வெள்ளி, 17 அக்டோபர், 2025

கடவுள் – மத கற்பனை

 


23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை

 

சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன்.  பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும் அளவைவிட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது.  நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு-ஜாதி இழந்தவனெனவும், தேசத்துரோகியெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும், அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன்,  விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.

இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன்.  உங்கள் வரவேற்புப் பத்திரத்துக்கு நன்றி செலுத்துகிறேன்.

 வீண் விவாதத்தைக் கிளப்புகிறார்

இப்போது என்னை பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம், கடவுள், மதம் என்பதாகும்.  வேறு எந்த விதமான பிரச்சாரகர் வந்தபோதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களைபற்றி அவர்களை கேட்பதில்லை.  ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள்.  நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவே சீவன மார்க்கராகவோ கொண்டவனுமல்ல அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றியே பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல.  எங்களுடைய வேறு முக்கியமான-நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும் போது, அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடையில் இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களை கொண்டு வந்து விடுகிறார்கள்.  எப்படி இருந்தபோதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை.

கடவுள் – மத கற்பனை

மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல்- தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது.  காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும், அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான்.  இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை, சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்கு கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப் பற்றி கவலை இல்லை, அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்துக்கு தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர-சுகவாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார்-மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு-கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கேகொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.

மதம்

உதாரணமாக, மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து, ஆண்டான் அடிமை தன்மைமாறி ஆணும்பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழித்தால் தமது உயர்வும் தமது பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கேபோட்டு, எங்களைத் தடைப்படுத்தும் போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்கவேண்டுமெனக் கூறுகிறோம். தீண்டாமையை மேல்ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்கிறோம்.  தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது.  அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டிவந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, ‘மதம் போச்சுது மதம் போச்சுது’ என்று விஷமப் பிரச்சாரம் செய்து, எங்களை மதத் துரோகி என தூற்றிட அவர்களால் சுலபமாக முடிகிறது.

“கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக் கொண்டு பார்ப்போம். அதுவும் இப்படித்தான்.  அதாவது கடவுளைப் பற்றி விளக்க இதுவரை, எத்தனையோ ஆத்ம ஞானிகள் சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடுபட்டிருக்கின்றனர்,  ஆனால் முடிந்ததா? முடிவு  இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரியவைக்க முடிந்ததா?

“கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது” என அடுக்கிகொண்டே போய் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.

இன்று இந்நாட்டினரால் மனித ‘ஆத்மாவுக்கு’ மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி ‘மகாத்மா’ என்று சொல்லப்படுபவராகிய தோழர் காந்தியார் ‘சத்தியம் தான் கடவுள்’ என்கிறார்!

சைவசமயிகள் (அன்பே சிவம்) ‘அன்பு தான் கடவுள்’ என்கின்றனர்.

இராமலிங்க சுவாமிகள் என்று சொல்லப்பட்ட வள்ளலார் பெரிய அறிவுதான் கடவுள் (அறிவே தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோட்ச நரகங்களைக் கொடுக்கும் கடவுள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்களென பச்சையாகச் சொல்லிவிட்டார். தோழர்களே! உங்களை ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன்  இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?

ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது, அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித வாழ்வுக்கு நன்மையும் அவசியமுமான காரியங்கள் குணங்கள் எவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள்.  இதை பார்த்தாவது மனிதனுக்கு அறிவு உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன். ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி எவரிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின் படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாக கருதப்படுவானா ? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்று தான் கேட்கின்றேன்.  அன்பு அறிவு உண்மை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்ன தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை  தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட கடவுளைப் பற்றி கவலைப்படாமல் கடவுளுக்குப் பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தன் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன்.  இந்த உணர்ச்சியினாலேயேதான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல் நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை  அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன்.    நான் கூறின மேல்கண்ட தத்துவங்கள் மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.

மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர்.  ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்கஇடமில்லையே!

மகா அறிவாளியான சங்கராச்சாரியார் “அஹம் பிரம்மாம்சி  நானே கடவுள்” என்று கூறினார்.  அதற்காக சைவர்கள் அவரைத் தானே “கடவுளெனும் பாதகத்தவர்” என்று தண்டிப்பதுமுண்டு.

இதைப்போன்றே சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் “இயற்கையே கடவுள்” எனக் கூறி விவாதத்தை முடித்துக் கொண்டார்.  அது கண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே பிறகு அவர், அழகே கடவுள் அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன் ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது. என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற் போல் அவர் அடிக்கடி “என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்” என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.

இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல் “இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா” என்று கேட்கின்றனர்.  ஏதோ ஒரு சக்தி இருக்கட்டும்.  இருக்க வேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்து விட்டோமா? அதைப் பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன்.  மேலும் மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா? என்று கேட்கிறார்கள்.  வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ, வாழ்க்கையில் நீதி அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ, அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர் மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்திலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படி செய்து விட்டார்கள்.

உதாரணமாக, ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரை யாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமோ? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்ரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணிய ஸ்தலயாத்திரையை புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் – ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா?

இன்று சிறையிலுள்ள 2 லட்சம் கைதிகளில் சம்சய வாதிகளோ, (கடவுள் பற்றி கவலைப் படாதவர்கள்) நாஸ்திகர்களோ, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள்.  மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித அசந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும்.  ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாபநஷ்டப்படி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

– ‘குடிஅரசு’, 30.01.1938

- விடுதலை நாளேடு, 17.8.25

சுயமரியாதை இயக்கம்


 சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925இல்  என்னால் துவக்கப்பட்டது.  யாவரும் அறிந்ததேயாகும்.  அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன?  அது ஏன் துவக்கப்பட்டது?  என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக் கூறவேண்டியது அவசியமல்லவா?  அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா என்பது விளங்கும்.

எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது.  அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது.  ஆனால், நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை.  நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன்.  கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவுமாட்டேன்.

எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதிமதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன்.  இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன்.  எப்பொழுதிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லையென்றும் யோசித்து, யோசித்துப் பார்த்திருக்கிறேன்.  கண்டுபிடிக்க முடியவே இல்லை.

எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சமயப் பிச்சைக்காரர்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும், அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும் அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து, மறுத்துச் சொல்ல ஆரம்பித்து ‘விதண்டாவாதமாக’ கேள்விகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல மெல்ல அதுவே ஒழிந்த நேரவேலையாகவும் அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும் எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும்  நேர்ந்துவிட்டது.

நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்ததில்லையென்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்மந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதா சர்வ காலம் எங்கள் வீட்டில் இரு சமய “பக்தர்” களாலும், பண்டிதர்களாலும் காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது.  ஏன்?  பணம் வந்து குவியும்போது தர்மம் செய்து தர்மப் பிரபு பட்டம் வாங்க வேண்டாமா?  இவர்களைத் தானே தான பாத்திரங்களாகப் பேசப்படும்.  ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள்.  என் தாயார் இவர்கள் அளப்புகளை அதிக “பக்தி சிரத்தை” யுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.  தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும்.  இதனால் எனக்கு சமய சம்மந்தமான – புராண சம்மந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும்.  அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னை ஒரு “கெட்டிக்காரப் பேச்சுக்காரன்” என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது.

என் தகப்பனார் நான் இப்படி “விதண்டாவாதமான” கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படி புத்தியாய்ப் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சி உண்டு. இந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும் கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்தும் நம்பிக்கையில்லாமல்  போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.

“சுற்றுச் சார்புதான் (Association and Surrounding) ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன்.

ஜாதி மதக்கொடுமை ஒழிக்கப்பட வேண்டு மென்பதிலும் கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான நம்பிக்கையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான் தான் செய்யவேண்டுமென்றோ அதற்காகத் தான் இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரண காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும், தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய்விட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது.
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான்.

என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம் எப்படியோ உயிர்வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து  ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் அதாவது சோம்பேறித்தனமும், கழிப்பினித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை முடிவுகளைத் தனது வாழ்க்கைக்காக வாழ்க்கை நலத்துக்காக மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத  சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும்.   அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்வாதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.

நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்பட மாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆக வேண்டும்? ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர் வாழ முடியாதேஎன்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை -அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்யவேண்டும் என்று கருது கிறேனோ – அந்த வேலையைச்

செய்கிறேன்.  இந்த உணர்ச்சி வலுத்துத் தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கிவிட்டேன்.  இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன்.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரண காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும், தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது.  இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய்விட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று  கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான்.

எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து, செய்தது சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அது தான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.

- உண்மை இதழ், 1-15.09.225

வியாழன், 9 அக்டோபர், 2025

நமது கொள்கையில் பொதுவுடமை சமதர்மம் இல்லையா?

இப்போதும் நம் கொள்கைகளில் சமதர்மமோ, பொதுவுடமைத் தத்துவமோ இல்லை என்று சொல்ல முடியாது. சமதர்மத்துக்கும் பொதுவுடமைக்கும் தோழர் ஜீவானந்தமும் அவர்களது தோழர்களும்தான் பாஷ்யக்காரர்கள் என்பதை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது.

ரஷ்யப் பொதுவுடமை எனக்கு நேரிலும் தெரியும். அப்படிப் பட்டவர்கள் ஏகாதிபத்தியத்துடனும், பணக்கார ஆட்சியுடனும் ராஜி செய்து கொண்டு கூடுமான அளவுதான் சமதர்மம் நடத்துகிறார்களே தவிர யாரோ ஒருவர் கோ ழை என்று சொல்வாரே என்று பயந்து கொள்ளவில்லை.

இயக்கத்தால் மனிதரானவர்களே தான் இன்று இயக்கத்தை செத்துப் போய் விட்டது என்கிறார்கள்

தோழர் பெரியார் - திருத்துறைப்பூண்டியில் 21, 22.03.1936 ஆகிய நாட்களில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட 5 ஆவது சுயமரியாதை மாநாட்டில் 21.03.1936 இல் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு சொற்பொழிவு 29.03.1936

வியாழன், 2 அக்டோபர், 2025

நவராத்திரி



தந்தை பெரியார்

 “நவராத்திரி” என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள் படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் – இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம் பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள்.

வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள்களில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப் பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தி யோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப் பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை

நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூஜை செய்யவேண்டும்.

இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூஜை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு ‘ஆயுதபூஜை’ என்றொரு பெயரும் உண்டு.

இந்த நவராத்திரியை இந்துமதப்பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள்.

இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அனேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும் ஆயுதமும் அதற்குக் கற்பிக் கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் – ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங் களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல் லாம் இது சம்பந்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமே யாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்காவிட்டாலும் இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு.

மற்றவர்கள் ‘சரஸ்வதிபூஜை’யன்று ‘துர்க்கா லட்சுமி ‘ஸரஸ்வதீப்யோ நம’ என்று கூறிப் பூஜை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங் களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால், இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்திபெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதி தேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது “தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள்” என்று எதற்கும் ‘தத்துவ’ நியாயம் சொல்வது போல் இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூஜை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம்.

படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என் பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாக வும், பார்வதியை சித்சக்தியாகவும் அது பரம் பொருளாகிய ஆத்ம ஸாசாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். ‘துர்க்காலட்சுமி சரஸ்வதீப்யோ நம’ என்னும் மந்திர மடத்து சாஸ்திரிகள் வரையிலும் மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும் தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்து வார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷா சூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில் லட்சுமிதேவி உலகில் அலர்மேலுமங்கையாக வந்து, பரம பதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுபெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன் னிட்டுதான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாள்களும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம். தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மை விட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒரு நாள்தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூஜையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றிகெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழியான சமஸ்கிருத இலக்கணத்தை தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ? என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஓர் அரசன் இருந்த தாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப் பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்ஜாதியான சுவேதி என்பவ ளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூஜையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அரங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து அவன் சத்துருக்களை ஜெயித் துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக்கொடுத்தாகவும் சொல்லப்படுகின்றது.

நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூஜைகளும், மந்திரங்களும் அதைச் செய்த ஜன சமூ கங்களும் நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப்பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளி யேற்றப்பட்டிருக்கையில் நமது  ‘சரஸ்வதியும், லட்சுமியும் , பார்வதியும்’ அவர்களுக்குப் பூஜையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு என்று ‘குடிஅரசு’ கேட்டு விட்டால் சமயவாதியும், சாஸ்திரவாதியும் ‘அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது’ என்று சொல்லுவதானாலும் படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ் பி.ஏ, எம்.ஏ, வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா, இல்லையா? என்றுதான் கேட்கிறோம்.

‘ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை;  நீ ஒருத்தி இருக்கின்றாய் என்று கூட நினைப்பதில்லை; உனக்கு பூஜை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே, நீ செய்வது நியாயமாகுமா?’

விஜயதசமி

மேலும் விஜயதசமி அன்று சிவன் கோயிலில் ‘பரிவேட்டை உற்சவம்’ என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று ‘பகவான்’ எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னி மரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேடடையாடுவோருக்கும், ராஜாக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்த காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும் இதற்கும் உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும் படித்தவர்களுக்குச் சூட்சுமமாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். (எந்த சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை) அதாவது, நெருப்பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேசமாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டு மென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வட தேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர் ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆடிய பரிவேட்டையும், சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின் வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அது போலவே திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக் காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய சரஸ்வதி பூசையும், பரி வேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில் அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண் சாதியும், அவர் மருமகளும் ஓடிப்போ யன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடி வந்து தங்கள் சொத்தென்று அங்கு சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல்கிறார்கள்.

கடவுளையும் பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங் களையும், அதன் நியாயவாதங்களையும் கூட்டி ஆலோசியுங்கள், சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு 50 பேருக்குக் கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்துக்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைப்பட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் ‘புண்ணிய தீர்த்தத்தில்’ கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும் கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்த னையும் போதாமல் வருடம் ஒரு தரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய,இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும் ‘ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்று கூட நினைப்பதில்லை; உனக்கு பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே, நீ செய்வது நியாயமாகுமா?’ என்று நாங்கள் சொல்லிவிட்டால் உன் பாஷையான சமஸ் கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுகிறார்கள். உன் முதற் பிள்ளையான பார்ப்பனர் களின் தாசிப்பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்க மற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர் களையும் கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற்பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக் கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லி விட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு?

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற்றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லு வதாலேயே உன் பக்தகோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற் கும் உன் பாட்டனும் மகனுமான சிவனுடைய கைலாசத் திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடி போயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர் களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும் கும்பாபிஷேகமும் பூசையும் எதற்கு?

இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத் தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும் குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங்களென்றால் ஆச்சாரிகளையும் பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லு கிறவர்களாகி விடுவோமா?

ஆயுத பூஜை

அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள் கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பக வானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்து விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்துவிட்டானே!

உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும் கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூஜை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூஜைகளும் கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூஜையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூஜையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும் கடமையும் எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள் . இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து…

 - விடுதலை நாளேடு, 21.09.25

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

அதிக பலமுடையது ஜாதியே!

 

அதிக பலமுடையது ஜாதியே!


