சனி, 7 நவம்பர், 2015

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1

அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர்


ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா!
07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில் (கரந்தை தமிழ் மன்றத்தில்) நான் கலந்துகொண்டு சுயமரியாதைத் திருமண அடிப்படை _- எஜமானன் அல்ல ஆண்; அடிமை அல்ல பெண்! என்று குறிப்பிட்டு விழாவில் நீண்டதோர் உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்தத் திருமணத்தை நடத்துவதில் எங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் அவசரம் இருக்கலாமே தவிர உங்களுக்கு வேலை இல்லை. ஏனென்று சொன்னால் அவர்கள் போட்டிருக்கின்ற நேரம் ராகுகாலம். அது எங்கே போய்விடுமோ என்று நாங்கள் பார்த்துக்கொண்டு வருகிறோம். தந்தை பெரியார் அவர்கள் கண்ட மௌனப் புரட்சியிது. ரத்தம் சிந்தாத கருத்துப் புரட்சி _- ஆயுதத்தை எடுக்காத புரட்சி. அதை நீங்கள் உங்கள் கண் முன்னாலேயே காண்கிறீர்கள்.
ஒரு காலத்திலே ராகுகாலம் என்று சொன்னால் நடுங்கிய நாட்டில், ராகு வந்துவிடப் போகிறது என்று பயந்து ஒதுங்கிய நாட்டிலே, ராகுகாலம் என்று சொன்னால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் மற்ற நேரத்தைப் போன்றதுதான் என்று தந்தை பெரியாரவர்கள் கொள்கைப் பிரச்சாரம் செய்தார்கள்.
அதோடு மட்டுமல்ல; இப்படிப்பட்ட வாழ்க்கை ஒப்பந்தங்களை நடத்தியும் காட்டினார்கள். அதனால்தான் நாமும், எங்கே ராகுகாலம் போய்விடுமோ என்று அவசர அவசரமாக இந்த மணவிழாவை நடத்த வேண்டிய நிலையிலே இருக்கிறோம்.
இன்னமும் நேரமும், காலமும் நம்முடைய வசதியைப் பொருத்துத்தான் என்ற தெளிவில்லை. எனவேதான், நாங்கள் இப்படிப்பட்ட ராகு கால மறுப்புத் திருமணங்களை நடத்த முக்கியத்துவம் கொடுக்கிறோமே தவிர இதை ஒரு சம்பிரதாயமோ அதில் நம்பிக்கை வைத்தோ அல்ல.
இது ஒரு சாதாரணப் பிரச்சார யுக்தி அவ்வளவுதான்!
நல்ல நேரம், கெட்ட நேரம் என்று ஒன்று இல்லை. சுட்டிக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இதெல்லாம். உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் சமம் என்பது இங்கே வலியுறுத்தப்பட்டது.
அய்யா அவர்களின் தத்துவமான சுயமரியாதைத் திருமணம் இதை அடிப்படையாகக் கொண்டுதான் ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற திருமணங்களிலே இல்லாத ஒரு சிறப்பு நிகழ்ச்சியை இங்கு இரண்டு பேருக்கும் சம உரிமை உண்டு என்று சொன்னாலும், இரண்டு பேருக்கும் தலைவர் உறுதிமொழி கொடுத்து நடத்தி வைத்தாலும் மணமகன் கையிலே தாலி இருக்கும்; அல்லது வேறு ஏதாவது இருக்கும். ஆனால், இங்கே இருவரும் சமம் என்ற முறையிலே மணமகள் மணமகனுக்கும் சங்கிலி அணிவித்ததைப் பார்த்தீர்கள்.
ஏனென்றால், சில ஆஸ்திகப் பெருமக்கள் பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்-காகத்தான் தாலி அணியப்படுகிறது. அதைக்கூட இந்தப் பெரியார் ஆட்கள் குறை சொல்கிறார்கள்! என்று சொல்வதுண்டு.
சங்கிலி அணியும் முறையில் இருவரும் சமம் என்பதற்காக சரி என்று சொல்லலாமே தவிர, முறை என்ற கருத்திலே வலியுறுத்தப்-படவில்லை.
ஆண் எஜமான் அல்ல; பெண் அடிமை அல்ல இருவரும் சமம் என்பதே சுயமரியாதைத் திருமணத்தின் அடிப்படை.
மேல்நாடுகளில் நிலா உலகத்திற்குப் போய் செவ்வாய் உலகத்திற்குப் போய் திரும்புகிறான், ஆனால், எமகண்டம் என்று சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு என்ன இருக்கிறது?
நெய்யை நெருப்பிலே ஊற்றாதே! பருப்பிலே ஊற்று என்று சொல்வதற்கு, அய்யா அவர்கள் 60 ஆண்டுகாலம் பாடுபட்டார்கள் என்றால் நம்முடைய மூடத்தனம் எவ்வளவு இருந்திருக்கிறது?
தந்தை பெரியார் சொன்ன கருத்துகள் மனித சமுதாய வளர்ச்சிக்கே தவிர வேறு எதற்கும் அல்ல.
தந்தை பெரியார் அவர்களும், அவருடைய பொதுத்தொண்டும் போல, அன்னை மணியம்மையார் அவர்களும், அவருடைய எளிமையும் போல வாழுங்கள் என்று சொல்லி வாழ்த்தி விடைபெற்றேன்.
தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மீ.அண்ணாமலை அவர்களின் செல்வி ராணிக்கும், மா.இராசேந்திரனுக்கும் நடைபெற்ற இந்த விழாவில், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தோழர் இரா.இரத்தினகிரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
***
பிரபல வார இதழான தி இல்லஸ்ட்-ரேட்டட் வீக்லியிலிருந்து விடுதலை  அலுவலகத்துக்கு 04.06.1978 அன்று ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் வந்ததை அப்படியே விடுதலை இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். (தமிழாக்கம்) அதை அப்படியே இங்கு தருகிறேன். பெரியாரின் பெரும் வெற்றி என்ற தலைப்புடன் கொடுத்திருந்தார்கள்.
அதில், பார்ப்பனர்கள்...தமிழ்நாட்டில் வெறுக்கப்படுவதற்குக் காரணம், தமிழ்நாட்டு மக்களை அவர்கள் அவமதிப்பதாலும், சுரண்டுவதாலும்தான். திராவிடர்களாகிய நாங்கள், எங்கள் பொன்விளையும் பூமியில் பார்ப்பனர்கள் வந்து குடியேறுவதற்கு அனுமதித்தோம். அதற்கு நன்றிக் கடனாக அவர்கள் எங்களைப் பல ஜாதிகளாகப் பிரித்தார்கள். தாங்கள் உயர்ஜாதி மக்களாகையால் எந்தக் குற்றம் செய்தாலும் அதற்குத் தண்டனை கிடையாது எனக் கூறிக்கொள்ளும் கடவுளால் அனுப்பப்பட்ட அவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே பிறந்த சூத்திரர்கள் நாங்கள்.
அவர்கள் எங்களது பணத்தைப் பலவழிகளிலும் ஏமாற்றிப் பறித்து அதை அவர்களது குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் நிர்வாகத்தில் எல்லாப் பதவிகளிலும் அமர்ந்து கொண்டு அதன்மூலம் பின்னர் தகுதியும் திறமையும் வாய்ந்த திராவிடர்களுக்கு வேலை தராமல் மறுத்தனர்.
இப்படிப்பட்ட நிலைமைகள் பெரியாராலும் அவரது இயக்கமான திராவிடர் கழகத்தாலுமே மாற்றப்பட்டன. இவர்கள் (பெரியாரும் திராவிடர் கழகத்தினரும்) தங்களது கொள்கைகளை வெகு இலகுவாகப் பரப்புவதற்காகவே மேடைப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தினர். இந்த இயக்கத்தை வசை பாடுவதற்கு ஒருபோதும் தவறாதவர்கள் பார்ப்பனர்கள். இவர்கள் தங்கள் வசம் ஏகபோக உரிமையாக வைத்திருக்கும் பத்திரிகைத் துறையின் எதிர்ப்பையும் முறியடித்து, பெரியாரும் அவரது கழகமும் வெற்றி பெற்றிருக்கிறது இவ்வாறு பெர்ஹாம்பூரிலிருந்து ஆர்.என். பரத்வாஜ் என்ற அன்பர் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஜூன்_4ஆம் தேதி இதழில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள் என்றால் தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பு எப்படி நாடு தழுவியதாகவும் பாராட்டப்-படும்படியாகவும் உள்ளது என்பதை எடுத்துக்காட்ட இக்கடிதம் ஒன்றே போதும்.
***
தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை வரலாறு காணாத வகையில் கொண்டாடுவதற்காக, 04.06.1978 அன்று திருச்சியில் கூடிய நமது இயக்கத்தின் மத்திய நிர்வாகக் குழு கூட்டம், அதுவரை காணாத உணர்ச்சிப் பிரவாகத்துடன் கூடிய கொள்கைக் குடும்பங்கள் சந்திக்கும் எழுச்சி விழாவாக, இயக்கத்தில் முதியவர்களானாலும் இளைஞர்களானாலும், தாய்மார்களானாலும் அவர்கள் எவ்வளவு ஆர்வம் கொப்பளிக்க, கழகப் பணிகளில் தங்களைத் தீவிரமாக்கிக் கொள்ள முனைகிறார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் இருந்தது.
அய்யாவின் நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்புடன் கொண்டாடுவதற்கு முனைப்பாக ஓராண்டு முழுவதும் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து நான் தெளிவானதொரு தலையங்கத்தினை விடுதலையில் 15.06.1978 அன்று எழுதியிருந்தேன். அந்தத் தலையங்கத்தில், ஒப்பற்ற தலைவர் பெரியார் அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்ததும் அவர்களுக்குத் தொண்டராக இருந்து அவர்தம் இயக்கத்தில் ஈடுபட்டதும் மிகப் பெரும் பேறு என்ற பெருமைக்குச் சிகரம் வைத்தது போன்றது அவர்களது நூற்றாண்டு விழாவின்போது நாம் இருந்து அதனைக் கொண்டாடுவது. இது வெறும் வேடிக்கை விழாவல்ல; வெறும் வெளிச்சம்போடும் வாடிக்கையைக் கொண்ட விழாவாக அமையாது. அவர் தந்த அறிவுச் செல்வத்தை, அகில உலகமும் பரப்பிட வேண்டிய அரியதோர் விழாவாக நடத்திட வேண்டிய மாபெரும் திருவிழாவாகும்.
பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும், அய்யாவின் பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரத்தை சிற்றூர் முதல் பேரூர் வரையிலும், பட்டிக்காடு முதல் பட்டணக்கரை வரையிலும் பரப்பவும் தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
தமிழ்ப் பெருமக்கள் முழு உற்சாகத்துடன் பங்கேற்கும் விழாவாக இவ்விழா அமைய வேண்டும் என்பதற்காகவே நூற்றாண்டு விழா நிதியாக 5 லட்ச ரூபாய் நிதி திரட்டுவது என்றும் இதில் பெரிதும் வீட்டுக்கு வீடு சென்று ஒரு ரூபாய் வசூலிப்பதே பிரதான திட்டம் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது மிகவும் சிறப்பானதாகும்.
