சனி, 19 செப்டம்பர், 2026

சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்! /சுசீந்திரம், மன்னார்குடி சுயமரியாதை சத்தியாக்கிரகம்

 


இந்துக்கள் தெருவில் நடப்பது கூட

இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம்
சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு “சேத்திர” ஸ்தலமாகும். அது திருநெல் வேலிக்கு 40-வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜ்ஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபசுவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள். மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது.

இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமுகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

வைக்கம் போராட்டம் போன்று சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதற்கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

பார்ப்பன போலீசு சுப்பிரண்டின் அடக்குமுறை வெறியாட்டம்
இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத் தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர். இவர் காலத்தில்தான் தொண்டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப் படுத்தினவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

நிற்க, எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றி யான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.
தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.

அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப் படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக் கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமுக சீர்திருத்தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவ துடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த மனிதனும் பொறுத்துக் கொள்வானா?
இன்றைய தினம் “சுசீந்திரத்தில்” தெருவில் நடக்கத் தடைப் படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர் களுமான ஈழவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி எது?
ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டியார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர் கோவிலிலாவது, திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றிபெற்றவர்களாவோம்.
இந்த சத்தியாக்கிரகமானது 1925-வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப் பட்டதாகும். அவ்வாக் குறுதி ஏமாற்றப்பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படு கின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாய மிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொதுசத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.
ஆகையால் சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசியவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 01.06.1930

- விடுதலை நாளேடு,23.11.24

சுசீந்திரம், மன்னார்குடி சுயமரியாதை சத்தியாக்கிரகம்

சுசீந்திரத்தில் வழி நடைபாதை விஷயமாய் துவக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தை சுயமரியாதை சத்தியாக்கிரக கமிட்டியார் ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்து அது சம்பந்தமாக விசாரித்து பொது ஜனங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட வேண்டு மென்பதாக சத்தியாக்கிரக் கமிட்டி திருநெல்வேலியில் தீர்மானம் செய்தது வாசகர் களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போது திருவாங்கூர் சர்க்கார் மேல்படி சுசீந்திரம் ரோடு விஷயமாய் சத்தியாக்கிரகம் மேலால் நடக்க வேண்டிய அவசரமில்லாமல் சீக்கிரத்தில் ஏற்பாடு செய்யக்கூடும் என்பதாக நம்பிக்கை உள்ள இடத்தில் இருந்து சேதி கிடைத்திருப்பதாய் தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கை
இது ஒரு புறமிருக்க தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு தடுக்கப்பட்ட ரோடுகள் விஷயமாய் விசாரித்து அறிக்கை செய்யும்படியாய் நியமிக்கப்பட்ட சப் கமிட்டி அதாவது சத்தியாக்கிரகக் கமிட்டி காரியதரிசியும் சுயமரியாதைச் சங்க நிர்வாகச் சபை காரியதசிரியுமான திருவாளர்கள் ரெ.சின்னையா, எஸ்.ராமநாதன் ஆகிய இரு கனவான்களும் தஞ்சை ஜில்லாவில் மன்னார்குடி டவுனில் உள்ள சில ரோடுகளைப் பற்றி நேரில் சென்று விசாரித்து அதன் விபரத்தை அறிக்கை செய்திருக்கின்றார்கள். அவ்வறிக்கையின் மீது இம்மாதம் 10ஆம் தேதி விருதுநகரில் சத்தியாக்கிரகக் கமிட்டி கூடி மேலால் நடக்க வேண்டிய வேலைகளைப் பற்றி தீர்மானங்கள் செய்யப்படும். அவ்வறிக்கையின் விபரமாவது:-

தீண்டா வகுப்பாரும்
மன்னார்குடி ரஸ்தாக்களும்
“கடந்த மே மாதத்தில் ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில்,பிறப்பினால் தாழ்த்தப் பட்டவர்கள் என்று சிலரைத் தப்பாக எண்ணிக் கொண்டு அவர்களுக்குண்டான சமூக சுதந்திரங் களை அவர்கள் அனுபவிக்க வொட்டாமல் தடுத்திருக்கும் முறையெல்லாம் நீக்கி, அவர்கள் தங்கள் சுதந்திரங்களை, ஏனைய மேல்ஜாதியார் என்று எண்ணிக் கொள்ளுகிறவர்களைப்போலவே அனுபவிக்க வேண்டுமெனக் கருத்துடைய தீர்மானம் ஒன்று அரங்கேறியது.
அத்தீர்மானத்திற்கொப்ப ஒழுங்கானதாயும், கொஞ்சமேனும், பலாத்காரமில்லாததாயும் உள்ள முறையில் சத்தியாக்கிரகம் செய்து அந்தப் பாத்தி யங்களை அடைவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மகாநாடானது, இந்தத் தீர்மானத்தை நடவடிக்கைக்குக் கொண்டுவர உத்தேசித்து, அது சம்பந்தமான வேலையினிமித்தம் சுயமரியாதை சத்தியாக்கிரகக் கமிட்டி என்று ஒரு கமிட்டியையும் நியமித்தது.

கொடிய முறை
இந்தக் கமிட்டியாரின் இரண்டாவது கூட்டம் திருநெல்வேலியில் கூடி ஆலோசித்தபோது, தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள சில நகரங்களில், முக்கியமாக, மாயவரத்திலும், மன்னார்குடியிலும், சில பொது ரஸ்தாக்களில் தீண்டாதார் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பார் நடமாடக் கூடாதென்ற ஒரு கொடிய முறை இருந்து வருவதாக செய்தியொன்று கமிட்டியாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதன்மேல், காரியதரிசிகள் அந்த இடங்களை நேரில் போய்ப் பார்த்து, விவரத்தை எல்லோருக்கும் விளக்க வேண்டுமென்று கமிட்டியார் முடிவு கூறினர். அதன்படியே காரியதரிசிகளான திருவாளர்கள் ஆர்.சின்னையா, திரு.எஸ்.ராமநாதன் ஆகிய இருவரும் போய்ப்பார்வையிட்டார்கள். மன்னார்குடியைச் சுற்றியுள்ள சேரிகளிலுள்ள பள்ளர், பறையர் என்று கூறப்பட்ட வகுப்பார்கள் விசாரிக்கப்பட்டார்கள். உள்ளூரில் வசிக்கும் பார்ப்பனர்களுடைய கருத்தும் இன்னதென்று தெரிந்து கொள்ளப்பட்டது.

தஞ்சை ஜில்லாவில் மன்னார்குடியானது காவிரிப் பாசனத்துக்கு தென்புறத்தில் அமைந்த ஒரு முனிசிபல் பட்டணம். அப்பட்டணத்தின் ஜனத்தொகை 21636 அதில் 20165 இந்துக்கள் 589 பேர் கிறிஸ்துவர்கள், 742 பேர் முஸ்லிம்கள். இவர்கள் அல்லாதவர்கள் 140 பேர். இந்தத் தஞ்சை ஜில்லாவில் இந்தவூர் கல்வி விருத்தியால் விளக்கம் அடைந்த ஊர், முதல் கிரேட் காலேஜ் ஒன்றும், இரண்டு ஹைஸ்கூல்களும் இவ்வூரில் இருக்கின்றன.

பார்ப்பனர் சொத்து
தேசத்திலுள்ள ஏனையோரைப் போன்று இல்லாமல், மன்னார்குடிப் பார்ப்பார்கள் நன்றாய்ப் படித்தவர்களும் நல்ல சொத்து உடையவர்களும் ஆவார்கள். மன்னார்குடியைச் சுற்றி பலமைல் விஸ்தீரனத்திற்குக் காணப்படும் கொழுத்த நெல் வயல்கள் எல்லாம் இந்த மன்னார்குடிப் பார்ப்பனர்களுடைய சொத்தாகும்.
ஆகவே மன்னார்குடி நகரில் உள்ள செல்வந்தரும் படித்தவர்களும் பார்ப்பனர்களே யாவார்கள். மேலும் இவர்கள் யாவரும் தனியாக பார்ப்பனத் தெருவிலேயே (அக்கிரகாரத்தில்) வசிக்கிறார்கள். இவற்றுள் முக்கியமான பார்ப்பனத் தெரு முதல் தெரு என்று அழைக்கப்படும். அதில் வசிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே யாவார்கள்.
இந்தப் பார்ப்பனர் அநேகமாக நன்றாய் கல்வி கற்றவர்கள். அதில் பி.ஏ.க்களும், எம்.ஏ.க்களும், ஆசிரியர்களும் வக்கீல்களும், டாக்டர்களும், மிராசு தாரர்களும் குடியிருக்கின்றனர். ஆகவே, அதில் வசிப்போரெல்லாம் தக்க செல்வ நிலைமையில் இருக்கக் கூடியவர்கள்.

நாய், பன்றி போகலாம்
இப்படிப்பட்ட இவர்கள் வசிக்கும் 2- பர்லாங்கு நீளமுடையதான இந்த ரோடானது முனிசிபல் ஆபீசுக்கும், ஆஸ்பிடலுக்கும். கோர்ட்டுகளுக்கும் இன்னும் மற்ற இடங்களுக்கும் போவதற்கு சவுகரிய மானதும் சுருக்கமானதுமான வழியாக இருக்கிறது. இந்த ரோட்டை மன்னார்குடி முனிசிபாலிட்டியார்தாம் செவ்வையாக கப்பி போட்டுச் செப்பனிட்டு வரு கிறார்கள். அந்த டவுனில் உள்ள முக்கியமான பாதை களுக்குத்தான் முனிசிபாலிட்டியார் கப்பி போடுவது வழக்கம். அந்தத் தெருவுக்கு விளக்கு போடுவதும் முனிசிபாலிட்டியாரேயாகும். நெடுக கிணறுகளும் முனிசிபாலிட்டியாரால் வெட்டப்பட்டிருக்கின்றன. இப்படியிருக்க இந்தப் பக்கத்திலுள்ள பள்ளர், பறையர் என்று சொல்லப்பட்டவர்கள் இந்தத் தெருவழியாக நடக்கவே கூடாதாம். இது யாவரும் அறிந்த செய்தியே. ஆனால் இந்துக்கள் என்ற வர்க்கத்தில் அடங்கிய மேற்படி தாழ்த்தப்பட்ட வகுப்பார் மட்டும் அந்தத் தெரு வழியாய் போகக் கூடாதே ஒழிய – அவ்வகுப்பிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்குச் சென்று விட்டவர்களும், முஸ்லிம்களும் அந்தப் பாதை வழியே நெடுகப் போகலாம், மற்றும் எவ்விதமான நாய், கழுதை, பன்றியும் போகலாம்; மலம் முதலிய அசிங்கமான குப்பை கூளம் கொண்ட எரு வண்டியும் போகலாம்.

கொல்லைப்புற வழி
அந்தத் தெருவில் மிராசுதாரர்கள் தங்கள் பண்ணை யாட்களாய் மேற்படி 2 வகுப்பில் உள்ளவர்களையும் தம் காரியத்திற்கு அழைக்கும்போது, அவர்களைப் பக்கத்துத் தெருக்கள் மூலமாய் கொல்லை வழியாய் (தம் புறக்கடைக்கு) வரச்சொல்லி வேலை வாங்கிக் கொள்வது வழக்கம். இந்தப் பட்டணத்து முன்சிபாலிட்டியானது இந்தப் பார்ப்பனர்களின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டதாதலால் இவர்களது மேல் கண்ட தெருவில் கப்பி போடுதல் முதலான வேலைகளை எல்லாம் மற்ற வகுப்பினரைக் கொண்டே செய்விப்பது என்னும் ஒரு நிர்ப்பந்தத்தை உபயோகித்து வருகின்றார்கள். யாரேனும் ஒரு தீண்டாத வகுப்பார் அத்தெரு வழியாக வழக்கத்திற்கு விரோதமாக மீறிப் போனால் அவரை அங்குள்ள பார்ப்பனர்கள் திட்டுவார்கள்; கல்லால் அடிப்பார்கள்; கழியால் தாக்குவார்கள்.
இத்தனைத் தண்டனைக்காளாகின்ற வகுப்பினர்கள் தம் நிலைமைக்குப் பெரிதும் வருந்துகின்றனரேனும், தமக்குத் துணை செய்வாரில்லாமையால் செல்வமும் செல்வாக்குமுள்ள மேற்படி பார்ப்பனர்களை மீறி ஒன்றும் செய்ய முடிவதில்லை.
மேற்படி முதற்றெருவுக்கு வடக்கில் ஒத்தைத் தெரு என்று ஒரு தெரு அமைந்திருக்கிறது. மற்றும், தெற்கில் இரண்டாவது தெருவென்று ஒரு தெரு அமைந்திருக்கிறது.

