திங்கள், 22 ஏப்ரல், 2019

எளிமை என்றால் என்ன? பெரியார் அதுபற்றி என்ன கூறுகிறார்?



பெரியார் கூறும் ஒரு நிகழ்வு:

என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது 1916 அல்லது 1917இல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குளி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத்துக்கம் விசாரிக்கப் போக வேண்டியிருந்தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த்தினேன். வண்டியில் மேற் கொண்டு இடமில்லை. நான் ஒருவன் தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டு போய் விட்டுவிட்டு திரும்பிவர வேண்டுமென்றால் நேரமாகி விடும். ஆதலால் என்னையும் உடன் வரவில் லையா என்று ஜமீன்தார் கேட்டதற்கு, இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி வண்டியை செலுத்து என்று சொல்லி விட்டு அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.

குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும் அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்கு வதைப் பார்த்து அவர்கள் திடுக் கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒருபடி உயர்வாக மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார். கோச்மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்க வில்லை என்ப தையும், விருந்தினர் களுக்காக எனது சவு கரியத்தை எந்த அளவுக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என் பதையும் அவர்கள் அறிந்து கொண்டதனால்தான் என்னை மிக மேலான வனாகக் கருதத் தொடங்கி விட்டார்கள்.

இப்படி நம் சவுகரியத்தைப் பிறருக் காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய போதுகூட நான் மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்வேன்.

ராஜகோபாலாச்சாரியாரும், திரு.வி.க. வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார். கூச்சப் படுவார்.

உடம்புக்கு சவுகரியமில்லாதபோது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப்படுத்து வேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ள வேண் டும். சாதாரண உணவில் திருப்தி அடைய வேண்டும்.)

- 21.2.1948 அன்று திருச்சியில் நடைபெற்ற வட மண்டல திராவிட மாணவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் மாணவர்களுக்கு ஆற்றிய அறிவுரை. (விடுதலை, 29.3.1948)

- விடுதலை ஞாயிறு மலர், 13.4.19

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

நாகரிகமும் நமது கடமையும்



தந்தை பெரியார்


'நாகரிகம்' என்கின்ற வார்த்தைக்குப் பொருளே, பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் நாகரிகம் என்பதற்கு ஒவ்வொரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ், குறளில் நாகரிகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப் பட்டிருப் பதாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாட்சண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப் படுத்தப்பட்டிருப்பதாகவும் எனக்கு ஞாபகம்.

நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக்கொண்டு பேசினாலும் மக்கள் சமுகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லாப் பாவனைகளிலும் பெரிதும் மாறுப் பட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறு பட்டிருக்கின்றது என்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரீகளும் - தெருக்களில் தெருக் கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளைத் தூக்கிப்பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம் இப்பொழுதோ என்றால், ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்றுதான் கருதுகிறோம்.

நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும் பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்த விதப் பற்றுதலும் இல்லாமல், அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டுவிட்டுச் சுயேச்சையாகக் சீர்தூக்கிப் பார்த்தால் தான், விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவசிவா என்று ஜெபிப்பதுதான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள், மேல் சொன்ன விஷயத்தைக் கேலி செய்கின்றது.

புருஷன், பெண் ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டாலும், முன்பு 'கல் என்றாலும் கணவன்,  புல் என்றாலும் புருஷன்' என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்துவந்த பெண்களைப் பற்றிப் பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால், இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாய் இருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும், சம உரிமையும், சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர் களென்று கருதுகிறோம். முன்பு புராணத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் வித்வத்தன்மையாக இருந் தது. ஆனால் அது இன்று குப்பையாகிப் பரிகசிக்கத்தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட் டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததைச் சிலாக்கித்துப் பேசினோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியஷமாக எதை யும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும் - விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுனர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.

நாகரிகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும் - காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. கால தேச வர்த்தமான - வழக்கத்தையே ஒட்டி நாகரிகம் காணப்படுகிறது. காலப் போக்கானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை-ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும் - புரட்சி ஏற்படவும் செய்கிறது.

மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்கள். எது நாகரிகமென்று கருதுகின்றோமோ, அது பெருத்த அஜீரணத்துக்கு வந்து விடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கிறது.

ஒரு விஷயமானது வாய்ச் சாமர்த்தியத்தினால் செலாவணி யாகி விடும். அது மெய்யோ, பொய்யோ - சரியோ - தப்போ எப்படியும் இருக்கலாம்.

நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? என்கின்ற கேள்விகள் எழுந்து மக்கள் சமுகம் கஷ்டம் தியாகமின்றி-நலம் பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.

இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப் பட்டிருக்கிறது. இது ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாகப் பாவிக்கப்பட்டிருந்தது, பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப் பட்டு, அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு, இராட்டை சுற்றுவதும் - தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம்,ஜாதி) பற்றுதலுமில்லாத பொது மனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது.

நாம் ஒரு காலத்தில் தேசம் - தேசியம் - தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளை எல்லாம் உதறித்தள்ளி, மனித ஜீவகாருண்யம், உலக சகோதரத்துவம், மக்கள் அபிமானம் (சிவீtவீக்ஷ்மீஸீ ஷீயீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ) என்று கருதுவதையே பெரிதும் நாகரிகமாகக் கருத முன் வந்துவிட்டோம்.

ஒரு காலத்தில் நாகரிமாகக் கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு, ஒவ்வொருவனும் தான் அதிக மேல் சாதிக்காரனாவதற்கு சைவ, வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு, பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தனது மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்தி கெட்டதனமென்றும், முற்போக் குக்கு முரணானதென்றும் கூறி, வெகு வாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனி தத்துவம் நாகரிகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக, ஒரு தனித்தனி ஜாதி நன்மையும் - தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும், ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும், நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.

தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால், அறிவு ஆராய்ச்சியால், நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர் களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக்கிறோம். உதாரணமாக, வியாபாரிகளை-மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவாதேவிக்காரர்களை - மனித சமுக நாச கர்த்தாக்களென்றும், மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கின்றோம்.

நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷயமென்று முன்பே கூறினேன். நம் நாட்டுப் பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டுகிறார்களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கி இருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களைச் சேர்த்து முடிந்துகொள்ளுகிறார் களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படிச் செலவு செய்கின்றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப்பட்டு நம்மவர்களைக் கேட்பதையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய் கையைச் சரியாக உணராததினால் சிலவற்றை ஆச்சரிய மாகக் கருத நேரிடுகிறது.

நம்மிடையேயுள்ள சாதி அபி மானம், சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலைய வேண்டும். இல்லா விட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகி விடாது.

காந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடையின்றிப் போன பெருமையைப்பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும். சவுகரியத்திற்காகவும்-நன்மைக் காகவும் அங்கு அதிக ஆடைகளைப் பந்தோபஸ்துக்காக அணிந்து கொள் ளாமல், பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக, குளிரில் விறைத்துப் போக இங்கி லாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?

புதிய எண்ணங்களும், புதிய எழுச்சிகளும்-புதிய காரியங் களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரியபலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு ஜன சமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் கூட, தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்று சொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு-மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு போராட வாருங்கள்.

'குடிஅரசு' - கட்டுரை - 10.01.1948

- விடுதலை நாளேடு, 7.4.19

திங்கள், 1 ஏப்ரல், 2019

கலப்பு மணம் பெருக வேண்டும்

தந்தை பெரியார்




இத்திருமணத்தில் இதற்கு முன் நடந்த திருமணங்களில் நடந்திராத மாறுதல் விஷயங்கள் ஒன்றும் அதிகமாக நடந்துவிடவில்லையானாலும், இரகசியமாக நடந்தது என்பதும், சர்க்காரில் பதிவு செய்ததும், இக்கூட்டம் கூட்டினதுமல்லாமல் வேறு சடங்கும், அதாவது தாலி கட்டுதல், மாலை மாற்றுதல் முதலியவை கூட இல்லாமல் நடந்தது என்பதுதான். மாப்பிள்ளை தொண்டை மண்டல வேளாள சைவ வகுப்பைச் சேர்ந்தவர். பெண் சாதாரண வேளாள அசைவ வகுப்பைச் சேர்ந்தவர், இருவரும் கல்வியில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள். சமவயதினர். இதில் நாம் எடுத்துக் கொள்வது ஜாதி கலப்பு மணம் என்பதுதான் என்றாலும் இது ஒன்றும் அதிசயமல்ல. இதற்குமுன் 20, 30 வருஷங்களுக்கு முன்னாலேயே பல இம்மாதிரி நிகழ்ந்திருக்கின்றன.

ஆதலால், அதுவும் முக்கியம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி ஜாதிக் கலப்பு மணம் இன்னும் சர்வசாதாரணமாக, ஆக்கப்படுவதற்கு ஒரு பிரசாரத்திற்காகவே இதை இப்படி விளம்பரப்படுத்துகிறோம்.

உதாரணமாக, சரோஜினி அம்மாள் என்கின்ற பார்ப்பனப் பெண்ணுக்கும் கோவிந்தராஜுலு நாயுடு என்கின்றவருக்கும் 1910க்கு முன்பே திருமணமாகியிருக்கிறது. டாக்டர். சுப்பராயன் என்கின்ற வேளாளக் கவுண்டருக்கும், ராதாபாயம்மாள் என்கின்ற பார்ப்பனப் பெண்ணுக்கும் 25 வருடங்களுக்கு முன்பே திருமணமாகி இருக்கிறது.

தேவதாசி வகுப்பு என்பதைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையார் என்கின்ற பெண்ணுக்கும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது.

முத்துலட்சுமி அம்மையார் தங்கை நல்லமுத்து அம்மை யாருக்கும் டி.ஆர்.வெங்கிட்டராம சாஸ்திரியார் குமாரரான ஒரு பார்ப்பனருக்கும் (ராமமூர்த்தி)  திருமணம் நடந்திருக்கிறது.

ஒரு சாயபுக்கும் எண்டோமென்ட் போர்டு பிரசிடெண்ட் நாயுடு பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

ஒரு அய்யங்கார் பெண்ணுக்கும், ஒரு சாயபுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

ஜட்ஜு குமாரசாமி சாஸ்திரியார் குமாரருக்கும். ஒரு அய்ரோப்பிய மாதுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கும், அருண்டேல் துரைக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

தோழர்.சி. ராஜகோபாலாச்சாரியார் (பார்ப்பனர்) பெண் ணுக்கும், காந்தியார் (வாணியர்) மகனுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. (தேவதாஸ்காந்தி - லட்சுமி)

மற்றும், சில ஆதிதிராவிடப் பெண்களுக்கும், நெல்லை சைவ வேளாள வகுப்பு ஆண்களுக்கும், திருமணம் எனது வீட்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்டு நடந்திருக்கிறது. சென்ற மாதத்திலும் ஒரு தேவதாசி வகுப்பு ராஜம் என்னும் பெண்ணுக்கும் சம்மந்தம் என்னும் ஒரு சைவப் பண்டிதர் மகனுக்கும் திருமணம் நடந்தது.

கலப்பு மணம் செய்து கொண்டால் சொத்து இல்லையா?


ஆகவே, கலப்பு மணமோ உயர்வு தாழ்வு ஜாதி மணமோ இக்காலத்தில் ஒன்றும் அதிசயமல்ல என்பது எனது அபிப் பிராயம். எனக்கு முன் பேசிய பல பெரியார்கள் இப்படிப்பட்ட திருமணங் களுக்கு நானும் சுயமரியாதை இயக்கமும் காரணம் என்பதையும் நான் ஒப்புக் கொள்வதற்கில்லை, நாம் செய்வதெல்லாம் இவற்றை விளம்பரம் செய்து மற்றவர் களையும் இதைப் பின்பற்றும்படி ஆசைப் படுவதையும் தவிர வேறில்லை.

கலப்பு மணம் செய்துகொண்டால் சொத்து இல்லையென்றும், சட்டப்படிச் செல்லாது என்றும் சொல்வதுகூட சரியல்ல. பார்ப்பனப் பெண்ணைக் கல் யாணம் செய்து கொண்டாலோ, அல்லது பார்ப்பன ஆணைக் கல்யாணம் செய்து கொண்டாலோ மாத்திரம்தான் செல்லாதாம். அதைத்தவிர மற்றபடி பார்ப்பனரல்லாதார் இந்துக்கள் தங்களுக்குள் எந்த ஜாதியில் யாரை மணம் செய்து கொண்டாலும் அது செல்லுபடியாகும். ஆதலால் அதைப்பற்றிய சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம்.

இந்துலா என்பதில் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி கலந்து போகக் கூடாது என்பதற்காக, ஏன் எனில் தாங்கள் மற்ற ஜாதிகளை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வ தற்காக, தங்களைப் பொறுத்த வரையில் வேறு ஜாதியில் கல்யாணம் செய்து கொண்டால் சொத்து பாத்தியமில்லை என்று செய்து கொண்டார்கள். ஆதலால் நமக்கு அதனால் கெடுதல் ஒன்றும் இல்லை.

பெரியதொரு வெற்றி


நாம் கோருவதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை இம்மாதிரி, அதாவது சரியான நல்ல ஜோடி சேர்க்கத்தக்க வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். குமாரராஜா அவர் களும் இதற்கெல்லாம் சுயமரியாதை இயக்கமும் நானும்தான் காரணம் என்றார். அவர் கலப்புமணத்தைப் பற்றி மாத்திரம் அல்லாமல் செலவு சுருக்கத்தைப் பற்றியும், நாள் சுருக் கத்தைப் பற்றியும் ஆடம்பர ஒழிப்புப் பற்றியும் சொன்னார். அவைகளுக்காகச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு வருவது உண்மைதான். அதை குமாரராஜா (செட்டிநாட்டரசர்) அவர்கள் ஒப்புக் கொண்டு ஆதரித்தது நமக்கு பெரியதொரு வெற்றியாகும்.

ஏனெனில், அவர் பெரிய செல்வவான். செல்வவான்கள் சிக்கனமாகவும், ஆடம்பரமில்லாமலும் நடத்தினால்தான் அது வழிகாட்டியாகும். ஏழைகள் சிக்கனமாக நடத்துவது அதிசயமாகாது. ஆகவே சிக்கனத்தைப் பற்றி நான் பேசுவதை விட அவர் பேசுவது மிகவும் சிறந்ததாகும்.

வள்ளல் சிவஞான தேசிகர் அவர்கள் நமது முறையை போற்றிப்பேசி என்னையும் புகழ்ந்து கூறி, இதுதான் பழந்தமிழர் முறை என்று கூறினார். அவர் பெரிய கல்விச் செல்வம் படைத்தவர். அவர் கூறியவைகளுக்கு என்னைப்பற்றிக் கூறியதைத் தவிர மற்றவைகளுக்காக நான் நன்றி செலுத்து கிறேன்.

நான் ஒருவன் இல்லாவிட்டால் தமிழர் உலகமே முழுகிப் போயிருக்குமென்றார். அதற்காக நான் பெருமைப்பட வில்லை. அவரது அன்பு அப்படிச் சொல்லச் செய்தது. ஆனால் அவரைப் போலவே என்னைப் பற்றி அதற்கு விரோதமாக அவதூறாகப் பேசுவதையும் கேட்கிறேன். ஆதலால் இரண் டையும் சரிசெய்து விடுகிறேன். அதாவது என் னாலேயே தமிழர் சமுதாயம் மாத்திரமல்லாமல் மனித சமுதாயமே பாழாகி விடுகிறதென்றும், மதங்கள், கடவுள்கள் ஒழிகின்றதெனவும் குறை கூறப்படுகின்றன என்றும், இனி சுயமரியாதை இயக்கத்தை ஒழிப்பது தங்கள் கடமையாகக் கொண்டிருப்பதாயும் பலர் சொல்லுவதையும் நான் காதில் கேட்கிறேன்....

பழந்தமிழர் கொள்கை என்பதைப் பற்றியும், காதல் மணம் என்பதைப் பற்றியும், சுயமரியாதை இயக்கம் பற்றியும் வேண்டுமானால் பேசுகிறேன். ஏனெனில் இவை மூன்றும் இங்கு பேசப்பட்ட விஷயமாகும். மற்றவைகளை வேறு மேடையில் பேசுகின்றேன்.

இம்மாதிரி திருமணங்களில் மற்றும் தமிழர் வாழ்க்கை நடப்புகளில் இனிமேல் பழந்தமிழர் கொள்கை என்பதைப் பற்றி பேசக்கூடாது என்றும், அதைக் கொண்டுவந்து மேற்கோள் காட்டக்கூடாது என்றும் எனது தோழர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக அந்தப் பெயரின் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ, தங்கள் எண் ணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படு கிறது. பழந்தமிழன் யாராய் இருந்தால் எனக்கு என்ன? உங்களுக்குத்தான் என்ன காரியமாகும்? அவன் கொள் கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாய் இருந்தால் இங்கு இன்று நமக்கு என்ன லாபம்? என்பதுதான் எனது கேள்வி - பழந்தமிழர் நிலையையும் பற்றி பேசுபவர்கள் பகுத்தறிவுவாதிகளானால், பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்கும் அறிவாளிகளானால், நடுநிலைமைக் காரர்களானால் அவர்களை ஒன்று கேட்கிறேன். அதாவது காட்டுமிராண்டி வாழ்க்கை கால மனிதனைவிட, கல் ஆயுதகால வாழ்க்கை மனிதன் சிறந்தவனல்லவா? என்பதும், அதுபோலவே 4000, 5000 வருஷ காலத்திற்கு முன் இருந்த மனிதனைவிட இன்று 20ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவமும், அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா அல்லவா என்பதோடு, அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வைவிட, எண்ணிய எண்ணத்தைவிட வேறான வாழ்வும், வேறான எண்ணங்களும் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா? இல்லையா? என்பது மேயாகும்.

இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்குப் பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக்குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாகக் கேட்கிறேன்.

பகுத்தறிவுவாதியின் கடமை


வீணாக பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும், அந்நியனை ஏய்க்கவோ, அறி யாமையில் மூழ்கவோதான் பயன்படக் கூடியதாக ஆகி விட்டது.

இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாக ஆகிவிட்டது.

பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமுகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமுகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்த விடக்கூடா தென்பதோடு  அவ்வளவு மடையர்களும் நம்மில் இல்லை. இன்று நம் பண்டிதர்கள் பலருக்குப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்குக் காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங் கொள்கை என்பன போன்ற பழமையேயாகும். பழந்தமிழர் பேச்சுப்பேசி ஆகவேண்டிய காரியம் இனி இல்லை. ஆதலால் பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சு பித்தலாட்டத்திற்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும். அன்றியும் பழந்தமிழர் கொள்கை என்பது விவகாரத்திற்கு இடமாய் விட்டது.

காதல் மணம்


இனி காதல் மணம் என்பதைப் பற்றியும் பேசுவோம். பழங்கால காதல் மணம் இன்று மிருகப்பிராய மணம் என்றே சொல்லவேண்டும். காதல் என்பது மிகமிக சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்கு சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு, காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டிருப்ப தென்றால், அது இன்ப வாழ்க்கையாக இருக்க முடியாது. உண்மையைப் பேச வேண்டுமானால் யாரைப்பார்த்தால் யாருக்குக் காதல் இல்லாமல் இருக்க முடியும்? சமுதாயக் கட்டுப்பாடுகள் பல இருப்பதால் காதல் கொண்டு, காதல் கொண்டு ஏமாற்றமடைவதுமாக வாழ்வு முடிகிறதேயொழிய வேறில்லை. காதலை அவரவர்கள் உள்ளத்திற்கே விட்டு விடுவோம்.

ஆனால், வாழ்க்கைத் துணை விஷயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருக்கும். இப் போதைய அறிவுக்குத் திருமணம் வாழ்நாள் முழுவதும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங்களையும் மேன்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம்தான் பெரிதும் காதலின் முழு இடத்தையும் பெற்றுவிடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு, அந்த இச்சை பெருக்கம் இருவருக்கும் போதவே போதாது. ஆகையால் அறிவையும், நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி வாழ்க்கைத் தன்மையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஆதலாலேயும் பழைய தமிழர் மணமுறைகளுக்கோ ஆரியர் மண முறைகளுக்கோ இங்கு வேலை கிடையாது. அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின் மீது ஏற்பட்ட மண முறைகளுக்கே இங்கு வேலை உண்டு. அவை பழையதானாலும், புதியதானாலும், தமிழனுடையதானாலும், ஆரி யனுடையதானாலும், அய்ரோப்பியனுடையதானாலும் இருந்து போகட்டும்.

மணமுறை


மணமுறைக்கும் பழமையைத் தேடித் திரிய வேண் டியதில்லை. இன்றுள்ள எந்த மனித னுடைய அறிவும் அநேகமாய் பழமைக்கு இளைத்ததாய் இருக்காது. இருந்தாலும் நிலைமை தானாக சரிப்படுத்திவிடும். கால நிலைக்கும், சமுதாய நிலைக்கும், அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்படவேண்டியவைகளே ஒழிய, ஒரு காலத்து முறைகள் எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பது தான் பொருள். அந்தப்படி எந்த மனிதனும் தனது அனுபவத்தையே சொல்லமுடியாது என்று கூறுவேன்.

இதில் பிரத்தியட்ச அனுபவத்திற்கும், அறிவுக்கும் மேற்பட்ட காரியம் எதையும் கலக்கக்கூடாது. கலக்குவ தானால் அதை எழுதி நெருப்பில் போட்டு அது பொசுங்காமல் இருக்கிறதா என்று பார்த்த பிறகே அறிவை அடக்க வேண்டும். இந்த நிலையில் ஏதோ சிலர் தாங்கள் தான் அறிவாளிகள், மற்றவர்கள் அறிவிலிகள் என்று நினைப்பதும் கற்றறி மூடர்கள் குணங்களேயாகும்.

சுயமரியாதை இயக்கம்


இனி அடுத்தாற்போல் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இங்கு பேசப்பட்டது. அதைப் புகழ்ந்து பேசியதற்கு நான் நன்றி செலுத்துகிறேன், பெருமையும் அடைகிறேன். ஆனால் சுயமரியாதை இயக்கத்தைக் குறை கூறுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் அறியாமலும் இல்லை; அதை மறைக்கவுமில்லை.

சுயமரியாதை இயக்க விஷயமாய் என்மீது சில குறைகள் கூறலாம். என்னவெனில் நான் அதைச் சரியாய் கவனிக்க வில்லை என்று, அதில் சிறிது உண்மை இருக்கலாம். ஆனாலும் அதற்குச் சமாதானம் இல்லாமலும் இல்லை. நான் எவ்வளவு வேலைகளைப் பார்ப்பது? நான் எவ்வளவு தொல்லைகளை மேலே போட்டுக் கொண்டிருக்கிறேன். எதிரிகளும், பொறாமைக்காரர்களும் எவ்வளவு வளர்ந்து கொண்டு வருகிறார்கள். நமது மக்கள் எவ்வளவு சுலபமாக ஏமாற்றப்படுகிறார்கள். சுயநலக்காரர்கள் தொல்லை எவ்வளவு? என் சொந்த நிலைமை என்ன? எனக்கு இயற்கையில் உள்ள பலவீனங்கள் எவ்வளவு? இவ்வளவு உள்ள ஒரு மனிதன், அதிலும் தான் மேற்கொண்ட வேலை எதற்கும் தானே எஜமானன் என்கின்ற ஆணவமும் கொண்டு, சகல பொறுப்புகளையும் சுமக்கிற பயித்தியக்காரனான நான் எதைப் பார்ப்பது, எதை விடுவது என்பது எனக்கே புரியவில்லை. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும், ஒரு காரியத்தில் நான் மிகக் கவனிப்போடு இருக்கிறேன். அதாவது சுய மரியாதை இயக்க சம்பந்தமாக எந்தக் கொள் கையையும் நான் விட்டுக் கொடுக்கவில்லை. அதை எந்தவிதமான ராஜிக்கும் உட்படுத்த வில்லை. கூடுமானால் மற்றவர்கள் மீது வலுக் கட்டாயமாகச் சுமத்தாமல் இருந்திருப்பேனே ஒழிய, நான் மாற்றிக் கொள்ளவில்லை என்பதையும், நான் சற்றுக் கவனக்குறைவாய் இருந்து விட்டதால் ஒன்றும் முழுகிப் போகவில்லை என்பதையும், நான் சும்மா இருந்தாலும் அதன் எதிரிகள் முயற்சியில் அது வளர்ச்சியும் விழிப்பும் பெற்று வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தன் மதிப்பியக்கத்தின் முக்கியத்துவம்


சுயமரியாதை இயக்கத்திற்கு சமயம், சமுதாயம், பொரு ளாதாரம், அரசியல், கல்வி, ஆராய்ச்சி ஆகிய துறைகளில் அறிவைச் செலுத்தி மனிதத் தன்மைக்கு ஏற்ற வாழ்க்கைத் திட்டத்தை நிறுவச் செய்வதே முக்கியத்துவமாகும்.

10, 15 வருஷங்களுக்கு முன்பாகவே பெரியார் எ. முத்தையா முதலியார், குமார ராஜா போன்றவர்கள் ஆதரவைப்பெற்று தொண்டாற்றியிருக்கிறது. முத்தையா முதலியார் அவர்கள் சுயமரியாதை இயக்கக்காரர் என்கின்ற பெயரால் செய்யவில்லையானாலும் தமிழர் சுயமரியா தைக்காக, அவர் அரசியல் ஆதிக்கத்தில் இருக்கும்போது பல காரியங்கள் செய்திருக்கின்றார்கள். அதற்காக தமிழர்கள் வீட்டிற்கு ஒரு குழந்தைக்கு முத்தையா என்று பெயர் வைக்க வேண்டும். இன்று மாத்திரம் நம்மியக்கத்தையும் சீர்திருத் தத்தையும் அவர் புகழ்ந்து பேசிவிடவில்லை. அநேக சுயமரியாதை மகாநாட்டைத் திறந்து வைத்திருக்கிறார். மற்றவர்களைப் போல அவர் பாமர ஜனங்கள் என்ன சொல்லுவார்களோ என்று பயப்படுபவரல்ல. அதுபோலவே வள்ளல் சிவஞான தேசிகர் அவர்களும் 12 வருஷமாக நம்மை ஆதரித்து வருகிறார். இங்கு என்னைப் புகழ்ந்து பேசினாலும், குற்றம் கண்டவிடத்து தைரியமாய் திருத்தி இருக்கிறார்.

சுயமரியாதை இயக்கத்தில் பல தோழர்கள் இருக்கிறார்கள் என்று பேசப்பட்டது. அப்படிப்பட்ட தோழர்கள் சிலராவது நிலைமை மாறாமல், உறுதியோடு தங்கள் நலத்தை விட்டுக் கொடுத்தும் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களாலேயேதான் எனக்கு உறுதியும் ஊக்கமும் வளருகிறது. அவர்களுக்கு எனது உபதேசமெல் லாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதேயாகும்.

சேவை


சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுய நலத்தை உத்தேசித்தோ, செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவ தற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவையாகும்.

ரஷ்யாவில் மதம் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லுவார்கள். ஆனால் அங்கு ஒருவன் மற்றவர்களைக் கடவுளாகக் கருதுகிறான். அவர்களுக்குத் தொண்டாற்று வதை மதமாகக் கருதுகிறான்.

ரஷ்யாவில் சொத்தெல்லாம் பொதுச் சொத்து. உழைப் பெல்லாம் பொதுநல சேவை என்று இருந்தாலும், தொண் டாற்றுவதன் மூலம் வாழ்வுக்குப் பயன் அனுபவிப்பதால் அப்படிப்பட்ட தொண்டை அவன் பொதுத்தொண்டு என்று கருதுவதில்லை.

அந்த நேரம் போக, அதாவது ஊதியத்திற்காக வேலை செய்யும் நேரம் போக இவன் இஷ்டப்படி அனுபவித்துக் கொள்ள, இவனுக்குச் சுதந்திரமாய் இருக்கும் நேரத்தில் எவ்வளவு நேரத்தை எந்தக் காரியத்திற்கு ஊதியமில்லாமல் செலவழிக்கிறானோ, அதற்குத்தான் பொதுநல சேவை என்று பெயர். இப்படியே ரஷ்யாவில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் இம்மாதிரி ஒரு பொது நல சேவை, தொண்டு இருக்கும். அதற்கு ஒரு அடையாளமும் உண்டு. அதுபோல் சுயமரியாதை இயக்கக்காரன் யார் எந்த வேலை செய்து எவ்வளவு ஊதியம் சம்பாதித்து எவ்வளவு செலவு செய்தாலும், பொது நல சேவைக்கு ஒரு காலத்தை ஒதுக்கி வைத்து வேலை செய்யவேண்டியது முக்கியக் காரியமாகும். அதில் மற்றவர்கள் விருப்பு வெறுப்பைப் பார்க்காமல் நற்பயனைக் கருதி அதற்கு ஏற்ற தொண்டாற்ற வேண்டும். மற்றபடி சுயமரியாதை இயக்கத்திற்கு அதுவுண்டா? இது உண்டா? என்பதைப் பற்றி நமக்கு கவலை வேண்டாம். அதற்கு அறிவு உண்டு; அந்த அறிவு மானத்தைக் காப்பாற்றப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுருக்கமாக முடித்துக் கொள்வோம்.

- 'குடிஅரசு' - சொற்பொழிவு - 10.01.1948

-  விடுதலை நாளேடு, 31.3.19