12 Min Read

தந்தை பெரியார்

நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும்பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ அதுபோலவே மதமும் ஒரு மனிதனுக்குப் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன மதத்தான் என்றே எண்ணிக் கொண்டு வருகின்றான். ஆனால், ஜாதியானது பிறவியின் காரணமாக ஏற்படு கின்றதென்று, ஜாதியைக் கற்பிக்கும் சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவதால், பிறவியின் காரணமாக ஜாதி நிர்ணயிக்கிறவர்களுக்கு மேல்கண்ட ஆதாரங்களைச் சொல்லிக் கொள்ள இடமுண்டு. ஆனால் மதமானது. பிறவி யின் காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும், அது சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே இல்லை! மதம் என்பது கொள்கை என்றும், அந்தக் கொள் கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும், தள்ளவும், உரிமையுடையது என்றுமே தான் சொல்லப்பட்டு வருவதுடன், அந்தப்படியே அநேக மனிதர்கள் அடிக்கடி மதம் மாறிக் கொண்டும் வருகின்றார்கள்.

மதம் மாறலாம்

அதாவது   இந்துக்கள் என்பவர்கள் கிறிஸ்தவர்களாகவோ, மகமதியர்களாகவோ, பவுத்தர்களாகவோ, பிரம்ம சமா ஜிகளாகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு கிறிஸ்தவர் மகமதியராகவோ, இந்துவாகவோ, பவுத்தராகவோ, நாஸ்திக ராகவோ மாறுவதும், ஒரு மகமதியர் கிறிஸ்தவராகவோ, இந்துவாகவோ, புத்தராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு பவுத்தர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்தவ ராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும் ஒரு நாஸ்திகர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்துவராகவோ, பவுத்தராகவோ மாறுவதும் இவர்கள் அடிக்கடி உள்பிரிவு மதக்காரர்களாக அதாவது சைவன் வைணவனாகவும், வேளாளன் சைவனாகவும், சைவன் சமணனாகவும், சமணன் சைவனாகவும், மற்றும் இதுபோலவே அடிக்கடி மாறுவதும், சர்வ சாதாரணமாய் பார்த்து வருகின்றோம். இந்த முறையில்தான் இன்றைய தினம், உலகத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதான, பவுத்தமதத்தில் 55 கோடி மக்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு 50 கோடி மக்களும், 1300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மகமதிய மதத்திற்கு 23 கோடி மக்களும் காலமே குறிப்பிட முடியாததான அவ்வளவு பழைய இந்து மதத்திற்கு 20 கோடி மக்களும், பவுத்த, கிறிஸ்தவ, மகமதிய ஆகிய மதங்களுக்கு முன்னால் இருந்து வந்த யூத மதத்திற்கு ஒரே ஒரு கோடி மக்களும், மதம் குறிப்பிட இயலாத மக்கள் 17 கோடியுமாக இருந்து வருகின்றார்கள். இவர்கள் இந்தப்படி எப்படி உண்டாயிருக்க முடியும்? அநேகமாக இவ்வளவு ஜனங்களும் ஏதோ ஒரு மதத்திலிருந்தோ, அல்லது மதமே இல்லாதவர்களிடமிருந்தோ தான் புதிதாக ஏற்பட்ட மதப்பிரச்சாரங்களின் மூலமாக, அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இன்றைய தினம் இருக்கவேண்டும். இந்தக் கொள்கைப்படி பார்த்தாலே, மக்களுக்கு மதம் பிறவியின் காரணம் அல்ல வென்றும், அவரவர்கள் மனப்பான்மையும், மற்றவர்கள் பிரச்சாரமும் காரணமென்றும் விளங்கும். அன்றியும் இந்தக் கொள்கைப் படியே இனியும் உலகத்தில் எத்தனை மதம் வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம் என்பதும் அவைகளுக்கெல்லாம் இப்போதிருக்கும் மக் களே தான் பெரும்பகுதியும் போய் அப் புதுமதங் களில், சேர்ந்தாக வேண்டுமென்பதும் நன்றாய் விளங்கும். எனவே, மதத்தையும் ஜாதியையும் இரண்டையும் பார்க்கும்போது மதத்தைவிட ஜாதியே அதிக பலமுடையதாகும். ஏனெனில் ஜாதி பிறவியில் உண்டாவது, அது மாற்ற முடியாதது என்று சொல்லப்படுவது; ஆனால் மதமோ கொள்கையின் மூலம் ஏற்படுவது; அது மன உணர்ச்சிக்கும்; அறிவு உணர்ச்சிக்கும் தக்கபடி அடிக்கடி மாற்றிக் கொள்ள உரிமை உடையது என்பதாகும்.

இந்துமதம் என்பதைப் பொறுத்தவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததாயிருப்பதோடு அதனால் நாட்டிற்கு ஏற்படும் தொல்லைகள் அளவிடமுடியாததாய் இருக்கின்றன. மற்ற மதக்காரர்கள் எல்லாம் மதத்தின் பேரால் பணங்களை வசூல் செய்து, மதத்தில் உள்ள மக்களுக்கு ஒற்றுமை, கல்வி, தொழில், ஒழுக்கம், ஆகியவைகளை உண்டாக்குவதற்கும், மேற்கொண்டு அந்நிய மதத்தில் இருக்கும் மக்களை தங்கள் மதத்தில் சேர்ப்பதற்கும் உபயோகப் படுத்துகின்றார்கள். ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர்களோ, மற்ற மதக்காரர்கள் எல்லாரையும் விட அதிகமானப் பணம் சம்பாதித்து ஒற்றுமையில்லாமலும், கல்வியில்லாமலும், தொழில் இல்லாமலும், ஒழுக்கமில்லாமலும் செய்து வந்திருப்பதுடன், அந்நிய மதத்தில் போய்ச் சேரவும் தாராளமாய் நிர்ப்பந்தமும் இடமும் தந்துவந்திருக்கின்றார்கள்.

பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா?

ஆகவே, பிறவியினால் ஏற்படுகின்றது என்று சொல்லும் படியான ஜாதியை அடியோடு அழித்து, எல்லா மக்களையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமையையும் சகோதரத் தன்மையையும் உண்டாக்கவேண்டுமென்பதாகக் கூறப்படும் மக்களின் முயற்சியை ஒப்புக் கொண்டு ஆதரவளிக்கச் சம்மதிப்பதாகச் சொல்லும் மக்கள் கேவலம் கொள்கையாலும், அறிவு உணர்ச்சியாலும் இருக்கும் மதத்தை அழித்து, மக்களை ஒன்று சேர்க்க முயற்சிப்பதில் என்ன ஆட்சேபனை இருக்கக் கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. மனிதன் அறிவு வளர்ச்சியின் மூலமும், ஆராய்ச்சித் தெளிவின் மூலமும், அசவுகரியத்தின் மூலமும், சுயநலத்தின் மூலமும் அடிக்கடி மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும் மதத்தைப் பற்றிப் பிடிவாதம் காட்டுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதும் நமக்கு விளங்கவில்லை. அநேகமாக மதங்களை இன்றைய தினம் வலியுறுத்துபவர்களில் அநேகர் தங்கள் மதத்திற்குச் சொல்லும் ஆதாரங்கள் எல்லாம், மதத்தை உண்டாக்கின மதத் தலைவர் பெரியார் என்றும், அவர்கள் அநேக அற்புதங்கள் செய்த பெரியார்கள் என்றும், தங்கள் தங்கள் மதம் இன்ன இன்ன பரீட்சைக்கு நின்று வெற்றிபெற்றது என்றும் சொல்வதின் மூலம் அவைகளைப் பெருமைப் படுத்திப் பேசுகின்றார்களே அன்றி, அவைகளில் ஏதாவது ஒன்று இன்றைய தினம் நடைபெற முடியுமா? என்பதைப் பற்றி கேட்போமானால் கோபித்துக் கொள்ளுகின்றார்களே ஒழிய வேறு சமாதானம் கிடையாது. அதுதான் போகட்டும் என்றாலோ, அம்மதக் கொள்கைகளைப் பற்றியும் அதே மாதிரி மதத்திற்கான கொள்கைகள் என்று சொல்லப்படுவதல்லாமல் கொள்கைகளுக்காக மதமென்றோ, சவுகரியத்திற்காகக் கொள்கைகள் என்றோ, பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா? என்றோ ஒரு காலமும் சொல்ல முடியாதவை களாகவே இருக்கின்றது.

அளவிட முடியாத செலவுகள்

இந்த நிலையில் மதத்திற்காகக் கொலைகளும், கொள் ளைகளும், யுத்தங்களும், உயிர்விடத் தக்க வீரங்களும், நாட்டில் மலிந்து கிடக்கின்றன. அதுதான் போகட்டுமென் றாலோ மதத்திற்காகச் செலவாகும் பணங்களும், நேரங் களும், அறிவுகளும், ஊக்கங்களும், கணக்குக் கடங்காதவை யாகவே இருக்கின்றன.

இந்துமதம் என்பதைப் பொறுத்தவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததா யிருப்பதோடு அதனால் நாட்டிற்கு ஏற்படும் தொல்லைகள் அளவிடமுடியாததாய் இருக்கின்றன. மற்ற மதக்காரர்கள் எல்லாம் மதத்தின் பேரால் பணங்களை வசூல் செய்து, மதத்தில் உள்ள மக்களுக்கு ஒற்றுமை, கல்வி, தொழில், ஒழுக்கம், ஆகியவைகளை உண்டாக்குவதற்கும், மேற்கொண்டு அந்நிய மதத்தில் இருக்கும் மக்களை தங்கள் மதத்தில் சேர்ப்பதற்கும் உபயோகப் படுத்துகின்றார்கள். ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர் களோ, மற்ற மதக்காரர்கள் எல்லாரையும் விட அதிகமானப் பணம் சம்பாதித்து ஒற்றுமையில்லாமலும், கல்வியில்லா மலும், தொழில் இல்லாமலும், ஒழுக்கமில்லாமலும் செய்து வந்திருப்பதுடன், அந்நிய மதத்தில் போய்ச் சேரவும் தாராளமாய் நிர்ப்பந்தமும் இடமும் தந்துவந்திருக்கின்றார்கள்.

உதாரணமாக இன்றைக்கு 50 ஆண்டு ஜனகணிதப்படி இந்துக்கள் 50 ஆண்டுக்கு முன்னுள்ள ஜனத் தொகைப்படி 100க்கு 10 பேர்கள் வீதம் ஜனத் தொகையில் குறைந்திருக் கிறார்கள். மற்ற மதக்காரர்களோ நூற்றுக்கு 25 முதல் 40 வரை உயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் யாரென்று பார்த்தால், தெய்வீகத் தன்மை பொருந்தியதும், ஆத்மார்த்தம் நிரம்பியதும், தெய்வத்தன்மை பொருந்திய ரிஷிகளாலும், முனிவர்களாலும், ஆச்சாரியர்களாலும், சமயக் குரவர்களா லும், அவதாரப் புருஷர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்ட ஒப்புயர்வற்ற சனாதன வேத இந்து மதத்திலிருந்து, இதர மக்களால் இழைக்கப்பட்ட தங்களுடைய கொடுமைகளிலிருந்து தப்புவிப்பதற்காக என்றே ஓடிப்போனவர் களாவார்கள். எந்தமத ஆச்சாரியனும், மதபக்தனும், இது விஷயத்தைப் பற்றி கிஞ்சிற்றாவது ஆலோசித்து கடுகளவு கண்ணீராவது கொட்டினான் இல்லை. இப்படிப்பட்ட தானாகவே தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் மதத்திற்காக ஏற்படும் செலவுகளும், மெனக்கேட்டையும், அறிவுத் தடையையும் நீக்கவோ, கடுகளவாவது குறைக்கவோ எவனும் வெளி வந்தவனுமல்ல. ஆனால், இப்படிப்பட்ட, இந்து மதத்திலிருந்து இப்படிப்பட்ட இந்துக்களின் கல்நெஞ்சம் படைத்த ஒழுக்க ஈனங்களிலிருந்து விலகிக் கொள்ளக் கருதி, சென்ற காலத்தில் சிலர் மகமதியர் களாகி விட்டதாலும், கிறிஸ்தவர்களாகிவிட்டதாலும் அவற்றை நாம் பாராட்டியதாலும் சில நண்பர்களுக்கு மிக்க மனத்தாங்கல் ஏற்பட்டு நம் மீது காய்ந்து விழுந்து சுமார் 15 கடிதங்கள் வரையில் எழுதியிருக்கின்றார்கள். அவைகள் மலேயா நாட்டிலிருந்தும், பர்மா தேசத்திலிருந்தும், கொழும்புச் சீமையிலிருந்தும், இந்திய உள்நாட்டிலிருந்தும் வந்தவைகளாகும். அப்படி எழுதியிருப்பவர்களில் அநேகம் பேர் நீர்தான் மதம் வேண்டியதில்லை என்று பேசவும் எழுதவும் செய்கின்றீரே! அப்படியிருக்க மகமதிய மதத்தை ஏன் ஆதரிக்கிறீர்! அதில் போய்ச் சேர்ந்தவர்களை ஏன் பாராட்டுகிறீர்? என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் இப்படி எழுதியவர்கள் எல்லாரும் மதமே வேண்டாம் என்கின்ற கொள்கையை ஒப்புக் கொண்டு, நமக்குப் புத்திமதி கூறினவர்களா? அல்லது இந்து மதத்தை விட்டு மக்கள் வேறு மதத்திற்குப் போகின்றார்களே? என்கின்ற மதப்பித்துக் கொண்டு எழுதினார்களா? என்று பார்ப்போமேயானால் ஏறக்குறைய அதிகம் பேர் மதப் பித்துக் கொண்டு இந்துமதம் போய்விடுமே என்றோ அல்லது மகமதிய மதம் மாத்திரம் என்ன உயர்ந்த மதம் என்றோ, கருதித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பதாகவே நினைக்கின்றோம்.

சூரியனைக் கண்ட இருட்டு மறைவதைப் போல்…

அவர்களுக்கு ஒரு பதில் சொல்ல விரும்பு கின்றோம். அதாவது இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானது! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிரக ஆராதனை மறுப்பு ஆகிய வைகள் இருக்கின்றது. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானம், எகிப்து முதலிய நாடுகளில் ஆட்சி செய்துகொண்டு வருகின்றது. துணிகர மான சீர்திருத்தத்திற்கு முனைந்து நின்று வெற்றி கொண்டு வருகின்றது. இவைகளை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுவ தானாலும், இந்துவாக இருக்கும் காரணத்தால் தீண்டப்படாதவராகவும்,   காணப்படாதவராகவும், தெருவில் நடக்கப்படாதவ ராகவும் கடவுள் சன்னி தானத்தில் நிற்கப் படாத வராகவும் இருக்கின்ற ஆறறிவு படைத்த ஆண்டவனுடைய தூய திருக்கோயிலாக உடைய சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தைவிட்டு மகமதியமதம் புகுந்தானா னால் அப்போதே சூரியனை கண்ட குமரி இருட்டுப் பறந்தோடுவதைப் போல் மறைந்து போகின்ற தென்பது மட்டும் உறுதி! உறுதி!! உறுதி!!!

