செவ்வாய், 21 நவம்பர், 2017

மனிதர்கள் கழகம்




மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய் மார்களே, பெரியோர்களே!

இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கூறுகிற, கருதுகிற கருத்துகளை நீங்கள் கேட்கத்தான் கடமைப் பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்டவர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால், இதுவரை இந்த நாட்டில் என்னைவிட அதிகமாகக் கூறப்பட்ட கருத்துகள் ஏராளம்! ஆகவே, எதையும் நம்பாமல் அறிவு கொண்டு சிந்திக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கிறது. உலகத்தில் எத்தனையோ கோடி ஜீவன்கள் இருக்கின்றன என்றாலும் அவைகளுக்கு எல்லாம் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கிடையாது. மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பகுத்தறிவாளர் கழகம் துவக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்திற்கு வராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? சிந்திக்க வேண்டும்.

நான் முன்பு ஒருமுறை ஒரு சுயமரியாதை மாநாட்டிற்கு குமாரசாமி ரெட்டியார் என்ற மந்திரியாரை அழைத்து இருந்தேன். அவர் வந்தும் பேசினார். அப்போது சொன்னார், "சுயமரியாதை மாநாடு என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அப்படியானால், மற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லை என்று அர்த்தமா?" என்று கேட்டார். அதற்குப் பின்னால் நான் பேசும் போது, அவரைக் கேட்டேன். "நீங்கள் என்ன ஜாதி?" என்று. 'ரெட்டியார்' என்றார். கோவிலுக்குச் சென்றால் எந்த இடத்தில் நிற்கிறீர்கள்? ஓட்டலுக்குச் சென்றால் எங்கே உட்காருகிறீர்கள்? அதற்குக் காரணம் என்ன? நீங்கள் சூத்திரன் என்பதால் அல்லவா என்று கேட்டேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தார். கூடியிருந்த மக்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

விளையாட்டுக்காக நான் சொல்லவில்லை. இன் றைக்கும் நம் நிலைமை என்ன? சாஸ்திரப்படி மட்டுமல்ல - இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர்கள்தான். எவன் கிறித்தவன் இல்லையோ, எவன் முஸ்லிம் இல்லையோ, அவனெல்லாம் பார்ப்பானைத் தவிர்த்து பகுத்தறிவுவாதி - நாத்திகன் உட்பட சூத்திரன் என்று இன்றைய சட்டத்திலும் இருக்கிறது.

இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் தீவிரமாக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக இந்த நாட்டில், பகுத்தறிவு சுயமரியாதை பிரச்சாரம் செய்தும் வருகிறேன்.

நம்முடைய இலட்சிய சொல்லாக 'கடவுள் இல்லை - கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன் - வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று கொண்டு இருக்கிறோம்.

உலகத்திலே இருக்கிற மற்ற நாட்டு பகுத்தறிவு வாதிகள் எல்லாம் புதிய புதிய கருவிகளை எல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் "படுக்காமலேயே" குழந்தை பெறக் கூடிய சாதனங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடுமையான வியாதிகளுக்கு எல்லாம் மருந்து வகைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பகுத் தறிவை பயன்படுத்தியதால் மற்ற நாட்டுக்காரன் செய்து காட்டிய சாதனை.

1952-இல் நம்முடைய சராசரி ஆயுள் 29. இன்றைக்கு நமது சராசரி ஆயுள் 52. இன்னும் நம் நாட்டு வைத்தியன் எல்லாம் செத்தான் என்றால் அது 75 ஆகி விடும். நம் நாட்டு வைத்தியன் செய்த புண்ணியமெல்லாம் நம் உயிரைக் கொன்று தீர்த்தது தான். வெள்ளைக்காரன் வைத்தியம் நாட்டில் வளர்ந்து விட்ட பிறகுதான் நம்முடைய ஆயுள் நீண்டு வருகிறது.

இன்றைக்குச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கி.பி. 2,000 முடிவில் இந்திய மனிதனின் சராசரி வயது 75 ஆகவும், வெள்ளைக்காரன் வயது 110ஆகவும் ஆகப் போகிறது. நான் அப்போது இருக்க மாட்டேன். நீங்கள் அதை அனுபவிப்பீர்கள்.

எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நாக்கில் புற்று வந்தது. அந்தத் தழும்புக் கூட இன்னும் இருக்கிறது. டாக்டர் ரத்தின வேலு சுப்பிரமணியமும், டாக்டர் ராயும் வைத்தியம் பார்த்தார்கள்.

டாக்டர் ராய் எலக்டிரிக் டிரீட்மெண்டு செய்து என்னைப் பிழைக்க வைத்தார். இப்படி எல்லாம் மனிதனின் பகுத்தறிவு விஞ்ஞானத் துறையில்; இன்னும் எவ்வளவோ வளர்ந்து வருகிறது.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் என்னுடைய கவலை எல்லாம் நம்முடைய பகுத்தறிவு, நமது மானத்தைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும் என்பது தான்.

மற்ற நாட்டுக்காரன் பகுத்தறிவு எல்லாம் வளர்ந்து சந்திர மண்டலத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கப் போகிறான். உணவு முறையிலும் மாறுதல் ஏற்படப் போகிறது.

நம்முடைய நாட்டு மக்களைப் பொறுத்த வரையில், பகுத்தறிவுவாதிகளாக இருப்பதற்கு மான உணர்ச்சி வந்தாக வேண்டும். எவ்வளவு கேவலம்? இந்த நாட்டுக் குடிமக்களை நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு கூட்டம் தங்களுக்குத் தாசி மக்கள் என்று இன்றைக்கும் சொல்லி வருகிறது என்றால் இதைவிட ஒரு கேவலம் வேண்டுமா?

எனக்கு ஒருவனுக்கு மட்டும்தான் இந்த வேதனையா? 1925ஆம் வருடத்திலிருந்தே இதற்காக நான்தானே பாடுபட்டு வருகிறேன். எந்த அரசியல் காரன் பாடுபட முன்வந்தான்? அரசியல் காரனுக்கு எல்லாம் என்னோட சேர்ந்து இருப்பதற்கே பயம். காரணம், இவனோடு சேர்ந்தால் ஓட்டுக் கிடைக்காதே என்ற பயம்தான்!

நான் இவ்வளவு பாடுபட்டும் இன்னும் முடிந்த பலனை அனுபவிக்க முடியவில்லையே. நம்முடைய இயக்கத்தால் பார்ப்பானின் ஆதிக்கத்தை சகல துறை களிலும் முறியடித்து விட்டோம். கல்வி, உத்தியோகத் துறைகளில் எல்லாம் நாம் தலையெடுத்து விட்டோம். இவ்வளவும் அமைதியான புரட்சியாக செய்து முடித்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பானைக் கொல்லவில்லை, ஒரு பார்ப் பனத்தியைக் கெடுக்கவில்லை. எந்தவித பலாத்காரத் தையும் கையாளாமல் இந்த மாறுதல்களைச் செய்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பான் கூட மந்திரியாக இல்லாத ஒரு மந்திரி சபையை தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்து விட்டோமே! இது ஒன்று போதாதா நம்முடைய வெற் றிக்கு? அதுவும் எப்படிப்பட்ட ஆட்சி! இராமனை செருப்பால் அடித்து வெற்றி பெற்று வந்த ஆட்சி! இது என்ன சாதாரண காரியமா?

வேறு மதக்காரர் ஆளும் நாட்டில் அந்தக் கடவுள்களை இப்படிச் செய்து ஓட்டு வாங்க முடியுமா? இங்கு இராமனை செருப்பால் அடித்து ஓட்டு வாங்கி விட்டோமே! இது என்ன சின்ன காரி யமா? கடவுளாவது - வெங்காயமாவது என்று கருதும் அளவுக்கு மக்களுக்கு உணர்ச்சி வந்து விட்டதே!

மனிதன் ஒவ்வொரு துறையிலும் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் வருகிறான். இப்படி எல்லாத் துறைகளிலும் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டு விட்ட பிறகு, நம்மை தேவடியாள் மக்கள் என்னும் சூத்திர இழிவு ஏன் ஒழிய வில்லை? இதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லையே, ஏன்?

மானம் இல்லாததாலா? உணர்ச்சி இல்லாததாலா? அறிவு இல்லாததாலா? இல்லை - இல்லை. இவை எல்லாம் மனிதனுக்குத் தாராளமாக இருக்கிறது. இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?

மனிதன் பகுத்தறிவைக் கொண்டு எல்லாவற்றையும் சிந்திக்கலாம். ஆனால், கடவுள், மதம் விஷயங்களில் மட்டும் மனிதன் பகுத்தறிவைப் பிரயோகப்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவனைக் கொல்லலாம் என்று இருக்கிறது. இதை விட என்ன வேண்டும்?

இராமாயணத்திலே கூறப்பட்டு இருக்கிறது, பகுத் தறிவைப் பயன்படுத்தி கடவுள், மத விவகாரங்களில் எவன் தர்க்கம் செய்கிறானோ, அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று இராமன் கூறுவதாக ஒரு காட்சி வருகிறது. அந்த நிலைமைதான் இன்றைக்கும்.

