ்லீம்களை ஓட்டி விடுவாயா?” என்று மஹேந்திரன் கேட்டபோது ‘வந்தேமாதர’ கீதத்திலுள்ள சில வரிகளை பவாநந்தன் பாடுகிறான். “ஏழுகோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடிக் கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரதமாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதே அந்த வரிகளின் பொருள். அதற்கு பதிலாக மஹேந்திரன் முஸ்லீம்கள் வீரப் பிரதாபங்களையும் படை பலத்தையும் எடுத்துக் காட்டுகிறான்.

பவாநந்தன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “முஸ்லீம்கள் எல்லாம் பயங்காளிகள், கோழைகள். பிராணனுக்கு ஆபத்து ஏற்படும்போது கூட ஆங்கிலேயன் போர்க்களத்திலிருந்து ஓட மாட்டான். வியர்வை வடியத் தொடங்கும்போது முஸ்லீம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் ஒரு வெடிகுண்டு விழுந்தால் போதும். முஸ்லீம்கள் எல்லாம் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள்” என பவாநந்தன் கூறி மஹேந்திரனை உற்சாகப்படுத்துகிறான். தனது புரட்சிப்படையில் சேர்ந்து முஸ்லீம்களை எதிர்த்து தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தைப்பற்றி பவாநந்தன் எவ்வளவோ கூறியும் மஹேந்திரனை ஆனந்தமட ஆலயத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறான்.

அந்த ஆலயத்தில் ஒரு விஷ்ணுவின் விக்கிரகத்தையும் அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் விக்கிரகத்தையும் மஹேந்திரன் பார்த்து அந்தத் தேவியார் யார் என்று கேட்கிறான். “ஹோ! அவள்தான் நம் மாதா. நாமெல்லாம் அவளது குழந்தைகள்” எனப் பூசாரி விடையளிக்கிறான். அப்பால் ஆலயத்தின் வேறொரு பகுதிக்கு மஹேந்திரனை பூசாரி அழைத்துக்கொண்டு போய் “ஜெகத்தாத்ரி” தேவி தேஜோமயமாய் விளங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறான். “ஆதியிலே நமது பாரதமாதா இம்மாதிரியே இருந்தாள்” என பூசாரி மஹேந்திரனுக்குக் கூறி மீண்டும் வேறொரு ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். அங்கே நிர்வாண கோலத்திலிருக்கும் ஒரு கருங்காளி விக்கிரகத்தை பூசாரி மஹேந்திரனுக்குக் காட்டி “இப்போது பாரத மாதா இருக்கும் கோலம் இது” எனக் கூறுகிறான்.

அப்பால் வேறொரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் பத்துக் கரங்களுடைய துர்க்கா தேவியின் விக்கிரகத்தைக் காட்டி “நமது சத்துருக்களான முஸ்லீம்கள் ஒழிக்கப்பட்ட பின் நமது பாரத மாதா இவ்வாறே இருப்பாள்” என   மஹேந்திரனிடம் கூறுகிறான். மீண்டும் பூசாரி, லட்சுமி, ஸரஸ்வதி தேவிகள் விக்கிரகங்களை மஹேந்திரனுக்குக் காட்டி “பத்துக் கரங்களுடைய துர்க்கையே! தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே! கல்வித் தெய்வமான ஸரஸ்வதியே! போற்றி! போற்றி!” எனப் பாடி பூசாரி ஆனந்தத் தாண்டவமாடுகிறான். கடைசியில் மஹேந்திரன் தேசபக்தனாகி புரட்சிப் பிரதிக்ஞை செய்து கொள்கிறான்.

புரட்சிப் படையில் ஆட்சேர்க்கும் முறையைப்பற்றி “ஆனந்தமட” நாவலிலிருந்து சில மேற்கோள்களை அந்த முஸ்லீம் நிருபர் எடுத்துக் காட்டியிருக்கிறார். “தாய் நாட்டை மீட்கும் வரை உற்றார் பெற்றார் உறவினரைத் துறந்து ஸநாதன தர்மத்தை நிலைநாட்டுவதாக புரட்சிப் படையில் சேரும் ஒவ்வொருவனும் சபதம் செய்து கொள்வானாம். புரட்சிப் படையில் சேர்ந்த பிறகு ஒவ்வொருவனும் ஒவ்வொரு கிராமத்துக்கு அனுப்பப்படுவானாம். கிராமங்களில் புரட்சிக்காரர் செய்யும் அட்டூழியங்களை விளக்கி “ஆனந்த மடத்”தில் கூறப்பட்டிருப்பதாவது, “புரட்சிக்காரன் ஒவ்வொருவனும் கிராமங்களுக்குச் சென்று ஹிந்துக் களைச் சந்தித்து “சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா! எனக் கூறி 20 அல்லது 25 பேரைச் சேர்த்துக்கொண்டு முஸ்லீம் கிராமங்களுக்குச் சென்று முஸ்லீம் குடிசைகளை தீக்கிரையாக்குவார்களாம். உடனே முஸ்லீம்கள் நானா பக்கங்களிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்களாம். உடனே முஸ்லீம்கள் சொத்துக்களையெல்லாம் புரட்சிக்காரர் சூறையாடு வார்களாம். அவ்வாறு கொள்ளையடித்த பொருள்களை விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக வழங்குவார்களாம். கொள்ளைப் பொருள்களில் பங்கு கொண்ட கிராம வாசிகள் மகிழ்ச்சியடைந்து புரட்சிப் படையில் தாமும் சேர்ந்து கொண்டதாக விஷ்ணு பேரில் ஆணையிட்டுக் கொடுப்பார்களாம். ஆனந்தமடம் மூன்றாம் பகுதி எட்டாவது அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றிப் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது. “திடீரென ஒரு முழக்கம் கேட்டது. சிலர் முஸ்லீம்களைக் கொல்! கொல்! என ஆர்ப்பரித்தார்கள். சிலர் ‘வந்தே மாதர’ கீதம் பாடினார்கள். சிலர் “சகோதரர்களோ! மசூதிகளையெல்லாம் தரைமட்டமாக்கி அந்த இடத்திலே ராதாமாதவ ராலயத்தைக் கட்டும் நாள் என்று வரும்” என்று கர்ஜித்தார்கள். இடையிலே பலர் வந்தேமாதர கீத கோஷம் செய்தார்கள்.

“வந்தேமாதர” கீதத்தின் தோற்றத்தையும் நோக்கத்தையும், விளக்கிக் கூறி விட்டு அந்த முஸ்லீம் நிருபர் மேலும் எழுதியிருப்பதாவது:- “விக்ரக வணக்கத்தை ஆதரிப்பதும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்ச்சியை எழுப்பக் கூடியதுமான ‘வந்தேமாதர’ கீதத்தை இந்திய முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வார்களா என ஹிந்துக்களையும் பாரபட்சமற்ற அய்ரோப்பியர் களையும் நான் கேட்கிறேன். இந்நிலையில் எல்லாருக்கும் பொதுவெனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் எல்லாரும் வந்தே மாதர கீதம் பாடுமாறு கட்டாயப் படுத்துவது நீதியாகுமா?

உண்மையான தேசீய கீதம் தேசமக்கள் உள்ளத்தில் தேசபக்தியை உண்டு பண்ணக் கூடியதாக இருக்க வேண்டும். “வந்தேமாதர கீதம்” முஸ்லீம்கள் உள்ளத்தில் தேச பக்தியை எழுப்புமா?

தாய்நாட்டின் பெருமையை விளக்கக் கூடிய தேசீய கீதத்தை முஸ்லீம்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அந்த கீதம் மத துவேஷத்தையோ, வகுப்பு துவேஷத்தையோ மூட்டக் கூடியதாயிருக்கக் கூடாது.”

இந்த அபிப்பிராயத்தை நாமும் ஆதரிக்கிறோம். ஒரிஸா அசம்பிளியிலும் தேசீயக் கீதத் தகராறு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ஒரிஸா அசம்பிளியில் தேசீய கீதம் பாடிய போது சில உத்தியோகஸ்தர்கள் எழுந்து நிற்கவில்லையாம். காங்கரஸ்கட்சி மெம்பர்கள் அதை ஆட்சேபித்து அசம்பிளித் தலைவரிடம் முறையிட்டார்களாம். தலைவரும் காங்கரஸ் கட்சியைச் சேர்ந்தவரே. தலைவர் பிரஸ்தாப விஷயத்தைப்பற்றித் தீர்ப்புக் கூறுகையில் “உத்தியோகஸ்தர்கள் சட்டசபை மெம்பர்கள் அல்லவென்றும் சட்டசபை மண்டபத்தில் பிரசன்னமா யிருப்பவர்கள் இன்னின்ன மாதிரி நடந்து கொள்ளவேண்டு மென்று கட்டளையிடத் தமக்கு அதிகாரமிருந்தாலும் பிரஸ்தாப விஷயத்தில் தாம் எதுவும் செய்யப்போவதில்லையென்றும் தேசீய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப்பதும் எழுந்து நிற்பதும் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்ததென்றும் எனினும் உத்தியோகஸ்தர்கள் உட்கார்ந்திருந்தது வருந்தத்தக்கதென்றும் அந்தத் தகராறை அத்துடன் விட்டு விடுவதே நல்லதென்றும் பிரஸ்தாபித்தாராம்.

சட்ட சபைகளில் ‘வந்தே மாதர’ கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்கவில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கிரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு செய்யாமல் காங்கரஸ்காரர் ‘வந்தேமாதர’ கீதத்தையும் மூவர்ணக் கொடியையும் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டு மென்று பிடிவாதம் செய்தால் தேசீய கீதத்தின் மானமும் தேசீயக் கொடியின் கெளரவமும் அழிவது நிச்சயமென்று எச்சரிக்கை செய்கிறோம்.

‘குடிஅரசு’ – 12.09.1937

-விடுதலை நாளேடு,23.8.26 

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் – தந்தை பெரியார்

 

எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் – தந்தை பெரியார்

968இல் வெளிவந்த ‘விடுதலை’ – தந்தை பெரியார் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்
மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
மிக முக்கிய நிலைமைகளை விளக்கும் – என்றும் வழிகாட்டும் அறிக்கை

நான் 1920இல் காங்கிரசில் சேர்ந் தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.

நான் 1900க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.

விளையும் பயிர் முளையிலேயே . . .

நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும், வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும், தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்.

மாடு, எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.

1900இல் இருந்தே எனக்கு ஜோசியம், முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது ‘என்னிடத்தில் வாய்கொடுத்து மீள முடியாது’ என்று எல்லோரும் பேசிக் கொள்வார்கள்.

எக்குழுவிலும் நான்தான் தலைவன்

நான் எனது 5, 6, 7 வயது முதற் கொண்டே தறுதலைப் பிள்ளையாகத் திரிந்தாலும், அந்த வயது முதற் கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்)தலைவனாகவே – மற்றவர்கள் என் சொல் கேட்பவர்களாகவே இருக்கும் வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.

இன்று வரையிலும் கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக்கிறேனே ஒழிய, ஒரு சாதாரண அங்கத்தினனாக எதிலும் இருந்ததில்லை.

அதுபோலவே எந்த சந்தர்ப்பத்திலும் எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிறத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக்கிறேனேயொழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு – உதவி கேட்டதே இல்லை. அது போலவே நான்தான் எனது ஆயுளில் யாருக்கும் பண உதவி செய்திருக்கிறேனேயொழிய யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.

என்னைப் பற்றி

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன், கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள் அல்லது பொதுமக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள். அவ்வளவு தான்! நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியதும் கிடையாது.

எனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு, செலவு செய்யவும் மனது வராது, யாரையும் கேட்கவும் மாட்டேன்.

ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும் . சேர்த்து கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப் பேன். சரியாக கணக்கு வைக்க மாட் டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக் கொள்வேன்.

எனது கொள்கைகள்

எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர், நாத்திகர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர்இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்கு ஆகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.

நான் காங்கிரசை விட்டதற்கும்
இதுதான் காரணம்:

ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப்பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.

ஜஸ்டிஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்கு ஆகத்தான். அக்கட்சி தலைமை ஏற்ற உடன் அக்கட்சி கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்ஷனில் நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்கு ஆகத்தான். காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.

காங்கிரசை எதிர்த்ததும் ஆதரித்ததும்

வெள்ளையன் போன பின்பு 1952இல் நடந்த தேர்தலின்போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோது கூட என் கழகத்தில் இருந்து ஒரு நபரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்து, காங்கிரசை தோற்கடித்ததும் இதற்கு(எனது மேற்கொண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

எனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வர முடியாமல் போனதால், காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டு, காங்கிரசை எதிர்த்து இராஜாஜியை காங்கிரசை விட்டு போகும்படி செய்ததும் இதற்கு ஆகத்தான். அந்த சந்தர்ப்பத்தில் காமராஜரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் – அதாவது காமராஜர் பதவிக்கு வந்தவுடன், பார்ப்பனர்களும், அவர்களது சில கூலிகளும் காங்கிரசை (காமராஜரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங்கிரசை (காமராஜரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண் டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கு) இதற்கு ஆகத்தான்.

தி.மு.க.வை எதிர்த்ததேன்?

இந்த சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக் கொண்டு இருந்ததும் இதற்கு ஆகத்தான். அதாவது இந்த சந்தர்ப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதரவாக இருந்தாலும், தி.மு.க.வும் நாங்கள் பார்ப்பனர் கைப்பொம்மைகள்தான் என்று பட்டாங்க மாகச் சொல்லிக் கொண்டு வந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப்பனர்கள் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும், காங்கிரஸ் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதரவாளனாக இருக்க வேண்டியதாகியதும் இதற்கு ஆகத்தான்.

நாளை எனது நிலை

ஆகவே எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித்தும் தொண்டாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.

இவ்வளவு மாத்திரம் அல்ல. இனியும் எந்த கட்சியை எதிர்ப்பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது!

பொதுவாக நான், சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.

குறிப்பு: இந்த மூன்றிலும், அதாவது பகுத்தறிவு (நாத்திகத்தன்மை) வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகி விடுவார்களே ஆனால் எனது நிலைமை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

- விடுதலை நாளேடு, 3.7.26

புதன், 22 ஜூலை, 2026

கம்யூனிஸ்ட் தோழர்களின் பார்வைக்கு...



சென்னை தன்டையார்பேட்டையில்   காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் சிலைத்திறப்பு விழாவை ஒட்டி மறுநாள் 31-1-.66 அன்று " ஜீவா வாழ்க்கை வரலாறு ’’ நூல் வெளியீட்டு விழாவில், தோழர் பாலதண்டாயுதம் அவர்களால் எழுதப்பட்ட காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் வரலாற்றை வெளியிட்டு ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார் பேசுகையில்
 
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! பெருமைமிக்க தாய்மார் களே! தோழர்களே! உயர்திரு. பி.சி. ஜோஷி அவர்களே! வணக்கம்.
 இன்றைய தினம் மறைந்த நண்பர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை வெளியிடும் பணியை எனக்கு அளித்துப் பெருமைப் படுத்தியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 நேற்றைய தினம் நடைபெற்ற ஜீவா சிலைத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று என்னை நண்பர் பாலதண்டாயுதம் அவர்கள் அழைத்து இருந்தார். நான் அதில் கலந்து கொள்பவர்களைக் கேட்டதும், என்னமோ அய்யா மன்னிக்கனும், எனக்கு வர விருப்ப மில்லை என்றுகூறினேன்.
  நண்பர் பாலதண்டாயுதம்  விட்டபாடில்லை!  அப்படியானால் மறுநாள் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு  செய்கிறோம். அதில் தாங்கள் நான் எழுதிய " ஜீவா வாழ்க்கை வரலாறு” நூலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் ஒத்துக் கொண்டேன். நேற்றைக்கு சேலத்தில் கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவே புறப்பட்டு காலையில்தான் இங்கு வந்தேன்.
 நண்பர் ஜீவா வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியவர் நண்பர் பாலதண்டாயுதம் ஆவார். அதனை ஏதோ ஒரு அளவுக்குப் படித்துப் பார்த்தேன்;  நல்ல வண்ணமே எழுதியுள்ளார். என்றாலும் ஜீவாவைப் பற்றிய வரலாறு எழுத வேண்டிய அளவுக்கு இல்லாமல் ஏதோ கால்பாகம் தான் இது என்று கூறுவேன்.
 தோழர்களே! ஜீவாவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் காங்கிரஸ் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மமப்பட்டு என்ற ஊரில் ஒரு கூட்டத்திற்குச் சென்று இருந்தேன்.
 அதற்குப் பக்கத்து ஊருக்கருகில் ஒரு தனிப்பட்ட பள்ளிக்கூடத் தில் ஆசிரியராக ஜீவா இருந்தார்; அவரும் அந்த கூட்டத்திற்கு வந்தி ருந்தார். அவரும் கூட்டத்தில் நமது கொள்கையினை ஆதரித்து.ப் பேசினார். எனக்கு மிகவும் அவரது பேச்சு பிடித்து இருந்தது. பிறகு நான்  அவரை என்ன பண்ணிகொண்டு இருக்கின்றீர்கள்  என்று  கேட்டேன்.  பள்ளிக்கூடத்தில்  பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு  வருகின்றேன் என்றார்.
 நான் கூறினேன். பெரியவர்களுக்கே சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சிறு பையன்களுக்கு அவசரம் இல்லை. எனவே வேலையைவிட்டுப் போட்டுவிட்டு வாருங்கள் என்றேன்; அவரும் அப்படியே  வேலையைத்  துறுந்து சுயமரியத்தைப் பிராசாரத்தில் ஈடுபட்டார்.
 எனக்கு இவரை மிகவும் பிடித்தது;  அவர் நல்ல பேச்சாளி. பேச்சாளிகளில் பலவிதம் உண்டு தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள பேசுபவர்கள்; தாம் எவ்வளவு படித்துள்ளோம்  என்பதைக் காட்டிக்கொள்ள பேசுகின்றவர்கள்; பிறரை சிரிக்க வைக்க வேண்டும்;  கை கொட்டல் வாங்க வேண்டும் என்று பேசுகின்றார்கள். இப்படிப் பலவிதம் உண்டு. இப்படிப் பேசுகின்றவர்கள் எப்படி விஷயத்தை மக்களுக்கு  எடுத்து  சொல்லி விளங்க வைப்பது என்பதை எண்ணி   பார்த்து பேசுவார்கள்.
  தோழர்களே! கேட்கிறவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால் நல்ல பேச்சாளிகள் தோன்றுவார்கள். ஜீவாவிடம் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தக்க ஆதாரத்தோடு புள்ளிவிவரங்களோடு பேசுவார். மக்கள் மனதில்படும்படி பேசுவார் எவ்வளவு பிடிவாதக் காரர்களையும் மனம் மாற்றிவிடுவார்  
 எங்கள் சுயமரியாதை இயக்கக் கொள்கை, கடவுள், மதம், சாஸ்திரம் இல்லை; ஜாதி இல்லை; ஏழை பணக்காரன் இல்லை;  இதுகள் ஒழிய வேண்டும் என்பது இதுகளை விளக்கிய பிரசாரம் செய்வதில் ஜீவா தலைசிறந்து விளக்கினார்.
 நான் ரஷ்யாவுக்குப் போய்வந்த காலத்தில் எங்கள் பத்திரிகை பேரிலும், எனது பேரிலும்,  எனது மனைவி,  தங்கை, எனது அண்ணன், ஜீவா ஆகியவர்கள் பேரிலும் அரசாங்கம் பழிவாங்கும் முறையில் நடவடிக்கை எடுத்தது. ஆட்சியின் அடக்குமுறை காரணமாக நானும் சிறைக்கு சென்றேன்.  பத்திரிகையில் ஏதோ ஒரு கட்டுரையை எழுதிய காரணத்திற்காக ஜீவா அவர்களையும் அரசாங்கம் கைது செய்தது.  இதன் கருத்து பொதுஉடைமை இயக்கத்தையும் அழித்து விடவேண்டும் என்பதேயாகும். இந்த நிலையில்  திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அரசாங்கத்திற்கும் எனக்கும் ராஜி செய்ய  முன்வந்தார்.  நீங்கள் கம்யூனிஸ்ட் பிரசாரம் பண்ணவில்லை என்று எழுதிக் கொடுக்கும்படியும்  அப்படிச் செய்தால் விட்டு விடுவ தாகவும் அரசாங்கத்தார் சொல்கின்றார்கள் என்று கேட்டார். அதற்கு நான் அப்படி எல்லாம் கூறமாட்டேன்.  எனது கொள்கை இதுதான்.  அதாவது எனக்கு பலாத்காரத்தில் நம்பிக்கை இல்லை.  பலாத்கார மில்லாமல்  சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் மக்களிடம் பேதமில்லாமல்  செய்வதுதான்  என்கொள்கை.  இதற்கு  ஆக அரசாங் கத்துடன் கூடியவரை ஒத்துழைத்தே அரசாங்கத்திற்கு விரோதமில் லாமல் தொண்டாற்றுவதுதான் எனது கொள்கை என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விடுவது என்று ராஜி பேசிக்கொண்டேன்.  ஏன் என்றால் அப்போது ஜஸ்டிஸ்கட்சி  ஆட்சி இருந்தது.  நான் அந்தக் கட்சிக்கு ஆதரவாய் இருந்தவன் ஆதலால் அந்தப்படி எழுதிக் கொடுத்தேன்.  அப்போது ஜீவா சிறையில் இருந்தார்.  அந்த அறிக்கை யில் அவரிடமும் கையெழுத்து வாங்கினேன்.  உடனே அவரும் என் அண்ணனும் விடுதலை ஆனார்கள்.  ஜீவாவுக்கு நான் அந்த அறிக்கை வெளியிட்டது பிடிக்கவில்லை.  அதனால் கருத்து வேற்றுமை என்று கூறிக்கொண்டு கொஞ்சநாள் பொறுத்து விலக்கிக்கொண்டார்.  முக்கிய காரணம் நான் ஜஸ்டிஸ் கட்சியினர்களை ஆதரித்தது அவருக்கு பிடிக்கவில்லை.  அதன் காரணமாக விலகி விட்டார்.
 அப்படி விலகிவிட்டாலும் அவர் சாகிறவரையிலும் நாங்கள் இருவரும் அன்பும் மரியாதையும் கொண்டு இருந்தோம்.
            முதல்  பொதுத்தேர்தலில் நான் கம்யூனிஸ்ட்களை பலமாக ஆதரித்தேன். இவர்கள் வெற்றிக்காகப் பாடுபட்டேன்.  நல்ல அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.  காங்கிரசை விட எதிர்க்கட்சிக்காரர்களே அதிகமான பேர்கள் வந்தும் கூட நமது  ஜன நாயகத்தின் யோக்கியதை, தோற்றுப்போன காங்கிரசுதான் பதவிக்கு வந்தது.
           அந்த தோற்றுப்போன காங்கிரசின் பேரால் முதல் மந்திரியாக வந்த ஆச்சாரியார், எனது முதல் நம்பர் எதிரி இந்த கம்யூனிஸ்ட்டுகள் தான்.  இரண்டாவது எதிரி இந்த ராமசாமி தான் என்று என்னையும் சொன்னார்.  
 ஜீவானந்தம் அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்.  இராஜாஜி இப்படி கூறுகின்றாரே என்றார்.  அதற்கு நான், நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  நானே என்னைக் காப்பாற்றிக் கொள்ளு கின்றேன் என்றேன்.
        ஜீவா அவர்கள் கட்சிக்காக அதன் கொள்கைக்காக கடைசி வரையில் உண்மையாகவே உழைத்தவர்.  அவருக்கு கட்சியைப் பற்றி சில மனக்குறை உண்டு என்றாலும்  அதுபற்றி என்னிடம்தான் கூறுவார்.  மற்றவரிடம் கூறவே மாட்டார்.
         நேற்று சிலைத்திறப்பு விழாவின்போது இராஜாஜி ஏதேதோ பேசியதாகவும், காமராஜர் அவர்கள்  மறுத்துக்  கூறியதாகவும் பத்திரி கையிலும்  பார்த்தேன்;  நண்பர்களும் கூறினார்கள்.
       கம்யூனிஸ்ட் கட்சியினைப் பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.  எனக்கு சொல்லவும் உரிமையுண்டு.
      நமது நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு வருஷங்களாக இருக்கின்றது. அது எந்த உருப்படியான காரியத்தையும் செய்து வெற்றி பெறவில்லையே!
     தோழர்களே! கம்யூனிஸ்ட்கட்சி நமது நாட்டில் வளரவேண்டிய அளவுக்கு வளரவில்லை. நாட்டில் எந்த எந்த சொத்தைக் கொள்கை யினைக் கொண்ட கட்சிகள் எல்லாம் தலை தூக்கி ஆடுகின்றன. உன்னத கொள்கையுள்ள கட்சி வெற்றி காணாதது ஏன்? மிகவும் உன்னதமான கொள்கையினைக் கொண்ட கட்சி, உலகில் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் முடிந்த முடிவான பொது உடைமைத் தத்துவத்தைக் கொண்ட கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால் என்ன ஜாதகம்?
கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர்.  கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள்பற்றோ, மதப்பற்றோ, சாஸ்திரப்பற்றோ, ஜாதிப்பற்றோ, நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருக்கக்கூடாது. லட்சியப் பற்று,  வளர்ச்சிப்பற்று மட்டும்தான் இருக்கவேண்டும்.
 நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்ன மாறுதல் பண்ணியது என்று சொல்ல முடியவில் லையே! இராமாயணத்திலும், பாரதத்திலும் பழைய இலக்கியங் களிலும் நம்பிக்கை வைப்பவர்கள் எப்படி கம்யூனிட்டாக முடியும்?
 விபூதியும், நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசம் பேசுபவர் கள் எப்படி உண்மை கம்யூனிஸ்டாக முடியும்? கம்யூனிஸ்டுகளுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்டுக்கு நாட்டுப்பற்றுதான் எதற்கு?  அவனுக்கு நாடே கிடையாதே,  அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்ட்டுக்கு கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்கவேண்டும்?
     நமது நாட்டு பத்திரிகைகாரர்கள் பெரிதும் அயோக்கியர்கள் ஆனபடி யால் 100க்கு 5 பேர்கள் கூட யோக்கியர்களாக இல்லை.
இவர்கள்  கம்யூனிச எதிர்பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்களே ஒழிய கம்யூனிச தத்துவத்தினை பிரசாரம் செய்வதில்லையே?
      நண்பர் பாலதண்டாயுதம் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார். எப்படி நேற்று இராஜாஜியைக் கூப்பிட்டுவிட்டு வம்பிலே மாட்டிக் கொண்டார்களோ அதுபோல அவர் எழுதியுள்ள புத்தகத்தில் என்னையும் எதிர்த்துத் தாக்கி வம்பிலே மாட்டிக் கொண்டார். இந்த புத்தகத்தில் 50ம் பக்கத்தில் "பகுத்தறிவின் பெயரால் நமது பண்டைய தமிழ் இலக்கியங்களை வெறுக்கும் போக்கு ஒன்று தமிழகத்தில் நிலவி வருகின்றது”  என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி இவர் குறிப்பிட்டுத் தாக்கியதானது என்னைத்தானே ஆகும்?
     மேலும் கூறுகின்றார் "வாழ்வும் சமயமும் பிரிக்க ஒண்ணாத வரையில் பின்னிக் கிடக்கும் இந்த நாட்டில் சமயநூல்களை ஒதுக்கித் தள்ளமுடியாது” என்று! இவர் இப்படி என்னைத் தாக்கியது பற்றி எனக்குக் கவலை இல்லை.  இப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தி வரலாமா?  இலக்கியமும் மதமும் இவர்களுக்கு என்ன அழுகின்றது? இதுகள்  பற்றிய எண்ணம் உங்களுக்கு இருக்கலாமா?
     தோழர்களே!  நான்  சவால்விட்டே  கேட்கின்றேன் நமக்கு என்ன அய்யா யோக்கியமான இலக்கியம் உள்ளது? இராமாயணமும், பாரதமும், சிலப்பதிகாரமும் வெங்காயமும் எந்த முறையில் மக்களுக்குத் தேவையான இலக்கியமாகும்? அதில் கம்யூனிசத்துக்கு ஆன படிப்பினை என்ன இருக்கிறது?
 கம்யூனிஸ்ட்டுகள் இதுகளை கையில் தொடலாமா? "வாழ்வில் பின்னிக் கிடக்கும் சமய நூல்களை விலக்க முடியாது” என்கின்றார். விலக்கமுடியாது என்றால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் என்னத்  திற்கு இருக்கின்றீர்கள்?
        தமிழ்நாட்டில் இன்ன புலவன் பகுத்தறிவுவாதி, மனித சமுதாய வாழ்வுக்கு ஏற்றாற்போல் இலக்கியம் பண்ணினான் என்று கூற முடியுமா? சும்மா வீதிக்குவீதி பாரதிவிழா, பாரதியைப் பற்றிய பேச்சு என்று கொண்டாடுகின்றார்களே அந்த பாரதி என்ன அதிசயமான கருத்தைப் பாடினான்? பார்ப்பான் என்கின்றதினால் அவனுக்கு பெருமை அளிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
         கம்யூனிஸ்ட்களாகிய உங்களிடம் பெரிய திட்டம் உள்ளது.  சமுதாயத்துறையில் உயர்வு தாழ்வு நீக்குவது; பொருளாதாரத் துறையில் ஏழைப் பணக்காரனை ஒழிப்பது என்பது; உயர்சாதிக் காரன் கடவுள்தான் என்னை உயர்சாதிக்காரனாகப் படைத்தார் என்கின்றான்.  பணக்காரன் எனக்குப் பணம் கடவுள் கொடுத்தார், நீ  என்னடா கேட்பது என்கின்றான்.  இந்த கடவுளை  கம்யூனிஸ்ட் வெளுக்க வேண்டாமா? கடவுளாவது வெங்காயமாவது எல்லாம் பித்தலாட்டம் என்று மக்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டாமா? தெலுங்கிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள்.  " நேசேவாடுக்கு கோந்திப்பில்ல. எந்துக்கு” என்று நெசவாளி நூலை பிணைந்துக் கொண்டே போகின்றதும்  குரங்குக்குட்டி  அறுக்கின்றதுமாகத்தானே இருக்கும்.
           அதுபோல உங்கள் கொள்கைக்கும் இராஜாஜிக்கும் என்ன சம்பந்தம்? என்னத்திற்காக அவரை வம்பிலே அழைத்தீர்கள்? அப்படி வந்தவர் உங்கள் இலட்சியங்களைப் பற்றி உங்களைப் பற்றி நாலு நல்ல வார்த்தைதான் மனதார கூறுவாரா? இதுகளைப் பார்க்க வேண்டாமா?
 நான் கம்யூனிஸ்ட் தலைவர்களை ரொம்பக் கேட்டுக் கொள்ளு கின்றேன்.  கம்யூனிஸ்ட்டுக்களாகிய நீங்கள் பெரிய தியாகிகள் பல லாப நஷ்டங்கள் எல்லாம்பட்டு உள்ளீர்கள்.  இதுகளுக்குப் பலன் வேண்டாமா?
 தோழர்களே! செத்துப் போகும் நிலையில் இருந்த  காங்கிரஸ் இன்று தலை எடுத்து நிமிர்த்து நிற்கின்றதே!  காமராஜர் வந்தார் நிலைத்துப் போய்விட்டது. உங்கள்  இயக்கம் வளர்ச்சி  அடையாத தற்குக் காரணம் சரியான பிரசாரம் இல்லாததேயாகும். நீங்கள் இனியேனும் நாத்திகப் பிரசாரம் பண்ணனும்.  ரஷ்யாவில் கம்யூ னிஸ்ட்டுக்கள் பாதிரிகளையெல்லாம் வெட்டவில்லையா? நாம் நமது நாட்டுப் பாதிரிகளான பார்ப்பனர்களை வெட்டாவிட்டாலும் அவர்களை  மக்களை மக்களாக மதித்து நடக்கச் செய்ய  உணர்த்த வேண்டாமா இவர்களின்  புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டாமா?
     இன்றைக்கு நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.  எதற்காக, அது கொண்டுள்ள கொள்கையில் இருந்து தப்பாகப் போகாமலி ருப்பதற்கு ஆகும்.  இன்றைக்கு காங்கிரசில்   உள்ளவர்களில் கால்வாசிப்பேர்களுக்குத்தான் சமதர்ம உணர்ச்சி இருக்கின்றது.  3/4 பாகம்பேருக்கு  அது வெறுப்பாகவே இருக்கும்.  இந்த  3/4 பாகப் பேர்களையும் வெளியாக்கி காங்கிரசைச் சுத்தப்படுத்த நாமும் ஒத்து ழைத்தால்தான் முடியும். கம்யூனிசம் சமதர்ம அஸ்திவாரத்தில் தானே எழுப்பப்படவேண்டும்?
     நீங்கள் ஒரு தடவைதான் சட்டசபையை விட்டுவிடுங்களேன்: கட்சிப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்குங்களேன். சட்டசபைக்கு நின்று இரண்டொருவர் போய் என்னதான்  சாதித்து விடமுடியும்?
     எனக்கு என்னமோ சட்டசபைக்குப் போகின்றது பிடிக்கவில்லை.  கொள்கையினை எடுத்துச் சொல்லவாவது போகவேண்டும் என்பீர் கள். எந்தக் கொள்கையினை எந்த மந்திரி முன்பு எடுத்துச் சொல்லி வெற்றிபெற்றீர்கள்?
     நான் சட்டசபைக்குப் போகவில்லை.  எனக்கு நாட்டில் மரியாதை இல்லையா செல்வாக்கு இல்லையா?  எங்கள் கட்சிதான் சட்ட சபைக்கு போகாததினால் அழிந்து போய் விட்டதா?
    நான் இராமாயணத்தைக் கொளுத்தியவன், கீதையை கொளுத்தி யவன், இராமன் படத்தை எரித்தவன், பிள்ளையார் சிலையை வீதிக்கு வீதி போட்டு உடைத்தவன்தானே அய்யா? எனக்கு நாட்டில் என்ன மரியாதை கெட்டுவிட்டது. நீங்கள் என்னை எவ்வளவோ பயன் படுத்திக்கொள்ளலாம்.  மக்கள் மனதில் மூடநம்பிக்கைகள்,  முட்டாள் தனமான பற்றுக்கள் குடிகொண்டு இருப்பது நீங்கப் பாடுபட வேண்டும். மக்களை எல்லாம் இந்த உன்னதக் கொள்கைக்குப் பக்குவம் உடையவர்களாக ஆக்கவேண்டும்.  நீங்கள் தொண்டர்களாக கருதவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்
    தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட "ஜீவாவின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தை முதலாவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர் திரு.பி.சி. ஜோஷி அவர்கள் பணம் செலுத்தி தந்தைபெரியாரிடம் பெற்றுக்கொண்டார்.  அடுத்து விழாத்தலைவர் திரு.காட்டே அவர்களும்  அடுத்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுக் காரியதரிசி மணலி திரு. கந்தசாமி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
     தந்தைப் பெரியார் அவர்களும் ரூ.10 செலுத்தி 10 புத்தகங்களை வாங்கிக் கொண்டார்கள். முடிவில், இது முதலாகவாவது இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தலைசிறந்த பிரபலகட்சியாக விளங்க வேண்டுமென்று வாழ்த்துக் கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.                                                                                                   

விடுதலை 02.02.1966
நன்றி தோழர்SVR
Via Trotsky Marudu Maruthappan

ஞாயிறு, 12 ஜூலை, 2026

ஒரே நாடு, ஒரே மொழி?

 

தந்தை பெரியார்

மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில் சொன்னதாகவும், அவர் சொன்னது இன்னது என்று தெரியாமல் தென்னாட்டுப் பொறுக்கு மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்து விட்டுப் பின் ஒவ்வொருவராக எழுந்து, இந்துஸ்தானியில் சொன்னது புரியவில்லை என்றும், இந்துஸ்தானி தெரிந்தவர்களுக்குக் கூட மவுலானா (பண்டித) இந்துஸ்தானி புரியவில்லை என்றும் கூறியதாகவும், இதைக் கேட்டுச் சாந்த மூர்த்தியின் பிரதிநிதி என்று மதிக்கப்படும் முதல் மந்திரி தோழர் நேரு அவர்கள், இனி மேல் நான் பேசுவதெல்லாம் இந்துஸ்தானியில் தான் பேசப் போகிறேன்; இருப்பதற்குப் பிடித்தமாயிருந்தால் வாயை மூடிக்கொண்டு கப், சிப் என்று பேசாமலிருங்கள்; இல்லாவிட்டால் வெளியே போய்விடுங்கள் என்று மிகவும் சாந்தமான முறையில் சொன்னதாகவும், நேரு அவர்கள் இவ்வாறு சொல்வது பிரச்சினையைத் தீர்த்து விடுவதாகுமா? என்று தோழர் பட்டாபி அவர்கள் எடுத்துக்காட்டியதாகவும் ஒரு செய்தியும், இந்துஸ்தானி யில் ஒருவர் கேள்வி கேட்க அதற்குத் தோழர் ஜான் மத்தாய் அவர்கள் மலையாளத்தில் பதில் சொன்னதாகவும், அதை வரவேற்றுப் பலரும் சிரித்தார்கள் என மற்றொரு செய்தியும், சமீபத்தில் வெளிவந்ததைத் தோழர்கள் பார்த்திருக்கலாம்.

இந்திய யூனியனின் பாராளுமன்றம் என்று சொல் லப்படும் மத்திய சட்டசபை இப்போதைய நிலையில் திராவிடர்களுக்குக் கொஞ்சமும் பயன்படமாட்டாது என்றும், திராவிடர்களை அவமதிப்பதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே அந்த சபை கருவியாக இருக்க முடியுமென்றும், நாம் நெடுநாளாய்க் கூறி வந்ததையே இந்தச் சம்பவம் வற்புறுத்துகின்றதென்றாலும், நமது கருத்தை முன்பு ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட நேரிடையாக இந்த உணர்ச்சியை – ஆணவத்திற்கு அடங்கி அடிமைகளாக இருக்க வேண்டிய பரிதாப நிலையை – உணர்ந்து அனுபவிப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டிருக்கிறது என்பதை எண்ணி வரவேற்கிறோம். முதன் மந்திரி நேரு அவர்கள் நான் இனிமேல் பேசுவதெல்லாம் இந்துஸ்தானி யில்தான் பேசப்போகிறேன் என்று முரட்டுத்தனமாகப் பதில் கூறிய பிறகு, தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் கூறினாரென்றால், அந்தச் சம்பவம் நமது தேசியத் தாள்கள் சொல்வது போல தமாஷுக்கு உரிய சம்பவமாகத்தான் இருக்க முடியுமா? என்றும், உன்னுடைய உரிமைக்கு என்னுடைய உரிமை குறைந்ததில்லை என்கிற உரிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லையா? என்றும் கேட்கின்றோம். மேலும், தோழர் ஜவஹர் அவர்களுக்கு இந்துஸ்தானியில் பேசுவதற்கு எவ்வளவு உரிமையும், நியாயமும், இருக்கிறதோ அந்த உரிமையும், நியாயமும், ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போகு மென்றும், அதை எப்படி தோழர் ஜவஹர் அவர்கள் மறுக்க முடியும்? எனவும் எண்ணிய அடிப்படையின் மீதுதான், முதலாளிகளின் பாதுகாவலரான தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று எவருமே எண்ண வேண்டும். இந்த உரிமை உணர்ச்சியை எவரும் குறை சொல்ல முடியாது.

ஒட்டி வாழ முடியாத – வாழுவதற்கான இயல்பில்லாத – ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம் என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ அப்பொழுதுதான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும். 

ஆனால், நாட்டின் பல சிக்கல்களை அறுத்து, முடிவு கட்டுவதற்காகக் கூடியிருக்கும் இவ்வளவு பெரிய அறிவாளிகள், ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற நியாயத்தைப் பின்பற்றாமல், தான் தோன்றித்தனமாய் ஒவ்வொருவரும் அவரவர்கள் மொழிகளில் பேசினார்கள் என்றால், இது எந்த நியாயத்திற்கு ஒத்ததாக இருக்க முடியும் எனவும், வாத்தியாராய் இருக்கும் தோழர் ஜவஹர் அவர்களே இப்படி வழி காட்டுவார்களேயானால், மாணவர்கள் ஸ்தானங்களிலே இருக்கும் மற்ற மெம்பர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும், அங்கேயே ஒருவர் சொல்லியது போல இது ஏகாதிபத்திய மனப்பான் மையைக் காட்டவில்லையா? எனவும், இந்தப் போக்குத் தானே நாட்டின் எல்லாப் பிரச்சினைகளிலும் கையாளப் படும் எனவும், நம் திராவிடத் தேசியத் தோழர்களைக் கேட்க ஆசைப்படுகின்றோம்.

பலமொழி பேசப்படும் ஒரு துணைக் கண்டத்திலுள்ள சட்டசபையில், இதுபோல மொழித்தகராறு வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல என்றாலும், இந்த நிலை மையை வளர விடாமல் இருப்பதற்கு என்ன வழி? என் றால், சபைத்தலைவர் தோழர் மாவ்லங்கர் சொன்னது போல் எல்லோரும் இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டு விடுவதுதான் தகராறு தீரும்வழி என்று தேசியத் தலை வர்களால், தொண்டர்களால் கூறப்பட்டு வருகின்றது.

இந்தி அல்லது இந்துஸ்தானி அல்லது பல மொழி களையும் கலந்து பேசப்படும் புதுக்கலவை மொழி என்கிற முறையில் ஏதேனும் ஒரு மொழி இந்தியா என்கிற துணைக் கண்டத்திற்குப் பொது மொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும், பலவேறு மொழிகளும், நாகரிகப் பழக்க வழக்க மாறுபாடுகளும் நிறைந்து, குணச் செயல்களாலும் வேறுபட்டு விளங்கும் இந்தியாவை, ஒரே கலாச்சாரம் நிரம்பிய ஒரு நாடு என்று கொள்வது எல்லாப் பிரச் சினைகளையும் சிக்கலாக்கக் கூடிய ஒரு பெரிய தவறு என்பதையும், பல முறை விளக்கி வந்திருக்கிறோம். கனம் ஆச்சாரியாரவர்கள் இந்தியைக் கட்டாயமாக இத்திராவிடர் நாட்டில் புகுத்திய நேரத்தில் அதை எதிர்த்து நமது திராவிடத் தந்தை பெரியாரவர்களும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தை களுடன் சிறை புகுந்து, இருவரை உயிர்ப்பலி கொடுத்து, உலகத்திலேயே இம்மாதிரியான ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று பேசும்படியாகச் செய்து, அதை வெறுத்து ஒழித்திருப்பது உலகமே மறந்துவிட முடியாத சம்பவமாகும்.

திராவிடர்கள் இந்தி, இந்துஸ்தானி வேண்டாமென்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன? இந்துஸ்தானியை வைத்தே இவ்விந்தியத் துணைக் கண்டத்தை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திராவிட நாட்டில் கட்டாய இந்தி பரவக் கூடாது என்று கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றவர்கள், பகுத்தறிவுவாதிகள். இந்தி என்ற மொழியின் மீது ஏன் அவர்களுக்கு வெறுப்பு? மனதிலுள்ளதை வெளிப்படுத்தும் கருவிதான் எந்த மொழியுமே தவிர, எந்த ஒரு மொழிக்கும் தனிப்பட்ட தெய்விக சக்தியோ, வேறு மகாத்தியமோ இருக்கிறது என்பதை நம்பாதவர்கள் – ஒப்புக் கொள்ளாதவர்கள் – பகுத்தறிவுவாதிகள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் கட்டாய இந்தியை எதிர்த்தார்கள்?

இதனை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒவ்வொரு நேரத்திலும், எண்ணுவதற்கே மறுத்துவரும் தேசியத் திராவிடர்கள் தயவு செய்து இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு நாடு என்றும், ஒரே கலாச்சாரம் நிரம்பியதென்றும், வடநாட்டுத் தேசியத் தலைவர்கள் எல்லாம் சொல்லி வருவதையே, இந்த நாட்டுத் தேசிய வீரர்கள் என்று பட்டங்கட்டிக் கொண்டிருக்கும் மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ஒரே கலாச்சாரம் என்பதன் உண்மையான யோக்கியதை என்ன?

“எத்தனையோ நாடுகளின் கலாச்சாரங்கள் இந்த நாட்டில் வந்து கலந்தன. அவைகளையெல்லாம் தன்னுள் அடக்கித் தனது தனித்த உயர்வான கலாச்சாரம் விளங்க நிற்கிறது இந்தியா. இதைக் கண்டு நான் பெருமையடைகிறேன்”  என்கிறார் தோழர் ஜவஹர்லால். அவர் எந்தக் கலாச்சாரத்தை உயர்வானது என்று பாராட்டுகிறாரோ அந்தக் கலாச்சாரம் தான் திராவிடர்களைச் சூத்திரர்களாக்கி, தேவடியாள் பிள்ளைகளாகச் செய்து, சமுதாயத்தில் தாழ்வுறச் செய்து, ஒட்ட முடியாத பல ஜாதிகளாக்கி, கல்லையும் மண்ணையும் கடவுள்களாகக் கும்பிடச் செய்து, பார்ப்பனியம் மட்டும் உறிஞ்சிப் பிழைப்பதற்கும், மற்ற மக்கள் வாழ்வு எல்லாம் உறிஞ்சப்பட்டு வருவதற்குமாக ஆகிவிட்டது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரத்திற்கு இந்த நாடு இடங்கொடுத்ததால்தான் நெஞ்சு உறுதியும் நேர்மைத் திறமுமின்றி, வஞ்சகத்தை வீரம் என்றும், தந்திரத்தை அறிவுடைமை என்றும் கருதச் செய்து, காரண காரியத்தைக் கண்டறியும் சக்தியை, இழக்க செய்துவிட்டது என்பதையும்; அந்த ஒரு கலாச்சாரம் இன்னும் புனிதமானது என்று மதிக்கப்படுகிற நிலைமையினால் தான் இந்த  நாடு முற்போக்குத் தன்மையை இழந்திருக்கின்றது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரம் தான் பார்ப்பனிய இந்துமதக் கலாச்சாரம் என்பதாகும் என்பதையும் நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.

இந்தியா ஒரு நாடு என்பதையும்,  அதற்கு ஒரு பொது மொழி தேவை என்பதையும் திராவிடர்கள் – பகுத்தறிவு வாதிகள் – ஒப்புக் கொள்ளாததை, எந்த அறிவுடையவனும் மறுக்க முடியாத விதத்தில் திராவிடர் கழகம் விளக்கி வந்திருக்கின்றது. விளங்கிக் கொள்ள மறுப்பவர் களுக்கு விளங்காமலிருக்க முடியுமே தவிர, மற்றபடி அவ்விளக்கங்கள் எந்த மனிதனுக்கும் விளங்காமலிருக்க முடியாது.

ஒட்டி வாழ முடியாத – வாழுவதற்கான இயல்பில்லாத – ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம், என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ, அப்பொழுது தான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும் என்பதையும், அதற்கு உபாயமாக எமது பெரியாரவர்கள் கூறியிருக்கும், காந்தி நாடு, காந்தி மதம் என்பதைக் கைகொண்டு அரசாங்கத்தின் மூலமாகப் பரப்பினால்தான், ஒரு நாடு என்கிற சித்தாந்தம் நிலைக்க முடியும்; பிரயோஜனத்தையும் கொடுக்குமென்பதையும், அந்த நிலையில் இந்த நாட்டிற்கு எந்த ஒரு மொழியையும், பொது மொழியாக்குவதுதான் எளிது என்பதையும், உண்மையிலேயே நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையுடைய தேசிய வாதிகள் என்பார்கள், விரைந்து தெளிவடைய வேண்டியனவாகும்.

ஜாதி பேதமற்ற – மத உணர்ச்சிக்கும் இடமில்லாத – சமதர்மக் குடியரசைக் காண்பதற்கான முயற்சி சிறிதும் இல்லை என்பதையும், மேலும் மேலும் இந்து மத சாம்ராஜ்ய ஆட்சியை நிலை நாட்டுவதற்குதான், சமதர்ம வீரர் ஜவஹர், ஜெயப்பிரகாசத்திலிருந்து சனாதனச் சாக்கடைச் சங்கராச்சாரி வரை முயற்சிக்கப் பட்டு வருகிறது என்பதையும், காந்தியார் படுகொலை கூட இந்துமத பெருமையோடு அய்க்கியப்பட்டு விட்டதென்பதையும் பார்க்கும்போது, இந்தியாவை ஒரு நாடு என்பதும், இதற்கு இந்துஸ்தானியோ, இன்னொரு மொழியோ பொது மொழியாக இருக்க வேண்டும் என்பதும் வடிகட்டின வடநாட்டு ஏகாதிபத்தியத்தையும், வருணாசிரம ஆட்சியையும் புகுத்துகிற முயற்சியே யாகும். இம்முயற்சி, திராவிட உணர்ச்சியுடைய ஒருவன் உயிரோடு இருக்கும் வரையிலும் வெற்றிதராது என் பதை, இப்பொழுதும் வற்புறுத்திக் கூறுகிறோம்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.02.1948

-விடுதலை நாளேடு, 12.07.26

செவ்வாய், 7 ஜூலை, 2026

தேசமும் மக்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால் விஞ்ஞானமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைய வேண்டும்

 

தந்தை பெரியார்

 

சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையைத் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள், மூலமாகவும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதோடு சமயத்திற்குத் தகுந்த விதமாய் பேசிக் கொண்டும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் நமது முயற்சிக்கு இடையூறு விளைவிப்பதெனவே முடிவு கட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

விஷமப் பிரச்சாரம்

இக்கூட்டத்தார் யாவர் என சிலராவது அறிய விரும்பலாம். இக்கூட்டத்தவருள் பெரும்பாலோர் சமயத்திற்கென ஒரு வினாடி நேரமோ ஒரு அம்மன் காசோ செலவழிக்காத ‘‘தியாகிகளும்” அதுமாத்திரமல்லாமல் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கும் பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கும் இந்த விஷமப் பிரச்சாரத் தொழிலைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் அடியோடு இல்லாதவர்களும் என்றே சொல்லலாம். இக்கூட்டத்தார், கோர்ட்டு விவகாரங்களில் நீதியை எடுத்துச் சொல்லுவதற்கு என்று ஏற்பட்டிருக்கும் நியாயவாதிகள் எனப்படும் வக்கீல்களின் நாணயம் எவ்வளவோ, அதைவிட மோசமான யோக்கி யதையுடையவர்கள் என்றே சொல்லவேண்டும். அதாவது வக்கீல்களுக்கு அவர்கள் எடுத்துச் சொல்லும் வாதத்தில் எவ்வளவு மனச்சாட்சி உண்டோ, அதைவிட மோசமான மனசாட்சியும் வக்கீல்களுக்கு அந்த வாதங்களில் எவ்வளவு கவலை (தங்களது வரும்படியைப் பொறுத்தவரையில் மாத்திரம்) உண்டோ அதைவிட மோசமான (பிரசங்கம் நடக்க வேண்டிய அளவையும் பத்திரிகை செலவாகும் அளவையும் புத்தகம் விற்கும் அளவையும் பொறுத்த வரையில் மாத்திரம்) கவலை உடையவர்கள் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் நாம் காட்டித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே நமது அபிப்பிராயம் .

எப்படி தேசியத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும் தேசத் துரோகமானதென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அதுபோலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற அபிப்பிராயங்கள் சரியானதல்ல வென்றும் மத விரோதமானதென்றும் நாஸ்திக மென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

ஆனாலும் சில பத்திரிகைக்காரர்களையும், சில பண்டிதர்களையும் சில புத்தகக் கடைக்காரர்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டால் இதன் யோக்கியதை தானாகவே விளங்கிவிடும்.

அதாவது எப்படி தேசியத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும் தேசத் துரோகமானதென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அதுபோலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற அபிப்பிராயங்கள் சரியானதல்ல வென்றும் மத விரோதமானதென்றும் நாஸ்திக மென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

சம்பந்தம் உண்டா?

அப்படி இருப்பதிலும் பொதுவாக மக்கள் ஏமாறும்படி பேசுவதும் எழுதுவது மாயிருக்கின்றார்களே ஒழிய விவகாரத்தை எதிர்ப்பதில் தக்க சமாதானம் சொல்லி தங்கள் கட்சியை நிலைநிறுத்த வலியுறுத்துகிறவர்களாகவும் இல்லை. உதாரணமாக இக்கூட்டத்தவர்களின் மனப்பான்மையையும் வாழ்க்கையையும் அறிந்த உங்களுக்கு, இவர்களது வார்த்தைக்கும் எழுத்துக்கும், மனிதத் தன்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை ஒருவாறு அறியலாம். அது எப்படியோ இருந்துபோகட்டும் என்றாலும் இந்த சைவமும் வைணவமும் சமயாச்சாரிகளும் மக்களுக்கு எதற்காக வேண்டும் என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்க்கும்படி பொதுமக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். தேசமோ மக்களோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அறிவும் ‘சயன்ஸ்’ என்று சொல்லும் படியான விஞ்ஞானத் தத்துவமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைந்தாக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் முதலில் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் இவைகளில் முன்னேற்ற மடைந்த தேசமும் மக்களுந்தான் இதுவரையில் உண்மையில் முன்னேறி வந்திருக்கின்றார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வாசகர்கள் நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தெரிய வேண்டிய அவசியமிருக்குமானால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளைச் சற்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் தானாக விளங்கும். எனவே மேல்கண்ட அறிவு, ஆற்றல், ஒழுக்கம் ஆகியவைகளுக்கு ஏற்றதாக நமது மதமோ மதாச்சாரியர்களோ அல்லது சாமிகளோ இருக்கின்றனவா என்பதைத் தனியே இருந்து பாரபட்சம் விருப்புவெறுப்பு இல்லாமல் யோசித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.

நமது  மதமென்பதோ வேதமென்பதோ சாமிகள்
என்பதோ சமீப காலத்தில் ஏற்பட்டதாகச் சொல் வதற்கில்லை. யுகம், சதுர்யுகம், மகாயுகம், கல்பம் என்பவைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு சரித்திர ஆராய்ச்சிப்படிப் பார்த்தாலும் 5000, 6000 வருஷகாலத்திற்கு குறையாதது என்று சொல்ல இடமிருக்கின்ற தென்பதில் ஆராய்ச்சிக்காரர்களுக்குள் அபிப்பிராய பேதமில்லை. உலகத்தில் தோன்றி இப்போது ஜீவனுடனிருக்கும்மற்ற சமயங்கள் எல்லாம் அதைவிடக் குறைந்த காலத்தைக் கொண்டதாகவே இருக்கிறது அப்படி இருக்க நம் தேசம் மாத்திரம் இன்னிலையில் இருக்கக் காரணமென்ன என்பதற்கு மேல் கண்ட சமயவாதிகள் என்னபதில் சொல்லுகின்றார்கள்?

யாருக்கு நன்மை

மற்றும் சமயத்தையே ஆதாரமாகக் கொண்ட ராமன், கிருஷ்ணன் போன்ற விஷ்ணு அவதார அரசர்களும், மீனாட்சி சொக்கலிங்கர் போன்ற சிவ அவதார அரசர்களும், மற்றும் சேரன், சோழன், பாண்டியன் போன்ற தெய்வத் தன்மை தாண்டவ மாடிய அரசர்களும் ஆண்ட காலத்தைவிட இப்போதைய அரசாங்கமோ அல்லது ஜனப்பிரதிநிதி அரசாங்கமோ எந்த விதத்தில் மோசமானது என்பதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சிறு உதாரணம் சொல்லக்கூடுமோ என்று கேட்கின்றோம்.

எனவே ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்களின் நிலை, குலைந்து வருவதையும் தேசம் அடிமைப்பட்டு வருவதையும் தொடர்ச்சியாக கேட்டுப் பார்த்தும் வந்தும் கொஞ்சமாவது அறிவு என்பதை உபயோகப்படுத்தி இதன் காரணங்கள் என்ன என்பதை கவனிக்காமலும் அக்கம் பக்கம் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு ஒரு சிறிதும் திரும்பிப் பாராமலும் மக்களை பாழும் சமயம், சமயாச்சாரி சாமி என்பதையே குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டே நாசமாய்ப் போகும்படி செய்வதால் யாருக்கு என்ன நன்மை விளையக்கூடும் என்று கேட்கின்றோம்.

சாமியின் மூலமும் சமயத்தின் மூலமும் சமயாச்சாரிகளின் நடத்தையின் மூலமும் மக்களுக்கு ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்பிக்கலாம் என்று யாராவது சொல்ல வருவார்களேயானால் அவற்றை யெல்லாம் விட்டு விட்டு நேரே ஒழுக்கத்தையும் வாழ்க்கை நலன்களையும் கற்பிப்பதால் என்ன நஷ்டம் விளைந்து விடக்கூடும் என்று கேட்கின்றோம்.

இதுகால பரியந்தம் அதாவது குறைந்தது 5000 வருஷ காலம் இந்த வேலையைச் செய்து பார்த்தாய் விட்டதல்லவா? இனி ஏன் புதுமுறையைக் கண்டுபிடிக்கக் கூடாது. சாதாரணமாக வைத்திய சிகிச்சையில், வியாதிக்கு தக்க மருந்தை இரைப்பைக்கு அனுப்பி அங்கு அது ஜீரணக்கருவி மூலம் ஜீரணிக்கச் செய்து சக்கையை மலத்தின்மூலம் கழித்து சத்தை இரத்தத்தோடு கலக்கும்படி செய்து வியாதியைக் குணமாக்க முயற்சிப்பதைவிட மருந்தின் உண்மையான சத்தை எடுத்து நேரே ரத்தத்தில் சேர்த்து வேலை செய்யும்படி (இன்ஜெக்ஷன்) செய்வது போல ஒழுக்கங்களையே கற்பிப்பதில் என்ன நஷ்டம் என்று கேட் கின்றோம். ஒரு சமயம் அந்த தொழில் பழகாத சில வைத்தியர்களுக்கு வேறு தொழில் கற்றுக் கொள்ளும்வரையில் வயிற்றுப் பிழைப்புக்கு கஷ்டமாயிருக்கலாம். இதற்காக மக்கள் வியாதியோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா என்பதை யோசித்துப் பார்த்தால் சிலரது வயிற்றுப்பிழைப்புக் கஷ்டம் அவ்வளவு பெரிதாகத் தோன்றாது. நிற்க.

ஆதாரம் இல்லை

பொது ஜனங்களில் சிலர் இக் கூட்டத்தினர்களின் யோக்கியதையையும் உண்மையையும் அறியாமல், நாம் ஏதோ சற்று அளவுக்கு மீறி சற்றுவேகமாய்ப் போவதாக கருதுகிறார்கள் போல் தெரியவருகின்றது. ஆனால் அவர்கள் அப்படி கருதுவதற்கு ஆதாரமோ நியாயமோ ஒன்றும் எடுத்துக்காட்டாமல் ‘இருந்தாலும் இவ்வளவு கடினமாக போகலாமா’ என்கின்ற ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் நாமும் அவற்றை ஒரு சிறிதும் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில் நேற்றுவரை அமிதவாதிகளாக இருந்தவர்கள் அந்தக் கொள்கையுடனேயே நம்மால் மிதவாதிகள் என்று சொல்லப்படுபவர்களாகி விட்டார்கள். காரணம் என்னவென்றால் நாம் அவர்களைவிட சற்று வேகமாய்ப் போவதாக ஜனங்கள் நினைப்பதுதான்.

இதே முறையில் வெகு சீக்கிரத்தில் நாமும் மிதவாதிகள் என்று கருதப்படக்கூடியவர்களாக ஆனாலும் ஆகலாம் என்பதே நமது முடிவு.

நம்மைவிட வேகமாகப் போகக் கூடியவாலிபர்கள் முளைப்பதை வளருவதை நாம் நேரிலேயே பார்க்கின் றோம்.

உதாரணமாக எவ்வளவு கொடுமையை அனுபவிப்ப தானாலும் பலாத்காரம் என்றால் இன்னமும் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கின்றது. நியாயத்தையும், வாதத்தையும் எடுத்துச் சொல்லி மெய்ப்பித்துப் பார்க்கலாம். முடியாவிட்டால் இன்னமும் பொறுக்கலாம் என்கின்ற எண்ணமே தோன்றுகிறது.

எச்சரிக்கை

மக்களின் சுதந்திரத்திற்கும் அறிவிற்கும் சுயமரியா தைக்கும் உலகம் போகின்ற போக்கில் நாம் இருக்கும் நிலை எவ்வளவு பிற்பட்டது என்பதையும் நமது போக்கு அசைவற்றதும் நிதானமுமானது என்பதையும் யாராவது கவலையுடன் சிந்தித்துப் பார்த்தால், கடுகளவு கவலை இருந்தாலும் மதமும் சாமியும் மத ஆச்சாரிகளும் அவர்கள் கதைகளும் நம்மை ஒரு சிறிதும் தடைப்படுத்தவே மாட்டா என்றே துணிந்து சொல்லுவோம். ஆனால் அவற்றில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் தங்கள் வாழ்வும் அறிவுமே பிரதானம் என்பவர்களுக்கு உலகம் தெரியாதென்று தான் சொல்லவேண்டும்.ஆதலால் பொதுமக்கள் இனிதான் சற்று ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

குடிஅரசுதலையங்கம் – 30.09.1928

-விடுதலை நாளேடு, 21.6.26

பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்

 கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.

கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே யொழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்ன என்று வேலைக் கொடுக்கிறார்கள்? கடவுள் சக்தி என்று எதைச் சொல்லுகிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயவம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அதுபோலவே கடவுள் இல்லை; கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதுவும் இல்லை என்று அறிந்தும் கூட, பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள்.

இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.

கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போல் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைக் காரன் என்றுதான் நினைத்துக் கொள்கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக்கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை.

தனக்கோ, தன் பிள்ளைக்குட்டி, தாய் தந்தைக்கோ சிறு நோய் வந்தாலும் உடனே டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையென்று கருதுவதில்லை. “அது வேறு விஷயம்; இது வேறு விஷயம்” என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்!

மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோவில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஒரு ஊர் கோவிலை பெரியதாகவும், மற்ற ஊர் கோவிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும், ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்தப் பேதம் சமுத்திரத்தில் கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.

150 கோடி மக்களால் மதிக்கப்படும் யேசு கிறிஸ்து, “கோயில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்குமிடம்” என்று சொன்னார்! அது மாத்திரமல்லாமல், சுமார் 40 கோடி மக்களால் மகாத்மா என்று கருதப்படும் காந்தி ‘கோயில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு’ என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரர்களில் யார் இதை நம்புகிறார்கள்? அனுசரிக்கிறார்கள்?

கக்கூசு எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக் கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறது?

50 கோடி மக்கள் வாழும் நமது ‘இந்தியா’வை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோயில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத்தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்!

எவ்வளவு சொத்து பண விரயம் – நேர விரயம் – முயற்சி விரயம். படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட்டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு – ஆபாசம் இருந்து வருகின்றன!

இதற்குப் பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரேயடியாக “கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதி கள் (நாத்திகர்கள்) என்று பிள்ளைகளுக்குப் பிரச்சாரங்களில், காலட் சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது” என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும், எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக் கூடாது; சேர்க்கக் கூடாது.

இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!

(பெரியார் எழுதிய தலையங்கம், ‘விடுதலை’ 20.10.1967)

-விடுதலை நாளேடு, 19.6.26

மனிதனே சிந்தித்துப் பார் - பெரியார்

 கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன்.

இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன் காட்டுமிராண்டி பருவத்திலிருந்து மாற்றமடைந்து அவனுக்குள்ள அறிவுத் திறனுக்கேற்ற மனிதத் தன்மையுடைய வனாக ஆகவேண்டும்.

உலகமோ, அதிலுள்ள தாவரங்களோ, ஜீவஜந்துக்களோ, மனிதனோ தோன்றிய காலம் நமக்குத் தெரியாது. உத்தேசத்தால் ஏதோ சொல்லுகிறோம். அது எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், மனிதன் தன் அறிவுத் திறனுக்கு ஏற்றபடி வாழ்வில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறானா என்பதுதான் மனிதன் சிந்திக்கத்தக்கதாகும்.

கல்லாயுத காலத்திலிருந்து இரும்பாயுத காலத்திற்கு வந்ததும், சிக்கிமுக்கிக் கல் நெருப்புக் காலத்திலிருந்து மின்சார நெருப்புக் காலத்திற்கு வந்திருப்பதும்,

கட்டை வண்டிப் பிரயாண காலத்திலிருந்து ஆகாய விமான பிரயாண காலத்திற்கு வந்திருப்பது முதலான எத்தனையோ விஷயங்களில் மாறுதலும், தெளிவும் அடைந்திருப்பதை எந்த மனிதனும் மறுக்க முடியாது.

பிறக்கும் மக்களில் 100-க்கு 75 பேர், 90 பேர் செத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று பிறந்த மக்களில் 100-க்கு 75 பேர்கள் சாகாமல் இந்த 500 வருஷத்தில் ஒன்றுக்கு இரண்டாக உலகில் மக்கள் எண்ணிக்கை பெருகும்படி சாவு அளவையே மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவினாலென்றே அறிகிறோம்.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள், இவற்றிற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியும்.

இந்த மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற் றலினாலா என்பதைக் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.

  1. முதலாவதாக கடவுள் எப்படி வந்தது?
  2. கடவுளுக்கு உருவம் எப்படி வந்தது?
  3. அதுவும் மனித உருவமாக இருக்க அவசியம் என்ன?
  4. பல கடவுள்கள் எப்படி ஏற்பட்டன?
  5. அந்தப் பல கடவுள்களுக்கும் பெண்டு பிள்ளைகள், காதலிகள் எப்படி ஏற்பட்டன?
  6. பிறகு பெண்டு, பிள்ளை, காதலிகளும் எப்படி கடவுள்கள் ஆனார்கள்?
  7. இவைகளுக்கெல்லாம் வீடு, நகை, துணிமணி, சாப்பாடு முதலியவை எப்படி ஏற்பட்டன?
  8. இவைகள் மனிதர்களுடன் மற்ற ஜீவன்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களைக் கொலை செய்ய வேண்டிய அவசியமும் எப்படி வந்தது?
  9. இக்கடவுள்களில் ஒன்றுக்கொன்று அதிக முக்கியத்துவம் உடையவைகளாக எப்படி ஆயிற்று?
  10. இவை ஒருபுறமிருக்க கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளுக்குக் கடவுள் சக்தி எப்படி வந்தது?
  11. இக்கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளிலும் கடவுள் சக்தியும் அவற்றுள் உயர்வு – தாழ்வு எப்படி ஏற்பட்டன?
  12. இவைகளுக்காக மனிதன் செலவு செய்யும் நேரம், பணம், முயற்சி ஆகியவை எவ்வளவு?
  13. உலகில் துணி இல்லாமல், காய்கறி, ஜந்துக்கள் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு, சேர்க்கையில் தாய், மகள், அக்காள், தங்கச்சி என்ற பேதம் பாராமல் வாழ்ந்து வந்த ஆரியர்களையும், உன்னையும் பார்! இன்று அவர்கள் அறிவில் அடைந்திருக்கும் முன்னேற் றம் எவ்வளவு? உன் நிலைமை எப்படி இருக்கிறது?

மனிதனே சிந்தித்துப்பார்!

(பெரியார் எழுதிய தலையங்கம்,
‘விடுதலை’ 10.10.1967).

- விடுதலை நாளேடு, 19.6.26