சனி, 7 பிப்ரவரி, 2026

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி

ரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமை களையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப்போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக்கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுயமரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டுபிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சியாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே நிரூபிக்கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு மனுதர்ம சாஸ்திரத்தை உண்டாக்க சர்க்காரை வேண்டிக்கொள்ளுகிறார். அதாவது இந்தியன் பீனல் கோடில் மத சம்மந்தமான குற்றம் செய்பவர்களை தண்டிப்பதற்கு என்று ஏற்படுத்தப்பட்ட 295, 297, 298 – வது பிரிவுகளில் மத ஸ்தாபகரை தூஷிப்பவர்களை தண்டிக்க இடமில்லை. ஆதலால் 203 -வது பிரிவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும் என்றும், அதாவது, எந்த வகுப்பாரின் மனதையாவது புண்படுத்தும் வண்ணம் ஒரு மத ஸ்தாபகரையோ தெய்வத்தையோ குருமார்களையோ அவதார புருஷர்களையோ தூஷித்தாலும் அல்லது பத்திரிகையில் எழுதினாலும் அப்படிப்பட்டவருக்கு 2 வருஷ தண்டனை விதிக்க வேண்டும் என்பதாக ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று யோசனை சொல்லுகிறார். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்பட்டு விட்டால் மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவர்களது சூழ்ச்சியின் கருத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தக் கருத்தை சுதேசமித்திரன் பத்திரிகையும் ஜாடையாக அநேக தடவை எழுதி வந்திருக்கிறது. ஆனாலும் இப்போதுதான் ஒரு சட்ட ஞானமுள்ள பொறுப்பான மனிதரால் சட்டம் செய்ய வேண்டிய வாசகங்களுடன் வெளியாயிருக்கிறது. சர். சிவசாமி அய்யர் சட்டம் கற்று, சுமார் 35 வருஷம் ஆகியும், சட்டத்திற்கு வியாக்யானம் செய்து ஜீவிப்பதிலேயே காலங்கடத்தி வந்தும், இதுவரை இக்குறையைப் பற்றி ஞாபகம் வராமல், இப்போது சுயமரியாதைக் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு இவை ஞாபகத்திற்கு வந்திருப்பதின் பொருள் என்ன என்பது இவை வாசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இதே சர். சிவசாமி அய்யரின் கருத்தைத்தான் சென்ற வருடம் சிறீமான். எஸ். சீனிவாசய்யங்கார் தெரிவித்தார். அதாவது:- வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பும் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை இன்னும் ஜெயிலில் போடாமல் வெளியில் விட்டுக்கொண்டிருப்பதற்கு சர்க்காருக்கு கண்ணில்லையா? அட்வொகெட் ஜெனரல் இதை கவனியாமல் என்ன செய்கிறார் என்று கேட்டார். இதே கருத்தைத் தான் சிறீமான் சத்தியமூர்த்தி மற்றொரு வழியில் வெளியிட்டார். அதாவது:- பம்பாய் மாகாணத்து கல்வி மந்திரி சிறீமான் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்து வகுப்பு துவேஷத்தை உண்டாக்கி விட்டு போவதை சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு யாதவரை தண்டிக்க தைரியமில்லாவிட்டால் தான் ராஜீனாமா கொடுத்து விட்டு வேறு ஒருவரைக் கொண்டாவது ஏன் செய்திருக்கக்கூடாது என்று கேட்டார். சுயராஜ்ஜியா, சுதேசமித்திரன், பிராமணன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் கேள்வி முறை இல்லையா? இப்படி அக்கிரமங்களை சகித்துக் கொண்டிருக்கலாமா? பிராமணத் தலைவர்கள் இதைப் பற்றி கவனிப்பதில்லையா என்று மாரடித்துக்கொண்டன. இவைகள் எல்லாம் கவனிக்கப்படாவிட்டாலும் சர். சிவசாமி அய்யரின் அழுகை கட்டாயம் கவனிக்கப்பட்டு அந்தப்படி ஒரு சட்டம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

நாம் அவைகளுக்குப் பயந்து கொண்டு அயோக்கியர்களின் செய்கைகளையும், சூழ்ச்சிகளையும், அக்கிரமங்களையும், மனிதப் பிறப்புரிமைக்கும், மனிதத் தத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் இடையூறு விளைவிக்கும் காரியங்களையும் வெளிப் படுத்தாமலிருக்கப் போவதில்லை. பிறப்புரிமையான சுயமரியாதையானது சூழ்ச்சிக்காரர்களால்,

வஞ்சகர்களால் செய்யப்படும் சட்டங்களுக்கு அடங்கி விடும் என்று எதிர்ப்பார்ப்பது மடமையே யாகும்.

சாதாரணமாக, இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையுடையது அல்ல என்பதையும், அது ஒரு பழமையான மதம் அல்ல என்பதையும், பல பெரி யோர்களும் அறிஞர்களும், ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இனி சட்டம் என்ன செய்து விட முடியும்?

எவ்வளவோ பிரத்தியட்ச ஆதாரங்களுடனும் அநேக நன்மையான கொள்கையுடனும் விளங்கும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியே பேசும் போது, கிருஸ்துநாதர் என்பதாக ஒருவர் பிறக்கவே இல்லையென்று ஒருவர் புஸ்தகமே எழுதியிருப்பது குற்றமில்லாமல் இருக்கும் போது, அஸ்திவாரத்திலிருந்தே அண்டப் புளுகையுடையதான இந்து மதத்தைப் பற்றி பேசுவதும், கள்ளு, சாராயம், மாம்சம், பெண் கூத்தி முதலியவைகளை வைத்துப் படைக்க வேண்டிய தெய்வங்களையும், தன்னைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிற மத ஸ்தாபகரையும், ஊரைக் கொள்ளைடித்து ஒரு கூட்டத்தாருக்கே வயிறு புடைக்கத் தின்னும்படி பொங்கிப் போட்டுவிட்டு தான் பஞ்சு மெத்தையில் உறங்கிக்கொண்டும், தங்கப் பல்லக்கில் உலவிக் கொண்டும், தன்னை சன்னியாசி என்றும் துறவி என்றும் சொல்லிக் கொண்டும் திரியும் போலி குருமார்கள் என்போர்களையும் வெளிப்படுத்தினால் அது எப்படி குற்றமாகுமென்பது நமக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆசாமிகளை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்களால் வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு மனம் புண்ணாவதோடு வயிறு கூட பட்டினியால் வருந்த நேரிடலாம். அதற்கு யார் என்ன செய்யக்கூடும்? சோம்பேறித்தனத்தையும் ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதையும் விட்டு விட்டு யோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்து தின்னும் படி மக்களை பழக்குவதுதான் இதற்கு பரிகாரமாகுமே தவிர சட்டத்தின் மூலம் இதை வெளிப்படுத்துகிறவரை   தண்டிக்க வேண்டும் என்பது ஒருக்காலும் பரிகாரமாகாது.

வேதம் கூட கடவுளால் சொல்லப்பட்டதென்று தான் சொல்லப்படுகிறது. வேதத்தைக் கண்டிப்பது தெய்வதூஷணை என்றுதான் சொல்லப்படுகிறது. இதற்காக அதன் அக்கிரமங்களை ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் வெளியிடாமலிருக்க முடியுமா? உதாரணமாக அதர்வண வேதத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பிராமணன் ஒரு இரவு பெண் இல்லாமல் தனியாய் படுத்திருப்பானானால் அந்த கிராமத்திற்கே கேடு என்பதாக எழுதப்பட்டிருக்கிறதாம். இதற்காக பயந்து கொண்டு எந்த திண்ணையில் எந்தப் பிராமணன் பக்கத்தில் பெண் இல்லாமல் தனியாய்ப் படுத்திருக்கிறான் என்று தேடிப் பார்த்து அவனிடம் ஒரு பெண்ணைக் கொண்டுபோய் படுக்க வைப்பதா? அல்லது சட்டத்திற்குப் பயப்படாமல் இது சுயநலக்கார வஞ்சகர்களால் எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதா என்பதை யோசித்தால் இச்சட்டத்தின் கதி என்ன ஆகும் என்பது விளங்காமல் போகாது. எந்த மதஸ்தனானாலும் யாரானாலும் ஏதாவது ஒன்று தனக்கு மாத்திரம் தெய்வம் தனக்கு மாத்திரம் குரு என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வானானால் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் முட்டாள்தனத்துக்கு பரிதாபப்படுவதோடு அவ்விஷயம் தீர்ந்துவிடும். அப்படிக்கில்லாமல் தங்கள் நன்மைக்கு மாத்திரம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதை மற்றவர்கள் பிடரியின் பேரில் ஏற்றுவதானால் அதை கண்டிக்காமலும் ஒழிக்காமலும் இருக்க முடியவே முடியாது என்பதை சிறீமான் சர்.சிவசாமி அய்யருக்கும் இதை வாசிப்பவருக்கும் சத்தியமூர்த்தி அய்யருக்கும் மித்திரன் கூட்டத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(‘குடிஅரசு’ – கட்டுரை – 07.08.1927)

- விடுதலை நாளேடு,1.2.26

திராவிடர்-ஏன்? - தந்தை பெரியார்-

 


தாய்மார்களே தோழர்களே!


நாம் இந்த நாட்டில் உரிமை உடைய மக்களாயிருந்தும் சந்தாயத்தில் இழிந்தவர்களாகவும் பொருளாதாரத்தில் தாழ்த்தப் பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம்! இதை மாற்றவேண்டிய முயற்சிகள் பல நடத்தும், நம் நிலையியே சிறிதும் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. காரணம் என்னவென்று யோசித்தோம். முன்னேற்றம் அடைத்துள்ள நாட்டாரைப் பார்த்தோம். அதன்படி எந்த ஒரு நாட்டு மக்களும் அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்தவருக்குப் பொது உளர்ச்சியையும், ஒற்றுமை மனப் பான்மையையும் உண்டாக்க கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச் சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது. அதே சமயத்தில் நம் நிலையைச் சிந்தித்துப் பார்த்தபோது இந்து: இந்தியர்; இந்தியா' என்று நமக்குப் புரியாத சொற்களை - நமக்குச் சம்பந்தமில்லாத மொழிகளைச் சொல்லிக் கொண்டு வந்தோமே தவிர, உண்மையான ஒன்றுமை ஏற்படத்தக்க முறையைக் கையாள வேண்டுமே என்ற சிந்தனை நம் தலைவர்களுக்குள் ஏற்படவே இல்லை. நமது நாடு என்பதன் பெயராலோ, அல்லது சமுதாயம் என்பதன் பெயராலோ. அன்றிச் சமயம் அல்லது கொள்கை என்பதன் பெயராலோ தம் மக்களுக்குள்ளே ஒரு பொது உணர்ச்சி இல்லை. அத்தகைய மக்கள் எதைக் கொண்டு முன்னேற்றமடைய முடியும்?


ஆரியர்களும்,முஸ்லிம்களும் நம்மோடு வாழ்ந்துவருபவர்கள் தாம். ஆனால், அவர்களுடைய முன்னேற்றம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருகிறது. சமயத்தின் பெயராய் முஸ்லிம்களும், இனத்தின் பெயரால் ஆரியர்களும் ஒன்றுபட்டு விட்டனர். உலகம் பூராவிலுள்ள முஸ்லிம்கள் ஒரே சமூகம் என்ற உணர்ச்சியும் இமயம் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள 'பிராமணர்கள்' ஒன்று என்ற உணர்ச்சியும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.


திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை 'திராவிடர்' என்றும்; 'இந்தியா' இந்தியர்: 'இந்து' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இந்து என்று வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள். இதிகாசங்கன், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ் வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம்.


நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட குழச்சியே 'இந்து' என்பதாகும். இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அவற்றில்கூட 'இந்தியா' என்பதோ 'இந்து' என்பதோ, இந்தியர்' என்பதோ காணப்படவில்லை.


500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மை குறித்துத் 'திராவிடர்' என்றே எழுதப்பட்டி ருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்த்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம். அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும் அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக்கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே இந்து என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா. இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.


