வியாழன், 20 மார்ச், 2025

கொளத்தூரில் ரூ.211 கோடியில் பெரியார் அரசு மருத்துவமனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

 


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

சென்னை, பிப்.28 சென்னை, பெரியார் நகரில் ரூ.210.80 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.2.2025) திறந்து வைத்தார். மேலும், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மய்யங்களையும் திறந்துவைத்தார்.


விரிவாக்கம்

சென்னை கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகளை வழங்க பெரியார் நகரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி தரை மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய மருத்துவமனையைக் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக 3 தளங் களுடன் விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

பெரியார் அரசு மருத்துவமனை

பெரியார் நகரில் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கு கடந்த பிப்.23-ம் தேதி ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டி ஆணையிட்டார். மொத்தம் 6 தளங்களோடு பல்வேறு புதிய உயர் சிறப்பு சிகிச்சை வசதி களுடன் ரூ.210.80 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இப்புதிய மருத்துவமனை, தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.அய். ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், 2-வது தளத்தில் முழு உடல் பரிசோதனை கூடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவுகள் உள்ளன.

560 படுக்கைகள்
3-ஆவது தளத்தில் பிரசவ வார்டு, மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு வார்டு, குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு, 4-ஆவது தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, மய்ய ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, 5-ஆவது தளத்தில் இருதயவியல் பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், தோல் நோய் வார்டு, கேத் லேப், 6-வதுதளத்தில் சிறுநீரகவியல், ரத்தக்குழாய் சிறப்பு சிகிச்சை வார்டுகள், சிறுநீரகக் கற்களுக்கான ESWL சிகிச்சை, புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, நிர்வாக அலுவலகம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மொத்தம் 560 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

47 சேவை மய்யங்கள்

இந்த மருத்துவமனைக்கு 102 மருத்துவர்கள், 194 செவிலியர்கள், 79 மருத்துவம் சாராபணியாளர்கள், 20 அமைச்சுப் பணியாளர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ.10.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மய்யம்’ உட்கோட்ட அளவில் 9 மய்யங்களும், வட்டார அளவில் 38 மய்யங்களும் முதலமைச்சரால் திறக்கப் பட்டன.
மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.2.24 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 4 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, 72 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதன், 19 மார்ச், 2025

ஹிந்தி வந்து விட்டது இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியதுதான் (1948)


விடுதலை நாளேடு
பெரியார் கல்வி நிறுவனங்கள்

 தந்தை பெரியார்

தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு இந்தி பாஷையைக் கட்டாயப் பாடமாக்கக் கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும், காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு இந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரம் அல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும், அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த இந்தியைக் கட்டாயமாக நுழைக்க முயன்றதுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும், அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது இந்தியைப் புகுத்திவிட்டுதான் மறு காரியம் பார்ப்பது என்கிற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ, கெஞ்சிக் கொள்வதாலோ, சமாதானமான முறையில் வேறு ஏதாவது முயற்சி செய்வதாலோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்கிற நிலைமை காணப்படுகிறது.

முயற்சி எல்லாம் பாழாய் விட்டது

இம்மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட இந்த முறை ஒருபுறமிருக்க வேறு ஒரு வழியிலும் முயன்று பார்க்கலாம் என்கின்ற எண்ணத்தினால் சர்க்கார் தலைமை அதிகாரி என்பவரான கவர்னர் பிரபுவையும் அணுகத் துணிந்து அவருக்கும் இது சம்பந்தமான குறைகளை எடுத்துக்காட்டியாய் விட்டது. கவர்னர் பிரபுவும் தன்னால் ஆவதொன்றுமில்லை என்று கையை விரித்துவிட்டார். நேரில் சென்று குறைகளைச் சொல்லிக் கொள்ளப் பல பெரியார்கள் முன்வந்து விண்ணப்பித்துக் கொண்டும் கூட அதற்கும் முடியாது என்று முடிவு கூறிவிட்டார்.

இனி செய்ய வேண்டியது என்ன?

இனித் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் இப்போது முக்கிய பிரச்சினையாயிருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பதற்கு முன், இந்நாட்டு மாபெரும் சமூகமும் பழம்பெரும் குடிகளுமாகிய, இந்தியாவிலேயே இணையிலா வீரமும் மானமும் பெற்றுள்ள தமிழ் மக்களுக்குப் பார்ப்பனர்களால் இக்கதி நேரக் காரணம் என்ன? இத் தமிழ் மக்களின் கூப்பாடும் அழுகையும் கேள்வி கேட்பாரற்றுப் போனதற்குக் காரணம் என்ன? கவர்னர் பிரபுவும், இத்தமிழ் மக்களின் குறைகளை இவ்வளவு துச்சமாய்க் கருதி நேரில் வந்து கண்டு கொள்ளக் கூட தரிசனம் அளிக்காமல் அலட்சியப்படுத்தக் காரணம் என்ன? என்பன போன்ற விஷயங்களை மனதில் இருத்தி அவற்றிற்குச் சமாதானம் தெரிந்த பிறகு மேலால் என்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்தால் ஏதாவது ஒரு சரியான வழி கிடைக்கலாம் என்று கருதுகிறோம். அதல்லாமல் வெறும் கோபத்திலோ ஆளுக்கு, ஒரு யோசனை சொல்வதினாலோ, ஆத்திரப்படுபவர்கள் அத்தனை பேரும் தனித்தனி வழியில் தங்கள் கடமை ஆற்ற எண்ணுவதினாலோ ஒரு விதப் பரிகாரமும் ஏற்பட்டு விடாதென்றே கருதுகிறோம்.

