வெள்ளி, 20 ஜூலை, 2018

இந்து மதமே நம்மை தீண்டாதார் ஆக்கியது


25.10.1931 - குடிஅரசிலிருந்து....

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப் படுவதற்கும், தீண்டாதவர் களாய் நடத்தப்படுவதற்கும் முக்கிய காரணமென்ன என்பதை யோசித்துப்பாருங்கள், வெள்ளைக் காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீன, ஜப்பான் காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ்ஜாதியாராகவும் நடத்து கின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப் பட வேண்டும்? நாமும் ஏன் வெகு காலமாகவே அதற்கு இணங்கி நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும்? என்பன, போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவனாவது, முகமதியானாவது நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின் றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பௌத்தர் களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார்  நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள்.

நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள் தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள்? என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல மற்றெதற்காக என்றால் நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும் நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து எல்லோரும் இந்துக்கள் என்றும் இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை, பெரிதும் வேறு நாட்டாரும் வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பௌத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லு கின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும் சுயமரியாதையே பிரதானமானதினாலும் அவர்களையாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே புத்தி கற்பித்து விடுவார்கள். ஆதலால் நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் இந்து என்னும் மதம் தான் நம்மை தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய வேறு எந்தக் காரணத்திலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா?

ஆகவே நம்மில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான் பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகுகால மாக நமது முன்னோர்கள் காலந்தொட்டு நாம் சண்டாளப் பறையராய் தீண்டாதாராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன்மூலம் நாமே நம்மைத் தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக் கின்றோம். அப்படி இருக்க இன்றுநாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?

 

கழுதைக்கும் எருமைக்கும் 1000 வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது... மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்தச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

 

பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்ற வனல்ல; ஒழுக்கக் கேடானவனல்ல; சூழ்நிலை, சற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கியனாகவும் மடையனாகவும் ஆகின்றான்.          - தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 13.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக