ஞாயிறு, 17 மார்ச், 2024

திராவிடம் என்பது கற்பனையல்ல… எல்லாருக்கும் எல்லாம் என்பதே! – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published March 17, 2024

தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண் கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்த மானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது. ஆனால், படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப் படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங் களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

திராவிடர் கழகம் ஏன்?

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதா யிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகி யவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவி னையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடிய தென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் – திராவிடர் என்பது, திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர் களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மை களும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதி களுந் தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் நிலை ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவி டத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.

இதுகூட ஏன்?

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு – பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போ கவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப் பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில் லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடு களும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர் களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் – திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென் பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசிய மில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யா மலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது. அக்கட்டுப் பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனு மதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலி ருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப் பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும்.

சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனி யாமல் அது திறக்கப் படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப் பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது… ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிரா மணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்ப வர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத் தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்தி விசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப் பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட் டுகளும் புகார்களுமாகும்.

திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக் கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப் படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரண மாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கி விடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப் பட்டதாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன் னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை.

ஆதலால், ஆரம்பகாலத்தில் – பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின் பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையே யாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்திய வர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏங்கல்ஸ் ஆகிய வர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப் படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில் தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறை களை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படியாவது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில்
பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 14.07.1945

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பெண்களின் அரசியலுக்கு அடித்தளம் அமைத்த பெரியார்

 


விடுதலை ஞாயிறு மலர்

“ஆண்களும் – பெண்களும் மனிதர்கள்தான்;
உருவ பேதம் மனிதத் தன்மையைப் பாதிக்கக்கூடியதல்ல!” – பெரியார்

பெண்களுக்குப் பேச்சுரிமை, சொத்துரிமை என்று எந்த உரிமையும் தேவையில்லை, அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இயங்க வேண்டியவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த காலத்தில், பெண்கள் ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று பெண்களின் உரிமைகளைப் பற்றி அவர்களுக்கே விழிப்புணர்வை உருவாக்கியவர் தந்தை பெரியார்.

நாகம்மையார், கண்ணம்மாள்

 இயக்கத்தின் முக்கியச் செயல்பாடுகளான மாநாடுகளிலும், போராட்டங்களிலும் பெண்களுக்குப் பல முக்கியப் பொறுப்புகளை வழங்கியவர் பெரியார்.

1. விருதுநகரில் 1931இல் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் இந்திராணி பாலசுப்பிரமணியம்.
2. 1932இல் நடந்த தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் டி.எஸ்.குஞ்சிதம்.
3. 1933இல் தஞ்சை மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கிவைத்தவர் எஸ்.நீலாவதி.
மாநாடுகள் நடத்த அமைக்கப்பட்ட குழுக்களிலும் இந்திராணி பால சுப்பிரமணியம் அம்மையார், எஸ்.நீலாவதி அம்மையார், குஞ்சிதம் அம்மையார் எனப் பல பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.
சுயமரியாதை மாநாடுகளுடன் தனியாகப் பெண்கள் மாநாடுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. மாநாட்டுத் தீர்மானங்களிலும் பெண்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.
பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை
பதினாறு வயது வரை பெண்களுக்குக் கட்டாயக் கல்வி
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை விரைந்து முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் முக்கியமானவை.

சமரசமற்ற போராளி

பெரியார், பெண் உரிமைகளில் என்றும் சமரசம் செய்துகொண்டதில்லை. பெண்களின் அரசியல் பங்களிப்பு இல்லாமல் அவர்களுக்குச் சமூக விடுதலை சாத்தியமில்லை என்பதை பெரியார் உணர்ந்திருந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் யாரும் சிந்தித்திருக்க முடியாத பல புரட்சிக் கருத்துகளை முன்வைத்து, பெண்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்தூன்றியவர் அவர். அவர் நிகழ்த்திக் காட்டிய சுயமரியாதைத் திருமணங்கள், பல விதங்களில் பாலினச் சமத்துவத்திற்கு மைல்கற்களாயின. ஆண்களைப் போல் பெண்களுக்கும் மறுமணம் செய்யும் உரிமையை வலியுறுத்தியதுடன், அவர்கள் பிள்ளைகள் பெறும் இயந்திரங்களாக வாழ்வதையும் பெரியார் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
பெண் விடுதலைக்காக பெரியார் முதன்மையாக வலியுறுத்தியது கல்வி. பெண் கல்வியின் அவசியத்தையும் அவர்களின் பொருளாதாரத் தற்சார்பையும் அவர் பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

அணிதிரண்ட பெண்கள்

இராமாமிர்தத்தம்மையார் – தர்மாம்பாள் – இந்திராணி

பெண்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த காலத்தில் வைக்கம் போராட்டம் முதல் பல முக்கிய அரசியல் களங்களில், போராட்டங்களில் பெண்களை ஆண்களுக்கு நிகராக ஈடுபடுத்தியவர் பெரியார். வைக்கம் போராட்டத்தின்போது பெரியார் சிறை சென்ற பின் போராட்டத்தைத் தொய்வின்றி தொடர்ந்து நடத்த முக்கியப் பங்காற்றியவர் நாகம்மையார். அவருடன் இணைந்து கண்ணம்மாள் உள்ளிட்ட பல பெண்களும் இந்தப் போராட்டத்தில் துணிவுடன் பங்கேற்றனர்.
கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு பெரியார் சிறை சென்றதை ஒட்டி நாகம்மையாரும், கண்ணம்மாளும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கனிமொழி கருணாநிதி
மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