இந்த 2 தெருக்களின் கீழ்ப்பாதிகளிலும் பார்ப்பனர் களே வாழ்கின்றனர். அக்காரணத்தினாலும் அந்தக் கீழைப் பாதிகளின் வழியே போகக்கூடாதென்று கூட மேற்படி வகுப்பினர் ஏற்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி யென்னவென்றால், மேற்சொன்ன 3 தெருக்களுக்கு மிகவும் எட்டியிருக் கின்ற ராஜகோபாலாசாமி கோவிலைச் சுற்றிய தெருக்களிலேயும், மேற்படி தாழ்த்தப்பட்ட இரு வகுப்பினர்களும் போகலாம். ஆனால் பார்ப்பனர் வசிக்கும் முதல் தெருவிலும் மற்ற தெருக்களின் கீழ் பாதிகளிலும் மட்டும் அவர்கள் போகக்கூடாது. காரணம் அங்கு பார்ப்பனர்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்ற காரணமே.

புறக்கணிப்பு
முதலாவது தெருவில் வசிக்கும் சொல்வதென்ன வென்றால் பார்ப்பனர் தீண்டப்படாதவர்கட்குப், பார்ப்பனர்களே வசிக்கும் தெருவில் வேலையென்ன என்பது ஒன்று. மேலும் அவர்கள் உள்கூற்று என்னவென்றாலும் ஒரு காலத்தில் ஒரு வேளை அந்தத் தீண்டாதார்களுக்கு உரிமை இருந்திருந்தால் கூட, நெடுங்காலம் அவர்கள் வீதியில் நடக்கக் கூடாதென புறக்கணிக்கப்பட்டும் போயிருக்கிற காரணத்தினாலும், அவர்களும் இணங்கியே இவ்வளவு காலம் சம்மதித்து,விட்டுக் கொடுத்திருக்கிறதாலும் அவர்கள் இனிமேல் அந்தத் தெருவில் நடமாடும் பாத்தியத்தை இழந்து விட்டார்கள் என்பது இரண்டாவது. மேலும், பார்ப்பனர்கள் தம் மதத்தின் படியேயும் தம் இருப்பிடங்கட்கு அருகில் மேற்படி ஜாதியார் அணுகக் கூடாதென்பது மூன்றாவது. ஆனால் தாராள சிந்தையுடைய சிலர் மட்டும் அவர்களும் நடக்க வேண்டும் என்கிற உரிமை ஞாயமென்று சொல்லுகிறார்களேயானாலும் அவர்கள் தங்கள் பாத்தியதையை விட்டுக் கொடுக்கும் விஷயத்தில் எவ்வித உதவியும் செய்ய மறுக்கிறார்கள்.

வாயினால் மட்டும் மேற்படி யாருடைய உரிமையை ஒப்புக் கொண்டு, “காலாந்தரத்தில் அத் தீமை விலகிவிடும்” என்று சொல்லுகிறார்கள். தீண்டா வகுப்பினர் என்பவர்களுக்கு அந்தத் தெருவில் வேலை இல்லை என்கின்றவாதம் சுத்த அசட்டுத்தனமே. எப்படியெனில் மேற்படி தீண்டாதார் உழுது பணி செய்து விளைவிக்கின்ற நெல்லையே மேற்படி தெருவிலுள்ள எல்லாப் பார்ப்பனர்களும் அடைகின்றவர்களாய் அந்தத் தீண்டாதார் என்பவர்களையே தம் பண்ணையாட்களாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டாருடைய வேலைக்கும் மேற்படி வகுப்பினர் வேண்டியிருக்கின்றனர். ஆடு, மாடு மேய்த்தல், நெல் மூட்டைகள் தூக்குதல், விறகு கொணர்தல் முதலிய வேலைகட்கு மேற்படி வகுப்பினர் வேண்டியிருக்கின்றனர். உண்மையாகவே மேற்படி வகுப்பினர் பக்கத் தெரு மூலமாய் வீட்டின் புறக்கடை வழியாக வீட்டின் கட்டுக்குள் கூட வேலைக்காக விடப்படுகின்றனர்.

மனித உரிமை
சட்டப்படியாகக் கூட ஏதோ ஒரு வகுப்பின் சில பேர் சில காலமாக ஒரு பாதை வழியாகப் போகவில்லையென்று அவ்வகுப்பார் எல்லாரையும் எக்காலமும் போகக் கூடாதென்று தடுத்தல் செல்லு படியாகாது. ஒரு பொதுப் பாதையில் நடப்பதென்பது ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள முதல் உரிமையாகும். அந்த உரிமைக்கு விரோதமாக ஒரு வகுப்பார் தம் மதத்திற்கு விரோதம் என்று கூறி இன்னொரு வகுப்பினரைத் தடுப்பது முற்றிலும் சட்ட விரோதமே.
ஆகவே, மன்னார்குடியில் மேற்படி, முதல் தெருவில் தீண்டா வகுப்பார் நடத்தற்குரிமை யுண்டென்பது தெள்ளத் தெளிய விளங்கும் ஒரு செய்தி. இதற்கு எதிர்ப்பானது “உயர்ந்த பிறவி யுடையவர்கள்” என்று எண்ணிக் கொண்டும் தமக்கு இயற்கையிலேயே சிலரை தம் வாசஸ்தலங்கட்கு அருகே வரவிடாமல் செய்யப் பாத்தியம் உண்டென்றும் கருதிக் கொண்டு மிருப்பவர்களிடம் ஏற்படுகிறது. பிறப்பினால் உயர்வு என்ற இப்படிப்பட்ட கொள்கையானது தற்கால நாகரிக் வாழ்க்கையினரால், மிகமிகப் பைத்தியக்காரத்தன முடையதென்றும் முதல் நம்பர் அயோக்கியத்தனமுடைய தென்றும் சொல்லத்தகுந்தது.

பொதுநலன் இல்லை
மனிதற்குள் சிலர் அகம்பாவத்தனமும் இழி குணமும் நிறைந்தவர்களாய் இருக்கின்றார்களென்பது மன்னார்குடிப் பார்ப்பார்களது செய்கையே போது மான அத்தாட்சியாகும். பொதுஜன க்ஷேம நலத்தைக் கருதுகையிலும் தேசிய நலத்தைக் கருதுகையிலும், இந்த உயர்வு என்ற கொள்கையானது எடுபடவும், தீண்டா வகுப்பினர் என்று தூற்றப்படுகின்றவர்கள் ஞாயமுடையவும் வேண்டுமென்பது தோன்றுகிறது.
ஒரு தலையாகச் சுயமரியாதை இயக்கத்து உறுப்பினர்களும், இந்தியப் பொது மக்களும், மேற்படி மன்னார்குடி தீண்டா வகுப்பினர் என்கிறவர்கள் அடைய விரும்புகின்ற தமது உரிமையை அடையும் வழியில் செய்ய வேண்டிய முழு உதவியையும் செய்ய வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்ளுகிறோம். அரசாங்கத்தாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம்.
குறிப்பு: இந்த ரிப்போர்ட்டின் மீது விருதுநகரில் 10ஆம் தேதி கூடும் சத்தியாக்கிரக கமிட்டி செய்யும் முடிவை எதிர்பார்த்து சுயமரியாதை சத்தியாக்கிரகத் தொண்டர்கள் உதவிக்குத் தயாராகவிருக்கும்படி வேண்டுகிறோம்.

– ‘குடிஅரசு’, 06.07.1930

- விடுதலை நாளேடு,28.01.25

புராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே கார்த்திகை தீபம்

 

தந்தை பெரியார்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.

எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபி மானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவ தனால், நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம். சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம்.

பயன் என்ன?

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டி கையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை. இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட் டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத் தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது.

இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த் திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்தி கைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீண் செலவு

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?

இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!

கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப் பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண் ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!

கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக் கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில் ஒன்று:

மூட நம்பிக்கை

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகா தேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப் படுவான் என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைதான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவ தாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதை யெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள். பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று. ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:

புராணப் புரட்டு

ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம். உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம். அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டி ருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரம சிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங் களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல் லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.

அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ் வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.

இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை. இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாச கங்களும், தோத்திரங்களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக் கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக் குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறிய லாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அநேக செய்திகள் அமைந்திருப் பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகை யினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப் பார்களா?

குருட்டு எண்ணம்

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாது – தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடா விட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டி ருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங் களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங் களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

“குடிஅரசு” 22-11-1931

-விடுதலை நாளேடு,9.11.25

சுயமரியாதைக்காரரும் மதமும்

 

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

சுயமரியாதைக்காரரும் மதமும்

மதம் என்பது கடவுளாலும் கடவுள்களால் அனுப்பப்பட்டவர் களாலும் கடவுளை அடைவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தத்தை விளக்குவதற்கும் ஏற்பட்டவைகள் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம்.

மனிதன் நடந்து கொள்ள வேண்டியதற்கு ஆக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் விதிகள் திட்டங்கள் என்பதுதான் மதம் என்பது மற்றொரு சாராரின் அபிப்பிராயம்.
எப்படி இருந்தாலும் சுயமரியாதைக்காரர்கள் மதம் என்பதைப் பற்றி கொண்டுள்ள அதப்பிராயம் பலர் அறிந்ததேயாகும். நிர்ப்பந்தமான அல்லது மூடநம்பிக்கையானதும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் சாத்தியத்துக்கும், மாறானதும் பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானத்திற்கும் எதிரானதுமான காரியங்களையோ கருத்துக்களையோ ஆதாரங்களையோ ஏற்றுக்கொண்டு இருப்பதே மதம் என்றும், அது எதுவானாலும் அப்படிப் பட்ட மதங்களையே சுயமரியாதைக்காரர்கள் மறுக்கிறார்கள் என்பதோடு அம்மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

சாதாரணமாக இன்று இந்தியாவில் பெரும்பான்மையான அதாவது 100க்கு 95 பேர்களுக்கு மேலாகவே உள்ள மக்களை ஆவாகனம் செய்து கொண்டிருக்கும் மதங்களாகிய இந்து மதமும் மற்றும் சீர்திருத்த மதங்கள் என்பவையாகிய இஸ்லாம், கிறிஸ்து, ஆரிய சமாஜம், பிர்மசமாஜம், முதலிய பல மதங்களும் நிர்பந்தமான நம்பிக்கை (அதாவது நம்பித்தான் தீரவேண்டும் என்பது) அல்லது மூடநம்பிக்கை அல்லது கொள்ள முடியாததும் ஆதார மில்லாததுமான விஷயங்களில் நம்பிக்கை வைத்தல் ஆகியவைகளையோ அல்லது இவற்றில் சிலவற்றையோ கொண்டதாகத் தான் காணப்படுகின்றன.

சரீரம் வேறு, ஆத்மா வேறு என்றும், கடவுள் வேறு ஆத்மாவேறு என்றும், அது மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்புடையது என்றும் மனிதனையும் கடவுளையும் ஒன்று சேர்ப்பது என்றும், சரீரத்தின் கூட்டுறவால், அதன் தூண்டுதலால் ஆத்மா செய்த குற்றத்துக்கு கடவுளுடைய தண்டனைகள் ஆத்மாவுக்கு மாத்திரம் தான் கிடைக்கும் என்றும், இறந்த பிறகு அதாவது சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்த பிறகு தீர்ப்பு நாளில் மறுபடியும் ஒரு சரீரத்தைப் பெற்று சித்திரபுத்திரன் கணக்குப்படி தண்டனைகள் கண்டனைகள் அடையும் என்றும், செத்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள் என்றும், ஒரு ஆத்மாவுக்கு பல ஜன்மங்கள் உண்டு என்றும், அந்த ஜன்மங்கள் எல்லாம் ஆத்மாவும், சரீரமும் கலந்து இருந்த காலத்தில் செய்த காரியத்துக்கு ஏற்ற விதமாகக் கிடைக்கும் என்றும், இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களைக் கொண்டவைகளே இன்று செல்வாக்குள்ளதும் இந்நாட்டில் 100க்கு 95 பேர்களுடையதுமான மதங்களாய் இருக்கின்றன.

