வியாழன், 25 ஜூன், 2015

சைவரும் - வைணவரும்! -சித்திரபுத்திரன்

வெள்ளி, 07 பிப்ரவரி 2014  


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?
சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?
வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
சைவர்: என்ன சந்தேகம்?
வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!



உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!

      



கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?
உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதது எதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.
அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? என்ற கேள்வி எழுவது சகஜமே!
பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவை ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!
அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தான் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளை யுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!
இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதனம்?
இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்; இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!


தமிழருக்கு மதம் கிடையாது




எங்கள் கவலையெல்லாம் மக்களிடத்தில் ஒரு புதிய உணர்ச்சி ஏற்படவேண்டும். மாறுதல் வேண்டும். மக்களிடத்தில் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றில் காட்டுமிராண்டித்தனமான புத்தி இருக்கிறது. இது மாற வேண்டும் என்று கருதி அதற்காகப் பாடுபடுகிறோம். எங்கள் கட்சிக்குப் பெயர் தமிழர் கட்சியாகும். தமிழர் கட்சியின் லட்சியம் தமிழர் நலன் பற்றியதேதான். மற்ற எந்தக் கட்சிக்கும் தமிழர் நலன் பற்றிக் கவலையில்லை.

காங்கிரஸ்காரர்களைக் கேட்டால் தமிழ் -தமிழ்நாடு - தமிழர்கள் என்று பிரித்துப் பேசாதே. எல்லோரும் அண்ணன் தம்பிகள் -_- எல்லோரும் சமம் - பிரிக்கக்கூடாது என்பான். இங்குள்ள காங்கிரஸ்காரர் அல்ல,- காங்கிரசை ஏற்படுத்தியவனே செய்த ஏற்பாடு எல்லோரும் பாரதமாதா புத்திரர்கள் என்று. பாரதமாதாவுக்கு எத்தனை புருஷர்கள்? துலுக்கன், கிறிஸ்துவன்,  தமிழன் என்று கூறிக்கொண்டேதான் போக வேண்டும். பாரதமாதா என்று மகாத்மாகாந்தி ஆரம்பித்ததே பித்தலாட்டம். மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட்டு தங்களை முன்னேற்றிக்கொள்ள இருப்பதைத் தடுக்கவே பாரதமாதா ஏற்பட்டது. இந்தக் கருத்தை நான் 30 ஆண்டுகளாகக் கூறிவந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கும் பாரதத்திற்கும் சம்பந்தம் என்ன என்று கேட்டால் இதை ஒரு பத்திரிகைக்காரன்கூட எழுதமாட்டான். எல்லா பத்திரிகைக்காரர்களும் வயிற்றுப் பிழைப்பைக் கருதி பித்தலாட்டம் அயோக்கியத்தனம் செய்பவர்கள்தான். ஒருவனுக்குக் கூட, நாம் தமிழர்கள் நலன்பற்றி பாடுபடணும், எழுதணும் என்ற கவலையே சிறிதுகூட இல்லை. அம்மாதிரி கருதி எழுதக்கூடிய பத்திரிகையே கிடையாது.
நாங்கள் கடவுள் இல்லை என்று கூற உங்களிடையே வரவில்லை. கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவனால்தான் முடியும். அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ கடவுளை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அது தமிழன் கடவுளாக இருக்கட்டும். பார்ப்பான் கடவுள் வேண்டாம். இப்போதிருக்கிற கடவுள்களில் ஏதாவது தமிழன் கடவுள் உண்டா என்றால் இல்லை, எல்லாம் பார்ப்பனக் கடவுள்களேயாகும்.
அதுபோலவேதான் மதமும். தமிழனுக்கு தமிழன் மதமும் கிடையாது.  மற்ற நாட்டில் எல்லாம் அந்தந்த நாட்டின் பெயர் அந்நாட்டின் மொழியின் அடிப்படையில் இருக்கிறது. ஜப்பான் மொழியைக்கொண்ட நாடு ஜப்பான் என்று உள்ளது. ஃபிரான்சு மொழியைக் கொண்ட நாடு ஃபிரான்சு நாடு என வழங்குகிறது. இப்படியே எல்லாமும். ஆனால் தமிழ்மொழியைக்கொண்ட நம் நாட்டிற்கு என்ன பெயர் - இந்தியநாடு. இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் எவ்வளவு சம்பந்தமோ அப்படித்தான் இதற்கும். இந்த எண்ணம் எங்களைத்தவிர வேறு யாருக்காவது ஏற்பட்டு உண்மையில் பாடுபடுகிறார்களா என்றால் கிடையாது.
சேத்தியாதோப்பில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (விடுதலை 10.7.1961)
வெளிநாடுகளில் மதம் என்றால் அவர்கள் என்னவென்று புரிந்து கொள்வார்கள். அதைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். நம் நாட்டில் யாருக்குத் தெரியும்? பொட்டு வைப்பது மதம், நாமம் போடுவது மதம், சேலை கட்டுவது மதம், இந்த வகையான சோறு தின்பது மதம் என்பதுபோன்றுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத நம்பிக்கை கொண்ட பைத்தியக்கார நாடு நம் நாட்டைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மதத்திலேயே வைணவம், சைவம், காளிமதம் என்கிறான். இன்னும் போனால் பேய் மதம் என்றுகூட வைத்துக் கொள்வான்; மனிதனுக்கு அறிவு கொடுக்க வேண்டியது கடவுள். மதம், சாஸ்திரம்தான். இங்கு அப்படி இல்லையே.
எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அயோக்கியக் கடவுளாகத்தான் இருக்கின்றன. விரோதிகளைக் கொன்று குவிப்பதும், பெண்ணை அடித்துக் கொண்டு போவதும், பெண்டாட்டி, பிள்ளைகளை வைத்துக் கொள்வதும்தான் நம் கடவுள். ஒவ்வொருவனும் தனக்கு ஏற்றாற்போல், சிவன், பரமன், சக்தி, குமரன் என்று வைத்துக் கொள்ளுகிறான். இவர்கள் எல்லாம் யார்? அப்படி எவனாவது இருந்தானா? அல்லது இருக்கிறானா? என்ன வெங்காயமோ தெரியவில்லை. அப்படி கடவுள் இருப்பதாகக் கூறினான். அவன் எங்கே போய் விட்டான்? கடவுள் கண்ணுக்குத் தெரியாது என்றால் அதற்கு ஏன் பெண்டாட்டி, வைப்பாட்டி, பிள்ளை, ஆறுவேளை சோறு? இவையெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம்? அடிக்கடி மக்களிடம் வந்துபோன கடவுள் இன்று ஏன் வரக்கூடாது? நாம் அவ்வளவு பாதகர்களா?
சாஸ்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், எவனுக்கு சாஸ்திரம் என்றால் என்ன என்று தெரியும். அதில் அவனைப் பற்றிய மரியாதை என்ன? இதையெல்லாம் யோசிக்கத் தெரியாதா? மதத்தில் ஒரு வேத மதம், என்ன வெங்காய வேத மதம். அதைப்பற்றி யாருக்கு என்ன தெரியும்? அதன் கருத்துகள் படித்தால் சிரிப்பை மூட்டுகின்றன. இவையெல்லாம் விளையாட்டுத்தனமாகவே இருக்கின்றன.
கடவுளிடம் பேசினார் என்கிறான் ஒருவன். இவர் கடவுளைப் பார்த்தார் என்கிறான் இன்னொருவன். அப்படிக் கூறுகிறவன் எதைக் கடவுள் என்கின்றான். எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும், மனிதனைத்தான் சித்தரித்துக் காட்டுகிறார்கள்.
மனிதனுக்கு இருப்பது போன்ற உடலமைப்புகள், உருவமெல்லாம் உணர்ச்சி குணங்கள். கடவுள் மனிதனைப் போன்று ஏன் இருக்க வேண்டுமென்று கேட்க ஆள் இல்லையே? மூட நம்பிக்கைகளை ஒழித்தால்தான் நம்மக்களுக்கு அறிவு வரும். கடவுள் இருக்க வேண்டுமென்றால் யோக்கிய உணர்ச்சிக்கு இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியில்லாத நிலையில் நீண்ட நாளாக இந்த மூட நம்பிக்கைகள்தானே தலைவிரித்தாடுகின்றன. நம் மக்களுக்கு அறிவு உணர்ச்சி, மான உணர்ச்சி வரவேண்டும் என்பதற்காகப் பாடுபடாமல் சும்மா ஏதோ பேசி காலத்தைக் கழிப்பதால் என்ன நன்மை? அப்படிக் காலத்தை வீணாக்கினால் எப்போது நாம் முன்னுக்கு வருவது?
19.10.1963 அன்று எழும்பூர் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தந்தை பெரியார் சொற்பொழிவு, (விடுதலை, 25.10.1963)

ஞாயிறு, 21 ஜூன், 2015

அய்யா அகராதி


இராமாயணம் - பார்ப்பனரின் புரொசீஜர் கோட்
கற்பு - பெண்ணடிமை ஆயுதம்
சாதி - மனிதனை மனிதன் இழிவுபடுத்துவது
சமயம் - சாதிக்கு வித்து
கடவுள் - சமயத்தின் காவலன்
பார்ப்பான் - இம்மூன்றையும் படைத்த கர்த்தா
குருக்கள் - மோட்ச லோகக் கைகாட்டி
கோயில் - அறிவு பணம், இரண்டையும் இழக்கும் இடம்
சத்தியாகிரகம் - சண்டித்தனம்
உண்ணாவிரதம்- தற்கொலைக் குற்றமுள்ள நோய்
தியாகம் - அர்த்தமில்லாச் சொல்
சோதிடம் - சோம்பேறிகளின் மூலதனம்
புராணங்கள் - புளுகு மூட்டைகள்
புலவர்கள் - பழைமைக் குட்டையில் படிந்து ஊறிய பாசி
உற்சவம் - கண்ணடிக்கும் கான்பரன்ஸ்
வக்கீல் - சேலை கட்டாத தாசி
வியாபாரி - நாணயமற்ற லாப வேட்டைக்காரர்
மோட்சம் - முடிச்சுமாறிகளின் புரட்டு
நரகம் - வெறும் கற்பனைப் பூச்சாண்டி
பிரார்த்தனை - பேராசையின் மறுபெயர்
நாஸ்திகம் - அறிவின் உண்மையான எல்லை
மூடநம்பிக்கை - Observation and Experiment இரண்டுக்கும் உட்படாதது
நாணயம் - ஒருவனுடைய இலட்சியத்தையும், தேவையையும் பொறுத்த ஒழுக்கம்
ஆசிரியர்- பையன் பாஸ் செய்தால் கெட்டிக்காரர் என்று பெயர் வாங்குபவர் - பெயில் ஆகிவிட்டால் பையன் முட்டாள் என்று பெயர் சூட்டுபவர்.
பிச்சைக்காரன் - பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும் சண்டித்தனத்தாலும் கெஞ்சி புகழ்ந்து வாழ்பவர்கள்.
தொழிலாளி - தன் வயிற்றுப் பிழைப்புக்காக தனது உழைப்பை மாற்றுப் பண்டமாகப் பிறருக்குக் கொடுக்கிறவன் அல்லது பிறர் இஷ்டப்படி நடக்க வேண்டியவனாகிறவன்.
முதலாளி - தன் உழைப்பைத் தன் இஷ்டமான விலைக்கு பிரதிப் பிரயோசனத்திற்கு மாறுப்பண்டமாக விலை பேசுகிறவன்.
மனைவி - ஓர் ஆணுக்குச் சமையற்காரி; ஓர் ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.
பெண்ணுரிமை - பெண்களுக்கும் ஆண்கள் போன்று வீரம், வன்மை, ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்கள் உணரச் செய்வது.
சாதி ஒழிப்பு - நாட்டில் லைசென்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பது.
கிராமம் - ஒரு வித வருணாசிரம தர்ம முறையில் கீழான சாதி.

தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு....பாஸ்போர்ட் இல்லாமல் பெரியார் ருசியா சென்றாரா?




2017 இல் பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் நாம் எல்லோரும் சந்திப்போம் - வே. ஆனைமுத்து என்று தேதி போடாத அறிக்கை ஒன்று கிடைக்கப் பெற்றது.
டாக்டர் ஜான்சனின் வரலாற்றை எழுதிய பாஸ்வெல் போல பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
தாராளமாக எழுதுங்கள்; வரவேற்கலாம். பலரும் ஏற்கெனவே எழுதியும் இருக்கின்றனர். (உலகத் தலைவர் பெரியார் வரலாற்று நூலின் தொடர்ச்சியாக இறுதிப் பகுதிகள் இன்னும் சில மாதங்களில் திராவிடர் கழக வெளியீடாக வெளிவரவும் உள்ளது).
அதேநேரத்தில், சில முக்கிய கருத்துகளை இங்கு இதில் பதிவு செய்யவேண்டியிருக்கிறது.
இதற்குமுன் இவர் எழுதிய, வெளியிட்ட தகவல்களை வைத்துக்கொண்டு இதுபற்றிய கருத்தினை வெளியிட வேண்டிய அவசியமும் நமக்கு ஏற்பட்டுள்ளது.
1. தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்பது திராவிடர் கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்குமே தெரிந்த செய்தியாகும்.
ஆனாலும், டிசம்பர் 24 (1973) அன்று தந்தை பெரியார் மறைந்தார் என்றால், 1974 ஜனவரி 6 ஆம் தேதி திருச்சி பெரியார் மாளிகையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அன்னையார் முறைப்படி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.
தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங் களுக்கும் ஆளாகாமல் சென்று முடிப்போம் என்று கழகத் தோழர்கள் அன்னை மணியம்மையார் தலைமை யில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அந்தப் பொதுக்குழுவில் தோழர் வே.ஆனைமுத்து அவர்களும் இருந்தவர்தான்.
தந்தை பெரியார் என்ற மேரு மலை சாய்ந்த நிலையில், தமிழ் மக்களின் மிகப்பெரிய வழிகாட்டி, பாதுகாவலர் கண்மூடிய சூழ்நிலையில், தந்தை பெரியார் அறிவுறுத்திய புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
என்ற முறையில் பணியாற்றவேண்டிய தோழர் ஆனை முத்து அவர்கள், (முன்கூட்டியே திட்டமிட்டு) கழகத் தலைமையின்மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தார்.
12.11.1975 நாளிட்டு மணியம்மையாருக்குக் கடிதம் என்று எழுதி, அதன் நகலைக் கழகத் தோழர்களுக்கும் அனுப்பி வைத்தார்.
எத்தனையோ தோழர்கள் அதனை அவருக்கே திருப்பி அனுப்பி, தங்களின் கடும் அதிருப்தியினை வெளிப்படுத்திக் கொண்டார்கள். கடைசிக் கருஞ்சட்டைத் தோழன்வரை கட்டுப்பாடு என்னும் கவசம் அணிந்து அணிவகுத்து நின்ற நிலையில்,
பிரமுகரான தோழர் ஆனைமுத்து அவர்களோ அதற்கு எதிர்நிலையில் நின்றார் - கலகக் கொடி உயர்த்திப் பார்த்துத் தோல்வி அடைந்தார் என்பது இவ்விடத்தில் அழுத்தமாகக் குறிப் பிடத்தக்கதாகும். மிகுந்த தாராள மனப்பான்மையுடன் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டுதான், தோழர் ஆனைமுத்து அவர்கள்மீது கழகப் பொதுக்குழுவே ஒருமனதாக நடவடிக்கை எடுத்தது.
அவருக்காக ஒருவர்கூட பரிதாபப்பட்டுக்கூட வக்காலத்து வாங்கவில்லை (26.11.1975).
தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தமைக்கு அன்னை மணியம்மையார்தான் காரணம் என்பது எல்லோருக்குமே தெரியும். பெரியார் திருமணத்தைக் காரணம் காட்டி விலகிச் சென்ற அண்ணா அவர் களேகூட, பிற்காலத்தில் இதனை ஏற்றுக்கொண்டும் உள்ளார். ஏன் தந்தை பெரியார் அவர்களே வெளிப் படையாக எழுதியும் இருக்கிறார்கள்.
எனது நோய் சற்றுக் கடினமானதுதான்; எளிதில் குணமாகாது; மூத்திர வழியில் கற்கள் இருக் கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும், இருக்கலாம். ஆனாலும், நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற் கரியது என்று தந்தை பெரியார் கைப்பட எழுதி இருப்பதற்குமேல் வேறு எவருடைய அத்தாட்சியும் தேவைப்படாது.
தோழர் ஆனைமுத்து அவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தில் தந்தை பெரியார் வைத்தியம் இல்லாமல் விடப்பட்டார் என்று அபாண்டமாக, எதிரிகளேகூட சொல்லத் துணியாத அபவாதத்தினை விஷமாகக் கக்கினார். தன்னுடைய இளமையையே தூக்கி எறிந்து, அய்யா வாழ்நாள் நீட்சிக்கே தன் வாழ்நாளை ஒப்படைத்த அன்னையார்மீது இப்படி ஓர் அபாண்டம் சுமத்தும் மனிதர்களும் இருந்தார்களே - என்ன சொல்ல! என்ன செய்ய!!
இத்தகைய மனப்பான்மை கொண்டவர் தந்தை பெரியார் முழு வரலாற்றை உள்ளபடியே எழுதுவாரா என்ற வினா எழுவது நியாயமே!
2. 2015 சிந்தனையாளன் பொங்கல் மலரில் நோபிள் கு.கோவிந்தராசனுடன் வே.ஆனைமுத்து முதன் முதலாகப் பதிவு செய்யப்படும் உண்மைகள் என்ற தலைப்பில் (பக்கங்கள் 206, 207, 208) வெளியிட்டுள்ள செய்திகள் - அபாண்டமாக பழி சுமத்துதல் - பொய்ப் பேசுதல், புனை சுருட்டு செய்தல் என்றால் எந்த எல்லைக் கும் செல்லக்கூடியவர் தோழர் ஆனைமுத்து என்பதற் கான எடுத்துக்காட்டாகும்.
செத்துப் போனவர்களைச் சாட்சியாக்கிப் பேசுவது கீழ்த்தரமான குணமாகும். அந்த வகையில், தனது போக் குக்கு அல்லது ஆசைக்கு பச்சைத் தமிழர் காமராசரையும் நோபிள் கு.கோவிந்தராசு அவர்களையும் தன் பொய்களுக்குத் துணையாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்.
காமராசர் 2.10.1975 நண்பகல் மறைந்தார்.
நோபிளும், நானும் 30.9.1975 மாலையில் காமராசரை அவருடைய வீட்டில் நேர்காணல் செய்தோம். அவர் தலையில் ஒரு குட்டையைக் கட்டிக்கொண்டு, கால்களை பிரம்பு முக்காலி மேல் நீட்டிக்கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார். அந்த ஈன நிலையிலும் அரைமணிநேரம் உரையாடினார்.
காமராசர்: ஏம்பா? அய்யா டிரஸ்டு ஏற்படுத்தினாரே, அது என்ன?
வே.ஆனைமுத்து: என்னங்கய்யா வேணும்?
காமராசர்: யார், யாரு டிரஸ்டி?
வே.ஆனைமுத்து: மணியம்மா, வீரமணி, சம்பந்தம்...
காமராசர்: அப்புறம்...?
நான் எல்லாப் பெயர்களையும் சொல்லுகிற வரையில், அப்படிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
காமராசர்: அப்போ, அந்த அம்மாவும், அந்தப் பையனும் வச்சதுதான் சட்டம்ணு சொல்லு. அய்யா தப்புப் பண்ணிட்டாருப்பா... தப்புப் பண்ணிட்டாருப்பா... தப்புப் பண்ணிட்டாருப்பா என, மூன்று தடவை சொன்னார்.
அந்த மாமேதை அடுத்த 40 மணிநேரத்தில் மறைந்தார்.
அன்று என்னுடன் இருந்த நோபிள், அடுத்து 20 ஆண்டுகள் இருந்தார் என்று சிந்தனையாளனில் கிறுக்கித் தள்ளியுள்ளார்.
அன்னை மணியம்மையார்மீதும், ஆசிரியர்மீதும் சேற்றைவாரி இறைக்கவேண்டும் என்பதற்காக உயிரோடு இல்லாத காமராசரைப் பயன்படுத்தித் தந்தை பெரியார் அவர்களைக் குறைகூறுவதைக் கவனிக்கவேண்டும்.
பெரியார் தப்புப் பண்ணிவிட்டார் என்று காமராசர் சொன்னதாக எழுதுவதன் பொருள் என்ன?
இன்னொரு வகையில் பார்த்தாலும் தந்தை பெரியார் மீது காமராசர் கொண்டிருந்த பற்றையும் மரியாதை யையும் அறிந்தவர்கள், காமராசர், பெரியாரைப்பற்றிக் குறைகூறினார் என்று காமராசர் மறைவுக்குப் பிறகு எழுதியிருப்பதைப் படிக்கும்பொழுது முகம் சுளிக்கத்தான் செய்வார்கள்.
காமராசர் எப்பொழுதுமே நிதானமாக வார்த்தைகளை எண்ணிப் பேசக்கூடியவர். ஓட்டை வாயரல்லர் - தோழர் ஆனைமுத்துவைப் போல.
தனது வக்கிரத்துக்காக மறைந்துபோன இருபெரும் தலைவர்களைப் பயன்படுத்தி எழுதுவது எந்த வகையில் சரி? எந்த வகையைச் சேர்ந்த பண்பாடு?
இதில் செத்துச் சுண்ணாம்பாகிப் போன, இன்னொரு வரையும் (நோபிள் கோவிந்தராசுலு) சாட்சிக்கு அழைத்து எழுதுகிறார். (தந்தை பெரியாரையும், காமராசரையும் கொச்சைப்படுத்துவதற்கு நம் இன எதிரிகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அம்பாகப் பயன் பட்டுள்ளார் தோழர் ஆனைமுத்து).
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்களுக்கும், காமராசர் அவர்களுக்குமிடையே இருந்த நெருக்கமும், ஆனை முத்து அவர்களிடத்தில் காமராசருக்கு இருந்த நெருக் கமும் ஒன்றா? அதிக அறிமுகமில்லாத ஒருவரிடத்தில் காமராசர் போன்ற முதிர்ச்சி பெற்ற பெருந்தலைவர்கள்,
அதுவும் தந்தை பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று அடையாளம் காட்டிய, மக்கள் மத்தியிலே உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த தந்தை பெரியாரை, நீங்கள் காட்டிய பாதையில்தான் என் பயணம் என்று வெளிப்படையாகச் சொன்ன காமராசர், தந்தை பெரியார் தப்புப் பண்ணிவிட்டார் என்று கூறி இருப்பாரா? நிதானத்தில் உள்ளவர்களுக்கு விடை தெரியும்.
ஆனால், தோழர் ஆனைமுத்துக்கு?
இப்படிப்பட்ட குணமும், இயல்பும் கொண்ட ஒருவர், பெரியார் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதினால், அது உண்மையான வரலாறாக இருக்குமா?
செத்துப் போனவர்களை சாட்சிக்கு அழைப்பது என்று ஆரம்பித்தால், யாரைப்பற்றியும், யார் வேண்டுமானாலும் எந்த அளவுக்கும் தாறுமாறாக, மோசடியாக கொச்சைப் படுத்தி எப்படியும் எழுத முடியுமே! இது ஒரு தரம் தாழ்ந்த புத்தியாகும், யுக்தியுமாகும்.
3. தந்தை பெரியாரின் அறிவு நாணயம், தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம், சட்டத்திற்குக் கட்டுப்படும் தன்மை, நேர்மை இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக் கும் வகையில் மற்றொரு தவறான தகவலையும் பெரியாரின் அயல்நாட்டுக் குறிப்புகள் எனும் நூலில் XXIII ஆம் பக்கத்தில் பதிப்பாசிரியரின் முன்னுரையில் கீழ்க் கண்டவாறு (பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து) எழுதி யுள்ளார்.
ஈ.வெ.ரா.வும், அவருடன் சென்ற எஸ்.இராமநாதன், இராமு என்கிற ஆர்.இராமசாமி ஆகியோரும் சோவியத் இரஷ்யாவுக்குப் போவதற்கான பயண அனுமதி (Passport) இன்றி இரகசியமாகவே 1932 இல் சோவியத்து இரஷ்யாவை அடைந்தனர் என்று தோழர் வே.ஆனைமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மையா என்றால், பவானி ஜமக்காளத்தில் வடிகட்டி எடுக்கப்பட்ட பெரிய பொய்யும், புரட்டும், அபாண்டமும் ஆகும்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், தமிழக மக்களால் தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஒரு மாபெரும் யுகப் புரட்சியாளரைப்பற்றி எழுதுகிறோம் என்ற மதிப்பின்றி எடுத்தேன் - கவிழ்த்தேன் - எல்லாம் எனக்குத் தெரியும்! என்ற ஆணவத்தில் இப்படி எல்லாம் எழுதலாமா?
இதன் பொருள் என்ன? திருட்டுத்தனமாக பெரியார் பயணித்தார் என்பதுதானே!
உண்மை என்னவென்றால், தந்தை பெரியாரின் பாஸ்போர்ட், ரஷ்ய அரசு முத்திரையோடு ஆசிரியரிடம் இன்னும் இருக்கிறது என்பதுதான். சென்னையில் உள்ள சோவியத்து மய்யத்தில் நடைபெற்ற ரஷ்ய கலாச்சார மய்யத்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ரஷ்ய கான்சலேட் ஜெனரல், இந்து ராம் ஆகியோர் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் அந்தப் பாஸ்போர்ட்டைக் காட்டி சிறப்புரையாற்றினாரே!
இரும்புத் திரைநாடு என்று ஒரு காலத்தில் சொல் லப்பட்ட ருசியாவுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் செல்ல முடியுமா? என்பதை சாதாரணமாக - பொது அறிவு உள்ள வர்கள் அறிவார்கள். ஆனால், தோழர் ஆனைமுத்து?