தந்தை பெரியார் அவர்களது 60 ஆண்டுகாலத் தொண்டால் பயன் பெற்றுள்ள நமது மக்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களில் நன்றியுள்ள ஒரு பகுதியினர் தலைக்கு ஒரு ரூபாய் என்றால் நூற்றாண்டு விழா நிதி நமது இலக்கான 5 லட்சத்தையும் தாண்டி பல மடங்கு மேல் போய்விடுமே!
நூற்றாண்டு விழா நிதி என்பது உண்மையில் தந்தை பெரியார் தொண்டுக்குத் தலைவணங்கி அளிக்கும் நன்றிக் காணிக்கை நிதியாகும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களும் _ விவசாயிகள், பாட்டாளித் தோழர்கள், வணிகப் பிரமுகர்கள் என்.ஜி.ஓ.க்கள் என்ற நமது அரசு ஊழியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தாய்மார்கள் ஆகிய ஒவ்வொரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கு உதவிட முன்வருவது மிகவும் அவசியம் ஆகும்.
தந்தை பெரியார் அவர்கள் இல்லாதிருந்-தால் நாமெல்லாம் எங்கிருப்போம்? எந்த நிலையில் இருந்திருப்போம்? என்று நெஞ்சைத் தொட்டுச் சிந்தித்து அவர்களுக்கு நாம் பட்டிருக்கும் நன்றிக்கடனை பல வழிகளில் செலுத்திட வேண்டும்; அதற்கு இது ஒரு எளிய வழி என்று எல்லோரும் எண்ணிட வேண்டுமாய் தமிழ்ப் பெருமக்களை மிக்க பேரன்புடன் வேண்டிக் கொள்ளுகிறோம்.
தனது இறுதி மூச்சு அடங்கும் வரை பதவி, புகழ், பெருமை, சுகபோகம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது ஆமைகளாய், ஊமைகளாய் கிடந்த, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே உரிமைக் குரலாய் ஒலித்த நம் அய்யாவுக்குக் கல்விக் கண்ணையும், உத்தியோகக் கண்ணையும் தமிழர்களுக்குத் தந்த அந்த அறிவு வள்ளலுக்கு, தன்மானம் அறியாது கிடந்த மக்களுக்கு தன்மானத்தைப் போதித்தும் பிறகு இனமானம் தன்மானத்திலும் பெரிது என்று சொல்லியும் கொடுத்த சோர்வறியாத மேதைக்கு, மண்ணடிமை தீருவதைவிட முக்கியம் பெண்ணடிமை தீர்வது என்று உழைத்திட்ட உலகப் பெரியாருக்கு அனைவரும் நன்றிக்கடன் செலுத்த இதைவிட ஓர் அரிய வாய்ப்பு வேறு கிட்டுமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும் நம் தமிழ்ப் பெருமக்கள்.
நிதி குவிந்திட வேண்டும்; அதன் மூலம் எங்கெங்கும் பெரியார் கொள்கைமயமே என்று ஒரு பிரமிக்கத்தக்க மாற்றத்தை பெரியார் நூற்றாண்டில் இந்த நாடும் நானிலமும் கண்டாக வேண்டும்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவது என்று முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் உள்ள தமிழக அரசும் அறிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பெருமை எங்கிருந்து கிடைத்தாலும் நாம் வரவேற்க வேண்டியவர்களே!
அதுபோது கொள்கை ரீதியான பல ஆக்கத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றையும் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் இனி என்றென்றும் திராவிடர் இயக்கம்தான் _ தந்தை பெரியார் வழி. இது இன்றைய அரசியல் நோக்கர்களின் கணிப்பு. இதைவிட அய்யா அவர்களது நூற்றாண்டு விழாவில் தனிச்சிறப்பு வேறு இல்லை.
பெரியார் நூற்றாண்டு விழா மக்களாலும் கொண்டாடப்படுகிறது; அரசாலும் கொண்டாடப்படுகிறது. அது அனைத்துத் தரப்பாலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
ஜாதியற்ற, மூட நம்பிக்கையற்ற, சமவாய்ப்புச்  சமுதாயத்தைச் சரியாக உருவாக்குவதே அய்யா நூற்றாண்டுக்குச் சரியான நினைவுச் சின்னம் என்றாலும் அதற்கு ஆவன செய்வதுதான் நூற்றாண்டு விழாவில் நமது செயல் திட்டங்களாகும்.
நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் அரசு ஊழியத்திலும் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைக் குடும்பங்கள் பல லட்சக்கணக்கில் உள்ளன என்பதை நமது நிதி வசூல் அளவுகோல்போலக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். நிர்ணயிக்கப்பட்ட நிதியைவிட அதிகமாகக் குவிந்தது என்றால் அய்யாவின் மானம் பாராத தொண்டுதான் காரணம் என்று குறிப்பிட்டு அன்று விடுதலை வெளியிட்டோம்.
நினைவுகள் நீளும்...
தமிழின மக்களை மனித இனத்தின் பட்டியலிலே இடம் பெறும் தகுதியை உண்டாக்கிய தமிழர்களின் இரட்சகர், உலக மானிடத்தின் ஒரு பெரும் வழிகாட்டி, தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை, திராவிடர் கழகம் சரியான அளவில் திட்டமிட்டு, பெரும் அளவில் செப்டம்பர் 16, 17, 18 (1978ஆம் ஆண்டு) நாட்களில் சென்னை மாநகரில் எடுத்து சரித்திரப் பெருமையைத் தேடிக் கொண்டுவிட்டது என்று சொல்லக்கூடிய நிலையில் சரித்திரத்தைப் படைத்தது. சென்னை, பெரியார் திடலில் பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டு இருந்தது.
பந்தலா _ திராவிடர் கழகக்கொடி மண்டவிட்ட கறுப்புக் காடா என்று மலைக்கும் வண்ணம் கழகக் கொடிகளின் அடர்த்தி! நகரெங்கும் கழகக் கொடி தோரணங்கள் விழாவிற்குக் கட்டியம் கூறின. பூந்தமல்லி நெடுஞ்சாலையும் (தற்பொழுது பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை) ரண்டால்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்ட மிகப் பிரம்மாண்டமான எழில் குலுங்கும் வளைவும், அதில் கழகக் கொடிகள் பறந்த பாங்கும், பார்ப்போர் யாவரது நரம்புகளையும் முறுக்கேற்றின! விழாவிற்காக திருவாரூரிலிருந்து தனி இரயில் ஒன்று (பெரியார் ஸ்பெஷல்) செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு 16ஆம் தேதி காலை 9.35 மணிக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தை வந்தடைந்தது. 3000 கழகத் தோழர்களும், தாய்மார்களும் குடும்பம் குடும்பமாக வழி நெடுகக் கொள்கை முழக்கமிட்டு வந்தனர். நான் எழும்பூர் இரயில் நிலையம் சென்று இரயிலில் வந்த தோழர்களை அன்புடன் வரவேற்று அழைத்து வந்தேன்.
தோழர்கள் பெற்ற உணர்ச்சியை வார்த்தைக் கட்டுக்குள் அடக்க முடியாது! நான் முன்செல்ல, தோழர்கள், தாய்மார்கள் அணிவகுப்பு ரயில் நிலையத்திலிருந்து காந்தி இர்வின் பாலம் வழியாகப் பெரியார் திடலை வந்தடைந்தது. விழாவைத் தொடங்கும் தருணத்திலேயே திடல் முழுவதும் மக்கள் வெள்ளம் _ கருஞ்சட்டைக் கடல் பிரவாகம் எழுந்திருந்தது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக முழுக்க பெண்களே பங்குகொள்ளும் பட்டிமன்றம் தொடங்கியது. தந்தை பெரியார் தொண்டில் மிகுந்து நிற்பது ஜாதி ஒழிப்பா _பெண்ணடிமை ஒழிப்பா? என்பது பட்டிமன்றத்தின் தலைப்பு.
நடுவராக பேராசிரியர் திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். ஜாதி ஒழிப்பே என்ற அணியில் புலவர் சிவகாமி, க.சுசீலா எம்.ஏ., பார்வதி கணேசன் ஆகியோரும், பெண்ணடிமை ஒழிப்பே என்ற அணியில் புலவர் கண்மணி தமிழரசன், இராசம் துரைபாண்டியன், சுப்புலக்குமி பதி ஆகியோரும் உரையாற்றினர். இறுதியாக நடுவர் தீர்ப்பளிக்கையில் தந்தை பெரியாரின் தொண்டில் மிகுந்து நிற்பது ஜாதி ஒழிப்பே என்று தீர்ப்பு வழங்கினார். அடுத்து தந்தை பெரியார் வரலாறு _ நான்கு காலகட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்கள் நாட்டு மக்களின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் என்று தவத்திரு அடிகளார் கேட்டுக் கொண்டார். 1916_1925 வரை உள்ள தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வுக் காலக்கட்டத்தைப்பற்றி பேராசிரியர் சி.டி.இராஜேஸ்வரன் அவர்களும், 1925 முதல் 1933 வரை என்.டி.சுந்தரவடிவேலு அவர்களும், 1933 முதல் 1948 வரை மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வி.சி.குழந்தைசாமி அவர்களும், 1948 முதல் 1973 வரை பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களும் விரிவுரை ஆற்றினர். பிற்பகல் நிகழ்ச்சியில் புதுமை உலகம் என்ற தலைப்பின் கீழ் கவிஞர் முடியரசன் அவர்களது தலைமையில் கவியரங்கம் தொடங்கியது. விண் என்ற தலைப்பில் கவிஞர் இரா.கண்ணிமை, அணு என்ற தலைப்பில் பெரியார்தாசன், நீர் என்ற தலைப்பில் கவிஞர் தஞ்சை வாணன், நெருப்பு என்ற தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன், காற்று என்ற தலைப்பில் கவிஞர் குடிஅரசு ஆகியோர் கவிதை பாடினர். கவியரங்கம் முடிந்தவுடனே டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி தனது ஆங்கில உரையை நிகழ்த்தினார். திருப்பூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவ்வுரையை அன்று தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். சமத்துவம் என்பது வெறும் மரியாதை _ பெருமைகளில் மட்டும் இருக்கக் கூடாது; உரிமையில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று சொன்ன உலகத் தலைவர் பெரியார் என்று டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் தனது உரையில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டார். தந்தை பெரியார் அவர்களால் நாதசுர இசைச் சக்கரவர்த்தி என்று பாராட்டப்பெற்ற நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களது குழுவினரால் நாதசுர இசை மழை தொடங்கியது. புரட்சிக்கவிஞரின் பாடலை அவர் நாதத்தில் இசைத்துத் தந்தபோது, அதை கைதட்டி வரவேற்று ரசிக்காத எவருமே அன்று இல்லை. நாதசுர இசைச் சக்கரவர்த்திக்கும் அவரது குழுவினருக்கும் பொன்னாடை போர்த்திப் பெருமைப்படுத்தினேன்.