இப்படிப்பட்ட மதங்களைத் தான் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஒப்புக் கொள்ளவும் முடியாது என்பதோடு இந்த மதங்களிலிருந்து மக்கள் விடுபட்டு அறிவுச் சுதந்திரவாதிகளாக பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும் என்பது சுயமரியாதைக்காரர்களின் முக்கிய லக்ஷ்யமாகும்.

அது போலவே உலக நடப்புக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக கடவுள் என்கின்ற ஒரு வஸ்து இருக்கிறது என்பதையும், அது மக்கள் தீண்டப்படாதவர்கள் ஆவதற்கும், மக்களை மேல் ஜாதிக்காரர்கள், முதலாளிகள், அரசர்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்துவதற்கும் காரணமாயும் மனிதனுக்கு ஆக உலகில் உள்ள ஜீவராசிகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, பக்ஷிகள், மச்சங்கள் முதலாகியவைகள் சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கும் காரண கர்த்தாவாயும் இருக்கிறது என்பதையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

மற்றும், அக்கடவுளே எரிமலை, பூகம்பம், புயல்காற்று, வெள்ளக் கொடுமை ஆகியவைகளுக்கு கர்த்தாவாகவும் விஷஜுரம், தொத்து நோய், கொள்ளை நோய், குறை நோய், உளைமாந்தை ஆகிய வியாதிகளுக்கும், தேள், பாம்பு முதலிய விஷக்கிருமிகளுக்கும் புலி, சிங்கம், ஓநாய், நரி முதலிய துஷ்ட ஜெந்துக்களுக்கும், சிருஷ்டி கர்த்தாவாகவும் எலியைப் பூனை தின்பதற்கும், ஆட்டைப் புலி தின்பதற்கும், புழுப்பூச்சிகளை பட்சிகள் தின்பதற்கும், பட்சிகளை வேடர்கள் வேட்டையாடுவதற்கும் காரணகர்த்தாவாயும் இருக்கிற கடவுளையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கர்த்தாவையும் ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

மேலும் வேறு எப்படிப்பட்ட கடவுளானாலும் அதை வணங்கினால், அதற்கு ஆகாரம், நகை, துணி, பெண்ஜாதி, வைப்பாட்டி முதலியவை வைத்து பூஜைசெய்தால், உயிர்பலிகொடுத்தால், இன்ன இன்ன மாதிரி தொழுதால், ஸ்தோத்திரித்தால் ஜபித்தால் மனிதன் செய்த எல்லா கெட்ட காரியங்களின் பாபங்களையும் மன்னித்துவிடுவார் என்கின்ற கடவுளையும் ஒப்புக் கொள்ளாததோடு அப்படிப்பட்ட கடவுளுணர்ச்சியையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.
கடவுளைப்பற்றிய மற்ற விஷயத்தை மற்றொரு சமயம் விவரிப்போம்.

மதம் என்னும் விஷயத்தில் மேலே குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட மதங்கள் இருக்கக்கூடாது என்பது தான் சுயமரியாதைக்காரர்களின் மத சம்பந்தமான அபிப்பிராயமாகும்.

ஏன் இதை முதலில் குறிப்பிடுகிறோம் என்றால் விவகாரங்களுக்கு வரும்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதங்களுக்கு வெவ்வேறு தத்துவம் இருப்பதாகவும், சகலவிதமான பகுத்தறிவு பரீக்ஷைகளுக்கும் தங்கள் மதம் நிற்கும் என்றும் சொல்லி வாதாடும் போது சமயத்துக்குத் தகுந்தபடி பேசுவதால் நிலைமை கஷ்டத்திற்கு உள்ளாகிறது. ஆகையால் மதங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பல மதங்களுக்கும் உள்ள பொதுக் கொள்கைகளையே குறிப்பிட்டோம்.
மற்றும் மதம் என்னும் வார்த்தைக்கு பலவித அருத்தங்களும், கருத்துக்களும் சொல்லப்படுகின்றன.

உதாரணமாக ஒருவர் “என்னுடைய மதம் யார் மனதையும் புண்படுத்தாமலும் யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வது தான்” என்று சொல்லுகிறார்.மற்றொருவர் “என்னுடைய மதம் கடவுளைப்பற்றி கவலைப்படாத நாஸ்திக மதம் தான்” என்கின்றார்.

மற்றொருவர் “என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால் கர்மத்துக்குத் தகுந்த பலன் உண்டு” என்பது தான் என்கிறார்.
மற்றொருவர் “நான் கருதியிருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு” என்கிறார்.

மற்றொருவர் “மதம் என்னும் வார்த்தைக்கு கொள்கை அல்லது கடமை” என்பது தான் அர்த்தம் என்கிறார்.
மற்றொருவர் “என்னுடைய மதம் விஞ்ஞானம்” என்கிறார்.

மற்றொருவர் “என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான்” என்கிறார். மற்றொருவர் “என்னுடைய மதம் பொதுவுடமை கொள்கை” என்கிறார். இப்படியே இன்னும் பலவிதமாய் மதம் என்னும் வார்த்தைக்கு தனித்தனி கருத்துக்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அவைகளைப்பற்றி யெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.

ஆனால் முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும் அதன் மேல் கட்டப்பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்.

ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக்கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர் வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால் எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும். மற்றப்படி மதக்கொள்கைகள் எது எப்படி இருந்தாலும் தான் லக்ஷியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக்கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.

மற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்கு பயந்து கொண்டு மத வேஷக்காரர்களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருப்பது போலவே இகத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.
விளக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பணத்துக்கு ஆகவும், பெண்ணுக்கு ஆகவும், வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவும், உத்தியோகத்துக் காகவும் எத்தனையோ பேர் மதவாதிகளாகவும், மதமாற்றக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

பொதுவாக பார்க்கப்போனால் கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்கு பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய கடவுளும் மதமும் இரட்டைப்பிள்ளைகள் போல் பிறந்தவைகள் அல்ல.

எப்படி இருந்தாலும் மதங்களானவை இன்று சடங்காகவும் வேஷமாகவும் இருக்கின்றனவே ஒழிய கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை. புஸ்தகங்களில் பல கொள்கைகள் இருந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமுலில் இல்லை.

ஆகவே அமுலில் இல்லாத கொள்கைகளைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்பதானது ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோட்டைகளில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்கு சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.

முதலாவதாக ஒரு மதத்துக்கு கொள்கைகள் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால் அதற்கு இரண்டு சக்தி இருக்க வேண்டும்.

அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக்கொள்கைகள் எல்லா மக்களாலும் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தானாகவே பின்பற்றித் தீரவேண்டியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்த பெரியவரும் கண்டுபிடிக்கவுமில்லை. எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.

அது செய்தால் பாவம் இது செய்தால் மோக்ஷம் என்றும், அது செய்தால் லாபம் இது செய்தால் நஷ்டம் என்றும், அது செய்தால் தண்டனை இது செய்தால் தூக்கு என்றும், இப்படியாக பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை கண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளாகவும் அமுலில் கொண்டுவர எப்போதுமே முடியாததாகவும் அமுலில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட வேண்டியதாகவும் மனிதனால் சாதாரணமாக செய்யக்கூடியதும் செய்வதற்கு ஆசையுண்டாக்கக் கூடியதும் அல்லாததாகவும் இருக்கக்கூடிய கொள்கைகளையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது.

எந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளுக்கு இஷ்டமானதாகவோ இருந்திருக்குமானால் அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசையுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா? கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்கு கசப்பானதாகவும், பெரும்பான்மையோருக்கு செய்வதற்கு முடியாததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

ஆகவே கடவுளின் பேரால் மதத்தின் மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்கைகள் என்பவை சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித்திறமையும், அக்காலத்துக்கு சரி என்று பட்ட கருத்துக்களையும் கொண்டவைகளே தவிர எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்பட்டதல்லவென்றே சுயமரியாதைக்காரர்கள் கருதுகிறார்கள்.

இன்றும் மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும், சகல மக்களுக்கும் பலன் ஒன்றுபோல் உண்டாகக்கூடிய தாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால் அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு முன்வரமாட்டார்கள்.

– தந்தை பெரியார் – ‘பகுத்தறிவு’ – மார்ச்சு 1936

- விடுதலை நாளேடு,17.11.24

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தேசீய கீத’ப் புரளி


தந்தை பெரியார்

(‘தேசீயகீதம்’ என்ற மதவாதப் பாடல் பற்றி இன்று சர்ச்சைப் புயல் வீசுகிறது. ஒன்றிய பிஜேபி அரசு சட்டம் செய்துள்ளது. இதுகுறித்து 1937ஆம் ஆண்டிலேயே கடுமையாக விமர்சித்த கட்டுரை இது)

ஆகஸ்டு 31ஆம் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கவுன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கிரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கிரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன் முதல் வெளிவந்தது.

முஸ்லீம்  சமூகத்தை அழிப்பதே “ஆனந்த மடத்தின்” நோக்கம். 168- வருஷங்களுக்கு முன் இருந்து வந்த இந்திய நிலைமையைப் பற்றியே “ஆனந்த மடம்” எழுதப்பட்டிருக்கிறது. கதாநாயகனான பவாநந்தன் வங்காள முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க எண்ணிப் படை திரட்டுகிறான். அவன் மஹேந்திரன் என்பான் ஒருவனைச் சந்தித்துத் தனது புரட்சிப் படையில் சேரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறான். பவாநந்தன் ‘வந்தே மாதர’ கீதம் பாடியபோது மஹேந்திரன் மதிமயங்கி அந்த கீதத்தை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொள்ளுகிறான். மஹேந்திரன் வேண்டிக் கொண்டபடியே பவாநந்தன் மீண்டும் பாடி தாய் நாட்டை முஸ்லீம் ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறுகிறான்.

சட்ட சபைகளில் ‘வந்தே மாதர’ கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்கவில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கிரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

 

“ஸ்டேட்ஸ்மன்” பத்திரிகையில் ஒரு முஸ்லீம்  நிருபர் எழுதிய கட்டுரை ஒன்றில் “ஆனந்த மடத்தி”லிருந்து பல மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் ஆட்சியை ஒழிக்க முயல்வது புத்திசாலித்தனமாகுமா என்று மஹேந்திரன் கேட்டபோது “நமது மதம் போச்சு, நமது வர்ணாச்சிரம தர்மம் போச்சு, இப்பொழுது நமது உயிருக்கும் கூட ஆபத்து நேரிட்டிருக்கிறது. இந்த முஸ்லீம்களை ஓட்டா விட்டால் ஹிந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது” என்றெல்லாம் பவாநந்தன் கூறி மஹேந்திரனை தன் வழி இழுக்க முயல்கிறான். “நீ ஒண்டியாக முஸ்லீம்களை ஓட்டி விடுவாயா?” என்று மஹேந்திரன் கேட்டபோது ‘வந்தேமாதர’ கீதத்திலுள்ள சில வரிகளை பவாநந்தன் பாடுகிறான். “ஏழுகோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடிக் கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரதமாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதே அந்த வரிகளின் பொருள். அதற்கு பதிலாக மஹேந்திரன் முஸ்லீம்கள் வீரப் பிரதாபங்களையும் படை பலத்தையும் எடுத்துக் காட்டுகிறான்.

பவாநந்தன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “முஸ்லீம்கள் எல்லாம் பயங்காளிகள், கோழைகள். பிராணனுக்கு ஆபத்து ஏற்படும்போது கூட ஆங்கிலேயன் போர்க்களத்திலிருந்து ஓட மாட்டான். வியர்வை வடியத் தொடங்கும்போது முஸ்லீம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் ஒரு வெடிகுண்டு விழுந்தால் போதும். முஸ்லீம்கள் எல்லாம் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள்” என பவாநந்தன் கூறி மஹேந்திரனை உற்சாகப்படுத்துகிறான். தனது புரட்சிப்படையில் சேர்ந்து முஸ்லீம்களை எதிர்த்து தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தைப்பற்றி பவாநந்தன் எவ்வளவோ கூறியும் மஹேந்திரனை ஆனந்தமட ஆலயத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறான்.

அந்த ஆலயத்தில் ஒரு விஷ்ணுவின் விக்கிரகத்தையும் அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் விக்கிரகத்தையும் மஹேந்திரன் பார்த்து அந்தத் தேவியார் யார் என்று கேட்கிறான். “ஹோ! அவள்தான் நம் மாதா. நாமெல்லாம் அவளது குழந்தைகள்” எனப் பூசாரி விடையளிக்கிறான். அப்பால் ஆலயத்தின் வேறொரு பகுதிக்கு மஹேந்திரனை பூசாரி அழைத்துக்கொண்டு போய் “ஜெகத்தாத்ரி” தேவி தேஜோமயமாய் விளங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறான். “ஆதியிலே நமது பாரதமாதா இம்மாதிரியே இருந்தாள்” என பூசாரி மஹேந்திரனுக்குக் கூறி மீண்டும் வேறொரு ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். அங்கே நிர்வாண கோலத்திலிருக்கும் ஒரு கருங்காளி விக்கிரகத்தை பூசாரி மஹேந்திரனுக்குக் காட்டி “இப்போது பாரத மாதா இருக்கும் கோலம் இது” எனக் கூறுகிறான்.

அப்பால் வேறொரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் பத்துக் கரங்களுடைய துர்க்கா தேவியின் விக்கிரகத்தைக் காட்டி “நமது சத்துருக்களான முஸ்லீம்கள் ஒழிக்கப்பட்ட பின் நமது பாரத மாதா இவ்வாறே இருப்பாள்” என   மஹேந்திரனிடம் கூறுகிறான். மீண்டும் பூசாரி, லட்சுமி, ஸரஸ்வதி தேவிகள் விக்கிரகங்களை மஹேந்திரனுக்குக் காட்டி “பத்துக் கரங்களுடைய துர்க்கையே! தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே! கல்வித் தெய்வமான ஸரஸ்வதியே! போற்றி! போற்றி!” எனப் பாடி பூசாரி ஆனந்தத் தாண்டவமாடுகிறான். கடைசியில் மஹேந்திரன் தேசபக்தனாகி புரட்சிப் பிரதிக்ஞை செய்து கொள்கிறான்.

புரட்சிப் படையில் ஆட்சேர்க்கும் முறையைப்பற்றி “ஆனந்தமட” நாவலிலிருந்து சில மேற்கோள்களை அந்த முஸ்லீம் நிருபர் எடுத்துக் காட்டியிருக்கிறார். “தாய் நாட்டை மீட்கும் வரை உற்றார் பெற்றார் உறவினரைத் துறந்து ஸநாதன தர்மத்தை நிலைநாட்டுவதாக புரட்சிப் படையில் சேரும் ஒவ்வொருவனும் சபதம் செய்து கொள்வானாம். புரட்சிப் படையில் சேர்ந்த பிறகு ஒவ்வொருவனும் ஒவ்வொரு கிராமத்துக்கு அனுப்பப்படுவானாம். கிராமங்களில் புரட்சிக்காரர் செய்யும் அட்டூழியங்களை விளக்கி “ஆனந்த மடத்”தில் கூறப்பட்டிருப்பதாவது, “புரட்சிக்காரன் ஒவ்வொருவனும் கிராமங்களுக்குச் சென்று ஹிந்துக் களைச் சந்தித்து “சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா! எனக் கூறி 20 அல்லது 25 பேரைச் சேர்த்துக்கொண்டு முஸ்லீம் கிராமங்களுக்குச் சென்று முஸ்லீம் குடிசைகளை தீக்கிரையாக்குவார்களாம். உடனே முஸ்லீம்கள் நானா பக்கங்களிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்களாம். உடனே முஸ்லீம்கள் சொத்துக்களையெல்லாம் புரட்சிக்காரர் சூறையாடு வார்களாம். அவ்வாறு கொள்ளையடித்த பொருள்களை விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக வழங்குவார்களாம். கொள்ளைப் பொருள்களில் பங்கு கொண்ட கிராம வாசிகள் மகிழ்ச்சியடைந்து புரட்சிப் படையில் தாமும் சேர்ந்து கொண்டதாக விஷ்ணு பேரில் ஆணையிட்டுக் கொடுப்பார்களாம். ஆனந்தமடம் மூன்றாம் பகுதி எட்டாவது அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றிப் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது. “திடீரென ஒரு முழக்கம் கேட்டது. சிலர் முஸ்லீம்களைக் கொல்! கொல்! என ஆர்ப்பரித்தார்கள். சிலர் ‘வந்தே மாதர’ கீதம் பாடினார்கள். சிலர் “சகோதரர்களோ! மசூதிகளையெல்லாம் தரைமட்டமாக்கி அந்த இடத்திலே ராதாமாதவ ராலயத்தைக் கட்டும் நாள் என்று வரும்” என்று கர்ஜித்தார்கள். இடையிலே பலர் வந்தேமாதர கீத கோஷம் செய்தார்கள்.

“வந்தேமாதர” கீதத்தின் தோற்றத்தையும் நோக்கத்தையும், விளக்கிக் கூறி விட்டு அந்த முஸ்லீம் நிருபர் மேலும் எழுதியிருப்பதாவது:- “விக்ரக வணக்கத்தை ஆதரிப்பதும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்ச்சியை எழுப்பக் கூடியதுமான ‘வந்தேமாதர’ கீதத்தை இந்திய முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வார்களா என ஹிந்துக்களையும் பாரபட்சமற்ற அய்ரோப்பியர் களையும் நான் கேட்கிறேன். இந்நிலையில் எல்லாருக்கும் பொதுவெனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் எல்லாரும் வந்தே மாதர கீதம் பாடுமாறு கட்டாயப் படுத்துவது நீதியாகுமா?

உண்மையான தேசீய கீதம் தேசமக்கள் உள்ளத்தில் தேசபக்தியை உண்டு பண்ணக் கூடியதாக இருக்க வேண்டும். “வந்தேமாதர கீதம்” முஸ்லீம்கள் உள்ளத்தில் தேச பக்தியை எழுப்புமா?

தாய்நாட்டின் பெருமையை விளக்கக் கூடிய தேசீய கீதத்தை முஸ்லீம்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அந்த கீதம் மத துவேஷத்தையோ, வகுப்பு துவேஷத்தையோ மூட்டக் கூடியதாயிருக்கக் கூடாது.”

