புதன், 27 டிசம்பர், 2023

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கி விடுமா?


புதன், 13 டிசம்பர், 2023

தீண்டாமை - வேதங்கள், சாஸ்திரங்கள் சொல்வதே தவிர,தமிழர்களைச் சார்ந்தது இல்லை - தந்தை பெரியார்


7

அருமை சகோதர, சகோதரிகளே!

நமது மகாநாடானது இவ்விரண்டு நாளாக அதிக உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடைபெற்று முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு மிகவும் வந்தனம் செலுத்துகிறேன். இனி என்னுடைய முடிவுரையை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். உங்கள் ஆவலைத் திருப்தி செய்யத்தகுந்ததாக யான் விசேஷமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை.

தீண்டாமையைப் பற்றி ஓர் தீர்மானம் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றியும்  வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங் களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

தீண்டாமை

தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை கடைப்பிடிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும். சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும்  சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக் கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்றும், இவற்றிக்கு ஆதாரம் மனுஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. 

ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமோ, மனுஸ்மிருதியோ என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டினருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை.

உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோம்.  ஏன் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறோ மென்பதை பற்றி இப்பொழுது ஆராயத் தேவையில்லை. சூத்திரன் என்பது என்ன? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். 

சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப் பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப் பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது. அப் பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம். அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய்த் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குரும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப் படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். 

இழி பெயர்

அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்த வர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.

இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும் ஸ்நானம் செய்வதற்கோ, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கோ, வீதியில் நடப்பதற்கோ, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுப விப்பதைப் பார்க்கிறோம். 

உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேற்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர் களோடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர்களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்துகொள்ளு வதையும், அதேமாதிரி சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்துகொள்வதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மை யாக நடத்தப்படு வதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள். நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரிய னிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத் திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் போகும் போது எப்படி பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு போகிறார்களோ அது போல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். 

இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவ ராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல். ‘இவர்கள்  இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும்’,  கிட்டவரக்கூடாதவராகவும் இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். 

இதில் ஏது பெருமை?

இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடு மைகளை மாத்திரம் விலக்கவேண்டு மென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமை யையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம். இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப் பட்டுவிடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ!  நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாளனாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான  நம்மையா இன்னும் எத்தனையோ உயர்குணங் களும் எவ்வித இழிவுமற்ற நம்மையா  தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்ற அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். 

இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் அல்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட்டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப் பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. 

இது எதைப் போலிருக்கிறதென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு ‘இந்துக்கள்’ என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும் நாமும் இந்துக்களாகவும், இந்தியா வின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை “அல்லாதார்” என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு “மகமதியரல்லாதார்” பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.

எப்படி பாவமாகும்?

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயி ருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும் இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்ற முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.

பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக் கூடாது. பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமா யிருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்;  அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டுமாமிசம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்;  மற்றும் சிலர் ‘கள்’ உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடை யுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப்பாளி? என்றும் யோசியுங்கள். அவர்களை, நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக் கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழி யெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். 

அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய்க் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறோம்.

மாடு தின்பது முதலியவைகளால் எப்படி தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க்காதார் என்று சொல்லக்கூடுமா?அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை, கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை  உயிருடன் வதைத்துக் கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?

யோக்கியதை ஏது?

‘கள்’ இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்று சொல்வதும் எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறவனும் தொடக்கூடியவன், தெருவில் நடக்க கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்?  உற்பத்தி செய்வதால் குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள்? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறோம். இந்தப்பணத்தில் ஏற்படுத்தப்பட்டி ருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக்கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடிய வர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடுதலை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்து வாரா? என்பதை நினையுங்கள். 

இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கொண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி  வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818-ஆவது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144,107,108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது?

மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப் பிரகாரம் கடந்தும் செல்லலாம். ஆனால் நமது சகோதரர் களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்தவர்களுமாயிருந் தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது. மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்து போகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ‘ரவுலட்’ சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம்  சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா?

- குடிஅரசு -  சொற்பொழிவு -  

07.06.1925 , 21.06.1925 , 28.06.1925 

-----

இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை கடைப்பிடிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும். சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும்  சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்றும், இவற்றிக்கு ஆதாரம் மனுஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. 

இது என்ன கொடுமை! மனிதனை மனிதன் தொடக் கூடாதா? தந்தை பெரியார்


3

பஞ்சமர் - பெயர்ச்சொல்!

அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.

சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்தவர்களா?

தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும், சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ் வார்த்தைகளல்ல

பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமே, மனுஸ்மிருதியே என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டி னருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பெழுது ஆராயத் தேவையில்லை.

சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டி ருக்கிறது. அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.

அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி ‘சூத்திரர்’ என்பதற்கு ஆதாரப்படி ‘தாசிமகன்’ என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.

கொடுமையான குணங்கள்

இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கே, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கே, வீதியில் நடப்பதற்கே, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களேடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்து கொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்து கொள்ளுவதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள்.

நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் பேகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கெண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், “இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும்”, இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம். பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல், அவர் களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.

எத்தகைய இழிவு

இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டு விடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாள னாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத் தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா ‘தேவடியாள் மகன்’, ‘வைப்பாட்டி மகன்’, அடிமையென்று அர்த்தம் கொண்ட ‘சூத்திரன்’ என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் ‘சூத்திரர்கள்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர்.

இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் ‘தேவடியாள் மகன்’ என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் ‘வைப்பாட்டி மக’னெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட் டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிற தென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு “இந்துக்கள்” என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும், நாமும் இந்துக்களாகவும், இந்தியா வின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை “அல்லாதார்” என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு “மகமதியரல்லாதார்” பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.

ஒழிய வேண்டும்

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும், இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.

பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக் கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாமிசம் சாப் பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் “கள்” உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்க மாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கோ, தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ, வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய் கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார் களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்து விட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக் கிறோம்.

எது குற்றம்

மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க் காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை  - மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?

கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறேம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக் கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடு தலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.

எது கொடுமை

இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கெண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோ தரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்த வர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா? 

தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...

‘குடிஅரசு’ - 7.6.1925, 21.6.1925, 28.6.1925 
நூல்:- “பெரியார் களஞ்சியம், குடிஅரசு” தொகுதி -1 பக்கம் 31-36

உடலுழைப்பு திராவிடருக்கு உயர் வாழ்வு பார்ப்பனருக்கு இது என்ன நியாயம்?


5-16

– தந்தை பெரியார்

இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை? எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே! நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 1லு (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 1லு வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 1லு வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?

தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?

பார்ப்பன மயம்

இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள் மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் – ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் – கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் – காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன். இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப் படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?

குலக் கல்வித் திட்டம்

இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் – செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண் டியின் மகன் பன்றி மேய்ப்பது ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் – அப்படியே அவர்களும் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச் சொல்லு கிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.

என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுவா முறை? மக்கள் யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டு மானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக் கொண்டு பேசவில்லை.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை – இலட்சியத்தை – ஒழித்துக்கட்டித் தம்முடைய இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார். நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு – அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம்.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.

உடலுழைப்பு கேவலமா?

நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான் இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையொன்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்ஜாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள் ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!

தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் – இந்த நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் – திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.

வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 – 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000 ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!

யார் அந்நியர்கள்

இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம் மக்கள் தலை யெடுக்கவிடாமல் எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே! ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?
இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?

வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.

ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும் யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.
உணர வேண்டும்

இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் சிலர்தான் இதை இன்னும் உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன் என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள் பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா?

அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும். சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின் நன்மைக்கு ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!
நமக்கு இன உணர்ச்சி கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன

உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.
தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் – என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.

நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது – நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?

பார்ப்பான் எதிலும்  பார்ப்பானாகவே இருப்பான்
நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும் பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!

தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்திய மூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம் எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும் என்றெல்லாம் சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.

இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக எதிர்க்கிறார்கள். நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப் பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளு பவர்கள்தான்.
இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்? என்றைக்குத் தான் நம்முடைய இழிநிலைமை ஒழியும்? எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திரா விட மக்கள் இதை உணர வேண்டும்.

15-11-1953 இல் சென்னை வண்ணை நகரில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: (‘விடுதலை’ 17-11-1953)

புதன், 15 நவம்பர், 2023

சமூக முன்னேற்றத்திற்கு தடையாயிருக்கும் சாஸ்திர புராணங்களைச் சுட்டெரிப்போம் - தந்தை பெரியார்


6

நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக்கச் செய்ய விரும்பவில்லை. எனினும் நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துகாட்டி பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஓப்புக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாயும், ராவ் சாகிப்களாயும், மோட்டார் வாகனங் களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயு மிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளி களும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத் தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையே ஆகும்.

ஆதி திராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப் பட்டபோதிலும் அவர்களை இழிவு படுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவ தில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு.முனுசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத் தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண் ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும் போது ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனி சாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும்விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய் பிறந்துவிட் டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது. வேதத்தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின்மீது பழியைப் போடுவதோடு, மதத்தையும் தங்கள் கொடுமை களுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங் களின் பேராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அள வில்லை. மற்றும் “பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்; கட வுளால் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எழுதி வைக்கப் பட்டு விட்டது. அதைப்பற்றி அதிகமாகக் கேட்கா தீர்கள்” என்று கொடுமைகளுக்குச் சாக்குச் சொல்லிக் கொண்டு, ஆயிரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக் குள்ளாக்கப்பட்டும் வருகின்றது.