இரவு திருச்சி பெரியார் மாளிகையைச் சேர்ந்த பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பிலும், மற்றும் பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை சார்பிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பாகவும், குழந்தைகளும் மாணவிகளும் பங்கு பெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பெற்றன. நாகம்மை குழந்தைகள் இல்லம், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம், நாகம்மை ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, பெரியார் நடுநிலைப் பள்ளி, பெரியார் _ மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த குழந்தைகளும் மாணவிகளும் அய்யா புகழ் பாடும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி, கூடி இருந்த மக்கள் வெள்ளத்தின் கண்களை எல்லாம் உணர்ச்சி நதியாக்கி விட்டனர்! அய்யா_அம்மா ஆகியோரால் ஆளாக்கப்பட்ட அக்குழந்தைகள், அய்யா_அம்மா ஆகியோரைப்பற்றி நினைவுகூர்ந்து பாடிய பாடல்களும், நடனங்களும் கண்டோரின் இதயங்களை நெகிழ்ந்து போகச் செய்தன! கடைசிக் கருஞ்சட்டைத் தொண்டன்வரை அய்யா_அம்மா ஆகியோரால் பாராட்டப்பெற்ற, சீராட்டப் பெற்ற இக்குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினேன்.
இரவு இசை மாமணி டி.ஆர்.பாப்பா குழுவினரின் தந்தை பெரியார் புகழ்பாடும் இசை அரங்கம் தொடங்கியது. கோவை சவுந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன் அவர்களது செல்வன் சிவசிதம்பரம், எம்.எல்.ஸ்ரீகாந்த், டி.கே.கலா, சசிரேகா ஆகியோர் தந்தை புகழ் பாடினர். இசைக் குழுவினர்க்கு அன்று கழகப் பொருளாளராக இருந்த தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள், இயக்க நூல்களை அன்பளிப்பாக வழங்கியும் திரு.டி.ஆர்.பாப்பா அவர்கட்கு சால்வை போர்த்திப் பாராட்டுதல்களைத் தெரிவித்தார். தொடர்ந்து வைக்கம் போராட்டம் பற்றி சிலைடு திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உதகை அன்னை மணியம்மையார் நாடக மன்றத்தினரின் கறுப்புச் சூரியன் உதயமாகிறது என்ற நாடகம் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. உதகை பகுத்தறிவாளர் கழகத் தோழர் மு.தமிழரசன் இந்நாடகத்தில் முக்கிய பாகம் ஏற்று சிறப்பாக நடித்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 17, தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாளல்லவா? என்னுடைய தலைமையில் சென்னையில் உள்ள அய்யா சிலைகளுக்கு எல்லாம் மலர் மாலை சூட்டினோம். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி மத்திய அரசு தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள சிறப்பு அஞ்சல் தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தின் முகப்பு வாயிலிலேயே அந்நிகழ்ச்சி மிக இயற்கையான சூழலிலே ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவில் நான் வரவேற்புரை ஆற்றினேன். நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் தலைமை ஏற்றார். விழாவில் பங்கேற்று _ அவர் செய்த பகுத்தறிவு முழக்கம் தமிழகத்தின் வீதிகளிலே என்றென்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும். தந்தை பெரியார் அவர்களின் தொண்டால்தான் தாங்கள் எல்லாம் நீதிபதிகளாக வர முடிந்தது என்று நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் அவர்களும், நீதிபதி ஜஸ்டிஸ் வரதராஜன் அவர்களும் நெஞ்சுருகும் நன்றி உணர்வுடன் வெளியிட்டனர். தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, நடைபாதைக் கோவில்களை அப்புறப்படுத்துமாறு நீதிபதி மோகன் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டார். அஞ்சல் தலையை வெளியிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வரதராசன் அவர்கள் தனது உரையில், காலமெல்லாம் ஒடுக்கப்பட்டுக்கிடந்த மக்களின் மீட்சிக்காகப் பாடுபட்ட தலைவரின் அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப்பற்றி ஒரு தொண்டாக _ பேறாக நான் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.
நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் நடைபாதைக் கோவில்களை அகற்றிட வேண்டும் என்று சொன்னதால் பார்ப்பனர்களால், துக்ளக் போன்ற ஏடுகள் தலையிட்டதால் கண்டனம் தெரிவித்து நாம் பதில் எழுதினோம். சென்னை அண்ணா சாலை தபால் நிலைய அதிகாரி டி.டி.நாயர், தந்தை பெரியார் தபால்தலை ஆல்பத்தை நீதிபதி அவர்களிடம் வழங்கினார். அன்று தலைமை நிலையச் செயலாளராக இருந்த வழக்குரைஞர் எஸ்.துரைசாமி நன்றிகூற அதனைத் தொடர்ந்து வானொளி (டெலிவிஷன்)யில் காட்டப்பெற்ற தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்று ஓவியமும், என்னுடைய உரையும், அதற்கென பந்தலில் வானொளிப் பெட்டிகள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன! வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்பற்றி மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திருமதி சுந்தரி வெள்ளையன் பின்குரல் கொடுத்து விளக்கமளித்தார். தந்தை பெரியாரின் சிறப்பு அஞ்சல்தலை, முதல் நாள் வெளியிடப்படும் கவர், தபால் துறையினரே வெளியிட்டுள்ள அய்யாவின் வாழ்க்கைக் குறிப்புகள், விற்பனைக்காக, பெரியார் திடலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் அவற்றை வாங்கிய வண்ணமாகவே இருந்தனர்.
தந்தை பெரியார் அவர்களின் டாக்டர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்ச்சி முற்பகல் தொடங்கியது. விடுதலை நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம் அவர்கள் டாக்டர் சுந்தரவதனம் அவர்களுக்கும், மதுரை மாவட்ட தி.க. தலைவர் வாடிப்பட்டி எஸ்.சுப்பையா அவர்கள் டாக்டர் இரத்தினவேல் _ சுப்பிரமணியம் அவர்களுக்கும், சேலம் மாவட்ட தி.க. தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் டாக்டர் செந்தில்நாதன் அவர்களுக்கும் சால்வை போர்த்திச் சிறப்பித்தனர். செங்கற்பட்டு மாவட்ட தி.க. தலைவர் காஞ்சி சி.பி.இராசமாணிக்கம் அவர்கள் டாக்டர் இராமச்சந்திரன் அவர்களுக்குரிய சால்வையையும், தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என்.நஞ்சையா அவர்கள் டாக்டர் பட் அவர்களுக்குரிய சால்வையையும் என்னிடத்தில் வழங்கினார்கள்.
டாக்டர்கள் இரத்தினவேல் சுப்ரமணியம், சுந்தரவதனம், செந்தில்நாதன் ஆகியோர் அய்யா அவர்களின் அரும்பெரும் பண்புகள் பற்றியும், அய்யா அவர்களின் செயற்கரும் தொண்டுகள் குறித்தும் அகமகிழ்ந்து பாராட்டி உரைத்தார்கள். அன்னை நாகம்மையார் படத்தை பழம்பெரும் சுயமரியாதை வீரர் நாகை எஸ்.பி.காளியப்பன் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களது படத்தை பட்டுக்கோட்டை இரெ.இளவரி அவர்களும் திறந்து வைத்து உரையாற்றினர். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, பகுத்தறிவுக் கண்காட்சியை தென்ஆற்காடு மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன் அவர்களது தலைமையில், தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என்.நஞ்சையா திறந்து வைத்தார். ஓவியர் கிருஷ்ணன் அவர்கள் வரைந்த தந்தை பெரியார் அவர்களின் பலவண்ண வாழ்க்கை வரலாற்று ஓவியங்களும், ஓவியர்கள் குமார், ஆரூர் தெட்சிணாமூர்த்தி, குகன் ஆகியோர் வரைந்திருந்த பகுத்தறிவு விளக்கப் படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. நுழைவுக் கட்டணமாக 25 காசுகள் செலுத்தி ஏராளமானோர் பார்க்கத் தொடங்கினர்.
(தொடரும்)
-உண்மை,16-30.6.15
வரலாற்றுச் சிறப்பை தனது மேல்முத்திரையாக்கிக் கொண்ட ஊர்வலம் பெரியார் திடலிலிருந்து தொடங்கியது என்றாலும், அதற்கான ஏற்பாடுகள் சென்னை நகர் முழுவதும் தொடங்கப்பட்டன.
ஊர்வல நேரம் நெருங்க நெருங்க கருப்புச் சட்டை நெடும் படை எங்கும் அலை மோத காணப்பட்டது. ஊர்வலத்தின் முகப்பாக, தந்தை பெரியார் அவர்களின் முக்கிய வாழ்க்கைக் கட்டங்கள், போராட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கும் வண்ண வண்ணப் படங்களுடன்  அலங்கார வண்டிகள் கண்டோர் கண்களில் நுழைந்து கருத்துகளில் தைத்தன!
ஊர்வலத்தின் ஆரம்பத்தில் கம்பீரமாக கழகக் கொடியைப் பறக்கவிட்டுச் சென்றனர். தோழர்கள் வெற்றிவீரன், வரதன், நாத்திகமணி, இளங்கோ, மாமல்லன் மற்றும் கருஞ்சட்டைத் தோழர்கள் மோட்டார் சைக்கிள்களில் பவனி சென்றனர்.
அடுத்து நான்கு குதிரைகளில் கழகத் தோழர்கள் ஆத்தூர் _ சென்னை வெங்கிடாசலம், பகுத்தறிவாளன் முதலியோர் கழகக் கொடி ஏந்தி கம்பீரமாகச் சென்றனர்!
அதற்கடுத்து அலங்கார வண்டிகள் _ அதன் பின்னே மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் முப்பது பெண்மணிகள் _ அவர்களின் கைகளிலே தீச்சட்டி _ முழக்கங்களோ, கடவுள் மறுப்பு வாசகங்கள்!
சென்னை வாழ் மக்கள் இருபுறமும் கூடி நின்று இக்காட்சியினைக் கண்டு மலைத்துப் போயினர்!
கழகத் தோழியர் மற்றும் தோழர்கள் மூன்று வரிசையாக நின்று, இராணுவ வீரர்கள் இவர்களிடம் அணிவகுப்பைக் கற்க வேண்டும் என்பது போல் கருஞ்சட்டை இளைஞர் அணி அணிவகுத்து வீரவலம் வந்த காட்சி இருக்கிறதே _ சில நாள்கள் வரை அதுபற்றி சென்னைவாழ் மக்கள் பேசிக்கொண்டே இருந்தனர். இவ்வளவு பெரிய இளைஞர் சந்ததி இவர்களிடம் இருக்கிறதே என்று அரசியல்வாதிகளிலிருந்து மதவாதிகள் வரை இடிந்து போயினர்!
அவ்வளவு பெரிய எண்ணிக்கை _ அவ்வளவு பெரிய கட்டுப்பாடு _அவ்வளவு பெரிய முழக்கங்கள்!
எல்லாவற்றையும்விட, இளைஞர்களை அடுத்து, தாய்மார்கள் இவ்வளவு நீளமான ஊர்வலப் பாதையைக் கொள்கை முழக்கமிட்டு, குழந்தை குட்டிகளுடன் வீரநடை போட்டு வந்த காட்சி இருக்கிறதே _ இது ஒரு புத்தம் புதிய பகுத்தறிவுப் புறநானூற்றுப் பதிப்பு என்றுதான் கூறவேண்டும்!
