ஞாயிறு, 28 ஜூலை, 2019

புரட்சி வாடை வீசுகிறது

* தந்தை பெரியார்
ஓராண்டிற்குப் பின் இந்தியாவை இந்தியர்களிடத்திலேயே ஒப்படைத்துவிட்டு இந்தியாவையே விட்டு வெளியேறுவதாகக் கூறும்  வெள்ளையன், இந்தியர் களிடையே சில சிக்கலான திட்டங்களைப் புகுத்தி வேடிக்கை பார்க்கின்றான். அத் திட்டங்களுக்கு விரிவுரை யாற்றுவதில் அரசியல் கட்சித் தலை வர்கள் என்று கருதப்படு கின்றவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். அத்திட்டங்களின் விளைவு எதுவாயி ருப்பினும் அது ஒருக்காலும் திராவிடநாட்டுக்குப் பயனை அளிக்காது என்பது உறுதி.
இந்தியாவின் வருங்காலத்தை நிர்ணயம் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் திராவிட மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. இந்தியாவை  A.B.C. என்ற மூன்று தொகுதிகளாகப் பிரித்தால் சென்னை மாகாணத்தைப் பம்பாய் மாகாணம் சேர்ந்துள்ள  தொகுதியில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே சென்னை  மாகாணம் பொருளாதாரத்துறையில் பம்பாய் மாகாணத்திற்கு அடிமைப் பட்டுள்ளது. A.B.C.
என்று தொகுதிகள் பிரிந்திடின் பொருளா தாரத்துறையில் சென்னை மாகாணம் என்றென்றும் தலை தூக்கவியலாத நிலையடைந்துவிடும் என்பதைக் கூறவும் வேண்டுமோ
சென்னை மாகாணத்திலோ என்றால் திராவிடர்கள் நிலை மிகக் கவலைக்கிடமாகயிருக்கின்றது. பணக்காரர்களும், முதலாளிகளும், பார்ப்பனர்களும் சேர்ந்து பாமர மக்களை ஏய்த்துப் பாராளுமன்றத்தில் புகுந்துகொண்டு பாட்டாளி மக்களைப் பல்வகையிலும் துன்புறுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளினால் திராவிடர்களின் வருங்கால நிலை பல்வகையானும் சீர்குலைந்துவிடும் என்பது உறுதி. எனவே, வருங்காலத்தில் வரப்போகவிருக்கும் கேட்டை வராமல் தடுப்பதற்கு இப்போதே ஒருவர் செய்ய வேண்டுவது திராவிடர்களின் இன்றியமையாக் கடமையாகும். சிறப்பாகத் திராவிட மாணவர்கள் வரவிருக்கும் கேட்டைத் தொலைத்துக் கட்ட முன்னணிப் படையிலிருந்து தொண்டாற்றக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இன்று திராவிட மாணவர்கள் காங்கிரஸ் மந்திரிசபை யினரால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தகுதி பார்த்துதான் மாணவர்களுக்கு உயர்ந்த படிப்பு, படிப்பதற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்ற சட்டம் திராவிட மாணவர்களுக்குப் பெரிதும் கேடு விளைவித்துள்ளது.இச்சட்டம் செய்வதில் அடிப்படையான நோக்கம் திராவிடர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பெருக்குவது என்பதுதான்.
மேலும் ஆங்காங்குள்ள உயர்நிலைப் பள்ளிகளின் பார்ப்பன ஆசிரியர்கள் திராவிட மாணவர்களுக்குப் பலவகையாலும் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். பல பள்ளிக்கூடங்களில் திராவிட இன உணர்ச்சிபெற்ற திராவிட மாணவர்களைத் தேர்தலில் வெற்றிபெறாவண்ணம் ஆரியத் தலைமையாசிரியர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
வாய்மையில் வழுவாத திருவள்ளுவரின் படத்தை வகுப்பு அறையில் வைக்கவேண்டுமென்று திராவிட மாணவர்கள் விரும்பினால் அதற்கு ஆரிய ஆசிரியர்கள் பெரும் முட்டுக் கட்டை போடுகிறார்கள். அதோடுமாத்திரமன்றி "வடநாட்டுப் பார்ப்பனத் தலைவர்களின் படத்தை திறந்துவையுங்கள்" என்று ஞானோபதேசம் செய்கின்றனர். வேறு சில பள்ளிகளில் கருப்புச்சட்டையணிந்து பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பெரியார் பேட்ஜு சட்டையில் குத்திக் கொண்டு பள்ளிக்குச் செல்லக் கூடாதென்றும் கட்டளையிடுகின்றனர். அதே நேரத்தில் வடநாட்டுத் தலைவர்களின் உருவம் பதித்த  பேட்ஜுகளைக் கதர்ச் சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்குவரும் மாணவர்களைக் கண்டிப்பதில்லை. அதற்கு மாறாகக் கருப்புச் சட்டையணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களைப் பற்றிப் புகார் செய்யுங்கள் என்று கதர்ச்சட்டை அணிந்த மாணவர்களை ஏவி விடுகின்றனர் பார்ப்பன ஆசிரியர்கள்.
சில தொடக்கப் பள்ளிகளில் 12 வயதிற்கும் உட்பட்ட மாணவர்களை இந்து மதச் சின்னமாகிய பொட்டு இட்டுக் கொண்டுதான் வகுப்பிற்கு வரவேண்டுமென்று ஆசிரியர்கள் கட்டளையிடுகின்றனர்.
இவையாவும் பார்ப்பன ஆசிரியர்களால் மாத்திரம் செய்யப்படுகின்றன என்று கூறுவதற்கிணங்க பார்ப்பனர்களின் கடைக்கண் பார்வையினால்தான் காலத்தைக் கழிக்கலாம் என்று கருதும் விபீஷணன் குணம் படைத்த திராவிட ஆசிரியர்களில் சிலரும் பார்ப்பனர்களின் பேச்சைக்கேட்டுக் கொண்டு தங்கள் இன மாணவர்களுக்கு எல்லையில்லாத தொல்லைகளை அளிக்கின்றனர்.
சில பள்ளிகளில் மூவர்ணக்கொடிகள் பறக்க விடுவதற்குத் தலைமையாசிரியர்கள் அனுமதி அளிக்கின்றனர். அதே சமயத்தில் திராவிட மாணவர்கள் திராவிடர் கழகக்கொடிகளைப் பறக்க விடுவதற்கு அனுமதியளிப்பதில்லை.
சில பள்ளிகளில் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவர்களைக் கொண்டு கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களையோ, அல்லது 'தமிழன்' என்ற உணர்ச்சி பெற்றவர்களையோ அவர்கள் எவ்வளவு தகுதியுடையவர்களாயினும் பள்ளிகளில் மாணவர்கள் அழைத்து கூட்டத்தில் பேசவைக்கவேண்டு மென்று விரும்பினால் தலைமையாசிரியர்கள் தடைசெய் கின்றனர். தடை செய்வது மாத்திரமன்றி அப்படிப்பட்டவர்களை வரவழைக்கவேண்டும் என்று கூறும் மாணவர்களின் பிற்கால வாழ்க்கையைக் கெடுத்துவிடவும் செய்கின்றனர். சில மாணவர்கள் எதற்கும் அஞ்சாது இனவுணர்ச்சிபெற்ற திராவிடத் தலைவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தித்தான் தீருவோம் என்று கூறினால், "அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் பள்ளிகளில் வந்து சொற்பொழிவாற்றக் கூடாது; அங்ஙனம் அவர்கள் சொற்பொழிவாற்றினால் மாணவர்கள் மனம் சிதறுண்டுவிடும்.   அவர்கள் செவ்வனே பாடங்களைப் படிக்க மாட்டார்கள்" என்று பொய்க் காரணத்தைக்காட்டி இனவு ணர்ச்சி பெற்ற மாணவர்களின் முயற்சியைத் தடைசெய் கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் தகுதி யிருப்பினும் இராவிடினும் பள்ளிகளில் வந்து சொற்பொழி வாற்றலாமோவென்று கேட்கிறோம். அவர்கள் மாத்திரம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களல்லவா? பின்னர் ஏன் திரா விடவுணர்ச்சி பெற்றவர்களையும்,  தமிழன்  என்ற உணர்ச்சி பெற்றவர்களையும் பள்ளிகளில் பேச அனுமதிப்பதில்லை?
சில பள்ளிகளில் திராவிடமாணவர்கள் நன்றாகப்படித்து முதல்  மார்க்கு பெறும் வண்ணம் தேர்வு எழுதினாலும் பார்ப்பன ஆசிரியர்கள் வேண்டுமென்றே அவர்களுக்கு குறைந்த மார்க்கு போட்டுச் சிறிதும் தகுதியில்லாத பார்ப்பன மாணவர்களுக்கு முதல் மார்க்கு கொடுக்கிறார்கள்.
வேறு சில பள்ளிகளில் காலையில், செத்தமொழியான  வடமொழியில்தான் இறை வணக்கம் பாடவேண்டும், தமிழ் மொழியில் இறை வணக்கம் பாடக்கூடாது என்று பார்ப்பன ஆசிரியர்கள் கூறுகிறார்கள். மீறி தமிழில்தான் இறைவணக்கம் பாடவேண்டும் என்று சொல்லும் மாணவர்கள் பார்ப்பன ஆசிரியரின் சூழ்ச்சிக்கு ஆளாகாமலிருப்பதில்லை. இன்னும் சில பள்ளிகளில் பார்ப்பன மாணவர்களுக்கெனத் தனியான உணவு விடுதிகளும்,   திராவிட மாணவர்களுக்கென தனியான உணவு விடுதிகளும் வைத்துள்ளனர். "சமத்துவத்தையும், சமரசத்தையும் போதிக்கும் பள்ளிகளில் ஜாதி வித்தியாசம் ஏன்?" என்று மாணவன் கேட்டால் அப்படிக்கேட்கும் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கப்படுகின்றான்.
மாணவர்களின் பாடத்திட்டத்தில் திராவிடர்களை அடிமைப்படுத்துவதற்குக் கருவிகளாயிருந்த புராணங்களைச் சேர்த்து அவைகளையும் படித்துத் தேர்ச்சிபெறவேண்டும் என்றுள்ளது. சில பள்ளிகளில் திராவிட உணர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் இருப்பார்களானால் அவ்வாசிரியர்களைத் தொலைத்துக் கட்டுவதற்குப் பார்ப்பன ஆசிரியர்களும், பார்ப்பனப் பாதந்தாங்கும் ஆசிரியர்களும் சதிசெய்கின்றனர்; மாணவர்களைத் தூண்டிவிட்டு இனவுணர்ச்சிபெற்ற நல்லாசிரியர்கள்மீது புகார் செய்யச் சொல்லுகிறார்கள். அதன் காரணமாகப் பல திராவிட ஆசிரியர்கள் வேலையினின்றும் விலக்கப்படுகிறார்கள்.
ஒருசில பள்ளிக்கூடங்களில் பார்ப்பன ஆசிரியர்கள் கருங்காலி மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆசிரியர்களையும் அடிக்கச் செய்கின்றனர். அடிபட்ட ஆசிரியர் மேலிடத்தில் நியாயத்திற்குச் சென்றால், பார்ப்பன ஆதிக்கம் பெற்ற மேலிடம் நீதி விழைந்து சென்ற ஆசிரியர்தான் தவறிழைத்தவர் என்று தீர்ப்பு கூறுகிறது.
சில பள்ளிகளில் திராவிட இனவுணர்ச்சிபெற்ற மாண வர்கள் மிகுந்திருப்பின்  "அப்பள்ளிக்கூடத்தையே எட்டிப் பார்க்கமாட்டேன்"  என்று திராவிட இனத்தில் தோன்றிய, ஆனால் திராவிடன் என்பதை முற்றும் மறந்த கல்விமந்திரியார் கூறுகிறாராம். இனவுணர்ச்சி கொண்ட தமிழாசிரியர்கள் பள்ளி களில் திராவிட மாணவர்களுக்கு இன்றியமையாத இனவுணர்ச் சியைப் போதித்தால் அவர்கள் நாஸ்திகத்தைப் பரப்புகிறார்கள்; ஆகையால் அவர்களை ஆசிரியப் பதவியினின்றும் விலக்கி விட வேண்டுமென்று பாராளுமன்றத்தில் பேசப்படுகின்றது.
இனவுணர்ச்சி கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் ஒரு பல்கலைக் கழகத்திற்கே ஆண்டுதோறும் அரசியலார் அளித்துவரும் பணவுதவியை நிறுத்திவிடவேண்டும் என்று சட்டசபையில் கூறப்படுகின்றது.
இன்னும் போகப் போக காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து ஏனைய கட்சியை ஆதரிக்கும் எந்த மாணவனும் கல்விச்சாலையில் கல்வி பயிலக்கூடாது என்று சட்டம் இயற்றினாலும் இயற்றுவார்கள்! யாரறிவார்?
இன்னோரன்ன குறைபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றிற்கெல்லாம் காரணம் நாட்டு ஆட்சியும், அதிகாரபீடமும் பார்ப்பனர்களிடத்திலும், அவர்களின் அடிவருடி களிடத்திலும் இருப்பதுதான். இந்நிலை மாறினால் ஒழிய திராவிட மாணவர்களின் இழிவு நீங்காது என்று திட்டமாகக் கூறிவிடலாம்.
இவற்றை மாற்றுவதற்குத் திராவிட மாணவர்கள் என்ன செய்யமுடிவு செய்துள்ளனர்? இழிநிலை மாறுவதற்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. அதுதான் இனப்புரட்சி. அதுவும் ஒற்றுமையுடன் கூடிய இனப்புரட்சிதான் எளிதில் இழிநிலையைப் போக்கும்.
இப்போது திராவிட மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இனவுணர்ச்சிபெற்று விட்டனர். இனஉணர்ச்சிப் பெற்ற மாணவர்களெல்லாம் தங்கள் இனவுணர்ச்சியால் எழும் சக்திகளை ஒன்று  திரட்டி ஒரு பெரும் புரட்சி செய்தல் வேண்டும். அங்ஙனம் பெரும் புரட்சி செய்தால்தான் திராவிட மாணவர்களுக்கு இப்போதுள்ள இழிவுகளைப் போக்கமுடியும். அப்பெரும் புரட்சிதான் பாராளுமன்றம் முதல் பஜனைமடம் வரையில் பரவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துத் திராவிடர்களை மக்களாக ஆக்கும்.
இனவுணர்ச்சி பெற்று எழுச்சியுறும் மாணவர்கள் பாராளுமன்றத்தைப்பற்றி பொருட்படுத்தார்கள். இடைக்கால சர்க்காரைப்பற்றி இம்மியளவும் எண்ணார்கள். அரசியல் நிர்ணயசபையைப் பற்றிக் கடுகளவும் கருதார்கள். காரணம் அவர்களுக்கு நன்கு தெரியும் அவைகள் யாவும் பணக்காரத் தன்மையும், முதலாளித்துவத்தையும், உயர்ந்த ஜாதித்தன்மை யையும் வெள்ளையனின் ஆதரவு கொண்டு நிலைநிறுத்த ஏற்பட்ட சாதனங்கள் என்று.
இன இழிவைப்போக்க எழுச்சி பெற்ற மாணவர்கள் செய்யப் போகும் தொண்டு சற்றுக் கடினம்தான். கரடுமுரடான பாதையையன்றோ செம்மைபடுத்த வேண்டும்? என்றாலும் தாங்கள் மேற்கொண்ட பணியை சலியாது ஆற்றுவர் என்பது திண்ணம். காரணம் அவர்கள் உலக வரலாறுகளை படிப்ப வர்கள், சாம்ராஜ்யங்கள் சரிவுற்ற சரித்திரங்களை படிப்பவர்கள் முதலாளிகளின் ஆட்சியை ஒழித்துத் தொழிலாளர்களின் ஆட்சியை நிறுவிய தீரச்செயலை நன்குணர்ந்தவர்கள். எனவே அவர்கள் எதற்கும் அஞ்சார்கள்.
அதோ புரட்சி வாடை வீசுகிறது! கோடை விடுமுறையில் அவர்கள் மாவட்டம் தோறும் செய்யும் பிரசாரந்தான் புரட்சியின் முதல் அறிகுறி. அதுதான் புரட்சி வாடை. இப்புரட்சி வாடை வரப்போகும் பெரும் புரட்சிக்கு வித்து என்று துணிந்து கூறலாம். எனவே, மாவட்டந்தோறும் உள்ள திராவிடர் கழகத் தோழர்கள் அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரசாரம் செய்யும் மாணவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்வார்களாக! உறுதியாக வருங்காலத்தில் இன இழிவு ஒழியும்!
குடிஅரசு -  19.04.1947
- விடுதலை நாளேடு, 28.7.19

சனி, 27 ஜூலை, 2019

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II (2)

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

சென்ற வாரத் தொடர்ச்சி

இந்த இடத்தில் அரசமரமும், வேப்பமரமும் இல்லையே சுற்றிச் சென்றால் கர்ப்பம் தரிக்கு மென்று சுற்றிப் போவதற்கு! இது திருப்பதியும் அல்லவே, உள்ள காசைப் பார்ப்பானிடம் பறி கொடுத்து விட்டு மொட்டை அடித்துக்கொண்டு போக.

கோயிலுக்குப் போகாதீர்! குண்டர்களுக்குப் பொருளைக் கொடுக்காதீர்!

இது அறிவு பற்றிப் பேசும் இடம். ஆகவே, நீங்களும் ஏதாவது அறிவு பெற்றுச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் காது கொடுத்துக் கவனத்தோடு கேளுங்கள். தாய்மார்களே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வருணாசிரம தர்மப்படி, நீங்கள் சூத்திரச்சிகள், பார்ப்பனனின் தாசிகள் என்பதை முதலில் உணர்ந்து கொள் ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள்தான் தாசிகள். எந்தக் கடவுளும் சூத்திரச்சிகளுடன்தான் லீலை செய்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்திகளோடு லீலை செய்ததாகக் கூறக்காணோம். கடவுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாகக் கதைகளில் கூறப்படுகிறதே ஒழிய, நம்மவரின் பெண்களைத்தான் கைப்பிடித் திழுத்துக் கற்பழித்ததாகக் கூறப்படுகிறதே ஒழிய, எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண், கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவு படுத்திவிட்டார்கள் இந்த அன்னக்காவடி பார்ப்பனர்கள் நம்மை. இதை யறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.

இனி நீங்கள் ஒரு காசு கூட எந்தப் பார்ப் பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக் கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக் கூடாது.போவதாயிருந் தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டு மென்கிற கட்டுத்திட்டம் உள்ள கோயிலுக்கோ இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டியையும் வைத்திருக்கும் சாமிகளுள்ள கோயிலுக்கோ, நீங்கள் கட்டாயம் போகக் கூடாது.

போவதானால் தடியுடன் போங்கள்

அப்படிப் போவதானால், போகும்போது ஒரு தடி எடுத்துக் கொண்டு போங்கள், தேங்காய் வெற்றிலை பாக்குக்குப் பதிலாக! அந்தத் தடியால் அடித்துக் கேளுங்கள் அந்தச் சாமியை! நான் தடியால் அடிக்கிறேன். நீ அழாமல் இருக்கிறாயே! உனக்கு உயிர் கிடையாது, நீ வெறும் குழவிக் கல் சாமி, அதனால்தான் நான் அடிப்பது உனக்குத் தெரியவில்லை. அப்படியிருக்க உனக்கேன் பெண்டாட்டி? அப்படித்தான் பெண்டாட்டி வேண்டுமென்றால் ஒரு பெண்டாட்டி போதாதா? இரண்டு பெண்டாட்டி ஏன் உனக்கு? இரண்டு பெண்டாட்டிகள்தான் இருந்து தொலையட்டும். ஒரு தடவை அவர்களைக் கலியாணம் செய்து கொண்டால் போதாதா? வருடா வருடம் ஏன் உனக்குக் கலியாணம் நடக்க வேண்டும்? அதுவும் போதாதென்று வைப்பாட்டிகள் வேறு வேண்டு மென்கிறாயே! இது நியாயமா? இத்தனையும் வேண்டுமானால் வைத்துக்கொள். அண்டங்களை எல்லாம் படைத்த உனக்கு நாங்கள் ஏன் சாமி படியளக்க வேண்டும்? உனக்கு வேண்டியதை உன்னால் தேடிக் கொள்ள முடியவில்லை. நீயா எங்களுக்குப் படியளக்கப் போகிறாய்? ஏன் சாமி மவுனம் சாதிக்கிறீர்கள்? கல் இல்லையானால், நீர் உண்மையில் கடவுள் ஆனால், நாங்கள் தரும் பொருள் உனக்குச் சேர்வதில்லை யானால், உன் பேரால் எங்களைக் கொள்ளை யடித்து வாழும் இந்த அன்னக்காவடிப் பார்ப்பானை ஏன் நீர் தண்டிக்கக் கூடாது? என்று தடியால் அடித்துக் கேளுங்கள். பதில் இல்லையானால் நாங்கள் கூறுவதுபோல் அது வெறும் குழவிக்கல் என்பதை அறிந்து கொண்டு வீடு திரும்புங்கள். பிறகு ஒரு வார்த்தை உங்களை எதிர்த்துப் பேசுவார்களா, உங்கள் கணவர்கள்?

இந்தக் கடவுளா உங்கள் கடவுள்

கடவுளுக்கே இந்தக் கதியானால் அவர்கள் தம் கதி என்னவாகும் என்று அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அப்புறம் ஒரு நாள் வெளியே போவார்களா? உங்கள் புருஷர்கள்; வேறு மங்கையர்களைத் தேடி. அந்தச் சாமியை அடித்து வைத்தவன் நம்மவன். அந்தச் சாமிக்கு உயிர் பிச்சை கொடுக்க கும்பாபிஷேகம் நடத்த உதவியது நம்முடைய பொருள். அந்த சாமிக்கு அரிசி, பருப்பு அழுது வருவது நாம். அப்படியிருக்க நாம் அதைத் தொடக் கூடாதென்று அந்த பார்ப்பான் கூறுகிறானென்றால் அப்படிப்பட்ட இடத்திற்கு நாம் போகலாமா? அதற்குத் தேங்காய் பழம் படைக்கிறீர்களே, துணிமணி வாங்கித் தருகிறீர்களே? அதை அந்த குழவிக் கல்லா அனுபவிக்கிறது? குழவிக் கல்லால் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணமாகி வெளிக்குப் போகிறதா? எல்லாவற்றையும் பார்ப்பான்தானே அனுபவிக்கிறான்? பாடுபட்ட பணத்தை அப்படி விரயமாக்கலாமா நீங்கள்? கடவுள் என்றால் அது யோக்கியமாக, ஒழுக்கமாக பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டாமா? பாடுபடும் நீங்கள் பட்டினி கிடக்க, படிக்க வசதியின்றித் தற்குறிகளாயிருக்க, ஏழைகளாக, கீழ் ஜாதி மக்களாக இருக்க, பாடுபடாத பார்ப்பனத்திகள் சோம்பேறிகளாக, அய்.சி.எ. காரர்களின் மனைவிகளாக, பட்டாடை உடுத்தி மேனி மினுக்குடன் உயர் ஜாதி மக்களாக வாழ அனுமதிக்கும் கடவுளா உங்களுக்குக் கடவுள்?

பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா?

பார்ப்பான் காவடி தூக்குகிறானா?

கடவுள் என்றால் கல், களிமண், புல், பூண்டு, செடி, கொடி, கழுதை, குதிரை, சாணி, மூத்திரம் இத்தனையும் கடவுளா? கடவுள் என்றால் அறிவுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண் டாமா? திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறீர்களே! சாமி மயிரா கேட்கிறது? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட் டையடித்துக் கொள்வதில்லையே? மொட்டை யடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடி விடுகிறார் களே! அப்படி இருக்க உங்கள் மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரைக் காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே அது தகுமா? எந்தப் பார்ப்பானாவது பழனி ஆண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷர்கள் போதாதென்று 6 ஆவது புருஷனையும் விரும்பிய துரவுபதியம்மாளை போய்க் கும்பிடுகிறீர்களே! அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே, உங்களுக்கு இன்னும் அதிகப் படியான புருஷர்கள் வேண்டுமென்று வரங் கேட்கவா, அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

இரண்டு பணிகள்!

பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத் தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.

- பெரியார் குடிஅரசு -  20.03.1948

- விடுதலை நாளேடு, 27.7.19

வெள்ளி, 26 ஜூலை, 2019

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

தந்தை பெரியார்




இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ் காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்; மதவாதிகள் எதிரிகள்; இவர்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இவற்றிற்கெல்லாம் பார்ப்பனர்களே தலை வர்கள். பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஆதரவளிப்பதற்கே இந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆதலால் நாங்கள் இந்த எதிர்ப்புக்களைச் சமாளித்தால்தான் எங்கள் வேலை நடைபெறமுடியும்.

பார்ப்பானும் கல்லும் சாமிகளா?


நான் சாமி இல்லை  என்று சொல்லுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள், அதற்காக இந்த ஆள்களுக்கு ஏன் ஆத் திரம் வர வேண்டும்? இன்று நீங்கள் யாரை சாமி என் கிறீர்கள்? பார்ப்பனனைத்தானே சாமி என்கிறீர்கள்? பிறகு கல்லுகளையும், பொம்மைகளையும்தானே சாமி என்கிறீர்கள்; இவை சாமி ஆகுமா? நீங்கள் எதற்காக மனிதனைச்  சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று  கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து  வைக்கப்பட்டிருக்கின்றன? பார்ப்பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்!  பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக்கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட்டால் தோஷம்! இப்படியாகப் பார்ப்பானும், பார்ப்பானைப்போல் உருக்கியும், அடித்தும் வைத்த பொம்மைகளும், எழுதி வைத்த சித்திரங்களும்தான் சாமிகளாக இருக்கின்றனவே தவிர,வேறு எது உங்களுக்குச் சாமியாக இருக்கிறது?  இந்தச் சாமிகளை நாங்கள் சாமிகள் அல்ல என்கிறோம். இதில் தப்பு என்ன? நீங்கள் சொல்லுங்கள், எதற்காக ஒரு மனிதனை சாமி என்று கூப்பிடுவது? அந்த மனிதன் எந்த விதத்தில் உங்களைவிட மேலானவன் ஆவான்? நம் ஜனங்களுக்கு வெட்கமில்லை, மானமில்லை என்பதல் லாமல் வேறு என்ன? இந்த ஊரில் ஒன்றோ இரண்டோ, பார்ப்பன வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அந்தப் பார்ப்பனரின் விஷமச் செய்கைதான் சுவரில் இப்படி எழுதச் செய்தது என்றும் சொன்னார்கள்.

பார்ப்பன ராஜ்யமே சுயராஜ்யம்!


உங்களுக்கு  சாமியைப்பற்றி புத்தி எவ்வளவு இருக் கிறதோ, அவ்வளவு புத்திதான் உங்களுக்கு சுயராஜ்யம், பொதுவுடைமை, நேதாஜி, ஜெய்ஹிந்த், என்பவைகளைப் பற்றியும் இருக்கிறது. சுயராஜ்யம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுயராஜ்யம் என்றால் பார்ப்பான் மந்திரி, பார்ப்பான் பெரிய அதிகாரி, பார்ப்பான் கொள்ளை என்பதல்லாமல் வேறு மாறுதல் என்ன என்று கேட்கிறேன். உங்களுக்கு சுயராஜ்யம் வந்தால் பார்ப்பானுக்குச் சாமிப்பட்டம், பிராமணப்பட்டம், மேல்ஜாதிப்பட்டம், போய்விடுமா? அல்லது உங்களுக்குச் சுயராஜ்யம் வந்தால் உங்களுக்குள்ள சூத்திரப்பட்டம், பஞ்சமப்பட்டம், கீழ்ஜாதிப் பட்டம், போய்விடுமா? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது இங்கு யாராவது காங்கிரஸ்காரர் இருந்தால் இங்கு வந்து சொல்லட்டுமே பார்ப்போம். பித்த லாட்டமும், புரட்டும் சுயராஜ்யம் என்று சொல்லப்படுவ தல்லாமல், யோக்கியமும், நாணயமும்தான் சுயராஜ்யம் என்று யாராவது சொல்லட்டும்! நான் இப்படிச் சொல் லுவதால் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லுவதாக யாராவது கருதினால் அது தவறு, தவறு என்றே சொல்வேன்.

இன்று மக்களுடைய மானமற்ற தன்மை யும், மடத் தனமும், ஏமாந்த தன்மையும்தான்  சாமியாக, சுயராஜ்யமாக இருந்து வருகின் றனவே தவிர உண்மைக் கடவுளும், உண்மை சுயராஜ்யமும் உங்களுக்குத் தெரியவே தெரியாது. உங்களுக்கு யாரும்  சொல்லவும் இல்லை! விளக்கவும் இல்லை!

ஓரவஞ்சனை செய்யும் சாமி


உண்மையான கடவுள் ஒன்று இருக்கிறது என்றால் பாடுபடாத சோம்பேறி,  பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து, உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில் லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடியுமா என்று கேட்கிறேன்?  சாமியைப் பற்றிக் கவலை கொள்ளுகிற எவனுக்காவது இந்தக் குறைகளைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

கோவில்கட்டி கும்பாபிஷேகம் பண்ணின ஜாதியார் கீழ்ஜாதியார் என்றும், சூத்திரன் என்றும், அழைக்கப்படு வதை, நடத்தப்படு வதை எந்தச் சாமியாவது தடுத்ததா? என்று கேட்கிறேன்.

அதுபோலவே, எந்தச் சுயராஜ்யத் திலாவது அல்லது இப்போது பேசப்படுகிற, கொடிகள் பறக்கின்ற மகாத்மாக் களோ, ரிஷிகளோ, வீரசூரதளபதிகளோ, தியாகமூர்த்தி களோ, வீராங் கனைகளோ, லட்சுமிகளோ, தேவிகளோ, தலைவர்களோ இருந்து நடத்துகின்ற எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன், மிலேச்சன் இல்லாமல் ஒரே ஜாதி மக்கள் உள்ள சுயராஜ்யமாய் இருக்குமா என்று கேட்கிறேன்? யாராவது பதில் சொல்லட்டுமே பார்ப்போம்! இங்கு பல கொடிகள் கட்டிய கொடி வீரர்களாவது, ஜெய்ஹிந்த் கூப்பாடுபோடும் நேதாஜி சங்கத்தாராவது, காங்கிரஸ் சமதர்மிகளாவது, யாராவது சொல்லட்டுமே, பார்ப்போம்!  சாமி இல்லை என்கிறவனும், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவனும் வரு கிறான்; ஒருவரும் போகா தீர்கள், என்று துண்டுப் பிரசுரம் போட்டுச் சுவரில் எழுதி விட்டால் போதுமா? வெட்கமும் இல்லை! அறிவும் இல்லையே! என்றால், இந்தக் கூட்டத் தாரின் இழிவான வாழ்வு எதற்குப் பயன்படும் என்று கேட்கிறேன்.

சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுய ராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம் பெரும் குடிமக்களாகிய நாம் 100-க்கு 90 பேர் கொண்ட திராவிடர்கள் சூத்திரர் அல்லர், அடிமைகள் அல்லர், பஞ்சமர் அல்லர், கடை ஜாதியார் அல்லர், மக் களை ஏமாற்றி  வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டத்தவரான பிராமணர் அல்லர், மேல் ஜாதியார் அல்ல யாவரும் ஒரு குல மக்களே! சரிநிகர் மக்களே யாவரும் என்று ஆகவேண்டும். இதுதான் திராவிடர் கழகத்தினரின் முதலாவதும், முக்கியமுமான குறிக்கோளாகும். இதற்கு நீங்கள், பார்ப்பனப் பித்தலாட்ட ஸ்தாபனம் எதுவானாலும் அதிலிருந்து விலகி ஆக வேண்டும். பார்ப்பன கடவுளும், பார்ப்பன மதமும், பார்ப்பனத் தேசிய (சுயராஜ்ய)மும் தான் நம்மை இன்று இந்த இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டன என்பேன்!

பார்ப்பனரில் இன்று 100-க்கு 100 பேர் படித்து இருக் கிறார்கள். திராவிடர்களாகிய கவுண்டர்கள், காணியாளர் களாகிய நீங்கள் 100-க்கு 90 பேர் படிப்பில்லாத, கைநாட்டுத் தற்குறிகள்! ஏன் என்று எந்தப் பார்ப்பானை யாவது கேட் டீர்களா? நீங்களாவது யோசித்தீர்களா? ஏதோ ஒரு கவுண்டர் சட்டசபை மெம்பர், ஜில்லா போர்டு பிரசி டெண்ட், பிளாக் மார்க்கெட்டில் லட்சக்கணக்காக கொள்ளையடித்தால் போதுமா?

பார்ப்பான் உழுகின்றானா?


பார்ப்பான் பாடுபடாமல் கையில் மண்வெட்டி, கலப்பை, ஏர் தொடாமல் இந்தப்பஞ்ச காலத்தில் வயிறு வீங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கவும், நீங்கள் எப்படிப்பட்டவர் களானாலும், காட்டுவேலை, மூட்டை தூக்கும் வேலை, ஆகிய உடலுழைப்பு வேலைகள் செய்து அரிசி, பருப்பு, துணிக்குத் திண்டாடவும், அதிகாரிகள் உங்களை மிருகங்களிலும் கேவலமாய் நடத்தவும், 100-க்கு 90 மக்கள் இருக்கிறீர்களே! ஏன்? என்று உங்கள் சட்டசபை மெம் பர்களை, பிரசிடெண்டுகளை, கள்ளமார்க்கட் இளவரசர் களைக் கேட்டீர்களா? பார்ப்பனத் தாய்மார்கள் 18 முழம் சேலைபட்டு, ஜரிகைத்துணி ரவிக்கை, வைரம், கெம்பு, தங்கம், மின்னல் நகைகளைப் போட்டுக்கொண்டு குலுக்கு நடை நடக்கவும், உங்கள் தாய், தங்கை, குழந்தைமார்கள் கிழிந்த ஜால்ரா துணி கட்டிக்கொண்டு ஒரு பக்கம் இழுத்தால் ஒரு பக்கம் நழுவும்படி, புல்லும், விறகும், சுப்பியும் சுமந்து தினம் 4, 5 மைல் நடக்கவும் ஆடு, மாடு மேய்த்துப் பால், தயிர், வெண்ணெய் சேர்த்துப் பார்ப்பனர், பட்டணத்தவர் வயிறுகள் என்னும் டாங்கியில் கொட்டி விட்டு எலும்புக்கூடு தெரியும்படி திண்டாடுகிறார்களே, ஏன் என்று கேட்டீர்களா? ஒருவர் இருவர் மெத்தை வீடு கட்டிக்கொண்டு மோட்டார், குதிரை வண்டி வைத்துக் கொண்டு,பணம் சேர்த்து பிரபு வாகுமாறு, பார்ப்பான் இடம் கொடுத்துவிட்டால் போதுமா?

இப்போது தெரிகிறதா, சாமி பேராலும் சுயராஜ்யத்தின் பேராலும் பார்ப்பனர் செய்யும் பித்தலாட்டமும், சாமி இல்லை என்கிறவனும் நாட்டைக் காட்டிக் கொடுத்த வனுமான ராமசாமி வருகிறான், வரவேற்காதீர்கள், அவன் கூட்டத்திற்குப் போகாதீர்கள் என்று பார்ப்பனர்களும் அவர்கள் அடிமைகளும் சுவர்களில் செம்மண்ணால் எழுதியதின் இரகசியமும்? என்று கேட்கிறேன்.

(பெரியார் அவர்கள் தமது கோஷ்டியாருடன் காஞ்சிக்கோவிலில் செல்லும்பொழுது சுவரில், 'சாமி இல்லை என்று சொல்லும் பாவி ராமசாமி ஒழிக' என்று ஒருசில இடங்களில் எழுதியதற்குப் பதில்கூறும் முறையில் பெரியார் தமது சொற்பொழிவைத் துவங்கினார்.)

(20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும்

ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 25.01.1947

- விடுதலை நாளேடு, 21.7.19

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

சென்ற வாரத் தொடர்ச்சி

நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவு தான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவு தான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்ட ரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக்காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?

தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப் பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப் பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங் கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப் பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும். இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளை இனி இருக்க விடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.

இந்த உரைகல்லில் மதிப்பிடுங்கள்

நமது இளைஞர்களுக்குள் மேலும் கட்டுப்பாடு வேண்டுவது அவசியம். கழகத்தின் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். சுயநலக்காரர்களின் விஷமத்தனத்திற்குப் பலியாகக் கூடாது.

நமது கழகத்தில் சுயநலக்காரர்களுக்கு இடம் இல்லை. கழகத்தில் தன் சொந்த லாபத்தைக் கருதியிருப்பவனுக்கு இடமில்லை, கழகத்திற்காகத் தம் சொந்தப் பணத்தை, சொந்த உழைப்பைச் செலவு செய்பவர்களுக்குத்தான் கழகத்தில் மதிப் புண்டு. கழகத்தினிடம் ஊதியம் பெற்று வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத்தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு அரைக் காசாயினும் கழகத்திற்குச் செலவு செய் கிறானோ அவனைத்தான் நான் என் நண்பனாக, என் துணைவனாக, என் தலைவனாகக் கூடக் கருதுவேன். கழகம் பாடுபடு கிறவனுக்குத்தான் சொந்தமானதே ஒழிய, கழகத்தின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டு மென்று நினைப்பவனுக்கல்ல. கழகத்தின் பேரால் வாழ்க்கை நடத்துகிறவன் கழகத்தின் வேலைக்காரன். கழகத் திற்காகத் தன் காசைக் கொடுப்பவன் கழகத்தின் நண்பன். எவனையும் இந்த உரைகல்லைக் கொண்டு தான் நமது இளைஞர்கள் மதிப்பிடவேண்டும்.

இவ்விதம் ஆராய்ந்து தெரியாமல் நம் இளை ஞர்கள் பொறாமைக்காரர்களின் விஷமப் பிர சாரத்திற்கு இடம் கொடுத்து வருவார் களேயானால், நான் கழகத்தைக் கலைத்துவிடவும் தயங்க மாட்டேன். நமது இளைஞர்களுக்கு உண்மையை உணர்ந்து கொள்வதில் கவலை இருக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டு கூத்தாடும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். நமது கழகம் தியாகிகளுக்கே சொந்தமான கழகம், சுயநலக்காரர் களுக்கு சொந்தமானதல்ல என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

ஏமாறாதிருக்கவே இவ்வளவும்

தலைவன் என்கிற முறையில் ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். இதற்காக யாரும் வருத்தம் கொண்டு விடாதீர்கள். சுய பெருமைக் காகவும், சுய விளம்பரத்திற்காகவும், சுய நலத்திற்காக மட்டுமே கழகத்தில் இருந்துவரும் தோழர்களின் சொற்கேட்டு ஏமாந்து போக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யவே இவ்வளவும் கூறினேன். மக் களின் ஆதரவு நமக்கு ஏற்பட்டு வரும் அளவுக்கு இயக் கத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசை யால்தான் இவ்வளவு வலியுறுத்திக் கூற நேர்ந்தது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாநாட்டுழைப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி

மாநாடு ஒரு குறையுமின்றி மிகமிகச் சிறப்பாக நடைபெற்று விட்டது. இதுவரை யாரும் நடத்தியறியாத முறையில், எங்கும் நடந்திராத முறையில், இவ்வூர்க்காரர்கள் மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த அளவில் மற்ற ஜில்லா பிரமுகர்களுக்கு இவர்கள் ஒரு கஷ்டத்தையே கொடுத்துவிட்டார்கள் என்று கூற வேண்டியிருக்கிறது. இனி நடக்கப் போகும் மாநாடுகளில் எவ்வளவுதான் தங்களால் கூடுமான அளவுக்கு மக்களுக்கு வசதி செய்து கொடுத்த போதிலும் மக்கள் குறைவாகவே, போதாததாகவே கருதக்கூடிய அளவுக்கு இந்த ஊர்க்காரர்கள் வசதி செய்து கொடுத்து மக்களைப் பழக்கி விட்டார்கள். நாளைக்கு ரயில்வே ஸ்ட்ரைக்கால் சிலர் தங்க நேரிடும் என்று கூறினால் பரவாயில்லை அதற்கும் சேர்த்துத் தான் அரிசி, பருப்பு வாங்கியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

இவ்வளவு ஏற்பாடுகளுக்கும் முக்கியப் பொறுப் பாளிகளாயிருந்த தோழர். வி.வி. தனுஷ்கோடி நாடார், தோழர் நீதிமாணிக்கம், தோழர் சண்முகம் ஆகியவர்களுக்கு எனது சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியறிதலையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டுப் பிள்ளையல்ல!

வினையாற்றும் கர்ம வீரர்!

நான் தோழர் கே.வி. கே. சாமி அவர்களை இதுவரை ஒரு விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்திருந்தேன். அவர் இம்மாநாட்டுச் செயலா ளராயிருந்து பணியாற்றியதைப் பார்த்ததிலிருந்து அவர் இத்திராவிட நாட்டின் கவர்னர் பதவியைக் கொடுத்தால் கூட அதையும் பார்த்துக் கொள்ளக் கூடிய திறமை பெற்றிருக்கிறார் என்று கூறவேண்டியிருக்கிறது. அவருடன் ஒத்துழைத்த தொண்டர் களின் சிறப்பைப்பற்றி நான் கூறவேண்டியதே இல்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள். இவ்வூர் போலிஸ்காரர்களும், போலி அதிகாரிகளும் தம் கடமையைத் திறம்பட ஆற்றியிருக்கிறார்கள். நமக்கு எவ்வித தொல் லையோ, இடைஞ்சலோ செய்யாமல் இருந்ததற்கு நாம் நமது மகிழ்வு கலந்த நன்றியறிதலை அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். இவ்வூர் மகாஜனங்களும் நம்மை பரிவுடன் நடத்தியிருக்கிறார்கள். வீதியிலோ, உணவுச் சாலைகளிலோ எங்குமே நம் தோழர்களுக்கு யாரும் தொல்லை கொடுக்கக் காணோம். எங்கும் அன்பையே கண்டோம். எல்லாம் வெகு திருப்திகர மாகவே நடந்தேறிவிட்டது.

தாய்மார்களுக்கு சிலவார்த்தைகள்

கடைசியாக, இங்கு திரளாகக் கூடியிருக்கும் தாய் மார்களுக்குச் சில வார்த்தைகள் கூற ஆசைப்படுகிறேன். என் அருமைத் தாய்மார்களே! நீங்கள் பல தொந் தரவுகளுக்கும் உள்ளாகி பல கஷ்ட நஷ்டங்கள் பட்டு இங்கு வந்து இரண்டு நாள் தங்கிச் செல்வதற்காக ஏதாவது உருப்படியான பலன் பெற்றுச் செல்ல வேண்டாமா? எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? இது ராமேசுவரம் அல்லவே பிள்ளை வரம் வாங்கிக் கொண்டு போக!

தொடரும்

- விடுதலை நாளேடு, 20.7.19