வியாழன், 31 ஜனவரி, 2019

மகத்தான மானுட ஆளுமையுடையவர் யார் தெரியுமா?



From Facebook Vijay Karthick

சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லி னில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைப்பெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் ""வால்ட்டர் ரூபன்"" இந்தி யாவை பற்றி மாபெரும் ஆய்வும் நடத் தியவர்.

மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யா இன்னும் சில இந்திய அறிஞர்களுடன் உரையாடி கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு "கேள்வியை" முன்வைக்கிறார்.

இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத "மகத்தான மானுட ஆளுமையுடையவர்" யார் தெரியுமா?

திகைத்து போனவர்கள் காந்தி பெயரை தயக்கத்துடன் சொல்ல காந்திக்கு முன் உதாரணம் கவுதமபுத்தன் என்கிறார் ரூபன்.சிலர் நேரு பெயரை சொல்ல அவருக்கு முன் உதாரணம் அசோகர் என சொல்லி வாயடைக்க வைக்கிறார் ரூபன்.

நீங்களே சொல்லுங்கள் என ரூபனிடம் அறிஞர்கள் சொல்ல தான் எழுப்பிய வரலாற்று புதிர் கேள்விக்குரிய பதிலை சொன்னார். இன்றைய இந்தி யாவின் முன் உதாரணமற்ற பேராளுமை "பெரியார் ஈவெரா தான்" என்றார். இவர்களுக்கு அதிர்ச்சி! எப்படி? எப்படி? ரூபனே அதற்கும் பதிலளித்தார்.

இந்திய சமூகத்தின் மேலிருந்து கீழேவரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வருணாசிரமம்,மனுதர்மம்,வைதீகம் எனும் நோய்களுக்கு எதிராக தெளிவாக மூர்க்கமாக சமூகதளத்தில் போராடுகிறார். அதனால்தான்.

சாகித்திய அகடாமி பொறுப்பாளர் எழுத்தாளர் பொன்னீலன் 25.11.2011 உரையில் கூறிய தகவல்...

பி.கு: அப்புறம் இந்த பசங்க வரைஞ்ச ஓவியத்திற்கு நல்ல வரலாறு தெறிக்கிற மாறி சொல்லனும்ல,அதுக்குதான் இது!! தெறிக்க விடுங்கடா பசங்களா..

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

உதிர்ந்த மலர்கள்

02.03.1930- குடிஅரசிலிருந்து...

1. எந்த மதத்தில் இருப்பதினால் ஒரு மனிதன் தீண்டப்படாதவனாய் கருதப்படுகின்றானோ அவன் தனக்கு ஒரு சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் அவன்தான் எந்த மதத்தைச் சார்ந்தால் உடனே தீண்டப்படாதவனாக கருதப்படமாட்டானோ அந்த மதத்தை சாரவேண்டியது அவனது முதற்கடமையாகும்.

2. ஏதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான்  கடவுள் அருளோ மோட்சமோ கிடைக்கும் என்கிற விஷயத்தில் எனக்குச் சிறிதும் ஒப்புதலும் நம்பிக்கையும் கிடையாது. அவ்விரண்டு வார்த்தைகளும் அர்த்தமற்றதும் மோசமும், பரிகாசத்திற்கு இடமானதும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.

3. மனுதர்ம சாத்திரத்தையும், அதற்கு ஆதாரமான வேதத்தையும் (மத ஆதாரத்தையும்) ஒரு கடவுள் சிருஷ்டித்திருப்பாரானால் முதலில் அக்கடவுளை ஒழித்து விட்டுத்தான் தாகசாந்தி செய்யவேண்டும்.

4. மனுதர்ம சாத்திரத்தையும் அதை ஆதரிக்கும் வேதத்தையும் ஒரு மதம் ஆதாரமாய்க் கொண்டிருக்குமானால் முதலில் அம்மதத்தை அழித்துவிட்டுத்தான் மனிதன் வேறுவேலை பார்க்கவேண்டும்.

5. இந்துமதம் போய்விடுமே! இந்துமதம் போய்விடுமே!! என்று சொல்லிக் கொண்டும் இந்துமத தர்மங்களை ஒன்றுவிடாமல் காப்பாற்றவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டும் வந்தவர்களாலேயே இன்று இந்தியாவில் இந்தியர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர்கள் வேறு மதத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

6. மதத்தைக் காப்பதற்கு என்றும், மதக்கொள்கைகள் சிறிதும் விட்டுக் கொடுக்க முடியாதென்றும் இதுவரை செய்து வந்த முயற்சிகளும் கிளர்ச்சிகளும் எல்லாம் இரண்டொரு வகுப்புகளுடையவும் சில தனிப்பட்ட நபர்களுடையவும் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட முயற்சிகளாகவே முடிந்ததல்லாமல், எவ்விதப் பொதுநலனும் ஏற்படவேயில்லை.

7. மேல்நாட்டாருக்கு ஒரு மாதிரியும் கீழ்நாட்டாருக்கு ஒரு மாதிரியுமான சுதந்திரங்கள், வித்தியாசங்கள் இருக்கக்கூடாது என்று சொல்லும் இந்திய தேசிய வாதிகள் தங்கள் நாட்டாருக்குள்ளாகவே பார்ப்பனருக்கு ஒரு மாதிரியும் பார்ப்பனரல் லாதார்க்கு ஒரு மாதிரியும் இடமும், தெருவும், குளமும் ஏன் பிரிக்கின்றார்கள்? பிரித் திருப்பதை ஏன் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்? இது யோக்கியமாகுமா?

8. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்து மதத்திற்கு பிரதிநிதியாய் போகவில்லை. ஆனால் அவர் ஒரு வக்கீலாய் போனார்.

9. உன்னை சத்திரியன் என்றோ வைசியன் என்றோ நீ சொல்லிக் கொள்ளும்போது நீ பிராமணன் என்பவனுக்கு கீழ்ப்பட்டவனென்பதை நீயே ஒப்புக்கொண்டவனா கின்றாய்.

10. சென்ற வருஷத்திய ரயில்வே கெய்டை பார்த்துக்கொண்டு ரயிலுக்குப் போனால் வண்டி கிடைக்குமா?

தந்தை பெரியார் பொன்மொழிகள்


இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்கை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்? என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.

ஜாதி ஒழியக் கூடாது; சூத்திரன் படிக்கக்கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத்திற்குப் போகக் கூடாது; சூத்திரன் வயிறார கஞ்சி குடிக்கக் கூடாது - என்பதற்காகவே மனுதர்மச் சாஸ்திரம் பார்ப்பனரால் எழுதப்பட்டது. இதுதான் இந்து லாவுக்கு அடிப்படையாக உள்ளது.

-  விடுதலை நாளேடு, 25.1.19

ஆஸ்திகப் பெண் நாஸ்திகன் உரையாடல்

சித்திரபுத்திரன் -

02.03.1930- குடிஅரசிலிருந்து...

ஆஸ்திகப் பெண்:- என்ன அய்யா நாஸ்திகரே, மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றிய ஆட்சேபணைகள் எப்படி இருந்தாலும் பெண்களைக் கடவுளே விபச்சாரிகளாய் பிறப்பித்து விட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன்.

நாஸ்திகன்:-               அம்மா, அப்படித் தாங்கள் சொல்லக் கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல்வதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆ.பெண்:-      அதென்ன அய்யா, நீங்கள்கூட அப்படிச் சொல்கின்றீர்கள்? இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை? எல்லாப் பெண்களுமா விபசாரிகள்?

நா:- ஆம் அம்மா, எல்லாருமேதான் விபசாரிகள். இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை.

ஆ. பெண்:-     என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா நீங்கள் விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள்.

நா:- ஆம், ஆம், ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்லாமல் மேல் உலகத்தில் உள்ள பெண்களையும் கூடத்தான் நான் கற்பு உள்ளவர்கள் என்று சொல்லுவதில்லை.

ஆ.பெண்:- இப்படிச் சொல்லுவது தர்மமாகுமா?!

நா:- கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமான மனுதர்ம சாஸ்திரம் சொல்வது எப்படிப் பொய்யாகும் - அதர்மமாகும் சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால் அது சரியென்று நான் ருஜுப்படுத்தவும் தயாராயிருக்கிறேன்.

ஆ.பெண்:- என்ன ருஜு,  நாசமாய் போன ருஜு சற்று காட்டுங்கள். பார்ப்போம்.

நா:-  நமது பெரியவர்கள் கற்பைப் பரீட்சிக்கத் தக்க பரீட்சைகள் வைத்திருக் கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.

ஆ.பெண்:- என்ன பரிட்சை அய்யா அது.

நா:-  சொல்லட்டுமா! கோபித்துக் கொள்ளக் கூடாது.

ஆ.பெண்:- கோபமென்னையா. மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். தாராளமாய்ச் சொல்லுங்கள்.

நா:- தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் பெய்யெனப் பெய்யும்மழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா?

ஆ.பெண்:- ஆம். கேட்டிருக்கின்றேன்.

நா:-  கற்புடைய மங்கையர்கள் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேதவாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?

ஆ.பெண்:- ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா; சரி. . . .ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடி தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உளவு (2

அங்குலம்) மழைப் பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆ.பெண்:- இது நம்மாலாகின்ற காரியமா! தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும். இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால் இந்தப் பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.

நா:- எந்தப் பாவி எப்படித் தவித்தாலும் நீங்கள் கற்புள்ளவர் களாயிருந்தால் மழை பெய்யென்றால் பெய்துதானே ஆக வேண்டும் அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீரவேண்டும். எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ அப்போதே பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்லர். - விபச்சாரிகள் என்று ருஜுவாகவில்லையா? பொறுமையாய்  யோசித்துப் பாருங்கள். ஆகையால், இனிமேல் சாதிரங்களைப் பற்றி சந்தேகப் படாதீர்கள். அதிலும் ரிஷிகளும், முனிவர்களும் சொன்ன வாக்கியமும் கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்து மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்கு சாதனமானதுமான மனுதர்ம சாதிரம் பொய்யாகுமா அம்மா? அதனால்தானே நான்கூட கல்யாணமே செய்து கொள்ள வில்லை.

ஆ. பெண்:- எதனால்தான்?

நா: - பெண்களை கல்யாணம் செய்துகொண்டால் புருஷன்மார்கள் அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டுமென்றிருக் கிறதினால்தான்.

ஆ.பெண்:-      பின்னை என்ன செய்கின்றீர்கள்.

நா:- கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய் பிறப்புவித்து விட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. ஆதலால் எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும். கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதி சிவனே என்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா? என்கின்ற தைரியம் உண்டு.

ஆ.பெண்:- அப்படியானால் நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்ததில் ஒன்றும் குற்றமில்லை. இது மனுதர்ம சாதிரமும், வேதமும், பொய்யா மொழியும், நீதியும் இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக் கொண்டதோ ஆன கடவுள்களும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆத்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நமது எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.

-  விடுதலை நாளேடு, 25.1.19

பெண்கள் அடிமை நீங்குமா?

17.07.1932 - குடிஅரசிலிருந்து..

இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப் பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களை இப் பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ள தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.

இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று சொல்லுவது போல கணவனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நா கரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும் அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும். இதனால் இந்திய நாகரிகமே மூழ்கி விடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராய முடையவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆண்கள் இவ்விதமான அபிப்பிராயத்தை வெளியிடுவதைப் பற்றி நமக்குக்கவலை இல்லை. அவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதுகின்ற பொழுது, இதற்குமேல் தீவிரமான அபிப்பிராயத் திற்குச் செல்ல முடியாது. சென்றால் அவர்களுடைய சுயநலத்திற்கு நிச்சயமாக ஆபத்து உண்டாகிவிடும். ஆனால், பெண்கள் இம்மாதிரியான அபிப்பிராயத்தை வெளியிட்டால் அது ஆச்சரியப்படத் தக்கதேயாகும். அன்றியும் அதில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கவும் வேண்டும்.

சில தினங்களுக்கு முன் லண்டனில், விசியம் கிளப்பில், பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலைத் தலைவரான திருமதி. மெக்டாக்கல் என்பவர் ஒரு பிரசங்கம் செய்தார் அப்பொழுது அவர்,

பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்மந்தமும், பற்று தலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார் களானால் இந்திய சமுக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்குப் போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்தவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல் உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும். என்று பேசியிருக்கிறார். திருமதி. மெக்டாகல் அவர்கள் நாகரிகம் பெற்ற மேல் நாட்டுப் பெண் மணியாயிருந்தும் இவ்வாறு பேசி யிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஆனால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப்பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவுக் கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டு மென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி, உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே இது கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர வேறொன்றுமல்ல என்றுதான் நாம் கூறுவோம்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த திருமதி. மெக்டாகல் அவர்கள் எப்படி கிறிஸ்துவ மதக்கல்வி உயர்தரக்கல்வி கற்கும் பெண்களுக்கு அவசியம் என்ற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ இதைப் போலவே இந்திய வைதிகர்களும் பெண்களுக்கு இந்து மதக்கல்வி அவசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இவ்வபிப்பிராயங்களை நாம் அடியோடு மறுக்கிறோம். பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் அடிமையாயிருந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கொண்டிருப்பது ஒன்றுதான் ஏற்றது என்ற அபிப்பிராயமே தவறாகும். இத்தகைய கட்டுப்பாடு இருக்கின்ற வரையிலும் பெண்கள் அடிமைகளாகத்தான் - அதாவது ஆண்களுடைய உதவியை நம்பித்தான் வாழ முடியும் என்பது நிச்சயம். உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பியக் கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.

அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதப்பிராயம். மதத்தைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமை புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமை புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்க வழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமை புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாபிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களை பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?

ஆனால் தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்வி தான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதே யொழிய வாழ்க் கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும். ஆகையால் தற்காலத்திலுள்ள கல்வி முறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமை புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித்  திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.

நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமை புத்தியும், கோழைத் தனமும், மூடநம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாபிடிவாதமும் நிறைந் திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.

- தந்தைபெரியார்

- விடுதலை நாளேடு, 26.1.19

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...(3)

வழக்குரைஞர்


கிருபா முனுசாமி




சென்ற வாரத் தொடர்ச்சி....

குழந்தை திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தை எல்லாப் பகுதிகளிலும் அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; எதிர்கால வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியாத சிறுமிகளை கடவுளின் பேரால் பொட்டுக்கட்டி, பொரு ளுக்காக நிர்பந்தக் காதலில் ஈடுபடுத்தும் அநாகரிகமான பழக்கத்தை ஒழிக்க வேண்டும்; சிறுவயதுப் பெண் குழந்தைகளை பொதுவில் ஆடவும், பாடவும் விட்டு பொருள் சம்பாதிக்க தேவடியாள்களாக தயாரிக்கும் வழக்கத்தை கண்டிப்பதோடு, இந்தியசட்டசபையில் திரு.ஜெயகர் கொண்டு வந்திருக்கும் பொட்டுக் கட்டும் வழக்கத்திற்கு எதிரான மசோதாவையும், சென்னை சட்டசபையில், டாக்டர் முத்துலட்சுமி கொண்டு வந்த மசோதாவையும் முழுமன தாக ஆதரித்து, அவை சீக்கிரம் சட்டமாக ஆக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகிறது; தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; விபச்சார விடுதிகளை ஒழிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியதோடு,

"இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதாயி ருந்தால், மறுமண விருப்பம் கொண்ட கைம்பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்; விபச்சாரத்திற்கு அடிப்படையாய் அர்த்தமற்ற முறையில் கட்டப்பட்ட பொட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு வரும் சகோதரிகளை ஆதரித்து திருமணம் செய்துகொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்" என்றஅறைக் கூவலை யும் விடுத்தார்.

பெண்களின் சமத்துவ - அரசியல் உரிமை களையும் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களுக்காக போராடி வீட்டை விட்டு வெளியேறும், வெளியேற்றப்படும் பெண் களுக்கு பாதுகாப்பாக தங்க 'பெண்கள் நிலையம்' ஒன்றை ஏற்படுத்த வேண்டு மென்றார். இன்றைய காலத்தில், வீட்டை விட்டு வெளியில் வருவதோ, கிடைத்த அடிப்படை கல்வியைக்கொண்டு வேலை தேடிக்கொள்வதோ, பெண்களுக்கான தங்கு மிடங்களோ எளிமையாக இருந்தாலும், இவற் றையெல்லாம் நினைத்து கூட பார்க்கமுடியாத காலத்தில், 3 வயதுகுழந்தை களும் விதவை களாக ஆக்கப்பட்ட 1920 - 30களில் இவற்றை யெல்லாம் தந்தை பெரியார் பேசினார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

பெண்களின் சமத்துவ உரிமைகளையும், பெண் கல்வியையும், விடுதலையையும், பெண்களுக்கான பாதுகாப்பு மய்யத்தையும், அதே 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்ற ஆண்களை பாராட்டி தீர்மானம் நிறை வேற்றப்படும் போது, "ஆண்கள் சிறை சென்றதை பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப் பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?" என்று பேசி, பெண்களை போராட தூண்டிய குற்றத் திற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கும் செல்கிறார் பெரியார்.

இவற்றையெல்லாம் செய்துவந்த பெரியார், பெண் விடுதலைக்கு தடையாக இருப்பவைகளை தகர்க்கும் வகையில், கர்ப்பத்தடையையும், கருத்தடை சாதன பயன் பாட்டையும் எப்போதும் வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இன்றைய அறிவியல், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் கூட பெண்களின் கர்ப் பப்பை தொடர்பான, மாதவிடாய் வலி ஆகியவற்றிற்கு கருத்தடை சாதனமே சிறந்த நிவாரணமாககையாளப்படுகிறது. மேற்கத் திய நாடுகளில், இளம் பெண் களுக்கும் கூட இது பொருத்தப்படும். இதனை பொருத்திய ஓர் ஆண்டிற்குள் ளாகவே பெண்களின் மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிடும். ஒரு வேளை, குழந்தை பெற்றுக்கொள்ள விரும் பினால், அதனை எடுத்துவிட்டு, பிள்ளைப் பேறுக்கு பிறகு மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இதைதான் அன்றே கர்ப்பப் பையை அறுத்தெறியுங்கள் என்றார் தந்தை பெரியார். அறுத்தெறியுங்கள் என்றால் அதை அப்படியே பொருள் கொள்ள கூடாது. பெண்களின் சுதந்திரவாழ்வுரி மையை முழு மையாக அனுபவிக்க தடை யாக இருக்கும் கர்ப்பப்பை தொடர்பான இன்னல்களையும், தொல்லைகளையும் அறுத்தெறியுங்கள் என்று பொருள். புதுமைகளை வரவேற்பதிலும், விஞ் ஞானத்தை ஒரு தொலைநோக்கு பார்வை யிலிருந்து முன்னுணர்ந்து, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டை ஊக்கு விப்பதிலும், அவற்றை மக்களிடம் வலி யுறுத்துவதிலும் முதல் நபராக இருந்தார் பெரியார்.

ஆனால், இந்தியாவில், 'கற்பு' என்ற மூடத்தனத்தின் காரணமாக, திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கருத்தடை சாதனத்தை பொருத்துவதில்லை. இதையும் பெரியார்விட்டு வைக்கவில்லை. பெண் விடுதலை வேண்டுமானால், "ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான கற்புமுறை வேண்டும்" என்கிறார்.

பெரியார் இன்றிருந்திருந்தால், "கன்னிப் பெண்களும் கருத்தடை சாதனத்தின் பயனைப்பெற்று, வலி இல்லாத, கட்டுப் பாடுகள் இல்லாத முழுமையாக வாழ்க் கையை அனுபவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருப்பார். இதை இனிவரும் உலகின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்!

சுயமரியாதை திருமணம்


தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதன் ஒரு படியாக, ஆண் பெண் இருபாலரின் சரிநிகரான உரிமை களையும், சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில், தாலி இல்லாத ஜாதி-மத மறுப்பு சுயமரியாதை திருமணங்களை வலியுறுத் தினார்.

இன்று அய்ரோப்பிய நாடுகள், அமெ ரிக்கா போன்ற பற்பல நாடுகளில் நண்பர்களாக வாழும் முறையே பெரிதும் காணப் படுகிறது. அதுபோல, நம் நாட்டிலும், "திருமணம் செய்துகொள்ளாமலேயே நண்பர்களாக வாழும் முறை வர வேண்டும் என்றார்.

1928-இல் அருப்புக்கோட்டை சுக்கில நத்தத்தில் நடந்த சுயமரியாதை திருமணப் புரட்சியை அதன் தொடக்கமாகவே பார்க்கிறேன். அச்சிற்றூரில் சுயமரியாதை நெறியில்வளர்ந்த அரங்கசாமி ரெட்டியார் பார்ப்பனரை விடுத்து பெரியாரை கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பெரியாரும் சம்மதிக்க, அரங்கசாமிக்கும், நாகம்மாள்மற்றும் இரத்தினம்மாள் ஆகி யோருக்கும் திருமண ஏற்பாடுகள் செய் யப்பட்டன. இதனை அறிந்த ஆவல்சூரன்பட்டியை சேர்ந்த கோபால்சாமி ரெட்டியாரும் பெரியார் முன்னி லையில் சுயமரியாதை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினார். முதல் திருமண மேடையிலேயே இரண்டாவது திரும ணமும் முடிவாயிற்று.

காலை முதல் திருமணத்தையும், முற்பகல் 11 மணிக்கு இரண்டாவது திருமணத் தையும் பார்த்துக்கொண்டிருந்த மாரி ரெட்டியார், சுயமரியாதை திருமணத்தின் நடைமுறை யையும், சிறப்பையும் கண்டு ணர்ந்து அதே நாளில் பார்ப்பனரைக் கொண்டு செய்வதாய் இருந்த அவரது திருமணத்தை நிறுத்தி, அதே மேடையில் பகல் 12 மணிக்குமூன்றாவது சுயமரியாதை திருமணமாக செய்துக் கொண்டார்.

இதன் நீட்சியாக இனி 116 ஊர்களில் சடங்குகளை நீக்கி, பார்ப்பனர்கள் நீக்கி நம்மவர்களைக் கொண்டு திருமணங்களை செய்விக்க உறுதிபூண்டார்.

சமூக - அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகள் மட்டுமில்லாமல், அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் குறித்த சிந்தனை பெரியாரைத் தவிர வேறு எந்த தலைவருக்கும் தென்னகத்தில் இருந்ததில்லை. ஜாதியை குறித்து பேசும்போதெல்லாம், பெண்ணடி மைத்தனம் இருப்பதே ஜாதியை காப்பாற்றத் தான் என்றுஅம்பேத்கர் பேசி வந்திருந்தாலும், தென்னாட்டை பொறுத்தவரை, ஜாதியும், பெண்ணடிமைத்தனமும் குறித்த பன்முகப் பட்ட பார்வையோ, அதன் ஊடறுத்தன்மை குறித்தநுணுக்கமான அறிவோ, பெரியாரை தவிர வேறு எவருக்கும் இருக்கவில்லை என்பதே உண்மை. பார்ப்பனரல்லாதார் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பல்வேறு சமூக நீதிஉரிமைகளையும், பெண் விடுதலை யோடு ஒரு சேர முன்னிறுத்தி வந்ததே பெரியாரின் தனிச் சிறப்பாக இருந்தது.

இதன் காரணமாகவே, அன்றைய தினம் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்களெல்லாம் அவர்மீது கொண்ட அன்பிற்காக, அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினர்.

எது அதிகக்கெடுதி?


மக்களைக் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லுகிறவர் களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதானால் கோவி லுக்குப் போகும் படி சொல்லுகின்ற வர்களால் அதை விட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.

கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்றவர் களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.

கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லு கின்றவர்கள் நல்லவர்கள்.

குடிஅரசு, 21.12.1930
- விடுதலை ஞாயிறு மலர், 29.12.18