பெரிய சமூகம் 

கொடுமைக்குட்படுத்தப்பட்டு வருகிறது

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றது. ஆதிதிராவிடர் களாகிய உங்களை விட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களை விட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போக வில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப் பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்று இழி பெயர்களுமிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவுளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென் கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க் கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்டபோதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப் பட்டு மிருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்போமென்று இழிவுக்கிடங் கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம்’ கேளுங்கள்!  ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்து வத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.  சுயமரியாதைக்காரர்கள் கோயில் குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கின்றார்கள்;  இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கிறது, சுவாமி போய்விடும் போலிருக்கிறது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடு கின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலி களுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டு மிருக்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரச்சார மோசத்தையுமுணராது அவர்கள் பிதற்றல் களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லு கிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன். உண்மையில் ஆஸ்தீக நாஸ்தீகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படு வதில்லை. உலகத்தில் அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமுக முன் னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங் களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக் காரர்களாகிய நாங்கள் தயாராயிருக்கிறோம். 

கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம்

மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந்தாலும் அதனை ஒழித்துத் தானாகவேண்டும் (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமை களுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயுமி ருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவுளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. (பெருத்த கரகோஷம்) கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவு ளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டுவந்த கடவுளும் மதமும் போகவேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை. (கரகோஷம்)

சமீபத்தில் நேப்பியர் பார்க்கில் கூடிய ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாட்டில் இந்துக்கள் எனச் சொல்லிக் கொள்ளப்படும் 6 கோடி மக்களாகிய ஆதிதிராவிடர்களை ஜாதிக் கொடுமையால் ஆலய உரிமையின்றி கொடுமைப் படுத்தப்படுவதால் இந்து மதத்தில் அவர்களுக்குச் சம உரிமையில்லாவிட்டால் வேறு மதத்தில் சேருவதுதான் உசிதமென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சம உரிமையில்லாதிருப்பதைவிட சாவதே மேல் என்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாயிருக்க முடியாது. அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை. ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நமது பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதி யில்லை. ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக் கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை. ராமானுஜர் ஜாதியில்லை என்றும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டார். தேவாரம் பாடியவர்களும் ஜாதியில்லை என்பதை விளக்கினார்கள் என்று சொல் மாத்திரத்தில் நிற்கின்றதேயன்றி உண்மையில் அக்கொடுமைகள் ஒழிவதற்கு மார்க்கமில்லாமல் தானிருக் கின்றது. நமது பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக் காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின் றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனு மேற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால் இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப் பட்டுவிடும்; அந்தத் தெருவில் போனால் சாமி செத்து விடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன. இதற்குச் சாஸ்திரம் இப்படிச் சொல்லுகின்றது; மதம் அப்படி மறுக்கின்றதென்று சாக்கும் சொல்லிக் கொண்டிருப்பதை எவ்வளவு காலத்திற்குத் தான் விட்டுக் கொண்டிருக்க முடியும்?

என்ன அயோக்கியத்தனம்

 நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனம் என்றுதான் கேட்கின்றேன். தீண்டப்படாதார், தாழ்ந்த வர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கும் உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர் களுக்கும் குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும், ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா வென்று கேட்கிறேன். இவ்வாறிருக்க, மக்களில் பெரும்பான்மையோரை ஜாதிக் கொடுமை களுக்கும் இழிவுக்கும் உட்படுத்தி வைக்க மதப் புரட்டுகளும் புராணப் புரட்டுகளும் தான் ஆதாரமாயிருக் கின்றன. மக்கள் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந் தடையாயிருக்கும் இம்மதத்தையும் புராணங் களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது?

நான் செத்த பிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப் படுமென்ற மூட நம்பிக்கையினால் பார்ப்பனன் காலைக்கழுவிச் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்காமலிருக்க செய்ய வேண்டு மென்பதற்காகவும்தான் நான் முஸ்லீமாகச் சாவேன் என்கின்றேன். (பெருத்த கரகோஷம்) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக் காரர்கள் தீண்டப் படாதார், அவர்களைத் தொட்டால் குளிக்க வேண்டுமென்ற ஒரு ஜாதியார் இன்று அவர்களைப் போல் பிள்ளை களைப் பெற்றால் போதுமென்கின்றார்கள். (பெருத்த நகைப்பு) மதம் புராணம் முதலிய புரட்டுகளுக்கு ஆளாகி முட்டாள் தனத்திலும் அடிமைத்தனத்திலும் ஆழ்ந் திருப்பவர்யாரென்றால் இந்துக்கள்தான் என்று சொல்ல வேண்டும். அதிலும் இந்நாட்டில் இழிவுபடுத்தப்படும் மக்கள் யாரென்றால் நாம்தான்.

பிறமதங்களில் பல பாராட்டத்தக்க சீர்திருத்தங்களேற்பட்டு அவர்கள் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். கிறிஸ்துவ மதத்தில் அவர்களுடைய கிறிஸ்துவைத் தூக்கிப் போட்டு விட்டு சுதந்தரத்திற்கு வழியான விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். மதத்தையும் கடவுளையும் நம்பி இருந்தது போதுமென்று அவர்கள் சுயமுயற்சியிலும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்பதனால் தான் ஆகாசத் தந்திகளையும் இறந்த வர்களை எழுப்பி ஆறு மணி நேரம் நடமாட வைப்பதுமான பல அற்புதங்களை கண்டுபிடித்து வருகின்றார்கள். அவர்கள் தற்போது கடவுள் செயலாகிய மனித சிருஷ்டி யையும் செய்யத்தக்க வல்லமை உடையவர்களாயிருப்பது அவர்களுக்கிருந்த மதபுராண மூடக்கொள்கைகளை ஒழித்து ஆராய்ச்சித் துறையிலிறங்கியதினாலல்லவா? (கரகோஷம்) அதுபோலவே மகமதியர்களும் இந்துக் களைவிட பலவகையிலும் மேலானவர்களாகத் தானிருக்கின்றார்கள். முஸ்லீம்களுள் ஜாதி வித்தியாசமும் மனிதனுக்குள் மனிதன் உயர்வு தாழ்வென்ற கேவல உணர்ச்சியும் காணப்பட வில்லை. ஆலயத்தில் அரசனா யினும் சாதாரண மனிதனாயினும் சமத்துவமாகத் தானிருந்து தொழுகின்றார்கள். அவனுடைய மதம் அவனுக்கு ஒற்றுமையையும் வீரத்தையும் கொடுப்பதாயிருக்கின்றது.  

திருவாங்கூரில் இந்துக்களை விட அதிகமாய் படித்தவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜாதி மதக் கொடுமைகளுக்கு உட்பட்டு துன்பமடைந்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆங்கு கிறிஸ்தவர்களாக்கி கல்வியளித்து விசேஷ முன்னேற்ற மடையச் செய்து விட்டனர். அவர்கள் போல என்றைக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும், இன்றைக்கும் இந்துக்களென்று நினைத்துக் கொண்டுள் ளவர்களுமான ஏழை மக்களோ மதத்தின் பெயராலும், இன்னும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கொண்டும் ரஸ்தாக்களில் வருவதற்கும் உரிமையின்றி மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்பட்டு வருகின்றனர்.

மிருகங்களிலும் கேவலமாய்....

திருவாங்கூரில் இந்து ராஜ்யமிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆங்குப் பெரும் பான்மையோர் கிறிஸ்தவர்கள்தான். அதற்குக் காரணம் ஜாதிக் கொடுமையும் சமயப் புரட்டுகளும் தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திருவாங்கூரும் கிறிஸ்துவ ராஜ்ய மாகிவிடுமென்பது திண்ணம். துருக்கியில் மதத்தையும் புராணத்தையும் மூட்டை கட்டி கடலில் போட்டுவிட்ட பின் தற்போது எவ்வளவு முன்னேற்ற மேற்பட்டிருக்கிற தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மதத்தை நம்பி கிலாபத் பாட்டுப் பாடிக் கொண்டி ருந்தபோது வெள்ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப் பயந்திருந்த துருக்கி தற்போது வெள்ளையரையும் நடுங்கச் செய்யும் நிலைமைக்கு வந்திருப்பதன் காரணமென்ன? இங்கு முஸ்லீம்கள் இன்னும் மதப்பித்து பிடித்து ஒன்றரை அங்குல தாடி வேண்டுமா, அல்லது இரண்டங்குலமாவென்று அளவு பார்த்து தாடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கும்போது துருக்கியில் முஸ்லிம்கள் மழுங்க சிரைத்து விடவேண்டு மென்றும், இல்லாவிட்டால் தண்டிக்கப் படுமென்றும், சொல்லப்படுகின்றது.

மதத்தை ஒழிக்கத்தான்....

இங்கு எந்த வர்ண லுங்கி கட்டுவது, எப்படிக் குல்லாய் போடுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தாலும், அங்கு வெள்ளைக்காரர்களைப் போல் உடைதரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப் படுகின்றது.  மதத்தை அழிக்கச் சுயமரியாதை இயக்கம் வந்ததா என்று சிலர் கேட்கலாம். ஜாதிக் கொடுமைகளையும் விபரீத வித்தியாசங்களையும் நிலைநாட்டுவதா யிருந்தால் அந்த மதத்தை ஒழிக்கத்தான் சுயமரியாதை இயக்கம் இருக்கின்றதென்றுதான் சொல்லுவேன். (கரகோஷம்) உண்மையில் சுயமரியாதை உணர்ச்சி உங்களுக்கு இருக்குமானால் உங்கள் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் தடையாயிருக்கும் மதக்கட்டுப் பாடுகளையும் சுவாமி பூதமென்பதனையும் உடைத்தெறியப் பின்வாங்க மாட்டீர் களென்பது திண்ணம். (கரகோஷம்) மிருகத்திலும் கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீங்களும் மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப் போல சுதந்தரமும் சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்தரத்திற்கு எது தடையாயிருந்தாலும் அதனை ஒழிக்க முற்படுவீர் களானால் தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய் பறந்துவிடுமென்பது திண்ணம். (கரகோஷம்)

வடநாட்டில் மதம் ஒழிந்தாலும் மற்றென்ன ஒழிந்தாலும் ஒழியட்டும், சுதந்திரம்தான் பெரிதெனப் போராட முற்பட்டதனால்தான் நேற்றுகூட ஒரு ஆலயத்தில் சகல வகுப்பாகும் தாராளமாகச் சென்று கடவுளை வழிபடுவ தற்குக் கதவுகள் திறந்து விடப்பட்டன. உங்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமையும், குளங்களில் குளிக்கும் உரிமையும் கிடைத்து விட்டால் அதனுடன் நீங்கள் திருப்தியடைந்துவிடவும் முடியாது. நீங்கள் சுதந்திர மடைய விரும்புவது போலவே உங்கள் பெண்களுக் கும் சுதந்தரமளிக்க நீங்கள் தயாராக முன்வர வேண்டும். அப் போதுதான் உங்களுள் உண்மையான முன்னேற்றமேற்படும். உங்கள் பெண்களுள் மறுமணத்தை விரும்பும் விதவை களுக்கெல்லாம் மறுமணம் செய்ய வேண்டும். இவ்வழக்கம் உங்களுள் இல்லாதிருக்கவில்லை. ‘‘அறுத்துக் கட்டும் ஜாதி’’, இழிந்த ஜாதி என்று சொல்லப்பட்ட போதிலும் அறுத்துக் கட்டுவதால் அறுத்துக் கட்டாத உயர்ந்த ஜாதியில் நடக்கும் பல கேவல மான சிசுக் கொலைகளும், கழுத்தைத் திருகிக் கள்ளியில் போடுவதான கொடுமைகளில்லா திருப்பது எவ்வளவோ உசிதமல்லவா?

கலப்பு மணத்தின் மூலமாகத்தான்...

ஒழுக்கத்திலும் படிப்பிலும் முன்னேற்றமடைந் திருந்தால் உங்கள் பெண்களை நாங்கள் பெற்றுக் கொண்டு, குணமும், படிப்பும், ஒழுக்கமுமுள்ள உங்கள் பிள்ளை களுக்கு எங்கள் பெண்களைக் கொடுக்கவும் பின்வாங்க மாட்டோம். இத்தகைய கலப்பு மணத்தின் மூலமாகத்தான் ஜாதி வித்தியாசப் பேய் சீக்கிரத்தில் ஒழியும்.  (கரகோஷம்) ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத் தான் எல்லாக் கட்டுப்பாடு களுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கைகளிருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கை கழுவினதும், கதவைச் சாத்திக் கொள்ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும் போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, அய்யாவுக்கு மோர் விடு, நான் போய்விட்டு வருகின்றேன் என்று மனைவி சொல்லிவிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும். (நகைப்பும், கரகோஷமும்) ஆண்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். பெண்களுக்குத் தான் பதிவிரதத் தன்மை அவசியமென்ற பல அர்த்தமற்ற கொள்கைகளினால்தான் ஆண்களுக்குள் ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் இடமேற்படுகின்றது. மதத்தின் பெயராலும் மற்றதன் பெயராலும் செய்யப்படும் அநீதி களையும், அக்கிரமங்களையும் ஒழிப்பதில் அம்மதங் களையே ஒழிக்க வேண்டுவது அவசியமானாலும் அதற்கும் தயங்கக்கூடாது. மக்கள் சுதந்திரமடைந்து சுகமாய் வாழ் வதற்கு வழி என்ன எனக்குத் தோன்றியதைப் பிறர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அஞ்சாது உண்மையை எடுத்துச் சொன்னேன். என் உணர்ச்சிக் குட்பட்டதைச் சொன் னேனே தவிர, இவர் அவருக்குச் சொன்னார், அவர் எனக்குச் சொன்னார், நீங்கள் அதன்படி நடக்காவிட்டால் பாவம், நரகத்திற்குப் போவீர்களென்ற கட்டுப்பாடு ஒன்றும் சொல்லவில்லை. நான் சொன்னவற்றை நீங்கள் ஆராய்ந்து சரி எனப்படுவதைக் கொண்டு, சரி இல்லாததை ஒதுக்கி என் மீது அனுதாபங் காட்டும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.  

03.08.1929 அன்று சென்னை இராயபுரம் கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழாவின் போது ஆற்றிய சொற்பொழிவு  குடிஅரசு  - 11.08.1929  


செவ்வாய், 7 நவம்பர், 2023

அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலை தருவதே சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார்

   

4

சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத் தையும் தன் மதிப்பையும் உண்டாக்க கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல் லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடு தலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரி யாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம். இதன் உண்மையை விளக்க வேண்டு மானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத் தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும், சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்க ளுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த் தாலும் கூட இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும். நிற்க;

தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல் அன்னியர்களின் முட்டாள்தனத் திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசியக் கூட்டத்தார்கள் என்பவர்களும், சமய இயல்பில் வைதிகப் பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும் இவ்வியக்கத்தால் தங்களுடைய வாழ்விற்கும் பெரு மைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி இவ்வி யக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கம் என்றும் சமயத் துரோக இயக்கம் என்றும், நாத்திக இயக்கமென்றும், சொல்லிக் கொண்டு, எவ்வளவோ முயற்சியும் கட்டுப் பாடுமான சூழ்ச்சிகள் செய்துங்கூட, இவ்வளவுக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க அடிக்க பந்து எழும்புவதுபோல், விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேச முழுவதும் பஞ்சில் நெருப்பு பிடிப்பது போல் மக்களிடம் பரவிக் கொண்டே போகின்றது.

இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ‘சுயராஜ்யா’ ‘தமிழ்நாடு’ ‘நவசக்தி’ ‘லோகோபகாரி’ ‘ஊழியன்’ முதலிய தேசியப் பத்திரிகைகள் என்பவைகளும், மற்றும் பல குட்டிப் பத்திரிகைகளும், கூலிப்பத்திரிகைகளும் மனதார நடந்தவைகளைத் திரித்து கூறுவதும் கருத்துகளை மாற்றிக் கூறுவதும், பொது மக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாகும் படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன.  

இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து (வடநாட்டிலிருந்து) திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரச்சாரம் செய்தும் பார்த்தார்கள். இன்றியும் ரகசியமாகச் செய்த இழிதகைப் பிரச்சாரத்திற்கு அளவே இல்லை. என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும் நடவடிக்கைகளைப் பற்றியும் ஒழுக்கங்களைப் பற்றியும், எவ்வளவோ கேவலமாகப் பேசியும் கூலி கொடுத்து காலிகளை ஏவிவிட்டு பேசச் செய்தும் செய்யப்பட்ட இழிவுப் பிரச்சாரத்திற்கு அள வில்லை. இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்று விடுவதாகவும் குத்தி விடுவதாகவும் சுட்டுவிடுவதாகவும் மற்றும் பலவிதமாய் அவமானப்படுத்துவதாகவும் கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும் பொய்க்கையெழுத்திட்ட கடிதங் களுக்கும் கணக்கே இல்லை. மற்றும் நமக்குள் இருந்த தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவில்லை. இவ்வளவு தொல்லைகளையும் சங்கடங்களையும் தாண்டி, இவ்வியக்கம் இன்றையதினம் ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசியத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் முக்காடிட்டு மூலையில் உட்கார வைத்தும், பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்டப்பிரசண்டவாதிகள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கில்லாமல் செய்தும் விட்டதுடன் ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப்பையும், பண்டித இறுமாப்பையும், ‘கசகச’ வென்று நசுக்கிக் கொண்டு வருகின்றது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது இயக்கத்திற்கு விரோதமாக ஏதாவது ஒரு அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக் கின்றதா என்று யாராவது பரீட்சை செய்து பார்க்க விரும் பினால் இதுபோது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களையும் அவற்றின் முடிவுகளையும் கவனித் துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.

 எனவே இந்த நிலையில் இன்றைய தினம் நமது நாட்டில் சுயமரியாதை இயக்கமும் அதன் எதிர்ப்புகளும் இந்நிலையில் இருந்து வருவது ஒரு புறமிருந்தாலும் அவ்வியத்தின் உண்மையான கொள்கைகள் தான் என்ன என்பதைப் பற்றிச் சற்று கவனிப்போம். சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்காய் இருக்கின்றது, மற்றபடி சமுக சீர்திருத்தத் துறையில் எல்லாம் சரி என்று பார்ப்பனரல்லாத தேசியவாதிகள் என்பவர்கள பலர் நமக்கு எழுதியிருக்கின்றார்கள். அதாவது, அரசிய லில் சைமன் கமிஷனை பகிஷ்கரிக் காததும், சட்டசபையில் ஒத்துழைப் பதும் அரசியலுக்கு விரோதம் என்பது அவர்கள் கருத்து. ஆனால் இப்போது சைமன் கமிஷனை பகிஷ்கரித்தது பைத்தியக்காரத்தனம் என்று அவர் களுக்கே தோன்றி விட்டதைப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தீர்க்க தரிசன முள்ளது என்பது விளங்கும். அதாவது காங்கிரசைச் சார்ந்த திரு.ஆர்.கே. சண்முகம் எம்.எல்.ஏ. அவர்களும், சுயாட்சி சங்கத்தைச் சார்ந்த டாக்டர் பெஸண்ட் அம்மை அவர்களும் நமது குறைகளைப் பார்லி மெண்டு முன்பாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் பார்லிமெண்டை நம்ப வேண்டு மென்றும் அதைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்றும் சொல்லிவிட்டார்கள். இதை எந்த காங்கிரஸ்வாதியும் சுயாட்சிவாதியும் தேசியவாதியும் நாளிதுவரை ஆட்சே பிக்கவில்லை. தவிர, காங்கிரஸ்காரர்களும் இவ்வருஷத் திய காங்கிரஸ் தலைவர்களைத் தேர்ந் தெடுப்பதில் சீமைக்குப் போய் பார்லிமெண்டாரிடம் நமது குறைகளை எடுத்துச் சொல்லி வாதம் செய்து அவர்களிடம் சுயராஜ் ஜியம் பெற தகுதியுடைவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் பேசி இருக்கின்றார்கள். இதையும் எந்த பகிஷ்காரவாதியும் இதுவரை ஆட்சேபிக்கவே இல்லை. எனவே பார்லிமெண்டிடம் நமது கட்சியையோ குறைகளையோ சொல்லிக் கொள்ள நமக்கு இஷ்டம் இருக்கும் போது, சீமைக்குச் சென்று பார்லிமெண்டிடம் போகச் சவுகரியமும் சக்தியும் இல்லாத ஜனங்கள் பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்டு இவ்விடயத்திற்கு அனுப்பி இருக்கும் பார்லிமெண்டு பிரதிநிதிகளிடம் நமது கட்சியையோ, குறைகளையோ எடுத்துச் சொன்னதில் தேசியத்திற்கோ தேசிய சுயமரியாதைக்கோ என்ன கெடுதி நேர்ந்துவிட்டது என்று கேட்கின்றோம். அடுத் தாற்போல் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகச் சொல்லுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்று பார்ப்போம். முதலாவது, இப்போது ஒத்துழையாமை என்பது எவ்வித தேசியத் திட்டத்திலும் இல்லவே இல்லை. சட்டசபையில் ஏதாவது செய்வதற்கு இடமிருப்பதாகச் சொன்னாலும் அதுவும் ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு மாத்திரம்தான் சொல்லிக் கொள்ள முடியுமே ஒழிய மற்றபடி சட்ட சபைக்குள் புகுந்துவிட்டால் எந்த விதத்திலும் ஒத்துழை யாமையோ முட்டுக் கட்டையோ சிறிதும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். ஏனெனில் சட்டசபைக்குப் போனவர் களுக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்நிபந்த னைப்படி அவர்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டியவர் களாயிருக்கும்போது அங்கு எவ்விதத்தில் ஒத்துழை யாமை செய்ய முடியும்? நமக்கு வேண்டிய எவ்வித அரசியல் சட்டங்களும் சமுக சீர்திருத்தச் சட்டங்களும் சமத்துவ சட்டங்களும் சட்ட சபைகளின் மூலம் தான் செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக் கின்றது. அப்போது சர்க்காரிடம் போகாவிட்டால் சர்க்கார் சம்மத மில்லா விட்டால் எப்படி சட்டங்கள் செய்து அவை களை அமலுக்குக் கொண்டு வரமுடியும்? அன்றியும், சர்க்காரால் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுக்குக் கட்டுப் பட்டு சர்க்கார் தயவை எதிர்ப்பார்ப்பதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளாமல் இருக்கச் சட்டசபையில் எப்பேர்ப் பட்ட தேசிய, அமிதவாதிக்கும் சிறிதும் இடமே இல்லை.

