பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

சனி, 24 டிசம்பர், 2022

நான்யார்?



  December 24, 2022 • Viduthalai

தந்தை பெரியார்

நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.

(‘விடுதலை’, 15.7.1968)

* எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசி யலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத் தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம் போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

(‘விடுதலை’, 8.9.1939)

* அரசர்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும், மக்களுடைய சுயமரி யாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றவன் நான். 

அரசர்கள் மாத்திரமல்லாமல் பணக்காரர்கள், குறுநில மன்னர்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள்கூட, மக்களை  அரித்துத் தின்னும் புழுக்களானதால், அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும்கூடச் சொல்லுகின்றவன் நான்.

(‘குடிஅரசு’ 6.10.1935)

* மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவுவாதி களாக ஆக்க வேண்டுமென்பதிலும் எனக்கு 1925-ஆம் ஆண்டு முதலே உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு.

. (‘விடுதலை’, 12.10.1967)

* நான் மறைந்துநின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒருசமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்தச் சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயே தான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.

(‘குடிஅரசு’ 24.11.1940)

* என்னைப் பொறுத்தவரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்.

(‘விடுதலை’, 1.6.1954)

* எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆத ரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.   (‘விடுதலை’, 2.10.1967)

* நான் என் ஆயுள்வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்க மாட்டேன்.      (‘விடுதலை’, 15.10.1967)

* நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக் களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்று தான் நான் தொண்டாற்றுகிறேன். ஆனதாலே நம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்களையும், நம் சமுதாய முன் னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக் கூடிய ஆட்சியாள ரையும் சமுதாயத்தின் நலனைக் கருதியே ஆதரிக்கிறேன்.   (‘விடுதலை’, 18.7.1968)

* நான் அரசியல், மதத்துறையின் பேரால் யோக் கியமற்ற - மூட - சுயநல மக்களால் வெறுக்கப்பட்டவன்; துன்பப் பட்டவன்; நட்டப்பட்டவன்; மானத்தையும் பறி கொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்.

(‘விடுதலை’, 14.11.1967)

* இன்றையச் சுதந்திரத்திற்கு, “முதன் முதல் நானா கவே சிறைக்குப் போகிறேன்” என்று இந்த நாட்டில்,  ஏன் இந்தியாவிலேயே சிறைக்குப் போனது நானும் என் குடும்பமும் தானே. (‘விடுதலை’, 29.1.1968)

* எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த் துமே வந்திருக்கின்றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற் காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.         (‘விடுதலை’, 4.3.1968)

* ஒரு சமயம் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும்படி சமாதான மாநாடு கூட்டி, காந்தியாரிடம் சங்கர நாயர், கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டுப் பிறகு சமாதானம் பேசலாம் என்று கேட்டபோது, காந்தியார் சொன்னார்: “கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது தமிழ்நாட்டிலே ஈ.வெ.ராமசாமி அவர்களின் மனைவி, தங்கை ஆகிய வர்கள் கையில் உள்ளது” என்று. அந்த அளவுக்கு நானும் எங்கள் குடும்பமும் காந்தியாரின் லட்சியங் களுக்காகச் சிறை சென்றவர்கள்.                                                    

(‘விடுதலை’, 28.10.1968)

* என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரி யும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன். (‘குடிஅரசு’ 25.8.1940)

* நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசியமில் லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு  நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.   (‘விடுதலை’, 20.1.1969)

* நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப் பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுப விக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இந்த இழிசாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்.

(‘குடிஅரசு’ 1.5.1948)

* “தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக் கொடு” என்றார் காந்தியார். அப்போது நான், “கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப் படுத்தும் இழிவுக் குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கி யமே தவிர, தண்ணீரல்ல” என்றேன். (‘விடுதலை’, 9.10.1957)

* இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது? நம் பின் சந்ததிக ளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது? இந்தத் தலை முறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண்டாமா? இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ் நாள் முழுவ தையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வந்திருக்கிறேனே ஒழிய முட்டாள் தனமல்ல; துவேச முமல்ல.  (‘விடுதலை’, 17.11.1957)

* ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் ஜாதிக் காரன் மேல் துவேசம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிர காரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக்கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா?

(‘விடுதலை’, 25.10.1961)

* இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடு பட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்ப வர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.  (‘விடுதலை’, 4.11.1961)

* தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள் தான் எனக்குக் கண்வலியாய் இருப்பவர்கள், அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம். (‘விடுதலை’, 15.10.1967)

* எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத் தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்றுபட்டபடி நடவுங்கள் என்பதேயாகும். (‘குடிஅரசு’ 24.11.1940)

* மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண் டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை. (‘குடிஅரசு’ 7.8.1938)

* என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக்களைப்போல் சரிசமமாக வாழவேண்டும்-அறிவிலே முன்னேற வேண்டும் என்பதற்குத்தான்.

(‘விடுதலை’, 24.7.1968)

* எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுய நலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.

(‘விடுதலை’, 15.1.1955)

* யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளிருந்தால் போதும். மற்றப் பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.  (‘விடுதலை’, 27.7.1958)

* என் கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா?  அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப் படுகிறதா? அல்லது இழிதாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப் பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம்.(‘விடுதலை’, 28.9.1958)

* நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னு டைய 10-ஆவது வயதிலிருந்தே நாத்திகன். ஜாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர் களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என் பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத் துக்கு மதிப்புக் கொடுத்தவனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத் தையோ காட்டியிருக்கமாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந்தாலும் பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன். இப்படிப் பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோ தமோ, குரோதமோ கொள்ளவேண்டும். நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரி கத்திற்கும் கொண்டுவரவேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

அப்படி இல்லை என்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத் திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமா னால், நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும். (‘விடுதலை’, 1.1.1962)

* நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு) மயமாக வேண்டும் என்பதற்காகவே உயிர் வாழ்பவன்.

(‘விடுதலை’, 2.9.1967)

* எனக்கு மக்கள் நலம்தான் இலட்சியம்.

(‘விடுதலை’, 15.10.1967)

* நான் பதவிவேட்டை உணர்ச்சிக்காரன் அல்ல. சமுதாய வெறி உணர்ச்சி கொண்டவன் ஆவேன்; நாளைக் கும் சமுதாய நலத்தை முன்னிட்டு எதையும் துறக்கவும், எதையும் செய்யவும் காத்திருக்கிறேன்.

(‘விடுதலை’, 2.5.1968)

* எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்று மில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை-சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால், இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும்-மருத்துவமனைக்கும் வழங் கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து, (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.

(‘விடுதலை’, 8.8.1968)

* என்னைப் பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும் தமிழர்பற்று உடையவர் என்று கருதினால்,  நான் அவருக்கு அடிமையே ஆவேன். குணம் குடிகொண்டால் உயிர்க்கு உயிர்தான். இல்லா விடில் அவர் யாரோ என்று கருதுகிறவனாவேன்.

(‘விடுதலை’, 15.9.1968)

* நாதசுரக் குழாயாக இருந்தால் ஊதியாக வேண்டும் தவுலாயிருந்தால் அடிப்பட்டுத்தானாக வேண்டும்; என்பது போல்-எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரையில் பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.   (பெ.சி. மிமி;  794)

* பழைமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாகக் காணப்படுகிறது. நானோ பழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகுபேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

(‘குடிஅரசு’ 2.8.1936)

* நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண் டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பும் அல்ல.  இதுதான் எனது நிலை.

(‘குடிஅரசு’ 25.3.1944)

* என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத் துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன்.

(‘விடுதலை’, 9.3.1956)

* நான் எனது கொள்கைக்கு-பேச்சுக்கு எந்த மேற் கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமையாகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதரவாக இன்ன இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல்லாது இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார். ஆகவே நானும் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது.       (‘விடுதலை’, 26.2.1961)

* ஒரு பகுத்தறிவுவாதி என்கின்ற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்க ளுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி யடையச் செய்வது எதுவோ அதைப்பற்றியே பேசுவேன்.  (‘விடுதலை’, 20.4.1965)

* எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஓர் இயக்க சம்பந்த மான நட்புத் தவிர மற்றபடி உலக வழக்கமான நட்பு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படிச் சொல்லுகிறேன் என்றால், அநேக துறைகளில் மக்கள் அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர்நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கதிதான்.

(‘குடிஅரசு’ 6.12.1936)

* சாதாரண மொட்டை மரம் போன்றது என்னு டைய வாழ்க்கை. காய், பழம், பிஞ்சு இருக்குமானால் அம்மரத்தில் யாரும் கல்லெறியாமல் பாதுகாக்க வேண் டியது அவசியமாகும். அப்படியும் எனக்கு என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை. எதற்கும் கவலையற்ற எனக்கு யாரிடமும் பயமில்லை; தயவு வேண்டுமென்ற விருப்பமும் இல்லை.

(‘விடுதலை’, 3.2.1958) 

* பேச்சு என்றால் சிலர் அழகுக்குப் பேசுவார்கள்; சிலர் அலங்காரத்திற்காகப் பேசுவார்கள்; மக்கள் சிரிக்க வேண்டும்-கைதட்ட வேண்டும் என்று சிலர் பேசு வார்கள். சிலர் தாம் கற்றவைகளை வெளியிடுவதே முக்கியம் என்று பேசுவார்கள்; சிலர் தம் கருத்தை வெளி யிடப் பேசுவார்கள். கடைசியில் சொன்ன ரகத்தினன் தான் நான். (‘விடுதலை’, 3.2.1963)

* நான் சொல்லுகிறவைகளை எல்லாம் நன்றாகக் கேட்டு, நல்லபடி சிந்தித்துப் பார்த்து உங்கள் அறிவிற்கு ஏற்றதாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதன்படி நடவுங்கள் அல்லது தள்ளிவிடுங்கள். நான் கடவுளின் அவதாரம், கடவுள் என்னுள்ளே இருந்து சொல்கிறார் என்றோ, நான் தலைவன், நான் சொன்னபடிதான் நீங்கள் கேட்கவேண்டு மென்றோ உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. (‘விடுதலை’, 3.11.1967)

* ஒரு தாய்  வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக் கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில்-உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தை களுக்கு அளிக்கிற போஜனையைவிட எப்படி அதிகமான போஜனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடு படுவானோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக் களிடமும் காட்டிக்  கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

(‘விடுதலை’, 1.1.1962)

* நான் துறவி. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்கள். எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல; கடவுளும் துரும்பு, வேத சாத்திரங்கள் துரும்பு, ஜாதி துரும்பு, அரசிய லும் துரும்பு. துரும்பு மாத்திரமல்ல; அவைகளை, எல்லா யோக்கியக் குறைவையும் காய்ச்சிச் சுண்டவைத்துப் பிழிந் தெடுத்த சத்து என்று சொல்லுவேன்.   (‘விடுதலை’, 15.10.1967)


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:24 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நான்யார்

சனி, 10 டிசம்பர், 2022

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்


  November 06, 2022 • Viduthalai

-தந்தை பெரியார்

அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் ஹிந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் ஹிந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது விபரம் தெரியாது இருந்த குந்தைகளுக்கும்தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழிய, மற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் ஹிந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான். சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி, இதே ஹிந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடர் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டுமென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னை யில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற் பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூறவேண்டுமானால், இக் காய்ச்சல் மிக “விருலன்ட் பாரத்தில்” அதாவது மிகக் கொடூர மான, வேகமான, ஆபத்துக்கிடமான தன்மையில் வந் துள்ளது என்று கூறுவார்கள். அதே போல் நமது கலாச்சாரத் திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமான, சற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய ஹிந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில், இதே ஹிந்தி கட்டாய பாடமாகக்கூட அல்ல, இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப்பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். 

நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், ஹிந்தியை இஷ்டப்பட்டுப் படிப்பவர்கள் கூட, இஷ்டப்பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம், சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.

எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது ஹிந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக, “இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்” என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர், முதல் முதலாக ஹிந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

“நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரி. மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன். நான் உத்தரவிடுகிறேன் என்றால், மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள். அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும், ஒரு சோமசுந்தர பாரதியாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது” என்று ஆணவத் தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் ஹிந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம் பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன்டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனே! வேறு யாருமில்லை. இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள 

தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார் “இப்போது ஹிந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு ஹிந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானா” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் “இது வெறும் வீம்புதானே, ஹிந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்து விடுவதுதானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறினேன். அதற்கு அவர் சொன்னார்.

“இந்த 40 பள்ளிகளில் கூட ஹிந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானா” என்று கேட்டார். “அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் ஹிந்தி மொழி எடுக்கப்பட்டுவிடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள், எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. 

அந்தத் தேதிக்குள் எடுக்கப்படாவிட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

“இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு ஹிந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்துவிட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே ராஜகோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார். ராஜகோபாலாச் சாரியாரும் “தாளமுத்துவுக்கும், நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோ” என்று அஞ்சி “உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்” என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு ஹிந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களை, அவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம், கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி ஹிந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்! வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலேயிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்துவிட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள். இதுதான் பழைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய ஹிந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்திர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும். உத்தரவு பிறப்பித்தவர்களும், திடீரென்று ஹிந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். ஹிந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்க வில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப் பட்டது, தமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப் பகுதியில் ஹிந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சே பிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாயமாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

“ஹிந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது” என்று இவ்வுத்தரவைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதி இருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக்குப் போவானேன், இஷ்டப்பட்டவர்கள் வேண்டுமானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்.........

தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெச்சலை உண்டாக் கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்தபோது “ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஹிந்தி இஷ்டப்பாட மாக்கப்பட்டது” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா?

“வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் ஹிந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் ஹிந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம். அந்த உத்தரவிற்கு ஆட்சேபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது” என்று பதில் கூறியிருக்கிறார். இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக “ஹிந்தியும் கட்டாய பாடமும்” என்கிற தலைப்பில் வெளி வந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். “வேண்டுமென்றுதான் ஹிந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்பட வில்லை. பொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம். இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட் சேபணை வரவில்லையே. அப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி ஹிந்தியைக் கட்டாயப்படுத்துவது” என்று பதில் கூறியிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆட்சேபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார். அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, “ஹிந்தி கட்டாயமாகத் தேவை” என்று “சுதேசமித்திரன்” ஒரு தலை யங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டது. அதற்கு ஆதாரமாக 

