புதன், 15 நவம்பர், 2023

சமூக முன்னேற்றத்திற்கு தடையாயிருக்கும் சாஸ்திர புராணங்களைச் சுட்டெரிப்போம் - தந்தை பெரியார்


6

நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக்கச் செய்ய விரும்பவில்லை. எனினும் நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துகாட்டி பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஓப்புக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாயும், ராவ் சாகிப்களாயும், மோட்டார் வாகனங் களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயு மிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளி களும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத் தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையே ஆகும்.

ஆதி திராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப் பட்டபோதிலும் அவர்களை இழிவு படுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவ தில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு.முனுசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத் தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண் ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும் போது ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனி சாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும்விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய் பிறந்துவிட் டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது. வேதத்தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின்மீது பழியைப் போடுவதோடு, மதத்தையும் தங்கள் கொடுமை களுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங் களின் பேராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அள வில்லை. மற்றும் “பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்; கட வுளால் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எழுதி வைக்கப் பட்டு விட்டது. அதைப்பற்றி அதிகமாகக் கேட்கா தீர்கள்” என்று கொடுமைகளுக்குச் சாக்குச் சொல்லிக் கொண்டு, ஆயிரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக் குள்ளாக்கப்பட்டும் வருகின்றது.

பெரிய சமூகம் 

கொடுமைக்குட்படுத்தப்பட்டு வருகிறது

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றது. ஆதிதிராவிடர் களாகிய உங்களை விட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களை விட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போக வில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப் பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்று இழி பெயர்களுமிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவுளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென் கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க் கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்டபோதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப் பட்டு மிருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்போமென்று இழிவுக்கிடங் கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம்’ கேளுங்கள்!  ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்து வத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.  சுயமரியாதைக்காரர்கள் கோயில் குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கின்றார்கள்;  இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கிறது, சுவாமி போய்விடும் போலிருக்கிறது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடு கின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலி களுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டு மிருக்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரச்சார மோசத்தையுமுணராது அவர்கள் பிதற்றல் களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லு கிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன். உண்மையில் ஆஸ்தீக நாஸ்தீகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படு வதில்லை. உலகத்தில் அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமுக முன் னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங் களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக் காரர்களாகிய நாங்கள் தயாராயிருக்கிறோம். 

கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம்

மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந்தாலும் அதனை ஒழித்துத் தானாகவேண்டும் (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமை களுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயுமி ருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவுளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. (பெருத்த கரகோஷம்) கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவு ளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டுவந்த கடவுளும் மதமும் போகவேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை. (கரகோஷம்)

சமீபத்தில் நேப்பியர் பார்க்கில் கூடிய ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாட்டில் இந்துக்கள் எனச் சொல்லிக் கொள்ளப்படும் 6 கோடி மக்களாகிய ஆதிதிராவிடர்களை ஜாதிக் கொடுமையால் ஆலய உரிமையின்றி கொடுமைப் படுத்தப்படுவதால் இந்து மதத்தில் அவர்களுக்குச் சம உரிமையில்லாவிட்டால் வேறு மதத்தில் சேருவதுதான் உசிதமென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சம உரிமையில்லாதிருப்பதைவிட சாவதே மேல் என்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாயிருக்க முடியாது. அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை. ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நமது பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதி யில்லை. ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக் கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை. ராமானுஜர் ஜாதியில்லை என்றும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டார். தேவாரம் பாடியவர்களும் ஜாதியில்லை என்பதை விளக்கினார்கள் என்று சொல் மாத்திரத்தில் நிற்கின்றதேயன்றி உண்மையில் அக்கொடுமைகள் ஒழிவதற்கு மார்க்கமில்லாமல் தானிருக் கின்றது. நமது பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக் காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின் றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனு மேற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால் இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப் பட்டுவிடும்; அந்தத் தெருவில் போனால் சாமி செத்து விடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன. இதற்குச் சாஸ்திரம் இப்படிச் சொல்லுகின்றது; மதம் அப்படி மறுக்கின்றதென்று சாக்கும் சொல்லிக் கொண்டிருப்பதை எவ்வளவு காலத்திற்குத் தான் விட்டுக் கொண்டிருக்க முடியும்?

என்ன அயோக்கியத்தனம்

 நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனம் என்றுதான் கேட்கின்றேன். தீண்டப்படாதார், தாழ்ந்த வர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கும் உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர் களுக்கும் குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும், ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா வென்று கேட்கிறேன். இவ்வாறிருக்க, மக்களில் பெரும்பான்மையோரை ஜாதிக் கொடுமை களுக்கும் இழிவுக்கும் உட்படுத்தி வைக்க மதப் புரட்டுகளும் புராணப் புரட்டுகளும் தான் ஆதாரமாயிருக் கின்றன. மக்கள் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந் தடையாயிருக்கும் இம்மதத்தையும் புராணங் களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது?

நான் செத்த பிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப் படுமென்ற மூட நம்பிக்கையினால் பார்ப்பனன் காலைக்கழுவிச் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்காமலிருக்க செய்ய வேண்டு மென்பதற்காகவும்தான் நான் முஸ்லீமாகச் சாவேன் என்கின்றேன். (பெருத்த கரகோஷம்) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக் காரர்கள் தீண்டப் படாதார், அவர்களைத் தொட்டால் குளிக்க வேண்டுமென்ற ஒரு ஜாதியார் இன்று அவர்களைப் போல் பிள்ளை களைப் பெற்றால் போதுமென்கின்றார்கள். (பெருத்த நகைப்பு) மதம் புராணம் முதலிய புரட்டுகளுக்கு ஆளாகி முட்டாள் தனத்திலும் அடிமைத்தனத்திலும் ஆழ்ந் திருப்பவர்யாரென்றால் இந்துக்கள்தான் என்று சொல்ல வேண்டும். அதிலும் இந்நாட்டில் இழிவுபடுத்தப்படும் மக்கள் யாரென்றால் நாம்தான்.

பிறமதங்களில் பல பாராட்டத்தக்க சீர்திருத்தங்களேற்பட்டு அவர்கள் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். கிறிஸ்துவ மதத்தில் அவர்களுடைய கிறிஸ்துவைத் தூக்கிப் போட்டு விட்டு சுதந்தரத்திற்கு வழியான விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். மதத்தையும் கடவுளையும் நம்பி இருந்தது போதுமென்று அவர்கள் சுயமுயற்சியிலும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்பதனால் தான் ஆகாசத் தந்திகளையும் இறந்த வர்களை எழுப்பி ஆறு மணி நேரம் நடமாட வைப்பதுமான பல அற்புதங்களை கண்டுபிடித்து வருகின்றார்கள். அவர்கள் தற்போது கடவுள் செயலாகிய மனித சிருஷ்டி யையும் செய்யத்தக்க வல்லமை உடையவர்களாயிருப்பது அவர்களுக்கிருந்த மதபுராண மூடக்கொள்கைகளை ஒழித்து ஆராய்ச்சித் துறையிலிறங்கியதினாலல்லவா? (கரகோஷம்) அதுபோலவே மகமதியர்களும் இந்துக் களைவிட பலவகையிலும் மேலானவர்களாகத் தானிருக்கின்றார்கள். முஸ்லீம்களுள் ஜாதி வித்தியாசமும் மனிதனுக்குள் மனிதன் உயர்வு தாழ்வென்ற கேவல உணர்ச்சியும் காணப்பட வில்லை. ஆலயத்தில் அரசனா யினும் சாதாரண மனிதனாயினும் சமத்துவமாகத் தானிருந்து தொழுகின்றார்கள். அவனுடைய மதம் அவனுக்கு ஒற்றுமையையும் வீரத்தையும் கொடுப்பதாயிருக்கின்றது.  

திருவாங்கூரில் இந்துக்களை விட அதிகமாய் படித்தவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜாதி மதக் கொடுமைகளுக்கு உட்பட்டு துன்பமடைந்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆங்கு கிறிஸ்தவர்களாக்கி கல்வியளித்து விசேஷ முன்னேற்ற மடையச் செய்து விட்டனர். அவர்கள் போல என்றைக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும், இன்றைக்கும் இந்துக்களென்று நினைத்துக் கொண்டுள் ளவர்களுமான ஏழை மக்களோ மதத்தின் பெயராலும், இன்னும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கொண்டும் ரஸ்தாக்களில் வருவதற்கும் உரிமையின்றி மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்பட்டு வருகின்றனர்.

மிருகங்களிலும் கேவலமாய்....

திருவாங்கூரில் இந்து ராஜ்யமிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆங்குப் பெரும் பான்மையோர் கிறிஸ்தவர்கள்தான். அதற்குக் காரணம் ஜாதிக் கொடுமையும் சமயப் புரட்டுகளும் தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திருவாங்கூரும் கிறிஸ்துவ ராஜ்ய மாகிவிடுமென்பது திண்ணம். துருக்கியில் மதத்தையும் புராணத்தையும் மூட்டை கட்டி கடலில் போட்டுவிட்ட பின் தற்போது எவ்வளவு முன்னேற்ற மேற்பட்டிருக்கிற தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மதத்தை நம்பி கிலாபத் பாட்டுப் பாடிக் கொண்டி ருந்தபோது வெள்ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப் பயந்திருந்த துருக்கி தற்போது வெள்ளையரையும் நடுங்கச் செய்யும் நிலைமைக்கு வந்திருப்பதன் காரணமென்ன? இங்கு முஸ்லீம்கள் இன்னும் மதப்பித்து பிடித்து ஒன்றரை அங்குல தாடி வேண்டுமா, அல்லது இரண்டங்குலமாவென்று அளவு பார்த்து தாடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கும்போது துருக்கியில் முஸ்லிம்கள் மழுங்க சிரைத்து விடவேண்டு மென்றும், இல்லாவிட்டால் தண்டிக்கப் படுமென்றும், சொல்லப்படுகின்றது.

மதத்தை ஒழிக்கத்தான்....

இங்கு எந்த வர்ண லுங்கி கட்டுவது, எப்படிக் குல்லாய் போடுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தாலும், அங்கு வெள்ளைக்காரர்களைப் போல் உடைதரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப் படுகின்றது.  மதத்தை அழிக்கச் சுயமரியாதை இயக்கம் வந்ததா என்று சிலர் கேட்கலாம். ஜாதிக் கொடுமைகளையும் விபரீத வித்தியாசங்களையும் நிலைநாட்டுவதா யிருந்தால் அந்த மதத்தை ஒழிக்கத்தான் சுயமரியாதை இயக்கம் இருக்கின்றதென்றுதான் சொல்லுவேன். (கரகோஷம்) உண்மையில் சுயமரியாதை உணர்ச்சி உங்களுக்கு இருக்குமானால் உங்கள் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் தடையாயிருக்கும் மதக்கட்டுப் பாடுகளையும் சுவாமி பூதமென்பதனையும் உடைத்தெறியப் பின்வாங்க மாட்டீர் களென்பது திண்ணம். (கரகோஷம்) மிருகத்திலும் கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீங்களும் மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப் போல சுதந்தரமும் சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்தரத்திற்கு எது தடையாயிருந்தாலும் அதனை ஒழிக்க முற்படுவீர் களானால் தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய் பறந்துவிடுமென்பது திண்ணம். (கரகோஷம்)

வடநாட்டில் மதம் ஒழிந்தாலும் மற்றென்ன ஒழிந்தாலும் ஒழியட்டும், சுதந்திரம்தான் பெரிதெனப் போராட முற்பட்டதனால்தான் நேற்றுகூட ஒரு ஆலயத்தில் சகல வகுப்பாகும் தாராளமாகச் சென்று கடவுளை வழிபடுவ தற்குக் கதவுகள் திறந்து விடப்பட்டன. உங்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமையும், குளங்களில் குளிக்கும் உரிமையும் கிடைத்து விட்டால் அதனுடன் நீங்கள் திருப்தியடைந்துவிடவும் முடியாது. நீங்கள் சுதந்திர மடைய விரும்புவது போலவே உங்கள் பெண்களுக் கும் சுதந்தரமளிக்க நீங்கள் தயாராக முன்வர வேண்டும். அப் போதுதான் உங்களுள் உண்மையான முன்னேற்றமேற்படும். உங்கள் பெண்களுள் மறுமணத்தை விரும்பும் விதவை களுக்கெல்லாம் மறுமணம் செய்ய வேண்டும். இவ்வழக்கம் உங்களுள் இல்லாதிருக்கவில்லை. ‘‘அறுத்துக் கட்டும் ஜாதி’’, இழிந்த ஜாதி என்று சொல்லப்பட்ட போதிலும் அறுத்துக் கட்டுவதால் அறுத்துக் கட்டாத உயர்ந்த ஜாதியில் நடக்கும் பல கேவல மான சிசுக் கொலைகளும், கழுத்தைத் திருகிக் கள்ளியில் போடுவதான கொடுமைகளில்லா திருப்பது எவ்வளவோ உசிதமல்லவா?

கலப்பு மணத்தின் மூலமாகத்தான்...

ஒழுக்கத்திலும் படிப்பிலும் முன்னேற்றமடைந் திருந்தால் உங்கள் பெண்களை நாங்கள் பெற்றுக் கொண்டு, குணமும், படிப்பும், ஒழுக்கமுமுள்ள உங்கள் பிள்ளை களுக்கு எங்கள் பெண்களைக் கொடுக்கவும் பின்வாங்க மாட்டோம். இத்தகைய கலப்பு மணத்தின் மூலமாகத்தான் ஜாதி வித்தியாசப் பேய் சீக்கிரத்தில் ஒழியும்.  (கரகோஷம்) ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத் தான் எல்லாக் கட்டுப்பாடு களுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கைகளிருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கை கழுவினதும், கதவைச் சாத்திக் கொள்ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும் போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, அய்யாவுக்கு மோர் விடு, நான் போய்விட்டு வருகின்றேன் என்று மனைவி சொல்லிவிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும். (நகைப்பும், கரகோஷமும்) ஆண்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். பெண்களுக்குத் தான் பதிவிரதத் தன்மை அவசியமென்ற பல அர்த்தமற்ற கொள்கைகளினால்தான் ஆண்களுக்குள் ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் இடமேற்படுகின்றது. மதத்தின் பெயராலும் மற்றதன் பெயராலும் செய்யப்படும் அநீதி களையும், அக்கிரமங்களையும் ஒழிப்பதில் அம்மதங் களையே ஒழிக்க வேண்டுவது அவசியமானாலும் அதற்கும் தயங்கக்கூடாது. மக்கள் சுதந்திரமடைந்து சுகமாய் வாழ் வதற்கு வழி என்ன எனக்குத் தோன்றியதைப் பிறர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அஞ்சாது உண்மையை எடுத்துச் சொன்னேன். என் உணர்ச்சிக் குட்பட்டதைச் சொன் னேனே தவிர, இவர் அவருக்குச் சொன்னார், அவர் எனக்குச் சொன்னார், நீங்கள் அதன்படி நடக்காவிட்டால் பாவம், நரகத்திற்குப் போவீர்களென்ற கட்டுப்பாடு ஒன்றும் சொல்லவில்லை. நான் சொன்னவற்றை நீங்கள் ஆராய்ந்து சரி எனப்படுவதைக் கொண்டு, சரி இல்லாததை ஒதுக்கி என் மீது அனுதாபங் காட்டும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.  

03.08.1929 அன்று சென்னை இராயபுரம் கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழாவின் போது ஆற்றிய சொற்பொழிவு  குடிஅரசு  - 11.08.1929  


செவ்வாய், 7 நவம்பர், 2023

அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலை தருவதே சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார்

   

4

சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத் தையும் தன் மதிப்பையும் உண்டாக்க கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல் லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடு தலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரி யாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம். இதன் உண்மையை விளக்க வேண்டு மானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத் தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும், சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்க ளுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த் தாலும் கூட இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும். நிற்க;

தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல் அன்னியர்களின் முட்டாள்தனத் திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசியக் கூட்டத்தார்கள் என்பவர்களும், சமய இயல்பில் வைதிகப் பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும் இவ்வியக்கத்தால் தங்களுடைய வாழ்விற்கும் பெரு மைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி இவ்வி யக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கம் என்றும் சமயத் துரோக இயக்கம் என்றும், நாத்திக இயக்கமென்றும், சொல்லிக் கொண்டு, எவ்வளவோ முயற்சியும் கட்டுப் பாடுமான சூழ்ச்சிகள் செய்துங்கூட, இவ்வளவுக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க அடிக்க பந்து எழும்புவதுபோல், விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேச முழுவதும் பஞ்சில் நெருப்பு பிடிப்பது போல் மக்களிடம் பரவிக் கொண்டே போகின்றது.

இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ‘சுயராஜ்யா’ ‘தமிழ்நாடு’ ‘நவசக்தி’ ‘லோகோபகாரி’ ‘ஊழியன்’ முதலிய தேசியப் பத்திரிகைகள் என்பவைகளும், மற்றும் பல குட்டிப் பத்திரிகைகளும், கூலிப்பத்திரிகைகளும் மனதார நடந்தவைகளைத் திரித்து கூறுவதும் கருத்துகளை மாற்றிக் கூறுவதும், பொது மக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாகும் படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன.  

இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து (வடநாட்டிலிருந்து) திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரச்சாரம் செய்தும் பார்த்தார்கள். இன்றியும் ரகசியமாகச் செய்த இழிதகைப் பிரச்சாரத்திற்கு அளவே இல்லை. என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும் நடவடிக்கைகளைப் பற்றியும் ஒழுக்கங்களைப் பற்றியும், எவ்வளவோ கேவலமாகப் பேசியும் கூலி கொடுத்து காலிகளை ஏவிவிட்டு பேசச் செய்தும் செய்யப்பட்ட இழிவுப் பிரச்சாரத்திற்கு அள வில்லை. இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்று விடுவதாகவும் குத்தி விடுவதாகவும் சுட்டுவிடுவதாகவும் மற்றும் பலவிதமாய் அவமானப்படுத்துவதாகவும் கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும் பொய்க்கையெழுத்திட்ட கடிதங் களுக்கும் கணக்கே இல்லை. மற்றும் நமக்குள் இருந்த தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவில்லை. இவ்வளவு தொல்லைகளையும் சங்கடங்களையும் தாண்டி, இவ்வியக்கம் இன்றையதினம் ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசியத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் முக்காடிட்டு மூலையில் உட்கார வைத்தும், பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்டப்பிரசண்டவாதிகள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கில்லாமல் செய்தும் விட்டதுடன் ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப்பையும், பண்டித இறுமாப்பையும், ‘கசகச’ வென்று நசுக்கிக் கொண்டு வருகின்றது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது இயக்கத்திற்கு விரோதமாக ஏதாவது ஒரு அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக் கின்றதா என்று யாராவது பரீட்சை செய்து பார்க்க விரும் பினால் இதுபோது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களையும் அவற்றின் முடிவுகளையும் கவனித் துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.

 எனவே இந்த நிலையில் இன்றைய தினம் நமது நாட்டில் சுயமரியாதை இயக்கமும் அதன் எதிர்ப்புகளும் இந்நிலையில் இருந்து வருவது ஒரு புறமிருந்தாலும் அவ்வியத்தின் உண்மையான கொள்கைகள் தான் என்ன என்பதைப் பற்றிச் சற்று கவனிப்போம். சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்காய் இருக்கின்றது, மற்றபடி சமுக சீர்திருத்தத் துறையில் எல்லாம் சரி என்று பார்ப்பனரல்லாத தேசியவாதிகள் என்பவர்கள பலர் நமக்கு எழுதியிருக்கின்றார்கள். அதாவது, அரசிய லில் சைமன் கமிஷனை பகிஷ்கரிக் காததும், சட்டசபையில் ஒத்துழைப் பதும் அரசியலுக்கு விரோதம் என்பது அவர்கள் கருத்து. ஆனால் இப்போது சைமன் கமிஷனை பகிஷ்கரித்தது பைத்தியக்காரத்தனம் என்று அவர் களுக்கே தோன்றி விட்டதைப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தீர்க்க தரிசன முள்ளது என்பது விளங்கும். அதாவது காங்கிரசைச் சார்ந்த திரு.ஆர்.கே. சண்முகம் எம்.எல்.ஏ. அவர்களும், சுயாட்சி சங்கத்தைச் சார்ந்த டாக்டர் பெஸண்ட் அம்மை அவர்களும் நமது குறைகளைப் பார்லி மெண்டு முன்பாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் பார்லிமெண்டை நம்ப வேண்டு மென்றும் அதைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்றும் சொல்லிவிட்டார்கள். இதை எந்த காங்கிரஸ்வாதியும் சுயாட்சிவாதியும் தேசியவாதியும் நாளிதுவரை ஆட்சே பிக்கவில்லை. தவிர, காங்கிரஸ்காரர்களும் இவ்வருஷத் திய காங்கிரஸ் தலைவர்களைத் தேர்ந் தெடுப்பதில் சீமைக்குப் போய் பார்லிமெண்டாரிடம் நமது குறைகளை எடுத்துச் சொல்லி வாதம் செய்து அவர்களிடம் சுயராஜ் ஜியம் பெற தகுதியுடைவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் பேசி இருக்கின்றார்கள். இதையும் எந்த பகிஷ்காரவாதியும் இதுவரை ஆட்சேபிக்கவே இல்லை. எனவே பார்லிமெண்டிடம் நமது கட்சியையோ குறைகளையோ சொல்லிக் கொள்ள நமக்கு இஷ்டம் இருக்கும் போது, சீமைக்குச் சென்று பார்லிமெண்டிடம் போகச் சவுகரியமும் சக்தியும் இல்லாத ஜனங்கள் பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்டு இவ்விடயத்திற்கு அனுப்பி இருக்கும் பார்லிமெண்டு பிரதிநிதிகளிடம் நமது கட்சியையோ, குறைகளையோ எடுத்துச் சொன்னதில் தேசியத்திற்கோ தேசிய சுயமரியாதைக்கோ என்ன கெடுதி நேர்ந்துவிட்டது என்று கேட்கின்றோம். அடுத் தாற்போல் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகச் சொல்லுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்று பார்ப்போம். முதலாவது, இப்போது ஒத்துழையாமை என்பது எவ்வித தேசியத் திட்டத்திலும் இல்லவே இல்லை. சட்டசபையில் ஏதாவது செய்வதற்கு இடமிருப்பதாகச் சொன்னாலும் அதுவும் ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு மாத்திரம்தான் சொல்லிக் கொள்ள முடியுமே ஒழிய மற்றபடி சட்ட சபைக்குள் புகுந்துவிட்டால் எந்த விதத்திலும் ஒத்துழை யாமையோ முட்டுக் கட்டையோ சிறிதும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். ஏனெனில் சட்டசபைக்குப் போனவர் களுக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்நிபந்த னைப்படி அவர்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டியவர் களாயிருக்கும்போது அங்கு எவ்விதத்தில் ஒத்துழை யாமை செய்ய முடியும்? நமக்கு வேண்டிய எவ்வித அரசியல் சட்டங்களும் சமுக சீர்திருத்தச் சட்டங்களும் சமத்துவ சட்டங்களும் சட்ட சபைகளின் மூலம் தான் செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக் கின்றது. அப்போது சர்க்காரிடம் போகாவிட்டால் சர்க்கார் சம்மத மில்லா விட்டால் எப்படி சட்டங்கள் செய்து அவை களை அமலுக்குக் கொண்டு வரமுடியும்? அன்றியும், சர்க்காரால் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுக்குக் கட்டுப் பட்டு சர்க்கார் தயவை எதிர்ப்பார்ப்பதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளாமல் இருக்கச் சட்டசபையில் எப்பேர்ப் பட்ட தேசிய, அமிதவாதிக்கும் சிறிதும் இடமே இல்லை.

இப்போதும் திரு. நேரு உட்பட ஒவ்வொரு தேசிய வாதியும் அப்படித்தான் நடந்து கொள்ளுகின்றார்கள் உதாரணமாக, இப்போது சர்க்கார் செய்யும் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் திருவாளர்கள் சாமி. வெங்கடாசலம் செட்டியார், வெங்கிடபதிராஜு, நாகேஸ்வரராவ் பந்துலு ஆகியவர் களெல்லாம் சர்க்கார் நியமனம் பெற்றுச் சர்க்காருடன் ஒத்துழைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள். சென்னை மாகாண ஒத்துழையாமை தலைவர் என்பவர் அதாவது காந்தியார் கண்ணுக்கு இந்தியா முழுவதற்கும் ஒத்துழையாமை தத்துவத்தை உள்ளபடி உணர்ந்த ஒரே ஒரு உண்மை ஒத்துழையாதாராகத் தோன்றும் திரு.சி.ராஜகோபாலாச்சாரியாரும் மதுவிலக்குப் பிரச்சாரம் சம்பந்தமாய் சர்க்கார் நியமனத்தைப் பெற்று சர்க்காருடன் ஒத்துழைக்க சம்மதித்திருக்கின்றார். எனவே, இனி யார் எவ்விதத்தில் சர்க்காரை பகிஷ்கரித்திருக் கின்றார்கள் என்பது விளங்கவில்லை. வேண்டுமானால் திரு.சத்திய மூர்த்தி போன்றவர்கள் குடிகாரர், வெறிகாரர் போல் காலித்தனமாய் சட்டசபை பார்ப்பனரல்லாத அங்கத் தினர்களையும் மந்திரிகளையும் நிர்வாகசபை அங்கத் தினர்களையும் வைதுவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்.

 இந்து மகாசபை, முஸ்லீம் சபை, கிறிஸ்தவ சபை ஆகிய மத சபைகள் தீண்டப்படாதார் முதலியவர்கள் என்கின்ற சமூக சபைகள் எல்லாம் ஆதிமுதலிலிருந்தே ஆட்சேபித்துக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் என்பவர்களுக்குள் பார்ப்பன சமுகசபை, பார்ப்பனரல்லாத சமூகசபை ஆகியவைகளும் எதிர்க்கின்றன. எனவே நேரு திட்ட விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் மீது பழி சுமத்த ஏதாவது இடமிருக்கின்றதா என்று கேட் கின்றோம். அதுபோலவே சமய சமூக விஷயங்களிலும் சுயமரியாதை இயக்கம் எந்த விதத்தில் நாத்திகமும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு விரோதமானதென்பது அடுத்தாற்போல் யோசிக்க வேண்டிய விஷயமாகும். சுயமரியாதை இயக்கத்தின் சமய சமூக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மானங்களே போதிய அத்தாட்சியாகும். அதைக் கொண்டேதான் தேசியவாதிகள், மதவாதிகள் என்பவர்களும் கூட்டம் போட்டு பேசுகின்றார்கள். ஆகவே அதைப் பற்றி சிறிது யோசிப்போம்.

1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.

2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.

3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. 

4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங்களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.

5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.

7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷ னுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.

8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.

9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.

புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக் கக்கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்ப தற்கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.

உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொரு ளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும் படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.

10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.

11. பெண் உரிமை விஷயத்தில்; பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.

12. “தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாதார்” களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.

13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.

14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொதுநிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.

15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.

மேலும் இவைகளும் அநேகமாக சிபாரிசு செய்வது, கேட்டுக் கொள்ளுவது, முயற்சிக்க வேண்டியது என்கின்ற அளவில் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப் படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆதரிப்பது என்றும் எவை எவை தேசியத்திற்கும், காங்கிரசிற்கும் விரோத மானவை என்றும் எந்த யோக்கியமான தேசியவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறைகூவி அழைக்கின்றோம். உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும், கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்று, சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழிதகைமையது என்றும் அறிவி னர்க்கு தற்றென விளங்கவில்லையா என்று கேட் கின்றோம்.

எது எப்படி இருந்தபோதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்களை ஒழித்தல், கோவில் கட்டுவதையும் உற்சவங்கள் செய் வதையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும் இவ்விஷயங்களில் பொது மக்களுக்கு எவ்வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்பதும் இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க் கையைக் கவனித்து வருபவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கி வருகின்றது. அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆதரவை பரீட்சிப்பதற்கு இவ்வியக்க சம்பந் தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும் ஜில்லாக்கள் தோறும் தாலுகாகள் தோறும் நடைபெறும் மகாநாடுகளும் அங்கு கூடும் கூட்டங்களும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும் அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்றதென்பது சிறு குழந்தையும் அறிய முடியும்.

நிற்க; தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்டக் கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக் காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்ததுதானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம். பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாசமெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங் களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவை களைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம். அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படு கின்றது. இவைகளைத் தவிர வேறு எவ்வித வித்தியா சங்கள் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். ஆகவே, பொது ஜனங்கள் தயவு செய்து இவைகளை எல்லாம் நன்றாய் கவனித்து தங்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, இதன் குணதோசங்களை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டு மாயும், வந்த முடிவை காலந்தாழ்த்தாமல் அமலுக்குக் கொண்டு வர வேண்டுமாயும் ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 25.08.1929

எது இந்து மதம்? - தந்தை பெரியார்

  

 5

இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக் கொள்ளுகிறார்.

இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல் நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டுவந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமுகத்தாருடைய சடங்கு, பிரார்த்தனை, வழிபடு கடவுள்கள் முதலாகியவைகளுக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் ஒரே பெயராக இந்துமதம் அதாவது இந்தியர்களின் மதம் என்பதாகப் பெயரிட்டு விட்டார்கள்.

அக்காலத்தில் இருந்த திராவிடர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், ஆரியர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், மலைநாட்டு மக்கள் பழக்கவழக்கங்களும் இந்துமதம் என்றும், ஆரியசமாஜமும் இந்துமதம் என்றும், பிரம்மசமாஜமும் இந்து மதம் என்றும், வேதாந்தமும் இந்து மதம் என்றும், கடவுளையும் மதத்தையும் சரீரத்தையும் உயிரையும் துறந்த துறவறமும் இந்துமதம் என்றும், பவுத்தர்கள் பழக்க வழக்கங் களுக்கும் இந்துமதம் என்றும், நாத்திகர்கள் கொள்கைகளுக்கும் இந்துமதம் என்றும், இப்படிப் பலவிதமாய் அவர்கள் அதாவது கிறித்துவர்கள், மக மதியர்கள் தவிர மற்ற எவர்களது நடவடிக்கைக்கும் இந்துமதம் என்றே பேர் வைத்து விட்டார்கள். அதா வது இந்தியர்களின் மதம் எனச் சொல்லிவிட்டார்கள்.

ஆகவே, இந்துமதம் என்றால் இந்தியர்கள் மதம் என்றுதான் அர்த்தமே ஒழிய, ஒரு தனிப்பட்ட குறிப்பான கொள்கைகளுக்கு இந்து மதம் என்று பெயரில்லை என்றாலும்,  அக்காலத்தில் ஆரியர்கள் சிறிது செல்வாக்குப் பெற்று இருந்ததால் அவர்கள் தங்கள் பழக்க வழக்கம், சடங்கு, தங்களின் வழிபடு கடவுள்கள் ஆகியவைகளையே பிற இந்தியர்களின் மீதும் சுமத்தி, அதற்கு அதிகமான செல்வாக்கை உண் டாக்கி வைத்துக் கொண்டிருந்தபடியால் ஆரியர்கள் பழக்கவழக்கம், சடங்கு, வழிபடு கடவுள் அவர்களது இலக்கிய ஆதாரங்கள், சாத்திரங்கள், புராணங்கள் என்பன முதலியவைகளே இந்துக்களின் மதமாகவும், மத ஆதாரங்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டன. ஆரியர்களுக்கு எதிர்ப்பான வைகளும் ஆரியர்கள் அல்லாதவர்களும் கூட விவகாரத்திற்கு இடமில்லாமல் போகட்டும் என்கின்ற காரி யத்திற்காகவே, எல்லாம் இந்துமதம்தான் எல்லோரும் இந்துக்கள்தான் என்றும், அதுவும் இந்துமதம் இதுவும் இந்துமதம் என்றும், இந்துமதத்தில் எல்லாக் கொள்கையும் உண்டு என்றும், ஒரு இந்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும், பலசமயங்கள் சேர்ந்தது இந்து மதம் என்றும், அவ்வப்போது தோன்றிய பல பெரியார்களின் அபிப்பிராயங்கள் எல்லாமுமே இந்துமதமாக இருக்கிறது என்றும், எந்த மதக்கருத்தும் இந்துமதத்தில் உண்டு என்றும், எப்படிப்பட்டவனும் இந்துவாய் இருக்கலாம் என்றும், புத்தர்கள், சமணர்கள், ஜெயினர்கள் எல்லாருடைய அபிப்பிராயமும் இந்து மதத்தில் இருந்து வந்ததுதான் என்றும், இந்து மதத்துக்கு பொருத்தமானதே என்றும், சொல்லி பொதுவாக இன்று மகமதியர்கள் கிறிஇதவர்கள் அல்லாத எவரும் இந்துக்கள் என்றே சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்து மதம் என்பதாக, இந்துக்களுடைய பழைய ஆதாரங்கள் என்று சொல்லும்படியான எதிலும் ஒரு வார்த்தை கூடக் கிடையாது.

இந்தியாவின் பெயரைக் குறிப்பதற்கு இந்து  என்று ஒரு வார்த்தை காணப்படலாமோ என்னமோ அதுகூட தைரியமாய் சொல்வதற்கு இல்லை. இந்தியா என்கின்ற பெயர்கூட இந்துமத ஆதாரங்கள் என்பவைகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்துமதம் என்பதற்கு என்னதான் அர்த்தம் என்று பழைய அதாவது சுமார் 100 வருஷம், 200 ஆண்டு களுக்கு முந்திய அய்ரோப்பிய அகராதிகளையும், அய்ரோப்பிய கலைகளையும் பார்ப்போமானால் மகமதியர்கள் அல்லாதவர்கள் அனுஷ்டிக்கும் மதம் என்றும், ஆரியர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சொல்லும் மதப்பெயர் என்றும், ஆரியர்கள் அனுஷ்டிக்கும் ஆச்சார அனுஷ் டானங்கள் என்றும்தான் காணப்படுகின்றனவே அன்றி வேறு ஒன்றும் சொல்லப்படுவதாகக் காண முடியவில்லை.

இந்து மதம் பிரத்தியட்சத்தில் என்னமாய் இருக்கிறது என்று பார்ப்போமானால் விக்கிரகங்களை வணங்குவது, ஜாதி வித்தியாசங்களை - உயர்வு தாழ்வுகளைப் பாராட்டுவது ஆகிய இந்த இரண்டு காரியம்தான். இந்த உலகத்தில் வேறு எந்ததேச மக்களிடத்திலும் வேறு எந்த மதத்தாரிடத்திலும் இல்லாத குணங்கள் கொண்டு இருந்து வருகிறது.

இந்த இரண்டு காரியங்களைப்பற்றி அறிஞர்கள் என்பவர்கள் வெகு காலத்துக்கு முன்பே தவறுதலானது என்றும், அவசியமற்றது என்றும் முடிவு கட்டி விட்டார்கள். அதற்கும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ள பெரியார்கள் என்பவர் களுடைய வாக்கும் உபதேசமும் இருந்து வருகிறது. இவைகளையும் இந்துமத ஆதாரமாகவும் அப்பெரி யார்களையும் இந்து மதத்தில் தெய்வீக அம்சம் பெற்றவர்கள் என்றும் சொல்லப்படுவதோடு விக்கிரக ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவனும், ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவற்றை வெறுப் பவனும், இகழ்பவனும் கூட இந்துதான் என்றும், அதற்கும் ஆதாரம் இந்து மதத்தில் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே, இப்போது எது இந்து மதம் அல்லாதது என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

ஆனால் தேசியத் தலைவர்கள், மதத்தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களான தோழர்கள் காந்தியார், மாளவியா முதலாகியவர்கள் இந்துமதம் என்று எதைச் சொல்லுகிறார்கள் என்று பார்த்தால் வர்ணாசிரமத்தை பரிசுத்தமாக்கி நிலை நிறுத் துவதுதான் இந்துமதம் என்கின்றார் காந்தியார்; களிமண்ணும், கங்கை ஜலமும் கூடவே இருக்க வேண்டியது தான் இந்து மதம் என்று செய்து காட்டுகிறார் மாளவியா.

மகமதிய ஆதிக்கம் தலையெடுக்காமல் செய்வது தான் இந்துமதம் என்கிறார் மூஞ்சேயாரும் பரமானந்தனாரும். மற்றபடி சங்கராச்சாரிகளுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? இராமானுசாச்சாரியா ருடைய இந்து மதம் எப்படிப்பட்டது? பண்டார சந்நதிகளுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? மனு தர்ம சாத்திர இந்துமதம் எப்படிப்பட்டது? இதிகாச மாகிய கீதையுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? புராணங்களுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? சைவர்களுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? மற்றும் பார்ப்பனரல்லாத சைவர்கள் இந்துமதம் எப்படிப் பட்டது? வைணவர்களுடைய இந்துமதம் எப்படிப் பட்டது? என்பவைகளைப் பற்றி நாம் விவரிக்க இதில் இடம் வைத்துக் கொள்ளவில்லை.

எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்களைப் போலவும், கிறிஸ்துவர்களைப் போலவும் மதம் என்ப தற்கு இருந்துவரும் ஆதாரம், கொள்கை, குறிப்பிட்ட வர்களுடைய உபதேசம் என்பதாக எதுவும் இல்லாமல், வார்த்தையளவில் குருட்டு அபிமான அளவில் இந்துமதம் இருந்து வருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்த லட்சணத்தில் உள்ள இந்துமதம் ஒரு மனி தனை தீண்டக்கூடாதவன் என்றும், ஒரு மனிதனை தாசிமகன், வைப்பாட்டி மகன், அடிமை மகன் என்றும் சொல்லிக்கொண்டு, உரிமையும் பாராட்டி 100க்கு 97 மக்களை சுயமரியாதையற்றவர்களாக்கி, 100க்கு 

25 மக்களை தீண்டாதவர்கள், சண்டாளர்கள் என்று இழிவுபடுத்தி வருவதென்றால் இப்படிப்பட்ட இந்தமதம் உலகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? இது அடியோடு ஒழிக்கப்படுவதில் என்ன தப்பு? என்றுதான் கேட்கிறோம்.

ஜாதி அகம்பாவம் பிடித்த சோம்பேறிப் பார்ப் பனியக் கூட்டம் தங்களது சுயநலங்களை உத்தேசித்து இந்துமதம் ஒழியச் சம்மதப்பட மாட்டார்கள் என்பதோடு “இந்து மதத்தை ஒழிக்க உன்னாலும் முடியாது உங்கள் பாட்டனாலும் முடியாது” என்று சொல்லுவார்கள். ஆனால் அது வேறு விஷயம். தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த ஒரு ஆள் இந்து மதத்தை விட்டுவிடுகிறேன் என்றும், “சண்டாளர்கள்”, “இழிமக்கள்” என்று சொல்லக்கூடிய ஒரு கூட்ட மக்களின் மகாநாட்டில் ‘‘இந்து மதத்தை விட்டுவிட வேண்டும்” என்று ஒரு தீர்மானம் செய்தவுடன் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள தேசியத் தலைவர்கள், தேசியப் பத்திராதிபர்கள், மகாத்மாக்கள், மாளவியாக்கள், இந்துமதத் தலைவர்கள், “வீரர்கள்,” “தியாகிகள்”, “சத்தியாக்கிரகிகள்” எல்லோருக்குமே தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டதுடன் இதற்காக எத்தனை பொய்புரட்டு, ஏமாற்று, தந்திரமாகிய இழிகாரியங்கள் எல்லாம் செய்து, “அம்பேத்கர் அவ்வளவு பெரிய மனுஷன் அல்ல” என்றும், “பம்பாய் மாகாண தீண்டப்படாதார் மகாநாடு தக்க பிரதிநிதித்துவம் பொருந்தியது அல்ல” என்றும் தாங்கள் கூப்பாடு போடுவது போதாமல் அவ்வகுப் பிலேயே பல வயிற்றுச் சோற்றுக்கு கருப்பன்களைப் பிடித்து, ஒரு திராம் இரண்டு திராம் சாராயம் வாங்கிக் கொடுத்து எழுதச் சொல்லியும், எழுதினதாக ஒப்புக் கொள்ளச் சொல்லியும், இவ்வளவு பாடுபடுவதைப் பார்க்கும்போதே முடியாது என்று சொல்லுபவர்கள் உண்மையாக நம்புகிறார்களா? அல்லது பயந்து நடுங்கி அப்படி உளறுகிறார்களா? என்பது விளங்கும்.

