வெள்ளி, 30 அக்டோபர், 2015

சோதிடம் - தந்தை பெரியார்
இந்தியாவில் இந்துக்கள் என்ப வர்கள் சாமி ஆடுதல், வாக்குச் சொல் லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவை களைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ஜென்மம் உண் டெனல், இவை முத லாகிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும் எதிரிகளின் கேட்டிற்கு என்றும், எப்படித் தங்கள் பணத்தையும் நேரத் தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்துப் பணத் தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ் வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பிராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க்கிறோம்.
சாதாரண மாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக் களின் பேராசைக்கும் முட்டாள்தனத் திற்கும்  சரிபங்கு தாயாதிகளே யாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவ னுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும் கிரகதோஷ பரிகாரத்திற்குச் சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங் களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட  அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால்  ஏற்பட்ட பயத் திற்காகவும், ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்கக்  கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவகிரகங் களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது  ஒரு கிரகத்திற்கோ, ஒரு சாமிக்கோ, அர்ச்சனை எள்ளு, பருத்திக் கொட்டை முதலிய தானம் விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகிய வைகளையும், ஏதாவது புண்ணியப் புராணம்  படித்தல் முதலி யவைகளையும் சொல்லிவிடுவான். இவை களை  எல்லாம் செய்வதால் மந்திர வாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக் குச் சேர்ந்து விடும். இந்தப் படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷ யத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவை களைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப் போம்.
அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷ யங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது  விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முத லானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே  மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேர மாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக் குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண் டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டு பிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக் கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப் பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவை களின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண் களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகிய வைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக் கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக் கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தைகளுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக் குச் சரியான நேரம் கண்டு பிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென் பதாகவே காணலாம். சாதாரணமாய் ஒரு ஜாதகம்  என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சம யத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை  காலை சுமார் 10  மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,
இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத் திற்காக  மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி  இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
தவிர இந்தப் பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரட்சிக்கிற கடவுள்களின் தன்மை யால் ஏற்படுவதா? அல்லது, முன் ஜென் மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற் படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற் சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டி யவைகளில் அதுதவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டு போகும். கிரகங்களின் தன்மையினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜென்ம கருமத் தின்படி  என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். தலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற் றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர  இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு  அவசியமான பிறந்த நேர லக்கினத்தால்  ஏற்பட்ட கிரகத் தன்மை  பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன  காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று  ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத் திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது  உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண் டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேக மில்லை. ஏனெனில் ஜாதகத்தில்  ஏற்க னவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்.
இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை  மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு  இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.
நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?
ஜாதகப்பலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில்  பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந்தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில்  இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச  நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக  ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு  அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடி யோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

- குடிஅரசு - தலையங்கம் - 06.07.1930
-விடுதலை,21.6.15

இராமாயண ஆராய்ச்சி வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்

இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.
மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.
- தந்தை பெரியார்
-விடுதலை,19.6.15


