புதன், 28 பிப்ரவரி, 2018

எது தொலைய வேண்டும்?

தந்தை பெரியார்



தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அரசியல் புரட்டர் களுக்குப் பேச மேடையில்லாமலும், மதப்புரட்டர்களுக்கு மரியாதை இல்லாமலும், புராணப் பிரசங்கத்திற்கு இடமில்லாமலும் செய்து விட்டதோடு இவைகள் மூலம் அவரவர்களின் சொந்த வியாபாரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு விட்ட விபரம் இவைகளினால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் நெருப்பில் விழுந்த புழுத் துடிப்பது போல் துடிப்பதினாலே விளங்கும். இதுபோலவே பார்ப்பன ஆதிக்கமும் புரோகிதர்கள் ஆதிக்கம் ஆங்காங்கு ஒருவாறு மறைந்து கொண்டே வருவதும் வெள்ளிடை மலை. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் பதினா யிரம் பேருக்கு மேலாகவே போலி அரசியலையும், புரட்டுப் பார்ப்பனியத்தையும் விட்டு விலகி விட்டதாக அவர்கள் தங்கள் பெயரை வெளிப்படுத்தி இருப்பதையும், ஆயிரக் கணக்கான சடங்குகள் பார்ப்பனர்களை நீக்கி நடத்தி இருப்பதாக வெளியாகி வருவதையும், அநேகர் தங்கள் குலகுரு என்கின்ற போலிக் குருமார்களை நீக்கியிருப்பதையும் கவனித்துப் பார்ப்பவர்கள், இச் சுயமரியாதை இயக்கம் இத்தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம் வேரூன்றி வருகின்றது என்பதை உணரலாம்.

இந்நிலையில் ஸ்ரீவரதராஜுலு நாயுடு சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும் என்றும், அதைத் தொலைத்தாலொழிய தேசியம் வளராதென்றும், ஆதலால் அதைத் தொலைப்பது என்பதே தனது வேலையாகக் கொண்டிருப் பதாகவும் வீரமுழக்கம் செய்கிறார். எனவே இது எதற்காக என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா அல்லது ஸ்ரீமான்கள் வரதராஜுலு, சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார் போன்றார்களின் தேசிய இயக்கம் தொலையவேண்டுமா என்பதைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமாய்ப் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.

திரு. வரதராஜுலு முதலியோரின் தேசியம் என்பது காங்கிரசா, அல்லது சுயராஜ்யக் கட்சியா, அல்லது தேசியக் கட்சியா, அல்லது ஓம்ரூல் கட்சியா, அல்லது மிதவாதக் கட்சியா, அல்லது மற்றெதுவோ என்பதை திரு. வரதராஜுலு சொல்லுவாரா? அல்லது அவர்களுடைய தலைவர்களாவது மற்றக் கூலிகளாவது சொல்வார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் இவை எதனுடைய கொள்கைகளாவது இன்னது என்பது திரு. வரதராஜுலு அவர்களுக்குத் தெரியுமா? என்று கேட்கின்றோம்?

ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் இன்னது என்று தெரியாமலும், அதனால் இன்ன பலன் உண்டு என்பதை உணராமலும், எப்படி ரயில்வே கம்பெனிக்காரன் தனது வரும்படிக்காக எல்லோரையும் ஸ்ரீரங்கம் உற்சவத்திற்குப் போங்கள் என்று விளம்பரம் செய்கின்றானோஅதுபோலவும்,கும்பகோணம் மாமாங்கக் குளத்தின் தண்ணீரின் யோக்கியதை இன்னதென்று தெரியாமலும் அதில் குளித்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று தெரியாமலும், எல்லோரும் மாமாங்கத்திற்குப்போய் மோட்சமடையுங்கள் என்று எப்படி ரயில்வேகாரன் விளம்பரம் செய்கின்றானோ அது போலவும் சுயராஜ்ஜியம் இன்னது, தேசியம் இன்னது அதன் பலன் இன்னதாகும் என்பதைப் பற்றி ஒரு சிறு அறிவும் இல்லாமல் எல்லோரும் சுயராஜ்ஜியம் அடைய வேண்டும் தேசியத்தில் சேரவேண்டும் என்று தங்கள் தங்கள் லாபத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கு மாக கூப்பாடு போடுவதல்லாமல் இதில் வேறு ஏதாவது காரியம் உண்டா என்று கேட்கின்றோம்.

இந்த 42 வருஷகாலமாக சுயராஜ்ஜியத்திற்குப் பாடுபட்ட வர்களின் நிலைமை என்ன? அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்ட கேள்விக்கு யாராவது இது வரை பதில் இறுத்திருக்கிறார்களா? ஒரு சிறு விளம்பரக்காரன் ஏதாவது ஒன்று சொன்னதாக வெளியானால் உடனே அவனைப் பிடித்து அவனுக்கு எலும்பு போட்டு அதை மறுக்கும்படி கடிதம் எழுதி வாங்கியோ கற்பனை செய்தோ மறு நாளே பதிலெழுதும் முறையில் வெளிப்படுத்தப்படும். தமிழ் நாடு போன்ற பத்திரிகைகளும் திரு. வரதராஜுலு போன்ற தேசியப் பிழைப்புக்காரர்களும் 33 கோடி மக்களை ஏமாற்றிப் பிழைக்கத்தக்க வழிதான் சுயராஜ்ஜியமும் தேசியக் கூப்பாடும் என்றால் இவர்கள் ஏன் அதற்கு உடனே பதில் சொல்லக் கூடாது என்று கேட்கின்றோம்.

இன்றைய உத்தியோக பெருக்குக்கும், வரி உயர்வுக்கும், கட்சிப்பிரதி கட்சிக்கும், ஏழைகள் கஷ்டத்திற்கும், அரசாங் கத்தின் அநீதிக்கும் சுய ராஜ்ஜிய கூச்சலும் தேசியப் புரட்டும் காரணமா இல்லையா என்று கேட்கின்றோம்.

இவ்வளவு கொடுமையைச் செய்த காங்கிரசும் தேசியமும் மக்கள் ஒற்றுமைக்காவது சமத்துவத்திற்காவது ஏதாவது ஒரு சிறு நன்மையாவது செய்து இருக்கின்றதா? அல்லது சமத்துவத்தைப் பற்றிய கொள்கை ஏதாவது காங்கிரசில் இருக்கின்றதா?

ஒத்துழையாமையின் போது காங்கிரசில் நுழைக்கப் பட்ட 1. சமத்துவம் 2. தீண்டாமையொழித்தல் 3. மதுவிலக்கல் 4. கதர் 5. ஒற்றுமை ஆகிய மக்களுக்கு வேண்டிய திட் டங்களில் ஏதாவது ஒன்று இன்றைய காங்கிரசிலோ தேசியத்திலோ இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.

அன்றியும் சென்ற வருஷ காங்கிரசில் கொண்டு வரப்பட்ட சமத்துவத் தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதா என்றும், தீண்டாமையை ஒழிக்கக் கொண்டு வந்த தீர்மானத்தைப் பம்பாய் மாகாண காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதா என்றும், எல் லோருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானத்தை சென்னை மாகாண காங்கிரஸ் அனுமதித்ததா? என்றும், கதரைத் தவிர வேறு ஒன்றும் கட்டக் கூடாதென்ற தீர்மானத்தை காங்கிரஸ் வைத்திருக்கிறதா? என்றும், முஸ்லீம்களுக்கு அவர்களுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டும் என்பதைக் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுகிறதாவென்றும் கேட்கின்றோம்.

இந்நிலையில் காங்கிரசும் தேசியமும் மக்களுக்கு என்ன நன்மை செய்து விட்டது, அல்லது செய்யக் கூடும் என்று கேட்கின்றோம். இவைகள் ஒன்றும் இல்லாமல் உத்தியோகங்களை உண்டாக்குவதும், அதற்காக அதிக சம்பளங்களை ஏற்படுத்துவதும், அதற்காக வரியை அதிகப்படுத்துவதும், வரியை ஏழைமக்கள் தலையில் விதிப்பதும், அவ்வுத்தியோகத்தை ஒரு வகுப்பாரே அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு கூலிகளை விட்டு கூப்பாடு போடுவதும், அக்கூலிக்காரர்களுக்குள் ஒருவராக திரு. வரதராஜுலு தன்னையும் பதிவு செய்துகொண்டு வாழ்வதும் அல்லாமல் தேசியத்திற்கு வேறு ஏதாவது அர்த்தமோ பலனோ திரு. வரதராஜுலு சொல்லக் கூடுமா என்று அறை கூவி அழைக்கின்றோம்.

நிற்க, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் என்ன என்பது பற்றியும் அதனால் யார் பிழைக்கிறார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்ப் போம்.

மக்களுக்குப் பிராணனைவிட மானம் பெரிதென்பது அதன் முதலாவது கொள்கையாகும்.

எல்லோரும் பிறவியில் சமம் என்பது இரண்டாவது கொள்கையாகும்.

பெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டுமென்பது மூன்றாவது கொள்கையாகும்.

ஜாதி - மத பேதங்கள் தொலையுமட்டும் நாட்டின் ஒற்றுமையையும் எல்லோருடைய நன்மையையும் உத்தேசித்து ஒவ்வொரு ஜாதி மதத்திற்கும் அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நான்காவது கொள்கையாகும்.

கண்மூடி வழக்கங்களும் மூட நம்பிக்கையும் தொலைய வேண்டு மென்பது அய்ந்தாவது கொள்கையாகும்.

வேதம், சாஸ்திரம், புராணம், பழக்கம் என்னும் கார ணங்களால் மனிதனின் பகுத்தறிவை கட்டுப்படுத்தக்கூடிய பார்ப்பனியம் ஒழிந்து சுயேச்சையும் அறிவும் வளர வேண்டும் என்பது ஆறாவது கொள்கையாகும்.

இது போன்ற இன்னும் அநேக கொள்கைகளைச் சுயமரியாதை இயக்கம் இன்றைய தினம் தாங்கிக் கொண்டு மூலை முடுக்குகளிலெல்லாம் வேலை செய்து வருகிறது.

அதில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரும் இது வரை தன் தன் சொந்தக் காசை செலவு செய்துதொண்டாற்றி வருகின்றார்கள்.

திரு. வரதராஜுலுவும் அவர் கூட்டமும் தேசிய விளம் பரத்தால் பிழைப்பது போல் சுயமரியாதை விளம்பரத்தால் யாராவது பிழைக்கின்றார்களா? யாருக் காவது இதனால் ஒரு அம்மன் காசு லாபமுண்டா?

எனவே இம் மாதிரி மக்களுக்கு உண்மையான விடுத லையளித்து அறிவைப் பரவச் செய்யத்தக்க சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா? அல்லது கூலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மாத்திரம் அனுகூலமாயிருந்து நாட்டையும் பாழாக்கும் தேசியம் தொலைய வேண்டுமா? என்பதைப் பற்றி யோசித்து முடிவாக எது தொலைய வேண்டும் என்பதை உணருமாறு பொது மக்களை வேண்டிக்கொள்ளுகிறோம். திரு.வரதராஜுலுகளோ அவரது கூட்டாளிகளோ மாத்திரமல்லாமல் வேறு யார் இதற்குத் தக்க பதிலுரைத்தாலும் வந்தனத்தோடு ஏற்று சமாதானம் சொல்ல தயாராயிருக்கின்றோம்.

- ‘குடிஅரசு',  கட்டுரை, 27.05.1928
- விடுதலை நாளேடு, 25.2.18

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

பள்ளிக்கூடத்தில் புராண பாடம்  - சித்திரபுத்திரன் -

08.04.1928 - குடிஅரசிலிருந்து...


உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.
பையன் : எனக்கு தெரியவில்லையே சார்.

உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி கூட நீ கேட்ட தில்லையா மடையா?

பையன் : நான் கேட்டதில்லை சார். ஆனால் ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டி ருக்கிறேன். அதாவது ஆதிசேஷன் விஷ்ணு வின் படுக்கை என்றும், அந்த விஷ்ணு இராம அவதாரம் எடுத்தபோது இந்த ஆதிசேஷன் லட்சுமணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது.

உபாத்தியாயர் : ஆமாம் அந்த ஆதிசேஷன் தான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் தெரியுமா?

பையன் : இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார்...

உபாத்தியாயர் : என்ன சந்தேகம்? சீக்கிரம் சொல்.

பையன் : பூமியைத் தாங்கிக் கொண்டிருக் கின்ற, ஆதிசேஷன் விஷ்ணு வுக்கு படுக்கை யாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார் தாங்குவார்கள்? தவிர லட்சுமணனாக உலகத்திற்கு வந்து விட்டபோது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்? தயவு செய்து சொல்லுங்க சார்.

உபாத்தியார் : நீ என்ன குடிஅரசு படிக்கிறாயோ! அது தான் அதிகப் பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய். பொறு! உனக்கு இந்த பரீட் சையில் சைபர் போடுகின்றேன்.

பையன் : இல்லவே இல்ல சார், நான் சத்தியமாய் குடி அரசைப் படிப்பதே இல்லை சார். ராமாயணம்தான் சார் கேட்டேன். தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றிற்று சார்.

உபாத்தியார் : ஆதிசேஷன் தெய்வத் தன்மை பொருந்தியவன்.  ஒரே காலத்தில் பல வேலை செய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு. அவன் பூமியையும் தாங்குவான். விஷ்ணுவுக்கு படுக்கையாகவுமிருப்பான். விஷ்ணு ராமனாக உலகத்திற்குப் போகும் போது லட்சுமணனாக கூடவும் போவான். தெரியுமா?

பையன் : இப்ப தெரிந்தது சார். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார். அது மாத்திரம் சொல்லிப் போங்கள் இனி நான் ஒன்றும் கேட்பதில்லை.

உபாத்தியார் : என்ன சொல் பார்ப்போம்.

பையன் : பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் சரி, அதை நான் ஒப்புக் கொள்ளு கின்றேன். அப்புறம் தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது சார். எனக்கு நிஜமாலும் தெரியவில்லை சார்.

உபாத்தியார் : என்ன சங்கதி சொல்லு; நான் கோபிக்கிறதில்லை.

பையன் மறுபடியும் : பூமியை ஆதிசேஷன் தாங்குகின்றான் சார் (தலையை சொரிந்து கொண்டு) ஆதிசேஷனை யார் தாங்கறாங்க சார்? அவர் எதன் மேலிருந்து கொண்டு தாங்கறாங்க சார். அதை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப்போதைக்கு இல்லை சார்.

உபாத்தியார் : போக்கிரிப்பயலே நீ குடிஅரசு படிக்கிறாய் என்பது இப்போது எனக்கு உறுதியாச்சுது. பொறு, பொறு, பேசிக் கொள்கிறேன். வாயை மூடிக்கொண்டு போய் உட்கார், அதிகப்பிரசிங்கிப் பயலே!

பையன் பேசாமல் உட்கார்ந்து கொண்டான். உபாத்தியாயரும் எஸ்.எஸ்.எல்.சி பரீட்சைக்கு அவனை அனுப்பவில்லை. இதைப் பற்றி  கேள்வி கேட்பாரும் இல்லை. பள்ளிக்கூட மேனேஜரையும் வாத்தியார் சரிப்படுத்திக் கொண்டார்.
-விடுதலை நாளேடு, 23.2.18

புதன், 21 பிப்ரவரி, 2018

இந்து என்றால் என்ன?

- தந்தை பெரியார்




பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர்களுக்கு முதலில் பிறந்த நாள் கொண்டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!

கடவுளுக்கு இலக்கணம் கூறியவர்கள் கடவுள் இறக்காதவன், பிறக்காதவன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமியில் பிறந்தான்;  கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந் தான் என்று  கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண் டாடினார்கள்.

பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளை யும், செய்யாத சங்கதிகளையும் புகுத்தி விழாக் கொண்டாடினார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.

இவை எல்லாம் மக்களை முட்டாளாக்குவதற் கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.

பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர் களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்களுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.

இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படு கின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.

அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனுமதிக்கிறேன். மக்களும்  எனது தொண்டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகையில் பணம் பல பொருள்கள் முதலி யனவும் அளிக்கின்றீர்கள்.

நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக் கூடாது என்பதைக் கொள்கையாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.

நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள் கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.

எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.

இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன் னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டு களைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.

இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத்திரன் என்று எண்ணிக் கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.

முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது.  ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரிகளிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.

அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு  அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.

இன்றைக்கு அரசியல் துறையிலாகட்டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த் தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.

இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப் பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.

இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல்லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.

இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லாதாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பது தானே.

இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.

அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின்றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.

அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!

உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.

இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.

அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!

தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?

இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கடவுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.

அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.

மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.

தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கிய முடைய மக்களுக்கு நடக்கக்கூடாத எல்லாம் இன்றைக்கு அரசியல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.

தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன்றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன்னது செய்யவில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்ட வட்டமாகக் கூறவில்லையே.

காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.

நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாச வேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.

தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன்றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக்களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதவர்களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.

இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட்ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார்களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.

பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளிலும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.

இன்றைக்கு அந்த நிலை இருக்கின்றதா? அடி யோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?

இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கியமில்லாத, தேவை இல்லாத கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம் தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக்கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப் போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.

மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப் பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும் விளக்கினார்கள்.

29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 12.6.1973).

- விடுதலை நாளேடு, 18.2.18