புதன், 25 அக்டோபர், 2017

இந்து மதம்


திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது முடிவாகும். இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாட்டில் திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்சஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவ்வொருவரும் திராவிடர் என்ற பெயர் கொடுக்க வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக் கிறோம். ஆனால் இத்தீர்மானத்தை அனேக ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் லட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. அரசியல் பதவிகளில் இருக்கிற லட்சியத்தில் பதினாறில் ஒரு பாகத்தைக்கூட நம்மவர்களில் அனேகர் சமுதாயத்தில் தங்க ளுக்கு இருக்கவேண்டிய பதவிகளைப் பற்றியோ தங்களது இழி நிலையைப்பற்றியோ கவலைப்படுவதில்லை. இந்தக் கார ணமே திராவிடர்களின் இழிநிலைக்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. எவ்வளவோ பெரும்படிப்பும், ஆராய்ச்சி அறிவும் மேல்நாட்டு நாகரிகமும் தாராளமாய்க் கொண்ட மக்கள்கூட தாங்கள் அனுபவித்து வரும் சமுதாய இழிவு விஷ யத்தில் போதிய கவலைப்படாமலே இருந்துவருகிறார்கள். இவர்கள் சிறிது கவலை எடுத்துக் கொண்டிருந்தாலும் மாபெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதோடு திராவிட நாட்டில் சிறப் பாகத் தமிழ் நாட்டில் இருந்து இந்து மதம் பறந்து ஓடி இருக்கும்.

இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, கடு களவு அறிவு உள்ளவர்களும் உணரக்கூடிய காரியமேயாகும். இந்துமதம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்தி, கீழ்மைப் படுத்தி அவர்கள் முன்னேறுவதற்கு இல்லாமல் ஒடுக்கி வைத்திருக்கிறதற்கே ஏற்படுத்தப்பட்டது என்பதல்லாமல் - அதற்காகவே இந்து மதம் என்பதாக ஒரு போலி வார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்பதல்லாமல், மற்றபடி வேறு கொள் கையுடனோ குறிப்புகளுடனோ அது (இந்து மதம்) இருக்க வில்லை.  உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்பதற்கு ஆரியர்கள் சொல்லும் சொற்களே போதிய சான்றாகும். 1940 வருஷம், டிசம்பர் மாதம் 8ஆம் தேதியில், சென்னைத் திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மகாநாடு என்பதில் தலைமை வகித்த திவான் பகதூர் வி.பாஷியம் அய்யங்கார் அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:- நாம் அனை வரும் ஆரிய மதத்தைச் சேர்ந்தவர்களாகும். இந்து மதம் என் பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கின்ற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததே யாகும். நாம் ஆரியர்கள். ஆரியப் பழக்கவழக்கத்தை அனுசரிக்கிறவர்கள் ஆரியர்களே யாவார் கள்.  கண்டவர்களை ஆரிய மதத்தில் சேர்த்துக் கொண்டதானது ஆரிய மதத்தின் பலவீனமேயாகும் என்பதாகப் பேசி இருக் கிறார். இந்தப் பேச்சு 10-12-40 இந்து, மெயில், சுதேசமித்திரன், திணமணி, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து இருப்பதோடு விடுதலையில் இதைப்பற்றி அதே தேதியில் தலையங்கமும் எழுதப்பட்டிருக்கிறது. மற்றும் திவான் பகதூர் பாஷியம் அய்யங்கார் அவர்கள் அதே பேச்சில் இந்து மதத் திற்கு ஆதாரம் வேதங்களேயாகும் வேதத்தை ஒப்புக் கொள் ளாதவர் இந்துவல்ல என்றும் பேசி இருக்கிறார். எனவே இந்து மதம் எனபதோ அல்லது ஆரியமதம் என்பதோ ஆரியர் களுடைய ஆரியர்களின் நன்மைக்கேற்ற கொள்கை களைக் கொண்ட மதம் எனபதும், அது வேதமதம் என்பதும் இப்போதா வது திராவிடர்களுக்கு விளங்குகிறதா என்று கேட்கிறேன்.