இந்துமதம் நாளுக்குநாள் ஒழிகிறதா இல்லையா என்பதும், பிற மதம் நாளுக்கு நாள் ஓங்குகிறதா இல்லையா என்பதும், ஒரு 50 ஆண்டு ஜன கணிதத்தைப் பார்த்தால் தானாகவே விளங்கும்.

ஆகையால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்தவர்கள் இப்பார்ப்பனர்களுடைய மிரட்டலுக்குப் பயப்படாமல், சித்திரத்தில் படம் எழுதக்கூட ஒரு இந்துவின் பழைய சின்னம் இல்லாத அளவுக்கு, இந்து மதம் இன்னும் புரட்டான ஒரு கட்டும், சூழ்ச்சியும் அழிய வேண்டியது அவசியமென்றும் அது அழிந்துபோகப் போவது உறுதிதான் என்றும் தைரியமாய்க் கூறுவோம்.

குடிஅரசு - கட்டுரை - 19.06.1948


தமிழ்க் காசுவும் தந்தை பெரியாரும்

  

தமிழ்க் காசுவும் தந்தை பெரியாரும்

[நவ.5 : கா.சுப்பிரமணியனார் 135ஆவது பிறந்த நாள்]

வெற்றிச்செல்வன்

4

தமிழ்க் காசு என்றழைக்கப்பட்ட கா.சுப்பிரமணி யனார் (கா.சு. பொ.ஆ. 1888 - 1945) தமிழையும் சைவ நெறியையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். அந்தக் காலத்திலேயே எம்.எல். பட்டம் பெற்றதோடு, தாகூர் சட்ட விரிவுரையாளர் என்கிற சிறப்புத் தகுதியையும் பெற்றவர். சமயம், நீதி, வரலாறு, இலக்கியம் என்று பல்வேறு துறைகளிலும் தனது தடத்தைப் பதியச் செய்தவர்.

1920களில் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின்னர் எழுந்த கடவுள் மறுப்புப் பரப் புரைக்கு, கா.சுப்பிரமணியனார், மறைமலையடிகளார், திரு.வி.கல்யாணசுந்தரனார் உள்ளிட்டோர் கடுமை யான எதிர்வினை ஆற்றினர். 1929ஆம் ஆண்டு மே மாதம் திருப்பாதிரிப்புலியூரில் மறைமலையடிகள் தலைமையில் சைவர் மாநாடு கூட்டப்பெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே ‘கடவுள் உண்டென்னும் கொள்கை இன்றியமையாதது' என்பதுதான். கோயிலில் வழிபடுவதற்கு உயர்வு தாழ்வு பாராட்டுதல் கூடாது, தேவதாசிகளுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாது என்பன போன்ற முற் போக்கான தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. 

இம்மாநாட்டுக்குச் சில மாதங்கள் முன்னர்தான்  தந்தை பெரியார் முதல் சுயமரியாதை மாநாட்டைச் செங்கல்பட்டில் கூட்டியிருந்தார். அதில் கோயில்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் தீண்டாமை என் பதை ஒழித்து, அனைவரும் பயன்படுத்துவதற்கான உரிமையைக் கொடுக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கோயில் நுழைவுப் போராட் டங்களைச் சுயமரியாதை இயக்கத்தினர் முன்னெ டுத்து வந்தனர். மேலும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற பரப்புரையினையும் பெரியார் தனது 'குடிஅரசு' இதழின் வாயிலாகத் தொடர்ந்து மேற் கொண்டு வந்தார். சைவர் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களைப் பார்க்கும்போது, சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் சைவர் மாநாட்டிலும் எதிரொ லித்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

1937ஆம் ஆண்டு திருச்சியில் 'சென்னை மாகாண 3ஆவது தமிழர் மாநாடு' நடைபெற்றது. அம்மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசியவர் கா.சுப்பிரமணியனார். "தமிழர் மொழி, கலை, நாகரிகம் ஆகிய விஷயங்களில் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க முடிவு கூற உரிமையும், ஆற்றலும் உடையவர்" என்ற பாராட்டுரையோடு விடுதலை நாளிதழ் இவரது மாநாட்டு உரை முழுவதையும் வெளியிட்டது (விடுதலை 28.12.1937, 29.12.1937). 

இம்மாநாட்டில் தமிழர் என்பதற்கான வரையறையைக் கா.சு. அளித்தார். "தமிழர் என்பவர் தமிழைத் தாய் மொழியாக உடைய வர்கள் ஆவர். தமிழ்நாட் டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கரு தாதவர் தமிழர் ஆக மாட்டார், தமிழ் நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போல் போற்று பவரைத் தமிழர் என்பது இழுக்காகாது" என்றார். 

மறைமலையடிகளும், கா.சுப்பிரமணியனாரும் எனது வலதுகையும் இடதுகையும் போன்றவர்கள் என்றார் பெரியார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தோடு கைகோத்தவர் கா.சு. 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது, தந்தை பெரி யாரைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் பேச வைத்தார், தனது இறுதிக் காலத்தில் நோயுற்று அவதிப்பட்டார் கா.சு. அப்போது அவருக்கு உதவி யாக மாதந்தோறும் 50 ரூபாய் அனுப்பி உதவியவர் பெரியார். இவ்விரு ஆளுமைகளும் கடவுள் ஏற்பு-மறுப்புக்கொள்கையில் இருவேறு துருவங்களாக முரண்பட்டு இருந்தபோதும், தமிழ் மொழிப் பாதுகாப்பு தமிழர் நலன் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்பட்டது நினைவு கூரத்தக்கது.

நன்றி: 'இந்து தமிழ் திசை', 4.11.2023