ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி


- தந்தை பெரியார்



நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதாகும். நாம் ஓட்டு  வேட்டையாடுபவர்கள் அல்ல. ஓட்டு வேட்டையாடுபவனைக் கேட்டால் இவன் இதை ஜனநாயகம் என்பான். ஒன்று அப்படிச் சொல்பவன் மடையனாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கி யனாக இருக்க வேண்டும். புரியாமலேயே சொல்லு கிறவன், தெரியாமல் சொல்லுபவன் மடையன். தெரிந்து வைத்துக்கொண்டே இதில் ஏதாவது பங்கு கிடைக்காதா என்று பார்ப்பவன் அயோக்கியன். இதுவா ஜனநாயக ஆட்சி? இது ஒரு சாதிக்காரன் ஆட்சி. அது அரசாட்சி அல்ல. மேல் சாதிக்காரன் ஆளுகிறான். அதுவும் சாஸ்திர சம்பிரதாயப்படி ஆளுகிறான்.

இப்போது நடைபெறுகிற இராஜ்ஜியம் - இந்துமத இராஜ்ஜியம் - இதற்குக் கொள்கை வருணாசிரம தர்மம் தான்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் நான் சொல்லுகிறேன்.

முதலாவது ஆட்டைக் கொல்லலாம்; பன்றியைக் கொல்லலாம்; கோழி மற்ற பறவைகளைக் கொல்லலாம். ஆனால் மாட்டை  மாத்திரம் கொல்லக்கூடாது  என்று இந்த அரசாங்கத்தில் சிற்சில மாகாணங்களில் சட்டம் செய்து வைத்திருக்கிறார்கள்! உலகில் பல நாடுகள் ரஷ்யா, சைனா, போன்ற நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் வாழும் நாடுகளில் மாடு நல்ல உணவாகப் பயன்படுகிறது. அதைக் கொல்வது  தவறு கிடையாது. ஆட்டிறைச்சியைவிட  விலைமிகக் குறைவு. மாட்டி றைச்சி ஏழைகள் சுலபமாக  வாங்கிச் சாப்பிடும்படியாகக் கிடைக்கக் கூடியது. அந்த மாட்டை  அறுத்தால் தண்டனை என்றால் இது வருணாசிரம முறைப்படி  நடக்கும் இராஜ்ஜியம் என்றுதானே அர்த்தம்?

அடுத்தப்படி பார்ப்பானைப் பற்றியே பேசுகிறாயே! மற்றவனைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்? என்று கேட்கிறார்கள் சிலமடையர்கள். 100 க்கு 97 பேர் நாம் இருக்கிறோம். பார்ப்பான் 3 பேர்தானே இருக்கின்றான்? அந்த 3 பேருக்காவே சட்டம், ஆட்சி என்று வைத்துக் கொண்டானே ஏன் என்று எவனாவது கேட்கிறானா? இதன் பெயர் ஜனநாயகம் என்று சொல்கிறானே? நம் மடப்பசங்ககளும் 50 பேர் இங்கிருந்தால் அதில் 26  பேர் சொல்லுகிறபடி மற்ற 24 பேரும் கேட்பதுதான் ஜனநாயகம். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கூட 10 பேர் இருந்தால் 6 உறுப்பினர்கள் ஓட்டு போடுகிற மாதிரிதான் தலைவர்  வருவார். இங்கே நாம் 100க்கு 97 பேர் இருக்கின்றோம். 100க்கு 3 பேராக இருக்கின்றவன் சொல்லுகிறபடி 97 பேர் கேட்டு நடக்க வேண்டும் என்று சொன்னால் இதற்குப் பெயர் ஜனநாயகமா? எவனாவது சொல்ல முடியுமா? இந்து மத நாயகமே வருணாசிரநாயகம் மனு தருமப்படி ஆளுகிற நாயகமே தான். இரண்டு சங்கதி உங்களுக்குத் தெரிந் தால் இது விளங்கிவிடும். அதாவது ஒன்று: பார்ப்பான் கடவுளுக்குச் சமம். சூத்திரன் நாய்க்குச் சமம், பார்ப் பனத்தி கடவுளுக்குச் சமம். சூத்திரச்சி என்றால் வைப் பாட்டி என்று அர்த்தம் என்று எழுதி வைத்திருக்கிறான்.

இரண்டு: பார்ப்பான் ஆட்சித் தலைவனாக இருக்க வேண்டும். சூத்திரன் சிப்பந்தியாக கீழே இருக்க வேண் டும். இதுதான் மனுதர்மப்படியான சாஸ்திரம் எழுதி வைத்துள்ளவைகளாகும்.

