ஞாயிறு, 28 ஜூன், 2026

ஜனநாயகம் என்பது என்ன? தந்தை பெரியார்



தலையங்கம்

நமது நாட்டில் இப்பொழுது நடைபெற்று வரும் சர்க்கார் – தங்களை மக்கள் சர்க்கார் என்றும், மக்களுக்காகவே தாங்கள் பதவியிலிருப்பதாகவும் கூறிவருகிறார்கள். சொல் மிக அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், செயலைப் பார்க்கும்போது ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவே மக்கள் நினைக்க வேண்டியிருக்கிறது.

ஜனநாயகம் என்று சொன்னால் 1.அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் 2.அரசாங்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துதல் 3. அரசாங்கத்தின் பிற்போக்கான செய்கைகளை வெளிப்படையாகக் குறை கூறுவது போன்ற உரிமைகள் பொதுமக்களுக்கு உண்டு என்றுதான் அர்த்தம். அவ்வாறில்லாமல் ஒரு கட்சி பதவிக்கு வந்து விட்டால் அந்தக் கட்சி பதவியில் அப்படியே நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவே, பதவியில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி எதிர்த்துப் பேசக் கூடாது என்பது அல்ல.

தேர்தல் காலங்களில் மட்டும்தான் கட்சி ரீதியில் வேலை செய்து அவரவர்கள் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று பாடுபடவேண்டும். அதன் பிறகு கட்சி அனுதாபத்தையோ அல்லது கட்சி நலன்களையோ சிறிதும் கருதாமல் நாம் மேலே குறிப்பிட்ட பொக்கிஷம் போன்ற மூன்று உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் ஆதர வில்லாமல் சர்க்கார் கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதென்பதை எடுத் துக்காட்டவும், அதிகார வர்க்க சட்டதிட்டங்களையும், முக்கியமாக ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக் கூடிய போக்கையும் கண்டிப்பதற்காகவும், சாதாரணப் பாமர பிரஜைக்குக் கூட சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தொழிலாளர்கள் ஏதாவது கூறினால் இதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் தூண்டுதல் – கம்யூனிஸ்டுகள் இப்போதுள்ள சர்க்காரைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்கள் என்ற பழி போட்டுத் தொழிலாளர்களின் பிரஜா உரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன.

பதவியிலிருக்கும் சர்க்கார் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகமா? அதை மாற்றுவது (கவிழ்ப்பது) குற்றமென்று சொல்லப்படுமானால், பிரகாசம் மந்திரிசபையை கவிழ்த்தவர்களெல்லாம் யார்? இப்போதுள்ள ஓமந்தூரார் மந்திரி சபையைக் கவிழ்க்கச் சில மாதங்களுக்கு முன்னர் முயற்சி செய்தவர்கள் யார்? ஏன் – எப்பொழுதும் ஓமந்தூரார் மந்திரி சபைக்கு என்னென்ன தொல்லை கொடுக்க வேண்டுமோ அவ்வளவையும் உள்ளுக்குள்ளிருந்து கொண்டே செய்துகொண்டு வருகிறவர்கள் யார்? இவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தால் இப் போதைய சர்க்காரைக் கவிழ்க்கவோ, சர்க்காருக்குத் தொல்லை கொடுக்கவோ விரும்பும் ஒன்றாம் நம்பர் அயோக்கியர்கள் யார் என்பது தெரியாமல் போகாது.

உண்மையில் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை தலைவர் பெரியார் அவர்கள் பல தடவை எடுத்துக் கூறிய பிறகும், திராவிடர் கழகத்தாருக்குச் சர்க்காரைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவோ, ஏதோ ஒரு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்ப தாகவோ யாராவது கூறுவார்களானால், ஒன்று, அவர்கள் அரசியலே தெரியாத அப்பாவிகளாக இருக்கவேண்டும்; இல்லையேல், எல்லாம் தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே கோய பல்ஸ் பிரச்சாரம் செய்கிற அயோக்கியர்களாய் இருக்க வேண்டும். சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையிலும் இன்றைக்கு ஒரு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த தோழர் சிவசண்முகம் சட்டசபைத் தலைவராக இருக்க மற்றவர்கள் சம்மதிப்பதற்கும், எவ்வளவு முயற்சி செய்தாலும், ஓமந்தூராரைக் கவிழ்த்தாலும், மற்றொரு சுப்பராயனைத்தான் பிரதமராகக் கொண்டு வர முடியும் என்று மற்றவர்கள் நினைப்பதற்கும், யாருடைய சேவை காரணம் என்பதை தேசியத் தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். அப்படியிருந்தும் ஏன் இப் போதைய மந்திரிகளையும், கவர்னர் – ஜெனரல் வருகையையும் எதிர்க்கிறீர்கள்? அதற்கு அடையாளமாகக் கருப்புக்கொடி ஆட்ட விரும்புகிறீர்கள்? என்று கேட்டீர் களானால், அதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறோம்.

திராவிடர் கழகத்தாருடைய ஆசையெல்லாம் திராவிடர்கள் அதாவது தோழர்கள் ஓமந்தூர் ராமசாமி, அவினாசிலிங்கம், பக்தவச்சலம் போன்றவர்கள் மந்திரிகளானால், மட்டும் போதாது, வந்துள்ள நமது மந்திரிகளுக்குச் சுதந்திரம் வேண்டும்; அவ்வாறில்லாமல், அவர்கள் முதுகுப்புறம் கயிற்றைக்கட்டி அதை வட நாட்டான் கையில் வைத்துக் கொண்டு ஆட்டுகிறபடியெல்லாம் ஆடவேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது என்பதேயாகும்.

இதை வேறு பாஷையில் சொல்லவேண்டுமானால், இப்போதுள்ள மந்திரிமார்கள் இவர்களை மந்திரி களாக்கிய மக்களின் விருப்பப்படி நடவாமல் தொட்டது தொண்ணூறுக்கும் “அனுமான்” (சென்னை சர்க்கார் விமானம்) மூலம் டில்லிக்குப் பறந்து சென்று அங்கு கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ ராமபிரானை (சமீபத்தில் அன்பர் ஆச்சாரியார் கவர்னர் ஜெனரல் தான் அல்ல வென்றும், ஸ்ரீ ராமர்தான் என்றும் சொல்லியிருக்கிறார்) லட்சுமணரையும் கேட்டு அவர்கள் உத்தரவுப்படியே இங்கு காரியங்கள் செய்து வருகிறார்களே அந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் – ஒழியும் வரை இவர்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் – அதுவும் சாத்வீகமாக ஜனநாயக உரிமைப்படி நமது எதிர்ப்பைக் கறுப்புக்கொடி ஆட்டுவதன் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கருதி, அந்த முறையில் நாம் நடந்து வருகிறோம். ஆளுகிறவர்கள் நேர்மையுள்ளவர்களானால் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்; “அதெல்லாம் முடியாது நான் தொட்டுக் கொண்டு கூட தின்பேன். நீ என்ன கேட்பது?” என்ற தோரணையில் நடப்பதானால்கூட ஜனநாயக உரிமைப்படி திராவிடர் கழகத்தாரின் எதிர்ப்புக்கு வசதியளிக்க வேண்டும். அவ்வளவு தாராள புத்தியில்லை என்றால், தைரியமாக “எங்களை எதிர்த்து யாரும் கருப்புக்கொடி ஆட்டக் கூடாது. எங்கள் ஜனநாயக அகராதி அப்படித்தான். மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி ஆட்டுவதைத் தடை செய்யும் மசோதா சட்டம் ஆக்கிவிட்டோம்” என்றாவது சொல்லி விடவேண்டும். அவ்வாறில்லாமல் மற்ற நாட்டாருக்கு இங்கு நடப்பது ஜனநாயகம் என்று காட்டிக் கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் இங்கு பழைய காட்டுராஜா கால ஆட்சி நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு கருப்புக் கொடி காட்ட விரும்புகிறவர்கள் மீது “பொதுஜன அமைதியைக் குலைப்பவர்கள்” என்ற பழிபோட்டுச் சிறையில் வைப்பதென்றால், இதை என்ன ஆட்சி என்று சொல்வது என்பதே நமக்குப் புரியவில்லை. ஆனால் நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆளுகிறவர்கள் யாருமே தங்கள் நடவடிக்கைகளை எதிர்க்கிறவர்கள் மீது எதையோ ஒரு பழி சுமத்தித்தான் அடக்கப் பார்ப்பார்கள் இதை நாம் எதிர்பார்க்காத விஷயமல்ல.

ஜனநாயகம் என்று சொன்னால் 1.அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல்
2.அரசாங்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துதல்
3. அரசாங்கத்தின் பிற்போக்கான செய்கைகளை வெளிப்படையாகக் குறை கூறுவது போன்ற உரிமைகள் பொதுமக்களுக்கு உண்டு என்றுதான் அர்த்தம்.

ஆகவே, திராவிடர் கழகத் தோழர்கள் எதற்கும் அஞ்சாது – ஆனால், பெரியாரவர்கள் கட்டளைக்கு இணங்க – ஒரு எழுத்தும் பிசகாமல் அன்றாடம் அவரவர்கள் ஊர்களில் ஊர்வலங்களும், அடிக்கடி பொதுக்கூட்டங்களும் நடத்தி நமது போராட்டத்தில் வெற்றிபெறும்வரை சலியாது உழைக்க வேண்டுகிறோம். எந்த எந்த ஊர்களுக்கு மந்திரிமார்கள் வருவதாகத் தெரிகிறதோ அங்கு எல்லாம் தோழர்கள், கருப்புக் கொடி (மத்தியில் சிவப்பு இல்லாமல்) காட்ட வேண்டு கிறோம். உலகிலுள்ள எல்லா ஜனநாயக நாடுகளிலும் கருப்புக்கொடி பிடித்தல் அனுமதிக்கப்பட்டே வந்தி ருக்கிறது. அப்படியிருக்க, நமது மந்திரிமார்கள் கருப்புக் கொடி காட்டுதலைச் சகிக்காமல் முன்னதாகவே தடுத்து சிறைப்படுத்திவிட்டுத்தான் ஊர்களில் பிரவேசிப்ப தென்ற முறையில் நடந்து வருவார்களானால், அதாவது, சமீபத்தில் பிரதமர் ரெட்டியார் அவர்கள் நாகர்கோவிலில் நடந்து கொண்டது போலவும், திண்டுக்கல்லில் இதல இதாபன மந்திரி தோழர் சந்திர மவுளி அவர்கள் நடந்து கொண்டது போலவும், இவர்களை யெல்லாம்விட நமது மதிப்பிற்குரிய கவர்னர் – ஜெனரல் அவர்கள் அவரது ஆத்மநண்பரான நமது பெரியார் அவர்களையும், நம் தளபதிகளையும், தோழர்களையும் சிறையில் வைத்துவிட்ட பின்னர் சென்னை நகரில் பவனி வந்ததைப் போலவுமே இனியும் நமது மந்திரிமார்கள் நடப்பார்களானால், அவைகளை நல்லதொரு வாய்ப்பாகவே கருதி ஏராளமான பேர்கள் கருப்புக் கொடி காட்ட முன்வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

கடைசியாக நமது தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது தலைவர் பெரியார், தளபதி மற்றும் பல முக்கியத் தோழர்கள் அனைவரையும் சர்க்கார் கைது செய்து விட்டார்கள். இந்தச் சமயத்தில் வெளியிலுள்ள நமக்குப் பொறுப்பு அதிகம். தலைவர்கள் வெளியில் இருந்த காலத்தில் நடந்து கொண்டதைவிடப் பலமடங்கு நாம் பொறுமையாகவும், அடக்கமாகவும், போலீசாருக்கு அவர்களது கடமைகளை செய்வதில் எவ்வித இடையூறு இல்லாத வகையிலும் நடந்து காண்பிப்பதன் மூலம் சர்க்கார் வெட்கித்துப்போய், தலைவர்களைக் கைது செய்து விடுவதால் பயன் ஒன்றும் இல்லை என்று உணர்ந்து கைது செய்தவர்களை யெல்லாம் விடுதலை செய்துவிட வேண்டிய நிலை மையை உண்டாக்க வேண்டும்.