காந்தியாரைத் தீர்த்துக் கட்டியதும் இதே கருத்துப் படிதான். சாஸ்திரத்தில் தீண்டாமை இருக்கிறது. அதில் கை வைக்க வேண்டும் என்று காந்தியார் முயற்சித்த போது சாஸ்திரப்படி அவரைத் தீர்த்துக் கட்டி விட்டான்.

இன்றைய அரசியல் சட்டம் கூட அப்படித்தான். அரசியல் சட்டத்தில் எதைத் திருத்தினாலும் 'அடிப்படை சட்டங்கள்' என்ற பகுதியை மட்டும் திருத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தத் 'தீண்டாமை' என்ற வார்த்தை இன்வர்ட்டடு கமாவுக்குள் போடப்பட்டுள்ளது. அப்படிப் போடப்பட்டு இருப்பதற்குக் காரணம், அதற்குத் தனி அர்த்தம் இருக்கிறது என்பதுதான்.

வருகிற டிசம்பர் 8, 9 தேதிகளில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு கூட்டப் போகிறேன். சட்டப்படி இருக்கிற நம்முடைய இழி நிலையை மாற்ற தீர்மானம் கொடுக்கப் போகிறேன். மாற்றினால் போச்சு, இல்லாவிட்டால் போராடத்தான் வேண்டும். போராடினால் கடுமையாகத் தண்டிப்பான். ஏழாண்டு வரை கொடுப்பான். ஏற்கத் தான் வேண்டும். நீங்கள் எல்லாம் ஜெயிலுக்கு வரத் தான் வேண்டும். எதெல்லாமோ செய்து நம்மை ஒழித் துக்கட்டப் பார்ப்பார்கள்.  அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இந்து இல்லை என்று எவன் ஒருவன் சொல் கிறானோ, அவனை விடுதலை செய்ய வேண்டும். அவனை அந்த இழிவுக்குள் புகுத்தக்கூடாது என்று கூறப்போகிறோம். அதற்கு இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

இந்த ஆட்சியை ஒழித்து விட்டால் மறுநாளே தீர்ந்தது. நம்முடைய இழிவை ஒழிக்க மறுநாளே ஏற்பாடு செய்து விடலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கான ஆயத்தமான மாநாடு தான் நடக்க இருக்கும் சென்னை மாநாடு. மாநாட்டிற்கு ஆண்களும் பெண்களுமாய் இதுவரை மாநாடுகளில் கூடாத அளவுக்கு வந்து கூடியாக வேண்டும். எந்தெந்த வகையில் உங்களது ஒத்துழைப்பு இருக்க முடியுமோ அவ்வளவும் இருக்க வேண்டும். பண வசதி உள்ள வர்கள் தாராளமாக உதவலாம். ஜெயிலுக்கு வர வாய்ப் புள்ளவர்கள் ஏராளமாக வரவேண்டும்.

முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம்.

பம்பாயில் சிவசேனைக்காரன் நம்மவர்களை அங்கு விரட்டவில்லையா?

அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது?

துணியவேண்டும். பதவிக்குப் போகிற நாலு பேர் களை அதற்கென்று விட்டு விடுவோம். மற்றவர்கள் நம் முடைய இழிவை ஒழித்துக்கட்ட முயற்சிக்க வேண்டும்.

நமக்கு பதவி வந்தால் போதாது - நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது. நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண் டும், நமது இழிவை ஒழித்தாக வேண்டும்.

இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன். எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக்கென்று போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கெதி என்ன? என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான். வர விரும்பு கிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்கப் போகிறீர்கள்?

மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா? அந்த மதிப்பைப் பெற எவ்வளவு பட்டாக வேண்டும்.

ஆகவே தோழர்களே! நாளைக்கு எனக்கு ஏதாவது என்றால் நம் கெதி அவமானகரமானதாகப் போய்விடும்; தலை எடுக்க முடியாது.

எனவே, நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந்தாக வேண்டும்.

உங்கள் பெயரை எல்லாம் பட்டியல் போட்டுக் கொடுங்கள். யார் யாரை எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எனக்காக, என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம். உங்களுக்காக - உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்.

(10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - 'விடுதலை' 12.11.1973)
'விடுதலை' 5.11.17

தமிழனுடைய கடவுளை பார்ப்பான் கும்பிடுகிறானா?



