ஞாயிறு, 12 ஜூலை, 2026

ஒரே நாடு, ஒரே மொழி?

 

தந்தை பெரியார்

மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில் சொன்னதாகவும், அவர் சொன்னது இன்னது என்று தெரியாமல் தென்னாட்டுப் பொறுக்கு மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்து விட்டுப் பின் ஒவ்வொருவராக எழுந்து, இந்துஸ்தானியில் சொன்னது புரியவில்லை என்றும், இந்துஸ்தானி தெரிந்தவர்களுக்குக் கூட மவுலானா (பண்டித) இந்துஸ்தானி புரியவில்லை என்றும் கூறியதாகவும், இதைக் கேட்டுச் சாந்த மூர்த்தியின் பிரதிநிதி என்று மதிக்கப்படும் முதல் மந்திரி தோழர் நேரு அவர்கள், இனி மேல் நான் பேசுவதெல்லாம் இந்துஸ்தானியில் தான் பேசப் போகிறேன்; இருப்பதற்குப் பிடித்தமாயிருந்தால் வாயை மூடிக்கொண்டு கப், சிப் என்று பேசாமலிருங்கள்; இல்லாவிட்டால் வெளியே போய்விடுங்கள் என்று மிகவும் சாந்தமான முறையில் சொன்னதாகவும், நேரு அவர்கள் இவ்வாறு சொல்வது பிரச்சினையைத் தீர்த்து விடுவதாகுமா? என்று தோழர் பட்டாபி அவர்கள் எடுத்துக்காட்டியதாகவும் ஒரு செய்தியும், இந்துஸ்தானி யில் ஒருவர் கேள்வி கேட்க அதற்குத் தோழர் ஜான் மத்தாய் அவர்கள் மலையாளத்தில் பதில் சொன்னதாகவும், அதை வரவேற்றுப் பலரும் சிரித்தார்கள் என மற்றொரு செய்தியும், சமீபத்தில் வெளிவந்ததைத் தோழர்கள் பார்த்திருக்கலாம்.

இந்திய யூனியனின் பாராளுமன்றம் என்று சொல் லப்படும் மத்திய சட்டசபை இப்போதைய நிலையில் திராவிடர்களுக்குக் கொஞ்சமும் பயன்படமாட்டாது என்றும், திராவிடர்களை அவமதிப்பதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே அந்த சபை கருவியாக இருக்க முடியுமென்றும், நாம் நெடுநாளாய்க் கூறி வந்ததையே இந்தச் சம்பவம் வற்புறுத்துகின்றதென்றாலும், நமது கருத்தை முன்பு ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட நேரிடையாக இந்த உணர்ச்சியை – ஆணவத்திற்கு அடங்கி அடிமைகளாக இருக்க வேண்டிய பரிதாப நிலையை – உணர்ந்து அனுபவிப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டிருக்கிறது என்பதை எண்ணி வரவேற்கிறோம். முதன் மந்திரி நேரு அவர்கள் நான் இனிமேல் பேசுவதெல்லாம் இந்துஸ்தானி யில்தான் பேசப்போகிறேன் என்று முரட்டுத்தனமாகப் பதில் கூறிய பிறகு, தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் கூறினாரென்றால், அந்தச் சம்பவம் நமது தேசியத் தாள்கள் சொல்வது போல தமாஷுக்கு உரிய சம்பவமாகத்தான் இருக்க முடியுமா? என்றும், உன்னுடைய உரிமைக்கு என்னுடைய உரிமை குறைந்ததில்லை என்கிற உரிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லையா? என்றும் கேட்கின்றோம். மேலும், தோழர் ஜவஹர் அவர்களுக்கு இந்துஸ்தானியில் பேசுவதற்கு எவ்வளவு உரிமையும், நியாயமும், இருக்கிறதோ அந்த உரிமையும், நியாயமும், ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போகு மென்றும், அதை எப்படி தோழர் ஜவஹர் அவர்கள் மறுக்க முடியும்? எனவும் எண்ணிய அடிப்படையின் மீதுதான், முதலாளிகளின் பாதுகாவலரான தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று எவருமே எண்ண வேண்டும். இந்த உரிமை உணர்ச்சியை எவரும் குறை சொல்ல முடியாது.

ஒட்டி வாழ முடியாத – வாழுவதற்கான இயல்பில்லாத – ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம் என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ அப்பொழுதுதான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும். 

ஆனால், நாட்டின் பல சிக்கல்களை அறுத்து, முடிவு கட்டுவதற்காகக் கூடியிருக்கும் இவ்வளவு பெரிய அறிவாளிகள், ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற நியாயத்தைப் பின்பற்றாமல், தான் தோன்றித்தனமாய் ஒவ்வொருவரும் அவரவர்கள் மொழிகளில் பேசினார்கள் என்றால், இது எந்த நியாயத்திற்கு ஒத்ததாக இருக்க முடியும் எனவும், வாத்தியாராய் இருக்கும் தோழர் ஜவஹர் அவர்களே இப்படி வழி காட்டுவார்களேயானால், மாணவர்கள் ஸ்தானங்களிலே இருக்கும் மற்ற மெம்பர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும், அங்கேயே ஒருவர் சொல்லியது போல இது ஏகாதிபத்திய மனப்பான் மையைக் காட்டவில்லையா? எனவும், இந்தப் போக்குத் தானே நாட்டின் எல்லாப் பிரச்சினைகளிலும் கையாளப் படும் எனவும், நம் திராவிடத் தேசியத் தோழர்களைக் கேட்க ஆசைப்படுகின்றோம்.

பலமொழி பேசப்படும் ஒரு துணைக் கண்டத்திலுள்ள சட்டசபையில், இதுபோல மொழித்தகராறு வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல என்றாலும், இந்த நிலை மையை வளர விடாமல் இருப்பதற்கு என்ன வழி? என் றால், சபைத்தலைவர் தோழர் மாவ்லங்கர் சொன்னது போல் எல்லோரும் இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டு விடுவதுதான் தகராறு தீரும்வழி என்று தேசியத் தலை வர்களால், தொண்டர்களால் கூறப்பட்டு வருகின்றது.

இந்தி அல்லது இந்துஸ்தானி அல்லது பல மொழி களையும் கலந்து பேசப்படும் புதுக்கலவை மொழி என்கிற முறையில் ஏதேனும் ஒரு மொழி இந்தியா என்கிற துணைக் கண்டத்திற்குப் பொது மொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும், பலவேறு மொழிகளும், நாகரிகப் பழக்க வழக்க மாறுபாடுகளும் நிறைந்து, குணச் செயல்களாலும் வேறுபட்டு விளங்கும் இந்தியாவை, ஒரே கலாச்சாரம் நிரம்பிய ஒரு நாடு என்று கொள்வது எல்லாப் பிரச் சினைகளையும் சிக்கலாக்கக் கூடிய ஒரு பெரிய தவறு என்பதையும், பல முறை விளக்கி வந்திருக்கிறோம். கனம் ஆச்சாரியாரவர்கள் இந்தியைக் கட்டாயமாக இத்திராவிடர் நாட்டில் புகுத்திய நேரத்தில் அதை எதிர்த்து நமது திராவிடத் தந்தை பெரியாரவர்களும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தை களுடன் சிறை புகுந்து, இருவரை உயிர்ப்பலி கொடுத்து, உலகத்திலேயே இம்மாதிரியான ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று பேசும்படியாகச் செய்து, அதை வெறுத்து ஒழித்திருப்பது உலகமே மறந்துவிட முடியாத சம்பவமாகும்.

திராவிடர்கள் இந்தி, இந்துஸ்தானி வேண்டாமென்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன? இந்துஸ்தானியை வைத்தே இவ்விந்தியத் துணைக் கண்டத்தை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திராவிட நாட்டில் கட்டாய இந்தி பரவக் கூடாது என்று கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றவர்கள், பகுத்தறிவுவாதிகள். இந்தி என்ற மொழியின் மீது ஏன் அவர்களுக்கு வெறுப்பு? மனதிலுள்ளதை வெளிப்படுத்தும் கருவிதான் எந்த மொழியுமே தவிர, எந்த ஒரு மொழிக்கும் தனிப்பட்ட தெய்விக சக்தியோ, வேறு மகாத்தியமோ இருக்கிறது என்பதை நம்பாதவர்கள் – ஒப்புக் கொள்ளாதவர்கள் – பகுத்தறிவுவாதிகள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் கட்டாய இந்தியை எதிர்த்தார்கள்?

இதனை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒவ்வொரு நேரத்திலும், எண்ணுவதற்கே மறுத்துவரும் தேசியத் திராவிடர்கள் தயவு செய்து இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு நாடு என்றும், ஒரே கலாச்சாரம் நிரம்பியதென்றும், வடநாட்டுத் தேசியத் தலைவர்கள் எல்லாம் சொல்லி வருவதையே, இந்த நாட்டுத் தேசிய வீரர்கள் என்று பட்டங்கட்டிக் கொண்டிருக்கும் மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ஒரே கலாச்சாரம் என்பதன் உண்மையான யோக்கியதை என்ன?

“எத்தனையோ நாடுகளின் கலாச்சாரங்கள் இந்த நாட்டில் வந்து கலந்தன. அவைகளையெல்லாம் தன்னுள் அடக்கித் தனது தனித்த உயர்வான கலாச்சாரம் விளங்க நிற்கிறது இந்தியா. இதைக் கண்டு நான் பெருமையடைகிறேன்”  என்கிறார் தோழர் ஜவஹர்லால். அவர் எந்தக் கலாச்சாரத்தை உயர்வானது என்று பாராட்டுகிறாரோ அந்தக் கலாச்சாரம் தான் திராவிடர்களைச் சூத்திரர்களாக்கி, தேவடியாள் பிள்ளைகளாகச் செய்து, சமுதாயத்தில் தாழ்வுறச் செய்து, ஒட்ட முடியாத பல ஜாதிகளாக்கி, கல்லையும் மண்ணையும் கடவுள்களாகக் கும்பிடச் செய்து, பார்ப்பனியம் மட்டும் உறிஞ்சிப் பிழைப்பதற்கும், மற்ற மக்கள் வாழ்வு எல்லாம் உறிஞ்சப்பட்டு வருவதற்குமாக ஆகிவிட்டது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரத்திற்கு இந்த நாடு இடங்கொடுத்ததால்தான் நெஞ்சு உறுதியும் நேர்மைத் திறமுமின்றி, வஞ்சகத்தை வீரம் என்றும், தந்திரத்தை அறிவுடைமை என்றும் கருதச் செய்து, காரண காரியத்தைக் கண்டறியும் சக்தியை, இழக்க செய்துவிட்டது என்பதையும்; அந்த ஒரு கலாச்சாரம் இன்னும் புனிதமானது என்று மதிக்கப்படுகிற நிலைமையினால் தான் இந்த  நாடு முற்போக்குத் தன்மையை இழந்திருக்கின்றது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரம் தான் பார்ப்பனிய இந்துமதக் கலாச்சாரம் என்பதாகும் என்பதையும் நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.

இந்தியா ஒரு நாடு என்பதையும்,  அதற்கு ஒரு பொது மொழி தேவை என்பதையும் திராவிடர்கள் – பகுத்தறிவு வாதிகள் – ஒப்புக் கொள்ளாததை, எந்த அறிவுடையவனும் மறுக்க முடியாத விதத்தில் திராவிடர் கழகம் விளக்கி வந்திருக்கின்றது. விளங்கிக் கொள்ள மறுப்பவர் களுக்கு விளங்காமலிருக்க முடியுமே தவிர, மற்றபடி அவ்விளக்கங்கள் எந்த மனிதனுக்கும் விளங்காமலிருக்க முடியாது.

ஒட்டி வாழ முடியாத – வாழுவதற்கான இயல்பில்லாத – ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம், என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ, அப்பொழுது தான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும் என்பதையும், அதற்கு உபாயமாக எமது பெரியாரவர்கள் கூறியிருக்கும், காந்தி நாடு, காந்தி மதம் என்பதைக் கைகொண்டு அரசாங்கத்தின் மூலமாகப் பரப்பினால்தான், ஒரு நாடு என்கிற சித்தாந்தம் நிலைக்க முடியும்; பிரயோஜனத்தையும் கொடுக்குமென்பதையும், அந்த நிலையில் இந்த நாட்டிற்கு எந்த ஒரு மொழியையும், பொது மொழியாக்குவதுதான் எளிது என்பதையும், உண்மையிலேயே நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையுடைய தேசிய வாதிகள் என்பார்கள், விரைந்து தெளிவடைய வேண்டியனவாகும்.

ஜாதி பேதமற்ற – மத உணர்ச்சிக்கும் இடமில்லாத – சமதர்மக் குடியரசைக் காண்பதற்கான முயற்சி சிறிதும் இல்லை என்பதையும், மேலும் மேலும் இந்து மத சாம்ராஜ்ய ஆட்சியை நிலை நாட்டுவதற்குதான், சமதர்ம வீரர் ஜவஹர், ஜெயப்பிரகாசத்திலிருந்து சனாதனச் சாக்கடைச் சங்கராச்சாரி வரை முயற்சிக்கப் பட்டு வருகிறது என்பதையும், காந்தியார் படுகொலை கூட இந்துமத பெருமையோடு அய்க்கியப்பட்டு விட்டதென்பதையும் பார்க்கும்போது, இந்தியாவை ஒரு நாடு என்பதும், இதற்கு இந்துஸ்தானியோ, இன்னொரு மொழியோ பொது மொழியாக இருக்க வேண்டும் என்பதும் வடிகட்டின வடநாட்டு ஏகாதிபத்தியத்தையும், வருணாசிரம ஆட்சியையும் புகுத்துகிற முயற்சியே யாகும். இம்முயற்சி, திராவிட உணர்ச்சியுடைய ஒருவன் உயிரோடு இருக்கும் வரையிலும் வெற்றிதராது என் பதை, இப்பொழுதும் வற்புறுத்திக் கூறுகிறோம்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.02.1948

-விடுதலை நாளேடு, 12.07.26

செவ்வாய், 7 ஜூலை, 2026

தேசமும் மக்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால் விஞ்ஞானமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைய வேண்டும்

 

தந்தை பெரியார்

 

சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையைத் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள், மூலமாகவும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதோடு சமயத்திற்குத் தகுந்த விதமாய் பேசிக் கொண்டும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் நமது முயற்சிக்கு இடையூறு விளைவிப்பதெனவே முடிவு கட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

விஷமப் பிரச்சாரம்

இக்கூட்டத்தார் யாவர் என சிலராவது அறிய விரும்பலாம். இக்கூட்டத்தவருள் பெரும்பாலோர் சமயத்திற்கென ஒரு வினாடி நேரமோ ஒரு அம்மன் காசோ செலவழிக்காத ‘‘தியாகிகளும்” அதுமாத்திரமல்லாமல் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கும் பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கும் இந்த விஷமப் பிரச்சாரத் தொழிலைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் அடியோடு இல்லாதவர்களும் என்றே சொல்லலாம். இக்கூட்டத்தார், கோர்ட்டு விவகாரங்களில் நீதியை எடுத்துச் சொல்லுவதற்கு என்று ஏற்பட்டிருக்கும் நியாயவாதிகள் எனப்படும் வக்கீல்களின் நாணயம் எவ்வளவோ, அதைவிட மோசமான யோக்கி யதையுடையவர்கள் என்றே சொல்லவேண்டும். அதாவது வக்கீல்களுக்கு அவர்கள் எடுத்துச் சொல்லும் வாதத்தில் எவ்வளவு மனச்சாட்சி உண்டோ, அதைவிட மோசமான மனசாட்சியும் வக்கீல்களுக்கு அந்த வாதங்களில் எவ்வளவு கவலை (தங்களது வரும்படியைப் பொறுத்தவரையில் மாத்திரம்) உண்டோ அதைவிட மோசமான (பிரசங்கம் நடக்க வேண்டிய அளவையும் பத்திரிகை செலவாகும் அளவையும் புத்தகம் விற்கும் அளவையும் பொறுத்த வரையில் மாத்திரம்) கவலை உடையவர்கள் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் நாம் காட்டித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே நமது அபிப்பிராயம் .

எப்படி தேசியத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும் தேசத் துரோகமானதென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அதுபோலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற அபிப்பிராயங்கள் சரியானதல்ல வென்றும் மத விரோதமானதென்றும் நாஸ்திக மென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

ஆனாலும் சில பத்திரிகைக்காரர்களையும், சில பண்டிதர்களையும் சில புத்தகக் கடைக்காரர்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டால் இதன் யோக்கியதை தானாகவே விளங்கிவிடும்.

அதாவது எப்படி தேசியத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும் தேசத் துரோகமானதென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அதுபோலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற அபிப்பிராயங்கள் சரியானதல்ல வென்றும் மத விரோதமானதென்றும் நாஸ்திக மென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

சம்பந்தம் உண்டா?

அப்படி இருப்பதிலும் பொதுவாக மக்கள் ஏமாறும்படி பேசுவதும் எழுதுவது மாயிருக்கின்றார்களே ஒழிய விவகாரத்தை எதிர்ப்பதில் தக்க சமாதானம் சொல்லி தங்கள் கட்சியை நிலைநிறுத்த வலியுறுத்துகிறவர்களாகவும் இல்லை. உதாரணமாக இக்கூட்டத்தவர்களின் மனப்பான்மையையும் வாழ்க்கையையும் அறிந்த உங்களுக்கு, இவர்களது வார்த்தைக்கும் எழுத்துக்கும், மனிதத் தன்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை ஒருவாறு அறியலாம். அது எப்படியோ இருந்துபோகட்டும் என்றாலும் இந்த சைவமும் வைணவமும் சமயாச்சாரிகளும் மக்களுக்கு எதற்காக வேண்டும் என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்க்கும்படி பொதுமக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். தேசமோ மக்களோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அறிவும் ‘சயன்ஸ்’ என்று சொல்லும் படியான விஞ்ஞானத் தத்துவமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைந்தாக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் முதலில் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் இவைகளில் முன்னேற்ற மடைந்த தேசமும் மக்களுந்தான் இதுவரையில் உண்மையில் முன்னேறி வந்திருக்கின்றார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வாசகர்கள் நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தெரிய வேண்டிய அவசியமிருக்குமானால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளைச் சற்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் தானாக விளங்கும். எனவே மேல்கண்ட அறிவு, ஆற்றல், ஒழுக்கம் ஆகியவைகளுக்கு ஏற்றதாக நமது மதமோ மதாச்சாரியர்களோ அல்லது சாமிகளோ இருக்கின்றனவா என்பதைத் தனியே இருந்து பாரபட்சம் விருப்புவெறுப்பு இல்லாமல் யோசித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.

நமது  மதமென்பதோ வேதமென்பதோ சாமிகள்
என்பதோ சமீப காலத்தில் ஏற்பட்டதாகச் சொல் வதற்கில்லை. யுகம், சதுர்யுகம், மகாயுகம், கல்பம் என்பவைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு சரித்திர ஆராய்ச்சிப்படிப் பார்த்தாலும் 5000, 6000 வருஷகாலத்திற்கு குறையாதது என்று சொல்ல இடமிருக்கின்ற தென்பதில் ஆராய்ச்சிக்காரர்களுக்குள் அபிப்பிராய பேதமில்லை. உலகத்தில் தோன்றி இப்போது ஜீவனுடனிருக்கும்மற்ற சமயங்கள் எல்லாம் அதைவிடக் குறைந்த காலத்தைக் கொண்டதாகவே இருக்கிறது அப்படி இருக்க நம் தேசம் மாத்திரம் இன்னிலையில் இருக்கக் காரணமென்ன என்பதற்கு மேல் கண்ட சமயவாதிகள் என்னபதில் சொல்லுகின்றார்கள்?

யாருக்கு நன்மை

மற்றும் சமயத்தையே ஆதாரமாகக் கொண்ட ராமன், கிருஷ்ணன் போன்ற விஷ்ணு அவதார அரசர்களும், மீனாட்சி சொக்கலிங்கர் போன்ற சிவ அவதார அரசர்களும், மற்றும் சேரன், சோழன், பாண்டியன் போன்ற தெய்வத் தன்மை தாண்டவ மாடிய அரசர்களும் ஆண்ட காலத்தைவிட இப்போதைய அரசாங்கமோ அல்லது ஜனப்பிரதிநிதி அரசாங்கமோ எந்த விதத்தில் மோசமானது என்பதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சிறு உதாரணம் சொல்லக்கூடுமோ என்று கேட்கின்றோம்.

எனவே ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்களின் நிலை, குலைந்து வருவதையும் தேசம் அடிமைப்பட்டு வருவதையும் தொடர்ச்சியாக கேட்டுப் பார்த்தும் வந்தும் கொஞ்சமாவது அறிவு என்பதை உபயோகப்படுத்தி இதன் காரணங்கள் என்ன என்பதை கவனிக்காமலும் அக்கம் பக்கம் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு ஒரு சிறிதும் திரும்பிப் பாராமலும் மக்களை பாழும் சமயம், சமயாச்சாரி சாமி என்பதையே குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டே நாசமாய்ப் போகும்படி செய்வதால் யாருக்கு என்ன நன்மை விளையக்கூடும் என்று கேட்கின்றோம்.

சாமியின் மூலமும் சமயத்தின் மூலமும் சமயாச்சாரிகளின் நடத்தையின் மூலமும் மக்களுக்கு ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்பிக்கலாம் என்று யாராவது சொல்ல வருவார்களேயானால் அவற்றை யெல்லாம் விட்டு விட்டு நேரே ஒழுக்கத்தையும் வாழ்க்கை நலன்களையும் கற்பிப்பதால் என்ன நஷ்டம் விளைந்து விடக்கூடும் என்று கேட்கின்றோம்.

இதுகால பரியந்தம் அதாவது குறைந்தது 5000 வருஷ காலம் இந்த வேலையைச் செய்து பார்த்தாய் விட்டதல்லவா? இனி ஏன் புதுமுறையைக் கண்டுபிடிக்கக் கூடாது. சாதாரணமாக வைத்திய சிகிச்சையில், வியாதிக்கு தக்க மருந்தை இரைப்பைக்கு அனுப்பி அங்கு அது ஜீரணக்கருவி மூலம் ஜீரணிக்கச் செய்து சக்கையை மலத்தின்மூலம் கழித்து சத்தை இரத்தத்தோடு கலக்கும்படி செய்து வியாதியைக் குணமாக்க முயற்சிப்பதைவிட மருந்தின் உண்மையான சத்தை எடுத்து நேரே ரத்தத்தில் சேர்த்து வேலை செய்யும்படி (இன்ஜெக்ஷன்) செய்வது போல ஒழுக்கங்களையே கற்பிப்பதில் என்ன நஷ்டம் என்று கேட் கின்றோம். ஒரு சமயம் அந்த தொழில் பழகாத சில வைத்தியர்களுக்கு வேறு தொழில் கற்றுக் கொள்ளும்வரையில் வயிற்றுப் பிழைப்புக்கு கஷ்டமாயிருக்கலாம். இதற்காக மக்கள் வியாதியோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா என்பதை யோசித்துப் பார்த்தால் சிலரது வயிற்றுப்பிழைப்புக் கஷ்டம் அவ்வளவு பெரிதாகத் தோன்றாது. நிற்க.

ஆதாரம் இல்லை

பொது ஜனங்களில் சிலர் இக் கூட்டத்தினர்களின் யோக்கியதையையும் உண்மையையும் அறியாமல், நாம் ஏதோ சற்று அளவுக்கு மீறி சற்றுவேகமாய்ப் போவதாக கருதுகிறார்கள் போல் தெரியவருகின்றது. ஆனால் அவர்கள் அப்படி கருதுவதற்கு ஆதாரமோ நியாயமோ ஒன்றும் எடுத்துக்காட்டாமல் ‘இருந்தாலும் இவ்வளவு கடினமாக போகலாமா’ என்கின்ற ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் நாமும் அவற்றை ஒரு சிறிதும் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில் நேற்றுவரை அமிதவாதிகளாக இருந்தவர்கள் அந்தக் கொள்கையுடனேயே நம்மால் மிதவாதிகள் என்று சொல்லப்படுபவர்களாகி விட்டார்கள். காரணம் என்னவென்றால் நாம் அவர்களைவிட சற்று வேகமாய்ப் போவதாக ஜனங்கள் நினைப்பதுதான்.

இதே முறையில் வெகு சீக்கிரத்தில் நாமும் மிதவாதிகள் என்று கருதப்படக்கூடியவர்களாக ஆனாலும் ஆகலாம் என்பதே நமது முடிவு.

நம்மைவிட வேகமாகப் போகக் கூடியவாலிபர்கள் முளைப்பதை வளருவதை நாம் நேரிலேயே பார்க்கின் றோம்.

உதாரணமாக எவ்வளவு கொடுமையை அனுபவிப்ப தானாலும் பலாத்காரம் என்றால் இன்னமும் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கின்றது. நியாயத்தையும், வாதத்தையும் எடுத்துச் சொல்லி மெய்ப்பித்துப் பார்க்கலாம். முடியாவிட்டால் இன்னமும் பொறுக்கலாம் என்கின்ற எண்ணமே தோன்றுகிறது.

எச்சரிக்கை

மக்களின் சுதந்திரத்திற்கும் அறிவிற்கும் சுயமரியா தைக்கும் உலகம் போகின்ற போக்கில் நாம் இருக்கும் நிலை எவ்வளவு பிற்பட்டது என்பதையும் நமது போக்கு அசைவற்றதும் நிதானமுமானது என்பதையும் யாராவது கவலையுடன் சிந்தித்துப் பார்த்தால், கடுகளவு கவலை இருந்தாலும் மதமும் சாமியும் மத ஆச்சாரிகளும் அவர்கள் கதைகளும் நம்மை ஒரு சிறிதும் தடைப்படுத்தவே மாட்டா என்றே துணிந்து சொல்லுவோம். ஆனால் அவற்றில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் தங்கள் வாழ்வும் அறிவுமே பிரதானம் என்பவர்களுக்கு உலகம் தெரியாதென்று தான் சொல்லவேண்டும்.ஆதலால் பொதுமக்கள் இனிதான் சற்று ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

குடிஅரசுதலையங்கம் – 30.09.1928

-விடுதலை நாளேடு, 21.6.26

பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்

 கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.

கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே யொழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்ன என்று வேலைக் கொடுக்கிறார்கள்? கடவுள் சக்தி என்று எதைச் சொல்லுகிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயவம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அதுபோலவே கடவுள் இல்லை; கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதுவும் இல்லை என்று அறிந்தும் கூட, பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள்.

இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.

கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போல் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைக் காரன் என்றுதான் நினைத்துக் கொள்கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக்கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை.

தனக்கோ, தன் பிள்ளைக்குட்டி, தாய் தந்தைக்கோ சிறு நோய் வந்தாலும் உடனே டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையென்று கருதுவதில்லை. “அது வேறு விஷயம்; இது வேறு விஷயம்” என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்!

மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோவில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஒரு ஊர் கோவிலை பெரியதாகவும், மற்ற ஊர் கோவிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும், ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்தப் பேதம் சமுத்திரத்தில் கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.

150 கோடி மக்களால் மதிக்கப்படும் யேசு கிறிஸ்து, “கோயில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்குமிடம்” என்று சொன்னார்! அது மாத்திரமல்லாமல், சுமார் 40 கோடி மக்களால் மகாத்மா என்று கருதப்படும் காந்தி ‘கோயில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு’ என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரர்களில் யார் இதை நம்புகிறார்கள்? அனுசரிக்கிறார்கள்?

கக்கூசு எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக் கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறது?

50 கோடி மக்கள் வாழும் நமது ‘இந்தியா’வை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோயில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத்தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்!

எவ்வளவு சொத்து பண விரயம் – நேர விரயம் – முயற்சி விரயம். படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட்டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு – ஆபாசம் இருந்து வருகின்றன!

இதற்குப் பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரேயடியாக “கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதி கள் (நாத்திகர்கள்) என்று பிள்ளைகளுக்குப் பிரச்சாரங்களில், காலட் சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது” என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும், எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக் கூடாது; சேர்க்கக் கூடாது.

இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!

(பெரியார் எழுதிய தலையங்கம், ‘விடுதலை’ 20.10.1967)

-விடுதலை நாளேடு, 19.6.26

மனிதனே சிந்தித்துப் பார் - பெரியார்

 கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன்.

இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன் காட்டுமிராண்டி பருவத்திலிருந்து மாற்றமடைந்து அவனுக்குள்ள அறிவுத் திறனுக்கேற்ற மனிதத் தன்மையுடைய வனாக ஆகவேண்டும்.

உலகமோ, அதிலுள்ள தாவரங்களோ, ஜீவஜந்துக்களோ, மனிதனோ தோன்றிய காலம் நமக்குத் தெரியாது. உத்தேசத்தால் ஏதோ சொல்லுகிறோம். அது எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், மனிதன் தன் அறிவுத் திறனுக்கு ஏற்றபடி வாழ்வில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறானா என்பதுதான் மனிதன் சிந்திக்கத்தக்கதாகும்.

கல்லாயுத காலத்திலிருந்து இரும்பாயுத காலத்திற்கு வந்ததும், சிக்கிமுக்கிக் கல் நெருப்புக் காலத்திலிருந்து மின்சார நெருப்புக் காலத்திற்கு வந்திருப்பதும்,

கட்டை வண்டிப் பிரயாண காலத்திலிருந்து ஆகாய விமான பிரயாண காலத்திற்கு வந்திருப்பது முதலான எத்தனையோ விஷயங்களில் மாறுதலும், தெளிவும் அடைந்திருப்பதை எந்த மனிதனும் மறுக்க முடியாது.

பிறக்கும் மக்களில் 100-க்கு 75 பேர், 90 பேர் செத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று பிறந்த மக்களில் 100-க்கு 75 பேர்கள் சாகாமல் இந்த 500 வருஷத்தில் ஒன்றுக்கு இரண்டாக உலகில் மக்கள் எண்ணிக்கை பெருகும்படி சாவு அளவையே மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவினாலென்றே அறிகிறோம்.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள், இவற்றிற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியும்.

இந்த மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற் றலினாலா என்பதைக் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.

  1. முதலாவதாக கடவுள் எப்படி வந்தது?
  2. கடவுளுக்கு உருவம் எப்படி வந்தது?
  3. அதுவும் மனித உருவமாக இருக்க அவசியம் என்ன?
  4. பல கடவுள்கள் எப்படி ஏற்பட்டன?
  5. அந்தப் பல கடவுள்களுக்கும் பெண்டு பிள்ளைகள், காதலிகள் எப்படி ஏற்பட்டன?
  6. பிறகு பெண்டு, பிள்ளை, காதலிகளும் எப்படி கடவுள்கள் ஆனார்கள்?
  7. இவைகளுக்கெல்லாம் வீடு, நகை, துணிமணி, சாப்பாடு முதலியவை எப்படி ஏற்பட்டன?
  8. இவைகள் மனிதர்களுடன் மற்ற ஜீவன்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களைக் கொலை செய்ய வேண்டிய அவசியமும் எப்படி வந்தது?
  9. இக்கடவுள்களில் ஒன்றுக்கொன்று அதிக முக்கியத்துவம் உடையவைகளாக எப்படி ஆயிற்று?
  10. இவை ஒருபுறமிருக்க கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளுக்குக் கடவுள் சக்தி எப்படி வந்தது?
  11. இக்கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளிலும் கடவுள் சக்தியும் அவற்றுள் உயர்வு – தாழ்வு எப்படி ஏற்பட்டன?
  12. இவைகளுக்காக மனிதன் செலவு செய்யும் நேரம், பணம், முயற்சி ஆகியவை எவ்வளவு?
  13. உலகில் துணி இல்லாமல், காய்கறி, ஜந்துக்கள் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு, சேர்க்கையில் தாய், மகள், அக்காள், தங்கச்சி என்ற பேதம் பாராமல் வாழ்ந்து வந்த ஆரியர்களையும், உன்னையும் பார்! இன்று அவர்கள் அறிவில் அடைந்திருக்கும் முன்னேற் றம் எவ்வளவு? உன் நிலைமை எப்படி இருக்கிறது?

மனிதனே சிந்தித்துப்பார்!

(பெரியார் எழுதிய தலையங்கம்,
‘விடுதலை’ 10.10.1967).

- விடுதலை நாளேடு, 19.6.26

ஞாயிறு, 28 ஜூன், 2026

ஜனநாயகம் என்பது என்ன? தந்தை பெரியார்



தலையங்கம்

நமது நாட்டில் இப்பொழுது நடைபெற்று வரும் சர்க்கார் – தங்களை மக்கள் சர்க்கார் என்றும், மக்களுக்காகவே தாங்கள் பதவியிலிருப்பதாகவும் கூறிவருகிறார்கள். சொல் மிக அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், செயலைப் பார்க்கும்போது ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவே மக்கள் நினைக்க வேண்டியிருக்கிறது.

ஜனநாயகம் என்று சொன்னால் 1.அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் 2.அரசாங்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துதல் 3. அரசாங்கத்தின் பிற்போக்கான செய்கைகளை வெளிப்படையாகக் குறை கூறுவது போன்ற உரிமைகள் பொதுமக்களுக்கு உண்டு என்றுதான் அர்த்தம். அவ்வாறில்லாமல் ஒரு கட்சி பதவிக்கு வந்து விட்டால் அந்தக் கட்சி பதவியில் அப்படியே நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவே, பதவியில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி எதிர்த்துப் பேசக் கூடாது என்பது அல்ல.

தேர்தல் காலங்களில் மட்டும்தான் கட்சி ரீதியில் வேலை செய்து அவரவர்கள் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று பாடுபடவேண்டும். அதன் பிறகு கட்சி அனுதாபத்தையோ அல்லது கட்சி நலன்களையோ சிறிதும் கருதாமல் நாம் மேலே குறிப்பிட்ட பொக்கிஷம் போன்ற மூன்று உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் ஆதர வில்லாமல் சர்க்கார் கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதென்பதை எடுத் துக்காட்டவும், அதிகார வர்க்க சட்டதிட்டங்களையும், முக்கியமாக ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக் கூடிய போக்கையும் கண்டிப்பதற்காகவும், சாதாரணப் பாமர பிரஜைக்குக் கூட சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தொழிலாளர்கள் ஏதாவது கூறினால் இதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் தூண்டுதல் – கம்யூனிஸ்டுகள் இப்போதுள்ள சர்க்காரைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்கள் என்ற பழி போட்டுத் தொழிலாளர்களின் பிரஜா உரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன.

பதவியிலிருக்கும் சர்க்கார் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகமா? அதை மாற்றுவது (கவிழ்ப்பது) குற்றமென்று சொல்லப்படுமானால், பிரகாசம் மந்திரிசபையை கவிழ்த்தவர்களெல்லாம் யார்? இப்போதுள்ள ஓமந்தூரார் மந்திரி சபையைக் கவிழ்க்கச் சில மாதங்களுக்கு முன்னர் முயற்சி செய்தவர்கள் யார்? ஏன் – எப்பொழுதும் ஓமந்தூரார் மந்திரி சபைக்கு என்னென்ன தொல்லை கொடுக்க வேண்டுமோ அவ்வளவையும் உள்ளுக்குள்ளிருந்து கொண்டே செய்துகொண்டு வருகிறவர்கள் யார்? இவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தால் இப் போதைய சர்க்காரைக் கவிழ்க்கவோ, சர்க்காருக்குத் தொல்லை கொடுக்கவோ விரும்பும் ஒன்றாம் நம்பர் அயோக்கியர்கள் யார் என்பது தெரியாமல் போகாது.

உண்மையில் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை தலைவர் பெரியார் அவர்கள் பல தடவை எடுத்துக் கூறிய பிறகும், திராவிடர் கழகத்தாருக்குச் சர்க்காரைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவோ, ஏதோ ஒரு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்ப தாகவோ யாராவது கூறுவார்களானால், ஒன்று, அவர்கள் அரசியலே தெரியாத அப்பாவிகளாக இருக்கவேண்டும்; இல்லையேல், எல்லாம் தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே கோய பல்ஸ் பிரச்சாரம் செய்கிற அயோக்கியர்களாய் இருக்க வேண்டும். சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையிலும் இன்றைக்கு ஒரு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த தோழர் சிவசண்முகம் சட்டசபைத் தலைவராக இருக்க மற்றவர்கள் சம்மதிப்பதற்கும், எவ்வளவு முயற்சி செய்தாலும், ஓமந்தூராரைக் கவிழ்த்தாலும், மற்றொரு சுப்பராயனைத்தான் பிரதமராகக் கொண்டு வர முடியும் என்று மற்றவர்கள் நினைப்பதற்கும், யாருடைய சேவை காரணம் என்பதை தேசியத் தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். அப்படியிருந்தும் ஏன் இப் போதைய மந்திரிகளையும், கவர்னர் – ஜெனரல் வருகையையும் எதிர்க்கிறீர்கள்? அதற்கு அடையாளமாகக் கருப்புக்கொடி ஆட்ட விரும்புகிறீர்கள்? என்று கேட்டீர் களானால், அதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறோம்.

திராவிடர் கழகத்தாருடைய ஆசையெல்லாம் திராவிடர்கள் அதாவது தோழர்கள் ஓமந்தூர் ராமசாமி, அவினாசிலிங்கம், பக்தவச்சலம் போன்றவர்கள் மந்திரிகளானால், மட்டும் போதாது, வந்துள்ள நமது மந்திரிகளுக்குச் சுதந்திரம் வேண்டும்; அவ்வாறில்லாமல், அவர்கள் முதுகுப்புறம் கயிற்றைக்கட்டி அதை வட நாட்டான் கையில் வைத்துக் கொண்டு ஆட்டுகிறபடியெல்லாம் ஆடவேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது என்பதேயாகும்.

இதை வேறு பாஷையில் சொல்லவேண்டுமானால், இப்போதுள்ள மந்திரிமார்கள் இவர்களை மந்திரி களாக்கிய மக்களின் விருப்பப்படி நடவாமல் தொட்டது தொண்ணூறுக்கும் “அனுமான்” (சென்னை சர்க்கார் விமானம்) மூலம் டில்லிக்குப் பறந்து சென்று அங்கு கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ ராமபிரானை (சமீபத்தில் அன்பர் ஆச்சாரியார் கவர்னர் ஜெனரல் தான் அல்ல வென்றும், ஸ்ரீ ராமர்தான் என்றும் சொல்லியிருக்கிறார்) லட்சுமணரையும் கேட்டு அவர்கள் உத்தரவுப்படியே இங்கு காரியங்கள் செய்து வருகிறார்களே அந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் – ஒழியும் வரை இவர்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் – அதுவும் சாத்வீகமாக ஜனநாயக உரிமைப்படி நமது எதிர்ப்பைக் கறுப்புக்கொடி ஆட்டுவதன் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கருதி, அந்த முறையில் நாம் நடந்து வருகிறோம். ஆளுகிறவர்கள் நேர்மையுள்ளவர்களானால் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்; “அதெல்லாம் முடியாது நான் தொட்டுக் கொண்டு கூட தின்பேன். நீ என்ன கேட்பது?” என்ற தோரணையில் நடப்பதானால்கூட ஜனநாயக உரிமைப்படி திராவிடர் கழகத்தாரின் எதிர்ப்புக்கு வசதியளிக்க வேண்டும். அவ்வளவு தாராள புத்தியில்லை என்றால், தைரியமாக “எங்களை எதிர்த்து யாரும் கருப்புக்கொடி ஆட்டக் கூடாது. எங்கள் ஜனநாயக அகராதி அப்படித்தான். மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி ஆட்டுவதைத் தடை செய்யும் மசோதா சட்டம் ஆக்கிவிட்டோம்” என்றாவது சொல்லி விடவேண்டும். அவ்வாறில்லாமல் மற்ற நாட்டாருக்கு இங்கு நடப்பது ஜனநாயகம் என்று காட்டிக் கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் இங்கு பழைய காட்டுராஜா கால ஆட்சி நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு கருப்புக் கொடி காட்ட விரும்புகிறவர்கள் மீது “பொதுஜன அமைதியைக் குலைப்பவர்கள்” என்ற பழிபோட்டுச் சிறையில் வைப்பதென்றால், இதை என்ன ஆட்சி என்று சொல்வது என்பதே நமக்குப் புரியவில்லை. ஆனால் நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆளுகிறவர்கள் யாருமே தங்கள் நடவடிக்கைகளை எதிர்க்கிறவர்கள் மீது எதையோ ஒரு பழி சுமத்தித்தான் அடக்கப் பார்ப்பார்கள் இதை நாம் எதிர்பார்க்காத விஷயமல்ல.

ஜனநாயகம் என்று சொன்னால் 1.அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல்
2.அரசாங்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துதல்
3. அரசாங்கத்தின் பிற்போக்கான செய்கைகளை வெளிப்படையாகக் குறை கூறுவது போன்ற உரிமைகள் பொதுமக்களுக்கு உண்டு என்றுதான் அர்த்தம்.

ஆகவே, திராவிடர் கழகத் தோழர்கள் எதற்கும் அஞ்சாது – ஆனால், பெரியாரவர்கள் கட்டளைக்கு இணங்க – ஒரு எழுத்தும் பிசகாமல் அன்றாடம் அவரவர்கள் ஊர்களில் ஊர்வலங்களும், அடிக்கடி பொதுக்கூட்டங்களும் நடத்தி நமது போராட்டத்தில் வெற்றிபெறும்வரை சலியாது உழைக்க வேண்டுகிறோம். எந்த எந்த ஊர்களுக்கு மந்திரிமார்கள் வருவதாகத் தெரிகிறதோ அங்கு எல்லாம் தோழர்கள், கருப்புக் கொடி (மத்தியில் சிவப்பு இல்லாமல்) காட்ட வேண்டு கிறோம். உலகிலுள்ள எல்லா ஜனநாயக நாடுகளிலும் கருப்புக்கொடி பிடித்தல் அனுமதிக்கப்பட்டே வந்தி ருக்கிறது. அப்படியிருக்க, நமது மந்திரிமார்கள் கருப்புக் கொடி காட்டுதலைச் சகிக்காமல் முன்னதாகவே தடுத்து சிறைப்படுத்திவிட்டுத்தான் ஊர்களில் பிரவேசிப்ப தென்ற முறையில் நடந்து வருவார்களானால், அதாவது, சமீபத்தில் பிரதமர் ரெட்டியார் அவர்கள் நாகர்கோவிலில் நடந்து கொண்டது போலவும், திண்டுக்கல்லில் இதல இதாபன மந்திரி தோழர் சந்திர மவுளி அவர்கள் நடந்து கொண்டது போலவும், இவர்களை யெல்லாம்விட நமது மதிப்பிற்குரிய கவர்னர் – ஜெனரல் அவர்கள் அவரது ஆத்மநண்பரான நமது பெரியார் அவர்களையும், நம் தளபதிகளையும், தோழர்களையும் சிறையில் வைத்துவிட்ட பின்னர் சென்னை நகரில் பவனி வந்ததைப் போலவுமே இனியும் நமது மந்திரிமார்கள் நடப்பார்களானால், அவைகளை நல்லதொரு வாய்ப்பாகவே கருதி ஏராளமான பேர்கள் கருப்புக் கொடி காட்ட முன்வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

கடைசியாக நமது தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது தலைவர் பெரியார், தளபதி மற்றும் பல முக்கியத் தோழர்கள் அனைவரையும் சர்க்கார் கைது செய்து விட்டார்கள். இந்தச் சமயத்தில் வெளியிலுள்ள நமக்குப் பொறுப்பு அதிகம். தலைவர்கள் வெளியில் இருந்த காலத்தில் நடந்து கொண்டதைவிடப் பலமடங்கு நாம் பொறுமையாகவும், அடக்கமாகவும், போலீசாருக்கு அவர்களது கடமைகளை செய்வதில் எவ்வித இடையூறு இல்லாத வகையிலும் நடந்து காண்பிப்பதன் மூலம் சர்க்கார் வெட்கித்துப்போய், தலைவர்களைக் கைது செய்து விடுவதால் பயன் ஒன்றும் இல்லை என்று உணர்ந்து கைது செய்தவர்களை யெல்லாம் விடுதலை செய்துவிட வேண்டிய நிலை மையை உண்டாக்க வேண்டும்.

ஆகவே, தோழர்களே! நம் தலைவர்களின் விடுதலை நம் கையில் இருக்கிறது; நம் செயலில் இருக்கிறது என்பதை உணருங்கள்! ஆவன அயராது செய்யுங்கள்! என்று வேண்டிக் கொள்கிறோம்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.08.1948

- விடுதலை நாளேடு, 28.06.26

செவ்வாய், 16 ஜூன், 2026

அன்னை நாகம்மையார் நினைவு நாள் எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? (1933-இல் அன்னை நாகம்மையார் மறைவிற்குத் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

 


னதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும், நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல் லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வர வில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும், பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ – போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷய மாகவும், ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்க மாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும், அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப் பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென் றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத் திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தி யாக்கிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற் றென்று சொல் லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படியிருந்தபோதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயது ஆனபோதிலும், அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையானபோதிலும் இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும்; பிறந்தால் அழ வேண்டும் என்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல், அதை ஒரு மகிழ்ச்சியாகவும், இலாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மை யென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மா ளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும்.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், இலாபமான காரியத் திற்கும் பயன்படுத்திக்கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக்கொள்ள மாட்டார். அதற்கு நேரெதிரி டையாக்குவதற்கே உபயோகித்துக்கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுபடுத்த முடியாத நஷ்டம் என்று தோன் றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவர்கள் சற்றுப் பொறுமையாய் இருந்து, இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களேயானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே, எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருட காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் கூற்றாக நின்றது என்றால், இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள்போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல – பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும், நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு. ஆனால், அதற்கு வேறு எவ்விதத்தடையும் இருந் திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடை யாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!

– ஈ.வெ.இராமசாமி

(‘குடி அரசு’ – தலையங்கம் 14.05.1933)

-விடுதலை நாளேடு,10.05.26

ஞாயிறு, 17 மே, 2026

மாற்றத்திற்கு இடமில்லாதது ஆரியம்-இடமளிப்பது திராவிடம்

 

தந்தை பெரியார்

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருபட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத் தக்கதும் பொருத்தமானதாகப் பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்துடன் பேச வேண்டியிருக்கிறது.

ஆனால் “படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடம் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்ன?” என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோச மானதாக இருப்பதால் அப்படிப்பட்ட திருத்தத்திற்கு ஆவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிவிட்டது.

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், எந்தப் படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் ஏற்படும் என்று கருதுவதில்லை. படிப்பது என்பது வெறும் “பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக” என்று சொல்லப்படுகிறது.

ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியா கிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை.

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல் லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை ஞாபக பலன், தன்மை இருப்பதாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தன்மை – இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தெய்வம், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பதும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புதான் இன்று பள்ளிப்படிப்பாகப் போய்விட்டது.

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்த மாதிரியான காரியங்களைப்பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படும். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக்கொடுத்ததையும், எழுதினாலும் உங்களுக்கு அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கலாம். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்பு வீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகு வார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகிறேன். இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானது ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் ஆனது என்பதை எடுத்துக் காட்ட ஆகத்தான் உள்ளது. எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன் ?

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப் படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் 'திரா விடர்' என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டும்? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது.

இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவை போதாமல் வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றுக்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ள விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்க ளுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம்.

திராவிடம் – திராவிடர் என்பது

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் விஷயத்தின் முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அதன் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி,ங்கி,சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நமது நம் நாட்டினுடைய தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரி அனுபவத்தில் வழக்கத்திற்கு வரும் நினைவுக்கு வரும்படி இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தைப் பற்றி) சிறிது நேரம் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.

இதுகூட ஏன் ?

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்கள் முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கிற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு – பழக்கத்திற்கு அதிகமாய் வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்படும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்கு நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால்,

ஏற்பட்ட கெடுதி

அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழைகளாய் வாழ்விலும் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவை அடங்கும். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்றும் நம்நாடு திராவிடநாடு என்றும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறோம். நாம் நம்மை திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டும்?

நாம் முன் கூறிய இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப்பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அப்படி அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண் டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகி விடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத் தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவி டனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர்

சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், “பிரமண”னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றி பெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும்.

திராவிடர் என்பதன் கருத்து

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன்.

நான் நம்மை திராவிடத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதுகிறீர்கள். அல்லது திராவிடர் – அரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அந்த காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில் தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.

கலந்துவிட்டது என்பது

ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சர அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராம ணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக் கும் போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரி சரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றி விட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டினால் நமக்கு ஏற்பட்டுள்ள கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.

நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுகள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை அனைத்தும் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எந்த சம்பந்தமுமில்லை, இவை ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாத வனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருமை உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயி ருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடு கிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும்.

இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப் பட்டுத்தான் போகும்.

சிக்கிமுக்கியில் ஏற்பட்ட நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்தது நாசவேலையல்ல; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் – பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி போன்றவற்றில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் போன்றவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தி யுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும்.

திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டினால் நமக்கு ஏற்பட்டுள்ள கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.

மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிட. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள்.

இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள் தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு சற்று அனுபவம் கிடைக்கும். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்ன வைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 14.07.1945

- விடுதலை நாளேடு, 17.05.2026