ஆகவே, தோழர்களே! நம் தலைவர்களின் விடுதலை நம் கையில் இருக்கிறது; நம் செயலில் இருக்கிறது என்பதை உணருங்கள்! ஆவன அயராது செய்யுங்கள்! என்று வேண்டிக் கொள்கிறோம்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.08.1948

- விடுதலை நாளேடு, 28.06.26

செவ்வாய், 16 ஜூன், 2026

அன்னை நாகம்மையார் நினைவு நாள் எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? (1933-இல் அன்னை நாகம்மையார் மறைவிற்குத் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

 


னதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும், நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல் லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வர வில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும், பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ – போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷய மாகவும், ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்க மாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும், அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப் பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென் றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத் திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தி யாக்கிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற் றென்று சொல் லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படியிருந்தபோதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயது ஆனபோதிலும், அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையானபோதிலும் இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும்; பிறந்தால் அழ வேண்டும் என்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல், அதை ஒரு மகிழ்ச்சியாகவும், இலாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மை யென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மா ளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும்.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், இலாபமான காரியத் திற்கும் பயன்படுத்திக்கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக்கொள்ள மாட்டார். அதற்கு நேரெதிரி டையாக்குவதற்கே உபயோகித்துக்கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுபடுத்த முடியாத நஷ்டம் என்று தோன் றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவர்கள் சற்றுப் பொறுமையாய் இருந்து, இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களேயானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே, எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருட காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் கூற்றாக நின்றது என்றால், இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள்போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல – பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும், நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு. ஆனால், அதற்கு வேறு எவ்விதத்தடையும் இருந் திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடை யாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!

– ஈ.வெ.இராமசாமி

(‘குடி அரசு’ – தலையங்கம் 14.05.1933)

-விடுதலை நாளேடு,10.05.26

ஞாயிறு, 17 மே, 2026

மாற்றத்திற்கு இடமில்லாதது ஆரியம்-இடமளிப்பது திராவிடம்

 

தந்தை பெரியார்

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருபட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத் தக்கதும் பொருத்தமானதாகப் பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்துடன் பேச வேண்டியிருக்கிறது.

ஆனால் “படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடம் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்ன?” என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோச மானதாக இருப்பதால் அப்படிப்பட்ட திருத்தத்திற்கு ஆவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிவிட்டது.

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், எந்தப் படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் ஏற்படும் என்று கருதுவதில்லை. படிப்பது என்பது வெறும் “பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக” என்று சொல்லப்படுகிறது.

ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியா கிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை.

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல் லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை ஞாபக பலன், தன்மை இருப்பதாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தன்மை – இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தெய்வம், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பதும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புதான் இன்று பள்ளிப்படிப்பாகப் போய்விட்டது.

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்த மாதிரியான காரியங்களைப்பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படும். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக்கொடுத்ததையும், எழுதினாலும் உங்களுக்கு அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கலாம். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்பு வீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகு வார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகிறேன். இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானது ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் ஆனது என்பதை எடுத்துக் காட்ட ஆகத்தான் உள்ளது. எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன் ?

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப் படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் 'திரா விடர்' என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டும்? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது.

இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவை போதாமல் வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றுக்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ள விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்க ளுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம்.

திராவிடம் – திராவிடர் என்பது

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் விஷயத்தின் முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அதன் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி,ங்கி,சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நமது நம் நாட்டினுடைய தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரி அனுபவத்தில் வழக்கத்திற்கு வரும் நினைவுக்கு வரும்படி இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தைப் பற்றி) சிறிது நேரம் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.

இதுகூட ஏன் ?

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்கள் முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கிற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு – பழக்கத்திற்கு அதிகமாய் வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்படும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்கு நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால்,

ஏற்பட்ட கெடுதி

அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழைகளாய் வாழ்விலும் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவை அடங்கும். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்றும் நம்நாடு திராவிடநாடு என்றும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறோம். நாம் நம்மை திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டும்?

நாம் முன் கூறிய இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப்பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அப்படி அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண் டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகி விடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத் தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவி டனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர்

சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், “பிரமண”னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றி பெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும்.