தலைவரவர்களே, தோழர்களே,

சிறை சென்ற தலைவர்களை பாராட்டுவதற்கு ஆக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் தலைவர்களை பாராட்டிப் பேசினவர்கள் அவ்வளவு பேரும் அரசியலில் காங்கிரஸ்காரர் செய்த கொடுமையை எடுத்துச் சொல்லியும், அவர்கள் ஒழிந்து விட்டதற்கு மகிழ்ச்சி அடைந்தும், இனி பார்ப்பனர் ஆட்சி தலை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெகு உருக்கமாகவும் உற்சாகமாகவும் பேசினார்கள். அவர்களது உற்சாகத்தை நான் பாராட்டுகிறேன். ஆனாலும் இன்றுள்ள நிலையில் பார்ப்பனர்களை அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விரட்டி விட முடியுமா? ஒரு சமயம் முடிந்து விட்டாலும் அதனாலேயே பார்ப்பனிய எல்லாக் கொடுமைகளில் இருந்து நாம் விடுதலை அடைய முடிந்து விடுமா?

பார்ப்பனியக் கொடுமை

உதாரணம் சொல்லுகிறேன். பார்ப்பன ஆதிக்கம் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி இந்த 30 மாத காலத்தில் செய்த கொடுமை அளவற்றது என்று நீங்களே இப்பொழுது எடுத்துக் காட்டினீர்கள். நமது கல்வியை அழிக்கக் குழி வெட்டி விட்டது. உத்தியோகத்திலுள்ள பார்ப்பனரல்லாதார்களை ஒழிக்கப் பல சூழ்ச்சிகள் செய்தது. பார்ப்பனர்களுக்கு ஆயிரக்கணக்கில் உத்தி யோகம் கொடுக்க 10 புதுவரிகளைப் போட்டு பணம் திரட்டிக் கொண்டது. அதற்காகப் பல கொடுமைகள் செய்து, பல இலாகாக்களைச் சிருஷ்டித்து, உத்தி யோகங்களைச் சிருஷ்டித்துக் கொடுத்திருக்கிறது. இதற்காக நமது பேரால் 6 கோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு இருக்கிறது. நம்மவர்களை - நான் உட்பட 1300 பேர்கள் - சிறையில் தள்ளிக் கொடுமை செய்தது. மற்றும் பல அட்டூழியங்கள் நடத்திற்று.

இந்த விஷயம் நம் நாட்டிலுள்ள ஆண், பெண், கூன், குருடு, மொண்டி, முடம் வரை எல்லோரும்தான் அறிந் திருக்கின்றனர். அதனால் துன்பமும் அடைகின்றனர். கிராமம் சந்து பொந்து எங்கும் இதே பேச்சாய் இருக்கிறது. இதை யாராலாவது மறுக்க முடியுமா? மறுப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு சமா தானம் சொல்லுகின்றேன். அதாவது, இம்மாதிரி பொது ஜனங்கள் பேசி ஆத்திரம் கொண்டிருப்பதால்தான் மந்திரிகள் செல்லுமிடங்களில், அதுவும் முதல் மந்திரி யும், முஸ்லிம் மந்திரியும் செல்லுமிடங்களில்கூட என்றாவது எங்காவது கறுப்புக் கொடி, போலீஸ் பந்தோ பஸ்து இல்லாமல் செல்ல முடியாமலும், 144 போட்டு எதிர்ப்புகளை அடக்கி போலீஸ் படை வைத்து ஊர் ஜனங்களை மிரட்டியும் அல்லாமல் எங்கும் மந்திரிகள் நடமாட முடியாமலும் இருந்து வருகிறது. இதுவே போது மானதாகும்.

இப்படியெல்லாம் இருந்து சமீப காலத்தில் நடந்த 5 ஜில்லாபோர்டு தேர்தல்களில் பார்ப்பன ஆதிக்கத் திற்கே பெருமிதமான வெற்றி ஏற்பட்டிருக்கிறது. தோழர் ஆச்சரியார் வைஸ்ராய், கவர்னர் ஆகியவர்களிடம் தனது வகுப்பாருக்கும், தனது ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் ஆதரவும் செல்வாக்கும் இருப்பதாகச் சொல்லி இந்தத் தேர்தலையே உதாரணமாகக் காட்டியதோடு, சட்ட சபையிலும் ஆணவமாகப் பேசி இவ்வளவு மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கையில் நாங்கள் எப்படி இந்தப் பதவிகளை விட்டுப் போவது என்று கேள்வி கேட்டிருக்கிறார். அவர் சொல்வதற்கு நாம் என்ன பதில் சொல்லுவது?  அவர்கள் தேர்தலில் செய்த சூழ்ச்சிகளும் நாணயக் குறைவான காரியங்களுமே காட்டப்பட்டால் போதுமானதாகி விடுமா? இனியும் அந்தச் சூழ்ச்சிகளும், நாணயக் குறைவுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நம்மிடம் என்ன இருக்கிறது?

இனி மேல்?

ஆகவே, இனி பார்ப்பன ஆதிக்க ஆட்சியின் கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் மாத்திரமே பொது மக்களிடம் சொல்லிக் கொண்டிருந் தால் போதாது. பல தடவை எடுத்துச் சொன்ன பிறகும்தான் இந்தப் பலன் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால், இனியும் தோழர்கள் ஆச்சாரியாரையும், சத்தியமூர்த்தியாரையும் பற்றிய குறையையும், அவரது ஆட்சி கொடுமை யையும் மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு பயனும் ஏற்படாது. ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் அரசியலில் இல்லாத காலத்தில் நாம் என்ன நல்ல யோக்கியதையில் இருந்து விட்டோம்? இவர்கள் போய் விட்டால், இவர்களது ஆட்சியை ஒழித்து இவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டால் இனி வேறு ஆச்சாரியும், சத்திய மூர்த்தியும், சிறீநிவாச சாஸ்திரியும் வர மாட் டார்களா அல்லது உற்பத்தி ஆக மாட்டார்களா என்று கேட்கிறேன்.

ஆகவே, இனி நாம் ஏதாவது பயன்படத்தக்க வேலை செய்ய வேண்டுமானால் ஆச்சாரிகளும், சாஸ்திரிகளும் விரட்டப்படுவது மாத்திரம் பயன்படாது. சிறிதும் பயன்படாது. இனி மேலும் ஆச்சாரியார், சாஸ்திரிகள் உற்பத்தி ஆகாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உற்பத்தி ஆவதற்கு நாம் தான் உரம் போட்டு, தண்ணீர் விட்டுக் காப்பாற்றிக் கொடுக்கிறோம். வெள் ளாமை செய்து பயிர் வளர்த்துக் கொடுத்து விட்டு விளைந்த விளைவால் நாம் துன்பப்படுகிறோமே என்று சொல்லுவது முட்டாள்தனமா இல்லையா என்று கேட்கின்றேன்.

அஸ்திவாரத்தில் கை வைக்க வேண்டும்

ஆதலால், அஸ்திவாரத்தில் அடி வேரைப் பறித்து வெந்நீர் ஊற்றி, அந்தப் பயிர் முளையிலேயே கருகிப் போகும்படி செய்யவேண்டும், அனாவசியமாகப் பார்ப்பனர்மீது குறை சொல்லி வருத்தப்படுவதில் பய னில்லை. அவர்கள்மீது  ஒரு தப்பிதமும் இல்லை. நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி நமக்கு இல்லாத தப்பிதத்தைத் திருத்திக்கொள்ள வேண் டும். நம்மைப் பார்ப்பனிய பிளேக்கும், உளமாந்தையும் அழிக்காமல் பார்த்துக்கொள்ள நமக்குச் சக்தி இல்லை.  நோய்க்கு இடம் கொடுத்துவிட்டு நோய் வந்த பிறகு மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில் நம் வாழ்நாள் பூரா வையும் கழித்துக் கொண்டிருப்பதைவிட நோயினால் செத்துப் போவதே மேல் என்பேன்.

ஆகையால், நோயே ஏற்படுவதற்கு வகை இல் லாமல் செய்ய வேண்டும் இனி அதுவும் நமது வேலை யாய் இருக்க வேண்டும்.

ஆரிய மதம் காரணம்

இன்று இப்பார்ப்பன விஷநோய் நம் நாட்டில் பெருகியதற்கும், நம் மக்கள் அதற்கு பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல. நாம்தான் நம்முடைய அறிவீனம் என்னும் அசுத்தத்தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும். தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ, ஆரியனைத் தமிழன், என்று தன் னுடைய நாட்டான் தோழன் என்று  கருதினானோ அன்றே தமிழனுக்கு உள மாந்தையும், பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும், வீரமும், அறிவும், ஆற்றலும் அடி யோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் - ஆண் பெண் அடங்கலும் அடிமை, வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும் படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட் டன. அந்த ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின. அந்த - அதாவது தமிழன் ஏற்றுக் கொண்ட ஆரிய மதமும், அவன் ஏற்றுக் கொண்டு நடக்கும் ஆரிய மதக் கொள்கையும்தான் இன்று ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்களையும், டாக்டர் ராஜன்களையும், சத்தியமூர்த்திகளையும், வரதாச்சாரி ஆலாசியம் என்கின்றவர்களுமான நோய்ப் பூச்சிகளையும், நோய்களையும் உற்பத்தியையும் செய்து வருகின்றன.

தமிழன் ஆரிய மதத்தைவிட்டு வெளியே வந்தாலொழிய தமிழன் வேறு, ஆரியன் வேறு; தமிழன் மதம், கடவுள், கலைகள், வேறு; ஆரியன் மதம், கடவுள், கலை, சாஸ்திரங்கள் வேறு என்ற உணர்ச்சி வந்து உண்மை அறிந்தாலொழிய இந்த பார்ப்பனிய உளமாந்தை, பிளேக் நோய்களிலி ருந்து தப்ப முடியாது; அந்நோய்ப் பூச்சிகளையும் அழிக்க முடியாது. ஆச்சாரி யாரும், சத்தியமூர்த்தியாரும் எங்கிருந்து தொப்பென்று குதித் தார்கள் அவர்கள் என்ன ராமன் கிருஷ்ணன் போல் ராட்சதர்களை (தமிழர்களை) அழிக்க அவ தாரமெ டுத்தவர்களா? இல்லை இல்லை. அவர்கள் தகப்பன்மார்களுக்கு நாம் திதி, திவசம், சங்கல்பம், அஷ்டோத் தரம், சகஸ்ரநாமம், அபிஷேகம், உற்சவம், கல்யாணம், சாந்திமுகூர்த்தம், எட்டு எழவு, கல்லெடுப்பு என்னும் பேரால் அழுத பணங்களும் காசுகளும், அரிசி, பருப்பு, செருப்பு புடவைகளும் அல்லவா இன்று ஆச்சாரியார், சாஸ்திரியார், அய்யங்கார், அல்லாடியார், மூர்த்தியார் என்கின்ற விஷக் கிருமிகளாக நம்மை அரித்து தின்கின்றன என்று கேட்கிறேன்.

தமிழனுக்கு மானம் வேண்டும்

தமிழனுக்கு இந்த இடத்தில் தெளிவும் மானமும் ரோஷமும் ஏற்பட்டாலல்லவா இவ்விஷ நோயிலிருந்து இனியாவது தப்ப முடியும்? வீணாக பார்ப்பனத் தோழர் களை குறை சொல்லுவதில் பயன் என்ன என்றே மறுபடியும் கேட்கிறேன்.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  கட்சி ஏற்படுத் துங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் ஸ்தாபனத்தைப் பலப்படுத்துங்கள். இந்த அஸ்திவார வேலையையும் செய்யாமல் தமிழன் ஒரு நாளும் மானமுள்ள மனிதத் தன்மையுள்ள தமிழனாக வாழ முடியாது என்பது எனது பலமான உறுதி.

ஆத்திரமுண்டு - ஆனால்?

தமிழர் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சியிலும் உள்ள அனேக தமிழர்களை எனக்குத் தெரியும். பார்ப்பனர்களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சலாமா என்கின்ற ஆத்திரத்தோடு அனேகர் இருக் கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அத்தமிழர்கள் தங்கள் வீட்டில் பெண்டு பிள்ளைகளுடன் பார்ப்பான் காலைக் கழுவின நீரை உட்கொண்டால்தான் மோட்சம் உண்டு; அவன் காலில் தங்களது குடும்ப மக்களின் உச்சித் தலை பட்டால்தான் ஜன்மசாபல்யம் ஆகும் என்று கருதி இருக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இக்காட்சியை சென்னையில் அதிகமாகக் காணலாம்.

சனாதனப் பார்ப்பனர்களோடு நான் பேசினேன். என்பதற்கு ஆகவும், உண்மையான சனாதனிகள் தாங்கள் தங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப் படையாய்ச் சொல்லி விடுகிறார்கள் என்று பாராட்டி யதற்கு ஆகவும் என்மீது கோபித்துக் கொண்ட சென்னைத் தமிழர்களும் - பார்ப்பனரல்லாத தலைவர் களும், பலர் தங்கள் வீட்டில் இன்றைக்கும் பார்ப்பான் வந் தால்தான் வீடு புனிதமாகுமென்றும் அவன் காலில் தங்கள் தலைமுட்டினால்தான் தங்கள் பெற்றோர்கள் மோட்சமடைவார்கள் என்றும் கருதிக் கொண்டிருக்கிற அநேக முட்டாள்களைப் பார்க்கிறேன்.

நாம் இங்கு கிளர்ச்சி செய்து ஒரு ஆச்சாரியையும், ஒரு சாஸ்திரியையும், ஒரு அய்யரையும் ஒழிப்பதானால் நமது மக்களில் ஏழை முட்டாள்களும், பணக்கார மடையர்கள் கற்றறிந்த மூடர்களும் ஆயிரக்கணக்கான ஆச்சாரியும், அய்யரும், சாஸ்திரியும் உண்டாகச் சடங்குகள் மூலம் நன்றாய் உழுது, தட்சணை அரிசி பருப்பு சாமக்கிரியைகள் மூலம் நல்ல எருப் போட்டு அவர்கள் கடவுள்களையும், பண்டிகைகளையும் கொண் டாடுவதன் மூலம் நல்ல மணியான விதை விதைத்து ஜாதிகள் மூலம் பயிர்களைக் காப்பாற்றி ஆச்சாரி, சாஸ்திரி அய்யர் அய்யங்கார் என்ற நல்ல அறுவடை உண்டாகி குதிர் நிரப்பும் படி செய்து விடுகிறார்கள். இந்த மடஜனங்களைக் கொண்ட தமிழர் சமுகம் என்றுதான் மானமடையும் - என்று தான் மனிதத் தன்மை அடைந்த மனிதனாக  வாழ முடியும் என்பதை தயவு செய்து சற்று சிந்தித்துப் பாருங்கள்; வீணாகப் பார்ப்பனர்கள்மீது குறை கூறாதீர்கள். அவர்களைத் துவேஷிக்காரர்கள். அவர்களால் நாமடையும் கொடுமைக்கு அஸ்திவாரம் இன்னது என்று கண்டுபிடித்து அதை அடியோடு அழிக்க முயற்சி செய்யுங்கள் என்பதற்கு ஆகத்தான் இதைச் சொல்லுகிறேன் ஒழிய வேறில்லை. இதை 15 ஆண்டுகளாகவே சொல்லி வருகிறேனே ஒழிய, இன்று மாத்திரம் அல்ல. நம் ஈன நிலைக்கு உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். இன்னும் சிறிது நாளில் தீபாவளி என்னும் ஆரியப் பண்டிகை வருகிறது. அத்தீபாவளிக் கும் கலப்பில்லாத தமிழனுக்குப் பிறந்த தமிழனுக்கும்  என்ன சம்பந்தம்? தமிழர் சமயத்திலோ தமிழர் கலை களிலோ சங்க இலக்கியங்களிலோ தமிழன் தீபாவளி கொண்டாடியதாக ஆதாரமிருக்கிறதா? கொண்டாடுவ தற்குத் தேவை இருக்கிறதா?

தமிழன் சாஸ்திரமும், கடவுளும்

பாரதமும், ராமாயணமும், கந்த புராணமும், இவைகளில் வரும் கதைகளும் கடவுள்களும் மற்றும் அவை சம்பந்தமான பண்டிகை விரதங்களும் தமிழ னுக்குச் சம்பந்தப்பட்டவையா? இவை தமிழனுடைய கலைகளா? தமிழர் சமய சாஸ்திரங்களா? என்று கலை யுணர்ந்த சகல வல்லப பண்டிதர்களைக் கேட்கிறேன்.

ராமனும், கிருஷ்ணனும், சுப்ரமணியனும், கணபதியும், அவர்கள் அப்பன்களாகிய - லட்சுமி புருஷனான மகா விஷ்ணுவும், பார்வதி புருஷனான பரமசிவனும் தமிழர்களுடைய கடவுள்களா என்று கேட்கிறேன்.

தமிழர்களுடைய கடவுளானது முஸ்லிம்களுடைய கடவுள் போலவும், கிறிஸ்தவர்களுடைய கடவுள் போலவும் உருவம் குணம் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டும் தோற்றம் ஆகியவை இல்லாதது என்றல்லவா தமிழர் கலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். வேண்டுமானால் அப்படிப்பட்ட கடவுளையல்லவா தமிழ் மக்கள் தொழவேண்டும்.  பிரார்த்திக்க வேண்டும்.

மனித உருவம், அதுவும் பார்ப்பன உருவம் 2 பெண்டாட்டி பல பெண்டாட்டி, மற்றும் வைப்பாட்டி, தாசி, தனக்குப் பிறந்த குழந்தைகள், தாசிக்குப்பிறந்த குழந்தைகள், விபசாரத்தில் பிறந்த குழந்தைகள் அவை களும் கடவுளாகவும்; தினமும் கட்டிலில் அம்மனுடன் படுத்து உறங்கும் கடவுளும், அதற்காக சீனா கற்கண்டும், சாரப்பருப்பு பாதாம் பருப்பு சத்துக் கலந்த சுண்டின பாலையும் தன் கட் டிலடியில் வைத்துவிட்டுப் போகும் படி குருக்களுக்குச் சொல்லும் கடவுளும் ஒரு மணி நேரம் பொறுத்து அதே குருக்கள் வந்து அதை எடுத்து குடிக்கப் பார்த்திருக்கும் கடவுளும் தமிழனுடைய கடவுளாகுமா என்று கேட்கிறேன்.

ராமனும் கிருஷ்ணனும், கந்தனும் பட்சி மீதும் மிருகம்மீதும் சவாரி செய்து கொண்டிருக்கும் கற்பனை உருவங்களும், மற்றொருவனும் தமிழனுக்கு எப்பொழுது எப்படி கடவுளானார்கள் என்றும், நமக்கு உருவ முள்ள பெண்டு பிள்ளை உள்ள கடவுள்கள் எப்படி வந்தன. எப்பொழுது வந்தன? இம்மாதிரி கடவுள் வைக்கப்பட்டிருக்கும் கோவில் களுக்கு நல்ல ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஏன் போக வேண்டும் என்றும் நான் முட்டாள்களைக் கேட்கவில்லை. பட்டை நாமமும் சூட்டுக்கோல் விபூதியும் அணிந்து வெட்கமில்லாமல் வெளி யில் தலை காட்டித் திரியும் சமயப் பண்டிதர்களைக் கேட்கிறேன். இக் கூட்டத்தால் அல்லவா தமிழ் மக்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக பாவிக்கப்பட்டான். இதை ஒழியுங்கள் முதலில். பின்னால் தானாகவே தமிழனுக்கு மானம் முளைக்கும் என்கிறேன். இதனால் நான் சமயத் துரோகியா, கடவுள் துரோகியா என்று கேட்கின்றேன். நான் சொல்வதெல்லாம் சமயத்துறையில் இந்துமுஸ்லிம் என்ற பிரிவு இருப்பது போல ஆரியன் தமிழன் என்று பிரிவு இருக்க வேண்டு மென்று ஆசைப்படுகிறேன்.

தீபாவளியும் நரகாசூரனும்

நரகாசூரன் என்பவன் யார்? அவன் செத்ததால் யாருக்கு லாபம் ஏற்பட்டது? யாருக்கு லாபம் ஏற்பட் டது? யாருக்குக் கேடு ஏற்பட்டது? அதற்கு ஆக தமிழன் ஏன் கொண்டாட வேண்டும்? அதற்கு ஆக பார்ப் பானுக்கு சங்கல்பத்திற்கும் தட்சணைக்கும் தமிழன் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? என்று ஆராய்ந்து பார்க்கும்படி தமிழர்களை வேண்டிக் கொள்வதற்கு ஆகவே இவைகளைப்  பேசுகிறேன். எங்காவது ஒரு பார்ப்பான் மதுரை வீரனையோ, காத்தவராயனையோ கும்பிடுவதைக் காண்கிறீர்களா? பச்சையம்மனையோ, மாரியம்மனையோ பண்டிகை கொண்டாடுவதைப் பார்க்கிறீர்களா? நாம் ஏன் அவர்களுக்கு மாத்திரம் உயர்வையும் நமக்கு இழிவையும் கொடுக்கும் கடவுள்களையும், பண்டிகைகளையும், சடங்குகளையும் கொண்டாட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.

மானமுள்ள தமிழர்கள் இனி தங்கள் வீட்டில் ராமன் சீதை, கிருஷ்ணன், ருக்மணி, ரங்கநாதன், கந்தன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியன், பார்வதி, பரமசிவன் முதலிய உருவப் படங்கள் தொங்கவிடக் கூடாது என்றும், அக்கதைகளையும் புஸ்தகங்களையும் தங்கள் கலைகளாக சமய ஆதாரங்களாக கொள்ளக்கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.

பார்ப்பன ஆதிக்க ஆட்சி தற்காலமாக ஒழிந்து விட்டது. இனி பெரிதும் நமக்கு இந்த வேலையும் இருக்க வேண்டும். பார்ப்பன ஆட்சி வந்தால் அப்புறம் மறுபடியும் பார்த்துக் கொள்ளலாம். அதற்குள் நாம் உண்மைத் தமிழர்களாகி ஆரிய சம்பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆரியர் வேறு - தமிழர் வேறு என்பதை உணர்ந்து தமிழ்நாடு தமிழருக்கு ஆக்கும் சுய மரியாதைப் பாதையில் நடப்போமாக.

(03-11-1939 அன்று ஈரோடு தியாகராயர் கட்டடத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு பாராட்டு கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 12.11.1939
-விடுதலை,12.11.17