பிராமணன் சூத்திரனைச் சோற்றுக்குத் திண்டாடும் படியாக நடத்த வேண்டும் என்பது மனுதர்மப்படியான காரியம் ஆகும். சூத்திரன் என்ன பாடுபட்டாவது பார்ப்பானுக்குக் கேடு செய்யாமல் சுகமாக பார்ப்பான்  வாழ வசதி செய்து கொடுக்க வேண்டும். சூத்திரன் ஏழையாகவே இருக்க வேண்டும். ஏண்டாவரி! என்று கேளுங்களேன்; வரிபோடுவது கூட மனுதர்மத்தை அடிப்படையாக  வைத்துதான். சூத்திரன் கையில் எதுவும் மிச்சமீதி தங்கக்கூடாது; அவன் வசதியாக வாழக் கூடாது என்பதற்காகவே. சூத்திரனைச் சோற்றுக் குத் திண்டாடும்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு தரும சாஸ்திரம்! அதை அனுசரித்துத்தான் நமக்கு வரி.

சாதி ஒழியக்கூடாது; சூத்திரன் படிக்கக் கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத்திற்குப் போகக்கூடாது; சூத்திரன்  வயிறாரக் கஞ்சி குடிக்கக்கூடாது என்றே எழுதி வைத்திருக்கிறான். இதுதான்  மனுதரும சாஸ்திரம்! இதுதான் இந்துலாவுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும் ஆதாரமும், அடிப்படையும் ஆகும். இதனால் தான் இதை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு ஜெயில். 4000 பேருக்குத் தண்டனை.  பத்துப் பேருக்கு மேல் சாவு முதலிய எல்லாமும் சாதாரணமாகப் பார்த்தால் தெரியும். இந்த நேரு, பட்டணத்துக்கு (சென்னைக்கு) வந்திருந்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டதே! என்ன ஆகி விட்டது? திட்டம் போட்ட வீதிகளை விட்டு கார் வேறு வழியாக ஓடியும் தப்பிக்க முடியவில்லையே? 5, 6  பேருந்துகளைக் கொளுத்தினார்கள். 12 பேர் செத்தானுங்களே! என்ன நடந்தது? ஒன்றும் நடக்க வில்லை. அதை வைத்து அதற்காக ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து ஒவ்வொருவருக்கும் 1 வருடம், 2 வருடம் என்று தண்டிப்பது என்றால் இந்த அரசாங்கத்தால் முடியாத காரியமா? ஏன் செய்யவில்லை? அது அவர்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு சாதாரணக் கடு தாசிகூட இல்லை நாங்கள் கொளுத்தியது! அதற்கு மாத்திரம் ஏன் 2, வருடம், 3 வருடம் தண்டனை? அதில் என்ன இந்த நேருவைக் கொல்லவேணும் என்று எழுதியிருந்ததா?அதில் சாதியைக் காப்பாற்றச் சட்டம் என்று இருக்கிறதே! நேற்றுதான் இந்த இராமனையும் பிள்ளையாரையும் எரித்தோம். வீதிக்கு விதி போட்டு உடைத்தோம்.  யாரும் கேட்கவில்லையே ஏன்? சாதியை ஏன் காப்பாற்றுகிறாய் என்று கேட்டால் உடனே 2 வருடம் என்றால் என்ன அர்த்தம்? இது மனுதர்ம ஆட்சி என்பதற்கு வேறு என்ன காரணம்வேண்டும்? நம்முடைய இழிவை ஒழிக்க நாம் தலையெடுக்க முயற்சித்தால் அதை ஒழிப்பதில்தான் பார்ப்பான் ஆட்சி எல்லாவற்றையும் கையாளுகிறது. நம்மை நம்முடைய இனப் பிரதிநிதிகள் இன்று ஆளுகிறார்களா? நமக்கு ஓட்டுக் கொடுத்திருக்கறார்கள். ஆனால் அதைச் சரியானபடி உபயோகிக்க வசதியிருந்தால், யோக்கியமான முறையில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களாயின் பிரதம மந்திரியாக எப்படி ஒரு பார்ப்பான் வரமுடியும்? 97 பேருக்கு யோக்கியமான முறையில் ஓட்டுக் கொடுத்திருந்தால் 97 பேரில் ஒருவர் அல்லவா பிரசிரெண்டாக (குடியரசுத் தலைவராக) இருப்பார்? இப்போது 3 பேராக உள்ள வர்களிடத்திலிருந்து தான்  பிரசிடெண்ட் பார்ப்பார பிரசிடெண்டு - என்றால் என்ன அர்த்தம்? இவன் வைத்திருக்கிற சட்ட சபையின் மூலம் சாதியை ஒழிக்க முடியுமா? ஓட்டுப்போடுகிறவர்களில் 100க்கு 95 பேர் முட்டாள். பாக்கி 3 பேர் அயோக்கியன். 2 பேர் பார்ப்பான்! அவன் செலவு செய்கிறான்; பணத்தைத் தண்ணீர் மாதிரி; அதற்காகத்தான் சட்டசபைக்கு வா என்று எல்லோரையும் கூப்பிடுகிறான். எலிக் கூண்டு, புலிக்கூண்டு மாதிரிதான். எப்படி பெரிய பொறிவைத்து எலியைப் பிடிக்கிறார்களோ அதுபோலத்தான் எலெக்ஷன் (தேர்தல்) ஒரு பொறி மாதிரி! அதில் மாட்டிக் கொண்டால் ஒன்றும் பண்ணமுடியாது. கீழ்சாதிக் காரர்கள் ஜெயித்தால் கூட பெருவாரி மக்களின் ஆசைப்படி நடக்க இயலாது; சமுதாய இழிவு ஒழிய ஜனநாயகம் மூலம் செய்யமுடியாது. சட்ட சபைக்குப் போய் உட்காருவதற்கு முன்பே உன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விடவேண்டும் என்கிறான். அதில் போய் நீ என்ன செய்ய முடியும்?

சட்டத்தை இலட்சியம் செய்யாமல், வலுவான கிளர்ச்சி நடத்துவது மூலம்தான் நாம் நம்முடைய இலட்சியத்தைச் சாதிக்க முடியும். ஜனநாயகத்தின் மூலம் இந்த பித்தலாட்டத்தை ஒழிக்க முடியாது. கிளர்ச்சி ஒன்றில்தான் இந்தக் காரியம் முடியும். கிளர்ச்சியால் முடியாவிட்டால் அதற்கடுத்து பலாத்காரம் நிச்சயம். அடுத்த தலைமுறையில் அதுதான் நடக்கும். கிளர்ச்சி தோல்வி அடையுமானால் பலாத்காரத்தைத் தவிர வேறுவழி என்ன? மயிலே மயிலே இறகுபோடு என்றால் முடியுமா? ஆகவே சட்டசபையோ, ஜனநாயகமோ இதைச் சாதிக்க முடியாது.

பலாத்காரம் என்றால் இன்னொருவனை ஒழிப்பது என்று  அர்த்தமல்ல. தன்னையே ஒழித்துக்கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம். தன்னையே இரண்டிலே ஒன்று பார்த்துக்கொள்கிறான் என்று தான் அர்த்தம். நீங்கள் பத்திரிகையிலே பார்க்கலாமே! நாட்டிலே நடக்கிற கொலை களில் 100க்கு 75கூட கொலை செய்கிற வனும் தன்னை மாய்த்துக்கொள்கிறான்! காந்தி சும்மா அதிகமாக வேசம் போட்டார். நிஜமாகவே எண்ணிச் சொன்னேன். பிறகு  மாற்றிக் கொள்ள வேண் டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஆந்திராவில் முதலில் நேரு வீரம் பேசினார். நாலு இரயிலைக் கவிழ்த்து இரண்டு தண்டவாளத்தைப் பிடுங்கினார்கள். உடனே மரியாதையாக அவரே போய்ப் பிரித்துக் கொடுத்தாரே!

ஜின்னா சாயுபு எப்படி பாகிஸ்தான் - தனிநாடு வாங்கினார்? காந்தியார் சொன்னார் என் பிணம் கடலில் மிதந்தபிறகுதான் முஸ்லிம்களுக்கு நாடு என்று! பிறகு ஜின்னா வீட்டுக்குத் தேடிப்போய் வெள்ளித்தட்டில் வைத்தல்லவா கொடுத்தார்கள். இயற்கையின் தத்துவமே அப்படித்தான் வரிசையாகப் போகும். முடிய வில்லை என்றால் அது திரும்பிவிடும். இப்போது ஜனநாயக நாடுகளில் நடப்பதைப் பார்க்கிறோமே! பர்மாவிலே (மியான்மர்) என்ன நடந்தது? 8 மந்திரிகளை சீவித் தள்ளினார்களே என்ன ஆயிற்று?

இப்போ இங்கே பார்ப்பார நாயகம். சாதிநாயகம். மத நாயகம், அப்புறம் இரண்டு எலெக்ஷனுக்குப் (தேர்தல்) பிறகு அரிவாள் நாயகம்தான்! அதில் சந்தேகமேயில்லை. அப்படிப்பட்ட நிலைமை வருவ தற்கு  முன்னால் நாம் பிரிந்து நம்மைச் சரிப்படுத்தி ஒழுங்கு முறை கைக்கொள்ள வேண்டும்.

சாதி, மதம், இவையெல்லாம் ஒழிந்தால்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். சாதிக்கு முதல் முட்டு கடவுள். இரண்டாவது மதம். இந்த இரண்டையும் அசைத்தால் எல்லாம் தீர்ந்தது. மூன்றாவது சாஸ்திரம்; நாலாவது அரசாங்கம். இந்த நான்கையும் பிடுங்கி எறிந்தால்  அதுதானே சாய்ந்து விடும்! பொத்தென்று விழுந்துவிடும்; அது சாய்ந்தால் நாம் உருப்படியாக ஆகிவிடுவோம்.

14-11-1958 அன்று மண்ணச்சநல்லூரில்

பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு

(விடுதலை 27-11-1958)

- விடுதலை நாளேடு, 19.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக