ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

இந்துமத தத்துவம் 19.08.1928 - குடிஅரசிலிருந்து...

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப் பனர்களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகல் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேட்கின்றோம்.

சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல், செத்துச் சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதிரியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம்.

இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந்தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

சாமியும், சமயமும், சமயாச்சாரிகளும்
01.07.1928- குடிஅரசிலிருந்து... 

தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதார மென்றும் ரூபமென்றும், அதற்காக மதமென் றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியார்கள் என்றும் அதற்குச் சமயாச்சாரியர்கள் என்றும்  கட்டியழுப வர்கள் ஒன்று வயிற்றுப் பிழைப்புப் புரட்டர்களாயிருக்க வேண்டும் அல்லது பகுத்தறிவில்லாதவர் களாகவாவது இருக்கவேணடும் என்பதே நமது அபிப்பிராயம் என்பதாகப் பல தடவைகளில் வெளிப் படுத்தி இருக்கின்றோம்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ பிரம்மா என்றோ, சொல்லப்படுவதையும் ஒரு சாமி என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் ஞானமற்றவர்களின் கொள்கை யென்றே சொல்லுவோம்.

உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத் தன்மை களையும், மேற்படி சாமிகளோ ஆசாமிகளோ ஒவ் வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்து கின்றான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப் பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் விசார ஞான மற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
மற்றபடி மேல் கண்ட ஒவ்வொரு தன்மைக்கு மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவ மல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மை யையும் அத் தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத் தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று. தானாக வாழ்ந்தது; தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும், அவ்வியற்கைக்குத்தான், கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம் என்பதாகவும் மற்றும் இவ்வியற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டுமே என்றும், அந்த காரணத்திற்கோ சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாக வும் சொல்லிக் கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக தகராறு இல்லை என்று சொல்லிக் கொள்ளுகின்றோம்.

ஆனால், அந்தக் கடவுளுக்குக் கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண்-பெண் தன்மை, பெண் ஜாதி புருஷன், குழந்தை குட்டி, தாய் தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் எனறும், அதற்குக் கோவில்கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பூசை செய்ய வேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல் யாணம் முதலியவைகள் செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார். இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளையாடல்கள் முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும்  என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல் களைப்பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல் களைப் பாடினவர்களைச் சமயாச்சாரியார்களாக, ஆழ்வார்களாக, சமயக்குரவர்களாக, நாயன்மார் களாக பல அற்புதங்கள் செய்தவர்களாகக் கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறை வேற்று வார்கள் என்றும், மற்றும் நாம் செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும் கொடுமை களையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூட நம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்புச் சுயநலப்பிரச் சாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை; ஏனெனில் இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும் மற்ற நாட்டார்கள்போல நம்நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்பட்டு மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்ற மடையாமல் இருப்பதற்கும், அன்னிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியாமல் வைத்தப் பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கையும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்டக் கண்மூடி வழக்கங்களும் செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கிறோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் ஒருவரை ஒருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப் படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப் பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவ தற்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக் கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேல் கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும் அதன் சமயமும் சமயாச் சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே முக்கியக் கார ணம் என்பதைத் தூக்கு மேடையிலிருந்தும் சொல்லத் தயாராய் இருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம்நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திதற்கும், அவற்றின் கல் யாணம் முதலிய உற்சவத்திற்கும் பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங் களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள்களைப் பற்றிப் பாடின பாட்டுகளையும், அச்சடித்து விற்கும் புத்தகங் களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களிலும், நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல் மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ, செலவாக்கப்பட்டு வருமானால் நம் நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அன்னிய நாட்டுக்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டக்கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக்கூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடியுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர் சூத்திரர் வேசி மக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சிக் கொண்டும் நம்மையும், நம் நாட்டையும் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்துகொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். நமக்குக் கல்வி இல்லாததற்குக் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும் சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றியாராவது கவலை கொண்டிருக்கின்றோமோ என்று கேட்கின்றோம்.

சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, ஓட்டு வாங்கி நிறைவேற்றிப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். 
-தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு, 20.4.18

இந்துமதப் பிரசாரம்



இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைக ளையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந் தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்ப தாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங்களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும், துதிபாடுவதுமே சைவ, வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச் சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழி யில் சொல்லவோ எழுதவோ இல்லை.

ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் பலமாக கட்டுப் பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத் தறிவை உபயோ கிக்காமலும் பொது ஜனங்க ளுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படா மலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டு களை நிலைநிறுத்த ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான நாஸ்திக மாச்சுது மதம் போச்சுது கலிகாலத்தின் கொடுமை என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயுதங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே ஒழிய ஒரு வழியி லாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகால மாக சில சைவர்கள் என்போர்கள் நம்மைப் பற்றி காணாத இடங்களில் சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார் என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர்களுள் ஏமாறத்தக்கது மான வார்த்தை களை அடுக்கித் துண்டு விளம்பரங்கள் போடு வதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரி கைகளும் தனக்கென யாதொரு கொள்கையு மற்ற சமயம் போல் நடந்து உயிர் வாழ்வையே முக்கியப் பிழைப்பாய்க் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் நாயக்கர் பிரச் சாரம், என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள் பேரால் எழுதுவதற்குத் தைரியமற்று ஏதோ பல அனாம தேயங்களின் பேரால் நாயக்கர் மதத்தை அழிக் கப் பார்க்கின்றார், நாஸ்திகத்தை பிரசாரம் செய்கின்றார் என்கின்ற மாதிரி எழு துவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.

நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கட வுளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும் அதுபோலவே விஷ் ணுவைப் பற்றியும் விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்ட வைணவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி மததூஷணை தெய்வ நிந்தனை என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும்போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக்கும் போதும் சைவன் வைஷ்ண வத்தையும் விஷ் ணுவையும், வைணவன் சைவத்தையும் சிவ னையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழி வாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போமானால் இதுவரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற்றில் பதினாயி ரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுரா ணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகியவைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர்களுக்கு இதன் உண்மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல்வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற் கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதா கவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும் ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷ யங்களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லி யும் வருகின்றதோடல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல்வதுபோல் அதற்கு இதல்ல அருத்தம் இது சையன்சுக்குப் பொருத் தம் இது படியாத முட்டாளின் கருத்து இது குண்டர் களின் வேலை ஆராய்ச்சியில்லாத வர்களின் கூற்று என்பதான அயோக்கியத் தனமும், போக்கிரித்தனமும், பேடித்தனமும், இழிதகைமையும் பொருந்தியதான சமாதானங் களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.

அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களைச் சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள் ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல்லுவதை யும் எடுத்து இரண்டொரு உதாரணங்கள் காட்டுவோம்.

தற்சமயம் நமது பிரசாரத்தைப் பற்றி வைணவர்களைவிட சைவர்களுக்குத் தான் அதிக ஆத்திரமாக இருக்கின்றது. அவர்களுக் குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய் விடுமோ என்கின்ற பயம் அதிகமாய்ப் பிடித்து ஆட்டி மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைணவர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப் படையாய் ஒன்றையும் காணோம்.. சமீபத்தில் வைணவன் என்கின்ற ஒரு பத்திரிகை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமா யணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக் குச் சற்று மனத்தாங்கல் இருப்பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த் தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ) வில்லை. ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்ன வென்றால் இராமாயணத் தைக் காட்டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராம னைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பல இருக்கிறார்கள். அவ்வாபாசங் களைக் குறித்து இவ்வாராய்ச்சிக்காரர் ஒரு வார்த்தையேனும் கூற முன்வரவில்லை. இராமாயணம் மட்டும் இவர்கள் கண்களில் உறுத்திக் கொண்டிருக்க காரணம் என்ன என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒரு மறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்குச் சொல்லும் பதில் மற்ற நூல் களுடையவும், கடவுள்களுடையவும் ஆபா சங்கள் அதனதன் முறையில் தானாக வெளி வரும்.  இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இரா மாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரி சைக் கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற் பட்டது என்பதும் இராமா யணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப்பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும், பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமா யிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுந்தான்.

சைவர்களின் மதப்பிரசாரத்தைப் பற்றியும் சிலவார்த்தை சொல்லுவோம்.

நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து சிவநேசன் என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித் தார்கள். அப்பத்திரி கையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்ட தாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலா வது மலர் அனுபந்தத்தில் கோபிசந்தனம் என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:

தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற் றியை குறுக்காகவே படைத்திருப்பதை யாவ ரும் காணலாம்.

இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல் லியிருப்பதானது ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த் துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டாரகம்.

அதாவது பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றி களையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத் திலர், அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குதலால் அறிய லாம் என்கிறார்.

இனி கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உபநிஷத்தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது.

கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்தபோது அப்பெண்களின் ஸ்தனங்களி லிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்த னமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.

எனவே சைவர்கள் பூசும் விபூதி யாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைண வர்கள் பூசும் கோபிசந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்கவில்லை. ஏனெனில் அவர் சொல் வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக்க வும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக் குத் தெரிய வேண்டும். அதாவது:- கிருஷ்ண னும் கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷ ணையும் அல்லவென்று தோன்றும்போதும் ஆண்குறியும், பெண்குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர் கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைணவர்கள் சொல்லி இந்து மத ஆதாரங் களில் இருந்தே மேற்கோள்கள் எடுத்துக்காட்டு வது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷ ணையும் அல்லவென்று வைணவர்களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம் மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமய தூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின் றார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

தவிர மதப்பித்துக் கொண்ட பெயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானி களைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை.

ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர்களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவ தும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்து மத ஆதாரங்கள் என்பவை களில் உள்ளவை களா? உள்ளவைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட் கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும் பேடிப் பிரசாரமும் செய் யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப்படாதீர்கள்.

உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறி வற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங் கள். முடியாவிட்டால் சப்தத்திற்கும், எழுத்துக் கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள் ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.

-  'குடிஅரசு' -  கட்டுரை - 15.04.1928

-  விடுதலை நாளேடு, 22.4.18