அடுத்து கருஞ்சட்டைத் தோழர்களின் அலை அலையான அணிவகுப்பு _ கொள்கை முழக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் பேருந்துகள், அவற்றிலும் ஒலிபெருக்கிகள் _ கொள்கை முழக்கங்கள் _ கலை நிகழ்ச்சிகள்!
வங்காள விரிகுடாவை நோக்கி இந்தக் கருஞ்சட்டைக் கடல் நெருங்க நெருங்க, கொள்கை உணர்ச்சிகளின் அலை மோதலை என்னென்று சொல்வது!
திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராப்ட்ஸ் சாலையை அப்பொழுது பார்க்க வேண்டுமே _ தரை தெரியவில்லை _ எங்கும் தலைதான் தெரிந்தது! சீரணி அரங்கம் வரை எத்திசை நோக்கினும் கருஞ்சட்டை! கருஞ்சட்டை!! கருஞ்சட்டை!!!
ஊர்வலத்திலே உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை அலகுகளால் குத்திக்கொண்டு, கையிலே கழகக் கொடியைத் தாங்கி, கால்களிலே கட்டைகளைக் கட்டிக்கொண்டு வேலூர் சத்துவாச்சாரி தோழர்கள் ஆடிவந்த காட்சி இருக்கிறதே _ சென்னை மக்களுக்கு மட்டுமல்ல _ பொதுவாக பெரும்பாலோருக்கு அது ஒரு புதிய காட்சிதான்!
கரூர் வட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் டி.டி.குமார் தலைமையில் கூர்மையான அரிவாள்மீது நின்று காட்டி, கடவுள் மறுப்பு வாசகத்தை ஓங்கி ஓங்கி ஒலித்தது. அதிர்ச்சியைத் தரும் மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சி அல்லவா? மண்ணச்சநல்லூர் கழகச் செயலாளர் அரங்கராசனின் வெற்றுடம்மை சவுக்கால் தோழர் ஒருவர் அடிப்பதும், அவர் அது கண்டு துவளாமல் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழக்கமிடுவதும் பக்தர்களுக்குச் சரியான சாட்டை அடிகள்!
பேட்டைவாய்த்தலை மணிவண்ணன் வாயிலே மண்ணெண்ணையை ஊற்றி குபீர் என்று நெருப்பை பூமிக்கும் விண்ணுக்கும் கொப்பளிக்க விடுகின்ற காட்சி _ சாதாரணமானதா என்ன?
மற்றும் மயிலாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை, சிலம்ப விளையாட்டு, குத்துச்சண்டை இன்னோரன்ன சிறப்பு அம்சங்களும் ஊர்வலத்திற்குச் சிறப்பை ஊட்டின.
பிற்பகல் பெரியார் திடலிலிருந்து தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கருப்புச்சட்டை ஊர்வலம் பூந்தமல்லி நெடுஞ்சாலை(பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை), டாக்டர் டி.எம்.நாயர் பாலம், போலீஸ் கமிஷனர் ஆபிஸ் சாலை, சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்கா, அய்யா சிலை, அண்ணா சிலை, கலைஞர் சிலை, ஆனந்த் தியேட்டர், உட்ஸ் ரோடு, ராயப்பேட்டை மணிக்கூண்டு, பைகிராப்ட்ஸ் சாலை வழியாக  கடற்கரை சீரணி அரங்கத்தை அடைந்தது!
ஊர்வலத்தின் இடையிடையே தி.மு.கழகத் தோழர்கள் தண்ணீர் வழங்க முன்வந்தும், தண்ணீர் குடிக்கத் தொடங்கினால் ஊர்வலத்தின் போக்குக்கு ஊறு விளையக்கூடும் என்று தண்ணீர்கூட அருந்த முனையாமல் கட்டுப்பாட்டோடு சென்ற அந்த நேர்த்தியை எந்த மொழியிலும் உள்ள எந்த வார்த்தைகளாலுமே வருணிக்க முடியாது.
கடற்கரை மணற்பரப்பா அது _ அல்லது கருஞ்சட்டையின் பாடிவீடா என்று கண்டோர் வியக்க கருஞ்சட்டைக் கடல் போட்டிக் கடலாக அங்கே பரந்து விரிந்து கிடந்தது.
ஒளி கொட்டும் விளக்குகள் ஒருபுறம் _ கம்பத்துக்குக் கம்பம் கழகக் கொடிகள் காற்றில் அசைந்தாடி வரவேற்கும் உணர்ச்சி மறுபுறம்.
இளைஞர் அணியினர் காவல் துறையினருக்கு வேலை இல்லாமல், அனைத்து அமைதிப் பணிகளையும் தாங்களே மேற்கொண்டு முறைப்படுத்தினர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, மதுரை பி.எஸ்.செல்வா, கலைத்தூதன் இருவரும் மற்றும் மாயூரம் செல்வி அறிவுக்கொடி, ஆமூர் முனியாண்டி ஆகியோர் இயக்கப் பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தனர்.
ஜெகஜீவன் முழக்கம்!
பாபுஜி அவர்கள் என்னிடம் எப்பொழுதும் வற்றாத அன்பு காட்டுபவர். நம் அழைப்பை ஏற்று காலை அரசு விழா ஈரோட்டில், மாலை சென்னை விழா. கோவை சென்று விமானம் மூலம் வந்தார். உடல்நிலை பி.பி.அதிகம் என்றாலும் வந்தார். நானே மொழிபெயர்த்தேன்.
கடற்கரை நிகழ்ச்சிக்கு நான் தலைமை வகித்தேன். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிங்கமாகக் கர்ஜித்தார்! பெரியார் மறையவில்லை அவர் நம்மோடு வாழ்கிறார்! என்றார். அவர் விட்டுச் சென்ற பணிகளை, நாம் முடித்துக் காட்ட வேண்டியது நமது கடமை என்று அறைகூவலிட்டார்! பெரியார் ஒரு தலைசிறந்த சிந்தனையாளர்! என்று புகழாரம் சூட்டினார்.
இறுதியாக டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
பல்லவன் போக்குவரத்துக் கழகம் விசேஷமாகவிட்ட பெரியார் ஸ்பெஷல் பேருந்துகள் நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் திரும்ப வசதியாக இருந்தது!
அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட நீதிதேவன் மயக்கம் எனும் நாடகம் பெரியார் திடலில் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை குழுவினரால் நடத்தப்பட்டது. உத்திரமேரூர் கே.எம்.இராசகோபால் இராவணனாகத் தோன்றி நடித்தார். நாடகத்திற்கு அன்பில் தர்மலிங்கம் தலைமை வகித்தார்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் உரையாற்றுகையில், இளவயதில் சுதந்திர சிந்தனையாளராக பெரியார் வாழ்ந்தார். பெரியாரின் உயர்ந்த குணங்கள் எல்லாம் பின்பற்றத்தக்கவை; அவரது இலட்சியம் காங்கிரசில் நிறைவேறாது என்று அவர் நினைத்தபோது, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்று குறிப்பிட்டார்.
உ.பி.மாநிலம் சிங்சவுராஷ்யா எம்.பி. அவர்கள் தனது உரையில் (அய்யா அவர்களை உ.பி.மாநிலத்துக்கு அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியவர்) வட மாநிலத்திலும் பெரியார் வழியில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தொடங்குவோம் என்று குறிப்பிட்டார்.
இவரது ஆங்கில உரையை ஏ.எஸ்.வேணு தமிழில் மொழிபெயர்த்தார்.
கர்நாடக மாநில வருவாய் அமைச்சர் பசவலிங்கப்பா அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
பெரியாருக்குப் பின்னால் அவரது இயக்கம் செத்துப் போய்விடும் என்று நினைத்தவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய மக்கள் சக்தி இந்த இயக்கத்திற்கு இருக்கிறது. அகில இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்பை வீட்டிலேயும் வெளியிலேயும் பின்பற்றுபவர்கள் பெரியார் இயக்கத்தினர்தான் என்று குறிப்பிட்டார். இவரது ஆங்கில உரையை பேராசிரியர் அ.இறையன் மொழிபெயர்த்தார்.
மேலும் கருத்தரங்கில் செட்டி நாட்டரசர் ராஜா சர்.முத்தையா செட்டியார், பேராசிரியர் மா.நன்னன், பொறியியல் அறிஞர் பி.குமாரசாமி, தா.பாண்டியன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி எம்.பி. ஆகியோர் உரையாற்றினர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாத்திகக் கொள்கை கொண்ட கோவை செல்வி சந்திரலேகாவுக்கு பெரியார்_மணியம்மை கல்வி அறக்கட்டளை சார்பாக தங்கமெடலை கருநாடக அமைச்சர் பசவலிங்கப்பா வழங்கினார்.
விழாவில் கிழக்கு முகவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இரா.சண்முகநாதன், செயலாளர் என்.ஆர்.சாமி, செங்கற்பட்டு மாவட்ட தி.க. தலைவர் சி.பிஇராசமாணிக்கம், செயலாளர் வி.கங்காதரன், மதுரை மாவட்ட தி.க. தலைவர் வாடிப்பட்டி சுப்பையா, செயலாளர் சுப்பிரமணியம், மேற்கு முகவை மாவட்ட தி.க. தலைவர் தே.சி.பி.சிதம்பரம், செயலாளர் ஒ.எம்.பாலன், கோவை மாவட்ட தி.க. தலைவர் இராமச்சந்திரன், தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் எஸ்.பி.தெட்சிணாமூர்த்தி, செயலாளர் அ.குணசீலன், புதுக்கோட்டை மாவட்ட தி.க. தலைவர் அடைக்கலம், செயலாளர் பெ.இராவணன், தர்மபுரி மாவட்ட தி.க.தலைவர் எம்.என்.நஞ்சையா, செயலாளர் சு.தங்கவேலு, வடசென்னை மாவட்ட தி.க. செயலாளர் மு.போ.வீரன், நெல்லை மாவட்ட தி.க. செயலாளர் டி.ஏ.தியாகராசன், திருச்சி மாவட்ட தி.க.தலைவர் டி.டி.வீரப்பா, செயலாளர் கே.கே.பொன்னப்பா, தஞ்சை மாவட்ட தி.க.துணைத் தலைவர் காரை சி.மு.சிவம், தென்ஆற்காடு மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன், செயலாளர் இரா.கனகசபாபதி, பம்பாய் தி.க.தலைவர் ஆர்.ஏ.சுப்பையா, கருநாடக மாநில தி.க.தலைவர் அருச்சுனன், குடந்தை வட்ட தி.க. தலைவர் டி.மாரிமுத்து, சேலம் மாவட்ட தி.க.தலைவர் பொத்தனூர் க.சண்முகம், வடஆற்காடு மாவட்ட தி.க.செயலாளர் ஏ.டி.கோபால், காஞ்சிபுரம் ஜானகிராமன், திருப்பூர் அ.இறையன், கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, இளைஞர் பிரிவுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், விவசாய_தொழிலாளர் பிரிவுச் செயலாளர் குடந்தை ஏ.எம்.ஜோசப், திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் திருச்சி என்.செல்வேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். அய்யா_அம்மா மறைவுக்குப் பின்னர் கழகப் பொதுச் செயலாளராகிய என்னுடைய தலைமையில் கட்டுப்பாட்டுடன் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம் என தோழர்கள் சூளுரைத்தனர்.
