செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நவராத்திரியால் என்ன நன்மை?



'நவராத்திரி' என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள், கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, "தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரிய வர்கள் அமைத்திருக்கிறார்கள்" என்று எதற்கும் 'தத்துவ' நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங் களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம் பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத் கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ் திரிகள் வரையிலும், மக்களிட மிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்து வார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷா சூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டி ருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறை வாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழியான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ் யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது "சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும்" அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று 'குடிஅரசு' கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், "அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது" என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டு மென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வட தேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரி வேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சா வூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரி வேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லு கிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் 'புண்ணிய தீர்த்தத்தில்' கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட் கட்டும். "ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரி யாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா?" என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப் பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நெய்வேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையுமில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங் களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல் லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலை யில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே!

சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ் திரத்தின் கருத்துமாகும்.

'இந்து மதப் பண்டிகைகள்' (பதிப்பு 1981)
-விடுதலை,24.9.17

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

தீண்டாதாரும் கல்வியும்

தந்தை பெரியார்

 



காஷ்மீர் மகாராஜா தனது சமஸ்தானத்தில் உள்ள மக்களில் தீண்டாதார் என்பதாக ஒரு பிரிவு இருக்கக் கூடாதென்றும் அவர்களுக்குக் குளம், கிணறு, பள்ளிக்கூடம், தெரு முதலிய வைகளில் எவ்விதத் தடங்கலுமிருக்கக் கூடா தென்றும் ஒரு பொதுஉத்திரவு பிறப்பித்திருப் பதுடன் காஷ்மீர சமஸ்தானத்தில் தீண்டாதார் என்பவருக்கும் மற்ற வகுப்பாரைப் போலவே சமமான தகுந்த உத்தியோகங்கள் கொடுக்கப் பட வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதுடன், அவர்கள் கல்வியில் பிற்போக்காய் இருப்பதை உத்தேசித்து எல்லோருக்கும் கல்வி ஏற்படும்படி செய்ய இதுவரை கல்விக்காக உபகாரச் சம்பளம் முதலியவைகள் கொடுத்து வந்ததை இவ் வருஷம் இரட்டிப்பாக்கிக் கொடுத்து வரு வதாகவும் எல்லாவிதத்திலும் இதர பிரஜை களுக்குச் சமமாகவே அவர்களையும் பாவிக்க வேண்டு மென்றும் அரசாங்க அறிக்கை வெளி யிட்டு இருக்கிறார்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட சீர்தி ருத்த வாதிகள் ஒவ்வொருவரும் ஆச்சரியத் தோடு மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் அய்ய மில்லை. என்றாலும் இந்த உத்திரவிலிருந்து நாம் அதிகமாக மகிழ்ச்சி அடைவது எதுபற்றி யென்றால் தீண்டாதார் கல்வி அபிவிருத்திக்கு உபகாரத் தொகையை தாராளமாகக் கொடுத்து உதவி யதைப்பற்றியேயாகும். ஏனெனில் இப் போதைய நிலையில் நமது நாட்டுத் தீண்டாதார் எனப்படுபவருக்கு உத்தியோகம், உரிமை முதலியவைகள் கொடுக்கப் படுவதற்கு அதன் எதிரிகளால் சொல்லப்படும் காரணம் பெரும் பாலும் இரண்டேயாகும். அதாவது ஒன்று அவர்களுக்குக் கல்வியில்லை என்பது. இரண்டு அவர்கள் சுத்தமாகயில்லை என்பது ஆகிய இவையாகும். இவற்றுள் கல்வி கற்க வோ அவர்களுக்குப் பணம் கிடையாது. சுத்த மாகவும், சுசியாகவுமிருக்கவோ குளம், கிணறு சுவாதீனம் கிடையாது. அவர்கள் அதிகமான பணம் சம்பாதிக்கவோ அவர்களுக்கு சில இடங்களில் தெருவில் நடக்கும் உரிமையும், வீடுகளில், கடைகளில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் உரிமையும் கிடையாது.

மற்றபடி மூட்டை முடிச்சுகள் தூக்கிக் கூலி வேலை செய்யவோ அவர்களுக்கு அப்படிப் பட்ட சாமான் எதையும் தொடவுரிமை கிடை யாது. காடுகளிலும் வயல்களிலும் அதுவும் வயிற்றுக்கு அரைக்கஞ்சிக்கும் போதாத அள வுக்கு வேலை செய்ய மாத்திரம் வழியுண்டு. ஆகவே இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களை காசியில்லை, படிப்பில்லை என்று சொல்லிப் பொது உரிமைகள் கொடுக்க மறுப் பதானது அவர்களுக்கு மனித உரிமையைக் கொடுக்க அந்தரங்கத்தில் இஷ்டமில்லை என் பதைத் தவிர வேறல்லயென்பது அறிவாளி களுக்கு நன்றாய் விளங்கும்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் காஷ்மீர அரசர் குளம் குட்டை முதலியவைகளைப் பொதுவாக்கினதோடு, படிப்புக்கு உதவித் தொகையும் கொடுத்தது தான் மிகவும் பாராட் டப்பட்டதாகும். நாமும் சென்றவருஷம் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மகாநாட்டில் தீண்டாதார் என்பவர்கள் படிப்பு விஷயத்தில் அரசாங்கத்தார் சாப்பாடும், துணியும், புதகங் களும் வாங்கிக் கொடுத்து அவர்களைப் படிக்க வைக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் செய்திருக்கின்றோம்.

அதைத் தஞ்சாவூர் முதலிய இரண்டொரு சுயமரியாதை இயக்கத் தலைவர்களைக் கொண்ட ஜில்லா போர்டுகள் தங்களால் கூடியவரை முயற்சி எடுத்து சிறிதளவுக்காவது அமலுக்குக் கொண்டு வந்திருப்பதுடன் சுயமரி யாதைக் கொள்கையில் பற்றுள்ள கல்வி மந்திரியும் அது விஷயத்தில் சற்று கவனம் செலுத்தி வந்திருக்கின்றார். எனவே காஷ்மீர் ராஜா அவர்களும் தீண்டாதாருக்குக் கல்வி இல்லாததற்கு அடிப்படையான காரணம் என்னவென்பதை உணர்ந்து அதற்காகப் பணம் தாராளமாய் ஒதுக்கி வைத்திருப்பதானது மிக மிகப் போற்றத் தகுந்த சுயமரியாதைக் கொள்கையாகும்.

நமது அரசாங்கமும் தீண்டாதார் கல்வி விஷயத்தில் ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்ல வேண்டுமானால் இனி அவர்களுடைய சம்பளத்தை மாத்திரம் குறைப்பதாலோ அல்லது அடியோடு தள்ளி விடுவதாலோ ஒரு காரியமும் நடந்து விடாது. மற்றபடி ஜில்லா ஒன்றிற்கு இத்தனை லட்ச ரூபாய் தீண்டாதார் கல்விக்கு என்று ஒதுக்கி வைத்து அதில் அவர்களுக்குச் சாப்பாடு போட்டு படிப்புச் சொல்லி வைக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் தான் அவர்கள் படிக்க முடியும். ஏனென்றால் தீண்டாதவர்கள் என்பவர்களின் பிள்ளைகள் அவர்களது வயிற்றிற்கும், அவர்கள் பெற்றோர்களது வயிற் றிற்கும் சம்பாதித் துத் தீரவேண்டிய அவ்வளவு ஏழைகளாகவும், சம்பாதிக்க வழியில்லாதவர் களாகவும் இருக்கிறார்கள். ஆதலால் மேற் கண்டபடி பணம் ஒதுக்குவதுடன் அந்த இலாகா நிர்வாகத்தையும் கண்டிப்பாக பார்ப்பன உத்தியோகதரிடமும் பார்ப்பன உபாத்தியாயரிடமும் விடாமல் கூடுமான வரை தீண்டாதார் என்கின்றவர்களில் இருந்தே தெரிந்தெடுத்த கனவான்களிடமே ஒப்புவிக்கப் பார்க்க வேண்டும்.

தவிரவும், இந்தப் பணத்தையும், நிர்வாகத் தையும் தல தாபனங்களிடம் ஒப்புவிப்பது என்பதும் இன்றைய நிலைமையில் அவ்வளவு சரியானதென்று நாம் ஒப்புக் கொள்ளக்கூட வில்லை. ஸ்தல ஸ்தாபனங்களிலுள்ள தலை வர்கள் இதுவரை தங்கள் அதிகாரங்களைத் தீண்டா தார்கள் விஷயத்தில் எப்படி உபயோ கித்தார்கள்; உபயோகிக்கின்றார்கள் என்று கவனித்துப் பார்த்தால் அதன் யோக்கியதை களை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். சில இடங்களில் ஜில்லா போர்டு தலைவர்களாவது இவ்விஷயங்களில் சற்று யோக்கியமாய் நடந்து கொண்டிருக் கிறார்களென்னலாம்.

ஆனால் 100க்கு 90 தாலூகா போர்டு தலைவர்கள் தீண்டாதார்கள் விஷயத்தில் மிகமிகக் கேவலமாகவே நடந்து கொண்டிருக் கின்றார்கள் என்று தைரியமாகச் சொல்லுவோம். குறிப்பாய் கவனிப்போமானால் தீண்டப்படா தாருக்காக வெட்டும் கிணற்றுக் கிராண்டு பணங்களிலும் அவர்களுக்காகக் கட்டும் பள்ளிக்கூட கிராண்டு பணங்களிலும் கூட எத்த னையோ பேர்கள் நியாயத் தவறுதலாய் நடந் திருப்பதுடன் அவர்களது நாமினேஷன் களைப் பெரிதும் மறுத்தே வந்து இருக்கின் றார்கள். (பொதுவாக நாடு சமுக சீர்திருத்த மடைய வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங் களுக்கு சந்தேக மற்ற நாணயங்கள் ஏற்பட வேண்டு மானால் முதலில் தாலுகா போர்டு களை எடுத்து விட வேண்டியது அவசியமாகும். ஆதலால் அடுத்த லோக்கல்போர்டு சட்டத்திருத்தத்திலாவது இந்த விஷயத்தை எதிர்பார்க்கலாமென்றேயிருக்கின்றோம்).

இவ்விஷயத்தில் இவ்வளவு தூரம் நாம் எழுதுவதற்குத் தகுந்த ஆதாரங்கள் நம்மிடம் வந்து குவிந்து கொண்டிருப்பதேயாகும். அவை பெரிதும் என்னவெனில் கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் அப்பிள்ளைகளைச் சேர்த் துக் கொள்ளப்ப டுவதில்லை என்றும், தீண்டாத வகுப்பு உபாத்தியாயர்களைச் சரியாய் நடத்துவ தில்லை யென்றும், நமக்குப் புகார்வராத நாளே கிடையாதென்று சொல்லலாம். அது மாத்திரமல் லாமல் பார்ப்பன கல்வி உத்தியோகஸ்தர்க ளும், பார்ப்பன உபாத்தியாயர் களும், தாலுகா போர்டிலுள்ள பார்ப்பன குமாஸ்தாக் களும் செய்யும் சூழ்ச்சிகளை அறிய சக்தியில்லாமலும் அவர்களின் தாட்சண்ணியங்களை மீற யோக் கியதை யில்லாமலும் அவர்களது மாய்கையில் சிக்கிவிடுவதும் மற்றும் தாலூகா போர்டு தலைவர்கள் பெரும்பாலும் கிராமவாசிகளாக வும் போதிய கல்வி அறிவில்லாதவர்களாகவும் ஜாதி ஆணவம் பிடித்திருப்பதுடன் உலக ஞானமில் லாதவர்களாகவும், வருணாசிரமக் கொள்கை மதக்காரர்களாகவுமிருப்பதால் கண்டிப்பாய் அவர்களை இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவோ, யோக்கியமாய் நடை பெறவோ சம்மதிக்கமாட்டார்கள் என்கின்ற உறுதி நமக்கு உண்டு.

ஆகையால் தான் அப்படிப் பட்டவர்களிடம் இந்த வேலையை ஒப்புவிப்பது என்பது தீண் டாதார் என்பவர்களுக்குச் சிறிதும் நன்மையைப் பயக்கும் படியான காரியமாகாது என்கின்றோம். மற்றபடி ஏதோ இரண்டொரு வர்கள் தாலுகா போர்டு நிர்வாகங்களில் சற்று ஞானமுடைய வர்களாகவும் பொது நோக்கமுடையவர் களாகவும் இருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட அந்த இரண்டொரு வரை உத்தேசித்து மற்ற எல்லோரையும் நம்பி அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்புவிப்பது ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் தீண்டப் படாதார் என்பவர்கள் நிலைமையை உயர்த்து வதைப் பொறுத்த எல்லாக் காரியமும் சர்க்கா ரிடமேயிருக்க வேண்டுமென்பதும், அதன் பலனுக்கு அவர்களே பொறுப்பாளியாயிருக்க வேண்டுமென்பதும் நமது பலமான அபிப் பிராயமாகும். உதாரணமாக நம்மை ஒருவன் தாழ்ந்த ஜாதி என்று எண்ணிக் கொண்டிருக் கிறான் என்றால் அவனிடம் நமது நன்மையை ஒப்புவிக்க முடியுமா என்று கவனித்தால் விளங்கிவிடும். ஆதலால் எந்த காரணத்தினா லாவது சர்க்காருக்கு இவ்விஷயம் தாங்களே பொறுப்பேற்று நடத்துவது கஷ்ட மாயிருந்தால் இப்போது மதுவிலக்குக்கு ஒரு பிரச்சாரக் கமிட்டி ஏற்படுத்தி அதற்காக கொஞ்சம் பணமும் ஒதுக்கி வைத்து அக்கமிட்டி வசம் அந்த வேலையையும் பணத்தையும் ஒப்புவித் திருப்பது போல் தீண்டாமை விலக்குக் கும் ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதில் பெரிதும் அவ் வகுப்பார்களையே நியமித்து அதன் வசம் அப்பொறுப்புகளை ஒப்புவித்து சர்க்கார் மேற் பார்வையிலேயே வேலை செய்யச் செய்வது மிக்கப் பயனளிக்கும். இப்போதுள்ள மது விலக்குக் கமிட்டியை விட இத்தீண்டாமை விலக்குக்குக் கமிட்டி ஏற்படுத்தினால் அது மிக்க பிரயோஜனகரமாகவும் புத்தி சாலித்த னமாகவும் நாணயமானதுமாகவும் கூட இருக்கு மென்று சொல்லுவோம்.

இதுவும் முடியாத காரியமாகு மானால் கிறித்துவ பாதிரிமார்களிடத்திலாவது இப்பொ றுப்பை ஒப்புவிப்பது ஸ்தல ஸ்தாபனத்தினிடம் ஒப்புவிப்பதை விட மோசமானதாகாது. ஆகை யால் அடுத்த சட்டசபைக் காலாவதிக்குள் அடுத்த மந்திரிகளாட்சியில் இவ் விஷயம் அவசியம் கவனிக்கப்பட வேண்டுமென்று எதிர் பார்க்கின்றோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 07.09.1930

-விடுதலை, 3.9.17