பெண்கள் செல்லவே துணியாத கள்ளுக்கடைப் பகுதியில் தொண்டர்களோடு இணைந்து போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்கள் இவர்களின் பின்னால் அணிவகுத்தனர். இந்திய அளவில் பேசப்படக்கூடிய போராட்டமாக அது அமைந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தச்சொல்லி காந்தியாரிடம் சிலர் கேட்டபோது, “மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்றார். பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று பெரியார் மேடைதோறும் பேசியதோடு மட்டும் இல்லாமல், தனது மனைவியையும், சகோதரியையும் போராட்டக்களங்களில் ஈடுபடுத்தியதால், அதுவரை வீட்டைவிட்டு வெளியில் வர அனுமதி மறுக்கப்பட்டு, வீடுகளில் அடைந்துகிடந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்கள் பின்னால் அணிவகுத்தனர்.

முத்துலட்சுமி – நீலாவதி – சிவகாமி சிதம்பரம்

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். 13 நவம்பர் 1933இல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் நடத்தப்பட்டது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், நாராயணி அம்மையார், வ.ப.தாமரைக்கண்ணி அம்மையார், டாக்டர் தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில முக்கியமான தலைவர்கள். பல பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றனர்.

அடித்தளம் அமைத்தவர்

மத நம்பிக்கையின் பெயரால் பெண்களுக்கு நிகழ்ந்த அநீதியான தேவதாசி முறையை முற்றிலும் அகற்ற, மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருடன் இணைந்து பெரியார் பணியாற்றினார். அப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறையை அகற்ற மசோதாவைக் கொண்டுவந்தபோது, அந்த மசோதா நிறைவேற பெரியார் முக்கியப் பங்காற்றினார்.
உலகெங்கிலும் குழந்தைத் திருமணங்கள் முற்றிலும் மறைய இன்னும் 300 ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறது அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கை. இந்தியாவில் 9.2% பெண்கள் மட்டுமே ஊதியமீட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக பன்னாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலும் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் அரசியலில் பெண்கள் சாதிப்பது அவ்வளவு எளிதானதல்ல. நாம் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் 33% இடஒதுக்கீட்டுக்காக நீண்ட காலம் போராடினோம்.

ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்கும் பெண்கள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க முக்கியக் காரணம் பெரியார். நம் பெண்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் அவர்களின் அரசியல் ஈடுபாட்டுக்கும் ஒரு வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பெரியார்தான்.

(“இந்து தமிழ் திசை” வெளியிட்ட “என்றும் தமிழர் தலைவர்” என்ற நூலிலிருந்து…)

மாணவர்களே – விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல! – தந்தை பெரியார்

 

விடுதலை நாளேடு

மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தை களாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரி களிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான் பெரியவர்களாய் வாழ்க்கை நடத்தப் போகி றீர்கள். இந்த நிலையற்ற பருவத்தில் எது நல்ல காரியம் என்று உங்களால் சிந்தித்துச் சுலபத்தில் அறிந்துகொள்ள முடியாது. மாணவர்கள் தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந் தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அவர்களைக் கொண்டு பல நல்ல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத் தம்முடைய திரண்ட சக்தியை நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக் கூறுவதற்காக மாணவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள் தலைவர் இட்டக் கட்டளைப்படி நடக்கக் கூடியவர்கள். சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால் தமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக அவர்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான் காலித்தனம், கட்டுப்பாட்டுக்கு அடங்காத தன்னிச்சைத்தனம் விரைவில் புறப்படுகிறது. ஆகவே, அவர்கள் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்கவேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல் வேண்டும். எந்த அளவுக்கு தாம் அன்பு செலுத்துகிறார்களோ அந்த அளவுக்கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய, தம்மை நல்வழிப்படுத்துவதில் ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து அவர்களில் ஒரு சிலரையாவது எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை நாங்கள் எங்களுக்குச் சொந்தமான பெருஞ்சொத்தாக மதித்து நாங்கள் மகிழ்ந்து வருகிறோம்.

மாணவர்களின் உண்மையான தகுதி

மாணவர்கள் நல்ல சோல்ஜர்கள்; நல்ல ஜெனரல்களல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள், நல்ல கமாண்டர்களல்ல. ஆகவே, நல்ல சிப்பாய்களைப்போல அவர்கள் பல கட்டு திட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டும்.