உத்தரவில் “சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்க வில்லை” என்று கூறியிருப்பதைக் காட்டி “கட்டாய ஹிந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது” அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதா? என்று கேட்டிருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்பவர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டுவிடுவதா? நல்லகாரி யத்திற்குக்கூட ஒருசிலர் ஆட்சேபணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்க வில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், “சுதேசமித்திரனுடைய” ஆட் சேபணையைக் கண்டதும், உடனே தம் உத்திரவை மாற்றி விட்டார். மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ்நாட்டி லும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார். முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப் பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டி ருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம் “நாங்கள் ஹிந்தி கட்டாயம் என்று சொல்லவில்லையே” என்பது தான். சர்க்கார் உத்திரவிலும், மந்திரிகள் பேச்சுக்களி லும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் - எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் ‘ஹிந்தியை எங்கு கட்டாயம் என்றோம்’. ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு ஹிந்திய மொழி ஒன்றைத்தானே கட்டாயமாக்கியிருக்கிறோம். இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய ஹிந்தியல்லவே என்கிறார்கள். ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவ தொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, ஹிந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப் படும், சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால், ஹிந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் ஹிந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? ஹிந்தி வாத்தியார்களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப்பானேன்? ஹிந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல்லையா? இதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!
சாகஸப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் “சென்னைச் செய்தி” என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும், கையெழுத்துடனும் வெளிவந்துள்ளது. என்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இப் பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோவையும் காட்டி) ஹிந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு “இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம். எனவேதான் எல்லா ஹைஸ்கூல்களிலும் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு பிறப்பித் துள்ளார்கள்” என்று எழுதியிருக் கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே ஹிந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளைகள் எப்படி ஹிந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் ‘அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா’ என்று மந்திரியார் கேட்கிறார். ‘நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே’ என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்று, நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார். நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயே, அதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு ஹிந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

பார்ப்பனரோடு ஹிந்திப் போட்டி பலிக்குமா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. ஹிந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் ஹிந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர் களைக் கொடுமைப்படுத்தலாமா? என்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 - தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ் நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமேயல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங் கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு, மறந்து போய்விட்டதென்றால், சரிவர கற்க, சரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் எப்படி ஹிந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 14.08.1948

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:35 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஹிந்தியைப் புகுத்த சூழ்ச்சி...

 

  November 13, 2022 • Viduthalai

தந்தை பெரியார்

“என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரி யானால் இந்தியர்களை (ஹிந்தியை மாத்திரமல்லாமல்) சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகப் படிக்கும்படி செய்வேன்” என தோழர் எஸ்.சத்தியமூர்த்தி சாஸ் திரிகள் சென்னை லயோலா காலேஜில் மாணவர்கள் கூட்டத்தில் பேசும்போது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். அதோடு நிற்காமல் அவர் "அதேசமயத்தில் சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் ஏற்படுத்தி விடுவேன்” என்று கூறி இருக்கிறார். இவ்வள வோடு அவர் திருப்தியடைந்தாரா? இல்லை இல்லை.

“காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தி யாவில் ராமராஜ்ஜியமேற்பட்டு விடவேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன்” என்றும் பேசி இருக்கிறார். ஏனென்றால், மக்கள் சமஸ்கிருதம் படித்தால் பிறகு ராமராஜ்ஜியம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்பது அவரது நம்பிக்கை. உண்மையும் அதுதான். ஆங்கிலம் படித்ததால் ஆங்கில நாகரிகம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுவதுபோல் ஆரியம் படித்தால் ஆரிய நாகரிகம் தானாகவே ஏற்பட்டுவிடுமல்லவா? ராமராஜ்ஜியம் என்பது ஆரிய நாகரிகம்தானே. அதனால் அவர் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட்டவுடன் ராம ராஜ்ஜியம் ஏற்பட்டுவிடுமென்று கருதுகிறார். இந்தப்படி கருதி பேசிவிட்டு உடனே, ராமராஜ்ஜியத்திற்கு வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்து “ராமராஜ்ஜியம் என்பது வர்ணாசிரமமுறைப்படி ஒவ்வொருவனும் அவனவன் ஜாதி தர்மப்படி நடந்துகொள்ள வேண்டி யது தான்” என்றும் ராமர் காலத்தில் மக்கள் இந்த வருணாசிரம முறைப்படியே அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்துகொண்டு திருப்தியாய் இருந்தா னென்றும், அதனால் யார் மீதும் யாரும் வருத்தப்பட வில்லை என்றும், யாருக்கும் கெடுதி ஏற்பட்டு விடவில்லை என்றும் சொல்லுகிறார்.

மேலும், அவர் பேசும்போது “ஒரு திராவிட கவியாகிய கம்பர் இதை ஒப்புக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்” என்பதாகவும் சொல்லி தமிழ் மக்களை அந்த ராமராஜ்ஜியத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

(இது 25.7.1939ஆம் தேதி மெயில் பத்திரிகையில் வெளியாயிருக்கிறது)

நமது கருத்து

எனவே, பார்ப்பன ஆட்சி நமக்கு கூடவே கூடாது என்றும் ராமராஜ்ஜியம் என்னும் ஆரிய வருணாசிரம ராஜ்ஜியம் நமக்கு கூடவே கூடாது என்றும் நாம் சொல்லி வந்ததின் கருத்து என்ன என்பது இப்போதாவது உண்மைத் தமிழர்களுக்கு விளங்கி இருக்குமென்று கருதுகிறோம்.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற 4 ஜாதிகளுக்கும் குறித்திருக்கும் யோக்கியதையும், விதித்திருக்கும் கடமையும் யாரும் அறியாததல்ல என்பதோடு பார்ப்பனர் ஒழிந்த மற்ற வகுப்பு மக்கள் எல்லோரும் சூத்திரன் என்ற தலைப்பில்தான் வருகிறார்கள் என்பதை நாம் சொல்லி யாரும் அறிந்துகொள்ள வேண்டிய நிலையில் இல்லை.

நிற்க, ஹிந்தி பாஷையென்பதே ஆரிய பாஷை என்றும், அது சமஸ்கிருதத்தின் மற்றொரு ரூபம் என்றும், அப்பாஷையும் அப்பாஷைகளாலான வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம் இதிகாசம் ஆகியவைகள் தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயமாய் புகுத்தப்படுவதன் மூலம் பரப்பப்பட்டு செல்வாக்கு பெறப்படுமானால் தமிழ் மக்களின் சுதந்திரத்தன்மை வாய்ந்த தமிழும், தமிழ்க் கலைகளும் அழிய நேரிடுவதோடு தமிழரின் சுதந்திரமும், தன்மானமும் அடியோடு இழக்க நேரிட்டு தமிழர்கள் ஆரியர்களுக்கு பரம்பரை அடிமையாக இருக்க நேரிட்டு விடுமென்று கருதியே நாம் ஹிந்தியை எதிர்க்கிறோம் என்று பல தடவை சொல்லி வந்திருக்கிறோம். இதை பார்ப்பனர் களுக்கு அடிமையான பல தமிழ் மக்கள் அதாவது பார்ப்பன கலைகளை நம்பி அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக்கொண்ட தமிழர்களும் அப்படி  எண்ணிக் கொண்டவர் களுமான தமிழர் களும் ஹிந்தியைப் புகுத்துவதால் தமிழ் கெடாது என்றும் தமிழ் கலை அழியாது, ஒழியாது என்றும், தமிழனின் தன்மானத்துக்கும், சுதந்திரத்துக்கும் கேடுவராது என்றும் சொல்லி எதிர்ப்பு பிரசாரம் செய்கிறார்கள். இந்த எதிர் பிரசாரம் செய்பவர்கள் தாங்கள் யார், தாங்கள் எந்நிலையிலிருக்கிறோம், தங்களுக்கு இப்போது எம்மாதிரி சுதந்திரமும் மான உணர்ச்சியும் இருக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பார்களேயானால், நாம் சொல்வது சரியோ தாங்கள் மறுப்பது சரியோ என்பது அவர்களுக்கே நன்கு விளங்கிவிடும்.

எவ்வளவு கேவலமாகக் கருதிக்கொண்டிருக்கிறார்?

ஹிந்தியின் நிலையே இப்படி இருக்கும்போது “இந்தியர்களுக்கு ஹிந்தி மாத்திரமே போதாது; இது ஆச்சாரியார் பங்குக்கு சரியாய் போய்விட்டது; இனி என் பங்குக்கு சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்க வேண்டும். நான் சர்வாதிகாரி ஆன உடன் அதைத்தான் செய்யப் போகிறேன். அப்போதுதான் ராமராஜ்ஜியம் சீக்கிரத்தில் ஏற்படுத்த முடியும்” என்று தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் சொல்வாரேயானால் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் இவர் எவ்வளவு கேவலமாய் கருதிக் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லையா? என்று கேட்கின்றோம்.

இந்திய நாட்டில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் இந்திய நாட்டில் சமஸ்கிருதம் எத்தனை மக்கள் படிக்கிறார்கள் என்றும், சமஸ்கிருதத்தினால் இந்திய நாட்டில் எத்தகைய மக்களுக்கு மாத்திரம் உயர்வு கிடைக்கும் என்றும், இதனால் மக்களின் வாழ்வுக்கோ, ஒழுக்கத்திற்கோ, வீரத்திற்கோ, மானத்திற்கோ ஏதாவது பயன் உண்டா என்றும் ஆலோசிப் போமேயானால் சமஸ்கிருதம் பேசுகிறவர்கள் 1000இல் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள் என்பதும் அதனால் மேன்மை அடைகிறவர்கள் 100-க்கு 3 பேர்களுக்கும் குறைவான வர்களாகவே இருப்பார்கள் என்பதும் அது பார்ப்பனர் தவிர, மற்றவர்களை மிருகத்திலும் கேடான தன் மையில் இழிவுபடுத்துவது என்பதும் தெள்ளென விளங்கிவிடும்.

எனவே, இப்படிப்பட்ட ஒரு அவசியமில்லாததும், கேடுதரக்கூடியதும், செத்துப்பட்டுப் போனதும், யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் உயர்வளிக்கக் கூடியதாய் இருக்கிற ஒரு பாஷையை தனக்கு சர்வாதிகாரம் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு கட்டாயப் பாடமாக ஆக்குவேன் என்று சொல்லுவாரேயானால் இதிலிருந்து தோழர் சத்தியமூர்த்தி அவர்களை மகா தைரியசாலி என்று சொல்லுவதா அல்லது இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற தமிழ் மக்களை தோழர் சத்தியமூர்த்தி சொல்லுவதுபோல் உண்மையான சூத்திரத்தன்மை பொருந்திய இழிகுலமக்கள் என்று சொல்லுவதா? என்பது நமக்கு விளங்கவில்லை.

எப்படி பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள்?

பாஷையாலும், கலையாலும், இயற்கையாலும் வீரம் பொருந்திய சுதந்திரமுள்ள தன்மானக்காரர் களாகிய தமிழ்மக்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற ஒரு கூட்டத்தார் இதை எப்படி பொறுத்துக்கொண்டு சத்தியமூர்த்தி அய்யருக்கு பூர்ண ஆதிக்கம் வரும் படியான சுயராஜ்ஜியத்துக்கு எப்படி பாடுபடத் துணி கிறார்கள் என்பதும், அவர் பின்னால் சூத்திரர் களாய் திரிந்து வயிறு வளர்க்கிறார்கள் என் பதும் நமக்கு மிக மிக அதிசயமாக இருக்கிறது.

எந்த முறையில் இந்நாட்டில் சமஸ்கிருதம் புகுத்தப்பட்டாலும் அது கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு கேட்டையும் இழிவையுமே உண்டாக்குமென்பதற்கு எத்தனையோ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.

சமஸ்கிருதப் புராணங்கள் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு இருக்காவிட்டால், நமது பண்டிதர்கள் அந்தப் புராணங்களை தமிழர்களின் இடையில் பிரசாரம் செய்து ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கா விட்டால் தமிழ்நாட்டில் இந்த தன்மான எழுச்சியான இக்காலத்தில் ஆரிய சமயத்துக்கும், ஆரியக் கடவுள்களுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும் இவ்வளவு மதிப்பும் இவ்வளவு தமிழர் அடிமைகளும் ஏற்பட்டு இருக்கமுடியுமா? என்று கேட்பதோடு ஆரிய பாஷை, ஆரியக் கலை வேண்டாம் என்று சொல்லும் தமிழ்ப் பண்டிதர்கள், உண்மைத் தமிழர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்கள், ஆரிய கலைகளை தங்கள் கலைகள் என்றும், ஆரியக் கடவுள்களை தங்கள் கடவுள்கள் என்றும், இவற்றை ஆரியர்கள் திருடிக் கொண்டார்கள் என்றும் சொல்லிக் கொண்டாடி இராவிட்டால் இப்படிப்பட்ட இழிவுநிலை ஏற்பட்டிருக்குமா என்றும் கேட்கின்றோம்.

மற்றும் ஆரிய புராணக் கதைகளை கம்பனைப் போன்ற சில குலத்துரோகப் பண்டிதர்கள் தமிழில் மொழிபெயர்த்து, அதன் மூலம் ஆரியர்களுக்கு தங்களை சற்சூத்திரராக ஆக்கிக்கொண்டு வயிறுவளர்க்க ஆசைப்பட்ட இழி தன்மையே தோழர் சத்தியமூர்த்தியாரை அவ்வளவு தெளிவாகப் பேசச் செய்தது என்று சொல்லுவோம்.

சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கினால்?

ஆகவே, இப்பண்டிதர்கள் செய்து கொடுத்த புராண மொழிபெயர்ப்புகளே இன்று தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் இவ்வளவு கேடுகளை உண்டாக்கி இருக்கும் போது இனி தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சொல்வதுபோல் சமஸ்கிருதத்தை அதாவது அவற்றின் மூலத்தையே இந்தியர்களுக்கு கட்டாயப் பாடமாக ஆக்கிவிட்டால் எல்லா தமிழனும் தங்கள் முன்னோர்கள் ஆரியர்கள் தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைய ஆசைப்படுவான் என்பது மாத்திரமல்லாமல் இந்தி யர்கள் என்கின்ற முறையில் முஸ்லிம்களுங்கூட “எங்கள் முன்னோர் களும்கூட ஆரியர்கள்தான்” என்று சொல்லிப் பெருமை அடையவேண்டிய அள வுக்கு வந்து விடக்கூடும் என்பதில் அதிசயமொன்றும் இருக்காது.

தமிழ்நாடு தமிழருக்கு என்கின்ற வீரச் சொல்லானது காரியத்தில் வெற்றி பெறவேண்டுமானால் பார்ப் பனர்களின் இந்த உள் எண்ணத்தை அறிந்த பிறகாவது சமஸ்கிருத சம்பந்தத்தையும் அதற்கு வழிகோலியான ஹிந்தியையும் இவ்விரண்டையும் கட்டாயமாகப் புகுத்த சூழ்ச்சி செய்யும் ஆரிய சமய சம்பந்தத்தையும் ஆட்சியையும் அடியோடு வெறுத்து ஒதுக்கி தள்ளி உண்மைத் தமிழர்களாக வாழ ஆசைப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

தோழர் ஆச்சாரியார் ஹிந்தியை புகுத்துவதற்குச் சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று - ஹிந்தி படித்தால் சமஸ்கிருதம் சுலபமாகப் படிக்க வரும் என்று சொன்னது யாவருக்கும் ஞாபகமிருக்கும்.

இப்பொழுது தோழர் சத்தியமூர்த்தியார், ஆச் சாரியார் சர்வாதிகாரத்தில் ஹிந்தியைப் படியுங்கள்; என் சர்வாதி காரத்தில் சமஸ்கிருதத்தைப் படியுங்கள் என்று சொல்லத் துணிந்துவிட்டார். தமிழர்களுடைய கோழைத்தனமும் எதை விற்றும் வயிறு வளர்த்தால் போதும், பதவி பெற்றால் போதும், விளம்பரம் பெற்றால் போதும் என்கின்ற சூத்திரத் தன்மையான இழி தன்மையும்தான் தமிழுக்கு, தமிழர்களுக்கு இந்த நிலையை கொண்டுவந்து விட்டது என்பதைக் கூசாமல் கூறுவோம்.

 குடிஅரசு - தலையங்கம் - 30.07.1939

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:58 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

தீபாவளி தத்துவமும்-இரகசியமும்: மாணவர்கள் உரையாடல்!


  October 23, 2022 • Viduthalai

தீபாவளி பற்றி சித்திரபுத்திரன் (தந்தை பெரியார்) எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலைக் கீழே தருகிறோம். பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியை படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு. சைவர்கள் என்பவர்கள்கூடக் கொண்டாடுகிறார்களே! அது இன்னும் பெரிய வெட்கக்கேடு. எல்லோருமே இதைப் பார்க்கட்டும்!                       (ஆ-ர்).

டேவிஸ்: டேய், ராமானுஜம்... எங்கடா போகிறாய்?

ராமானுஜம்: எங்குமில்லை பிரின்ஸ் பாலைப் பார்த்து எனக்கு இரண்டு நாள் லீவ் கேட்கப் போகிறேன்.

டேவிஸ்: எதற்கு லீவு?

ராமா: 21ஆம் தேதி பண்டிகை லீவு, 22ஆம் தேதி சனிக்கிழமை 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலேஜ் இல்லை. இன்னும் ஒரு இரண்டு நாள் அதையொட்டி லீவு கிடைத்தால் ஊருக்குப் போய் 5 நாள் சாவகாசமாய் இருந்துவிட்டு வரலாம் என்று கருதி இன்னும் இரண்டு நாள் லீவு கேட்கிறேன்.

டேவிஸ்: என்ன பண்டிகை?

ராமா: தீபாவளிப் பண்டிகை

டேவிஸ்: தீபாவளி என்றால் அது ஒரு பண்டிகையா?

ராமா: ஆம்.

டேவிஸ்: அதற்காக எதற்கு?

ராமா: பண்டிகை கொண்டாடு வதற்கு.

டேவிஸ்: எப்படிக் கொண்டாடுவது?

ராமா: அதிகாலையில் எண்ணெய் தேய்த்து முழுகி புதிய உடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு பட்டாசு சுடுவது.

டேவிஸ்: குளித்து முழுகி புதிய உடை அணிந்து பட்டாசு சுடுவது ஒரு பண்டிகையா? இதற்காக நீ ஊருக்கு போக வேண்டுமா அதை அனுசரித்து சனி, ஞாயிறு வருவது போதாமல் மேற்கொண்டு இரண்டு நாள் தேவையா? இதென்னப்பா, நாட் களைக் கொலை செய்யும் பண்டிகை யாக இருக்கிறதே? லீவுக்கு கேள்வி கேட்பாடு இல்லையா?

வாரத்துக்கு சனி, ஞாயிறு லீவு; வருடத்தில் 2,3 மாதம் வெயில் கால லீவு. வருடத்தில் 15 நாள் ஜனவரி லீவு. பிறகு காஷுவல் லீவு. இவை போன்று என்னென்னமோ லீவு. இந்த 2,3 மாதத்தில் பல லீவுகள்! போதாக் குறைக்கு நாணயமாற்று லீவு! இப்படியே நாட்கள் பாழாகின்றன. நமக்கு படிக்கும் நேரமோ ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தான் தேறுகிறது. அப்படித் தேறும் நாட்களில் இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் நாட்கள் பாழாகின்றன அன்னிய ஆட்சி போய் சுய ஆட்சி வந்துகூடவா இந்தத் தொல்லை? நாட்களெல்லாம் இப்படி லீவு ஆகிவிட்டால் அப்புறம் படிப்புத் தான் எப்படி வரும்?

ராமா: நீ என்னப்பா! தீபாவளி வருஷத் துக்கு ஒரு நாள் பண்டிகையாக வருகிறது. அதுகூடஉனக்குப் பொறுக்க வில்லையா? மனிதனுக்கு ஓய்வு வேண்டாமா?

டேவிஸ்: வருஷத்துக்கு ஒரு நாளாக ஒவ்வொரு நாளும்தான் வருகிறது; அதற்காக எல்லா நாளும் லீவு விடுவதா? ஓய்வுக்கு என்ன குறை; சனி ஞாயிறு போதாதா?

ராமா: சனி ஞாயிறு நமக்குப் போதும். வீட்டிலே குடும்பத்துடன் கொண்டாட ஒரு ஓய்வு நாள் வேண்டாமோ? சனி ஞாயிறு களில் வீட்டில் உள்ளவர்கட்கு ஓய்வு ஏது?

டேவிஸ்: என்ன ஓய்வோ, என்ன கொண்டாட்டமோ, எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்தப் பண்டிகைகளின் பேரால் வேலை நாட்கள் பாழாகின்றன.

ராமா: நீ என்ன கருப்புச் சட்டைக் காரன்போல் தோன்றுகிறது. பண்டிகை களை இப்படி வெறுக்கிறாயே!

டேவிஸ்: கருப்புச் சட்டை இல்லை; ஒரு இழவும் இல்லை. என்ன பண்டிகை இது? நாசமாய்ப் போன பண்டிகைகள், இப்படி மாதா மாதம் வந்து உயிரை வாங்கு கின்றனவே.

ராமா: அப்படிச் சொல்லாதே; பண்டி கைகள் எல்லாம் மத சம்பந்தமானவைகள். நாம் மதத்தைச் சார்ந்தவர் களாகவும், கடவுள் நம்பிக்கை உடையவர் களாகவும் இருந்தால் இந்த மாதிரி பண்டிகைகளைக் குறை கூறக் கூடாது. மனிதனுக்கு மதமும் கடவுளுந்தான் முக்கி யமே ஒழிய இந்தக் கல்லூரிப் படிப்பு முக்கியமான தல்ல. இந்தப் படிப்பு என்பதெல்லாம் மதத்தை சரிவர பின்பற்றி கடவுளை சரிவர அறிந்து பக்தி செய்யத்தான். ஆதலால் இப்படி எல்லாம் பேசாதே.

டேவிஸ்: என்னப்பா பூச் சாண்டி காட்டுகிறாய்? பண் டிகை எதற்கு என்றால் லீவுக்கு என்கிறாய்! லீவு எதற்கு என்றால் குடும்பத்தோடு ஓய்வுபெறத்தான் என் கிறாய்! படிப்பு கெட்டு விடுகிறதே என்றால் மதத்துக்காகவும், கடவுளுக்காகவும் பண்டிகை கொண்டாடுவதாகச் சொல்லிக் கொண்டு, இதைத் தவறு என்று சொன் னால் என்னைக் கருப்புச் சட்டைக்காரன் என்கிறாய்! முடிவாக படிப்பைவிட மதம் கடவுள்தான் பெரிது அதற்காகத்தான் படிக்கிறது என்கிறாய்! இது என்ன சமாதானம்? மேலும் ஒரு மனிதன் பிறக்கும் போதே மதம் அவன் கூடவே பிறக்கிறது கடவுளும் ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பு இருந்தே அவன்கூடவே இருந்து அவன் சாகும்வரை அவனை நடத்துகிறது இந்த இரண்டு கெட்டியான சங்கதிக்கு ஒரு மனிதன் படிக்க வேண்டியது எதற்கு? அதுவும் காலேஜில் படிக்க வேண்டியது எதற்கு? அப்படியானால் காலேஜிலே படிக்காதவர்களுக்கெல்லாம் மதம் கடவுள் அறிவும்பக்தியும் இல்லை என்றும் வராது என்றுமா சொல்லுகிறாய்?

ராமா: நீ கருப்புச் சட்டைக்காரன்தான் சந்தேகமில்லை உன்னோடு பேசிப் பயனில்லை!

டேவிஸ்: கோபித்துக் கொள்ளாதே. உன் பண்டிகையை அறிய வேண்டுமென்று தான் கேட்டேன். சங்கதி எங்கேயோ போய் விட்டதே தீபாவளி என்ன பண்டிகை? எதற்காகக் கொண்டாடுவது? மதத்தை எப்படி அறிந்திருக்கிறாய்? அதில் கடவுள் பக்தி எப்படி ஏற்படுகிறது? சொல் பார்ப்போம்.

ராமா: அப்படிக் கேள் சொல்கிறேன்.

தீபாவளி என்பது உலகத்துக்கு கேடு விளைவித்த ஒரு அசுரன் கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண் டாடுவதாகும். அதை நீயும் கொண்டாட லாம். இப்பொழுது வெள்ளையன் ஒழிந்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண்டாடவில்லையா? அதுபோல.

டேவிஸ்: அப்படியா? அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய் தான்? அந்தக் காலத்தில் அணுக்குண்டு இருந்திருக்காதே? இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும் இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்னென்னவோ கேடு செய்கிறவர்களை யும்பற்றி நாம் ஒன்றுமே பேசுவ தில்லை; அப்படியிருக்க அந்த அசுரன் யார்? அவனென்ன கேடு செய்தான்?

ராமா: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து தேவர்களின் பெண்களுக்கும் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்று விட்டார்கள்.

இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக் கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டேவிஸ்: தெரிந்தது. ஆனால் அதை விளக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் ஆசைப்படுகின்றது. அதா வது அவன் மகா விஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண், கல் உருவத்தில் இருந்தே மகாவிஷ்ணுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ராமா: அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய்க் கலவி செய்வார்? அதற்கு அவருக்கு மனைவிகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்ய வில்லை. மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டேவிஸ்: பொறு! பொறு! இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை மகா விஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்?

ராமா: அதுவா! சரி சொல்கிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

டேவிஸ்: பொறு! பொறு! ஓடாதே இங்கே எனக்கு ஒரு மயக்கம்!

ராமா: இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாக சொல்லு கிறேனே!

பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று. 

டேவிஸ்: சரி! அது அருத்தமாச்சுது.

ராமா: பின்னை எது அருத்தமாக வில்லை? சும்மா தொல்லை கொடுக் கிறாயே!

டேவிஸ்: தொல்லை ஒன்றுமில்லை, உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது. தலை சுற்றுகிறது அதாவது ஒரு இராட்சதன் அப்படியின்னா என்ன? அது கிடக் கட்டும். அவன் பெயர் இரண்யாட் சதன். அதுவும் போகட்டும். அவன் கதையை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படி சுருட் டினான்? பூமிதான் பந்து போல இருக் கிறதே? அவன் அதை சுருட்டுவ தானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே தவிர சுருட்ட முடியாதே? அதுவும் போகட்டும் சுருட்டினான் என்கிறாய். சுருட்டினான் என்றே வைத்துக் கொள்வோம்.

சுருட்டினானே அவன் சுருட்டும் போதுதான் எங்கே இருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே எதன் மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்து கொண்டே சுருட்டியிருக்கலாம். ஆகாயத்தில் பறந்து கொண்டே ஓடியி ருக்கலாம். கருடன் மகாவிஷ்ணு வையும், அவன் பொண்டாட்டியையும் தூக்கிக் கொண்டு பறப்பதுபோல் பறந்திருக்கலாம்.

ஆனால் அவன் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்கிறாயே அந்த சமுத்திரம் எதன்மேல் இருந்தது? பூமியின்மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டோ அல்லது பறந்து கொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே அது ஒழுகிப் போய் இருக்காதா? அப் போது அடியில் ஒளிந்துகொண்டிருப் பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரிய வேயில்லையே? இதை எனக்கு புரிய வைக்க வேண்டும். நானும் நீயும் பி.ஏ. 2ஆவது வருஷம் பூகோளம், வான நூல், சைன்ஸ் படித்தவர்கள். ஆதலால் இந்த சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை; சற்று விளங்கச் சொல் பார்ப்போம்.

ராமா: இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம் சாஸ்திரங்களில் உள்ள விஷயம், மத தத்துவம்! ஆனால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக் கூடாது. நாஸ்திகர்கள் தான் இப்படிக் கேட்பார்கள் கருப்புச் சட்டைக் காரர் கள்தான் இப்படிக் கேட்பார்கள் இத்தனை ஆயிரம் காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்களே ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா?

இந்து மகாசபையில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? சோஷியலிஸ்ட்களில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? இந்திய கம்யூனிஸ்ட்களில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? நீதான் இப்படிக் கேட்கிறாய் நீ கருப்புச் சட்டைக்காரன் தான் சந்தேகமில்லை.

டேவிஸ்: நீ என்னப்பா இப்படி பேசறே, பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லையே! பூமிக்குப் பிறந்தான் என்கிறாய் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய், எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு எப்படி போனான் என்றால் கோபித்துக் கொள்கிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்து கோடிக் கணக்கான மக்கள் கொண் டாடுகிறார்கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதை விட்டு தெரு சுற்றுகிறதுகள்! இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னை கருப்புச் சட்டை என்கிறாய்.

கருப்புச்சட்டை போடாதவனுக்கு புத்தியே இருக்கக் கூடாதா? புத்தி கருப்புச் சட்டைக்குத்தான் சொந்தமா? சரி! அதிருக் கட்டும் அப்புறம் அவன் ஓடிப்போய் சமுத் திரத்தில் ஒளிந்து கொண்டான்! அப்புறம்?

ராமா: ஒளிந்து கொண்டதும் பூமியில் இருந்தவர்க ளெல்லாம் போய் மகா விஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

டேவிஸ்: இரு! இரு! பூமியைச் சுருட்டின போது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட் டார்களா? நோட்டீஸ் கொடுத்து விட்டுத் தான் சுருட்டினானோ?

ராமா: நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே; ஓடிப் போய் முறையிட்டார்கள் என்றால் எப்படிப் போனார்கள், வெங்காயம் வீசை என்ன விலை, கருவாடும் கத்தரிக்காயும் குழம் புக்கு நல்லாயிருக்குமோ? என்பது போன்ற அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விகளை முட்டாள்தனமாகக் கேட்கிறாயே?

டேவிஸ்: இல்லை, இல்லை கோபித்துக் கொள்ளாதே சரி! சொல்லித் தொலை! முறையிட்டார்கள்! அப்புறம்?

ராமா: முறையிட்டார்கள். அந்த முறையீட்டுக்கு இரங்கி பகவான் மகா விஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத் தினிடம் வந்தார்.

பார்த்தார் சுற்றி. எடுத்தார் பன்றி அவதாரம், குதித்தார் தண்ணீரில். பாய்ந்தார் நிலத்துக்கு, கண்டார் பூமியை தன் கொம்பில் அதை குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித் தார் பூமிப் பாயை; புரிஞ்சுதா.

டேவிஸ்: புரியாட்டா கோபித்துக் கொள்கிறாய் அதிகப் பிரசங்கி என்கிறாய் சரி புரிந்தது. விரித்தார் பூமியை பிறகு என்ன நடந்தது?

ராமா: பிறகா; பூமியை விரித்தவுடன் அந்த பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்தது. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்து விட்டான். அப்புறம் சொல்ல வேண்டுமா, கலந்தார்கள் பிறந்தது பிள்ளை.

டேவிஸ்: சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன்; கோவிச்சுக்காதே.

ராமா: சரி கேள்.

டேவிஸ்: வராகம் என்பது பன்றி அது ஒரு மிருகரூபம் சரிதானா?

ராமா: சரி.

டேவிஸ்: பூமி கல் மண் உருவம் சரிதானா?

ராமா: சரி.

டேவிஸ்: இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?

ராமா: பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?

டேவிஸ்: என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாயபுமாதிரி பாத்தியா கொடுக்கிறே! இது பெரிய ஒரு சைன்ஸ்! ஸெக்சுவல் சையன்சு சங்கதி; இதைக் கேட்டால் போக்கிரிதனமான கேள்வி என்கிறாய். சரி. இதைபற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராமா: அந்தப் பிள்ளைதான் நரகாசுரன்.

டேவிஸ்: இந்தப் பெயர் அதற்கு யார்? இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராமா: யாரோ அன்னக்காவடிகள் இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய், எனக்கு அவசரம் நான் போக வேண்டும் என்னைவிடு.

டேவிஸ்: சரி போகலாம் சீக்கிரம் முடி அப்புறம்?

ராமா: அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்ததான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

டேவிஸ்: அடபாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர் களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர் கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ராமா: இல்லேப்பா. இந்த நரகா சூரனின் பொல்லாத வேளை, தேவர்கள் கிட்டே இவன் வாலாட்டினால் அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா?

டேவிஸ்: அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்தி சொல்லாமல் ஒரே அடி யாகக் கொன்றுவிடுவதா?

ராமர்: அது இவர் இஷ்டம், அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர்கயவர் அவருந்தான் மேவன செய்தொழுக லான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம் அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

டேவிஸ்: சரி கொன்றார் அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராமா: அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது என்பதுதான்.

டேவிஸ்: தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராமா: வானதேவர்கள் வானத்தில் (மேல் உலகத்தில்) இருக்கிறார்கள்; பூ தேவர்கள் இந்தப் பூமியிலே இருக் கிறார்கள்.

டேவிஸ்: இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராமா: அட முட்டாள்! அது கூடவா தெரியாது? அது தான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே? அகராதியைப் பார்.

டேவிஸ்: பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?

ராமர்: என்ன வகுப்பா நாங்கள் தான்!

டேவிஸ்: நீங்கள் என்றால், நீ அய்யங்கார், அய்யங்கார் தாசனா?

ராமா: நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலி யோர்கள்.

டேவிஸ்: அப்படியெனில் பார்பனர்கள் யாவருமே பூதேவர்கள் என்கிறாய்?

ராமா: ஆமாம்! ஆமாம்! கல்லாட்டமா ஆமாம்!

டேவிஸ்: சரி, தொலைந்து போகட்டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களைப் பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டுமா?

ராமா: இங்கேயா அசுரர், ராட்சதர் இல்லை என்கிறாய்? இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள், சு.ம.-க்கள், திராவிடர் கழகத்தார்கள் என்கிறார்களே அவர்களெல்லாம் வேறு யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படு கிறவர்கள், குறை கூறுபவர்கள்; அவர் களைப் போலவே வாழ வேண்டு மென்பவர்கள் வேத சாஸ்திர புராண இதிகாசங்களை பகுத்தறிவால் ஆராய்ச்சி செய்பவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராட்சதர்கள்! இரக்கமே இல்லாத அரக்கதர்கள்தாம்! தெரிந்ததா? அவர்களுக்கு பயம் உண் டாவதற்காக தேவர்களுக்கு இடையூறு செய் தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று அறிவுறுத்துவதற் காகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும். இது தான் இரகசியம், மற்ற மூன்று கதை எப்படி இருந்தால் என்ன?

டேவிஸ்: அப்படியா நீங்கள் நூற் றுக்கு மூன்று பேர்; நீங்கள் அல்லாத வர்கள் நூற்றுக்கு 97 பேர். இப்படி எத்தனை நாளைக்கு மிரட்ட முடியும்?

ராமா: அதைப்பற்றிக் கவலைப்படாதே? காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூற்றேழு பேர் களில் ஒரு பகுதி விபீஷணர்களாக, அனுமார்களாக இருந்து பிராமணத் தொண்டறவும் எதிரிகளை ஒழிக்க பயன்படுத்து வதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம், படித்துவிட்டு உத்யோகத் துக்கு காத்துக் கிடக்கும் கூட்டம், கோவில் மனுதர்ம ஸ்தாப னத்தில் இருக்கும் கூட்டம், புத்தக நடைக் கூட்டம் பூசாரிக் கூட்டம், பிரபுக் கூட்டம் பாதிரிக் கூட்டம், உயர் பதவி வகிக்கும் உத்தி யோகஸ்தர் கூட்டம் தாசிக் கூட்டம், சினிமா கூட்டம், நாடகப் பிழைப்புக் காரக் கூட்டம், அரசியல் பிழைப்புக் காரக்கூட்டம் இப்படியாக இடறி விழுந்தால் அவர்கள்மீது விழும்படி சர்வம் பிராமண அடிமையா என்பது போல இருக்கும்போது நூற்றுக்கு மூன்று, நூற்றுக்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

டேவிஸ்: ஓஹோ! அப்படியா? சரி, சரி. தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன். நன்றி வணக்கம்.

ராமா: நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

சித்திரபுத்திரன் என்னும் பெயரில் தந்தை பெரியார் எழுதியது. ‘விடுதலை’ 28.10.1956)


 

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:12 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 24 அக்டோபர், 2022

ஆண் பெண் சமத்துவத்தாலே முன்னேற்றம் ஏற்படும்

 

பெரியார் பேசுகிறார் : ஆண் பெண் சமத்துவத்தாலே முன்னேற்றம் ஏற்படும்

டிசம்பர் 16-31,2021
  December 16, 2021உண்மை

தந்தை பெரியார்

இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்-களின் அபிப்பிராயங்களை இப்பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.

இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் ‘கல்லென்றாலும் கணவன்; புல்லென்றாலும் புருஷன்’ என்று சொல்லுவது போல கணவனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நாகரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும், அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும், இதனால் இந்திய நாகரிகமே மூழ்கிவிடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராயமுடையவர்கள் கூறி வருகின்றனர்.

* * *

உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பிய கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.

அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். மதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமைப் புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமைப் புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூட நம்பிக்கை களையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்கவழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமைப் புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாப்பிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?

ஆனால், தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்விதான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதேயொழிய, வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும். ஆகையால் தற்காலத்திலுள்ள கல்விமுறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமைப் புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித்  திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.

– 17.07.1932 ‘குடிஅரசு’  தலையங்கத்திலிருந்து…,

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:53 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆண், சமத்துவம், பெண்

‘பெரியாரிடம்’ கண்ட ‘தமிழ்த் தேசியக்’ கூறுகள்: ப.திருமாவேலன், ஊடகவியலாளர்

 

சிந்தனைக் களம்

நவம்பர் 16-30,2021
November 16, 2021உண்மை

 ‘பெரியாரிடம்’ கண்ட  ‘தமிழ்த் தேசியக்’ கூறுகள்:

ப.திருமாவேலன், ஊடகவியலாளர்

1.            தமிழர் இனப்பெருமை

2.            தமிழ்நாட்டுப் பெருமை

3.            தமிழர் கடந்தகாலப் பெருமை

4.            தமிழ்ப்பெருமை

5.            தமிழுக்கு முதன்மை

6.            நாட்டின் பெயர் தமிழ்நாடு

7.            தனித்தமிழ்நாடு

8.            வடமாநிலத்தவர் எதிர்ப்பு

9.            மலையாள, ஆந்திரர், கன்னடர் எதிர்ப்பு

10.         இந்திய அரசு எதிர்ப்பு

11.         தமிழே ஆட்சிமொழி

12.         தமிழே பயிற்றுமொழி

13.         தமிழே வழிபாட்டுமொழி

14.         தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவேண்டும்

15.         தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும்

16.         சமஸ்கிருத எதிர்ப்பு

17.         மார்வாடி எதிர்ப்பு

18.         ஈழத்தமிழர் நலன்

19.         இந்தித்திணிப்பு எதிர்ப்பு

20.         மொழிவாரி மாகாண ஆதரவு

21.         தட்சிணப்பிரதேச எதிர்ப்பு

22.         வடவர் சுரண்டல் எதிர்ப்பு

23.         திருக்குறள் பரப்புதல்

24.         தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை     

25.         தமிழ்நாட்டில் மத்திய அரசு தலையிடாமை

26.         இது வடவருக்கான சுதந்திரம்

27.         வட இந்தியத் தலைவர்கள் எதிர்ப்பு

28.         தமிழறிஞரைப் போற்றுதல்

29.         தமிழர் தலைவர்களை அரவணைத்தல்

30.         தமிழிசைக்கு ஆதரவு

31.         தமிழர் கலைக்கு ஆதரவு

32.         தமிழ் மருத்துவம்

33.         தமிழர் பண்பாடு

34.         தமிழர் வாழ்க்கைமுறை

35.         வடவர் பண்டிகைக்கு எதிர்ப்பு

36.         வடவர் பழக்கவழக்கங்களுக்கு எதிர்ப்பு

37.         தமிழர் விழாக்களுக்கு ஆதரவு

38.         பொங்கல் திருநாளே தமிழர் திருநாள்

39.         பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு

40.         பார்ப்பனீயக் கொள்கை எதிர்ப்பு

41.         ஏகாதிபத்திய எதிர்ப்பு

42.         தமிழ்த்தொழிலாளர் நலன்

43.         தமிழ் முதலாளிகள் நலன்

44.         வெளிநாடு வாழ் தமிழர் நலன்

45.         தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை

46.         ஜாதி எதிர்ப்புப் போராட்டங்கள்

47.         தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தல்

48.         தமிழர் என்ற சொல்லாடல்

49.         தமிழரே பூசகர்

50.         தமிழர் திருமண முறை

51.         பெண் விடுதலை

52.         கற்பு அனைவர்க்கும் பொது

53.         விதவையர் மறுமணம்

54.         காதல் மணம்

55.         கூட்டுறவு வாழ்வியல்

56.         தனியுடைமை எதிர்ப்பு

57.         பொதுவுடைமை

58.         இதழ்களுக்குத் தமிழில் பெயர்

59.         மனு சாஸ்திர எதிர்ப்பு

60.         பிராமணாள் சொல் எதிர்ப்பு

61.         இது ஒரு நேஷன் அல்ல

62.         இந்து_முஸ்லிம் ஒற்றுமை

63.         வகுப்புவாதம் எதிர்ப்பு

64.         ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

65.         சுதந்திர நாள் எதிர்ப்பு

66.         ஜனநாயகத்தின் போலித்தன்மை

67.         நாடாளுமன்ற எதிர்ப்பு

68.         தேர்தல் எதிர்ப்பு

69.         தேர்தலில் பங்கெடுக்காமை

70.         இது பணநாயகம் எனல்

71.         பார்ப்பனப் பத்திரிகைகள் எதிர்ப்பு

72.         நீதிமன்றங்கள் எதிர்ப்பு

73.         மதச்சார்புள்ள அரசு எதிர்ப்பு

74.         கிராமச் சீர்திருத்தம்

75.         நாயக்கர் ஆட்சி எதிர்ப்பு

76.         தமிழரல்லாத ஆட்சி எதிர்ப்பு

77.         மலையாளிகளை வெளியேற்ற ஆதரவு

77.         ஆந்திரர்களை வெளியேற்றப் போராட்டம்

78.         தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

79.         இந்துப் பண்பாட்டு எதிர்ப்பு

80.         சிறுபான்மையரையும் தமிழர் ஆக்கிக் கொள்ளல்

81.         நிலப்பரப்புக்காகப் போராடுதல்

82.         தனித்தமிழ்

83.         தமிழில் கலப்பு மொழிகள் தடுப்பு

84.         இந்து அடையாளங்களை அழித்தல்

85.         தமிழ் இலக்கியங்களில் ஆரியச்சார்பு நீக்குதல்

86.         தமிழ் இலக்கியங்களில் சமஸ்கிருதச் சார்பு நீக்குதல்

87.         இந்தி மொழி எதிர்ப்பு

88.         இந்தி மொழித் திணிப்பு -_ எதிர்ப்புப் போராட்டங்கள்

89.         இயக்கங்களை ஒருங்கிணைத்தல்

90.         தீண்டாமை எதிர்ப்பு

91.         ஒடுக்கப்பட்டோர் நலன்

92.         வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனப்படும் சமூகநீதி

93.         இந்திய அரசியலமைப்பு எதிர்ப்பு

94.         இந்தியக் கொடி எதிர்ப்பு

95.         இந்திய எல்லை எதிர்ப்பு

96.         தமிழ்நாடு நீங்கலான இந்திய எதிர்ப்பு

97.         தமிழர் அல்லாதாரைப் பிரிப்பது

98.         தமிழர் இனஇழிவு நீக்கம்

99.         தமிழ்நாடு தமிழருக்கே

100. நான் தமிழன் தான்.

இப்படிப்பட்ட பெரியாரை தமிழரல்லர் என்று சொல்பவர்களும், தமிழ் தேசியத்துக்கு விரோதி என்று சொல்பவர்களும் தான் தமிழுக்கு விரோதி, தமிழருக்கு விரோதி, தமிழ்நாட்டுக்கு விரோதி. எனவே, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை நீங்கள் நன்றாக அடையாளம் காணுங்கள்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:54 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழ்த் தேசியம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (22)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ▼  2022 (58)
    • ▼  டிசம்பர் (4)
      • நான்யார்?
      • ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்
      • ஹிந்தியைப் புகுத்த சூழ்ச்சி...
      • தீபாவளி தத்துவமும்-இரகசியமும்: மாணவர்கள் உரையாடல்!
    • ►  அக்டோபர் (9)
      • ஆண் பெண் சமத்துவத்தாலே முன்னேற்றம் ஏற்படும்
      • ‘பெரியாரிடம்’ கண்ட ‘தமிழ்த் தேசியக்’ கூறுகள்: ப.த...
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.