திராவிடர் என்பதன் கருத்து

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன்.

நான் நம்மை திராவிடத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதுகிறீர்கள். அல்லது திராவிடர் – அரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அந்த காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில் தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.

கலந்துவிட்டது என்பது

ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சர அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராம ணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக் கும் போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரி சரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றி விட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டினால் நமக்கு ஏற்பட்டுள்ள கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.

நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுகள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை அனைத்தும் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எந்த சம்பந்தமுமில்லை, இவை ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாத வனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருமை உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயி ருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடு கிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும்.

இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப் பட்டுத்தான் போகும்.

சிக்கிமுக்கியில் ஏற்பட்ட நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்தது நாசவேலையல்ல; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் – பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி போன்றவற்றில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் போன்றவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தி யுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும்.

திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டினால் நமக்கு ஏற்பட்டுள்ள கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.

மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிட. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள்.

இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள் தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு சற்று அனுபவம் கிடைக்கும். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்ன வைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 14.07.1945

- விடுதலை நாளேடு, 17.05.2026

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தீபாவளி தமிழர் விழாவா?

தந்தை பெரியார்

தீ பாவளிப் பண்டிகையைக் கொண்டாடு வது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையை கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. "மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.


ஆரியரின் இறக்குமதியே தீபாவளி

 வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு தம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மத வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம் மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக பண்டிகை, விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங் களாலும் வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவ மும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட.. இந்த மடமை மிக்க ஆசிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறு தலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித்தினளத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனு பவமும் இல்லாத சில இளைஞர்கள்(மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களே யானால்; எப்படி - யார் எவ்வளவு அறிவையும் தன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழு வதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள் கிறார்கள்!

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையே!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சித்தனையின்றி நடந்து கொள்வ தென்றால் தீபாவாளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும் மடமைக்கும், மான மற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக்கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட் அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமை யையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் -பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 

1.ஒரு காலத்தில் ஒரு அகரன் உலகத்தைப் பாயாகச் கருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4 ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! 

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, "கங்காஸ்நானம் ஆயிற்றா?" என்று கேட்பதும், நாம் 'ஆமாம்' என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

1-15.11.2005. உண்மை இதழ்

எல்லாக் காலத்துக்கும்... தந்தை பெரியார் - கவிஞர் கனிமொழி

நான் சிந்திக்கத் துவங்கியதே தந்தை பெரியாரின் எழுத்துகளைப் படித்துத்தான். தமிழ்ப் பெண்கள் மீது கலாச்சாரத்தின் பெயரால் வீசப்பட்ட பூமாலைகளைக் கழற்றி வீசச் சொன்னர்.

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பெரியார் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவரது பல கருத்துகள் நவீனமானவை. பொருத்தமானதும், எல்லாக் காலத்துக்கும் வளமையானதும் கூட.

பெரியாரின் கருத்துகள் அடிப்படை மனித உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் நோக்கியவை. ஆனால் இன்று அவரது சிந்தனைகள் ஓர் ஆரோக்கியமான மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படும்போது மேலும் செழுமை ஏறும். சாதியும் மதமும் தன் கோர முகத்தைக் காட்டிய காலத்திலேயே தன் சிந்தனைகளால் அதை உடைத்துப் போட்டவர் நம் பெரியார்!

- கவிஞர் கனிமொழி

(ஆனந்த விகடனில். 23.10.2005)

- உண்மை இதழ், 1-15.11.2005

சனி, 7 பிப்ரவரி, 2026

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி

ரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமை களையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப்போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக்கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுயமரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டுபிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சியாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே நிரூபிக்கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு மனுதர்ம சாஸ்திரத்தை உண்டாக்க சர்க்காரை வேண்டிக்கொள்ளுகிறார். அதாவது இந்தியன் பீனல் கோடில் மத சம்மந்தமான குற்றம் செய்பவர்களை தண்டிப்பதற்கு என்று ஏற்படுத்தப்பட்ட 295, 297, 298 – வது பிரிவுகளில் மத ஸ்தாபகரை தூஷிப்பவர்களை தண்டிக்க இடமில்லை. ஆதலால் 203 -வது பிரிவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும் என்றும், அதாவது, எந்த வகுப்பாரின் மனதையாவது புண்படுத்தும் வண்ணம் ஒரு மத ஸ்தாபகரையோ தெய்வத்தையோ குருமார்களையோ அவதார புருஷர்களையோ தூஷித்தாலும் அல்லது பத்திரிகையில் எழுதினாலும் அப்படிப்பட்டவருக்கு 2 வருஷ தண்டனை விதிக்க வேண்டும் என்பதாக ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று யோசனை சொல்லுகிறார். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்பட்டு விட்டால் மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவர்களது சூழ்ச்சியின் கருத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தக் கருத்தை சுதேசமித்திரன் பத்திரிகையும் ஜாடையாக அநேக தடவை எழுதி வந்திருக்கிறது. ஆனாலும் இப்போதுதான் ஒரு சட்ட ஞானமுள்ள பொறுப்பான மனிதரால் சட்டம் செய்ய வேண்டிய வாசகங்களுடன் வெளியாயிருக்கிறது. சர். சிவசாமி அய்யர் சட்டம் கற்று, சுமார் 35 வருஷம் ஆகியும், சட்டத்திற்கு வியாக்யானம் செய்து ஜீவிப்பதிலேயே காலங்கடத்தி வந்தும், இதுவரை இக்குறையைப் பற்றி ஞாபகம் வராமல், இப்போது சுயமரியாதைக் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு இவை ஞாபகத்திற்கு வந்திருப்பதின் பொருள் என்ன என்பது இவை வாசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இதே சர். சிவசாமி அய்யரின் கருத்தைத்தான் சென்ற வருடம் சிறீமான். எஸ். சீனிவாசய்யங்கார் தெரிவித்தார். அதாவது:- வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பும் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை இன்னும் ஜெயிலில் போடாமல் வெளியில் விட்டுக்கொண்டிருப்பதற்கு சர்க்காருக்கு கண்ணில்லையா? அட்வொகெட் ஜெனரல் இதை கவனியாமல் என்ன செய்கிறார் என்று கேட்டார். இதே கருத்தைத் தான் சிறீமான் சத்தியமூர்த்தி மற்றொரு வழியில் வெளியிட்டார். அதாவது:- பம்பாய் மாகாணத்து கல்வி மந்திரி சிறீமான் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்து வகுப்பு துவேஷத்தை உண்டாக்கி விட்டு போவதை சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு யாதவரை தண்டிக்க தைரியமில்லாவிட்டால் தான் ராஜீனாமா கொடுத்து விட்டு வேறு ஒருவரைக் கொண்டாவது ஏன் செய்திருக்கக்கூடாது என்று கேட்டார். சுயராஜ்ஜியா, சுதேசமித்திரன், பிராமணன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் கேள்வி முறை இல்லையா? இப்படி அக்கிரமங்களை சகித்துக் கொண்டிருக்கலாமா? பிராமணத் தலைவர்கள் இதைப் பற்றி கவனிப்பதில்லையா என்று மாரடித்துக்கொண்டன. இவைகள் எல்லாம் கவனிக்கப்படாவிட்டாலும் சர். சிவசாமி அய்யரின் அழுகை கட்டாயம் கவனிக்கப்பட்டு அந்தப்படி ஒரு சட்டம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

நாம் அவைகளுக்குப் பயந்து கொண்டு அயோக்கியர்களின் செய்கைகளையும், சூழ்ச்சிகளையும், அக்கிரமங்களையும், மனிதப் பிறப்புரிமைக்கும், மனிதத் தத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் இடையூறு விளைவிக்கும் காரியங்களையும் வெளிப் படுத்தாமலிருக்கப் போவதில்லை. பிறப்புரிமையான சுயமரியாதையானது சூழ்ச்சிக்காரர்களால்,

வஞ்சகர்களால் செய்யப்படும் சட்டங்களுக்கு அடங்கி விடும் என்று எதிர்ப்பார்ப்பது மடமையே யாகும்.

சாதாரணமாக, இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையுடையது அல்ல என்பதையும், அது ஒரு பழமையான மதம் அல்ல என்பதையும், பல பெரி யோர்களும் அறிஞர்களும், ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இனி சட்டம் என்ன செய்து விட முடியும்?

எவ்வளவோ பிரத்தியட்ச ஆதாரங்களுடனும் அநேக நன்மையான கொள்கையுடனும் விளங்கும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியே பேசும் போது, கிருஸ்துநாதர் என்பதாக ஒருவர் பிறக்கவே இல்லையென்று ஒருவர் புஸ்தகமே எழுதியிருப்பது குற்றமில்லாமல் இருக்கும் போது, அஸ்திவாரத்திலிருந்தே அண்டப் புளுகையுடையதான இந்து மதத்தைப் பற்றி பேசுவதும், கள்ளு, சாராயம், மாம்சம், பெண் கூத்தி முதலியவைகளை வைத்துப் படைக்க வேண்டிய தெய்வங்களையும், தன்னைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிற மத ஸ்தாபகரையும், ஊரைக் கொள்ளைடித்து ஒரு கூட்டத்தாருக்கே வயிறு புடைக்கத் தின்னும்படி பொங்கிப் போட்டுவிட்டு தான் பஞ்சு மெத்தையில் உறங்கிக்கொண்டும், தங்கப் பல்லக்கில் உலவிக் கொண்டும், தன்னை சன்னியாசி என்றும் துறவி என்றும் சொல்லிக் கொண்டும் திரியும் போலி குருமார்கள் என்போர்களையும் வெளிப்படுத்தினால் அது எப்படி குற்றமாகுமென்பது நமக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆசாமிகளை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்களால் வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு மனம் புண்ணாவதோடு வயிறு கூட பட்டினியால் வருந்த நேரிடலாம். அதற்கு யார் என்ன செய்யக்கூடும்? சோம்பேறித்தனத்தையும் ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதையும் விட்டு விட்டு யோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்து தின்னும் படி மக்களை பழக்குவதுதான் இதற்கு பரிகாரமாகுமே தவிர சட்டத்தின் மூலம் இதை வெளிப்படுத்துகிறவரை   தண்டிக்க வேண்டும் என்பது ஒருக்காலும் பரிகாரமாகாது.

வேதம் கூட கடவுளால் சொல்லப்பட்டதென்று தான் சொல்லப்படுகிறது. வேதத்தைக் கண்டிப்பது தெய்வதூஷணை என்றுதான் சொல்லப்படுகிறது. இதற்காக அதன் அக்கிரமங்களை ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் வெளியிடாமலிருக்க முடியுமா? உதாரணமாக அதர்வண வேதத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பிராமணன் ஒரு இரவு பெண் இல்லாமல் தனியாய் படுத்திருப்பானானால் அந்த கிராமத்திற்கே கேடு என்பதாக எழுதப்பட்டிருக்கிறதாம். இதற்காக பயந்து கொண்டு எந்த திண்ணையில் எந்தப் பிராமணன் பக்கத்தில் பெண் இல்லாமல் தனியாய்ப் படுத்திருக்கிறான் என்று தேடிப் பார்த்து அவனிடம் ஒரு பெண்ணைக் கொண்டுபோய் படுக்க வைப்பதா? அல்லது சட்டத்திற்குப் பயப்படாமல் இது சுயநலக்கார வஞ்சகர்களால் எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதா என்பதை யோசித்தால் இச்சட்டத்தின் கதி என்ன ஆகும் என்பது விளங்காமல் போகாது. எந்த மதஸ்தனானாலும் யாரானாலும் ஏதாவது ஒன்று தனக்கு மாத்திரம் தெய்வம் தனக்கு மாத்திரம் குரு என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வானானால் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் முட்டாள்தனத்துக்கு பரிதாபப்படுவதோடு அவ்விஷயம் தீர்ந்துவிடும். அப்படிக்கில்லாமல் தங்கள் நன்மைக்கு மாத்திரம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதை மற்றவர்கள் பிடரியின் பேரில் ஏற்றுவதானால் அதை கண்டிக்காமலும் ஒழிக்காமலும் இருக்க முடியவே முடியாது என்பதை சிறீமான் சர்.சிவசாமி அய்யருக்கும் இதை வாசிப்பவருக்கும் சத்தியமூர்த்தி அய்யருக்கும் மித்திரன் கூட்டத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(‘குடிஅரசு’ – கட்டுரை – 07.08.1927)

- விடுதலை நாளேடு,1.2.26

திராவிடர்-ஏன்? - தந்தை பெரியார்-

 


தாய்மார்களே தோழர்களே!


நாம் இந்த நாட்டில் உரிமை உடைய மக்களாயிருந்தும் சந்தாயத்தில் இழிந்தவர்களாகவும் பொருளாதாரத்தில் தாழ்த்தப் பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம்! இதை மாற்றவேண்டிய முயற்சிகள் பல நடத்தும், நம் நிலையியே சிறிதும் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. காரணம் என்னவென்று யோசித்தோம். முன்னேற்றம் அடைத்துள்ள நாட்டாரைப் பார்த்தோம். அதன்படி எந்த ஒரு நாட்டு மக்களும் அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்தவருக்குப் பொது உளர்ச்சியையும், ஒற்றுமை மனப் பான்மையையும் உண்டாக்க கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச் சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது. அதே சமயத்தில் நம் நிலையைச் சிந்தித்துப் பார்த்தபோது இந்து: இந்தியர்; இந்தியா' என்று நமக்குப் புரியாத சொற்களை - நமக்குச் சம்பந்தமில்லாத மொழிகளைச் சொல்லிக் கொண்டு வந்தோமே தவிர, உண்மையான ஒன்றுமை ஏற்படத்தக்க முறையைக் கையாள வேண்டுமே என்ற சிந்தனை நம் தலைவர்களுக்குள் ஏற்படவே இல்லை. நமது நாடு என்பதன் பெயராலோ, அல்லது சமுதாயம் என்பதன் பெயராலோ. அன்றிச் சமயம் அல்லது கொள்கை என்பதன் பெயராலோ தம் மக்களுக்குள்ளே ஒரு பொது உணர்ச்சி இல்லை. அத்தகைய மக்கள் எதைக் கொண்டு முன்னேற்றமடைய முடியும்?


ஆரியர்களும்,முஸ்லிம்களும் நம்மோடு வாழ்ந்துவருபவர்கள் தாம். ஆனால், அவர்களுடைய முன்னேற்றம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருகிறது. சமயத்தின் பெயராய் முஸ்லிம்களும், இனத்தின் பெயரால் ஆரியர்களும் ஒன்றுபட்டு விட்டனர். உலகம் பூராவிலுள்ள முஸ்லிம்கள் ஒரே சமூகம் என்ற உணர்ச்சியும் இமயம் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள 'பிராமணர்கள்' ஒன்று என்ற உணர்ச்சியும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.


திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை 'திராவிடர்' என்றும்; 'இந்தியா' இந்தியர்: 'இந்து' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இந்து என்று வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள். இதிகாசங்கன், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ் வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம்.


நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட குழச்சியே 'இந்து' என்பதாகும். இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அவற்றில்கூட 'இந்தியா' என்பதோ 'இந்து' என்பதோ, இந்தியர்' என்பதோ காணப்படவில்லை.


500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மை குறித்துத் 'திராவிடர்' என்றே எழுதப்பட்டி ருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்த்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம். அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும் அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக்கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே இந்து என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா. இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.


பார்ப்பனரல்லாதார் என்று நம்மைநாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும். நாம் திராவிடர்; எதிரிகள், வேண்டுபானால் 'திராவிடால்லாதார்' என்று சொல்லிக் கொள்ளட்டுமே!


சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்து வரும் பழம் பண்டிதர்கள் இயயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்துபோகட்டும்: அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?


தமிழர்களாகிய நாம், "திராவிட நாடு திராவிட்ருக்கே' வேண்டுமென்பதில் முனைத்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக் காரன் தன்ணையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்துகொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இளம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து தம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும். 


(வால்குடியில், 23.5.1944-ல் சொற்பொழிவு - குடியரசு 3.6.1944)


- விடுதலை நாளேடு 29.11.1991