தொண்டின் முன்பு சோதனை

மாணவர்கள் பொது நலத் தொண்டில் ஈடுபட நினைக் கும்போது, முதலில் பொதுநலத் தொண்டில் ஈடுபடத் தமக்குத் தகுதியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் நலன்களை விட்டுக் கொடுக்க, அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க அவர்கள் தயாராக இருக்கவேண்டும். தங்கள் உயர்வைக் கருதாமல், தங்கள் பட்டத்தைப் பெரிதாகக் கருதாமல், தங்களை சாதாரண சராசரி மனிதனாகக் கருதிக் கொள்ள அவர்கள் முதலில் சம்மதிக்க முடியுமா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் வாழ்க்கையையும், அவர்கள் கூடுமான அளவுக்குச் சராசரி மனிதனுடைய வாழ்க்கைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

தற்காத்தல்

ஒரு பக்குவமடைந்த பெண்ணை எப்படி எங்கு வெளியே சென்றால் கெட்டுப் போகுமே என்று தாய், தந்தையர் கவலையோடு காப்பாற்றி வருகிறார்களோ, அதேபோல், மாணவர்கள் தங்கள் புத்தியை, தங்கள் சக்தியைக் கண்ட இடத்திலெல்லாம் செலுத்தாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

தன்னலம் பேணாமை

நீங்கள் உங்களைச் சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கைச் சவுகரியங்களையும் எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். உங்களுக்கு மிகமிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிகமிக தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும். மாணவர்கள் தம் மைனர் வாழ்க்கைத் தன்மையை அறவே விட்டொழிக்க வேண்டும். மைனர் வாழ்க்கை நடத்தக் கூடியவர்களை இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் தம் சொந்த வாழ்விற்காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தம் சொந்த வாழ்விற்குத் தடை ஏற்படும்போது பேசாமல் வெளி யேறிவிடுவார்கள். அல்லது எதிர்ப்பு வேலை செய்வார்கள். அல்லது எதிரிகள் கையாளாக ஆகிவிடுவார்கள். அப்படிப் பட்ட நொண்டி மாடுகள் நுழையவொட்டாமல், மாணவர் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
தொண்டிற்குத் தகுதியற்றோர்

பொதுத் தொண்டுக்கு வந்த உடனே தங்களைப் பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக் கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக போக போக்கியம், பெருமை, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய விகிதாச்சாரத்திற்கு மேலாக மதிப்பு, தங்களுக்குக் கிடைக்கவேண்டுமென்று நினைப்பவர்களும், எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்களால் பொதுவாழ்க்கையில் எப்போதும் எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.

அபாயகரமான நோய்

பொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும். தான் என்ற அகம்பாவம் கூடாது; ஏமாற்றம் ஏற்படுமானால், அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு மற்றுமொரு கெட்ட நோய் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு தடவை மேடை ஏறினால் போதும். ஒன்றிரண்டு தடவை கைதட்டல் கிடைத்துவிட்டால் அதைவிட மேலாகப் போதும். பத்திரிகைகளில் அவர்களால் எழுதப்பட்ட ஒன்று, இரண்டு கதைகளோ பாட்டுகளோ வியாசங்களோ வந்துவிட்டால் போதும். உடனே தங்களைப் பெரிய தலைவர்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும், தங்களை மற்றவர் யாவரும் மதிக்கவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விடுவார்கள். இது மகா அபாயகரமான நோய். இந்நிலை வந்துவிட்டால் எப்படிப்பட்ட இயக்கமும், கொள்கையும் அவர்களை சீக்கிரம் கைவிட்டு விடும். அதற்கப்புறம் அவன் சீக்கிரத்தில் பொது வாழ்வில் வெறுப்பேற்பட்டு எதற்கும் தகுதியற்றவனாகி விடுவான். ஆகவே தான் அடக்கம் வேண்டும் என்று அவ்வளவு வற்புறுத்திக் கூறவேண்டியிருக்கிறது.

எனது அனுபவம்

நானும் மாணவனாய் இருந்திருக்கிறேன். ஆணவம் பிடித்த மைனராயும் இருந்திருக்கிறேன். சர்வாதிகாரக் காலியாயும் இருந்திருக்கிறேன். ஆனால், பொதுத் தொண்டுக்கு வந்த பிறகு சகல சுகத்தையும் கைவிட்டேன். என்னை ஒரு சாதாரண மனிதனாகவே கருதிக் கொண்டு யாராவது கூப்பிடும் வரையில் பின்னணியிலேயே இருந்து வந்தேன். அதனால்தான் என்னால் சலிப்பு இல்லாமல், ஏமாற்றமில்லாமல் பொதுத் தொண்டைத் தொடர்ந்து செய்து வர முடிகிறது. எனக்குரிய பங்கோ மரியாதையோ கிடைக்க வில்லையே என்று நான் ஒரு நாளும் ஏமாற்றமடைந்ததில்லை.
என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரணச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது, 1916 அல்லது 1917 இல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய புரஹாம் வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குழி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போகவேண்டியிருந்தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த் தினேன். வண்டியில் மேற்கொண்டு இடமில்லை. நான் ஒருவன்தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வரவேண்டுமென்றால் நேரமாகி விடும். ஆதலால் என்னையும் உடன்வரவில்லையா என்று ஜமீன்தார் கேட்டதற்கு, இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி, வண்டியை விடு என்று சொல்லிவிட்டு, அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும், அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்குவதைப் பார்த்து அவர்கள் திடுக் கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒருபடி உயர்வாகவே மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார். நான் அவரைப் பரிகாசம் செய்வேன். கோச்மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்க வில்லை என்பதையும், விருந்தினர் களுக்காக எனது சவுகரியத்தை எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என்பதையும், அவர்கள் அறிந்து கொண்ட தினால்தான் என்னை மிக மேலானவனாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்.
விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல

இப்படி நம் சவுகரியத்தைப் பிறருக்காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய போதுகூட நான் மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வேன். ராஜகோபாலாச்சாரி யாரும், திரு.வி.க.வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார், கூச்சப்படுவார். உடம்புக்கு சவுகரியமில்லாதபோது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப்படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ள வேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடையவேண்டும். நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தபோதுகூட எவ்வ ளவோ தர்க்க வாதம் செய்வேன். ஆயினும் ராஜகோ பாலாச்சாரியார், திரு.வி.க. ஆகியவர்களின் ஆலோசனை யின் பேரில்தான் எதையும் செய்து வந்தேன். எதிலும் அவர்கள் அபிப்பிராயப்படியே செய்வேன். விட்டுக் கொடுப்பதில் தலைவர்களை மதிப்பதில், நான் மிக்க தாராளமாக நடந்து வந்தேன். அந்தப்படியே நீங்களும் எதிலும் பிறருக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.

மாணவர்களுக்கே பாத்தியதை

திராவிடர் கழகம் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் மிகக் கஷ்டமானவைகள். திராவிடர் கழகம் கூறும் பரி காரங்கள்கூட மிகக் கசப்பானவையாகத்தான் இருக்கும். இக்கொள்கைகள் பெரும்பாலும் மாணவர்களால்தான் ஈடேற்றப்பட வேண்டும். மாணவர்கள்தான் தம் பின் சந்ததி யைப்பற்றி அதிகம் கவலைப்படவேண்டியவர்கள். ஆகவே, அவர்கள் தன் முதியோரைக் காட்டிலும் அதிக உற்சாகத் தோடு திராவிடக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும்.

அறிவின் அடையாளம் அகிம்சை

மாணவத் தோழர்களுக்கு அகிம்சையில் நம்பிக்கை இருக்கவேண்டும்; புண்ணியம் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல. ஹிம்சை சகலருக்கும் பொது, யாவருக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது என்பதற்காகத்தான்.
நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக் கொள்ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத் தனத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவேண்டும். மனிதத் தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான்.

நாம்தானே இந்நாட்டில் பெரும்பான்மை மக்களாக இருக்கிறோம். பலாத்காரத்தை வளர்த்தால் நாம்தானே அதற்குப் பலியாக நேரிடும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். முடிவாக ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் நல்ல எளிய முறையில் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை இலகுவானதாக, இன்ப மானதாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு அளவற்ற பொறுமையும், அடக்கமும் கீழ்ப்படிதலும் வேண்டும்.
(21.2.1948 அன்று திருச்சியில் நடந்த திராவிடர் மாணவர்கள் மாநாட்டில், பெரியாரவர்கள் ஆற்றிய பேருரையில், மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கும், இயக்கத்திற்கும் மாண்பைத் தரும் என்ற முறையில் விளக்கிய சிறு பகுதி இது).

– குடிஅரசு- சொற்பொழிவு – 03.04.1948

மக்களுக்கு விடுதலை வேண்டுமானால் போலித் தத்துவங்களை அழித்தாக வேண்டும்!



 – தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! இளைஞர்களே!! சகோதரர்களே!!! 2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப் போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர்களுமாய் இருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள். நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நண்பர்களே! சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என்பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு அவசியமாகும். நான் இப்போது பொதுவாக மனித சமூகம் என்பதையும் பொதுவாக மனித சமூகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளுகிறேன். பிறகு அவசியமிருந்தால் தனிச் சமூகம்,தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.

மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு

பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப் பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவது மாகும்.

ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கை களாகும். இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும். ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப் பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததேயாகும்.

அதாவது, எப்படி ஒரு குழந்தையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப்பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியாதென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில் போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும் படியான ‘பூச்சாண்டி’ பிடித்துக் கொள்வான் என்றும், ‘பேய்’, ‘பூதம்’ பிடித்துக் கொள்ளும் என்றும், ‘துண்டித்தக்காரன்’ பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய் சொல்லுவதோடு கையையும், முகத்தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற்கென்று ஏற்படுத்தப் பட்ட கொள்கைகளை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள்.

அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன்றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவை களாகும். மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவை களுமாகும். அது மாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறிவுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார். பகவான் சொன்னார், முனிவர் சொன்னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக்கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப்பிடியாய் பிடித்து சிறிது கூட காலத் திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக் குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று.

அன்றியும் திருந்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று. ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச்சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக் கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச் சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சவுகரியமுடையது என்று சொல்லப் படுவதாயின் அது எந்த மதமாயினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறி வுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்கு

அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண் டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.

ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமூகத்தையும், இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமூகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப்பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமூக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களையெல்லாம் விட்டுவிட்டு அக்கொள்கைகளை நிறை வேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத் திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கைகளைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.