போதிய கவனமும், கவலையும், பொறுப்பும் எடுத்துக்கொண்டு குறிப்பிடவேண்டிய தகவலை, மக்கள் மத்தியில் மாபெரும் தலைவர்பற்றிக் கேவலமாக எடை போடும் வகையில் எழுதியவர்கள் எல்லாம் தந்தை பெரியார் வரலாற்றை எழுதப் போகிறார்களே என்று எண்ணும்போது துணுக்குற வேண்டியுள்ளது.
காரணம் - அண்ணா மொழியில் சொல்லவேண்டும் என்றால், தந்தை பெரியார் ஒரு சகாப்தம் - காலகட்டம் - திருப்பம்!
4.
மற்றொரு பொய் மூட்டையையும் அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.
பெரியாரின் வரலாற்றை பல தொகுதிகளாக எழுதி வெளியிட விரும்புகிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் 1971-1972 இல் என்னிடம் ஒப்படைத்த எல்லா  அச்சிட்ட தரவுகளையும், 1975 இல் மணியம் மையாரிடம் திருப்பித் தந்துவிட்டேன் என்றும் எழுதியுள்ளார்!
பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை, எழுதுவதில்லை என்ற ஒரு முடிந்த முடிவுக்கு வந்து விட்டாற்போல தெரிகிறது.
இதுவும் உண்மையானதல்ல; எந்தத் தரவையும் அன்னை மணியம்மையார் அவர்களிடத்தில் திருப்பித் தரவில்லை என்பதை கழகத் தலைவரிடம் உறுதிப் படுத்திக் கொண்டே இதனை எழுதுகிறோம்.
தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு பல தரம் தாழ்ந்த அறிக்கைகளையும், நூலையும் எழுதி அவற்றின்மூலம் சுகம் காணும் மனிதராகவே முதியவர் ஆனைமுத்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தோழர் திருவாரூர் திரு. கே.தங்கராசு அவர்கள் மறைந்தபோது முதலாவதாக கழகத் தோழர்களுடன் அவர் இல்லம் சென்று அவருடைய உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு இரங்கல் சொன்னவர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
மறுநாள் நடைபெற்ற (6.1.2014) இரங்கல் கூட்டத்தில் உண்மை தெரியாமல், உண்மையைத் தெரிந்துகொள்ளவும் ஆசைப்படாமல், அதற்கான பொறுப்புணர்ச்சியுமின்றி தோழர் தங்கராசு மறைவுக்குக்கூட வீரமணி வராதது நாகரிகமா?
சாவில்கூட குரோத உணர்ச்சியா? என்ற பாணியில் திராவிடர் கழகத் தலைவர்மீது அதீதமான வகையில் காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்பையும் வளர்த்துக்கொண்ட காரணத்தால், சகட்டுமேனிக்குப் பே(ஏ)சினாரே! அங்கிருந்த தோழர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக உண்மையைச் சொன்ன பிறகு, தலைகுனிந்து மனுஷன் உட்கார்ந்துவிட்டார்.
தந்தை பெரியார் சிந்தனை வேரில் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கணித்துச் சூட்டப்பட்ட திராவிட என்ற இலட்சிய இனப் பண்பாட்டு வரலாற்றுச் சொல் லையும் தூக்கியெறிந்துவிட்டு, மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி என்று தந்தை பெரியாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கருப்புச் சட்டை அணிவதையும் தவிர்த்துவிட்டு,
பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறேன் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், முன்வருகிறார் என்றால், அந்த வரலாற்றில் உண்மை தன்மை, முழுமைத்தன்மை, கொள்கை மணம் எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழுமா - எழாதா?
விருப்பு வெறுப்பு அற்ற முறையில் மிகுந்த பொறுப் புணர்ச்சியோடு எழுதப்படவேண்டிய ஒரு சகாப்தத் தலைவரின் வரலற்றை -
இவர் போன்றவர்கள் எழுதினால் என்னவாக இருக்கும் என்ற பொறுப்புணர்வும், தந்தை பெரியார்மீது கொண்ட மிகப்பெரிய மரியாதை உணர்வும்தான் இந்த மறுப்புக் கட்டுரைக்கான நோக்கமாகும்.
காரணம் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி!
- கலி.பூங்குன்றன்
சென்னை                           துணைத் தலைவர்,
19.6.2015                                 
திராவிடர் கழகம்

பாஸ்போர்ட் இல்லாமல் பெரியார் ருசியா சென்றாரா?
பச்சையான பொய் - இதோ உண்மை ஆதாரங்கள்

தந்தை பெரியாருக்கு தாசில்தார் எழுதிய கடிதம்

வெளிநாடு செல்ல மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி தந்தை பெரியார் விண்ணப்பித்தார். அதனை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) வட்டாட்சியருக்கு (தாசில்தாருக்கு) அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து தந்தை பெரியார் அவர்களுக்கு வட்டாட்சியர் எழுதிய கடிதம் (8.9.1931) இதோ:
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். தங்களுடன் அழைத்துச் செல்லப்படும் திரு.ஆர்.ராமசாமி அவர்களுக்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதற்கான பதிலை கூடிய விரைவில் அனுப்பி வைத்தால், மிகவும் நன்றியுடையேன் என்று தாசில்தார் எஸ்.சுப்பராம அய்யர், தந்தை பெரியார் அவர்களுக்கு மிகுந்த மரியாதையுடன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம் இதோ:
தந்தை பெரியார் அவர்களின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சோவியத் ருஷ்யாவின் விசா அனுமதி பகுதி (ரஷ்ய மொழியில்)


வெள்ளி, 19 ஜூன், 2015

இராமாயண ஆராய்ச்சி - வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்

இராமாயண ஆராய்ச்சி
வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்
இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.


மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.
மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.
- தந்தை பெரியார்