காப்போம் காப்போம் பெரியார் கொள்கை காப்போம்! அய்யாவின் பகுத்தறிவுக் கொள்கைகளை அகில முழுவதும் அஞ்சாது அயராது, அய்யா காட்டிய பாதையிலே நின்று ஆயிரம் இடர்வரினும் _ எத்தனை அடக்குமுறை வரினும் தொடர்வோம், செல்வோம், வெல்வோம், வெல்வோம், வெல்வோம் என்று சூளுரை எடுத்துக் கொண்டனர்!
இயக்க வரலாற்றில், இன எழுச்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக, திருப்புமுனை தரத்தக்கதாக தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழா அமைந்திருந்தது என்றே குறிப்பிட வேண்டும்.
-உண்மை,1-15.7.15
`தமிழக அரசு பார்வைக்கு
தந்தை பெரியாரின் நூற்றாண்டினை எப்படி கொள்கைரீதியாக அரசு கொண்டாடலாம் என்பதற்கு அடையாளமாக, அன்று விடுதலையில் ஒரு கட்டுரை வடிவில் தமிழக அரசு பார்வைக்கு என்று குறிப்பிட்டு 18.06.1978 அன்று அய்யா நூற்றாண்டில் தமிழக அரசு செய்யுமா? என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தோம் என்பதனை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என்பதால் அதனைக் குறிப்பிடுகிறேன்.
அந்தக் கட்டுரையில்..
தமிழ்நாட்டின் உடல், ஊண், உணர்வு, உயிர் இவற்றோடு ஒன்றி தமிழகத்தின் மூச்சுக் காற்றாய் எங்கும் என்றும் நிறைந்திருக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கு, வருகிற 1978 செப்டம்பர் 17ஆம் நாள் நூறாவது வயது தொடங்குகிறது. அன்று முதல், அன்னாருக்கு நூறாவது ஆண்டு நிறையும் நாளான 1979 செப்டம்பர் 16ஆம் நாள் இறுதியாக உள்ள இந்த ஓராண்டு முழுவதும், விழாக் கொண்டாடிச் சிறப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதைக் கண்டு தமிழ் மக்கள் அனைவருமே பூரிப்பும், புளகாங்கிதமும் அடைகின்றனர்.
மத்திய அஞ்சல் துறையின் சார்பில் தந்தை பெரியாரவர்களின் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டு அவ்வரசும் தனது கடமையினைச் செவ்வனே செலுத்தி தமிழ் மக்களின் ஒருமித்த நன்றியினைப் பெறுகின்றது!
ஆணையிடத்தக்க ஆலோசனைகள்
(1) தமிழில் தற்போது 247 தனித்தனி எழுத்துகள் வழங்கி வருகின்றன. எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தால்தான் மொழி வளரமுடியும்; அச்சுக் கோர்க்கவும், தட்டச்சு செய்யவும் எளிதாக இருக்கும் என்று தந்தை பெரியார் அவர்கள் கருத்துத் தெரிவித்து, எடுத்துக்காட்டாக தாமே சில எழுத்துச் சீர்திருத்தங்களைக் கையாண்டு வந்தார்கள். அது முழுமையான சீர்திருத்தம் அல்லவென்பதே அவர்கள் கருத்தாயினும், ஒரு முறையைப் புகுத்திட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். அவர்களது நல்லநோக்கம் நிறைவேறவும், ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் குறைவான எண்ணிக்கையில் எழுத்துகள் இருப்பதால் அவை உலகெங்கும் விரைந்து பரவ வழியிருப்பதாலும், தமிழிலும் இந்தக் காலகட்டத்தில் கட்டாயமாக ஒரு எழுத்துச் சீர்திருத்தத் திட்டத்தை மேற்கொண்டு, அரசு ஆணை பிறப்பித்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
(2) தந்தை பெரியாரவர்களின் அடிப்படைத் திட்டமே ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாய அமைப்பாகும். அதற்கு உறுதுணையாக, மனிதர்களைப் பேதப்படுத்தும் ஜாதிப் பட்டங்களை யாரும் சட்டப்படிச் சேர்த்துக் கொள்ளக்கூடாது; ஊர்கள், தெருக்கள், கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு ஜாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைக்கும் கொண்டு வரப்பட வேண்டும்.
(3) அரிஜன் என்ற பெயர் மத நம்பிக்கையின் அடிப்படையில் சூட்டப்பட்டதாகும். அதை நீக்கி, தாழ்த்தப்பட்டவர் என்றே குறிப்பிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். (Depressed Class என்று ஆங்கிலத்தில் இருக்கலாம்.)
(4) தந்தை பெரியார் அவர்களின் சொந்த ஊர் ஈரோடு, கோவை மாவட்டம் இரண்டாகப் பிரிகின்ற சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதால், ஈரோட்டைத் தலைநகராகக் கொண்டு ஒருதனி மாவட்டம் அமைத்து அதற்குப் பெரியார் மாவட்டம் (ஆந்திராவிலுள்ள பிரகாசம் மாவட்டம்போல்) என்று அரசு பெயரிட வேண்டும்.
(5) திருச்சியில் புதிதாக அமைய விருக்கின்ற பல்கலைக்கழகத்திற்கு பெரியார் பல்கலைக்கழகம் என்று (Periyar University) அரசு பெயர் சூட்ட வேண்டும்.
(6) ஒன்றாம் வகுப்பில் தொடங்கிப் பட்டப்படிப்பு  வரையில், தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய சரியான விவரங்களைத் தாங்கிய வரலாற்றுக் குறிப்புகளும், வாழ்க்கை நிகழ்ச்சிகளும், சிந்தனைக் கோவைகளும் பாடநூல்களில் படத்துடன் இடம்பெற அரசு ஆவன செய்திட வேண்டும். என குறிப்பிட்டிருந்தோம்.
****
கழகத்தோழர்களுக்கு அறிக்கை
தந்தை பெரியார் அவர்கள், தன் சொந்த சொத்துகளையும், மக்கள் தந்த காசுகளையும் லட்சங்களாகப் பெருக்கி, அவற்றைக் கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் அனாதை விடுதிகளுக்கும், அறிவுப் பிரச்சாரத்திற்கும் தந்த ஒரே உலகத் தலைவர் நமது தந்தைதான் என்பதைவிட 60 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு அவர் அள்ளி அள்ளித் தந்த அறிவுச் செல்வம் என்றும் குறையாத செல்வம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது _ மறக்க முடியாது. அத்தகைய ஒரே தலைவனுக்கு நூற்றாண்டு விழாவினை கொண்டாட, வேண்டுகோளாக, மூன்று மாதங்களுக்கு முன்பாகவே விடுதலையில் நான் கழகத் தோழர்களுக்கு அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதனை விடுதலை (5.7.1978)யில் இரண்டாம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தேன்.
அது, நூற்றாண்டு விழா பணியைத் துவக்குக! என்று தலைப்பிட்டு வெளிவந்தது. அதிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் தலைவர் தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட தமிழ்கூறும் நல்லுலகம் தயாராகிக் கொண்டு இருக்கிறது!
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற சிந்தனையாளர் அய்யா அவர்களது நூற்றாண்டு என்பது வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது என்பதோடு தீவிரக் கொள்கைப் பிரச்சார ஆண்டாகவே அதனை நடத்துவது என்பதோடு, ஓராண்டு முழுவதிலும் பல வகையான வகையில் அய்யாவின் அறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காக நாம் பல்வேறு திட்டங்களை, பிரச்சார முறைகளை அடுக்கடுக்காக கையாள முனைந்துள்ளோம். ஆங்கிலம் முதல் பல்வேறு மொழிகளில் அய்யாவின் அறிவுக் கருவூலங்களை மொழிபெயர்த்து வெளியிடுவது, கிராமங்கள் பட்டிதொட்டிகள் எங்கணும் நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஈறாக அத்தனை வாய்ப்புகள் மூலம் அறிவு ஆசான் அய்யாவின் கொள்கைகளைச் சுழன்றடிக்கும் சூறாவளியாகப் பரப்புவதற்கு நாம் தீட்டியுள்ள பல திட்டங்களும் அவ்வப்போது வெளியிடப்படும்.
இந்நூற்றாண்டு விழாவின் மூலம் பகுத்தறிவுப் பிரச்சாரமும், மூடநம்பிக்கை ஒழிப்பும், இனமானமும், உணர்வும் தமிழ்ப் பெருமக்களிடையே பொங்குமாங்கடலெனக் கிளம்பி வழிவகை கண்டாக வேண்டும்.
அய்யா தந்த அறிவுச் சுடர் என்றும் அணையாது! அதை எவராலும் அணைக்க இயலாது என்பதை புரியாதவர்களுக்கும், புரிந்துகொள்ள மறுக்கிறவர்களுக்கும் புதுப்பாடம் புகட்டும் வகையில் நமது பணி ஓயாத, ஓய்வில்லாத பணியாக மலரப் போகிறது!
எங்கெங்கும் பெரியார் கொள்கைமயமே; அது இருந்திட்டால் நம்மவர்க்கு இல்லை பயமே என்பது வெறும் பாட்டு வரிகள் அல்ல; செயல்பாட்டின் தோற்றம் என்றாகும் வண்ணம் நமது தோழர்கள் கருஞ்சட்டை வீரர்களும், தமிழினப் பெருமக்களும் தீவிரமாகப் பாடுபட இப்போதே தொடங்கிவிட வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு ஒருமுறைதான் வரும். அதை எவரும் மறந்திடக் கூடாது. பிறந்த நாள் விழா என்றாலும் இவ்வாண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டாவது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிட இயலும். ஆனால், நூற்றாண்டு என்பது வரலாற்றின் வைர வரிகள் அல்லவா?
அந்த நூற்றாண்டு விழாவின்போது நாம் இருந்து கொண்டாடும் பொன்னான வாய்ப்புக் கிடைத்தது மிகப்பெரும் பேறு என்று நன்றி உணர்வும் இன உணர்வும் பகுத்தறிவும் பற்றும் உள்ள ஒவ்வொருவரும் மகிழத்தக்க ஒன்றாகும்.
இவ்வாறு மிகச் சிறப்புடன் விழாவினைக் கொண்டாடுவதற்கு நமது இயக்கத்தின் சார்பில் நாடு முழுவதும் உள்ள மக்களிடம், மக்கள் பங்குகொள்ளும் மாபெரும் நமது நாட்டுத் திருவிழா, பெருவிழா _ தந்தையின் நூற்றாண்டு விழா என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் 5 லட்ச ரூபாய் நிதி திரட்ட நாம் எடுத்துள்ள முடிவின்படி, நமது தோழர்கள் அடுத்த வாரம் முதல் இப்பணியை முக்கிய முதற்பணியாகத் தொடங்கிட முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
****
சிங்கப்பூர் - தமிழ்முரசு`
தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா முடிந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் பிரபலமான தமிழ் நாளேடான தமிழ் முரசு 28.01.1979இல் சென்னைக் கடிதம் என்ற பகுதியில் அய்யாவின் நூற்றாண்டு விழா குறித்து நீண்டதோர் கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தது. அந்தச் செய்தியை இங்கே அப்படியே தருகிறேன். அதில்...
பெரியார் உயிரோடு இருந்தபோது கூச்சப்பட்டவர்கள்கூட இப்பொழுது வீதிக்கு வந்து நின்று தமிழினத்தின் தலைவிதியை மாற்றிய தலைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். மனித உணர்வுகள் இன்னும் வற்றிவிடவில்லை என்பதற்கு அடையாளம் காட்டியது பெரியார் நூற்றாண்டு விழா. சில பத்திரிகைகளோ ராஜாஜி விழாவை கலியுகமே கண்டிராத அதிசயம் போல சித்தரித்துக் காட்டி புளகாங்கிதம் அடைந்தன. ஆனால், பெரியார் விஷயத்திலோ உதட்டளவு வறட்டுச் சிரிப்பைக் காட்டின, பெரியார் ஒரு பெரிய சமூகச் சீர்திருத்தவாதி என்று கண்டுபிடித்துக் கூறின. இது பெரியாருக்கு நிஜமாகவே பாராட்டுரையா? மயில் ஒரு நல்ல பறவை என்பதைப் போல இல்லையா? சிங்கம் ஒரு பெரிய விலங்கு என்பதைப்போல இல்லையா? தமிழும் ஒரு மொழிதான் என்று சர்டிபிகேட் தருவதைப் போல இல்லையா? ஆனால், அதே சமயத்தில் இதற்கு மேல் அவர்கள் எப்படிப் போக முடியும்? என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது அவர்கள் நடந்துகொண்ட முறை அவர்களைப் பொறுத்தளவில் சரிதான் என்றே கூற வேண்டியிருக்கிறது.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் எல்லாத் துறைகளிலும் எஜமானர்களாக சவாரி செய்கிறவர்களாக இருந்த சிலரை இன்று சாமானியர்களாக ஆக்கியதுடன் நாலாந்தரப் பேர்வழிகளை, சமுதாயச் சோகைகளை மிடுக்கும் வீரியமும் உரிமை வேட்கையும் நிறைந்த வீரர்களாக்கி வைத்தது பெரியார் அல்லவா?
பெரியார் அரசியல் பிரவேசம் செய்தபோது 60 ஆண்டுகளுக்கு முன் நிலைமை என்ன?
1937இல் முதன்முதலாக தமிழகத்தில் அமைச்சரவை அமைந்தது. ஆச்சாரியாருக்கு அப்பொழுது போட்டியாக நின்றது சத்தியமூர்த்தி, டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள் காங்கிரசில் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குப் பெரிய மரியாதையோ அந்தஸ்தோ இருந்ததில்லை. காமராசர் ஒரு பிரபல தொண்டர் என்ற அளவிலேயே காங்கிரசில் இருந்து வந்தார்.
அடுத்த இருபதே ஆண்டுகளுக்குள் நிலைமை என்ன ஆயிற்று?
இவ்வளவு பெரிய அரசியல் புரட்சியின் _ சமுதாயப் புரட்சியின் மூலகர்த்தா யார்? பெரியார்தான்.
வடநாட்டு அரசியல் தலைவர்களும் _ தமிழகத்தில் சில பத்திரிகைகளும் சேர்ந்து கொண்டு ராஜாஜி விழாவை ஓகோ என்று விளம்பரப்படுத்திவிட்டார்கள். இந்தியாவின் மிகப்பெரிய _ நூதன அரசியல் மூளைகளில் ஒன்று என்ற வகையில் ராஜாஜி நூற்றாண்டு விழா மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடையதுதான். ஆனால், அதே சமயத்தில் அவர் தனிப்பெரிய அரசியல் சித்தாந்தத்தின் கர்த்தா அல்ல; அது காந்தியார்தான். காந்தீயத்தின் பாஷ்யக்காரர் ராஜாஜி.
உணர்ந்தோர் எத்தனை?
ஆனால் பெரியாரிசமோ _ காந்தீயத்துக்கு ஒவ்வோர் அம்சத்திலும் நேர் எதிரிடையான சித்தாந்தம். பழைய கோட்பாடுகள், பழைய சமுதாயக் கட்டுக்கோப்பு _ பழைய சமுதாயச் சிந்தனை ஆகிய மூன்றையும் அப்படியே நீடிப்பது காந்திய சித்தாந்தம். அதை முழுக்க முழுக்க எதிர்ப்பது பெரியாரிசம். இந்தத் துல்லியமான வேறுபாட்டைத் தமிழர்களிலேயே   எவ்வளவு பேர்கள் உணர்ந்திருப்பார்களோ!
ராஜாஜி விழாவில் குடியரசு அதிபர் சஞ்சீவரெட்டியிலிருந்து பிரதமர்_மத்திய அமைச்சர்கள் ஈறாக பல அகில இந்தியப் புள்ளிகள் கலந்து கொண்டு ஒரே ராகத்தில் பாடினார்கள். ராஜாஜி_ பெரிய அரசியல் மேதை. அற்புத நிர்வாகி. காந்திஜியின் மனச்சாட்சிக் காவலர் என்றெல்லாம் புகழ்ந்தார்கள்.
பெரிய பணக்காரர் வீட்டு ஆடம்பரத் திருமணம் போல அது நடந்தது. செல்வந்தர் வீட்டு திருமணத்தில் பெரிய பணக்காரர்களுக்கே முதலிடம் தரப்படும். செயற்கைமுறை உபசரிப்பு _வறட்டுச் சிரிப்பு _ கதகதப்பு இல்லாத கைகுலுக்கல் _ இவையே நடைமுறைகள். ஆனால், ஏழை வீட்டுத் திருமணத்திலோ உற்றார் உறவினர் புடை சூழ்ந்து நிற்க பாசமும் அன்பும் கததத்து நிற்கும். பெரியாரின் விழா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தது.
டில்லியின் பாராமுகம்
இதில் மத்திய அரசு பட்டும் படாததுமாக நடந்து கொண்டது. எம்.ஜி.ஆர். அரசின் கோரிக்கைக்கு இணங்கி மத்திய அஞ்சல் துறை பெரியாரின் நினைவாக அஞ்சல் தலையை வெளியிட்டது உண்மை. ஆனால், அதே சமயத்தில் குடியரசு அதிபரோ அல்லது பிரதமரோ இந்த விழாவுக்கு வரவில்லை. குடியரசு அதிபரை அழைத்துவர தமிழக அரசு எவ்வளவோ முயன்றதாம்; ஆயினும் பலனில்லை. அவரோ சென்னையில் பிரபல ஆங்கில நாளிதழாகிய இந்துவின் நூற்றாண்டு விழாவிற்கு மட்டும் வந்து கலந்துகொண்டுவிட்டு டில்லி திரும்பிவிட்டார்.
ஆயினும், அதற்காக தமிழக அரசானது சோர்ந்துவிடவில்லை. மத்திய அமைச்சரும் பெரியாரின் பணியை நன்கு உணர்ந்திருப்பவருமான ஜெகஜீவன்ராமை அழைத்து வந்து ஈரோட்டிலும் சென்னையிலும் பெரியார் விழாவைச் சிறப்பாக நடத்தியது. பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் நினைவைப் போற்றிப் பாதுகாக்கும் பல சீரிய திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்தது. அவற்றில் மூன்று முக்கியமானவை.
முதலாவதாக ஈரோட்டைத் தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை நிறுவி அதற்குப் பெரியார் மாவட்டம் என்ற பெயரையே சூட்டுவது.
அடுத்து பெரியார் மிகவும் விரும்பிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது, மூன்றாவதாக பெரியாரின் பெயரில் புதிய பல்கலைக்கழகம். இம்மூன்றில் முதலிரண்டையும் கண்டு பொறுக்க முடியாமல் சில பத்திரிகைகள் என்னென்னவோ சாக்குப் போக்குகளைச் சொல்லி ஓலமிட்டு பார்த்தும் யாருமே சட்டை செய்யவில்லை.
இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர். அரசு உறுதியாக நின்றதை சிலரின் சலசலப்புகளையெல்லாம் சட்டை செய்யாததை பாராட்டவே வேண்டும். இதற்கும் தமிழகத்தில் உள்ள சில வட்டாரங்கள் சில காரணங்களைக் காட்டுகின்றன. பெரியார் விழாவை இவ்வளவு சிறப்பாக எம்.ஜி.ஆர். கொண்டாடுவதற்கும், பெரியாரின் நினைவாக இவ்வளவு பெரிய திட்டங்களை மேற்கொண்டிருப்பதற்கும் பெரியாருடைய கொள்கைகளின் மீது அவருக்குள்ள பெரிய பிடிப்பு காரணமல்ல.
கருணாநிதியை மனத்தில் வைத்துக்கொண்டு, பெரியார் விஷயத்தில் அவர் மிஞ்சி விடுவதற்கு எந்த விதத்திலும் இடத் தரவே கூடாது என்ற ஒரே நோக்கத்துடன்தான் இவ்வளவும் செய்கிறார்.
மற்றபடி இயக்க ரீதியாக கொள்கை ரீதியாக இவருக்கும் பெரியாருக்கும் வரலாறு பூர்வமான சம்பந்தம் என்ன இருக்கிறது என்று கேட்கின்றனர்.
கருணாநிதியை மனத்தில் நினைத்தபடியேதான் எம்.ஜி.ஆர். இவ்வளவும் செய்வதாக வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் மற்றவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இதில் இவ்வளவு துணிவையும் உறுதியையும் எம்.ஜி.ஆர். காட்டுவது நிச்சயம் பாராட்டுக்கு உரியதுதான்.
- தொடரும்
-உண்மை,16-31.7.15

அய்யாவின் அடிச்சுவட்டில் - 143

அதிகாலை வரை அணியணியாய் வந்து வரவேற்றார்கள்!
கேள்வி: திரு. வீரமணி அவர்களே தங்களுடைய இலக்கியத்துறை வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தாங்கள் இலக்கியத் துறையில் எந்த அளவு ஈடுபாடு கொண்டு இருக்கின்றீர்கள்.
பதில்: இலக்கியம் என்பது என்ன? என்பதில் பிறருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள்கூட இருக்கலாம்.
இலக்கியத்திற்காகத்தான் இலக்கியம் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பண்டித மனப்பான்மை கொண்டவன் அல்ல நான்.
இலக்கியம் என்பது சமுதாயத்தினுடைய தேவைக்குப் பயன்பட வேண்டும். குடி இருப்பதற்குத்தான் வீடு கட்டுகின்றோம் என்பதைத் தவிர வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க அல்ல என்பது எங்களது உறுதியான கருத்து.
எந்த உயர்ந்த சிந்தனையாக இருந்தாலும் அது அருமையான இலக்கியம் என்று கொள்ளப்பட வேண்டும்.
அந்த வகையில் பார்க்கும்போது அந்த இலக்கியங்கள் மக்களுக்குப் பயன்படக் கூடிய வகையிலும் புதுமைக் கருத்துக்களை உருவாக்கக்கூடிய ஆயுதங்களாகவும், கருவிகளாகவும் அது அமைய வேண்டும் என்று நினைத்து அந்த வகையிலே நாங்கள் தொண்டாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.
பழமைக்கு புதிய வியாக்கியானங்கள் புதிய பொருள்கள், விளக்கங்கள் தருவதுதான் இலக்கியம் என்றால் அது நிச்சயமாக நம்முடைய சமுதாய தேவைக்குப் பயன்பட முடியாது. எதிர்கால ஓட்டத்திற்கு முன்னாலே நிற்க முடியாது என்று கருதித்தான் புதிய இலக்கியங்கள் என்றால் புதிய உலகத்தினை சமைக்கின்ற கருவிகளாக அமைய வேண்டும், என்கின்ற கண்ணோட்டத்தோடு எங்களுக்குத் தெரிந்த வகையிலே, எங்களுக்கு முடிந்த வகையிலே எளிய வகையிலே, நாங்கள் எழுத்துப் பணிகளை, பேச்சுக்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றோம்.
இலக்கியம் என்பது நல்ல அறிவியல் கருத்தின் தொகுப்பாக, சிந்தனையாக இருக்க வேண்டும். நில உலகத்தில் இருந்து நிலா உலகத்திற்கு மனிதன் போய்விட்ட பிற்பாடும் இன்னமும் நாம் பழமையையே சொல்லிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்போமானால் அந்தப் பழைய பாட்டு எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே, நம்முடைய தமிழ் அறிஞர்களும் தமிழ் படிக்கின்ற இளைஞர்களும் நிலா உலகம் எப்படிப்பட்டது என்பதனையும் கூட இலக்கியத்தில் செய்யுள் மூலமாகத் தெரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். இது யாருக்கோ பாத்தியப்பட்டது நமக்குரியது அல்ல என்று நினைப்பது இலக்கிய முறையாகாது.
எனவே, இலக்கியமானாலும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு புதுமையினை சமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள்.
எனவே, அந்த வகையில் நாங்கள் எங்களுக்கு ஏற்பத் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றோம் எழுத்துப் பணிகளின் மூலமாக, பத்திரிகைகளை, ஏடுகளை அந்த வகையிலே நடத்திக் கொண்டு வருகின்றோம்.
கேள்வி: அண்மையில் தாங்கள் கோலாலம்பூரில் நிகழ்த்திய உரையின் பொழுது தங்களுடைய கழகத்தின் வழியாக மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தீர்கள். அதுபற்றி விவரமாகக் கூற வேண்டுகின்றேன்.
பதில்: ஆம்! இதனை தெரிவிப்பதற்குக் கூட மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தந்தை பெரியார் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த சிறிய நிதியானாலும், அவருடைய சொந்த பணமானாலும் அவைகளை எல்லாம் ஒன்றாக்கி அது மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற வகையிலே  பெரியார் அறக்கட்டளையை உருவாக்கி இருக்கின்றார்கள்.
தந்தை பெரியார் அவர்களுக்கு வாழ்நாள் பூராவும் துணையாக இருந்து அவர் வாழ்நாளுக்குப் பின்னாலே அவர் கண்ட கழகத்திற்கும் துணையாக இருந்து மறைந்த அன்னை மணியம்மையார் அவர்கள் அவருக்கு என்று தந்தை பெரியார் தந்துவிட்டுப்போன ஓரிரு சொத்துக்களையும், தம் சொந்த சொத்துக்களையும் இணைத்து பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை என்ற ஒன்றை உருவாக்கி அதையும் அவர்கள் மக்களுக்கே வைத்து விட்டுப் போய் இருக்கின்றார்கள்.
இந்த இரு அறக்கட்டளைகளும் கல்விப் பணிகளையும் பொதுப் பணிகளையும் ஏராளம் செய்துகொண்டு வருகின்றன.
எங்களுடைய நாட்டிலே (தமிழ்நாட்டில்) நாங்கள் ஆதரவற்ற அனாதைக் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்ற குழந்தைகளை, மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை எல்லாம் எடுத்து அவர்களை நல்முறையில் வளர்த்து உருவாக்க குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் இல்லம் ஆகியவைகளை நடத்தி வருகின்றோம்.
பல மாணவ மாணவிகளுக்கு உதவி செய்து வருகின்றோம். பல வகையான அந்த உதவிகளை பெருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை தமிழக எல்லையில் மட்டும் என்று குறுகிவிடக் கூடாது என்று கருதி மலேசிய நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து கல்வி பயில வாய்ப்பினை பெற்றவர்களுக்கும் அங்கே பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் மேற்படி அறக்கட்டளை மூலமாக நாங்கள் அவர்களுக்கு உதவ முன்வந்து இருக்கின்றோம்.
இந்த வகையிலே ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு வருகின்ற கல்வி ஆண்டு முதல் உதவுவது என்று நாங்கள் முடிவு செய்து அதைத்தான் சில நாள்களுக்கு முன் கோலாலம்பூரில் நான் பேசிய கூட்டத்தில் அறிவித்தேன். அதைப்பற்றி முழுவிவரம் விரிவாக பின்னர் அறிவிக்கப்படும்.
கேள்வி: திரு. வீரமணி அவர்களே! இதுவரைக்கும் மலேசிய வானொலி நேயர்களுக்கு தாங்கள் அளித்த பேட்டிக்காக நேயர்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதில்: மலேசிய வானொலி நேயர்களை உங்கள் மூலமாக சந்திக்க ஒரு வாய்ப்பினை கொடுத்தமைக்கு எங்கள் இயக்கத்தின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
13.01.1979 அன்று தொடங்கி 12.02.1979 வரையிலான எங்கள் பயணத்தில் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.
இப்பயணத்தில் என்னுடன் வந்த கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அங்கும் பொருளாளராகவே நடந்து கொண்டார். நமது குழந்தைகள் இல்லத்திற்கு கிடைத்த அன்பளிப்புகளையெல்லாம் இரவு வெகு நேரமானாலும் எழுதி வைத்துவிட்டுதான் தூங்கச் செல்வார். அதேபோல் இயக்க நூல்களை பரப்பும் பணிகளில் ஏ.டி. கோபால் அவர்கள் ஈடுபட்டார்.
வெற்றிகரமான முறையில் எங்கள் மலேசிய (கொள்கை) பயணம் முடிந்து 13.02.1979 அன்று காலை 10 மணியளவில் மாஸ் விமானம் மூலம் திரும்புவதாக திட்டமிட்டு பின்னர் அத்திட்டம் மாற்றப்பட்டு அன்று இரவு 12.40 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் வரமுடிந்தது. இதன் காரணமாக 13.02.1979 அன்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெறவிருந்த வரவேற்புக் கூட்டம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது.
நள்ளிரவு 12.40 மணிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் அதிகாலை 2.30 மணிக்குத் தான் வெளியில் வரமுடிந்தது. அதுவரை காத்திருந்த  கழகக் குடும்பத்தவர்கள் அலையலையாக இரவு 11 மணி முதல் குவிந்து இருந்து உற்சாக வரவேற்பளித்தனர். மலர் மாலைகளும் சால்வைகளும் குவிந்தன, பலர் இவற்றுக்குப் பதிலாக பணமும் அளித்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வெளிப்புற சாலைகளில் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு ஒரே விழாக் கோலமாக இருந்தது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி முடிய மணி 3.30 ஆகிவிட்டது. நிகழ்ச்சி முடிந்து தோழர்களும் திரும்புவதற்கு வசதியாக விமான நிலையம் முதல் பெரியார் திடல் வரை பல்லவன் போக்குவரத்துக் கழகம் தனி பேருந்து ஏற்பாடு செய்திருந்தது. மறுநாள் காலை கலைஞர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுற்றுப்பயணம் குறித்து கேட்டறிந்தார். விடுதலை அலுவலகத்திற்கு நேரில் வருவதாக அவர் தெரிவித்தார். நான் சட்டமன்றம் நடக்கும் நேரத்தில் இதற்காக நேரத்தை செலவழிக்காதீர்கள், அங்கே செல்லுங்கள் என்று கூறினேன். பின்னர் முரசொலிமாறன் எம்.பி அவர்களும், மு.க. ஸ்டாலின் அவர்களும் விடுதலை அலுவலகத்திற்கு வந்து வாழ்த்திச் சென்றனர்.
பின்னர், இராம அரங்கண்ணல் எனது இல்லத்தில் வந்து சந்தித்து பாராட்டினையும் வாழ்த்தையும் தெரிவித்தார். மாலையில் சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டிச் தெருவில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். கழக மாநில பொறுப்பாளர்களும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்று உரையாற்றினார்கள் பின்னர் நான் உரையாற்றுகையில், இந்த இயக்கத்தை அய்யா அவர்கள் உருவாக்கியதோடு மட்டுமல்ல, இதையாரும் அழிக்க முடியாத அளவிற்கு வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த இயக்கம் ஒளிவீசுகிறது. அந்தப் பெருஞ்சுடரின் ஒளியிலே நாமெல்லாம் மகிழும் வண்ணம் கடமையாற்றி வருகிறோம். தந்தை பெரியார் என்ற உலகளாவியத் தத்துவத்தில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளது. அய்யா கொள்கை கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்று சொல்லக்கூடிய நிலையிலே நான் இருக்கிறேன். என்று கூறிவிட்டு, நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் இயக்கப்-பணிகளை சிறப்பாக ஆற்றியமைக்கு நன்றி தெரிவித்தேன்.
மேலும் பேசுகையில் இக்கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் உத்திர பிரதேசத்தில் வழங்கப்பட்டு வந்த இட ஓதுக்கீடு செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதனை உச்சநீதி மன்றத்திற்கு அப்பில் செய்ய முடிவெடுத்தார் அம்மாநில முதலமைச்சர் திரு. ராம் நரேஷ் யாதவ். அதற்கு முட்டுகட்டை பேட்ட பார்ப்பன அமைச்சர்களை நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கஜேந்திர நாத் மிஸ்ரா என்பவர் உத்திர பிரதேச முதல்வரை கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியால் குத்தினார். கடும் கண்டனத்தை தெரிவித்து மலாய் நாட்டில் வழங்கப்படும் சமூக நீதியான பூமிபுத்ரா எனப்படும் மண்ணின் மைந்தர்களுக்கான ஒதுக்கீட்டை பேசினேன்.
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய உடன் விடுதலை இதழில் 23.02.1979 அன்று இரண்டாம் பக்கத்தில் பயணங்கள் குறித்தும் அங்கு அய்யா உருவாக்கிய கொள்கைக் குடும்பங்கள் பற்றியும் நீண்டதோர் தலையங்கம் திணறினேன்! திக்குமுக்காடினேன்!! என்று தலைப்பில் எழுதினேன். அதில்,
தோழர்களது அன்பு பொங்கிய வழியனுப்பைப் பெற்றுச் சென்றபிறகு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டு கழகத் தோழர்கள், இன உணர்வும் பகுத்தறிவும் கொப்பளிக்கும் தமிழ்ப் பெருமக்கள் ஆகியவர்களது வரவேற்பு _ அவர்கள் காட்டிய எல்லையற்ற உற்சாகம் எளிதில் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்கு அமைந்தது! திக்குமுக்காடச் செய்தது!!
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, விமான தளத்திலிருந்து இறங்கியது முதல், என்னை முதல்முறை இரண்டாவது முறையாக சிங்கப்பூர் நாட்டிற்கு அனுப்பி வைக்கும்வரை, மலேசிய திராவிடர் கழகத் தலைவர் அருமைச் சகோதரர் செயல் மாவீரர் திரு கே.ஆர்.இராமசாமி அவர்களும், அவருடன் தோளோடு தோள் நின்று பணிபுரியும் முதுபெரும் இயக்க வீரர்களான சுயமரியாதை வீரர்கள் ஏ.மருதமுத்து, திராவிடமணி, நல்லதம்பி, பொருளாளர் வேலு ஆகியோர் முதல்துடிப்புமிக்க இளைஞர் பொதுச் செயலாளர் சகோதரர் ரெ.சு.முத்தையா அவரைப் போன்ற பல தலைமைப் பொறுப்பாளர்களும் எங்களிடம் நன்கு வேலை வாங்கினார்கள். ஆர்வம் பொங்கும் அன்பு கெழுமிய அவர்களது செயல் திறமைக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டியவர்கள் தானே?
தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய பெருங் கொள்கைக் குடும்பம் வீட்டு எல்லை, நாட்டு எல்லை எல்லாவற்றையும் கடந்தது அல்லவா?
நமது பகுத்தறிவு ஆசான் அய்யா அவர்களது இருமுறைப் பயணங்களும் பயன் விளைவித்தவை; பகுத்தறிவு இயக்கத்தைப் பார் அறியச் செய்ததோடு பலரும் அதில் ஈடுபாடு கொள்ள வைத்தன.
இன்றோ அங்கு புதிய தலைமுறைகள் உருவாகியுள்ளதால் தலைமுறை இடைவெளி (நிமீஸீமீக்ஷீணீவீஷீஸீ ரீணீஜீ) ஏற்பட்ட நிலையில், அய்யாவின் நூற்றாண்டு விழா அதனை நிரப்பப் பெரிதும் பயன்பட்டது என்றே கூறவேண்டும்.
தமிழ்நாட்டில்கூட இவ்வளவு முறையாக ஏற்பாடுகள் (நூற்றாண்டு விழா பிரச்சாரம்) இருக்குமா என்று வியக்கும் வண்ணம் கவியரங்கம், கருத்தரங்கம், இசையரங்கம் முதல் எல்லாமே மிகச் சிறப்புடன் நடைபெற்றன!
மலேசிய திராவிடர் கழகத்தால் அவை நடத்தப் பெற்றாலும், எல்லாத் துறைகளில் உள்ள தலைவர்களும், மலேசிய துணை அமைச்சர் பெருமக்கள் முதல், தேசிய தோட்டத் தொழிலாளர்கள், தலைவர்கள் முதல் யாவரும் மலேசிய திராவிடர் கழகத்தின் போற்றத்தக்க தொண்டைப் பாராட்டி வரவேற்று ஆதரவு காட்டவே செய்தனர்.
எட்டு அல்லது 10 கிளைகள் மட்டுமே இருந்த நிலைமாறி, இப்போது மலேசியா முழுதும் 89 கிளைகள் மலேசிய திராவிடர் கழகத்திற்கு அங்கே இருக்கின்றன.
மக்களின் ஆதரவால் 5 லட்சம் வெள்ளிகள் (சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பு) செலவில் தலைநகர் கோலாலம்பூரில் வளரும் முக்கிய பகுதியில் ஓர் கட்டிடத்தையே மலேசிய தி.-க.வினர் திரு. கே.ஆர்.ஆர்., மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைப்போடு வாங்கி ஒரு புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.
அய்யாவின் நூற்றாண்டில் அவர்கட்குக் காணிக்கையாக்குகிறோம் என்று அறிவித்தார் தலைவர். பெரியார் மாளிகை என்றே பெயர் சூட்டவும் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டுள்ளனர்.
இங்குள்ள மூடநம்பிக்கை, ஜாதிநோய் இப்போது அங்கும் ஏற்றுமதியாகிவிடும் நிலையில் தந்தை பெரியார் கொள்கை என்ற ஈரோட்டு மாமருந்து அவசியம் தேவை என்பதை அங்கு உணர்ந்து ஒப்புக்கொண்டனர்!
இயற்கை வளங்கொழிக்கும் மண்; அந்த மண், பகுத்தறிவு கொள்கைளும் வேர் பிடித்து பூத்துக் குலுங்கும் அரிய முயற்சியை அங்குள்ள மலேசிய தி.க. செய்கிறது!
அரசியல் இயக்கமாக இல்லாது அனைவரது ஆதரவும் (அதே நேரத்தில் கொள்கை அற்றவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாது) துணிவுடன் மலேசிய தி.க. தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றது!
சீரிய தலைமை, செயல் திறன்மிக்க தோழர்கள், அதன் முதல் சொத்தாகும்.
நிகழ்ச்சிகள் 50க்கு மேல்; அந்தந்த ஊர் தமிழர்களின் அன்போ கரை உடைந்த வெள்ளம் போன்றது; இளைஞர்களின் முற்றுகையோ எளிதில் மறக்க முடியாதது! தாய்மார்களது பண்போ எவரும் பின்பற்றத்தக்கது.
பத்தாங் பர்ஜிந்தை பெரியார் தொண்டரும் எனது இனிய சகோதரருமான கந்தசாமியின் பணி எப்போதும் மறக்க முடியாது.
தமிழ்நாட்டைப் பார்க்காது, தமிழர் தலைவர்களைச் சந்திக்காது, கருத்துக்களையும், கொள்கைகளையும், செய்திகளையும் மட்டுமே சந்தித்து அவ்வளவு அன்புக் கடலாக அவர்கள் இருக்கிறார்கள்!
மலேசிய இந்தியக் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி மலேசியக் கூட்டணியில் (ஆளும் கட்சியில்) அங்கம் வகிக்கும் கட்சி. அது மலேசிய திராவிடர் கழகத்தைப் பெரிதும் மதிக்கிறது. தோழமையுடன் இருக்கிறது. தி.க.வின் சமுதாயத் தொண்டு இன்றியமையாதது என்று அதன் இளைய தலைமுறை நன்கு உணர்கிற நிலை உள்ளது.
சிங்கப்பூரிலும் நமது தோழர்கள் தமிழர் சீர்திருத்த சங்கத் தலைவர் திரு. விக்டர் அவர்களும் செயலாளர் திரு.முருகு.சீனுவாசன் மற்றும் நம் தோழர்கள் நாகரெத்தினம், மூர்த்தி, சந்திரன், (எழுத இயலாத அளவுக்கு இன்னும் எத்தனையோ இயக்க நண்பர்கள்) இவர்கள் தவிர்ந்த பொது நிலையில் வர்த்தகப் பிரமுகர்கள், தமிழ்ப் பெரு வணிகர்கள், காட்டிய பேரன்பும் எங்களை திக்குமுக்காடவே செய்தது!
சிங்கப்பூர் தொழிலாளர் மாநாட்டு மண்டப விருந்து வரவேற்பு கூட்டமும், தமிழர் சீர்திருத்த சங்கத்தில் நடைபெற்ற கூட்டமும் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகள். அய்யா நூற்றாண்டு விழாவை கண்காட்சியுடன் ஏற்பாடு செய்து (செப்டம்பரில்) நடத்தினார்கள் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருந்துகள் எங்களைவிடவே இல்லை. கனிவான விசாரிப்புகளும், கொள்கை உணர்ச்சி பொங்கும் ஆர்வமும் சிங்கை தமிழர்கள் மத்தியில் என்றும் தணியாததாகவே இருக்கின்றன!
அங்கும் மூடத்தனம் பக்தி என்ற பேரால் தனது பொல்லாச் சிறகை விரித்து ஆட ஆரம்பித்து உள்ளது! பெரியார் என்ற மாமருந்துதான் அப்பிணிபோக்கும் மாமருந்து என்பதை உணர்த்தும் பொறுப்பை நமது தோழர்கள் நல்லவண்ணம் எடுத்துக் கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் காட்டிய அன்புப் புயலில் சிக்கினோம். மீண்டுவந்த நிலையில், இங்கு நமது கருஞ்சட்டை குடும்பத்தினர் தம் வரவேற்பு என்ற பூகம்பத்தில் அகப்பட்டோம்!
இவ்வளவு அன்பும் காட்டி நம்பிக்கை வைத்திருக்கிறார்களே நமது கழகக் குடும்பத்தினர்! இதற்கு ஏற்ப நாம் நடந்து, நமக்கு தகுதி இனியாவது உண்டாக்கிக் கொண்டு _ அதை நியாயப்படுத்த வேண்டுவது எப்படி என்பதே இப்போது பெருங் கவலையாகிவிட்டது.
சில ஆண்டுகட்கு முன்பு நம் அறிவு ஆசான் அய்யா அவர்கள் எழுதிய ஒரு குறிப்பு என்னைப் பொறுத்தவரையில் என்றும் நினைவில் கொள்ளத்தக்கதாக  மட்டுமல்ல; மறக்க இயலாத பாடமாகவும் ஆகிவிட்டது.
பெருமை, புகழ் என்பதைக் கண்டு மயங்கிவிடாது, அதற்கு பலியாகி விடாது, இழிவு, ஏச்சுப் பேச்சு மானக்கேடு ஏற்படும் எந்த சந்தர்ப்பத்திலும் சலிப்போ, விரக்தியோ கொள்ளாது பணிபுரிய இதுவே அய்யா நமக்கு தந்த ஆணை என்றும் கொண்டு, எனது பணி தொடருகிறேன்.
உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவன் சமுதாய நலனுக்குச் செய்யும் காரியங்களில் மானக்கேடு ஏற்பட நேர்ந்தால் அதை துணிவுடன் ஏற்க முன் வரவேண்டும். குடிநலத் தொண்டர்கள் மானம் பார்க்கில் கெடும் _ என்ன கெடும்? லட்சியம் கெடும் என்பது நமக்கு முன்னாலும் சொல்லப்பட்ட அறிவுரையாகும். அப்படி மானத்தைக் கருதாதவன் தான் லட்சியவாதி ஆவான், மற்றவன் சுயநலவாதியேயாவான் என்ற,
அய்யாவின் இந்தப் பாடம்தான் நம் அனைவருக்கும் பாலபாடமாக அமைய வேண்டும்.
அன்பு, கருணை, பாராட்டு இவைகளால்-தான் திணறுகிறோம், திக்குமுக்காடுகிறோம் என்பது பெரியார் தொண்டர்களுக்கு இருக்க வேண்டுமே தவிர, எதிர்ப்பு, ஏளனம், இழி குற்றச்சாட்டுகள், இவைகளால் ஒருபோதும் நாம் திணறவோ, திக்குமுக்காடுபவர்களாகவோ இருக்க மாட்டோம்! இருக்கக் கூடாது.
அய்யாவின் லட்சியங்கள் அகிலத்தின் வழிமுறைகளாகும் வரை அயராது பாடுபட அண்மையில் மேற்கொண்ட அயல் நாட்டுப் பயணம் ஓர் அச்சாரப் பயணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளேன்.
(நினைவுகள் நீளும்)
 கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக