வியாழன், 28 ஜனவரி, 2021

மணியம்மையார் சட்டப்படியான வாரிசு!

ஒழுக்கமானவன் இராமன் என்பதற்கு உதாரணம் காட்ட முடியுமா?

தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்

திங்கள், 25 ஜனவரி, 2021

பெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்

வியாழன், 14 ஜனவரி, 2021

எல்லோரும் கொண்டாடுவோம் (தமிழர் திருநாள்)



பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும் மற்ற இடங்களில், மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும். 

இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட்பெஸ்டிவல் (Havestfestval)என்று சொல்லப்படுவதின் கருத்தும் இதுதான்,

என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம் வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாக வைத்து விவசாயத்தினால் விளளந்து வெள்ளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டு விடவில்லை. இம் மாதிரியான இந்திர விழாபற்றி  கிருஷ்ணன் பொறாமைப்பட்டுத் தனக்கும் அந்த விழாவை பூசையை நடத்தவேண்டுமென்று
மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்ததாகவும், இந்த இந்திரவிழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல் நடைபெறாமல் போகும் பொருட்டு விழாக் கொண்டாடுவோர் வெள் ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடு மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய்யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணமூர்த்தி மக்களையும் ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை கோவர்த்தனகிரியைத் தூக்கி அதைத் தனது கண்டுவிரலால் தாங்கிப்பிடித்து காட்டியதாகவும், இதனால் இந்திரன் வெட்க மடைந்து கிருஷ்ணனிடம் தஞ்ச மடைந்து தனது மரியாதையைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இரங்கி கிருஷ்ணன், எனக்கு ஒரு நாள் பண்டிகை உனக்கு ஒருநாள் பண்டிகை, மக்கள் முதல் நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும், பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் என கொண்டாடும்படியும், ராஜி செய்துகொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான ஆபாச முட்டாள் தனமான கதைகளைக் கட்டிப் பொருத்திவிட்டார்கள்.

 இதிலிருந்துதேவர்களுக்கு அரசனான இந்திரன் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

மற்றும். இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையையும், மறு நாளைக்கு ஒரு கதையையும் போகிப்பண்டிகையென்றும், சங்கராந்திப்பண்டிகை யென்றும் பெயர்வைத்து மூன்று நான் பண்டிகையாக்கி ஏராளமான முட்டாள் தனத்தையும், மூடநம்பிக்கையையும் புகுத்தி விட்டார்கள்.

நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும் யார் எக்கேடுகெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடல் உழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள் களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப 
உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம் மாதிரியான அட்டுழிய, அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்கின்றதை முதல்நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும் மனைவிமக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு, 
நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கும் உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாட வேண்டியது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும். நம் மட மைக்கும், காட்டுமிராண்டித்தன்மைக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால் அறிவுள்ள, மானமுன்ள மக்கள் மத சம் பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடா மலிருந்து தங்களை மானமும் அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் - கொள்ள வேண்டுமென்று கேட்டுக்


மானமும் அறிவுமே மனிதற்கழகு

தந்தை பெரியார் அறிக்கை விடுதலை" -13.1.1970

கிறித்தவர்கள் காலத்தைக் காட்ட கிருத்துவ ஆண்டு (கி.பி ) இருக்கிறது, முஸ்லிம்கள் காலத் தைக்காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இது போல தமிழனுக்கு என்ன இருக்கிறது?

மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல் வரலாற்றுச் சுவடி இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது, இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா பண்டிகை என்பது நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டு களுக்கு முன் நான் கூறினேன், மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும். 

- தந்தை பெரியார் (விடுதலை 30-1-1959)

- விடுதலை நாளேடு, 13.1.21