இந்த அபிப்பிராயத்தை நாமும் ஆதரிக்கிறோம். ஒரிஸா அசம்பிளியிலும் தேசீயக் கீதத் தகராறு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ஒரிஸா அசம்பிளியில் தேசீய கீதம் பாடிய போது சில உத்தியோகஸ்தர்கள் எழுந்து நிற்கவில்லையாம். காங்கரஸ்கட்சி மெம்பர்கள் அதை ஆட்சேபித்து அசம்பிளித் தலைவரிடம் முறையிட்டார்களாம். தலைவரும் காங்கரஸ் கட்சியைச் சேர்ந்தவரே. தலைவர் பிரஸ்தாப விஷயத்தைப்பற்றித் தீர்ப்புக் கூறுகையில் “உத்தியோகஸ்தர்கள் சட்டசபை மெம்பர்கள் அல்லவென்றும் சட்டசபை மண்டபத்தில் பிரசன்னமா யிருப்பவர்கள் இன்னின்ன மாதிரி நடந்து கொள்ளவேண்டு மென்று கட்டளையிடத் தமக்கு அதிகாரமிருந்தாலும் பிரஸ்தாப விஷயத்தில் தாம் எதுவும் செய்யப்போவதில்லையென்றும் தேசீய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப்பதும் எழுந்து நிற்பதும் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்ததென்றும் எனினும் உத்தியோகஸ்தர்கள் உட்கார்ந்திருந்தது வருந்தத்தக்கதென்றும் அந்தத் தகராறை அத்துடன் விட்டு விடுவதே நல்லதென்றும் பிரஸ்தாபித்தாராம்.

சட்ட சபைகளில் ‘வந்தே மாதர’ கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்கவில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கிரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு செய்யாமல் காங்கரஸ்காரர் ‘வந்தேமாதர’ கீதத்தையும் மூவர்ணக் கொடியையும் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டு மென்று பிடிவாதம் செய்தால் தேசீய கீதத்தின் மானமும் தேசீயக் கொடியின் கெளரவமும் அழிவது நிச்சயமென்று எச்சரிக்கை செய்கிறோம்.

‘குடிஅரசு’ – 12.09.1937

-விடுதலை நாளேடு,23.8.26 

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் – தந்தை பெரியார்

 

எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் – தந்தை பெரியார்

968இல் வெளிவந்த ‘விடுதலை’ – தந்தை பெரியார் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்
மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
மிக முக்கிய நிலைமைகளை விளக்கும் – என்றும் வழிகாட்டும் அறிக்கை

நான் 1920இல் காங்கிரசில் சேர்ந் தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.

நான் 1900க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.

விளையும் பயிர் முளையிலேயே . . .

நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும், வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும், தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்.

மாடு, எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.

1900இல் இருந்தே எனக்கு ஜோசியம், முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது ‘என்னிடத்தில் வாய்கொடுத்து மீள முடியாது’ என்று எல்லோரும் பேசிக் கொள்வார்கள்.

எக்குழுவிலும் நான்தான் தலைவன்

நான் எனது 5, 6, 7 வயது முதற் கொண்டே தறுதலைப் பிள்ளையாகத் திரிந்தாலும், அந்த வயது முதற் கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்)தலைவனாகவே – மற்றவர்கள் என் சொல் கேட்பவர்களாகவே இருக்கும் வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.

இன்று வரையிலும் கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக்கிறேனே ஒழிய, ஒரு சாதாரண அங்கத்தினனாக எதிலும் இருந்ததில்லை.

அதுபோலவே எந்த சந்தர்ப்பத்திலும் எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிறத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக்கிறேனேயொழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு – உதவி கேட்டதே இல்லை. அது போலவே நான்தான் எனது ஆயுளில் யாருக்கும் பண உதவி செய்திருக்கிறேனேயொழிய யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.

என்னைப் பற்றி

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன், கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள் அல்லது பொதுமக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள். அவ்வளவு தான்! நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியதும் கிடையாது.

எனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு, செலவு செய்யவும் மனது வராது, யாரையும் கேட்கவும் மாட்டேன்.

ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும் . சேர்த்து கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப் பேன். சரியாக கணக்கு வைக்க மாட் டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக் கொள்வேன்.

எனது கொள்கைகள்

எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர், நாத்திகர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர்இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்கு ஆகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.

நான் காங்கிரசை விட்டதற்கும்
இதுதான் காரணம்:

ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப்பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.

ஜஸ்டிஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்கு ஆகத்தான். அக்கட்சி தலைமை ஏற்ற உடன் அக்கட்சி கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்ஷனில் நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்கு ஆகத்தான். காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.

காங்கிரசை எதிர்த்ததும் ஆதரித்ததும்

வெள்ளையன் போன பின்பு 1952இல் நடந்த தேர்தலின்போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோது கூட என் கழகத்தில் இருந்து ஒரு நபரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்து, காங்கிரசை தோற்கடித்ததும் இதற்கு(எனது மேற்கொண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

எனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வர முடியாமல் போனதால், காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டு, காங்கிரசை எதிர்த்து இராஜாஜியை காங்கிரசை விட்டு போகும்படி செய்ததும் இதற்கு ஆகத்தான். அந்த சந்தர்ப்பத்தில் காமராஜரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் – அதாவது காமராஜர் பதவிக்கு வந்தவுடன், பார்ப்பனர்களும், அவர்களது சில கூலிகளும் காங்கிரசை (காமராஜரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங்கிரசை (காமராஜரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண் டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கு) இதற்கு ஆகத்தான்.

தி.மு.க.வை எதிர்த்ததேன்?

இந்த சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக் கொண்டு இருந்ததும் இதற்கு ஆகத்தான். அதாவது இந்த சந்தர்ப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதரவாக இருந்தாலும், தி.மு.க.வும் நாங்கள் பார்ப்பனர் கைப்பொம்மைகள்தான் என்று பட்டாங்க மாகச் சொல்லிக் கொண்டு வந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப்பனர்கள் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும், காங்கிரஸ் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதரவாளனாக இருக்க வேண்டியதாகியதும் இதற்கு ஆகத்தான்.

நாளை எனது நிலை

ஆகவே எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித்தும் தொண்டாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.

இவ்வளவு மாத்திரம் அல்ல. இனியும் எந்த கட்சியை எதிர்ப்பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது!

பொதுவாக நான், சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.

குறிப்பு: இந்த மூன்றிலும், அதாவது பகுத்தறிவு (நாத்திகத்தன்மை) வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகி விடுவார்களே ஆனால் எனது நிலைமை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

- விடுதலை நாளேடு, 3.7.26