அதோடு கூடவே சைவர்களையும், சைவப் பண்டிதர்களை யும், தங்களைத் திராவிடர் (தமிழர்) என்று சொல்லிக் கொள்ளுப வர்களையும், திராவிடர்கள் வேறு ஆரியர்கள் வேறு ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என்பவர்களையும், தென்னாட்டுச் சிவனே போற்றி என்பவர்களையும், அய்யா நீங்கள் இனியும் இந்து மதத்தையும், வேதத்தையும், வேதசாரங்களான புராண இதிகாசங்களையும், வேதக் கடவுள்களையும், வேத ஆகமங் களையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கின்றேன்.  பொதுவாகத் தமிழ் மக்களையும், சிறப்பாகத் தங்களைப் பார்ப் பனரல்லாதார் என்றும்,ஆரியர் அல்லாதார் என்றும், சொல்லிக் கொள்ளுகிறவர்களையும் இனியும் தங்களை இந்துக்கள் என்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்றும் சொல் லிக்கொண்டு ஆரிய வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கலாமா என்றும் கேட்கின்றேன். ஒருவன் தனக்கு இந்து மதத்தைக் கைவிட தைரியமில்லை ஆனால், தன்னை சூத்திரன் அல்ல என்றும், ஆரியன் அல்ல என்றும் எப்படி சொல்லிக்கொள்ள முடியும்.

மதத்தினாலும், இனத்தினாலும், நாட்டினாலும் ஆரியரில் இருந்து பிரிந்து இருக்கிற தமிழர்கள் தங்கள் நாட்டில் 100-க்கு 90 பேர்களாக அவ்வளவு கூடுதல் எண்ணிக்கை உள்ளவர் களாக இருந்து கொண்டு சகல துறைகளிலும் ஆரியர்கள் மேலாகவும், தமிழர்கள் தாழ்வாகவும், இழிமக்களாகவும் இருப்பது உலகத்தில் 8ஆவது அதிசயமல்லவா என்று கேட்கி றேன். இதற்கு தமிழ்ப் பெரியார்கள், பண்டிதர்கள், கலைவா ணர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முடிவாக நான் ஒன்று சொல்லுகிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத்தையும் இந்துமத கலை, ஆச்சாரம், கடவுள், கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி,உடை, நடை முதலி யவைகளை வெறுத்துத் தள்ளுகிறானோ அவ்வளவு தூரம்தான் அவனுக்குச் சுயமரியாதையும் மனிதத் தன்மையும் வரப் போகிறது என்றும் அவ்வளவு தூரம்தான் அவன் உண்மையான தமிழனாய் இருக்கமுடியும் என்றும் வலிமையாய் கூறுகிறேன்.

குடிஅரசு - கட்டுரை - 30-10-1943
-விடுதலை நாளேடு, 16.9.17

நம் அரசியல் கொள்கை 


நமக்குப் பிரிட்டிஷ் ஆட்சி ஒழியவேண்டும். ஆனால் கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சியோ மத்திய அரசாங்க ஆட்சியோ கூடவே கூடாது. திராவிட நாட்டு ஆட்சியே வேண்டும். திராவிடநாட்டு ஆட்சிக்கு திராவிட நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களுடைய சம்பந்தமே கூடாது.

திராவிட நாட்டுக்குள் காந்தியார் வருவதானாலும், ஜவகர்லால் பண்டிதர் வருவதானாலும், ஜின்னா சாயபு வருவதானாலும், அம்பேத்கார் வீரர் வருவதானாலும் பாஸ்போர்ட் (அனுமதிச் சீட்டு) வாங்கிக்கொண்டுதான் வரவேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் உண்மையான சுயேச்சை நாட்டுக்கு அறிகுறியாகும்.

அப்படிப்பட்ட ஆட்சி கிடைக்கவில்லையானால் காங்கிரஸ் தவிர வேறு எந்த ஆட்சி இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்.

மேல் ஜாதி கீழ் ஜாதி என்கின்ற உயர்வு தாழ்வு நிலைக்க இடம் வைத்துக் கொண்டு மேல் ஜாதிப்பெண்கள் எல்லாம் கீழ் ஜாதி ஆண்களைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், மேல் ஜாதியார் எல்லாம் கீழ் ஜாதியாருக்கு சூத்தி ரர்களாய் இருக்கவேண்டும் என்றும், இராணுவ உத்தரவு போட்டு ராணுவ அமல்நடத்துவதாக வாக்குக் கொடுக்கிற ஆட்சியாய் இருந்லும் கூட நாம் ஒரு நாளும் ஒப்ப மாட்டோம். வாழ்வில், பொதுவில், எப்படிப்பட்ட அடிமைத் தன்மை இருந்தாலும் சரி, பிறவியால் மேல், கீழ் ஜாதி இல்லாத ஆட்சியே நமக்கு முதலில் வேண்டும்.