அலட்சியத்துக்குக் காரணம்

தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும், கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவுபடுத்தி வருவதற்குக் காரணம் தமிழ் மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ, வீரமோ இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை; தமிழனுக்குப் பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய தலைமைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்றுத் தனது தனிவாழ்வுக்கு வழி தேடுவான் என்று பார்ப்பனரும், பிறநாட்டு மக்களும் கருதும்படியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள். தமிழன் பெருமைக்கு இன்று ஏதாவது சான்று வேண்டுமானால், புராணங்களில் இருந்தும் பழம் பெரும் காவியங்களிலிருந்தும் தான் ஆதாரங்கள் காட்டலாமே ஒழியப் பிரத்தியட்ச அல்லது சமீப சரித்திரச் சான்றுகள் ஒன்றையும் காணோம். தமிழ் மக்கள் புராண காலம் தொட்டுச் சூத்திரராக மதிக்கப்பட்டு அந்தச் சூத்திரப் பட்டம் தமிழ் மக்களாலேயே ஏற்கப்பட்டு சில தமிழ் மக்களால் தாங்கள் மாத்திரம் சற்சூத்திரரானால் போதும் என்று தனி முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்றுதான் சொல்ல இடமிருக்கிறது.

50 வருஷகால வாழ்வு

இவை தவிர, நாமறிய இந்த 50 வருஷகால வாழ்வில் தமிழ் நாட்டில் ஒரு தமிழ் மகனாவது பிரபலஸ்தனாக இருந்து தமிழ் நாட்டை நடத்தினான். தமிழ் மக்களை நடத்தினான் என்று சொல்லத்தக்க ஆதாரமும் இல்லை.

தமிழ் நாட்டு ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெருத்த செல்வந்தர்கள் ஆகியவர்களில் சமீபகால சரித்திரமும், வாழ்க்கைக் குறிப்புகளும், தற்கால நிலையும், அவர்களது தன்மையும் ஆகியவற்றை கவனிப்போமானால் அது மிக மிகக் கேவலம் என்று தான் சொல்லத்தக்க வண்ணம் ஆதாரங்கள் கிடைக்குமே தவிர வீரனென்றோ மாமணியென்றோ தமிழ் நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ, உழைத்தவர், உதவினவர் என்றோ, தமிழ் மக்களை நடத்தினவர், நடத்தத் தகுதி உடையவர் என்றோ சொல்ல எதையும் காணமுடியாதது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இன்று தானாகட்டும் தமிழ் நாட்டில் மானமுள்ள, பொது நல உணர்ச்சியுள்ள தனி சுயநலமற்ற ஒரு தமிழ் மன்னனோ, ஒரு தமிழ் ஜமீன்தாரனோ, தமிழ் செல்வவானோ யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் போகட்டுமென்றாலோ இன்று தமிழ் மக்களுக்குப் பூர்வகாலந் தொட்டு, வேத புராண சரித்திர காலந்தொட்டு எதிரியாய் – பிறவி வைரியாய் இருந்து தமிழ் மக்களைத் தாழ்த்தி அழுத்தி, இழிவுபடுத்தி வரும் பார்ப்பனர்க்கு அடிமையாய், ஒற்றனாய் காட்டிக் கொடுத்து ஈன வயிறு வளர்க்கும் இழி குணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?

மாபெரும் விரோதி

ஆகவே இவையும், இவை போன்ற இன்னும் பல காரணங்களும், ஏராளமாய் இருக்கும் போது தமிழ் மக்கள் மானம், கல்வி, கலை. வீரம், அறிவு ஆகியவைகளுக்கு மாபெரும் விரோதியாய் ‘எம’னாய் ‘உளைமாந்தையாய்’ இருக்கும் இந்தி பாஷையைப் பார்ப்பனர்கள் கட்டாயமாகத் தமிழ் மக்களுள் செலுத்தும் அடாத கொடுங்கோன்மை காரியத்தை எப்படித் தடுக்கமுடியும் என்று கேட்கின்றோம்.
கனம் ஆச்சாரியார் பார்ப்பனராயிருந்தாலும், இந்தியை ஒரு தமிழ்மகனை அதுவும் இந்நாட்டுப் பழங்குடி, பெருங்குடி மக்கள் சமுகத்தைச் சேர்ந்த குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு, அவர் கையில் கூரிய வேலை கொடுத்தல்லவா தமிழ் மக்கள் கண்களைக் குத்தும்படி கட்டளையிடுகிறார்.

ஆச்சாரியார் மூர்க்க பலம்

மற்றும் கனம் ஆச்சாரியார், என்னும் பார்ப்பனர் தனித்த முறையில் தமிழ்மக்கள் சமுகத்தையே என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்கும் படி சூத்திரர்களாக ஆக்க இந்தியைப் பலவந்தமாக நுழைக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சபையில் “ஆம், ஆம்” “நன்று, நன்று” “நடத்து, நடத்து” என்று சொல்லி கைதூக்கித் தலையாட்ட எத்தனைத் தமிழ் மக்கள் கைகூப்பி சிரம் வணங்கக் காத்திருக்கிறார்கள்? இவர்கள் சமுகத்தைச் சேர்ந்த நாம் எந்த முறையில் தமிழ் மக்களுக்குப் பிடித்தமில்லாத – தமிழ் மக்களுக்குக் கேடு சூழும் படியான இந்தியைக் கனம் ஆச்சாரியார் (பார்ப்பனர்கள்) மூர்க்க பலத்தில் புகுத்துகிறார் என்று சொல்லுவது என்று கேட்கிறோம்.
ஆகவே, தமிழ் மக்களின் பழம் பெருமைகளும், பாட்டிக் கதைகளும் எவ்வளவு மேன்மையாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வ பெருமைக் கேற்றதாக இல்லை என்பதோடு தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதி இலேசாக தப்புவதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகவே இவற்றைக் குறிப்பிட்டோம்.
இதனால் எந்தத் தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை. அவநம்பிக்கை கொண்டுவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இந்தியைத் தடுப்பதற்காக நாம் செய்யப் போகும் காரியங்களைத் திட்டப்படுத்துவதற்கு முன் நம் நிலைமையை நன்றாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி அதாவது மாற்றான் வலியையும், நம் வலியையும் அளவு கண்டு மேலால் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல. இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

நாம் வேண்டுபவர்

உண்மை தமிழ் ரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்த தமிழ் இரத்தம் ஓடும் வாலிபர்களே இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்.
எப்படிப்பட்ட பார்ப்பனத் தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்.
பார்ப்பன தயவு இல்லாது வாழ முடியாது என்கின்ற தமிழ்மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசு பெறலாமே ஒழிய அவனது நிழலும் இம்முயற்சியில் பட இடம் கொடுக்கக் கூடாது. இரண்டி லொன்று அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வை கவனிப்பதில்லை என்கின்ற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.
அடுத்தபடியாகப் பொருளாதார விஷயத்தில் போதுமான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும், ஒரு சமயம் கிடைக்காமல் போய்விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக்கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும். ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு கை முறையாய் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்து வருவதாக ஒவ்வொரு இளைஞனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத்தக்கதாகும்.
அப்படிக்கு இன்றி ஆளுக்கொரு உபாயம் (ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்) ஆளுக்கு ஒரு அறிக்கை என்பது போன்ற காரியங்கள் நடைபெறுமானால் ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத காரியம் போல் முடியவேண்டியதாகிவிடும்.
காலம் அடுத்து விட்டது

கோடை விடுமுறை முடிந்த உடன் இந்தி கட்டாயப் பாட முறை அமலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொரு வரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதையும், அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும். தோழர்கள் எஸ்.எஸ்.பாரதியார். உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.

சிறை புகுவது அற்ப விஷயம்

தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்குச் சிறை செல்லுவது என்பது மிகச் சாதாரண காரியம் ஆகும். அதுவே கடைசிக்காரியமாகவும் கருதி விடக் கூடாது. ஆச்சாரியார் அதை சுலபத்தில் கையாளச் சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராக இருந்தால் போதாதா? என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக் காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. அதை 3ஆம் தரக்காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும், பொறுப்பாளிகளும், அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் போராடக் கருதுவது நெஞ்சிறக்கமற்ற மரத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொருவிளைஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராடக் கருதுவது எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும், சூழ்ச்சியில் திறமை உடையவர்களுமான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ்வொரு எதிர்ப்பாளனும் மனதில் இருத்தவேண்டும்.
இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து இதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமேயானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் அய்யமில்லை என்பது நமது அபிப்பிராயம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்
இளைஞர்களுக்கு வேண்டுகோள்
இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை இந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” நான் தயார்” நானும் என் மனைவியும் தயார்” “உண்ணாவிரதத்துக்குத் தயார்” உயிரை விடத் தயார்” என்பதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்தவும், அடிபடவும் ராப்பட்டினி, பகல் பட்டினி கிடக்கவும், தொலைவழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனைச் சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.

பெரியோர்களுக்கு விண்ணப்பம்

பெரியோர்களே! முன் மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்குப் புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்குக் கருதப்படும் மானம், அபிமானம் வேறு பொதுநலத் தொண்டுக்குக் கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங்களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள். அடிச்சுவட்டைப் பாருங்கள். வீர இளைஞருக்கு நீங்கள் வழி காட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடிவைக்கும் போதும் ஞாபகத்தில் வையுங்கள்.

செல்வர்களுக்கு ஒரு வார்த்தை

தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா, இறப்பதா? என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும், பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு கொள்ளாதீர்கள். நடந்தது நடந்து விட்டது. அதைப் பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது நீங்கள் மானத்திலும், உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தைத் தாராளமாக இக்கருமத்திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.

பொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம்

பொதுத் தமிழ் மக்களுக்கு ஒரு மாபெரும் விண்ணப்பம் தமிழ்த் தோழர்களே இந்த 50 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல. வருணாசிரமப் புரோகிதர் ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும் தமிழ் மக்களை விலங்குகளாக்குவதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதை விட மடிவது மேலான காரியம். ஏதோ விளக்கமுடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைபட்டுக் கிடந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களும், நாமும், நமது பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சிப் போராக, முயற்சியாகக் கருதுங்கள். உங்கள் சவுகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவு களையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களைப் போருக்குக் கச்சைக் கட்டி விரட்டி அடியுங்கள்.

மடாதிபதிகளுக்கு மன்னிப்பு

தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்தச் சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி, விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதைவிட வேறு தக்க சமயம் இனி சுலபத்தில் கிடைக்காது! கிடைக்காது! ஆகவே பொதுமக்களே, இளைஞர்களே, தயாராகுங்கள். முன் வாருங்கள், ஒரு கை பாருங்கள்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 08.05.1938

ஹிந்திப் போர் (!938)

 

விடுதலை நாளேடு
கட்டுரை, தந்தை பெரியார்

இந்திப் போர் ஆரம்பமாகி விட்டது. இந்தி எதிர்ப்பாளர் மூவர் சிறைப் படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு விட்டது. இருவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கின்றனர். இவைகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைகளே. சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் இவைகளையெல்லாம் எதிர்பார்த்தே முடிவு செய்திருக்கிறார்கள். நிர்வாகக் கமிட்டியார் நியமனம் செய்த சென்னை சர்வாதிகாரி தோழர் சி.டி. நாயகத்துக்குப் பதிலாக யார் சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும், மேற்கொண்டு என்ன நடக்குமென்றும் தெரியவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திரபோஸ் இந்தி எதிர்ப்புத் தகவல்களைப் பூரணமாகத் தமக்கு தெரிவிக்க வேண்டுமென்று, இந்தி எதிர்ப்பு சர்வாதிகாரி தோழர் சி.டி. நாயகத்தை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்குத் தோழர் சி.டி. நாயகம் ஏற்கனவே பதிலனுப்பிவிட்டதாகவும் காங்கிரஸ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.

தோழர் சி.டி. நாயகம் தோழர் சுபாஷ் போசுக்கு அனுப்பிய பதிலில் காங்கிரஸ் தலைவர் சென்னைக்கு வந்து இந்தி எதிர்ப்பின் வன்மையை நேரில் உணர வேண்டு மென்றும், இது விஷயமாக ஒரு முடிவு ஏற்படும் வரை இந்தி கட்டாய பாட விஷயமாக எதுவும் செய்யக் கூடாதென்று கனம் ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதாகக் காங்கிரஸ் பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால், இது விஷயமாக நமக்கு இன்று வரை இந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியிடமிருந்து எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை, எனவே பிரஸ்தாப விஷயமாக நாம் எதுவும் கூறமுடியவில்லை. தோழர் சுபாஷ்போஸ் மெய்யாகவே தோழர் சி.டி. நாயகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தால் சென்னை காங்கிரஸ் சர்க்கார் இந்தி எதிர்ப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? என்ற சந்தேகமும் நமக்கு உண்டாகிறது.

காங்கிரஸ் ராஜ்ஜியத்திலே சர்வ ஜனங்களுக்கும் பூரணமான பிரஜா, சுதந்திரங்கள் – இருந்து வரும் என காங்கிரஸ்காரர்கள் விளம்பரம் செய்தனர்; செய்கின்றனர். ஆனால், அவர்களது பிரஜா சுதந்திரம் எத்தன்மையது என்பதை சென்னை மெயிலைப் போலவே நம்மாலும் உணர முடியவில்லை. ஒருக்கால் அவர்கள் கூறும் பிரஜா சுதந்திரம் காங்கிரஸ்காரருக்கு மட்டும்தான் உண்டா? சமீபத்தில் சென்னையில் கிராம்பு மறியல் நடைபெற்றது. மாகாண காங்கிரஸ் தலைவர் ஆதரவிலேயே அந்த மறியல் போர் நடைபெற்றது. விவசாய மந்திரி கனம் முனுசாமிப் பிள்ளையும் அந்த மறியல் போரைக் கண்ணுற்றார். ஆனால், அந்த மறியல்காரர்மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, காங்கிரஸ் சர்க்கார் பிரஜா சுதந்திரத்துக்கு வழங்கியிருக்கும் பொருள் நமக்கு மர்மமாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போர் அனாவசியமாகவும், அக்கிரமமாகவும் தொடங்கப் பட்டதல்ல. காங்கிரஸ் மந்திரிகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளைக் காங்கிரஸ் காரியக் கமிட்டியே நிர்ணயம் செய்யுமெனச் சொல்லப்படுகிறது. பொது பாஷை ஒரு அகில இந்தியப் பிரச்சினை.

சென்னை மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. தேசிய பொது பாஷையைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் இதுகாறும் முடிவு செய்யவே இல்லை. ஹரிபுரா காங்கிரசிலும் கூடத் தேசிய பொதுப்பாஷை விஷயம் பரிசீலனை செய்யப்படவில்லை. சென்ற பொதுத் தேர்தலுக்கு முன், தேசிய பொது பாஷையைப் பற்றிக் காங்கிரஸ்காரர் ஒரு வார்த்தையாவது பேசவுமில்லை. எனவே திடும்பிரவேசமாய் இந்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தப் போவது நேர்மையே அல்ல.

இது பல இந்தி எதிர்ப்பு மகாநாட்டு முடிவுகள் மூலம் சென்னை காங்கிரஸ் சர்க்காருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திக்கு தென்நாட்டில் இருந்து வரும் எதிர்ப்பின் வன்மை காங்கிரஸ் சர்க்காருக்குத் தெரியாததுமல்ல. இந்தி கட்டாயப் பாட விஷயமாக சென்னை முதல் மந்திரி கனம் ராஜகோபாலாச் சாரியாரும், கல்வி மந்திரி கனம் டாக்டர் சுப்பராயனும் தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டு வந்திருப்பதே இந்தி எதிர்ப்பின் வன்மையை சென்னை காங்கிரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி. ஈரோடு பொதுக் கூட்டத்தில் கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் பேசுகையில் இந்தியில் பரீட்சை நடத்தப் போவதில்லையென்று கூறினார்.
சென்னை மாகாணம் முழுவதும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாகக் கூறிய கனம் முதல்மந்திரி 125 பள்ளிக்கூடங்களிலே பரிட்சார்த்தமாக இந்தியை கட்டாயப் பாடமாக்கப் போவதாகவும், இந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர் களும் மற்ற பாடங்களில் போதிய அளவுக்கு மார்க்கு வாங்கியிருந்தால் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என்றும் இப்பொழுது கூறுகிறார்.
கல்வி மந்திரி இந்தியில் பரீட்சையே நடத்தப்பட மாட்டாது என்று கூறி இருக்கையில் இந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர்களும் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என கனம் முதல் மந்திரியார் கூறுவதின் மர்மம் என்ன? இதனால் இந்தி விஷயமாக பிரதம மந்திரிக்கோ, கல்வி மந்திரிக்கோ திடமான கொள்கை இல்லை என்பது விளங்கவில்லையா? சென்னை மாகாண மாணவ மாணவிகளின் ஷேமத்தைப் பாதிக்கக் கூடிய கல்வி விஷயத்தில் இம்மாதிரி வழவழாக் கொள்கையைக் காங்கிரஸ் மந்திரிகள் பின்பற்றுவது நேர்மையாகுமா? தென்னாட்டு மக்களில் 100க்கு 93 பேர் எழுத்து வாசனை இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தாய் மொழிப் பயிற்சியிலேயே சென்னை மாகாணம் இவ்வளவு மோசமாக இருந்து வருகையில் இந்தி கட்டாய பாடத்தைச் சென்னை மாகாண சிறுவர், சிறுமியர் தலையில் ஏற்றுவது என்ன நீதி? சென்னை மாகாணக் கல்வி இன்மையைப் போக்க சென்னை பிரதம மந்திரி ஏன் முயற்சி செய்யவில்லை? கல்வி இன்மையைப் போக்க வேண்டியதல்லவா பொறுப்புடைய ஒரு மந்திரியின் முதல் வேலை.

அய்க்கிய மாகாணத்திலே கல்வியின்மையைப் போக்க 10 லட்ச ருபாய் ஒதுக்கி வைத்து வேலைகள் நடைபெற்று வருவதை சென்னைப் பிரதம மந்திரி அறியாரா? கல்வி விஷயத்தில் அய்க்கிய மாகாண மந்திரி ஒரு விதமாகவும், சென்னை மாகாண மந்திரி வேறு விதமாகவும் நடப்பது காங்கிரஸ் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறதா? முக்கியமான விஷயங்களில் காங்கிரஸ் மாகாணங்கள் எல்லாம் ஒரே மாதிரிக் கொள்கையையே பின்பற்றும் எனக் கூறப்படுவது சென்னை மாகாணத்துக்கு மட்டும் பொருந்தாதா? எப்படிப் பார்த்தாலும் சரி, சென்னை முதல் மந்திரியார் போக்கு ஆதரிக்கக் கூடியதே அல்ல. ஆகவே, சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் முடிவுகளை நிறைவேற்றி வைப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே நிர்வாகக் கமிட்டியார் கட்டளைப்படி நடக்கத் தென்னாட்டார் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 05.06.1938

தந்தை பெரியாரும் தமிழ் மொழியும்! (தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியது ஏன்?)

 

தந்தை பெரியாரும் தமிழ் மொழியும்!

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினார் என்பதுதான்.

நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், “தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியுள்ளார்” எனப் பேசினார்.
உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன?
பெரியார் கூறியது என்ன?

தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். ஆனால், அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
“இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் ஜாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் இல்லாததை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார்” என்கிறார் கவிஞர் கலி. பூங்குன்றன்.
பெரியாரின் நோக்கம், தமிழ் மொழியைக் குறை கூறுவதாக அல்லாமல், விஞ்ஞான ரீதியாக தமிழ் மொழி சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதே இதன் பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

இருப்பினும், மேடைகளில் ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் பிரச்சாரம் செய்ததில்லை என்றும் ஓரிரு சமயங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றன, பெரியாரிய இயக்கங்கள்.
தாய் மொழி என்பதற்காகவே அதிலுள்ள பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று அர்த்தம் இல்லை என்பதே பெரியாரின் வாதமாக இருந்ததாக கவிஞர் கலி. பூங்குன்றன் கூறுகிறார்.
மேலும், தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிராமல், புதுமையை நோக்கி நவீனத்துடன் மொழி பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே பெரியார் ஒரு குறையாக இதைக் கூறாமல், ஓர் அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டதாக, திராவிட இயக்கத்தினர் கூறுகின்றனர்.

தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை
பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை மனிதப் பற்றே தன்னுடையது என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். “எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, ஜாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது,” என்று அவர் கூறியிருக்கிறார்.
“மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்” என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை என்று, ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்ற தனது புத்தகத்தில் விளக்குகிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

“தமிழ் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரின் கையில் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்” எனப் பெரியார் கூறியுள்ளதாக, அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘மொழி – எழுத்து’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை ‘விடுதலை’ நாளிதழில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் பெரியார். அவற்றைத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கி.வீரமணி. 1970ஆம் ஆண்டு, டிசம்பர் 1 விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளவை:
‘‘தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.”

”நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால், தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாகக் கூற வேண்டியதாகிறது.”

பெரியார் தமிழுக்காக என்ன செய்தார்?

“பெரியார் தமிழுக்கான எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 1938களில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை பெரியார் முன்னின்று நடத்தினார். அப்போதுதான், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியில் மறுமலர்ச்சி வருகிறது.
அந்தக் காலகட்டதில் தமிழில் பல வடமொழி வார்த்தைகள் கலந்திருந்தன. அதையெல்லாம் மாற்றி, தமிழ் வார்த்தைகளை அன்றாடம் உபயோகிக்குமாறு செய்தார்,” என்று பெரியார் தமிழ் மொழிக்காகச் செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டார் கவிஞர் கலி. பூங்குன்றன்.
மேலும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தார். ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருத ஊடுருவல் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டியதாகவும், கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக்கூடாதா என்று பெரியார் கேள்வியெழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான விஷயங்களை சுட்டிக் காட்டிய அதே நேரம், அதன் குறைகளையும் எடுத்துரைத்தவர் பெரியார் என்கிறார் கலி. பூங்குன்றன்.
தான் நடத்திய பத்திரிகைகளுக்கு விடுதலை, குடிஅரசு, உண்மை, பகுத்தறிவு, புரட்சி என தமிழ் பெயர்களையே பெரியார் சூட்டியுள்ளார். இந்தப் பத்திரிகைகளில், ஆயிரக்கணக்கிலான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
தமிழை அறிவார்ந்த மொழியாக மாற்ற நினைத்தே அனைத்து மேடைகளிலும் பெரியார் திருக்குறளை முன்னிறுத்தி, திருக்குறள் மாநாடு களை நடத்தியதாக, பெரியாரிய இயக்கத்தினர் கூறுகின்றனர்.
தமிழ் மொழியை எழுதுவதை எளிமையாக்கி எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் முன்னிறுத்தி யுள்ளார்.

தமிழ் மொழியில் சீர்திருத்தம்

தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பெரியார் பல முயற்சிகளை மேற்கொண்டதாக மூத்த செய்தியாளர் ப. திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, “தமிழ்நாட்டு ஆட்சி தமிழில்தான் இருக்க வேண்டும். அது தமிழாட்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார்” எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமாவேலன்.
“தமிழையும் மதத்தையும் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும்” என பெரியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில், சென்னை மாநிலம் எனும் பெயருக்குப் பதிலாக தமிழ்நாடு எனும் பெயரை வழங்க வேண்டும் என முதன்முதலில் கூறியது பெரியாரும் திராவிடர் கழகமும்தான் என்று கி.வீரமணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்தி, சமஸ்கிருதம் குறித்து

பெரியார் கூறியது என்ன?
ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் மிகவும் வலுவாக இருந்ததாக திருமாவேலன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“பெரியாரின் போராட்ட குணத்தை அதிகமாக்கியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடிவத்தைக் கொண்டாலும், பெரியார் தமது ஹிந்தி எதிர்ப்பை 1926ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். 7.3.1926 நாளிட்ட ‘குடிஅரசுவில்’ ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கினார். ‘தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்’ என்பது தான் ‘சித்திரபுத்திரன்’ எனும் புனைப் பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு” என்று தனது நூலில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக மட்டுமின்றி சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை பெரியார் பதிவு செய்துள்ளார்.
“இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காகவாவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் எதிலாவது ஒற்றுமை-பொருத்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில், தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத் தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்துக்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?” என்று பெரியார் கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி: பி.பி.சி. தமிழ்

திங்கள், 17 மார்ச், 2025

பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? – தந்தை பெரியார்


விடுதலை நாளேடு
தந்தை பெரியார்

 மதிப்பிற்குரிய தலைவரவர்களே! மணமக்களே! பெற்றோர்களே! தாய்மார்களே! தோழர்களே!

நம் பெண்மக்கள் பற்றி பெண்மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர் களுக்குமாக சிறிது பேச அவாக் கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப்போன்ற – நம் சமுதாயத்தைப் போன்ற – தாழ்த்தப்பட்ட அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் விமோசனம் இல்லை. ஆகையால் பெண்கள் பற்றிப் பேசுகிறேன்.

சரி பாதி
பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களைச் சிசு, குழந்தைப் பருவமுதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்து, பலவிதத்தும் பேத உணர்ச்சியே அற்று, ஒன்று போலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன் அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாக பொம்மைகளாக்கி பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல் அதை பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக்கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாய்ச் செய்து கொண்டு அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும், அலங்காரப்படுத்தி திருப்தியும் பெருமையும் அடையச்செய்ய வேண்டியதான ஓர் அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள், எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது – அது எதற்கு? ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும் ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப் புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய, அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள் – பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

என்ன நியாயம்
இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்.

இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்கு ஆகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா என்று கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே எதனால்? துணியாலும் நகையாலும் தானே! பெரிதும் கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.

நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்கும் கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாத படியாய் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடம், மந்திரம் போடுவதாலும், பூச்சுப்பூசி பத்துப் போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதி அல்ல. இது கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல்) மருந்து போட்டு போக்கடிக்க வேண்டிய வியாதி. அழுத்திப் பிடித்து, கண்டித்து, அதட்டி, அறுத்துத் தீரவேண்டியதாகும். நான் வெறும் அலங்காரப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்க வேண்டும். என் ஆயுளும் இனி மிகமிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால் கோபிக்காமல், ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.

மாற வேண்டும்
நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்தவர் படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும், கணவன்மார்களும் அவர்களது (பெண்களை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்; பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்திசெய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கி விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

பெண்கள் பெருமை, வருணனை ஆகியவைகளில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவைகளைப்பற்றி அய்ம்பது வரி இருந்தால் அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி திறமைபற்றி ஒரு அய்ந்துவரி கூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா என்று கேட்கிறேன்.

சொத்தில் உரிமை
பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டனரா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா என்பதுதான். அதற்கேற்ற நகை அணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை துணி மணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது பெற்றோராவது “கட்டின” வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப்பொருள் என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

நல்ல கற்புடை பெண்களுக்கு உதாரணம் “மற்றொருவர் உள்ளம் புகாள்” என்பது திராவிட மரபு நூல்களின் கூற்று. அதாவது ஒரு பெண் இயற்கையில் கற்புடையவளாயிருந்தால் தன் கணவன் தவிர மற்றவர்கள் நினைவுக்குக்கூட ஆளாகமாட்டாள், “பிறர்நெஞ்சு புகாள்” என்பதாகும். நாம் நம் பெண்களை மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களானாலும் பல தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி அவர்கள் கவனத்தை நம்மீது திரும்பும்படி அலங்கரிக்கிறோம். அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நம் பணம் உழைப்பு நம் வாழ்க்கைப் பயன் முதலியவைகளைச் செலவழிக்கிறோம். இது ஏன்? எதற்காக என்று சிந்திக்காததால் அதைத்தவிர வேறு காரியத்திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய்விட்டார்கள்.

இதுவா தொண்டு
நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை. நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழா பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்கள் யோக்கியதைகளையும் அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளையுமே பற்றிச் சொல்லுகிறேன். சர் சண்முகம் செட்டியார், சர் குமாரராஜா முதலாகிய திராவிடப் பேரறிஞர் செல்வர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள் பெண்கள் எங்கே எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? ஷாப்பு கடைகள் ஜவுளிக்கடைகள் ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மைகள், உருவங்கள் போலல்லாமல் நாட்டுக்கு – மனித சமுதாயத்திற்கு – பெண் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? என்று கேட்கிறேன். இவர்களே இப்படியிருந்தால் மற்ற பாமர மக்கள் தங்கப் பெட்டியின் உள்ளே வெல்வெட் மெத்தை போட்டுப் பூட்டித் தானே வைப்பார்கள்?

ஒரு பீகம் அமீருதின் அம்மையார் முஸ்லிம் கோஷா இனம். அவர்கள் எவ்வளவு தொண்டாற்றுகிறார்கள்? நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? என்று கேட்கிறேன். இந்த பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் இவர்கள் தங்கை, தமக்கையர் பிறந்தார்கள். இவர்கள் தகப்பன்மார்கள்தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள். அப்படி இருக்க இவர்களுக்கு இருக்கும் புத்தித்திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகும்? இதைப் பயன்படுத்தாதது நாட்டுக்கு – சமூகத்திற்கு நட்டமா இல்லையா என்று கேட்கிறேன். பெண்கள் படிப்பு என்பது சுத்த முட்டாள்தனமான முயற்சியாகவே பெரிதும் இருக்கிறது.

படிக்க வையுங்கள்
“பெண்களைப் படிக்கவைப்பது வீண் பணச்செலவு; நாட்டு வரிப்பணத்தின் வீண்” என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை சொன்னதுபோல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள். இந்த கீழ் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய் தகப்பன் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் கற்றுக் கொடுத்து அவற்றில் வெற்றியாய்த் தேறவைத்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். (பலர் இதை இன்னும் செய்கிறார்கள்) அதை ஒருவன் கையில் பிடித்துக்கொடுத்த பின்பு – அதாவது திருமணம் ஆன பின்பு அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது? என்று கேட்கிறேன். புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால் “இது என்ன குடித்தன வீடா? வேறு வீடா” என்று மாமி கேட்பாள். பிடில், வீணை தூசி அடையும்.

ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஓர் அட்வர்டைஸ்மென்ட்டாகப் (விளம்பரம்) பயன்பட்டது தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? செலவும் கண்டது தானே என்கிறேன். அது போல் ஒரு பெண்ணை ஒரு தாய் தகப்பன் பி.ஏ. படிக்க வைத்து ஒருவன் கையில் பிடித்துக்கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப்பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?

இந்தத் துறையில் எந்த அறிஞர்களும், சீர்திருத்தவாதியும் கவலை செலுத்தாமல் எவராலும் இனப்பெருக்கத்திற்கே பெண்கள் ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.

இது நாகரிகமா?
நான் சில படித்த பெண்களைப் பார்க்கிறேன். வயிற்றில் ஒரு குழந்தை, கட்கத்தில் ஒரு குழந்தை, கையில் பிடித்துக்கொண்டு ஒரு குழந்தை, இவ்வளவோடு சிலருக்கு முன்னால் ஓடும்படி ஒரு குழந்தையைவிட்டு இப்படியாக படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் வட்டங்களுக்கு வந்து நடுவிலிருந்துகொண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையூறும், தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். இதற்காக அவர்கள் வெட்கப்படாததையும், சிலர் வருத்தப்படுவதையும் பார்க்கிறேன். இது மனித சமூகத்தில் இருக்கத்தக்கதா? அதுவும் நாகரிக சமூகத்தில் படித்த பெண்கள், படித்தவர்கள் வீட்டுப் பெண்கள் என்கிறவர்கள் இடையில் இருக்கத்தக்கதா? என்று கேட்கிறேன். இந்த லட்சணத்தில் நகைகள், விலை உயர்ந்த துணிகள். குழந்தைகள் கூட்டத்தில் மலஜலம் கழிக்கும், கத்தும் ஆபாசம் இவை ஏன்?

நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டு குறைந்த வட்டியாவது வாங்கிக் குழந்தை பிறந்த உடன் அதை எடுத்து அந்த வட்டியில் ஓர் ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக்கொள்ளச் செய்தால் அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையைத் தன்னுடன் கூடவே வைத்துத்தானா அழகு பார்க்கின்றான்? அன்பு காட்டுகிறான்? கொஞ்சி விளையாடுகிறான்? ஆகையால் குழந்தையை ஆள்கள் மூலம் வளர்க்க வேண்டும். சமையல் ஆள்கள் மூலம் செய்விக்க வேண்டும். பெண்கள் ஆண்களைப்போல உயர்ந்த வேலை பார்க்கவேண்டும். சர் ஏ. ராமசாமி முதலியார் தங்கை சர்.ஏ. லட்சுமணசாமி முதலியார் போல் ஆக வேண்டும். சர் சண்முகம் தங்கை ஆர்.கே. வெங்கிடாசலம் செட்டியார் போல ஆகவேண்டும். குமாரராஜா தங்கை இராமநாதன் செட்டியார்போல், சிதம்பரம் செட்டியார் போல் ஆகவேண்டும். பொம்மைகளாக, நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக ஆகக்கூடாது என்கின்றேன்.

பெண்களால் முடியும்
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும். உறுதியாய் முடியும் என்பேன். ஆனால், நகைப் பைத்தியம், துணி அலங்காரப் பைத்தியம், அணிந்து கொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை இழிவு சுயமரியாதை அற்ற தன்மைப் பைத்தியம் ஒழிய வேண்டும்.

நம் பெண்கள் நாட்டுக்கு, சமூகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு, ஆண்கள் கண்களுக்கு விருந்து ஆனதற்குக் காரணம் இந்த பாழாய்ப் போன, ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும். சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன், நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன? லட்சியம் என்ன? என்பதெல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொது நலத்தொண்டு, முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப்போல் தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக்கொண்டு திரிவது பெண்கள் சமுதாயத்தின் கீழ்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்.

டீசென்சி—சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால் அது அதிகப் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத்தகுந்த பேஷன், நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும் (Simple) சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் சொல்லுவேன்.
நம்நாட்டுப் பெண்கள், மேல்நாட்டுப் பெண்களைவிடச் சிறந்த அறிவு, வன்மை ஊக்கம் உடையவர்கள் ஆவார்கள். நம் சீதோஷ்ண நிலை அப்படிப்பட்டது. அப்படி இருக்க ஒரு ருக்குமணி, ஒரு விஜயலட்சுமி என்கின்ற பார்ப்பனப் பெண்கள் தானா பொது வாழ்வில் ஈடுபடத்தக்கவர்களாக, மந்திரிகளாக ஆகவேண்டும்? ஏன் நம்மவர்கள் ஏராளமாக வெளியில் வரக்கூடாது? இவர்களைத் தடுப்பது சீலை, நகை, துணி அலங்கார வேஷம் அல்லாமல் வேறு என்ன?

ஆண்களைப் போல் உடை
எனவே, பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதமாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல் மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் கீர்த்தி, புகழ் பெறும் பெண்மணியாக்கவேண்டும். பெண்ணும் தன்னை பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? ஏன் உயர்வு தாழ்வு? என்ற எண்ணம் எழவேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால் நம் பெண்கள் வெறும் போகப்பொருளாக ஆக்கப்படாது அவர்கள் புது உலகைச் சித்திரிக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.

(15.9.1946 அன்று திருப்பத்தூரில் (வட ஆர்க்காடு) நடைபெற்ற சுலோச்சனா—சம்பத் மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை 21.9.1946 “குடிஅரசு” இதழில் வெளியானது)

வெள்ளி, 14 மார்ச், 2025

அறிவின் பயன்

 


விடுதலை நாளேடு

'பகுத்தறிவு' என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படும்.
மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனானாலும், மற்ற ஜீவன்களின் உயிர் போலவே மனிதனுடைய உயிரும் ஒரு உயிரேயானாலும், மற்ற ஜீவன்களுக்குக் குறிப்பிடவும் சரீரதத்துவம், ஜீவ தத்துவம் போலவே மனிதனுக்கும் உடையது என்றாலும், பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரம் உண்டு என்று சொல்லப் படுவதனாலே தான் மனிதன் மற்றவை ஜீவப்பிராணிகளை விட வேறு பட்டவனாகவும் மேலானவனாகவும் உலக வழக்கில் மதிக்கப்படுகிறான்.

இப்படி மதிக்கப்படுவது சரியா தவறா என்பது விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனா யிருப்பதன் காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் தரப்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்ட தாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்று கூடச் சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், இதைச் சரியென்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்குச் சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்வது. நியாயமாகாது என்றாலும் பிரத்தியட்சத்தில் அப்படித்தான் காணப்படுகின்றது.

ஆகவே, இதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியாகப் பயன்படுத்தாமல், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன் ஏற்றுக்கொண்டாலும், மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டது.

மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக் கொண்டு, மனித ஜென்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது 'சாகரம்', 'துக்கம்' என்று கருதுவதன் மூலம் தனது துக்கத்திற்கும், அதிருப்திக்கும் பரிகாரம் தேடாமல் அனுபவித்து வருகிறான்.

இந்த மேற்கண்ட நம்பிக்கைகளும், எண்ணங்களுமே மனித சமூக துக்கத்துக்கும், அதிருப்திக்கும் இடம் கொடுத்து வருகின்றன என்பதை உணருவதில்லை. இப்படி உணர முடியாமல் போனதற்கு பகுத்தறிவைச் சுதந்திரத்தோடும், துணிவோடும் பயன்படுத்தாத காரணமேயாகும்.
இந்தப்படி சுதந்திரத்தோடும், துணிவோடும் பகுத்தறிவு என்பதும் பயன்படுத்தக் கூடாது என்கின்ற நிபந்தனைகள் வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் இருந்துவர, மனிதன் ஆதியில் அனுமதித்துக் கொண்டதே இந்நிலைக்குக் காரணமாகும். என்றாலும் அதிலிருந்து விடுதலை பெற முடியாது என்று தீர்மானித்துவிடக்கூடாது.

இப்பொழுதுகூட மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தும், தன்னைச் சூழ்ந்து, தனக்குள் புகுத்தப்பட்டும் இருக்கின்ற விஷயங்களாகிய சமூகக் கட்டுப்பாடு, அரசியல் கட்டுப்பாடு, மதக் கட்டுப்பாடு, பழக்க வழக்கக் கட்டுப்பாடு முதலியவைகளை விலக்கி விட்டுத் தனியாகச் சுதந்திர மனிதனாக, பரிசுத்த உணர்ச்சியுடன் ஒவ்வொன்றையும் நிர்வாணமாகப் பார்க்கும் பரிசுத்தக் கண்ணுடன் இருந்து, பகுத்தறிவைத் துணிவோடு உபயோகப்படுத்துவானேயாகில் பகுத்தறிவால் அறியக் கூடிய உண்மையையும், பயனையும் அறியாமலும், அடையாமலும் இருக்க முடியாது.
இன்று மனிதனுடைய பகுத்தறிவை அடக்கிக் கொண்டிருப்பவைகளில் முக்கிய மானவை இயற்கையின் உண்மையை அறிய முடியாமல் செய்து வருவதற்கு ஏதுவான தலைவிதி, முன் ஜென்ம பலன், கடவுள் செயல் என்பன போன்ற உபதேசங்களேயாகும்.

இவ்வுபதேசங்களுக்குக் கட்டுப்பட்ட எவனும் பகுத்தறிவின் பயனான இயற்கையை உணர்ந்து அதைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு சந்தோஷமும், திருப்தியும், அடையும் பேரை எவனும் அடையவே முடியாது. ஆதலால், ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவை அவனது சந்தோஷமும், திருப்தியுமான வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப்படி பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய கண்ணையும், மனத்தையும், நிர்வாணமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலைமையையும், தன்மையையும் ஒவ்வொரு மனிதனும் அடையவே “பகுத்தறிவு” உலகில் உலவி வந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் ஆசைப்படுகின்றேன்.

('பகுத்தறிவு' மே மாத இதழ் 1, 1935)