ஜாதி காரணமாகவே ஒருவன் உழைக்காதிருக்கவும் மற்றொருவன் உழைக்கவும் ஏற்படுகிறது



- தந்தை பெரியார்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப் பானும் இல்லை; பறையனும் இல்லை. அவர்களுக்கு இந்த வார்த்தை வாயில் நுழைய மாட்டேன் என்கிறது. அந்த நாடுகளிலே என்னதான் அடக்கு முறைகள் இருந்ததாகச் சொல்லப் பட்டாலும் அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது; இந்த நாட்டைப்போல் அதை நினைத்தாலே கடவுள் கண் ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.
இங்கத்திய மகன் அறிவு பெற்ற வனாக இல்லை; கிணற்றுத் தவளை களாகத்தான் அவன் வளருகிறான். இந்த  நாட்டு மக்களிலே 100க்கு 85 பேர்கள் கல்வியறிவில்லாத தற்குறி மக்கள். இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றம் அடையும்படியாக ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டால் தான் முடியுமே தவிர, அதை  விட்டு விட்டு இதெல்லாம் பிற்போக்கு  சக்தி என்ற பல்லவி பாடிக் கொண்டு திரிவதில் எந்தவித பலனும் இல்லை; ஏற்படவும் ஏற்படாது.
மார்க்ஸ் லெனின், ஏஞ்செல்ஸ் முதலியவர்கள் இந்தப்படி தான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்முடைய வாதம் என்ன வென்றால் இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏஞ்சல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், இருக்கிற சமுதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது தெரியாது. அவர்கள்தங்களுடைய நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்புகளுக்கும், அவற்றின் குறைகளுக்குப் பரிகாரம் ஏற்படுகிற மாதிரியில் கொள்கைகள், திட்டங்கள் ஏற்படுத்தினார்களே தவிர, இந்த நாட்டைப் பற்றி அவர்கள் நினைக்கவுமில்லை; தெரியவும் தெரி யாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைமுறையோ இச்த நாட் டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.
ஸ்டாலின் இறப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஒருமுறை சொன்னார், அதாவது, நாம் நினைக்க முடியாத, அறிந்திருக்க முடியாத சமுதாயக் கஷ் டங்கள் இந்தியாவிலே இருக்கின்றன. எனவே அந்தச் சமுதாயக் கஷ்டங்களை ஒழிக்காமல் வெறும் பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவதால் இந்தியாவில் கம்யூனி சத்தைக் கொண்டுவந்து விடமுடியாது, என்பதாகச் சொல்லியிருக்கிறார். இது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. அப்படி அவர்களுக்கு இந்த நாட்டின் நிலைமை, கஷ்டம் அமைப்புகள் தெரியாது. அவர்களுக்கு  இந்த மாதிரியான ஒரு அமைப்பு ஒரு நாட்டிலே இருக்கும் என் பதே அதிசயமாக இருக்கிறது. அறிந்த பிற் பாடுதான் அவர்களும் சொல்லுகிறார்கள் நம்மைப்போலவே.
உண்மையாக இந்த நாட்டுக் கம்யூனிஸ் டுகள் நினைக்க வேண்டும்: அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும்; முதன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரசாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான் என்பதை. 30 வருடமாக இந்த அடிப் படையில் தானே  நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொரு ளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லு கிறார்கள். நாங்கள் பொருளாதாரத் துறை யிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியது தான். ஆனால் சமுதாயத் துறையிலே இருக்கிறபேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேத மொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல; ஆனால் சமுதாயத் துறை பேத ஒழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக்கொள்வதில்லை. இதைப் பற்றிப் பேசுவதே பாபம் என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று கருதுகிறார்கள். பிற்போக்குச்சக்தி என்று சொல்லுகிறார்கள்.
மற்றும் சொல்லுகிறேன்; தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்குச் சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றி யமைத்தாக வேண்டும்; ஆனால் சமுதாயப் புரட்சியைச் சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும், மக்கள் உள்ளத்திலே. இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி பிரத்தியட்ச நிலையை மக்களுக்கு உணர்த் தினால் போதும்.  நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமுதாய அமைப்பை, இன்றைய அமைப்பு சர்க்கார் இருக்கும் போதே மாற்றிவிட முடியும், மக்கள் பகுத்தறிவு பெறும்படி செய்வதன் மூலமாக. 30 வருடங்களுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம் திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவமும், திமிரும்? 30 வருடங்களுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! 30 வருடங் களுக்கு  முன் எவ்வளவு தேர், திருவிழா நடைபெறும்! சாமிக்கு எவ்வளவு கூட்டம் சேரும்! இன்றைய தினம் சாமி ஊர்வலத் தின் போது பார்ப்பான், தூக்குகிறவர்கள், தீவட்டி பிடிப்போரைத் தவிர வேறு யாரும் காணுவ தில்லையே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத் தறிவு உணர்ச்சி ஏற்படும் படியாகச் செய்த தன் காரணமாக நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. எதற்குச் சொல் லுகிறேன், சர்க்காரைக் கவிழ்க்காமலேயே ஒழிக்காமலேயே மக்கள் உள்ளத்திலே உணர்ச்சியை அறிவை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த சமுதாயப் புரட்சியைச் செய்யமுடியும் என்பதற்கு  ஆகவே சொல்லுகிறேன்.
முதலில் இந்தக் காரியத்தைச் செய் வோம்; பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட  முடியும்; பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவராமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போ மானால், தானாகவே பொருளாதார உரிமை வந்து விடும். ஆகவே இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.
இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே (மாவட்டத்தையே) எடுத்துக் கொள்ளுங்களேன்; யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன்  பார்ப்பான்; அதற்கடுத்த படியாக பணக்காரன், நிலைமுடையோன் - சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படு கிறவர்கள். அதற்கடுத்த படி தூக்கியவன் தர்பார் என்பது போல  இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லை யென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற வனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே யில்லை. இப்போது சொல்லுங்கள்: பணக் காரன் - ஏழை என்கிற பாகுபாடு உயர்ஜாதி தாழ்ந்தஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா இல்லையா?......... என்று.
இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின்  எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத் திலும், பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால் தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம்.
இன்னமும் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன் னேற்றம் காண முடியாது என்று உறுதி யாகக் கூறுவேன்.
(மன்னார்குடியை அடுத்த வல்லூரில் 27-4-1953 -ல் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: விடுதலை  5-5-1953)