இப்போதும் திரு. நேரு உட்பட ஒவ்வொரு தேசிய வாதியும் அப்படித்தான் நடந்து கொள்ளுகின்றார்கள் உதாரணமாக, இப்போது சர்க்கார் செய்யும் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் திருவாளர்கள் சாமி. வெங்கடாசலம் செட்டியார், வெங்கிடபதிராஜு, நாகேஸ்வரராவ் பந்துலு ஆகியவர் களெல்லாம் சர்க்கார் நியமனம் பெற்றுச் சர்க்காருடன் ஒத்துழைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள். சென்னை மாகாண ஒத்துழையாமை தலைவர் என்பவர் அதாவது காந்தியார் கண்ணுக்கு இந்தியா முழுவதற்கும் ஒத்துழையாமை தத்துவத்தை உள்ளபடி உணர்ந்த ஒரே ஒரு உண்மை ஒத்துழையாதாராகத் தோன்றும் திரு.சி.ராஜகோபாலாச்சாரியாரும் மதுவிலக்குப் பிரச்சாரம் சம்பந்தமாய் சர்க்கார் நியமனத்தைப் பெற்று சர்க்காருடன் ஒத்துழைக்க சம்மதித்திருக்கின்றார். எனவே, இனி யார் எவ்விதத்தில் சர்க்காரை பகிஷ்கரித்திருக் கின்றார்கள் என்பது விளங்கவில்லை. வேண்டுமானால் திரு.சத்திய மூர்த்தி போன்றவர்கள் குடிகாரர், வெறிகாரர் போல் காலித்தனமாய் சட்டசபை பார்ப்பனரல்லாத அங்கத் தினர்களையும் மந்திரிகளையும் நிர்வாகசபை அங்கத் தினர்களையும் வைதுவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்.

 இந்து மகாசபை, முஸ்லீம் சபை, கிறிஸ்தவ சபை ஆகிய மத சபைகள் தீண்டப்படாதார் முதலியவர்கள் என்கின்ற சமூக சபைகள் எல்லாம் ஆதிமுதலிலிருந்தே ஆட்சேபித்துக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் என்பவர்களுக்குள் பார்ப்பன சமுகசபை, பார்ப்பனரல்லாத சமூகசபை ஆகியவைகளும் எதிர்க்கின்றன. எனவே நேரு திட்ட விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் மீது பழி சுமத்த ஏதாவது இடமிருக்கின்றதா என்று கேட் கின்றோம். அதுபோலவே சமய சமூக விஷயங்களிலும் சுயமரியாதை இயக்கம் எந்த விதத்தில் நாத்திகமும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு விரோதமானதென்பது அடுத்தாற்போல் யோசிக்க வேண்டிய விஷயமாகும். சுயமரியாதை இயக்கத்தின் சமய சமூக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மானங்களே போதிய அத்தாட்சியாகும். அதைக் கொண்டேதான் தேசியவாதிகள், மதவாதிகள் என்பவர்களும் கூட்டம் போட்டு பேசுகின்றார்கள். ஆகவே அதைப் பற்றி சிறிது யோசிப்போம்.

1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.

2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.

3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. 

4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங்களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.

5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.

7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷ னுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.

8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.

9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.

புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக் கக்கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்ப தற்கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.

உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொரு ளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும் படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.

10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.

11. பெண் உரிமை விஷயத்தில்; பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.

12. “தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாதார்” களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.

13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.

14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொதுநிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.

15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.

மேலும் இவைகளும் அநேகமாக சிபாரிசு செய்வது, கேட்டுக் கொள்ளுவது, முயற்சிக்க வேண்டியது என்கின்ற அளவில் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப் படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆதரிப்பது என்றும் எவை எவை தேசியத்திற்கும், காங்கிரசிற்கும் விரோத மானவை என்றும் எந்த யோக்கியமான தேசியவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறைகூவி அழைக்கின்றோம். உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும், கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்று, சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழிதகைமையது என்றும் அறிவி னர்க்கு தற்றென விளங்கவில்லையா என்று கேட் கின்றோம்.

எது எப்படி இருந்தபோதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்களை ஒழித்தல், கோவில் கட்டுவதையும் உற்சவங்கள் செய் வதையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும் இவ்விஷயங்களில் பொது மக்களுக்கு எவ்வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்பதும் இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க் கையைக் கவனித்து வருபவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கி வருகின்றது. அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆதரவை பரீட்சிப்பதற்கு இவ்வியக்க சம்பந் தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும் ஜில்லாக்கள் தோறும் தாலுகாகள் தோறும் நடைபெறும் மகாநாடுகளும் அங்கு கூடும் கூட்டங்களும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும் அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்றதென்பது சிறு குழந்தையும் அறிய முடியும்.

நிற்க; தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்டக் கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக் காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்ததுதானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம். பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாசமெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங் களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவை களைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம். அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படு கின்றது. இவைகளைத் தவிர வேறு எவ்வித வித்தியா சங்கள் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். ஆகவே, பொது ஜனங்கள் தயவு செய்து இவைகளை எல்லாம் நன்றாய் கவனித்து தங்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, இதன் குணதோசங்களை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டு மாயும், வந்த முடிவை காலந்தாழ்த்தாமல் அமலுக்குக் கொண்டு வர வேண்டுமாயும் ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 25.08.1929