அது திராவிட நாடு சுயேச்சை ஆட்சி கிடைத்தால் தான் முடியும். மற்றபடி வேறு எந்த ஆட்சியிலும் கனவு கூடக் காண முடியாது.
இந்தியா சுயேச்சை ஆட்சி என்பது கிடைக்குமானால் சர்.ராமசாமி முதலியார் வங்காள கவர்னர் ஆகலாம். சர்.சண்முகம் பம்பாய் கவர்னர் ஆகலாம். குமாரராஜா சர். முத்தைய செட்டியார் வைசிராய்சபை வியாபார மெம்பர் ஆகலாம். இன்னும் மேலேயும் போகலாம். ஆனால் இவர் கள் மூவரும் சூத்திரர்கள் ................. என்கின்ற பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களாக ஆகமாட்டார்கள் என்பது உறுதியாகும்.

ஆகவே நமக்கு எந்த ஆட்சி வேண்டும்? என்று கேட்டால் ஆச்சாரியாரே முதல் மந்திரியாக வருவதானா லும் நமக்கு திராவிட நாடு சுயேச்சை ஆட்சிதான் வேண் டும் என்போம்.

'குடிஅரசு'  துணைத்தலையங்கம், 30.10.1943

-விடுதலை நாளேடு, 16.9.17

ஏழைகள் கண்ணீர்

07.08.1932 - குடிஅரசிலிருந்து... 

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக் கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களேயாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற் சாலைகளிலும் வேலை யாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை யற்ற வர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களா யிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந் தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியி ருக்கவும் சொந்த குடிசைஇல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர் களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளி களோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப் பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன? இருக்க இடமில் லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில் லாமலும், பெண்டு பிள்ளை களுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன். இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனி களிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப் பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலை களிலும் தனிப் பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்தி லுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வரு கிறார்கள். ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகஸ்த் தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன. தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டி லும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண் டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக் கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும். இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் களும் சம்மதிப்ப தாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழி லாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத் திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங் கமும், முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒரு வாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூற லாம். ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட் கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபி மானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழி லாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியு மென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலா ளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
-விடுதலை நாளேடு, 14.10.17

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஜீவகாருண்யம்

10.06.1934- புரட்சியிலிருந்து...

இந்துக்கள் என்பவர்கள் பசுவை வணங்கு வார்கள். அதனிடத்தில் அளவுக்கு மீறிய மரியா தையும், ஜீவகாருண்யமும் காட்டுவார்கள். யாராவது பசுவைக் கொன்றால், சாப்பிட்டால் அவர்களிடம் குரோதமும், வெறுப்பும் கொள்ளுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்துக்களுக்கு முகமதியர்கள் மீது வெறுப்பும் அசூசையும் இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில் இந்து முஸ்லீம் கலகங்களும் கட்சிகளும் உண்டாகின்றன. 

இந்துக் களிலேயே பறையர், சக்கிலியர் என்று அழைக்கப் படும் வகுப்பார், மாட்டு மாமிசம் உண்பதினாலேயே அவர்களைக் கீழ் ஜாதிக் காரர்கள் என்று கருது வதாகவும், அதனாலேயே அவர்களைத் தொடு வதற்கு அஞ்சுவதாகவும் சொல்லப் படுகின்றன. இதை அனுசரித்து பல சாஸ்திரங்களும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இப்படிப்பட்ட இந்துக்கள் பசுமாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் வண்டியிலும் உழவிலும், ஏத்தத்திலும், செக்கிலும் கட்டி அதைச் சாகும் வரை உபத்திர விக்கிறார்கள். அதை நல்ல காளைப் பருவத்தில் கட்டிப் போட்டு விதர்களை நசுக்கி கொட்டாப் பிடியால் தட்டிக் கரைத்துக் கொடுமைப்படுத்து கிறார்கள். 

அதன் பாலை அதன் கன்றுக்குக் கொடுக்காமல் அதற்கு வெறும் புல்லைப் போட்டு விட்டுத் தாங்கள் சாப்பிடுகிறார்கள். இப்படி அர்த்தமற்ற ஜீவகா ருண்யம் பலப்பல ஜீவன்கள் பெயரால் எத்தனை யோ விதத்தில் உலகத்தில் வழங்குகின்றன. பட்சி, மிருகம், ஊர்வன ஆகிய விஷயங்களில் காட்டப் படும் ஜீவகாருண்யத்தில் ஒரு சிறு பாகம்கூட மனித ஜீவனிடத்தில் மக்கள் காட்டுவது அருமை என்றே சொல்லலாம். 
மக்கள் சமுக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்து கிறார்கள்? எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள்? என்று பார்த்தால் நடை முறையில் உள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள் தனமான தென்றே சொல்லலாம்.

மதப்பித்து

27.05.1934 - புரட்சியிலிருந்து....

மனிதனுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் மதப்பித்தானது மதுவை உட்கொண்ட வனுக்கு எப்படி அவன் சொந்த புத்தி மறைந்து அவசியமற்றதும், ஒழுங்கும் அறிவும் அற்றதுமான காரியங்களையே நினைக்கவும், பேசவும், செய்யவும் ஆளாகிறானோ அதே போல் மத வெறியானது குறிப்பிட்ட, அதாவது மனிதனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் நட வடிக்கை என்பவை லட்சியமற்றதாகி வெறும் மத பக்தியே லட்சியமுடையதாகி அதற்காக வாழ வேண்டி யதையும், அதற்காக உயிர்விட வேண்டியதையும் மனிதனின் முக்கிய கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதை மதவாதிகள் உணர வேண்டுமானால் ஒவ்வொரு மதவாதியும் தான் தன் மதத்தைப் பற்றி நினைக்காமல் தனக்குத் தெரிந்த வரையில் பிறமதக் கொள்கைப்படி உள்ள ஒழுக்கங் களையும் நடவடிக்கைகளையும் பிறமதக்காரன் பின்பற்றி நடக்கின்றானா என்பதையும் கவனித் துப் பார்த்தால் ஒவ் வொரு மதக்காரர் களின் யோக்கியதையும், மற்ற மதக்காரர்களுக்குத் தெரியும். மற்றபடி அவரவர் மதக்குற்றம் அவரவர்களுக்குப் புலப்படாது. 
, விடுதலை நாளேடு, 20.10.17

புரோகிதரும் திதியும் தம்பியின் சீற்றம் - அய்யரின் ஓட்டம் (சித்திர புத்திரன்)


27.11.1943, குடி அரசிலிருந்து...  

புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு 8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.

சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகை களோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ! 

அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?

அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.

தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?

முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.

தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?

முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.

தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?

முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று. 
, விடுதலை நாளேடு, 20.10.17

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு ஆண், பெண் தன்மைகள்



பொது மக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்ப வர்கள் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள் - புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை எனக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரானால் முதலிலேயே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம்  பார்க்க வேண்டும். அய்யோ பாவம்! ஏழைக் கடவுள் மீது எத்தனை பழிதான் போடுவது என்று தோன்றினாலுங்கூட, அந்தக் கடவுளுக்கு இவ்வளவையும் சகித்துக் கொண்டு உயிர் வாழும்படியான அவசியம் என்ன வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை, கஷ்டமாயிருந்தால் ஒழிந்து தொலையட்டுமே என்றுதான் தோன்றுகின்றது.

உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் எல்லாவற்றையும் விட பெண்கள் நிலையே மிக மோசமானது. அதிலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பதிவிரதைத் தன் மையை நினைக்கும்போது மனம் குமுறுகின்றது. அதாவது பதிவிரதம் என்கின்ற கற்புதான் அவர்களுடைய கடமை யாம். அதுவும் எத்தகைய பதிவிரதம் என்றால் தன்னைக் கொண்டவனாகிய புருஷன் பழைய சாதமும் சுடுகிறது என்றால் விசிறி எடுத்து விசிற வேண்டுமாம் - தண்ணீர் சேர்ந்தும் போது கணவன் கூப்பிட்டால் அப்படியே கயிற்றை விட்டுவிட்டு ஓடிவர வேண்டுமாம் - ஓடி வந்தால் மாத்திரம் போதாதாம் - அந்தக் கயிறும் பாத்திரமும் கிணற்றின் நடுவே திருப்பி வருமளவும் இராட்டினத்தில் தொங்கி கொண்டிருக்க வேண்டுமாம் - இல்லாவிடில் அந்தப் பெண் கற்புடைய பதிவிரதை அல்லவாம். எனவே, சகோதரர்களே! பெண்களுடைய நிலைமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? அன்றியும் ஆண்கள் பிறவி மூர்க்கப் பிறவி அல்லது தூர்த்தப் பிறவி என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? உங்கள் கடவுள்கள் தங்கள் மனைவிகளை இப்படியா நடத்துகின்றன? தலையிலும், நாக்கிலும், மார்பிலும், தோளிலும், தொடைகள் மீதும் தங்களது மனைவிகளை வைத்துக் கொண்டிருக்கிற கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட உங்கள் புத்தி இவ்விதம் சென்றதற்குக் காரணம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. பெண்கள் அடிமைகளாய் ஆக்கியதின் பலனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப் பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திற்கும் அடிமைகளா னார்களெனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டுமானால் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் அடிமை என்பதாகும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! முக்காலமும் பெண்கள் அடிமை நீக்க வேண்டும்.

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால் முதலா வதாக அவர்களைக் கற்பு என்னும் சங்கிலியில் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்; கட்டுப் பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலமும் கூடாது! கூடாது!! கூடவே கூடாது!! வாழ்க்கை ஒப்பந்தத் திற்காகவும், காதல் - அன்பிற் காகவும் இருவர்களையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டப்படட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலை யில்லை. ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு அடிமைப் படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவும் யோக்கியமும் பொறுப்பும் இல்லை.

இந்த விஷயங்களில் பெண்களுக்கு ஆண்கள் உதவி புரிவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலையே ஆகும். வீரப்பெண்மணிகள் தாங்களாகவே தான் முன் வந்துழைக்க வேண்டும். அரசாங்கத்திலும் அநேகம் செய்யப்பட வேண்டிய இருக்கின்றது. ஆனால் பெண் அரசாட்சியால் (விக்டோரியா மகாராணி) ஆகாத காரியம் ஆண் அர சாட்சியால் ஆகுமா? என்பது சிலருக்கு சந்தேகமாயிருக் கலாம். பெண்களின் உறுதியான ஊக்கமும், உழைப்பும் இருந்தால் கண்டிப்பாய் முடியும். ஆனாலும் சமுதாய சீர்திருத்தக்காரர்கள் இதை மிகவும் முக்கியமாய்க் கருத வேண்டியது என்பதாக முன்னமேயே சொன்னேன். பழக் கத்தையோ, வழக்கத்தையோ, மதத்தையோ, வேதத் தையோ கருதிக் கொண்டு பயப்பட்டுவிடாதீர்கள்; காலதேச வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ் தானத்தையும், சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண் களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டுவிட்டது என்பதை நினையுங்கள்.

விதவைத் தன்மை

அடுத்த விஷயமாக உலக வாழ்க்கையில் இருந்து உயிருடன் பிரிக்கப்பட்ட சகோதரிகளான விதவைகள் என்பவர்களைப் பற்றி சில வார்த்தைகள் குறிப்பிட விரும்பு கின்றேன்.

ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான ஒரு நிபந் தனையை நமது சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப் படுத்துவதான விதவைத்தன்மை என்பது எந்த விதத்தி லாவது. பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்து பாருங்கள். இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது மாத்திரமல் லாமல் நம்மை போன்ற மக்களிடத்தில் நாம் எவ்வளவு அறிவீனமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர்களாய் இருக்கின் றோம் என்பதற்கு அறிகுறியாகும்.

உலகத்தையும், நதியையும், சக்தியையும் பெண்ணாய் கருதும் இரண்டு பெண்டாட்டிக்கும் கம்மியில்லாத கடவுள் களையுடையதும் 1000, 10000, 60000 பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்ட ராஜாக்கள் ஆண்டதுமான இந்த நாட்டில் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள்!! உதைக்கப்படுகிறார் கள்! அதிலும் விதவைத் தன்மையால் மிகவும் வதைக்கப்படுகின்றார்கள்!.

பெண்கள் சம்பந்தமான வேறு எந்த காரியத்திற்காவது ஆண்கள் தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்லுவதானாலும் இந்த விதவைத் தன்மையை எதற்காக கற்பித்தார்கள் என்பதே நமக்கு விளங்க மாட்டேன் என்கிறது.

இதில் எவ்வித அறிவுடைமையும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதும் அறியக் கூடவில்லை. ஒரு சமயம் சந்நியாசி களையும் அதிதிகளையும் உத்தேசித்து இப்படி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதாகக் கருதினார்களா அல்லது பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது ஆதலால் இம்மாதிரி செய்வதன் மூலம்; மற்றப் பெண் களுக்கு புருஷன் கிடைக்கட்டும் என்று செய்தார்களா அல்லது வேறு என்ன காரணத்திற்காக இப்படிச் செய்தார்  கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கே முடியாததா யிருக்கின் றது. எப்படி இருந்தாலும் இதைப் போன்ற முட்டாள்தனமும், சித்திர வதைக் கொப்பான கொடுமையானதும், இனி அரைகணமும் பொறுத்துக் கொண் டிருக்க முடியாததுமான காரியம் வேறு இல்லை என்றே சொல்லவேண்டும்.

இந்த விதவைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க தைரியமாகப் பாடுபடவேண்டும்; இது விஷயத்தில் மானம் இன்னது அவமானம் இன்னது என் பதாகவோ, அவர்கள் என்ன சொல்லுவார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் வெளிக்கிளம்பிவிட வேண்டும்; தங்களுக்கு இஷ்டமான கணவன்மார்களைத் தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திவிட வேண்டும்; இவ்விஷயத்தில் சற்று சவுகரியக் குறைவு இருந்தாலும் அதை வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்து வரும் சகோதரிகளுக்கு மிகுதியும் பலனளிக்கும்; அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருந்து வருகின்றது. நமது நாட்டிலேயே இவ்வழக்கம் நடைபெறுகின்றது. ஆகையால் இதில் இனி தாட்சண்யம் பார்ப்பதென்பது சற்றும் பொருந் தாதெனவே சொல்லுவேன். இதற்கு விதவைகள் அல்லாத ஸ்திரீகளும், கொடுமைப் படுத்தப்பட்ட ஸ்தீரிகளுக்குப் புருஷன் சம்பாதித்துக் கொடுப்பதிலும், அவர்களுக்குத் தைரியமூட்டி கொடுமைப்படுத்தப்பட்ட குடும்பங்களி லிருந்து வெளிப்படுத்தி தனியாகவும் சுயேச்சையாகவும் வாழச் செய்யத் தக்க வழியில் கவலை எடுத்துக் கொண்டு உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகின் றேன். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால்தான்.

ஜாதி வித்தியாசம்

ஜாதி வித்தியாசம் என்பது கற்பிக்கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைப்பது ஆகும். இது இன்னும் நிலைத் திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? பிறவி யிலாவது வாழ்க்கை யிலாவது ஒழுக்கங்களில்லாவது அறி விலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றதா? ஒன்றுமே இல்லையே! அப்படி ஏதாவது ஒரு வழியில் பிரித்திருந் தாலும் அதற்குச் சமாதானமானது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லாமல் பிற மாத்திரத்தில் எதேச் சதிகாரமாய் செய்யப்படும் கொடுமையாகத்தானே விளங்கு கின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர் விரோதமாக இருக்கவில்லையா?

சகோதரர்களே! இந்தக் கொடுமையை ஒப்புக் கொள் ளாதவர்கள் இதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லாத வர்கள் யார்? இதற்காக எத்தனை காலமாக முயற்சி செய் யப்பட்டு வருகின்றது? ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சொல்லாத பெரியார் யார்? ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக் கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே! இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும். இதற்குச் சரியான வழி அறிவினாலோ ஞானத்தினாலோ போதனை யினாலோ ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை. எனக்கு இல்லை. இது பெரிதும் அரசாங்கச் சட்டத்திலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு- தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்.

ஆனாலும் இது அரசியல் கூட்டமல்ல. இங்கு நான் அரசியலைப் பற்றிப் பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப் பலவித சட்டம் வேண்டும் என்பதுபோல எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்கிறோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை நசுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். இது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதா இல்லையா என்பதைத் தாங்களே யோசித்துப் பாருங்கள்.  இன்னும் ஓர் அவசியமும் சொல்லுகின்றேன். அரசியல்காரர்கள் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கேட்கும்போது எதற்காக வகுப்பு வித்தியாசத் தைக் கற்பிக்கவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாமே என்கின்றார்கள். இதை நம்பி, இந்தப்படியே சமுதாய வாழ்க்கையில் இருக்கலாம் என்றாலோ மத இயல்காரர்கள் அது மதத்திற்கு விரோதம் என்கின்றார்கள் அம்மதத் தடையை நீக்க சட்டம் செய்யலாம் என்றாலோ மத ஆச்சாரியர்கள் மதத்தில் சர்க்காரோ சட்டசபையோ பிரவேசிக்க கூடாதென் கிறார்கள். எனவே இப்போதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க வேண்டிய அவசியம் என்று சொல்லுவது சரி என்று தோன்ற வில்லையா? அடுத்தபடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்ன வென்றால் ஜாதி வித்தியாசம் என்பதற்குள் தீண்டாமை என்பதாகும்.

- ‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 02.12.1928

-விடுதலை நாளேடு, 22.10.17