  -விடுதலை,7.6.15
.

கோர்ட்டில் பிரமாணம் - பெரியார்-சித்திரபுத்திரன்-


மேஜிஸ்ட்ரேட்: (சாட்சியைப் பார்த்து) உன் பேரன்ன?
சாட்சி: என் பேர் சின்னசாமிங்கோ.
மே: உன் தகப்பன் பேர் என்ன?
சா: என் தகப்பன் பேர் பெரியசாமிங்கோ.
மே: உன் வயது என்ன?
சா: என் வயசு 36ங்கோ.
மே: உன் மதம் என்ன?
சா: இந்து மதமுங்கோ.
மே: உன் ஜாதி என்ன?
சா: சாதியா?
மே: ஆமா.
சா: சாமி குடியான சாதிதாங்கோ.
மே: சரி, சத்தியமாய்ச் சொல்கிறேன் என்று சொல்லு.
சா: சத்தியமாச் சொல்றேனுங்கோ.
மே: நீ இப்ப சத்தியம் செய்திருக்கிறே, உண்மையைச் சொல்ல வேணும், எது உனக்கு நல்லா தெரியுமோ எதை நீ கண்ணில் பார்த்தாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும் தெரியுமா?
சா: சாமி அப்படியே ஆகட்டுங்கோ. நான் நேர்லே பார்த்ததைத்தான் சொல்லணுமே? காதுலே கேட்டதைக்கூட பெரியவங்க சொன்னதைக்கூட சொல்லக் கூடாதா சாமி?
மே: நேரில் பார்த்ததை மாத்திரம் சொல்லு தெரிந்ததா?
சா: தெரிஞ்சிகிட்டேஞ் சாமி. அப்பளையே (அப்பொழுதே) நாஞ் சொன்னதெயெல்லாம் அடிச்சுப் போடுங்கோ.
மே: எதை அடிக்கிறதுடா?
சா: சாமி பின்னே நாஞ் சொல்லல்லே, எம்பேரு எங்கப்பம் பேரு எம்பட வயசு அதல்லாந்தா.
மே: அதையெல்லாம் நான் எதற்காக அடிப்பது?
சா: எசமாங்கோ "நேர்லே பார்த்ததுதான் சொல்லணு, காதுலே கேட்டது சொல்லக் கூடாது, சத்தியம் பண்ணி இருக்கிறே, பாக்காதது சொன்னா தெண்டிச்சிப் போடுவே" எண்ணு சொன்ணீங்களே. நம்முளுக்கு எனத்துக்குங்கோ அந்த வம்பெல்லாம்.
எங்கப்பெ என்னைப் பெக்க பாடுபட்டதெ பாத்தனா? எங்கம்மாதா என்னைப் பெத்ததெ பாத்தனா? எம்பட வயசைத்தான் நானு எண்ணிகிட்டு வந்தெனா? நமக்கு நேர்லெ ஒணுந் தெரியாது சாமி. நானும் ஒரு எளவையும் பாக்கில்லை. அடீங்கோ! அடீங்கோ!! எளிதினதை எல்லாம் அடிங்கோ. அல்லாத்தையும் அடிங்கோ.
மே: அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் இல்லை. கேசைப் பற்றித்தான் கேட்கப் போகிறேன். அதைப் பற்றி நீ பார்த்ததைச் சொல்லு.
சா: அந்த எளவே நமக்கு வாண்டாம். நம்மொ பாக்காத சங்கதி நம்மாலெ ஒண்ணுஞ் சொல்ல முடியாது. அப்பறம் நாளைக்கு ஒருத்தெ கேப்பானுங்கோ, எதிரி வக்கீலு உனக் கெப்படி தெரியும் எம்பான். அப்பரம் கடசீலே எல்லாம் தகராரா வந்து சேரும். அடீங்கோ! அடீங்கோ!! நாஞ் சொன்னதை யெல்லாம் அடீங்கோ!!! இல்லாவிட்டா நாம் போறே வெளியிலே.
