திங்கள், 25 ஆகஸ்ட், 2025

பிள்ளை யார்?


சிறப்புக் கட்டுரை

தந்தை பெரியார்

சிறப்புக் கட்டுரை

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண் ணிக்கை  “எண்ணித்  தொலையாது, ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கட வுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள் களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி இருப் பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான அறிவுகளும் வெகு காலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.

இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள் களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதும் அதிக செல்வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றி சற்று கவனிப்போம். ஏனெனில் கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதல் கடவுளைப்பற்றித் தெரிவதுதான் நன்மையானதாகும். ஏனெனில் முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால் மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாயிருக்கலாம். அன்றியும் எந்தக் காரியம் ஆரம்பித் தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால் நாமும் கடவுள்களின் கதைகளைப் பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப்பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ. இல்லா விட்டால் “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்” அன்றியும் சமீபத்தில் அக்கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்று வரப்போவதால் இந்தச் சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்க லாம். ஆதலால் தொடங்குதும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா?

 

பிள்ளையார் பிறப்பு

  1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கு களைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளை யாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து “நான் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்த தாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்த தாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்” என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் “காவல்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண் டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாகவும்” கதை சொல்லப் படுகின்றது. இக்கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.
  2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
  3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
  4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பிய தாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானை யின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.
  5. இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக் கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவ ராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கட வுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுதானே தீரும் (இவைகளைப் பார்க்கும்போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)

கோடிக்கணக்கான கடவுள்கள்

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும் மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்கவும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடு கின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்ப தாகவும் சொல்லப்படுகிறது.

ஆபாசக் கதைகள்

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையாரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படு கின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்களுக்கு கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெ ழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா அன்றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்ற வில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும் – இப்படி இருக்க வேண்டும்” என்றும் “மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து” கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் “வக்காலத்து பெற்று” மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங் களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத் தையும் காப்பாற்றிவிட முடியாதென்றோ சொல் லுவோம். இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.

– ‘குடிஅரசு’ – கட்டுரை – 26.08.1928

-விடுதலை நாளேடு, 24.08.2025

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

கடவுள் – மத கற்பனை



 23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை

 

சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன்.  பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும் அளவைவிட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது.  நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு-ஜாதி இழந்தவனெனவும், தேசத்துரோகியெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும், அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன்,  விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.

இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன்.  உங்கள் வரவேற்புப் பத்திரத்துக்கு நன்றி செலுத்துகிறேன்.

 வீண் விவாதத்தைக் கிளப்புகிறார்

இப்போது என்னை பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம், கடவுள், மதம் என்பதாகும்.  வேறு எந்த விதமான பிரச்சாரகர் வந்தபோதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களைபற்றி அவர்களை கேட்பதில்லை.  ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள்.  நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவே சீவன மார்க்கராகவோ கொண்டவனுமல்ல அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றியே பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல.  எங்களுடைய வேறு முக்கியமான-நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும் போது, அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடையில் இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களை கொண்டு வந்து விடுகிறார்கள்.  எப்படி இருந்தபோதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை.

கடவுள் – மத கற்பனை

மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல்- தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது.  காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும், அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான்.  இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை, சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்கு கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப் பற்றி கவலை இல்லை, அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்துக்கு தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர-சுகவாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார்-மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு-கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கேகொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.

மதம்

உதாரணமாக, மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து, ஆண்டான் அடிமை தன்மைமாறி ஆணும்பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழித்தால் தமது உயர்வும் தமது பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கேபோட்டு, எங்களைத் தடைப்படுத்தும் போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்கவேண்டுமெனக் கூறுகிறோம். தீண்டாமையை மேல்ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்கிறோம்.  தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது.  அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டிவந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, ‘மதம் போச்சுது மதம் போச்சுது’ என்று விஷமப் பிரச்சாரம் செய்து, எங்களை மதத் துரோகி என தூற்றிட அவர்களால் சுலபமாக முடிகிறது.

“கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக் கொண்டு பார்ப்போம். அதுவும் இப்படித்தான்.  அதாவது கடவுளைப் பற்றி விளக்க இதுவரை, எத்தனையோ ஆத்ம ஞானிகள் சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடுபட்டிருக்கின்றனர்,  ஆனால் முடிந்ததா? முடிவு  இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரியவைக்க முடிந்ததா?

“கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது” என அடுக்கிகொண்டே போய் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.

இன்று இந்நாட்டினரால் மனித ‘ஆத்மாவுக்கு’ மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி ‘மகாத்மா’ என்று சொல்லப்படுபவராகிய தோழர் காந்தியார் ‘சத்தியம் தான் கடவுள்’ என்கிறார்!

சைவசமயிகள் (அன்பே சிவம்) ‘அன்பு தான் கடவுள்’ என்கின்றனர்.

இராமலிங்க சுவாமிகள் என்று சொல்லப்பட்ட வள்ளலார் பெரிய அறிவுதான் கடவுள் (அறிவே தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோட்ச நரகங்களைக் கொடுக்கும் கடவுள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்களென பச்சையாகச் சொல்லிவிட்டார். தோழர்களே! உங்களை ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன்  இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?

ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது, அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித வாழ்வுக்கு நன்மையும் அவசியமுமான காரியங்கள் குணங்கள் எவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள்.  இதை பார்த்தாவது மனிதனுக்கு அறிவு உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன். ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி எவரிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின் படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாக கருதப்படுவானா ? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்று தான் கேட்கின்றேன்.  அன்பு அறிவு உண்மை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்ன தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை  தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட கடவுளைப் பற்றி கவலைப்படாமல் கடவுளுக்குப் பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தன் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன்.  இந்த உணர்ச்சியினாலேயேதான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல் நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை  அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன்.    நான் கூறின மேல்கண்ட தத்துவங்கள் மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.

மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர்.  ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்கஇடமில்லையே!

மகா அறிவாளியான சங்கராச்சாரியார் “அஹம் பிரம்மாம்சி  நானே கடவுள்” என்று கூறினார்.  அதற்காக சைவர்கள் அவரைத் தானே “கடவுளெனும் பாதகத்தவர்” என்று தண்டிப்பதுமுண்டு.

இதைப்போன்றே சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் “இயற்கையே கடவுள்” எனக் கூறி விவாதத்தை முடித்துக் கொண்டார்.  அது கண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே பிறகு அவர், அழகே கடவுள் அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன் ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது. என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற் போல் அவர் அடிக்கடி “என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்” என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.

இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல் “இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா” என்று கேட்கின்றனர்.  ஏதோ ஒரு சக்தி இருக்கட்டும்.  இருக்க வேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்து விட்டோமா? அதைப் பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன்.  மேலும் மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா? என்று கேட்கிறார்கள்.  வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ, வாழ்க்கையில் நீதி அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ, அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர் மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்திலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படி செய்து விட்டார்கள்.

உதாரணமாக, ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரை யாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமோ? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்ரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணிய ஸ்தலயாத்திரையை புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் – ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா?

இன்று சிறையிலுள்ள 2 லட்சம் கைதிகளில் சம்சய வாதிகளோ, (கடவுள் பற்றி கவலைப் படாதவர்கள்) நாஸ்திகர்களோ, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள்.  மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித அசந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும்.  ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாபநஷ்டப்படி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

– ‘குடிஅரசு’, 30.01.1938

-விடுதலை நாளேடு, 17.08.25

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இந்தியத் தொழிலாளர்

தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடைய வனாகவிருக்கிறேன். பொதுவாய் நம் நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர் களைக் குறிக்கின்றதே யன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலாளன் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத் தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும். தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உபகருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அது போல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வÞதுவும் அதற்கு உபகருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆக மாட்டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதேயல்ல. இவர்களாகவே கூலிக்கு அமர்ந்து கொண்டு அடிமைபோல் சொல்லுகிறதைச் செய்கிறதாகவும் சம்மதித்து, பிறகு எஜமானன் அதிக லாபம் அடைவதைப் பார்த்துப் பொறாமை கொண்டோ, தொழில் திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்குப் போதாது என்ற காரணத்தினாலோ தாங்கள் இல்லாவிட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிகக்கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம், வேலை நிறுத்தம் செய்தபின் வேறு ஒருவன் அந்த வேலை செய்யவும் சம்மதிக்கமாட்டோம். முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடையவேண்டும் என்கின்ற முதலியனக் காணப்படும் செயல்களையும் அதன் பலன்களையும்தான் தொழிலாளர் இயக்கமென்பதும், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றி தோல்வியாய்க் கருதப்படுவதுமாகவிருக்கிறது.

இதைக் கூலிக்காரர்கள் இயக்கம் என்றுதான் கூறலாம். இவ்வித இயக்கம் உண்மையில் நம் தேசத்திற்கோ, நம் தேச மக்களுக்கோ எவ்விதத்திலும் அனுகூலமான இயக்கம் என்று சொல்லமுடியாது. இது மேனாட்டு வழக்கத்தை அனுசரித்தது. அங்குள்ள முதலாளிகளும், கூலிக்காரர்களும் கீழ்நாட்டுப் பணத்தையும், பதவியையும் கொள்ளையடித்து அதை எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்கிற சண்டைதான் அங்கு தொழிலாளர் இயக்கமாய் விளங்குகின்றது. நம் நாட்டிலோ தொழிலாளி அதிகக்கூலி கேட்க  கேட்க முதலாளி, மக்கள் வாங்கும் பொருள்களின் மேல் அதிகவிலையை வைத்து, மக்களிடம் பொருள்பறித்து, சிறிது தொழிலாளர்களுக்குக் கொடுத்து மிகுதியைத் தான் எடுத்துக்கொண்டு முன்னிலும் தான் அதிக லாபம் சம்பாதித்தவனாகிவிடுகிறான். உதாரணமாக, ரயில்வே, டிராம்வே தொழிலாளர்களின் இயக்கங்களை எடுத்துக்கொள்வோம். சென்னை டிராம்வே, ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் எஜமானர்களான கம்பெனிக் காரர்களிடத்தில் அதிகக்கூலி கேட்டார்கள். எஜமானர்களும் முதலாளி களுமான கம்பெனிக்காரர்களோ கட்டணமாகிய டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தினார்கள்.

இவ்வகையில் ஜனங்களின் பணத்தைப் பறித்து தொழிலாளர்களுக்குக் கொஞ்சம்  கொடுத்துவிட்டு மேற் கொண்டும் தாங்கள் லாபம் அடைந்தார்கள். இதில் எவருடைய பொருள் நஷ்டமடைந்தது? முதலாளிகள் பொருளா? இம்மாதிரியான நடவடிக்கைகளை சுருக்கமாகக் கூறின் கூட்டுக்கொள்ளை என்றுதான் சொல்லவேண்டும். இவ்வித இயக்கங்களாலும், நடவடிக்கை களாலும் தேசம் ஒருபொழுதும் முன்னேற்ற மடையாது. ஏழைகளும் பிழைக்க முடியாது. இவ்வித இயக்கங்கள் நடத்தவதைவிட பொதுவுடைமைத் தத்துவங்கள் நடத்துவது குற்றமென்று சொல்ல முடியாது. இம்மாதிரி இயக்கங்கள் நாட்டின் உண்மைத் தொழில் அபிவிருத்திக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் கொஞ்சமும் உதவி செய்யாது. இதுமாத்திரமன்றி இவ்வியக்கங்களை நடத்தும் தொழிலாளர்களின் தலைவர் களோவென்றால் பெரும்பாலும் முதலாளிகளும் எஜமானர் களுமாகவேதான் இருக்கிறார்கள். தொழிலாளிகளின் கஷ்டமும் கூலிக்காரர்களின் கஷ்டமும் ஒரு சிறிதும் அறியாமல் தொழிலாளரின் உழைப்பினாலும், கூலிக்காரரின் அறியாமையி னாலும் பிழைக்கிற இவர்கள் இவ்வியக்கத்தை நடத்துகின்றனர். இது எப்படி முன்னுக்கு வரும்? இதுவரை நம் நாட்டில் தொழிலாளர் இயக் கங்கள் எவ்வளவு முன்னுக்கு வந்தன? எவ்வளவு மறைந்தன? எவ்வளவு வெற்றி யடைந்தன? எவ்வளவு தோல்வியடைந்தன? எவர் ஒழுங்காக நடத்தினர்? என்பதைக் கவனித்தால் இவற்றின் பலனை நன்கு அறியலாம்.

தொழிலாளிகளும், தொழிலாளர் இயக்கங்களும் இந்த நாட்டில் முன்னுக்கு வரவேண்டுமாயின், தொழிலாளர்கள் தாங்கள் கற்ற தொழிலைக்கொண்டு தாங்களே ஒரு தொழில் தங்களிஷ்டம்போல் செய்து தொழில் திறத்தையும் ஊழியத்தையும் அறிந்து அத்தொழிலின் பலன்களை நாட்டாருக்குக் கொடுத்து நாட்டாரை அனுபவிக்கச் செய்து, அதன் ஊதியமுழுவதும் தாங்களே அடையும்படியான நிலைமை நாட்டிற்கு என்று வருகின்றதோ அன்றுதான் தொழிலாளரின் நிலைமை முன்னேற்றமடையுமே அல்லாமல் கைத்தொழில் அழிக்கப்பட்டுப்போன காரணத்தால் முதலாளிகள் இயந்திரங்களை அதிகம் அமைத்து, திக்கற்றவர்களைக் கூலிக்கமர்த்தி, அவர்களிடம் கொடுமையான வேலை வாங்கி, அதன் பயனாய் கொள்ளை அடிப்பது போன்று லாபத்தைச் சம்பாதித்து அவை வேலைக்காரர்களும் பொதுஜனங்களும் அடையாதபடி நடுவிலிருந்துகொண்டு முதலடித்து

தானேஅனுபவித்து வருவதால் ஒருநாளும் முன்னேற்றமடைய முடியாது.

இதுவரை தொழிலாளரின் கதி இப்படியாயினும் இனி எதிர்காலத்திலாவது தொழிலாளர் தங்கள் குழந்தைகளையும் மற்றும் தொழில் வேண்டியவர்களும் தாங்கள் கற்கும் தொழிலைக் கொண்டு மற்றொருவர் பிழைக்கும் மார்க்கமான தொழிலாயில்லாமல் தாங்கள் செய்யும் தொழிலின் பலன்களை முற்றிலும் தாங்களே அனுபவிக்கும்படியான தொழில்களைக் கற்றுக் கொடுப்பதுடன் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் இயக்கங்களை முதலாளிகளும் எஜமானர்களும் தலைமை வகித்து நடத்தவிடாமல் தானேதன் கையைக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளியோ, அல்லது கூடுமானால் தன் கைக்கொண்டு வேலை செய்து அதன் முழுப்பலனையும் தானே அடையும் படியான உண்மையானதும் சுதந்திரமுடையதுமான ஒரு தொழிலாளியோ இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்தும்படி வந்தால், இன்றைக்கே இல்லாவிடினும் கூடிய விரைவிலாவது தொழிலாளிகளும், தொழிலாளரின் இயக்கங்களும் நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடியவைகளாக விளங்கும். இல்லாதவரையில் தலைவர்கள் என்போர் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்ளவோ, முதலாளிகள் கொள்ளை அடிக்கவோ, தொழிலாளிகள் என்போர் சண்டித்தனம் செய்து வயிறு வளர்க்கவோதான் முடியும்.

– குடிஅரசு, கட்டுரை, 28.06.1925

-விடுதலை நாளேடு, 2.8.25

தந்தை பெரியார் ஆற்றிய திருத்துறைப்பூண்டி மாநாட்டு உரையை மூன்றாம் நபர் போல் அவரே விமர்சனம்!

 

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! ஈ.வெ.ரா. விளக்கம்

சுயமரியாதை இயக்கத்தை பற்றி தந்தை பெரியார் ஆற்றிய திருத்துறைப்பூண்டி மாநாட்டு உரையை கடந்த 5.8.2025 அன்று வெளியிட்டிருந்தோம். அந்த உரை பற்றிய குடிஅரசு ஏட்டில் வெளியான தலையங்கம் இது. இது மூன்றாம் நபர் போல் எழுதப்பட்டிருந்தாலும், இதுவும் தந்தை பெரியார் எழுதியது தான். இந்த தலையங்கத்தின் நடையே இதனை வெளிப்படுத்துகிறது. – ஆசிரியர்

தோழர் ஈ.வெ.ரா. திருத்துறைப்பூண்டியில் தனது நிலைமையை விளக்கிக்காட்ட செய்த உபன்யாசம் மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வுபன்யாசம் சுயமரியாதை தொண்டர்களில் சிலர் செய்துவரும் விஷமப் பிரசாரத்துக்கு தக்க சமாதானமாகுமென்று நம்புகிறோம்.

தோழர் ஈ.வெ.ரா.மீது சுயமரியாதை தோழர்கள் சிலர் செய்து வரும் விஷமப் பிரசாரமெல்லாம் ஈ.வெ.ராமசாமி பொதுவுடைமைப் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும், ஈ.வெ.ராமசாமி மந்திரிகளுடன் குலாவுவதுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்பதுமேயாகும்.

பொதுவுடைமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு காரணம் முன்னமேயே கூறியிருக்கிறார்.

அதாவது அரசாங்கத்தார் பொதுவுடைமைப் பிரசாரத்தை சட்ட விரோதமானதென்று தீர்மானித்து விட்டதாலும், சுயமரியாதை இயக்கம் தனது கொள்கை களையும் திட்டங்களையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பிரசாரம் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக இருப்பதாலும் இப்போது சட்டத்தை மீறி பொதுவுடைமைப் பிரசாரம் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாய்த் தெரிவித்து இருக்கிறார். அதோடு கூடவே சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதுபற்றி 10-03-1935ஆம் தேதி குடிஅரசில் விளக்கியும் இருக்கிறார். இதையே திருச்சி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டிலும் விளக்கமாக எடுத்துக்கூறி இருக்கிறார்.

பொதுவுடைமைப் பிரச்சார சம்பந்தமாக இதற்கு மேலும் சமாதானம் கூற முடியாது.

அப்படியிருக்க ஒவ்வொரு மகாநாட்டிலும் ஒரு கூட்டம் இதையே திருப்பித் திருப்பி கூச்சல் போட்டு கலகம் விளைவிக்க முயற்சிப்பது ஒரு காலமும் நல்ல எண்ணத்தின் மீது செய்யப்படும் காரியம் என்று சொல்லிவிட முடியாது.

அடுத்தபடியாக ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளுடன் குலாவுவது என்பதைப் பற்றிய புகார் வெறும் அறியாமை யால் ஏற்பட்ட கற்பனைமீது உண்டான அசூயையே தவிர, வேறு ஒன்றுமில்லை.

மந்திரிகளைப்பற்றி ஈ.வெ.ராவின் அபிப்பிராயம் குடிஅரசு படிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. மற்ற பத்திரிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. மந்திரிகள் சுயமரியாதை இயக்கத்துக்கு செய்த தீமைகள் பல ஒரு புறமிருக்க, அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியையே எதிரிகள் முயற்சி இல்லாமலேயே ஒழிக்கும் படியான வேலை செய்து வருவதைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட்டு வந்திருக்கிறார்.

ஆனால், மந்திரிகள்மீது சுமத்தப்படும் அரசியல் கொள்கைகள், வேலைகள் சம்பந்தப்பட்ட மட்டில் எதிரிகள் கூத்தைக் கண்டித்தும், பல சமயம் மந்திரிகள் கூற்றை ஈ.வெ.ரா. ஆதரித்தும் வருகிறார் என்றால் இது பார்ப்பனரல்லாதார் சமுக நலனை உத்தேசித்தே ஒழிய வேறில்லை. மற்றபடி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பது என்பது மாத்திரம் முழுதும் உண்மை. இதை அவர் எப்போதும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டியது தமது கடமை என உணருவதாக சுமார் 15 வருஷமாகவே கூறி வருகிறார். அன்றியும் ஜஸ்டிஸ் கட்சி, ஏழை மக்கள், தீண்டப்படாத மக்கள், சமுக வாழ்வில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கட்சி என்பதாக உணர்கிறார். அந்த உணர்ச்சி மாறுபடும் வரையில் ஜஸ்டிஸ் கட்சியை அவர் ஆதரித்துத் தான் தீர வேண்டியிருக்கும். சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டதும், அது பல கொள்கை களைக் கொண்டு இருப்பதும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கு உதவி செய்வதற்காகவும் தானே ஒழிய, வேறில்லை.

ஜஸ்டிஸ் கட்சியைப் பார்ப்பனரல்லாத மக்கள் பலர் சரியானபடி ஆதரிக்காததாலேயும், அக்கட்சி எந்த மக்களுக்காக பாடுபடுகின்றதோ அந்த மக்களிடம் போதிய நன்றி விஸ்வாசம் இல்லாததினாலேயும் அக்கட்சி இந்த மாதிரியாக தாழ்ந்த நிலையில் பேச வேண்டியதாக ஆகிவிட்டது. ஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும், பல பணக் காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர, அதன் கொள்கைகள், அது செய்த வேலைகள் ஆகியவை அநேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை. இதன் காரணம் பாமர மக்களின் அறியாமை ஒருபுறமிருந்தாலும் மற்றும் பலருக்கு உத்தியோக ஆசையும், பணத்தாசையும், ஏமாற்றத்தால் ஏற்பட்ட பொறாமையும் தவிர வேறில்லை என்பது நமது அபிப்பிராயம்.

மந்திரிகள் பெரிய உத்தியோகக்காரர்களாயிருக்கிறார்கள். அதன் பிரமுகர்கள் பலர் பெரும் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்த இரு கூட்டத் தார்களும் கட்சி விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொள்ளாமல் தங்கள் சுயநலத்துக்கும், அதற்கு வேண்டிய சூழ்ச்சிக்குமே கட்சியின் பெரும்பாகத்தை பயன்படுத்திக் கொள்வதால் பலருக்குத் தானாகவே அக்கட்சியின்மீது துவேஷம் ஏற்படும்படி செய்து விடுகின்றது.

ஆனால், இவ்விரு கூட்டமும் அதாவது மந்திரி உத்தியோகமும், பணக்காரர்கள் ஆதிக்கமும் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்றியமையாதது என்பதாக பலமுறை தோழர் ஈ.வெ.ரா எடுத்துக்கூறி இருக்கிறார். காரணம் பணக்காரர்கள் இல்லாவிட்டால் எலக்ஷனில் ஜெயிக்க முடியாது. ஜெயிக்காவிட்டால் அரசியல் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது. ஆதலால், இந்த இரு கூட்டமும் அவசியமானதாகிறது.

இவர்கள் நாணயமாக நடக்கவில்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும், தோழர்கள் சத்தியமூர்த்தியும், கல்யாணராமய்யரும் போன்றவர்கள் எலக்ஷனில் வெற்றி பெற்று, அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி, ஆட்சி புரிவதை விட நாணயக் குறைவான மந்திரிகளும், சுயநலப் பணக்காரர்களும் அதிகமான கெடுதிக் காரர்களாக இருந்துவிட முடியாது என்போம்.

வெறும் பொறாமை ஒரு நன்மையையும் உண்டாக்கி விடாது. பணக்காரர்களின் இயற்கை குணம் இன்னது என்பது யாரும் அறியாததல்ல. யார் பணக்காரர்களானாலும் இப்படித்தான் இருப்பார்களே தவிர, இதற்கு மேல் யோக்கியர்களாக இருந்துவிட முடியாது. இன்று காங்கிரசிலும், முழு சமதர்மத்திலும் இந்த யோக்கியதை உடன்தான் பல பணக்காரர்கள் இருந்து வருகிறார்கள்.

ஆனால், மந்திரிகளுடைய யோக்கியதை யார் பார்த்தாலும் இப்படித்தான் இருக்க முடியுமென்று சொல்லிவிட முடியாது. தோழர்கள் டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார் ஆகியோர் மந்திரி பதவிகளானது கட்சிக்கு நன்றி விசுவாசமுள்ளதாக இருந்தது என்பதை நாம் மறைக்கவில்லை.

பெரிய அரசியல் பிரச்சினை, போட்டி, உள் கலகம், எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தின் ராஜதந்திரம், தங்கள் சுயநிலை ஆகியவைகளின் மத்தியில் மந்திரிகள் அரசியல் நிர்வாகம் செய்வது என்பது சுலபமான காரியம் என்று யாரும் நினைத்துவிட முடியாது. அன்றியும், மந்திரி பதவிகளுக்கு எவ்வித யோக்கியப்பொறுப்பான நிபந்தனையுமில்லாமல், லாட்டரிச் சீட்டு விழுவதுபோல் இருப்பதால் மந்திரிகளால் நாம் அடிக்கடி ஏமாற்றமடைய வேண்டியதாகவும் ஏற்பட்டு விடுவதில் அதிசயமில்லை.

எப்படி இருந்த போதிலும் ஜஸ்டிஸ் கட்சியை அனாதரவு செய்யவோ, மந்திரிகளை கவிழ்க்கவோ சுயமரியாதை இயக்கம் ஒருப்பட முடியாது என்பதுடன் அவற்றை ஆதரிக்க வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்பதில் நமக்கு சிறிதுகூடத் தயக்கமில்லை.

மந்திரிகளுடன் தோழர் ஈ.வெ.ராமசாமி குலாவுகிறார் என்பவர்களில் பலருக்கு உள்ள முக்கியமானதும், சிலருக்கு ஒன்றேயானதுமான காரணம் “மந்திரிகள் ஈ.வெ.ராவுக்கு பணம் கொடுக்கிறார்கள்” என்று கருதி இருப்பது என்பதாக நாம் உணருகிறோம். இதுவும் மனிதனுடைய பேராசையால் ஏற்பட்ட கற்பனையின் பொறாமையே யாகும். தோழர் ஈ.வெ.ரா இந்த 12 வருஷ காலமாக ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் முதலியவை செய்து வருவதில் ஒரு ஒத்தை ரூபாயாவது எந்த மந்திரியிடமாவதிருந்து கட்சி வேலைக்கு என்றோ, பிரச்சாரத்துக்கு என்றோ, மற்ற எந்த காரியத்துக்காவது என்றோ கேட்கவோ, வாங்கவோ வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்ததே கிடையாது என்று உறுதியாகச் சொல்லுவோம்.

அக்கட்சியிடம் காட்டும் அபிமானமும், மந்திரிகளுக்குப் பரிந்து பேசும் தன்மையும் சாதாரண மக்களுக்கு, இந்த மாதிரி பணம் வாங்காமல் பேச முடியுமா? அல்லது மந்திரிகள் பண உதவி இல்லாமல் ஈ.வெ.ராவுக்கு இவ்வளவு பிரச்சாரம் செய்ய முடியுமா? என்றெல்லாம் தோன்றலாம். சிலருக்குத் தாங்கள் வேண்டும் போதெல்லாம் ஈ.வெ.ரா. பணம் கொடுக்காததால் கோபித்துக் கொள்ளும் காரணமும், கொடுத்தது போதாமல் அயோக்கியத்தனமாய் விஷமப் பிரசாரம்  செய்வதற்கு காரணமும் தோழர் ஈ.வெ.ரா., மந்திரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு பங்கு சரியாகக் கொடுக்கவில்லையே என்கின்ற குறைபாடே என்பதுகூட நமக்கு நன்றாய் விளங்குகிறது.

தோழர் ஈ.வெ.ரா. ஒரு சமயத்தில் வெளியிட்ட ஸ்டேட்மெண்டையே இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது ‘‘இயக்கத்திற்கு என்றோ வேறு என்ன காரியத்துக்கு என்றோ, நாளதுவரையில் எந்த மந்திரிகளிடமிருந்தும் மற்றும் இயக்கத் தலைவர்கள் என்பவர்களிடமிருந்தும் ஒரு காசும் வசூலித்ததில்லை’’ என்று கூறியிருக்கிறார்.

திராவிடன் பத்திரிகை நடத்தும்போது ஜஸ்டிஸ் கட்சியார் பத்திரிகை நஷ்டத்திற்கு மாதம் மாதம் கொடுப்பதாக வாக்குக் கொடுத்த ரூபாயில் ஒரு காசு கூட கொடுக்கவேயில்லை. அதனால் சுமார் 20 – 30 ஆயிரத்துக்கு மேல் வெளியாரும், ஈ.வெ.ரா.வும் கை நஷ்டப்பட வேண்டி வந்தது. அதற்காக ஆதியில் பெரும்தொகை வாக்குக் கொடுத்த சில தோழர்கள் அக்காலத்தில் திராவிடனுக்கு சுமார் 3, 4 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கொடுத்தார்கள். இதைத்தவிர ஒருவரும் கொடுக்கவும் இல்லை. யாரையும் அவர் கேட்கவும் இல்லை.

டிசம்பர் மாதத்தில் 10 பிரச்சாரகாரர்களைத் தயார் செய்வதற்கும், அவர்களுக்கு ஒரு மாத சாப்பாட்டிற்கும், போக்குவரவு ரயில் சார்ஜுக்குமாக விருதுநகர் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானப்படி தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் வேண்டுகோளின் மீது பொப்பிலி ராஜா 300 ரூ. அனுப்பினார்கள் 10, 13 தொண்டர்களின் 1 மாதம்  போதனைக்கும், சாப்பாடு, இரயில் சார்ஜ் செலவுக்கும், இரண்டொரு இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு அனுப்புவதற்கும் செலவு செய்யப்பட்டது. அடுத்த மாதத்திற்கு அனுப்பும் விசயத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்களே போதனா முறை பெற்றவர்களுக்கு வேலை கொடுப்பதாய் இருந்தால் தான் மேல் கொண்டு ஒரு பேட்சுக்கு போதனா முறையளிக்கலாம், இல்லாதவரை போதனாமுறையில் பிரயோஜனமில்லை என்று எழுதி நிறுத்தி விட்டார்.

மற்றபடி கிரமமாய் கணக்குப் பார்த்தால் மந்திரிகளிடமிருந்து 100, 200 என்கின்ற கணக்கிலாவது ஈ.வெ.ரா.வுக்கு பணம்  வர வேண்டியிருப்பதாயும் பல நூறு ரூபாய் ஈ.வெ.ராவுக்கு செலவாகியும் அவர்கள் சொன்ன இடத்துக்குப் போகவும், அவர்கள் கூப்பிட்டபோது  செல்லவும் மற்றும் பல நூறு ரூபாய் செலவாகியும் இருக்குமே ஒழிய, ஒரு மந்திரியிடமும் பணம் வாங்கவுமில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. உண்மையிலேயே சில தோழர்கள் தவறுதலாய் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

யாரிடமும் பணம் வாங்காமலும், சுயநலத்துக்கு ஒரு காரியமும் செய்து கொள்ளாமலும் இருக்கிற ஒருவன் எப்போதும், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதோடு அவனுக்கு எவ்வித குறைவும் வராது என்பது தோழர் ஈ.வெ.ராவின் முடிந்த முடிவாகும்.

இந்தக் காரணத்தாலேயே அவர் யாரையும் ‘நான் சொல்லுகிறபடி கேட்டால் கேள் இல்லாவிட்டால் போ’ என்றும், ‘நான் அப்படித்தான் செய்வேன்’ என்றும் சொல்லவும் தனது கொள்கையையும், இஷ்டத்தையும் யாருக்கும் அடிமைப்படுத்தாமல் இருக்கவும் முடிந்து வருகின்றது.

இந்த இயக்கம் தோழர் ஈ.வெ.ராவுக்கு ஒரு ஜீவன் மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொது நல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார்.

அதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப் பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத்தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை.

அன்றியும் அவர் காரிய வீரரே தவிர வெறும் கொள்கை வீரரல்ல, கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கைகளைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சௌகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய, கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர்.

பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ,
கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடைமையாகாது. கருத்தொரு மித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடைமையும் அறிவுடைமையாகும்.

ஆகையால்தான், காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்குப் பெயர் கோழை என்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக் கவலை இல்லை.

கோழை என்பது செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியங்களை விட்டு ஓடுவதேயாகும்.

துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டுச் சுயநலத்துக்காகப் பின் வாங்குவதாகும்.

இன்று அவருக்குச் செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டு விட்டு அவர் ஓடவில்லை.

இரண்டாவதாக, யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்குப் பிரதி பிரயோஜனமடைந்தோ, வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை.

ஆகையால், பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடைமையாகாது. கருத்தொருமித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடைமையும், அறிவுடைமையாகும். கருத்தொருமித்தவர்களே அவரது உயிர்த்தோழர்கள்; கருத்து வேறுபாடுடையவர்கள் மற்றவர்களே யாவார்கள் என்பதை கூறி இதை முடிக்கின்றோம்.

குடிஅரசு – தலையங்கம் – 29.03.1936


- விடுதலை நாளேடு, 8.8.25

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?



விடுதலை நாளேடு

– சித்திரபுத்திரன் –

கிருஷ்ணன் – அர்ஜூனன்
சம்பாஷணை!

கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் – இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும்

தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

அர்ஜூனன்:   ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி வஞ்சித்து வசப்படுத்தியதாகவே காணப்படுகின்றனவே! அது மாத்திரமல்லாமல் அந்தப் பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே! இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன்:   ஓ! அர்ஜூனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒரு நாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படி போடமுடியும்? அப்படியே போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும்? ஒரு சமயம் திரு. அ.இராகவன் சொல்லுவது போல் ஆண் – ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படிப் பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன் னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்ப வனுக்கு புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல் லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.

அரு: அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்கு சற்று சொல்லு பார்ப்போம்!

கிரு: அந்த மாதிரி எழுதின தத்து வார்த்தம் என்ன வென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும், எதிரியை ஜெயிக்கப் போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிகச் சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப் போய் காட்டியோ, அல்லது அவனுக்குக் கூட்டிவிட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த் தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் ரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாத வன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந் திருந்தால் அதற்குப்  பொது ஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத் தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றி பெற்றான் -பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்களே கூடச் சொல்லு வதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என் (விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள் . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்த தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்!

எப்புடிடா? – ‘கிருஷ்ண ெஜயந்தி’’
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

ஆதலால் வெற்றி பெறுவதற்கு வழி எனப்தைக் காட்டும் தத்துவப் பொரு ளாகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். இது போலவே தத்துவார்த் தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் பழக்கமும், வழக்கமும் தத்து வார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமும், அவைகளெல்லாம் சுயமரியாதைக் காரர்களுக்கல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.

அரு: சரி, சரி! இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம்! சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.

கிரு: அதென்ன சொல்லு பார்ப்போம்!

அரு: அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்னியாசி ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட்டான் என்றும், அந்தப்படியே அவன் கொடுத்தான் என்றும் சொல்லப்படுகின் றதே! அதன் ரகசியம் என்ன?

கிரு: இது தெரியவில்லையா?

அரு: தெரியவில்லையே!

கிரு: சன்னியாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகஸ்தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்யவேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்க வேண்டும்! அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக் கின்றது! ஆகவே அந்தப்படி சன்னியாசிக்குப் பெண்களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்னியாசி ரூபமாய் – ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்னியாசி யாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டுக்கு வந்தால் அவன் கேட்டவு டனேயே கொடுக்க வேண்டும் என்பதற் காகவே அதாவது இந்த சன்னியாசி – சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்து விடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக் காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.

இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும்.

தவிரவும், குருசாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப்பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்து கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்தந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், சிலர் தெரி யாதது போலவே காட்டிக் கொண்டிருக் கிறாகள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும், மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.

அரு: சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்கு கின்றாயா?

கிரு: என்ன அது! சொல் பார்ப்போம்!

அரு: அதாவது புராணங்களில் அக்கிர மமான, வஞ்சகமான புரட்டான காரியங் கள் செய்யவேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்த தாகக் காணப்படுகின்றதே! இதன் தத்துவ மென்ன?

கிரு: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படு மென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக் காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற் காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியா தைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காகப் பார்ப்பனர்களைத் தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.

அரு: இன்னம் ஒரு சந்தேகம்?

கிரு: என்ன சொல்லு?

அரு: கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்!

கிரு: ஆம்.

அரு: அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவா கனம், கும்பாபிஷேகம் முதலி யவை செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும் கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?

கிரு: அதன் ரகசியம் என்னவென்றால், மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டு விடுவான். அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால்தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்குத் தனக்கு வேண்டியதையெல்லாம் நைவேத்தியம் செய்யச் செய்து, தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசிய மும் ஏற்பட்டது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால்தான் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்துவிடும், கடவுள் மஹிமைகளும் ஒழிந்துவிடும்.

அரு: சரி, இவை எனக்கு ஒரு மாதிரி விளக்கமாயிற்று. இன்னும் சில விஷ யங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.

கிரு: சரி.

21-12-1930 – குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

திராவிடர் கழகத்தை எதிர்ப்பது யோக்கியமா?- தந்தை பெரியார்

 


தோழர்களே!

இன்று 66ஆம் ஆண்டு கொண்டாட்டம் என்பதன் பெயரால் இவ்வளவு பெருமையும் பாராட்டுதலும் எனக்களித்ததற்காக நான் மிகுதியும் நன்றி செலுத்துகிறேன். நீங்கள் குறித்த புகழுக்கு நான் உரிமையுடையவன் என்று வைத்துக் கொண்டாலும், அது நீங்களாகவே எனக்கு ஏற்படுத்தி வைத்தது தான்.

என் பெருமை உங்களால்

எவ்வளவு பெரிய சிறப்பும் பெருமையும் உள்ள கோயிலாக இருந்தாலும் அதன் சிறப்பிற்குக் காரணம் அங்கே செல்லும் மக்களைப் பொறுத்து இருக்கிறதேதவிர, உள்ளேயுள்ள உருப்படி அல்ல. அதற்கு மற்ற உருப்படிகளை விட அதிக யோக்கியதையும் கிடையாது. அது போலவேதான் உங்களைப் பொறுத்திருக்கிறது என்னுடைய புகழும், தொண்டும்.

இவ்வளவு அன்பும், ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட மக்களை எப்படிப் பயன்படுத்துவது என்ற கவலை எனக்குச் சில சமயங்களில் வருவதுண்டு. வெளியிலுள்ள போராட்டங்களையும் நமக்கு தொல்லை கொடுத்து வயிறு வளர்ப்பவர்களையும் மறந்து நம்மீதுள்ள பொறுப்பைச் சிந்திப்போம். இன்று கட்சிப் பிரதி கட்சித் தகராறை மறந்து, நம்மீது சில இழி மக்கள் செய்துவரும் வீண் பிரச்சாரத்தையும் மறந்து, இவ்வளவு பெரிய தீர்மானங்களை நிறைவேற்றி விட்டோமே என்ற நம்பிக்கையில், “நமது நாட்டை நாம் பெற்றே தீருவோம்” என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

ஒரு பிரபலஸ்தர் – மிகப் பெரியவர், சமீபத்தில், ‘பாகிஸ்தானாவது, திராவிட நாடாவது, எல்லாம் கனவுதான்’ என்றார். “அது கனவோ, நனவோ அது இன்று பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களை “திராவிடநாடு திராவிடருக்கே” என்னும் பிரச்சினைக்காக சிறைக்கு அனுப்பவும் என்னால் முடியும். சாகும்போதும் ‘திராவிட நாடு’ என்று சொல்லிக் கொண்டே சாக இருக்கிறேன். பிறகு எப்படியோ ஆகட்டும்” என்று பதில் கூறினேன். முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், அவர்கள் நிலைமை ஒன்றுதான்.

ஆரியஸ்தானிலும், அவர்கள் கட்டுப்பாடுடன் இருப்பதால் நன்று வாழ்வார்கள். ஆனால் நமக்குத் ‘திராவிட நாடு’ கிடைக்காவிட்டால் நம் நிலைமை படுமோசமாகி விடும். நாம் உண்மையிலேயே சூத்திரர் ஆகி விடுவோம். ஆகவே தான் திராவிட நாடு நமக்கு மிகவும் அவசியம் என்று கூறுகிறேன்.

எதிரி பணிவார்கள்

சர்க்கார் நாம் இவ்வளவு தூரம் தியாக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோமென்பதை உணர்ந்தால் நம் கோரிக்கைக்குப் பணிந்தே தீருவர்; உதாரணமாக ரயில்வே சிற்றுண்டி விடுதிகளில் திராவிடருக்கு இழைக்கப்பட்டு வந்த இழிவு நீக்கத்திற்காக நான் முயற்சித்த போது, என்னை மிரட்டினார்கள். ஆனால் வாலிபர்களின் உதவி, ஒத்துழைப்பு எனக்கிருக்கிறது என்பதை அறிந்ததும், கிளர்ச்சி துவக்குமுன்னரே நமக்கு வெற்றி கிடைத்து விட்டது.

அது மாத்திரமல்லாமல் சேலம் மாநாடு எதிரிகள் கோட்டைக்குள் கூர்க்கர்கள் காவலுக்குள் இருந்தது. சேலம் மாநாட்டில் கூடியிருந்த 12000 மக்களில் 11000 மக்கள், 26, 27 வயதுக்குக் குறைந்த வயதினராகவே காணப்பட்டதால் எதிரிகள் கோட்டையை விட்டு பின் வழியில் சென்று விட்டார்கள். இந்த உணர்ச்சி நாட்டு இளைஞர்களிடத்தில் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டால், நம் தீர்மானங்கள் நடைமுறையில் வந்துவிடும்! வந்துவிடும்! அய்யமில்லை.

நாஸ்திகமா?

சேலத்தில் நிறைவேறிய ஒரு தீர்மானத்தை சாக்காக வைத்துக் கொண்டு நாஸ்திக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்கள் என்று நம்மைக் குறைகூறுகிறார்கள். “நம் இனம் ஒன்று; நாமெல்லோரும் ஒரே ஜாதி” என்பது நாஸ்திகமா? “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தமிழனுக்கு “தனி நாடு ஏன்? குறுகிய நோக்கமேன்”, என்று கூறுகின்றனர் சில புலவர் சிகாமணிகள், அப்படி நாடற்ற கூட்டம், யாதும் ஊரே என்னும் கூட்டம் லம்பாடிக் கூட்டம் “ஜிப்சி” ஒன்றுதான். நாங்கள் அவர்களைப் போல் லம்பாடிகளாக இருக்க விரும்பவில்லை. எங்களுக்கு நாடு இருக்கிறது; அது எங்களுடையதாக ஆகி விட வேண்டும். இதுதான் திராவிட நாடு. அதை அடைவதுதான் இன்று எங்களுடைய இலட்சியம்.

“நாம் திராவிடர், ஒரே ஜாதி, ஒரே கூட்டம், ஜாதி பேதத்தைக் காட்டி வயிறு வளர்க்க வேண்டிய அவசியத்திலில்லை, வாலிபர்களாகிய நீங்கள் நம்மை நாத்திகர் என்று கூறி விடுவதாலேயே, வைதீக மக்கள் நம்மை ஒழுக்கங் கெட்டவர்களென்று சொல்லி விட்டதாக மனப்பால் குடிக்கிறார்கள். ஒழுக்கம் மிக மிக அவசியம் என்று கூறுபவர் நாம் தான். “சாமி இல்லை; அக்காவைத் தங்கையைக் கட்டிக் கொள்”, “மானமற்று மக்களைக் கொள்ளை அடியுங்கள்” என்றா நாம் சொல்கிறோம்? நம் எதிரிகள் நம்மை நாத்திக சங்கத்தார் என்று கூறுவது வெறும் பித்தலாட்டம். உண்மையான ஆத்திகன் நம்மைக் குறை கூறவே மாட்டான்.

திராவிடர் கழகம் என்பதை எதிர்ப்பது யோக்கியமாகாது

“திராவிடர் கழகம்” என்ற பெயரை எதிர்க்கின்றவன் ஒருவனாவது உண்மையிலேயே யோக்கியனாக இருக்க மாட்டான். கடந்த
5 ஆண்டுகளாலே இதை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்து வருகிறோம். எவனாவது அந்தக் காலத்தில் எதிர்த்தானா? இப்போது தான் என்ன? தெ.இ.ந.உ. சங்கமென்பதைத் “திராவிடர் கழக”த்திற்கு விரோதமாக வைத்து அவர்கள் நடத்துவதாக இருந்தாலும் அவர்கள் எங்கே போய் என்ன செய்ய முடியும்? அவர்கள் குறி என்ன? அவர்கள் எங்கே போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல் கூட்டம் போட முடியும்?

“நாம் ஆரம்ப முதல் இன்று வரை ஒரே தன்மையான கொள்கைகளை வற்புறுத்தி வருகிறவர்கள். மற்றவர்களைப் போல் அடிக்கடி கொள்கைகளைக் கீழுக்கு மாற்றும் வழக்கம் நம்மிடத்தில் இல்லை. ஆகவே குடும்பக் கவலையில்லாத திராவிட வாலிபர்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வெளியில் வந்து மக்கட் பணி புரிய வேண்டும். மக்கட்குத் தொண்டாற்றக் கூடியவன் மானவமானத்தைக் கவனித்தல் கூடாது. வீட்டை கவனிக்கக் கூடாது. என்னைப்பற்றிக் குறை கூறுவோர் பலர் அதிலும் பணம், சார்பு, சம்பந்தமாகக் கட்டுப்பாடாய்ச் செய்யும் பிரச்சாரம், பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் விஷமப் பிரச்சாரம் ஆகியவை மலைபோல், நான் அவைகளையெல்லாம் கவனிக்காமல் இருப்பதால்தான் என்னுடைய மானம் அப்படியே நிலைத்திருக்கிறது. எது சொன்னாலும் “ஆம், அப்படித் தான். முடிந்ததைப் பார்” என்பேன். சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் எதிரி ஜெயித்துவிடுவான். நான் சமாதானம் சொல்வது என் மனதுக்குத் தான்.

அதுபோலவே, நீங்கள் முதலில் உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாய் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக் கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

மனதில் குறை இருக்கக் கூடாது

“ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்தமட்டில்தான் மானத்தையும் காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத் தொண்டு என்று வந்துவிட்டால் இவை இரண்டையும் இலட்சியம் செய்யக்கூடாது. இதை மானத்திலும், காலத்திலும் கவலை கொண்ட திருவள்ளுவரே கூறியுள்ளார். மனத்துள்ளே குற்றம் குறை இருந்தால் வெளியில் செய்யும் காரியமும் குறையுடையதாகவே இருக்கும் என்பதை நான் விஞ்ஞான (சயன்ஸ்) முறைப்படி கூறுகிறேன்.

ஆகையினால், வாலிபத் தோழர்களே! உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும் நீங்கள் கொண்டு காரியத்தைத் துணிவுடன் நடத்தினீர்களானால், வெற்றி உங்களை வந்து பணியும். உங்கள் எதிரிகள் நாசமாவார்கள். இறுதியாக, இன்று உங்களுடைய ஆர்வத்தாலும், அன்பாலும், என்மீது கொண்டுள்ள நம்பிக்கையாலும், என்னைப் பத்து வயது குறைந்தவனாகவும் 10 டிக்ரி ஊக்கம் அதிகம் கொண்டவனாகவும் ஆக்கி வைத்ததற்கு உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகிறேன்.
(17.09.1944 அன்று திருச்சி ‘காரனேஷன் பார்க்’கில் சுமார் 400 தோழர்கள் கலந்துக் கொண்டு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்திய அறுசுவை உண்டி நிகழ்வில் கலந்துக் கொண்டு பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 30.09.1944

- உண்மை இதழ், 16-8.2.5

ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தவே சமஸ்கிருதம் ! சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி !!- தந்தை பெரியார்



 ஆரியர்கள் நம்மை முதலில் எப்படி அடிமை கொண்டார்கள்? பலத்தில் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை நம் மக்களிடையே புகுத்தினார்கள். அவற்றின் தத்துவத்தை – அத்தத்துவக் கடவுள், அவற்றின் தர்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்ளும்படி செய்தனர். அதில் அவர்கள் வெற்றிபெற்று, அதற்கேற்ப மனுநீதிச் சட்டம் வகுத்து, நம்மைக் கீழ்மக்கள் – ஈனப்பிறவி ஆக்கினர். அதாவது, மதத்தை முதலில் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்த பிறகு நம்மைக் கீழ்மக்கள் என்று கூறும் சட்டம் செய்துகொண்டனர். இதை உணர்ந்து மதத்தைக் கண்டிக்க நாம் ஆரம்பித்ததும், வேறு வழியில் – அதாவது, தேசியத்தின் பேரால் இந்தியைப் புகுத்தி அதன்மூலம் ஆரியக் கருத்துகளைப் புகுத்தி – அதன் வழி நம் அறிவைப் பாழாக்க நினைக்கின்றனர். நமது பிரச்சாரத்தின்மூலம் மக்கள் ஓர் அளவுக்கு ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறவும், அதை வெறுக்கவும் முற்பட்டிருக்கிறார்கள்.

ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டி இந்தியை ஆரம்பப் படிப்பிலேயே புகுத்த முயற்சிக்கிறார்கள். மதத்தினால் புகுத்த
முடியாமல்போன பித்தலாட்டக் கருத்துகளை மொழியின் மூலம் புகுத்தச் சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அதிக பேதமில்லை என்பதை இந்தி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். மதம் செல்வாக்குடன் இருந்த சமயத்தில் நாம் சமஸ்கிருதம் படிக்கக்கூடாதென்றும் கூறி வந்தார்கள். திருப்பதி, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரிகளில், அதுவும் சர்க்கார் மானியத்தைக் கொண்டு நடைபெற்று வரும் இக்கல்லூரிகளில்கூட சமீபகாலம் வரை நம் மக்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வசதியளிக்கவில்லை.

நம் மக்களைக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வதேயில்லை. சர்க்கார் மானியம் அளிப்பதை நிறுத்திவிடுவதாகப் பயமுறுத்திய பிறகுதான் நம் பிள்ளைகளையும் அக்கல்லூரி
களில் சேர்க்க முற்பட்டார்கள். எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடினோமே ஒழிய, சமஸ்கிருதம் படிப்பதால் அறிவு விசாலம் அடையும் என்பதற்காகப் போராடவில்லை. நாம் இன்று சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றும், அது நம் திராவிடக் கலாச்சாரத்தை அடியோடு பாழ்படுத்தி நிற்கும்மொழி என்றும், அதைப் படிப்பதால் மூட நம்பிக்கைக் கருத்துகள்தாம் வளர்ச்சியடையுமே யொழிய – ஆபாச அறிவுதான் வளர்ச்சி யடையுமேயொழிய – பகுத்தறிவு வளராது என்றும் பிரச்சாரம் செய்வதன் பயனாக, சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்தும் வாய்ப்பற்றவர்களாய்ப் போய்விட்டார்கள். மேலும், அது பேசும் பழக்கத்தில் – உரையாடும் பழக்கத்தில் இல்லாது போய் விட்டதால் அதைக் கற்கும்படி வற்புறுத்த இயலாமல் போய்விட்டது.

எனவே, சமஸ்கிருதத்தின் மூலம் புகுத்த முடியாமற்போன பித்தலாட்டக் கருத்துகளை அதன் வழிமொழியான இந்தியின் மூலம் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆதிக்கத்தின் உதவியால் இந்தியைப் புகுத்துவதில் வெற்றி காணலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

(தந்தை பெரியார்சென்னையில் 10.1.1950இல் சொற்பொழிவு)

– ‘விடுதலை’, 16.1.1950

  • ••

தமிழ்மொழி எப்படி உயர்வடையும் ?

நம்நாட்டில் இப்போது தமிழ்மொழிக்கு ஆக என்று வைக்கப்பட்டிருக்கும் பள்ளிகள்,
கல்லூரிகள் என்பவை எல்லாம் தமிழ்மொழியின் பேரால் ஆரியமதத்தை அல்லது புராணமதத்
தைப் படிப்பிக்கும் மதப் பாடசாலை (மதப்
பள்ளி)களேயாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவைகளை சைவ மதப் பள்ளி என்றே சொல்லிவிடலாம்.

உதாரணம் வேண்டுமானால் மறைமலை அடிகள், கா.சுப்பிரமணிய பிள்ளை, கதிரேச செட்டியார், கல்யாணசுந்தர முதலியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, காலம் சென்ற வேங்கடசாமி நாட்டார் முதலிய தமிழ்ப் பண்டிதர்கள் என்று பெயர் வாங்கியிருக்கும் இந்த அறிஞர் யாருக்காவது தமிழ், தமிழ்மொழி, தமிழ் எழுத்து, தமிழின் இயற்கை தோன்றல், வளர்ச்சி ஆகியவைகளைப் பற்றிய ஞானம் என்பதில் ஏற்கனவே உள்ள இலக்கிய, இலக்கணங்கள் என்பவைகளை நெட்டுருச் செய்திருப்பதல்லாமல்- அதற்குக் கருப்பொருள் கூறுவதல்லாமல் – தனி ஞானம் உண்டு என்று யாராவது சொல்லமுடியுமா?

இவர்கள் யாவரும் “தமிழ் சிவன் தந்தான்”, “அகத்தியன் இலக்கணஞ் செய்தான்” என்பதில் ஆரம்பித்து, “தமிழ் உயர்தனிச் செம்மொழி” என்பதோடு முடிவுரை கூறி தமிழ் பக்தர்களாகிய, தமிழில் வல்லவர்கள் எனப் பேர் பூண்டு மதம், புராணம், இதிகாசங்களுக்கு அடிமைகளாகவும், பிரச்சாரகர்களாகவும் விளங்குகின்றார்கள் என்பதல்லாமல் தமிழ் அதாவது தமிழ் இலக்கியம், தமிழ்மொழி, தமிழ் ஒலி, தமிழ் எழுத்து என்பவைகளில் வல்லவர்களாக யாராவது விளங்குகின்றார்களா? என்று கேட்கின்றோம்.

தமிழ் சிவன் தந்தான், அகத்தியன் இலக்கணம்
செய்தான் என்பதிலேயே என்றைய தினம் இவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அன்றே
இவர்களது தமிழ் அறிவுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் – அதனாலேயே
தான் தமிழுக்கு கல்வெட்டுக் காலம் முதல் நாளதுவரை அந்நிய நாட்டாரால், அந்நிய சமயத்தாரால் ஏற்பட்ட சில மாறுதல்கள் தவிர சைவரால், சைவ  (தமிழ்)ப் பண்டிதரால் ஒரு சீர்திருத்தமும் ஏற்படாமல் நாளுக்குநாள் தமிழ் ஒரு சமயப் பெருமையை மட்டும் பெற்று விளங்கக் கூடியதாகி விட்டதே ஒழிய ஒரு மொழிப் பெருமை, இலக்கியப் பெருமை உடையதாக இல்லை.

1000 வருஷம், 500 வருஷங்களுக்கும் முன் ‘கடவுள் அருள் பெற்று’ அதாவது மற்ற எந்த மனிதனுக்கும் இல்லாத தனி யோக்கியதை ‘கடவுள் அருள்’ பெற்று ஏதோ ஆரியர் – தமிழர்களின் பகைவர்களுக்கு அனுகூலமாய் கூறிவிட்டுப் போன ஆபாச அறிவுக்கொவ்வாத களஞ்சியங்களைவிட மனித சமுதாய உயர் வாழ்வுக்குத் தகுந்தது என்பதாக எவருமே, ஒன்றுமே காண்பதற்கில்லாமல் இருந்து வருகின்றது.

பர்னாட்ஷா, எச்.ஜி.வெல்ஸ், பெர்ட்ரண்ட்ரசல்
முதலியவர்கள் போல ஓர் அறிஞரும் இன்றும் இல்லை, தமிழரில் பல நூற்றாண்டுகளாகவும் இல்லை. ஆனால், இந்நாட்களில் நெட்டுருப் போட்டவர்களுக்கும், சமயவேஷம் பூண்டவர்
களுக்கும், செல்வவான்கள், பார்ப்பனர்கள் ஆதரவு பெற்றவர்களுக்கும், பட்டங்களுக்கும், பதவிகளுக்கும், விளம்பரங்களுக்கும் குறை
வில்லாமல் இருந்து வருகின்றது. இம்மாதிரி தகுதி அற்றவர்கள் புகழும், விளம்பரமும் சம்பாதித்திருப்பதே தமிழின ஈனநிலைக்குச் சரியான எடுத்துக்காட்டாகும். அந்த நிலையில் இருந்தால் தமிழ் வெகு சீக்கிரத்தில் கீழ்நிலையை இன்னும் கீழ்நிலையை அடையப்போகிறது என்பதில் சந்தேகப்பட வேண்டியதே இல்லை.

ஆதலால் தமிழில் பற்றுள்ளவர்கள் சமயப்பற்று, அதாவது சமய சம்பந்தமான இலக்கிய, இலக்கண சம்பந்தம் அற்ற முறையில் ஒரு தமிழ்ப் பள்ளியோ, கல்லூரியோ ஏற்படுத்த வேண்டும். மடாதிபதிகள் உதவி சிறிதும் பெறாமல் தனித்தமிழ்ப் பற்றுள்ளவர்கள் ஆதரவிலேயே நடத்தப்பட வேண்டும். அப்பொழுது சகல துறைகளிலும் வல்லமை பெறத்தக்க தமிழ் அறிஞர்கள் தோன்றுவார்கள். இன்று தமிழ்ப் பண்டிதர்களில் அநேகருக்கு தமிழ்ப் படித்ததாலேயே பகுத்தறிவு தேய்ந்து போய்விட்டது என்றால் இதைச் சுலபத்தில் ஆட்சேபிக்க முடியாது. வாலிபப் பண்டிதர்கள் இவற்றைக் கவனித்து உண்மையான தமிழ்ப் பண்டிதர்களாக, தமிழ் வல்லவர்களாக, தமிழைச் சீர்திருத்தி மேம்படுத்துபவர்களாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

– ‘குடிஅரசு’, 05.05.1945

- உண்மை இதழ், 16-30.4.25