* தந்தை பெரியார்
தோழர்களே, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்காகக் கர்ப்பக்கிருகத்திற்குள் செல்ல வேண்டும் என்கிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள்.- உண்மை தான். எங்களுக்கு அது பற்றிச் சம்பந்தமில்லை. நாங்களோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்; கடவுள் இல்லை என்பவர்களாக இருந்தாலும் இருக்கிற கடவுள்கள் அனைத்தும் அயோக்கியர்கள் என்று சொல்பவர்கள்; அப்படிப்பட்ட நாங்கள் எதற்காகக் கர்ப்பக்கிருகத்திற்குள் செல்ல வேண்டும் என்கின்றோம் என்றால், அங்குள்ள சிலையை வணங்குவதற்காகவோ, தொழுவதற்காகவோ அல்ல; கர்ப்பக்கிருகம் என்கிற அந்த இடமானது ஜாதியைக் காப்பாற்ற - ஒரு சமுதாயத்தின் இழிவை நிலை நிறுத்துவதாகத்தான் இருக்கிறது. இன்று நாட்டில் செயலளவில் சாதியை, இழிவைக் காப்பாற்றுவதாக இருப்பது இது ஒன்றுதான் ஆகும். இது ஒன்றையும் ஒழித்து விட்டால் செயலளவில் பேதம் அழிந்து விடும். இந்த நாட்டில் பலவற்றில் இருந்த பேதத்தை ஒழித்தது நாம் தானாவோம். கோயில் பிரவேசத்தில் இருந்து மற்ற யாவற்றையும் செய்தது நாம் தான். காந்தியோ மற்ற எவரோ கோயிலில் நுழைவதற்காக ஏற்பாடு செய்யவில்லை.
காந்தியார், ஆதிதிராவிடர்களுக்குத் தனியாகக் கோயில் கட்டிக் கொடு, குளம் வெட்டிக் கொடு என்று சொன்னாரே ஒழிய, இருக்கிறதை அவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை.
முதன் முதலில் ஈரோட்டில் ஆதிதிராவிடர் தோழரை அழைத்துக் கொண்டு போனோம். அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை இரட்டணை என்கிற ஊர்களிலும் நடந்தது என்றாலும், ஆதிதிராவிடர்களைக் கோயில்களுக்குள் அனுமதிக்கவில்லை; அதன்பின் வைக்கத்திலே தெருவிலே நாடார்கள் நடக்கக் கூடாது என்றிருந்தது; அதை எதிர்த்து அங்குப் போராட்டம் ஆரம்பித்தார்கள். போராட்டம் வலுவற்றுப் போனதும் என்னைக் கூப்பிட்டார்கள். நான் இங்கிருந்து புறப்பட்டுப் போய் தொடர்ந்து போராட்டம் நடத்தினேன். என் போராட்டத்தைத் தடுக்க முடியவில்லை என்றதும் என்னைக் கொல்வதற்காக திருவனந்தபுரம் ராஜா ``சத்ரு சங்கார யாகம் என்பதாக ஒன்று நடத்தினார். அந்த யாகத்தின் முடிவில் ராஜாவே செத்துப் போய்விட்டார். அதன் பின் இராணி பட்டத்திற்கு வந்ததும், சமரசத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது அங்கு திவானாக இருந்தவர் பார்ப்பனரானதால் நம்மைக் கூப்பிட்டுச் சமரசம் செய்தால், நமக்கு அந்தப் புகழ் வந்து விடுமே என்றுக் கருதி, காந்தியை வருவித்து சமரசத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். இராணி ரோடுகளில் யாவரும் நடப்பதற்கு அனுமதி வழங்குவது பற்றி ஆட்சேபனை இல்லை. ஆனால் நாளைக்குக் கோயிலுக்குள் போக வேண்டுமென்று கேட்கக் கூடாது என்று காந்தியாரிடம் சொன்னதும், அவர் நான் ராமசாமியிடம் போய்க் கேட்டு வந்து சொல்கிறேன் என்று, சொல்லி என்னை வந்து கேட்டார். அதற்கு நான் இப்போது கோயிலுக்குள் போக வேண்டுமென்று கேட்கவில்லை. ரோடுகளைத் திறந்து விட்டால் போதும். பிறகு அதைப் பற்றி மக்களுக்கு விளக்கி, மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொண்டு பிறகு அது பற்றித் தனியாகப் போராடிக் கொள்கிறேன் என்று சொன்னதும் அவர் இராணியிடம் சென்று சொல்லி அதன்பின் ரோடுகளையெல்லாம் திறந்து விட்டுவிட்டார்கள், தெருவிலே எல்லோரும் நடக்கலாம் என்று சட்டம் செய்து விட்டார்கள்.
அதன்பின் கோயிலுக்குள் யாவரும் போக வேண்டும் என்பதற்காகப் பிரசாரம் செய்தேன். பல மாநாடுகள் போட்டேன். அதன்பின் இஸ்லாம் மதத்தில் சேர்வது என்று சொல்லி அதற்காக ஒரு மாநாடு ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டிற்கு என்னைத் தலைமை ஏற்க வேண்டுமென்று சொல்லி எர்ணாகுளத்தில் அந்த மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டிற்கு வட நாட்டிலிருந்து ஒரு முஸ்லிம் தலைவர் வந்திருந்தார்; கிறிஸ்து மதத்தில் சேர்ப்பதற்காக கிறிஸ்தவப் பாதிரிகள் வந்திருந்தனர்; அந்த மாநாட்டில் முஸ்லிம் தலைவர், இஸ்லாமாவதற்குச் சுன்னத் செய்து கொள்ள வேண்டியதில்லை, மொட்டையடித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை, தாடி வைத்துக் கொள்ள வேண்டுமென்கின்ற அவசியமில்லை, கடவுள் உண்டு என்கின்ற நம்பிக்கை இருந்தால் போதும் என்று சொன்னார். அந்த மாநாட்டிலேயே 50-க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்தார்கள். 10, 15 தினங்களுக்குப் பின் ஆதிதிராவிடராக இருந்து இஸ்லாம் மதத்தில் சேர்ந்த ஒருவர் ஆதிதிராவிடர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடத்தில் நடந்து சென்றபோது, இந்துக்கள் புலையனாகிய நீ எப்படி இங்கு நடக்கலாம் என்று சொல்லி அவனை அடித்ததும், நான் புலையனல்ல முஸ்லிம் என்று அவன் சொன்னதும், முஸ்லிம்கள் யாவரும் சேர்ந்து இந்துக்களை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். பெரிய கலகம் ஏற்பட்டு விட்டது. இப்படியே விட்டு விட்டால் இந்துக்கள் யாவருமே முஸ்லிம்கள் - கிருஸ்தவர்களாகிவிடுவார்கள் பயந்து கோயில்கள், சர்க்கார் சம்பந்தப்பட்ட பள்ளிகள், தெருக்கள், அலுவலகங்கள் யாவற்றிலும் எல்லோரும் செல்லலாம் என்று சட்டம் செய்து விட்டார்கள். இது பற்றிக் கேட்டதற்கு,
இராமசாமி அய்யர் இராமானுஜருக்குப் பிறகு தோன்றிய மகான் இராணி தான் ஆகும் என்று சொன்னார். ஏன் இப்படிச் சொன்னார் என்றால் இராமானுஜர் தான் முதன் முதலில் யாவரும் ஜாதி பேதமில்லாமல் கோயிலுக்குள் போகலாம் என்று சொன்னவராவார்.அதன் பின் சொன்னது இந்த இராணி தானாகும். இதைப் பார்த்தததும் காந்திக்கு மிக வெட்கமாகப் போய்விட்டது. அதன் பின்தான் இராஜாஜியும், காந்தியும் சேர்ந்து இனி இங்கு திறந்துவிடாவிட்டால் கலவரம் ஏற்படும் என்று நினைத்துக் கோயில்களைத் திறந்து விட முன் வந்தார்கள். ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள்ளும் சூத்திரர்கள் செல்லும் இடம் வரை செல்லலாம் என்று சொன்னார்கள். அப்போது நான் காந்தியிடம், இதனால் எங்களையும் பறையனாக்கி விட்டீர்களே தவிர, பார்ப்பான் செல்கிற இடம் வரை செல்ல எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லையே என்று சொன்னதும், பார்ப்பானும் சூத்திரர் செல்கிற இடம்வரை தான் செல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்தார்களே ஒழிய, செயல்முறையில் அப்படி நடக்கிறதா என்றால் இல்லை. இப்போது பார்ப்பான் சொல்வதெல்லாம் புனிதம் கெட்டு விடுவதாகச் சொல்ல வில்லை; இலட்சக்கணக்கான ரூபாய் பெறும் நகைகள் இருக்கிறது; அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இவர்கள் சொத்தைக் காப்பதற்காக நாம் இழி மக்களாக இருப்பதா- சூத்திரர்களாக? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருப்பதா? என்று கேட்கிறேன்!
நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் செல்ல வேண்டும் என்பது நமக்கு இருக்கிற சூத்திரத் தன்மையை,- இழி ஜாதித் தன்மையைப் போக்கிக் கொள்வதற்காகவே யாகும் இதற்காகப் பல ஊர்களில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் இருக்கிற கர்ப்பக்கிருகத்திற்குள் நுழைவது என்று திட்டம் செய்திருக்கின்றோம். நாம் போவதைத் தடுப்பதற்காக எவனோ பட்டினிக் கிடக்கப் போகிறானாம்; குறுக்கே படுக்கப்போகிறானாம். அது மாதிரி செய்தால் நாம் ஜனவரி 26 வரை கூட பொறுக்க வேண்டியதில்லை. அவன் ஆரம்பிக்கிற அன்றே நாம் ஆரம்பித்து விடலாம். இப்போதே 2000 பேருக்கு மேல் தயாராக இருக்கிறார்கள். நான் குறிப்பிட்டால் உடனே வருவதற்கு தயாரான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
திருச்செந்தூர் முதல் மதுரை, பழனி, சிதம்பரம், சீரங்கம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் இப்படிப் பல இடங்களில் நடத்தத் திட்டம் செய்திருக்கிறேன். பல தரும கர்த்தாக்களே தாங்களும் கலந்து கொள்வதாக முன் வந்திருக்கின்றார்கள். முன்னேற்றக் கழகத்தில் ஏற்பாடு செய்த தரும கர்த்தாவானதால் அவர்களும் பலர் தயாராக இருக்கிறார்கள். திருச்செந்தூரில் ஆரம்பித்தால் கொலை கூட விழலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் துணிந்துதான் இதை ஆரம்பித்து இருக்கிறேன். அதற்குள் அரசாங்கம் தானாக முன் வந்து எதையாவது செய்யாவிட்டால் நிச்சயம் நடந்து தான் தீரும். எத்தனை தலைமுறைக்கு நாம் சூத்திரர்களாகப்- பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருப்பது? நம் பிள்ளைக்குட்டி காலத்திலாவது அது மாற வேண்டாமா? நீங்களெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நம் மக்கள் வணங்குகின்ற- கடவுள் என்று போற்றுகின்ற எந்தக் கடவுள் ஒழுக்கமானது? நாணயமானது? நேர்மையானது? அன்போடு கூடியது? சிவன்-, விஷ்ணு, -கந்தன், -பிள்ளையார், -இராமன் அவன் பெண்டாட்டி பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி இவையெல்லாம் ஒழுக்க முடையவையா? இதோ இருக்கிறது அவர்கள் சாஸ்திரப் புராணங்கள்! நீங்களே படித்துப் பாருங்கள் எனச் சொல்லி இராமன், கந்தன், -பிள்ளையார், கிருஷ்ணன் ஆகியவற்றின் பிறப்பு, செயல் ஆபாசங்களைப் புராணங் களிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கியதோடு, இனி நம் மக்கள் கோயில் என்றால் காரித்துப்பனும், மூட நம்பிக்கையான பண்டிகைகள், திருவிழாக்கள் கொண்டாடக் கூடாது.
05.12.1969 அன்று சிதம்பரத்தில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
விடுதலை, 15.12.1969