பார்ப்பனரல்லாதார் என்று நம்மைநாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும். நாம் திராவிடர்; எதிரிகள், வேண்டுபானால் 'திராவிடால்லாதார்' என்று சொல்லிக் கொள்ளட்டுமே!


சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்து வரும் பழம் பண்டிதர்கள் இயயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்துபோகட்டும்: அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?


தமிழர்களாகிய நாம், "திராவிட நாடு திராவிட்ருக்கே' வேண்டுமென்பதில் முனைத்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக் காரன் தன்ணையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்துகொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இளம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து தம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும். 


(வால்குடியில், 23.5.1944-ல் சொற்பொழிவு - குடியரசு 3.6.1944)


- விடுதலை நாளேடு 29.11.1991

வியாழன், 29 ஜனவரி, 2026

தந்தை பெரியாரிடம் 'ரிபப்ளிகன் கட்சி'யினர் நேர்காணல் (இந்து மதம் ஒழிக!)

 இந்து மதம் ஒழிக!

- தந்தை பெரியார்-


கேள்வி: சாதியை ஒழிக்க நீங்கள் என்ன வழி சொல்லுகிறிர்கள்?


பதில்: பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். சட்ட வரம்புக்கு உட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது.


இவற்றில் நீங்கள் எந்த வழியைப் பின்பற்ற தயாராக இருக்கிறீர்கள் என்பதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை தாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சி நடத்திக்கொண்டு வருகிறோம். நீங்கள் தம்முடைய கீழ்சாதித் தன்மை நீங்கவேண்டுமானால் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்றவேண்டும்.


1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் - பிற்படுத்தப்பட்ட கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது


2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது.


3. இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது.


4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது.


5. உச்சிக் குடுமியை 'சோட்டி' யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது.


6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது.


7. எந்தவிதமமான சடங்குகள் நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது.


8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது.


9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச்சாலை சிற்றுண்டிச் சாலைகளுக்கு போகக்கூடாது'


கேள்வி: இந்துமதத்தை மதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டீர்களே; அதுசரி ஆனால், கலியாணம் முதலிய சடங்குகளுக்கு எப்படிப் பார்ப்பானை அழைக்காமலிருப்பது' உங்கள் பக்கத்தில் எவ்வாறு நடத்துகிறீர்கள்?


பதில்: எங்கள் பக்கத்தில் நாங்கள் எந்தவிதமான நிகழ்ச்சி களுக்கும் சடங்குளுக்கும் பார்ப்பானை அழைப்பதேயில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் என்னன அழைப்பார்கள்: அல்லது எங்கள் கட்சித் தோழர்களை அழைப்பார்கள்: அல்லது அந்தந்த வகுப்பு பெரியவர்களை அழைப்பார்கள்; அவர் தலைமை தாங்கி மணமக்களின் சம்மதம் கொண்ட உறுதிமொழியைப் படிப்பார்கள், மாலை மாற்றிக் கொள்ளுவார்கள். சில இடங்களில் தாலியும் அணிவிப்பதுண்டு. அதுபோல நீங்களும் செய்யலாம். அல்லது உங்கள் குடும்பங்களிலுள்ள வயதான பெரியவர்களை வைத்து நடத்தலாமே!


கேள்வி: 'ரிபப்ளிகன் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா? எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?


பதில்: எந்த வகையான உதவியை நீங்கள் சாதியொழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ.எங்கள் மாகாணத்திலுள்ள எங்களால் முடித்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு சட்டசபையயும், பார்லி மெண்ட்டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.


கேள்வி: நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்தமதத்தையும் புறக்கணிக்கும் படியான பிரச்சாரம் செய்தால் வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?


பதில்: ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு: 10 வருடகாலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாத பிரச்சாரத்தில் மூலம் நாம் அந்த நிலைாயை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு. அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய முடியும்


கேள்வி: சாதியையொழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே; இது அரசியல் பிரச்சினையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையை தீர்க்கமுடியும்.


பதில்: நல்ல கேள்வி முதலாவது: அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன; அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்யவேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும் பாபாசாகேப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகி விடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.


இரண்டாவது இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று; அரசியல் சட்டத்தில் மாற்றமுடியாத வகையில் சாதிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்கக்கூடியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்னும் செய்யமுடியாது. சிலர் சொல்லுவார்கள். ஒன்னும் செய்ய முடியாவிட்டாலுங்கூட அங்கு போனால், 'இதை எடுத்துச் சொல்லலாம்' என்று, அதற்கு அங்கு போகவேண்டும் என்பது அவசியமில்லையே' பொதுக் கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்லுகிறது.


கேள்வி: நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே. கைப்பற்ற முடியாதா?


பதில்: அது முதுகில் மூன்றாவது கை முளைத்து, அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.


கேள்வி: நாமும் எலக்ஷனுக்கு நிற்கலாமே; எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறதே!


பதில்: ஏஎலெக்க்ஷனில் நின்று ஜெயித்து மெஜாரிட்டியாகி அரசாங்கத்தைப் பிடிப்பது என்பது நம்மால் ஆகாத காரியம், ஏனென்றால் பெரும்பாலான ஓட்டர்கள் முட்டாள்கள்; எதற்காக ஓட்டுப் போடுவது என்பது தெரியாதவர்கள், பெரும்பாலான அபேட்சகர்கள் பணம் செலவு செய்யாமல் எலெக்க்ஷனில் நின்று ஜெயிக்க முடியாது. ஒரு இடத்திற்கு நின்று போட்டி போட்டு ஜெயிக்க வேண்டுமென்றால் 10,000 20,000 30.000 ரூபாய்-சில சமயத்தில் இலட்ச ரூபாய்கூட செய்வு செய்யவேண்டும். நீங்களோ ஒற்றைக் காசும் கையிலில்லாத (Penniless People) மக்கள்; எப்படிச் செல்வு செய்ய முடியும்' பார்லிமெண்ட்டுக்குப் போகவேண்டும் மெஜாரிட்டி அடைய வேண்டுமென்றால் தலைக்கு 300,500- தேவை அதற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகும்? இந்த வசதி இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் இருக்கிறது. பெரிய முதலாளிகள், டாடா, பிர்லா, டால்மியா, முந்திரா போன்றவர்களிடம் சென்று கோடி கோடியாகப் பணம் வருவித்து பணத்தைத் தண்ணீர் பட்டபாடாகச் செலவு செய்து வெற்றியடைகிறார்கள்.


(விடுதலை - 16.2.1959)


விடுதலை - 17.8.1991


இந்து மதம் ஒழிக! (2)


-தந்தை பெரியார்-


அவர்களும் கேட்டவுடன் சர்க்கார் (ஆளுகிற) கட்சியாக இருப்பதை அனுசரித்துத் தங்களது சுயநலத்தை எண்ணி வாரி வாரிக் கொடுக்கிறார்கள்; அதுபோல் நம்மாலாகுமா?


அப்படியே மீறி காங்கிரசைத் தோற்கடித்து கேரளத்தில் (மலை யாளிகள் ராஜ்யம்) கம்யூனிஸ்ட்காரர்கள் ஆளுகிறார்கள் என்றால் அது பெயரளவிற்குத்தானே கம்யூனிஸ்ட் ஆட்சி? மீதியெல்லாம் டெல்லி அரசாங்கம் உத்தரவிடுவது படிதானே தடக்கிறது' ஒரு உதாரணம் - அந்த கேரள முதன்மந்திரி ஒரு கலப்புமண சங்கத்தில் பேசும்போது சொன்னார்; 'நான் எனது ஆட்சியில் சாதியை ஒழிக்கப் பாடுபடுவேன், தீவிரமாகப் பாடுபட்டுச் சாதியை ஒழிக்க வெண்டும்' என்பதாக, உடனே இந்து பத்திரிகையில் ஒரு பார்ப்பனர், ஆசிரியருக்கு கடிதங்கள் என்ற பகுதியில் எழுதினார், 'அரசியல் சட்டத்தில் சாதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது; அது மூலா தார உரிமை, அதையொழிக்க இந்த அரசாங்கத்தால் முடியாது; தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் நம்பூதிரிபாத் பேசலாமேயொழிய ஆட்சியையோ, அதிகாரத்தையோ இதற்குப் பயன்படுத்த உங்களால் முடியாது' என்று எழுதினார். அதற்கு நப்பூதிரிபாத் பதில் சொல்லவே இல்லையே!


கேள்வி: அதுபோல பல மாகாணங்களிலும் எதிர்த்து நாம் அரசாங்கம் அமைக்க முடியாதா?


பதில்: நான் ஒன்று உதாரணத்திற்குச் சொல்லுகிறேன்; சென்ற 1952 ஆம் வருட எலெக்க்ஷனில் எங்கள் நாட்டில் நான் முயற்சி செய்து காங்கிரசைத் தோற்கடித்தேன்; காங்கிரஸ் மைனாரிட்டியாக ஆயிற்று. காங்கிரஸ் அல்லாதவர் (மொத்தம் 500 பேரில்) சுமார் 300 பேர் இருந்தும் அவர்களால் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடிய வில்லையே!


திரு.இராசகோபாலளச்சாரியார் முதன் மந்திரியாக வந்தார். நாமினேஷன் மூலம் அப்போது அவருக்கு 200 மெம்பர்கள் தாம் இருந்தார்கள். வந்தவுடன் எதிரிகளில் சிலரை விலைக்கு வாங்கித் தன் ஆட்சியை மெஜாரிட்டியாக ஆக்கிக்கொண்டார். எப்படிப் பலரை எதிர்க் கட்சியிலிருந்து விலைக்கு வாங்கிக்கொண்டார்? தனக்கு நிலைமை வசதியானதும் தன்னிஷ்டப்படி, மனுதர்ம முறைப்படி காரியம் செய்ய ஆரம்பித்துப் பதவிகளையும் உத்தியோ கங்களையும் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தது மட்டுமின்றி. 'அவனவன், சாதித் தொழிலைத்தான் செய்யவேண்டும்" என்ற ஒரு வருணா சிரம தர்ம கல்வித் திட்டத்தையும் புகுத்தினார். நான் 30 நாள் தவணை கொடுத்து 'நீங்கள் அதை ஒழிக்கா விட்டால் பலாத் காரத்தில் இறங்குவோம்' என்று தெரிவித்த பிறகுதான், அவர் பதவியை விட்டுப்போனார். சட்டசபையால் அவரையொன்றும் அசைக்க முடியலில்லை. பிறகு காமராசர் அந்த இடத்திற்கு வந்து சாதிக் கல்வித்திட்டத்தை ஒழித்தார். அதனால்தான் அவர் காங் கிரசுக்காரராக இருந்தபோதிலும் அவரை ஆதரிக்கிறோம்.


கேள்வி: எப்படியும் நாமிந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித் தானே ஆகவேண்டும்!


பதில்: அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம் சாதியை யொழிக்க விருப்பாத - சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்க விரும்ப வில்லை. தனியே பிரிந்து செல்லுகிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால் நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக் காததால் விலகிவிடுகிறோம்' என்று, அதற்காகத்தான், 'சுதந்திரத் தமிழ் நாடு கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சிணையல்ல நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும் உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்றுவிடலாமே! நீங்களும் இந்த கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்துவிடலாம். அதற்குத்தான் பட எரிப்பு போராட்டம் நடத்தப் போகிறோம்.


கேள்வி: ஏன்இந்தியா பூராவும் அப்படி உணர்ச்சியை உண்டாக்கமுடியாதா?


பதில்: அதெப்படி தமிழ் நாட்டில் அந்த உணர்ச்சி பலமாக இருக்கிறது. இந்தியா பூராவும் பரவவேணடுமானால் அது ரொம்பவும் கஷ்டமான ஒன்றாகும். மேலும் சர்க்காரும் நம்மை அடக்குகிறார்கள். நான் போனமாதம் பெங்களூரில் ஒரு மாநாட்டிற்கு - இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது இதைத் தான் நான் அங்கு சொன்னேன். 'நீங்கள் இந்த ஆட்சியிலிருந்தே விலகிக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை' என்பதாகக் குறிப்பிட்டேன். அங்கு கூடியிருந்த பாதி பேர் அதைக் கைதட்டி வரவேற்றார்கள். பாதிப்பேர் அந்த உணர்ச்சியைப் பெறவில்லை.


கேள்வி: நீங்கள் கேட்டும் சுதந்திரத் தமிழ் நாட்டில் சிலோனையும் சேர்த்தா கேட்கிறீர்கள்?


பதில்: இல்லை நான் அப்படிச் சொல்லலில்லை. சுதந்திரத் தமிழ்நாடு இலட்சியத்திற்குப் பாடுபடும் 'நாம் தமிழர்' இயக்கத்தார் ஆரம்பத்தில் அப்படிச் சொன்னார்கள்; அவர்களிடமே அதை எதிர்த்து சொன்னேன்"அது வேறு ஒரு சர்க்கார், அதுபற்றி நமக்குச் கவலையில்லை' என்பதாக. அது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்றாகும்.


கேள்வி: நீங்கள் புத்த மார்க்கத்தில் சேரச்சொல்லுகிறீர்களோ?


பதில்: ஆம்; நேற்றே பொதுக்கூட்டத்தில் சொன்னேன். இன்னொரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் அம்பேத்கார் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு பாரத்தை நீட்டி பொடு கையெழுத்தை நாமிருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன். 'நீங்கள் சேருங்கள்; நான் மாறாமல் இருந்து' 'இந்து' என்பவனாகவே இருந்தால்; இந்து மத வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்' என்றேன். மேலும் இப்போது செய்கிற வேலையைத் தொடர்ந்து செய்ய வசதியாக இருக்கும்.


நான் புத்த மார்க்கத்தில் சேர்ததுவிட்டால், இப்போது கடவுள்கள் - உருவச் சிலைகள் முதலியவற்றை உடைத்துக் கிளர்ச்சி செய்தது போல் செய்யமுடியாததாகிவிடும் என்றேன்.


கேள்வி: ஒரு மனிதனுக்கு மதம் தேவையில்லையா?


பதில்: புத்த மார்க்கம் ஒரு கொள்கையே தவிர, அது ஒரு மதம் கிடையாது.


கேள்வி: புத்த மதம் அகிம்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறதே. அதுபற்றித் தங்கள் கருத்தென்ன?


பதில்: அது புத்திக்கு முக்கியம் தந்த ஒரு மார்க்கம். அவ்வளவு தான். அகிம்சை என்பது புத்த மார்க்கத்தின் கொள்கை (Principles); அது புத்தருடைய அபிப்பிராயமாய் இருக்கலாம் என்பது தான் என் கருத்து. ஆகவே நாம் புத்திக்கேற்ப நடக்கலாம், அதுதான் புத்த மார்க்கம் என்பது.


கேள்வி: நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?


பதில்: நாம். இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காக கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் 'வட்டச் சிவப்பு' இருப்பது - அந்த இழிவிலிருந்து நாம் நாளா வட்டத்தில் மீண்டுவருகிறோம் என்பதைக் காட்டுகிறது.


விடுதலை- (16. 02.1958)


விடுதலை- 18. 08.1991

செவ்வாய், 27 ஜனவரி, 2026

கதவை சாத்திக்கொள் என்றால் ...

கதவை சாத்திக்கொள் என்றால் ...

-  தந்தை பெரியார்.

ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்கள் 6 கோடியாயிற்றே, இவர்களுக்கு மதம் வேண்டாமாவென்றும் கேட்டார். இவர்கள் வாழ்விற்கும். முன்னேற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் மதம் அவசியமானால் இவர்கள் ' இந்துக்களல்லாதவர்கள்'

என்ற மதத்தை வைத்துக் கொள்ளட்டுமென்று சொல்லுகிறேன். இது எவ்வாறு பொருந்துமென்றும் கேட்கலாம். தற்போது அரசியல்துறையில் கொடுமைகளை ஒழித்துச் சுதந்திரம் பெறுவதற்கு பார்ப்பனரல்லாதார் என்ற பெயருடன் பெரிய சமூகம் வேலை செய்து பல நன்மைகளைப் பெறவில்லையாவென்றுதான் கேட்கிறேன். அவ்வாறிருக்க, சமுதாயக் கொடுமைகளை ஒழித்துப் பரிகாரம் தேடுவதற்கும், சுதந்திரமும் முன்னேற்றமுமடைவதற்கும் மதம் அவசியமெனத் தோன்றினால், அப்போது "இந்துக்களல்லாதவர்கள்" என்ற பெயர் வைத்துக் கொள்வதும் முற்றும் பொருத்தம்தான் என்றும், அன்றியும், சட்டசபைக்கு தேர்தல்களில் நின்று சட்டசபை மெம்பர்களான சீனிவாச அய்யங்கார்களும், வருணாசிரம ஆச்சாரிகளும், வைதீக இந்துக்களும், மகமதியர் அல்லாத தொகுதியின் பெயரால் நின்று சட்டசபைகளுக்குள் சென்றார்களேயன்றி, மற்றபடி முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முதலானவர்களைப் போல் சட்டசபைக்குள் செல்லவில்லை என்பதையும் முக்கியமாய் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். 


இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தகைய சுதந்திரமுமில்லாதிருப்பதைவிட 

இந்துக்களல்லாதவராக கோயிலுக்குள் போகும் உரிமையும், குளத்தில் குளிக்கும் சுதந்திரமும் இருப்பது எவ்வளவோ சொல்லுவேன்.(கரகோஷம்), நான் சாவதற்குச் சில நிமிஷமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுக்களை ஒழிக்கப் போராடி, சாகுந்தருணத்தில் முஸ்லீமாகத்தான் சாவேன். (கரகோஷம்)


ஏனென்றால், நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுக்களால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிளீடுபடாமலுமிருக்கச் செய்யவும்தான், நான் அவ்வாது செய்ய தீர்மானித்திருக்கின்றேன். (கரகோஷம்).


நான் செத்த பிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பான் கலைக்கழுவிச் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்காமலிருக்கச் செய்ய வேண்டுமென்பதற்காகவும் தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன். (பெருத்த கரகோஷம்), 


சுமார் 20 வருஷங்களுக்கு முன், வெள்னைக் காரர்கள் தீண்டப்படாதார், அவர்களைத் தொட்டால் குளிக்கவேண்டுமென்ற ஒரு ஜாதியார் இன்று அவர்களைப் போல பிள்ளைகளைப் பெற்றால் போதும் என்கிறார்கள். (பெருத்த நகைப்பு) மதம், புராணம். முதலிய புரட்டுகளுக்கு ஆளாகி முட்டாள்தனத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்திருப்பவர் யார் என்றால் இந்துக்கள்தான். என்று சொல்ல வேண்டும். அதிலும் இந்த நாட்டில் இழிவு படுத்தப்படும் மக்கள் யாரென்றால் நாம்தான். பிற மதங்களில் பலர் பாராட்டத்தக்க சீர்த்திருத்தங்களேற்பட்டு அவர்கள் நாளுக்குநாள் முன்னேறி இருக்கின்றனர். கிறிஸ்து மதத்தில் அவர்கள் கிறிஸ்துவைத் தூக்கிப் போட்டுவிட்டு சுதந்திரத்திற்கு வழியான விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். மதத்தையும் கடவுளையும் நம்பியிருந்தது போதுமென்று அவர்கள் சுயமுயற்சியிலும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்பதனால்தான் ஆகாச தந்திகளையும், இறந்தவர்களையும் எழுப்பி ஆறு மணிநேரம் நடமாடவைப்பதுமான பல அற்புதங்களைக் கண்டு பிடித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது கடவுள் செயலாகிய மனித சிருஷ்டியையும் செய்யத்தக்க வல்லமையுடையவர்களாயிருப் பது அவர்களுக்கிருந்த மத. புராண, மூடக்கொள்கைகளை ஒழித்து ஆராய்ச்சித் துறையிலிறங்கியதனாலல்லவா? (கரகோஷம்.)


அதுபோலவே, மகமதியர்களும் இந்துக்களை விட பல,வகையிலும்

மேலானவர்களாகத் தானிருக்கின்றார்கள். முஸ்லீம்களும் ஜாதி வித்தியாசமும் மனிதனுக்குள் மனிதன் உயர்வு தாழ்வு என்ற கேவல உணர்ச்சியும் காணப்படவில்லை. ஆலயத்தில் அரசனாயினும் சாதாரண மனிதனாயினும் சமத்துவமாகத்தானிருந்து தொழுகின்றார்கள். அவனுடைய மதம் அவனுக்குத் தைரியத்தையும் வீரத்தையும் கொடுப்பதாயிருக்கின்றது. தென்னாட்டைக் குறித்தமட்டில் மலையாளத்தில்தான் ஜாதிக் கொடுமை சகிக்க முடியாததாயிருக்கின்றது. அங்கு மற்ற உயர்ந்த வகுப்பாரிருக்குமிடத்திற்கு அரைமைல் தூரத்திற்கு அப்பால்தான் தாழ்ந்த வகுப்பார் எனப்படுவோரும். தீண்டாதாரும் இருக்கவேண்டும். அவர்களுக்குச் சர்க்கார் ரஸ்தாவில் நடக்கும் சுதந்திரமுமில்லை. அவர்கள் கழனிகளில் விழுந்துதான் போகவேண்டும். மலையாளத்தில் உள்ள 40. லட்சம் ஜனங்களில் 20 லட்சம் பேர் வேறு மதத்தினராயிருக்கின்றனர். மற்ற 20 லட்சத்தில் குறைந்தது 13 லட்சம் தாழ்த்தப்பட்ட வகுப்பார்தான். அங்கு ஆறு ஏழு லட்சம் பேர் இருந்து கொண்டு, தங்களை விட இரு மடங்கு ஜனத்தொகையுள்ள சமூகத்திற்கு மதம், புராணம், பழக்க வழக்கமென்பதன் பெயரால் செய்து வரும் கொடுமைகளுக்கு எல்லையில்லை. 


திருவாங்கூரில் இந்துக்களைவிட அதிகமாய்ப் படித்தவர்கள். கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரிமார்கள்

ஜாதிமதக் கொடுமைகளுக்குட்பட்டு துன்பமடைந்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆங்கு கிறிஸ்தவர்களாக்கி

கல்வியளித்து விசேஷ, முன்னேற்றமடையச் செய்து விட்டனர். அவர்கள் போல இன்றைக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும், இன்றைக்கும் இந்துக்களென்று நினைத்துக் கொண்டுள்ளவர்களுமான ஏழை மக்களோ மதத்தின் பெயராலும் இன்னும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கொண்டு ரஸ்தாக்களில் வருவதற்கும் உரிமையின்றி மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்பட்டு வருகின்றனர். 


திருவாங்கூரில் இந்து ராஜ்யமிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆங்கு பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள்தான். அதற்குக் காரணம் ஜாதிக் கொடுமையும், சமயப் புரட்டுகளும்தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திருவாங்கூரும் கிறிஸ்தவ ராஜ்யமாகி விடுமென்பது திண்ணம்.


 துருக்கியில் மதத்தையும் புராணத்தையும் மூட்டைக் சுட்டி கடலில் போட்டுவிட்ட பின் தற்போது எவ்வளவு முன்னேற்றமேற்பட்டிருக்கிற தென்பதைச் சொல்லவேண்டியதில்லை. மதத்தை நம்பி 'கிலாபத்'பாட்டுப் பாடிக் கொண்டிருந்தபோது வெள்ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப் பயந்திருந்த துருக்கி தற்போது


வெள்ளையரையும் நடுங்கள் செய்யும் நிலைமைக்கு வந்திருப்பதன் காரணமென்ன? இங்கு முஸ்லீம்கள் இன்னும் மதபித்து பிடித்து ஒன்றரை அங்குல தாடி வேண்டுமா அல்லது இரண்டங்குலமாவென்று அளவு பார்த்துத் தாடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கும்போது. துருக்கியில் முஸ்லீம்கள் மழுங்கச் சிரைத்து விடவேண்டுமென்றும், இல்லாவிட்டால் தண்டிக்கப்படுமென்றும் சொல்லப்படுகின்றது.


 இங்கு எந்த வர்ண லுங்கி கட்டுவது, எப்படி குல்லாய் போடுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தாலும் ஆங்கு வெள்ளைக்காரர்களைப்போல உடை தரிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படுகின்றது. இங்கு கோஷா முறையின் கொடுமை மிகுதிப்பட்டு திரையை கனமாகப் போடப்படும்போது துருக்கியில் தங்க விக்கிரகம் போன்ற பெண்களைத் தனித்து அய்ரோப்பாவுக்குப் படிக்க அனுப்பிவருகிறார்கள். (கரகோஷம்.)


சுயராஜியம் பேச்சு வரும்போது மட்டும் ஒற்றுமை, சமத்துவம் முதலிய எல்லாம் வருகிறது. ஆனால், அது பெரும் பித்தலாட்டமென்பது தெருவில் நடக்க உரிமையிருக்க வேண்டுமென்னும்போது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. மிருகங்களிலும் மிக இழிவான ஜந்துக்களுக்கு இருக்கும் உரிமையுமின்றி மனிதர்களும் ஒரு சாராருக்கு அம்மிருகங்களைப் போல தெருக்களில் போகும் உரிமையிருக்கக் கூடாதாவென்றால், மத விஷயத்தில் பிரவேசிப்பதா எனும் பித்தலாட்டத்தை என்ன அயோக்கியந்தனமென்று சொல்லுவது! பித்தலாட்டமான மதத்தில் சிக்கி இருப்பதனால் பல இழிவுக்கும். துன்பத்திற்கும் கொடுமைக்கும் முட்டுவதைவிட அம்மதத்தை ஒழிப்பதே மேலாகும். மதத்தை அழிக்க சுயமரியாதை இயக்கம் வந்ததாவென்று சிலர் கேட்கலாம். ஜாதிக் கொடுமைகளையும் விபரீத வித்தியாசங்களையும் நிலை நாட்டுவதாயிருந்தால், அம்மதத்தை ஒழிக்கத்தான் சுயமரியாதை இயக்கமிருக்கிறதென்றுதான் சொல்லுவேன். (கரகோஷம்.)


 உண்மையில் சுயமரியாதை உங்களுக்கிருக்குமானால், உங்கள் முன்னேற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் தடையாயிருக்கும் மதக்கட்டுப்பாடுகளையும். சுவாமி, பூதமெதனையும் உடைத்தெறியப்பின்வாங்க மாட்டீர்களென்பது திண்ணம் (கரகோஷம்)


மிருகத்திலும் கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீங்களும் மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போல சுதந்திரமும் சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத்தயங்கக்கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும் அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய்ப் பறந்துவிடுமென்பது திண்ணம். (கரகோஷம்)


வடநாட்டில் மதம் ஒழிந்தாலும் மற்றென்ன ஒழிந்தாலும் ஒழியட்டும் சுதந்திரம்தான் பெரிதெனப் போராட முற்பட்டதனால்தான் நேற்றுகூட ஒரு ஆலயத்தில் சகல வகுப்பாரும் தாராளமாகச் சென்று கடவுளை வழிபடுவதற்குச் கதவுகள் திறந்துவிடப்பட்டன. உங்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமையும், குணங்களில் குளிக்கும் உரிமையும் கிடைத்துவிட்டால், அதனுடன் நீங்கள் திருப்தியடைத்துவிடவும் முடியாது. நீங்கள் சுதந்திரமடைய விரும்புவதுபோலவே, உங்கள் பெண்களுக்கும் சுதந்திரம்

அளிக்க நீங்கள் தயாராக முன்வரவேண்டும். அப்போதுதான், உங்களுன் உண்மையான முன்னேற்றமேற்படும். உங்கள் பெண்களுள் மறுமணத்தை விரும்பும் விதவைகளுக்கெல்லாம் மறுமணம் செய்யவேண்டும்.


இவ்வழக்கும் உங்களுள் இல்லாதிருக்கவில்லை. அறுத்துக்கட்டும் ஜாதி, இழிந்த ஜாதி என்று சொல்லப்பட்ட போதிலும், அறுத்துக்

கட்டுவதால் அறுத்துக் கட்டாத உயர்ந்த ஜாதியில் நடக்கும் பல கேவலமான சிசுக்கொலைகளும், கழுத்தைத் திருகி கள்ளியில் போடுவதான கொடுமைகளில்லாதிருப்பது எவ்வளவோ உசிதமல்லவா? (கரகோஷம்)


ஒழுக்கத்திலும், படிப்பிலும் முன்னேற்றமடைந்திருந்தால் உங்கள் பெண்களை நாங்கள் பெற்றுக்கொண்டு, குணமும் படிப்பும் ஒழுக்கமும் உள்ள பிள்ளைகளுக்கு எங்கள் பெண்களைக் கொடுக்கவும் பின்வாங்கமாட்டோம். இத்தகைய கலப்பு மணத்தின் மூலமாகத்தான் சாதி வித்தியாசப் பேய் சீக்கிரத்தில் ஒழியும் (கரகோஷம்).


ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லா கட்டுப்பாடுகளுமிருக்கவேண்டு மென்ற மூடஅறிவீனமான கொள்கைகளிருக்கும். வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டு கைகழுவினதும் கதவைச்' சாத்திக்கொள்ளென்று

கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே மோர் விடுவதற்கு வேலைககைாரியைக் கூப்பிட்டு 'அய்யாவுக்கு மோர்விடு, நான் போய்விட்டு வருகிறேன்' என்று மனைவி சொல்லிலிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும். (நகைப்பும், கரகோஷமும்)


ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண்களுக்குத்தான் பதிவிரதத்தன்மை அவசியமென்ற பல அர்த்தமற்ற கொள்கைகளினால்தான் ஆண்களுக்குள் ஒழுங்கீனங்கள். நாளுக்குநாள் அதிகரிக்கவும் இடமேற்படுகின்றது. மதத்தின் பெயராலும், மற்றதன் பெயராலும் செய்யப்படும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் ஒழிப்பதில் அம்மதங்களையே ஒழிக்கவேண்டுவதவசியமானா லும், அதற்கும் தயங்கக்கூடாது. மக்கள் சுதந்திரமடைந்து சுகமாய் வாழ்வதற்கு என்னவென்று எனக்குத் தோன்றியதைப் பிறர் புகழ்ச்சிக்கும். இகழ்ச்சிக்கும் அஞ்சாது உண்மையை எடுத்துச் சொன்னேன்.


உணர்ச்சிக்குட்பட்டதைச் சொன்னேனே தவிர, இவர் அவருக்குச் சொன்னார்: அவர் எனக்குச் சொன்னார்; நீங்கள் அதன்படி நடக்காவிட்டால் பாவம், நரகத்திற்குப் போவீர்களென்ற கட்டுப்பாடு ஒன்றும் சொல்லவில்லை. நாள் சொன்னவற்றை நீங்கள் ஆராய்ந்து, சரி எனப்படுவதைக் கொண்டு, சரியில்லாததை ஒதுக்கி என்மீது அனுதாபங் காட்டும்படிதான் கேட்டுக் கொள்கிறேன்.


(3-8-1929 சென்னை இராயப்புரத்தில் நடந்த கண்ணப்பர் வாசகசாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 3-8-1929 'திராவிடன்" நாளிதழில் வெளியானது.)


- உண்மை இதழ், 16.31.12.1989


புதன், 21 ஜனவரி, 2026

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி கேடானதே!

 


இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது விவரம் தெரியாது இருந்த குழந்தைகளுக்கும் தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழிய, மற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் இந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான். சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி, இதே இந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடர் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டு மென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூற வேண்டு மானால், இக்காய்ச்சல் மிக “விருலன்ட் பாரத்தில்” அதாவது மிகக் கொடூரமான, வேகமான, ஆபத்துக் கிடமான தன்மையில் வந்துள்ளது என்று கூறுவார்கள். அதே போல் நமது கலாச்சாரத்திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமான, சற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய இந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில், இதே இந்தி கட்டாயப் பாடமாகக்கூட அல்ல, இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப் பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், இந்தியை இஷ்டப் பட்டுப் படிப்பவர்கள் கூட, இஷ்டப் பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம், சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது. எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது இந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக, “இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்” என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர், முதல் முதலாக இந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

“நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரி. மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன். நான் உத்தரவிடுகிறேன் என்றால், மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள். அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும், ஒரு சோமசுந்தர பாரதி யாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது” என்று ஆணவத்தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் இந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன் டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனே! வேறு யாருமில்லை. இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார். “இப்போது இந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு இந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானா” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் “இது வெறும் வீம்புதானே, இந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்துவிடுவது தானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறினேன். அதற்கு அவர் சொன்னார்.

“இந்த 40 பள்ளிகளில் கூட இந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானா” என்று கேட்டார். அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் இந்தி மொழி எடுக்கப்பட்டு விடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள், எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அந்தத் தேதிக்குள் எடுக்கப்படா விட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு இந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்து விட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே ராஜ கோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார். ராஜகோபாலாச்சாரியாரும் “தாளமுத்துவுக் கும், நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோ” என்று அஞ்சி “உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்” என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களை, அவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம், கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி இந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்! வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலே யிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்து விட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள். இதுதான் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய இந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்திர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும். உத்தரவு பிறப்பித்தவர் களும், திடீரென்று இந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண் டிய விஷயம். இந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டது, தமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப் பகுதியில் இந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சே பிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாய மாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

இந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்று இவ்வுத்தரவைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதி இருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டு மென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக் குப் போவானேன், இஷ்டப்பட்டவர்கள் வேண்டு மானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்………

தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெச்சலை உண்டாக் கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்த போது ‘ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்தி இஷ்டப் பாடமாக்கப்பட்டது’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா?

“வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் இந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம். அந்த உத்தரவிற்கு ஆட்சேபனை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது” என்று பதில் கூறியிருக்கிறார். இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக “இந்தியும் கட்டாய பாடமும்” என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். வேண்டுமென்றுதான் இந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்படவில்லை. பொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம். இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட்சேபனை வரவில்லையே. அப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி இந்தியைக் கட்டாயப்படுத்துவது என்று பதில் கூறியிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆட்சேபனையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார். அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, “இந்தி கட்டாயமாகத் தேவை” என்று சுதேச மித்திரன் ஒரு தலையங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டது. அதற்கு ஆதாரமாக உத்தரவில் சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்கவில்லை என்று கூறியிருப்பதைக் காட்டி கட்டாய இந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதா? என்று கேட்டி ருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்ப வர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டு விடுவதா? நல்லகாரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆட்சேபனை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபனையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், சுதேசமித்திரனுடைய ஆட் சேபனையைக் கண்டதும், உடனே தம் உத்தரவை மாற்றி விட்டார். மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார். முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம்” நாங்கள் இந்தி கட்டாயம் என்று சொல்ல வில்லையே” என்பது தான். சர்க்கார் உத்தரவிலும், மந்திரிகள் பேச்சுக்களிலும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் – எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் இந்தியை எங்கு கட்டாயம் என்றோம். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு இந்திய மொழி ஒன்றைத் தானே கட்டாயமாக்கியிருக்கிறோம். இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய இந்தியல்லவே என்கிறார்கள். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, இந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப்படும், சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால், இந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன்? இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல் லையா? இதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!

சாகசப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் “சென்னைச் செய்தி” என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும், கையெழுத்துடனும் வெளி வந்துள்ளது. என்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்தி ருக்கும் இப்பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோ வையும் காட்டி) இந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவ சியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம். எனவேதான் எல்லா ஹைஸ்கூல்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என்று எழுதியிருக்கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே இந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளைகள் எப்படி இந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் “அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா” என்று மந்திரியார் கேட்கிறார். “நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே” என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்று, நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார். நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயே, அதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சிறுவர்களின் மீது திணிப்பதா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. இந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக் கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் இந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர்களைக் கொடுமைப் படுத்தலாமா? என்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 – தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ்நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமே யல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங்கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு, மறந்து போய்விட்டதென்றால், சரிவர கற்க, சரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் எப்படி இந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 14.08.1948

-விடுதலை நாளேடு,18.01.26