மே: டேய் என்ன? ரம்ப குறும்பு பண்ணுகிறாய். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, இல்லாவிட்டால் உன்னை தண்டித்து விடுவேன். நீ யென்ன பலே போக்கிரியாய் இருக்கிறயே.
சா: இல்லைங்க சாமி! நீங்கத்தானே பாத்ததெச் சொல்லூண்ணு சொன்னீங்கோ!
மே: உஸ். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.
சா: சரி கேளுங்க சாமி. நாம் பாத்ததையும் கேட்டதையும் சொல்லிப்புட்டு போறேன்.
மே: இந்தக் கேசில் உனக்கு என்ன தெரியும்?.
சா: நான் கடவீதிக்குப் போனே, போனனா? கருப்பன் சுப்பனெ அடிக்கப் போனான். அப்போ கருப்பந் தம்பி "அடிடா சுப்பனை வந்தது வரட்டும். மேசத்திரட்டு சுப்பய்யனுக்கு 100 ரூ கொடுத்தா பேசாத உட்டுடுறான்" எண்ணு சொன்னான். கருப்பந் தம்பி ரங்கன் "அடிடா பார்க்கலாம் மேசத்திரட்டு பொண்டாட்டி பாகிரதிகிட்டே 200 ரூ கொடுத்து உன்னை ஆறு மாசம் தண்டிக்கச் சொல்லி மண்ணு செமக்க வைக்கிறேம் பாரு. மின்ன எத்தனையோ தடவை கொடுத்து இருக்கிறேன்" எண்ணு சொன்னா.
பெரிய காத்தடிச்சது கண்ணுலெ மண்ணை ரப்ராப்லெ இருந்ததுங்கோ. கண்ணெ இருக்கி மூடிக்கிட்டே. அப்பறம் என்ன நடந்ததுண்ணு தெரியாதுங்கோ. இப்ப இரண்டு பேரும் பணத்தை வச்சிகிட்டு எசமாங்க ஊட்டுலே காத்து கிடக்கிறாங்களாம்! அம்புட்டுத்தா எனக்குத் தெரியுஞ் சாமி. இதை எளுதிக்கிங்கோ அப்பறம் என்னமோ பண்ணிக்கிங்கோ.
மே: என்ன உளறுகிறாய்?
சா: நானா உளர்ரே. ஊர்லெ சாமி அல்லாரும் அப்படித்தா பேசிக்கிறாங்கோ. என்ன பண்ணுனாலும் மேசத்திரட்டுக்கு பணம் கொடுத்தா உட்டுடுவாங்கோண்ணு கொஞ்சம் பேறா பேசராங்கோ. மேசத்திரட்டு பொண்டாட்டிகிட்டே பணங் கொடுத்தா ஆரையும் தண்டிக்கப் பண்ணலாமுண்ணு பேசராங்க. அம்புட்டுத்தான் நம்முளுக்குத் தெரியும். நா ஒண்ணும் ஔரலே.
கடைசியாக மேஜிஸ்ட்ரேட்டு ஒன்றையும் எழுதிக் கொள்ளாமல் சாட்சியை அதட்டினதற்கு ஆகவும் மரியாதை இல்லாமல் பேசினதற்கு ஆகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கேசை ராஜி செய்துவிடும்படி கெஞ்சி சாட்சியை வீட்டிற்கு வரச் சொன்னார்.
(1.9.1935 குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய  சுவையான உரையாடல்)
-விடுதலை,29.5.15

வெள்ளி, 2 அக்டோபர், 2015

சித்திரகுப்தன் -வினா விடை-2


வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?
விடை: நமது மதமும் ஜாதியும்.
வினா: நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள், இதற்கு காரணம் என்ன?
விடை: மதமும், ஜாதியும்
வினா: நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராகிக் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?
விடை: வினையின் பயன், அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்துவந்த “பாவமானது” அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்குகிறார்கள் அதற்கு யார் என்ன செய்யலாம்.
வினா: எந்த விதமான விபச்சாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
விடை: வெளியார்க்கு தெரியும் படியாகச் செய்த விபச்சாரம் குற்றம் சொல்லத்தகுந்ததாகும்.
வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
வினா: உண்மையான கற்பு எது?
விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு
வினா: போலி கற்பு என்றால் எது?
விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ, பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாத வனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.
வினா: மதம் என்றால் என்ன?
விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக்கட்டுப் படுத்துவதும் தான் மதம்.
-விடுதலை,4.9.15

விபச்சாரமும் ஜாதியும்



பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர் களுக்குள் ஆரியக்கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் களுக்குள் மாத்திரம் தான் கடவுளால் கிருஷ்டிக்கப்பட்டது என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இவை முறையே ஒன்றுக்கொன்று, தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பதுமிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும்.
இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக்கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம்.
அதாவது ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத் தாரும் தங்களில் ஜாதிமுறைதவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்ற தென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.
அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய், இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சமஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன. அந்த விபரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக் கின்றோம்.
ஆகவே அதில், உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும், என்று சொல்லில் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் என்னப்படுபவர்களே பஞ்சம் ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும் பிராமணன் சத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இவர்களில் இந்தப் படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி சிற்றரசு, மந்திரித்துவம் முதலிய பதவிகளில்  இருப்பவர்களாயிருந்தால்  அவர்களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்காகாதாம், சுப்ரபோதகம், பிரம்ம புராணம் வைகாநசம், மாதவியம், சாதிவிளக்கம், என்கின்ற நூல்கள் என்றும், குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தவிர மேல்கண்ட பிராமாணஜாதி ஆண், சத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவனேவரையும் குறிப்பிடத் தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும்  சோரத்தால் பிறந்த பிள்ளைகள்  குயவர் என்றும், நாவிதர் என்றும், குறிக்கப்பட்டிருக்கின்றது. அது போலவே பிராமணன். சூக்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரசவர், அதாவது செம் படவர் என்றும் சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுகர், என்றும், குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிராமணப்பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடபட்டி ருக்கின்றன.
பிராமண குலப்பெண்களுடன் சண்டாளர் கூடிப்பிறந்த பிள்ளைகள் சருமகாரர். அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சத்திரியகுலப் பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதாவது தங்கவேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும்  கூறப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி கீழ்மேல் ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில், அயோவகச் சாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த, பிள்ளைகள் பார்த்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த படியே இப்போது உள்ள சாதிகளையெல்லாம குறிக்கும்படியாகவே இன்றும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.
இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி அதாவது அபிதான கோசம் அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகயும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல்கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும்,
விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டடவர்கள் என்றே கூறப்பட்டிருக் கின்றன. செட்டியார் மார்களையும், ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது.
ஆகவே ஜாதியை கட்டிக்கொண்டு அழுவது இவ் விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.
உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொற்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து அதை நம்மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.
(குடிஅரசு, 1930)

மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே. புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழடைய விரும்புகிறான்... ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையைப் பின்பற்றுகிறான்.
மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்கு முயற்சிக்கும் அத்த னையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்துக்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவனுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.

-விடுதலை-12.9.15

    வெட்கம், புத்தி இல்லையோ?


    குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழி யில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந் தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷ மாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளை களும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப்பிள்ளை களாகவா இருந்திருப்பார்கள்?
    20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? - தந்தை பெரியார்
    -விடுதலை21.8.15