சமயக் கொள்கைகள்

காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமூகம் இன்றும் சுய அறிவற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது? என்பவைகளைக் கவனிக்காமல் கீழ் நிலையிலேயே இருந்துகொண்டு சீர்திருத்தமடையவோ, முன்னேற்றமடையவோ முடியாமல் தவிக்கின்றன. உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்துகொள்ளும் பான்மையும் ஒரே மாதிரியாகஇருப்பதைக் காண்கின்றோம். ஆனால், ஆண்களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன் இந்து, இவன் சைவன், இவன் வைணவன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாத படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஆகவே, மதம் என்பதும் சமயம் என்பதும் யாருக்கும் அநேகமாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதேயொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கொள்கை களை அடியோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள் பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை வற்புறுத்தாததேயாகும்.

எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான் பிரதான மான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான், எந்த சமய மக்களிடம் சமய உண்மைக்கொள்கைகளைப் பார்க்க முடியாமால் போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள்கையைச் சொன்னா லும் லட்சியம் செய்யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத்திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம் நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி ஆகியவைகள் என் பவைகள் எல்லாம் மேல்கண்ட வேஷமாத்திரத்தாலே கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டுவிட்டதாலும் வெறும் வேஷத்தை போடு கின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனைகளையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலைவிதி, கடவுளின் பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப் பிறக்க லாம் என்பவைகளையும், சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும். அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப்பட்ட நல்ல கொள்கை யுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும், பிரத்தியட்ச அனுபவத்தையும் பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர் களையே நடந்து கொள்ளும்படி விட்டுவிடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும் பாட்டிக்கதைச் சமயங்கள் இன்றைய சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.

கற்பனைக் கதைகள்

உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி அறிவு சவுகரியமில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர் பிரயாணம் போய் வரட்டுமென்று கருதி அந்த ஊருக்குப் போனால் புண்ணியம், இந்த சாமியை தரிசித்தால் மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய் பிறப்பான் என்றெல்லாம் சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக் கதைகள் எழுதி வைத்ததுடன் ஜீவகாருண்யம் என்பதையும் உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கட்டும் என்று கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம் கிடைக்குமென்று எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார், ஆகாயக் கப்பல் ஆகியவைகள் ஏற் படுத்தப்பட்டு மலிந்த பிறகு கூட நடந்து யாத்திரை போக வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இது போலவேதான் அநேக விஷயங்களை சமயத்தின் பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி அடிமைகளாய் கஷ்டப்படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் சமயத்தின் உண்மை தத்துவத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும். அதன் போலித் தத்துவங்களை தைரியமாக அழிக்க வேண்டும், அதோடு போலிக்கற்பனை நிபந் தனைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம், புண்ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திரவங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்த உபத்திரவங்களும் மடத்தனஙகளும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக் கின்றதென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும் படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடியாக சீர்திருத்தம் செய்ய சற்றும் ஒன்றுபடாததாக இருந்து வரு கின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்ற மடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமூகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.

(சென்னை – பச்சையப்பன் கலாசாலையில் சமூக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 25.01.1931

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நம் ஆயுதம் – ‘விடுதலை’

 

2022 ஆகஸ்ட் 01-15 2022 பெரியார் பேசுகிறார்

தந்தை பெரியார்

திராவிட மக்கள் உள்ளத்தில் பெருங்குறையாய் இருந்ததும், திராவிட மக்கள் முற்போக்குக்கே பெருந்தடையாய் இருந்தது-மான குறை நீங்கும்படியாக -_ இன்று, ‘விடுதலை’ வெளியாகிவிட்டது. இனி இதை ஆதரித்து வளர்த்து நலனடைய வேண்டியது திராவிட மக்களின் கடமையாகும்.
திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும் இன்றுள்ள இழி நிலைகளுக்குத் தலையாய காரணங்களுக்குள் முக்கியக் காரணம் என்னவெனில் _ திராவிடர்களுக்கு என்று, திராவிடரிடத்தில் தினசரிப் பத்திரிகை ஒன்றாவது இல்லாததேயாகும்.

திராவிட நாட்டில் உள்ள தினசரிப் பத்திரிகைகள் யாவும் திராவிடர் அல்லாதவர்-களிடமும், திராவிடர்களின் மாற்றார்களான பிறவி எதிரிகளிடமும், அவர்களின் அடிமை-களிடமுமே இருந்து வருகின்றன. குறிப்பாக, ஆரியர்கள் வெகு தந்திரமாக, வெகு முன்னெச்சரிக்கையுடன் பத்திரிகை உலகைத் தங்கள் கைவசத்தில ஏகபோகமாக ஆக்கிக் கொண்டதோடு, வேறு ஒருவரும் அத்துறையில் தலை எடுக்காதபடியும், வேறு ஒருவரும் தினசரிப் பத்திரிகைகள் நடத்திச் சமாளிக்க முடியாதபடியும் செய்து வந்திருக்கிறார்கள்; செய்தும் வருகிறார்கள்………
மற்றும் சொல்லுவோமானால், ஆரியர்கள் திராவிட நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா என்னும் உபகண்டத்திலும் மற்ற நாடுகளிலும் உள்ள பத்திரிகைகளையும் தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்து, இந்தியாவில் எங்கணுமே திராவிட மக்களை இழிமக்களாகக் கருதும்படியாக, மானம் _ மரியாதை அற்ற மக்களாக இருக்கும்படியும் செய்து வருகிறார்-கள். பொதுவாகச் சுருங்கச் சொல்ல வேண்டுமானால், பத்திரிகை உலகம் முழுவதும் ஆரிய ஆதிக்கத்தில் இருப்பதாலேயே இந்த ஆயுதத்தைக் கொண்டு ஆரியர் திராவிடர்களை அவர்களது வாழ்வில் இவ்வளவு கொடுங்-கோன்மையான அடக்குமுறையில் _ இராணுவ ஆட்சிபோல் ஆதிக்கம் செலுத்தி அடக்கி ஆண்டு நசுக்கி வருகிறார்கள். இந்தக் காரியத்தில் ஆரியர்கள் இவ்வளவு வெற்றி பெற்று இருப்பதாலேயே, ஆங்கில அய்ரோப்பிய ஆரியர்களும் கூட, இந்த இந்திய ஆரியர்களுக்கு இணங்கி அவர்களது நலனுக்கு ஏற்றவண்ணம் நடந்து, இந்நாட்டில் ஆட்சி செலுத்த வேண்டியவர்களாகவும், வாழ வேண்டியவர் களாகவும் இருந்து வருகிறார்கள்.

இதற்கு முன் எப்படி இருந்தாலும், இப்போது சிறிது காலமாய்த் திராவிட மக்களுக்குள் நல்ல உணர்ச்சியும் எழுச்சியும் முயற்சியும் இருந்து வந்தும், தொடர்ந்து கிளர்ச்சியும் தொண்டும் நடந்து வந்தும், குறைந்த பட்சம் ஒரு 50 வருட காலத்தில் இல்லாத அளவுக்குத் திராவிடர்களிடமும் சிறப்பாகத் திராவிட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியவர்கள் உள்ளத்திலும் தீப்பொறி பறக்கத் தகுந்த அளவு தீவிர உணர்ச்சி கொண்ட பிரச்சாரத் தொண்டாற்றி வந்தும், வேறு எக் கூட்டத்-தாரையும்-விடக் குறைந்ததாயில்லாத அளவுக்கு உண்மை அங்கத்தினர்களும் அமைப்புகளும் ஸ்தாபனங்களும் ஏற்பட்டு _ கூட்டங்கள் மாநாடுகள், விழாக்கள் நடந்து வந்தும், அவைகளுக்கும் சிறிதும் பயனில்லாமல் போய்விடுவதும், மதிப்பில்லாமல் போய் விடுவதுமான தன்மைகள் ஏன் ஏற்படுகின்றன வென்றால், பத்திரிகைகள் ஆரியர்களுடைய தாகவும் அதன் நிருபர்கள் ஆரியர்களாகவும், அவற்றைக்கொண்டு அவர்கள் செய்யும் வன்னெஞ்சமான நீதியும் _- ஒழுக்கமுமற்ற அட்டூழியமும்தான்………

இந்தப் பத்திரிகை ஆயுதம் இந்தத் தன்மையில் அவர்களிடம் இருந்துவரும் வரையில் திராவிட மக்களின் அடிமைத் தன்மையும் சூத்திரத்தன்மையும் அதாவது, சமுதாயத்தில் இழிமக்களாகவும், சமயத்தில் நான்காம் அய்ந்தாம் மக்களாகவும், கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறி (கைநாட்டு)களாகவும், பொருளாதாரத்தில் தினக்கூலித் தொழிலாளி களாகவும், அரசியலில் அடக்குமுறை ஆட்சிக்குட்-பட்டுத் தவிக்கும் மானமற்ற ஒற்றுமையற்ற ஈன இன மக்களாகவும் ஆக்கப்பட்டிருக்கும் தன்மையிலிருந்து மீள முடியவே முடியாது என்பது கல்லுப்போன்ற உறுதியாகும். உண்மையாகவே திராவிடருக்குள் இன்று ஒற்றுமை எங்கே? இன உணர்ச்சி எங்கே? கட்டுப்பாடு எங்கே? ஒன்றுபட்ட இலட்சியம் எங்கே? ஆனால், திராவிடர்களுக்கு அவர்களது வாழ்வில், முற்போக்கில் எதில் குறையில்லாமல்_-தடைகளில்லாமல் இருக்கின்றது? அதே தன்மையில் ஆரியர்களைப் பார்த்தோமானால், அவர்களுக்கு எவ்விதக் குறை இல்லாவிட்டாலும் _- எவ்வளவு கட்டுப்பாடு! எவ்வளவு இன உணர்ச்சி! எவ்வளவு ஒன்றுபட்ட இலட்சியம்! எவ்வளவு ‘கூட்டுத் தொண்டு’ இருந்து வருகின்றன!
இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதற்கு முதற்காரணம், நாம் மேலே காட்டியதுபோல், அவர்கள் கைவசம் பத்திரிகை உலகம் இருந்து வருவதும், நமக்கு அது இல்லாததுமே முக்கிய-மென்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? குறைந்த அளவு நாம் (திராவிடர்கள்) ஆரியர்களின் பத்திரிகை அட்டூழியங் களையாவது சமாளிக்கத்தக்க ஒரு தன்மையை அடையாவிட்டால், மற்றபடி அவர்களுடைய வலிமை பொருந்திய ஆயுதங்களான _ மதம், கடவுள்கள், ஆத்மார்த்தம், தெய்விகம், கலை, தேசியம், சுதந்தரம், சுயேச்சை என்னும் ‘இருபுறமும் பதமுள்ள வச்சிராயுதங்களால்’ நடத்தும் சித்திரவதைகளில் இருந்து எப்படி மீள முடியும்?………

திராவிட மக்கள் சற்றேறக்குறைய தெளிவான இரு பிரிவுகளாகக் காணப்பட்டு விட்டார்கள். ஒன்று, திராவிடர்களின் இழிநிலையைப் பற்றி _ அவர்களது முன்னேற்றத்திற்கும் மனிதத் தன்மைக்கும் கேடாக இருக்கும் தன்மைகளைப் பற்றிக் கவலையற்று, தங்கள் நலனையே பார்த்துக் கொண்டு வாழ்வை நடத்துவது என்பது; மற்றொன்று, தங்களைப் பற்றிக் கவலை-யில்லாமல் இன்றைய இந்த இழிநிலையைப் போக்கத் தம்மாலானதைச் செய்வது, செய்யும் முயற்சியில் முடிவெய்துவது, அதனால் ஏற்படும் கஷ்ட நட்டங்களை ஏற்பது என்பதாகும். இவற்றுள் முன்னையவர்களில் இரண்டு பிரிவினர்கள் இருந்து வருகின்றனர். இவர்-களுள் ஒரு சாரார், எதிரிகளுடன் சேர்ந்து திராவிடர்கள் இடரையும் தடையையும் செய்யத் துணிந்து, ஆரியர்களுக்கு உடந்தையாயும் அடிமையாயும் இருந்துவரும் வழுக்கி விழுந்த திராவிட சகோதரர்கள்; மற்றொரு சாரார், அவர்களுடனும் சேராமல், நம்மோடும் சேராமல் நடுநிலைமை காட்டிக்கொண்டு, சமயம்போல் நடந்து, மற்ற இரு கூட்டத்தாரின் தொண்டிலும் பங்கு பெற்றுத் தங்கள் சொந்த வாழ்வை மாத்திரம் கவனித்து, அதற்காக எதுவும் செய்யத் துணிவு கொண்ட திராவிடர்கள். இவர்கள் தங்களை மற்ற யாரையும்விட மேதாவிகள் _- மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சுயநல வேட்டை ஆடுகிறவர்கள் ஆவார்கள். இத்தகைய எந்தப் பிரிவும் ஆரியர்களுக்குள் இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.

எனவே, திராவிட மக்கள் மேற்குறிப்பிட்ட தன்மைகளில் இருந்து மாறி-_மற்ற இனத்தவர், மற்ற நாட்டவர்போல் ஆகி, ஒரு மனிதத் தன்மை கொண்ட சமுதாயமாக ஆவதற்கு மிக்க எதிர்நீச்சல் போன்ற கஷ்டமானதும் _- தன்னலத்தை வெறுத்ததுமான தொண்டு செய்ய வேண்டியது மிக அவசியமாகுமென்பதல்லாமல், இந்தச் சமயம் மிகவும் அவசரமானது என்போம். அதற்கு முக்கியமான -_ இன்றியமையாத ஆயுதம் பத்திரிகையாகும்.
அதை உத்தேசித்தே இந்தக் காரியத்திற்கும்-கூட நமக்குள் இருக்கும் பலவித வேற்றுமை, உதவியற்ற தன்மை, நிதியற்ற நிலை, வேறு பல தடைகள், கஷ்ட நட்டங்கள் ஆகியவைகளைக் கூட இலட்சியம் செய்யாமல் _- ‘விடுதலை’யைத் துவக்கி விட்டோம். பெரிதும் பாமர, பொது மக்களையும் இளைஞர்களையும் நம்பியே இதில் இறங்கி இருக்கின்றோம். இது நீடித்து நடந்தாலும் சரி, அல்லது முன்பே சில நாள்களில் ஒழிந்தாலும் சரி; நம் கடமையைக் கருதியும் இச்சில செல்வர், அறிஞர்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையுடனும் இறங்கிவிட்டோம். இச்சமயம் நம் எதிரிகளின் ஏகபோக ஆதிக்கத்தில் அரசியலும் இருக்கும்-படியான சமயமாகும்.

அதனால், அவர்கள் ‘விடுதலை’ எப்போது வேண்டுமானாலும் -_ என்ன வேண்டுமானாலும் செய்துவிடக் கூடும் என்றாலும், நமக்குள்ள ஆசை – நமது முக்கிய கடமை – நம் மக்களிடம் உள்ள நம்பிக்கை – நம் இளைஞர்கள், நம் மாணவர்கள், நம் தாய்மார்கள் நமக்கு ஊட்டிவரும் ஊக்கம், உள நம்பிக்கை, ஒத்துழைப்பைத் தருவதாய்க் காட்டும் அறிகுறி, அவர்களது வாக்குச் சுத்தம் ஆகியவைகளைக் கொண்டும் தொடங்கி விட்டோம்! இதே தொண்டில் இதற்குமுன் இரண்டு மூன்று முறை முயன்று தோல்வி-யுற்றாலும் அதைப்பற்றிச் சிந்தியாமல், மறுமுறையும் துணிந்து இறங்கி விட்டோம். ஆகவே தோழர்களே! தாய்மார்களே! செல்வர்களே! அறிஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே! இனி உங்கள் கடமை என்ன?
(‘விடுதலை’ – 6.6.1946)


பெரியார் பேசுகிறார்! பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?


2023 பெரியார் மார்ச் 1-15,2023

தந்தை பெரியார்

நம் பெண்மக்கள்பற்றிப் பெண் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர்களுக்குமாகச் சிறிது பேச அவா கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் விமோசனம் இல்லை; ஆகையால், பெண்கள்பற்றிப் பேசுகிறேன்.

நம் பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களைச் சிசு, குழந்தைப் பருவ முதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்திலும் பேத உணர்ச்சியே அற்று ஒன்று போலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன். அவர்களைப்பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல் அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாய்ச் செய்துகொண்டு அவர்களைக் காப்பாற்றவும் திருப்திப்படுத்தவும், அலங்காரப்படுத்தி, திருப்தியும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஓர் அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்து விடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு? ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும் ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய, அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்_ பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி,பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள். இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா? என்று கேட்கிறேன். ஓர் ஆண்-ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே, எதனால்? துணியாலும் நகையாலும்தானே’ பெரிதும் கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.

நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்குக் கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடம் மந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசி பத்துப் போடுவதாலும் விலகக்கூடிய வியாதி அல்ல. இது கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல்) மருந்து போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி. அழுத்திப் பிடித்து, கண்டித்து, அதட்டி, அறுத்துத் தீர வேண்டியதாகும். நான் வெறும் அலங்காரப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்கவேண்டும். என் ஆயுளும் இனி மிக மிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால், கோபிக்காமல், ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.

நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்குப் படித்த பெண், படிக்காத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்களை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள், பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கி விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
பெண்கள் பெருமை, வருணனை ஆகியவற்றில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவற்றைப்பற்றி அய்ம்பது வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைபற்றி ஒரு அய்ந்துவரிகூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா என்பதுதான். அதற்கேற்ற நகை, துணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது “கட்டின”வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் ‘போகப் பொருள்’ என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

­ ­ ­‘‘பெண்களைப் படிக்கவைப்பது வீண் பணச்செலவு, நாட்டு வரிப்பணத்தின் ‘வீண்’ என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை” சொன்னதுபோல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள்; இந்தக் கீழ் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய், தகப்பன் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் ஆகியவை கற்றுக்கொடுத்து. அவற்றில் வெற்றியாய்த் தேற வைத்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். (பலர் இதை இன்னும் செய்கிறார்கள்). அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்பு_ அதாவது திருமணம் ஆன பின்பு_ அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது? என்று கேட்கிறேன்.

புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால், “இது என்ன குடித்தன வீடா? வேறு வீடா?” என்று மாமி கேட்பாள். பிடில், வீணை தூசி அடையும்.
ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஒரு அட்வர்டைஸ்மெண்ட்டாகப் (விளம்பரம்) பயன்பட்டது. தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? செலவும் கண்டதுதானே என்கிறேன். அதுபோல் ஒரு பெண்ணை ஒரு தாய் தகப்பன் பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் பி.ஏ. படிக்கவைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப்பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?

இந்தத் துறையில், எந்த அறிஞர் சீர்திருத்தவாதியும் கவலை செலுத்தாமல், எவராலும் இனப்பெருக்கத்திற்கே பெண்கள் ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.
­ ­ ­
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும் ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும்; உறுதியாய் முடியும் என்பேன். ஆனால், நகைப் பைத்தியம் துணி அலங்காரப் பைத்தியம் அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பைத்தியம் ஒழிய வேண்டும்.
­ ­ ­
எனவே, பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப்போலக் கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் கீர்த்தி, புகழ்பெறும் பெண்மணியாக்க வேண்டும். பெண்ணும் தன்னைப் பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாகவே நடக்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு – தாழ்வு? என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆகப்படாது; அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து, இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.

15.09.1946 அன்று திருப்பத்தூரில் (வடஆர்க்காடு மாவட்டம்) நடைபெற்ற சம்பத் -_ சுலோச்சனா மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘குடி அரசு’ – 21.09.1946
­ ­ ­

இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கை ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில்லாதவர்களாயிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, இரஷ்யப் பெண்களைப்போலவும், துருக்கிப் பெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.

தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும்,வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண்மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
உயர் படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற பெண்கள், “ஆண்டாள் அன்பு” பற்றியும், “காரைக்காலம்மையாரின் சிவ பக்தி” பற்றியும் பேசிப் பொழுது போக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல் நாட்டுக் கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையென்பது கண்கூடு.

நம்முடைய ஆட்சிமுறையில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களைச் சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.இந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும், ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கிலிருக்கின்றனர். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதை வேடிக்கையாகவும் கருதப்
பட்டதுபோலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள்வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு, நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்.எனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், “நகை பீரோவாகவும்” “உடை ஸ்டாண்டாகவும்” தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் திரவுபதையைப் பற்றியும், சீதையைப்பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். “பெரோவிஸ்காயா” போன்ற இரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற முடியும்.

 

– ‘விடுதலை’ தலையங்கம், 18.11.1946