இதை யாராவது மறுக்கின்றார்களா? என்று கேட்கின் றோம். மற்றபடி, மேல் லோகமும் ஆண்டவன் சன்னி தானமும், பாவமன்னிப்பும் இந்து மதத்தைவிட, மகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ? மிக்க சுலபமென்றோ? நாம் ஒப்புக்கொள்வதில்லை. தவிர இந்து மதத்திலிருக்கின்ற ஒரு சக்கிலியோ பறையனோ, பள்ளனோ, இன்றைய தினம் இந்து மதத்தை விட்டுவிட்டேன் என்று சொல்லு வானானால் அவனை ஒருக்காலமும் தொட்டுக் கொள்ளவோ, தெருவில் நடக்கவிடவோ, பக்கத்தில் வரச் சம்மதிக்கவோ எவரும் ஒப்புக் கொள்ளுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தைவிட்டு விடுவதினால் மாத்திரம் எப்படி சுதந்திரமடையக் கூடியவர்களாகி விடுவார்கள்! ஆனால், மகமதியர்களாகவோ, கிறித்தவர் களாகவோ ஆகிவிட்டாமல் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபனை இல்லை என்பதுடன் சிறப்பாக மகமதியர்களாகிவிட்டால் சட்டத்தில் ஆட்சேபனை இல்லாததோடு, அனுபவத்திலும் ஆட்சேபனை இல்லாமல் போய்விடுகின்றது. பொதுவாக நமது லட்சியம் ஜாதி, மத வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென்பதாகும். மதவித்தியாசம் ஒழிகின்ற வரையிலும், ஜாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால், மதவித்தியாசம் ஒழியப் பாடுபட்டுக் கொண்டிருப்பதுடன், ஜாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்களையும் கூடச் செய்து கொண்டு தானிருக்க வேண்டி இருக்கின்றது. ஆகவே அம்முயற் சியிலொன்று தான், நாம் இப்போது மகமதிய மதத்தைத் தழுவியவர்களை ஆதரிப்பதும், பாராட்டு வதுமே ஒழிய வேறில்லை! பார்ப்பனர்கள் சமீப காலமாய்ச் செய்துவரும் சூழ்ச்சிகளை உணர்ந்தவர்கள், இன்று மதத்திற்காகவோ, இந்துக்கள் பிற மதம் புகுவற்காகவோ, சிறிதும் அதிருப்தி அடைய முடியாதென்பதே நமது நம்பிக்கை.

குழந்தை மணங்களைத் தடுக்கும் மசோதாவிற்கு இந்து மதத்தின் பேரால் ஆட்சேபனையும், சாஸ்திரத்தின் பேரால் சத்தியாக்கிரகமும் செய்வதற்கும் புதிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு, பிரச்சாரமும் பத்திரிகையும் நடத்தப் பணமும் சேகரித்து வருகின்றார்கள்.

இதுமாத்திரமல்லாமல், இந்துக்களுக்கு – சிறப்பாக – பார்ப்பனர்களுக்கு (தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமான (பர்) மதத்தைக் காப்பாற்ற காங்கிரசே நல்ல சாதனம் – திரு.எஸ்.சத்தியமூர்த்தி அய்யரவர்கள், பார்ப்பனர்களுக்குச் செய்திவிடுத்து எல்லாரையும் காங்கிரசில் சேரும்படி அழைக்கிறார். அதாவது, அவர் சர்க்காரை மத சம்பந்தமான காரியங்களில் பிரவேசிக்க ஒட்டாமல், செய்யவேண்டுமானால் காங்கிரசை, கைப்பற்றியாக வேண்டுமென்று வியாக்கி யானமும் செய்திருக்கின்றார். இதிலிருந்து என்ன விளங்கு கின்றது என்று பார்த்தால் மதத்தின் பேரால் உள்ள கொடுமைகளை ஒழிக்க சமூகத் துறையிலும், சம்மதிக்க மாட்டோம்! அரசியல் துறையிலும் சம்மதிக்க மாட்டோம்! என்று பார்ப்பனர்கள் வைதிகக் கோலத்துடனும், தேசியக் கோலத்துடனும், சொல்லுவதாக ஏற்படுகின்றதா? இல்லையா? என்று கேட்கின்றோம்.

தவிரவும், நாமும் இந்த ஜாதி வித்தியாசத்தைப் போக்க பிறமதம் புகுவது என்பதையே பிரதானமாகக் கொண்டிருக்க வில்லை. அப்படிச் செய்பவர்களை ஆதரிப்பது ஒருபக்கமும், கோயில் பிரவேசம் ஒரு பக்கமும், கோர்ட்டுகளில் விவகாரம் இன்னொரு பக்கமும், சமபந்தி ஒருபக்கமும், கலப்பு மணம் மற்றொரு பக்கமும், பிரச்சாரம் இன்னொரு பக்கமும், சட்டம் செய்ய முயற்சி இனி ஒரு பக்கமும், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமஉரிமையும் சமசந்தர்ப்பமும் கிடைக்க வேறொரு பக்கமும் இப்படிப் பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இவைகளுக்கு இடையூறாக ஏற்பட் டுள்ள எதிர்ப்புகள், தொல்லைகள், விஷமப் பிரசாரங்கள், பழிசுமத்தல்கள், மிரட்டல்கள், ஆபத்துக்கள், மொட்டைக் காகிதங்கள், முதலிய தடைகளின் பக்கத்திலிருந்து கவனித் துப் பார்க்கின்றவர்களுக்குத் தெரியுமே ஒழிய தூரத்தி லிருந்து கொண்டு பத்திரிகைகளை மேல் வாரியாகப் பார்த்துக்கொண்டு குற்றம் சொல்லப் புறப்படுகின்றவர்களுக்கு அவ்வளவு நன்றாய் உண்மை விளங்கி விட முடியாதென்றே சொல்லுவோம். தவிர, கடைசியாக ஒன்று சொல்லி இதை முடிக்கின்றோம்.

அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு

இனி சமீப காலத்திற்குள், அதாவது கால் நூற்றாண்டு களுக்குப் பின், இப்போது இந்துக்களாயிருக்கின்றவர்கள், கண்டிப்பாய் இந்துக்களாக இருக்க முடியவே முடியாதென் பதை ஒவ்வொரு வரும் மனதில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சூழ்ச்சிக்காரர்களும் சோம் பேறிகளும் இதை ஒப்புக் கொள்ளாமல் வெறும் வாய் வேதாந்தம் பேசக் கூடும். அதாவது புத்தரால் அழிக்க முடியாத இந்துமதம், மகமதியரால் அழிக்க முடியாத இந்து மதம், வெள்ளைக்காரர்களால் அழிக்க முடியாத இந்துமதம், எத்தனையோ ஆயிரம் வருடங்களாக எத்தனையோ ஆபத்துகளுக்கு தப்பி வந்த இந்துமதம் இனிதானா அழியப் போகின்றது? என்று பஞ்சகச்சத்தையும், உச்சிக்குடுமியையும், தொந்தி வயிற்றையும் கொண்ட ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம்பேறிகள், கால் மேல் கால் போட்டுக் கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டு, பேசலாம்! ஆனால் அதில் சிறிதும் உண்மை இருக்க முடியாது.

ஏனெனில் அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு; என்னவென்றால் அப்போதைய சவுகரியம் வேறு, இப் போதைய சவுகரியம்வேறு என்பதையும், அது மூடநம்பிக் கைக் காலம், இது அறிவு ஆராய்ச்சிக்காலம்  என்பதையும் கவனித்தால் விளங்கும். அவ்வளவுக்குக் கூட நாம் போக வேண்டியதில்லை. நம்மில் அநேகர் இன்றைக்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன் 70, 50, 20 ஆண்டுகளாக என்ன மனப் பான்மையில் இருந்தோம்! படிப்படியாக 5,6 ஆண்டிற்குள் இன்றைக்கு என்ன மனப்பான்மையில் இருக்கின்றோம்? இந்த விகிதாச்சாரத்தை இன்னும் ஒரு இருபத்தைந்து வயதுக்குப் பின் வட்டியுடன் வட்டிக்கு வட்டியுடன் சேர்த்துப் பங்கிட்டுக் கொடுத்தால் என்ன பலன் ஏற்படும்? என்பதை யோசித்துப் பாருங்கள்! ஆகவே மதத்தை நேர்முகமாகக் கட்டிக் கொண்டழுதாலும், மறைமுகமாகக் கட்டிக் கொண்ட ழுதாலும், விளையும் பலன் ஒன்றேயாகும். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் பின்னால் ஏற்படப் போகும் லாபத்தைப் பார்க்கச் சம்பவம் வாய்ந்தவர்கள் தாங்களுமே முயற்சி செய்ததற்கு வருந்துவார்கள் என்றே நம்புகிறோம்!

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 03-11-1929

 - விடுதலை நாளேடு, 31.08.2025

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

பிள்ளை யார்?


சிறப்புக் கட்டுரை

தந்தை பெரியார்

சிறப்புக் கட்டுரை

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண் ணிக்கை  “எண்ணித்  தொலையாது, ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கட வுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள் களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி இருப் பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான அறிவுகளும் வெகு காலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.

இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள் களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதும் அதிக செல்வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றி சற்று கவனிப்போம். ஏனெனில் கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதல் கடவுளைப்பற்றித் தெரிவதுதான் நன்மையானதாகும். ஏனெனில் முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால் மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாயிருக்கலாம். அன்றியும் எந்தக் காரியம் ஆரம்பித் தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால் நாமும் கடவுள்களின் கதைகளைப் பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப்பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ. இல்லா விட்டால் “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்” அன்றியும் சமீபத்தில் அக்கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்று வரப்போவதால் இந்தச் சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்க லாம். ஆதலால் தொடங்குதும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா?

 

பிள்ளையார் பிறப்பு

  1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கு களைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளை யாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து “நான் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்த தாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்த தாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்” என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் “காவல்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண் டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாகவும்” கதை சொல்லப் படுகின்றது. இக்கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.
  2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
  3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
  4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பிய தாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானை யின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.
  5. இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக் கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவ ராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கட வுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுதானே தீரும் (இவைகளைப் பார்க்கும்போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)

கோடிக்கணக்கான கடவுள்கள்

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும் மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்கவும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடு கின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்ப தாகவும் சொல்லப்படுகிறது.

ஆபாசக் கதைகள்

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையாரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படு கின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்களுக்கு கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெ ழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா அன்றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்ற வில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும் – இப்படி இருக்க வேண்டும்” என்றும் “மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து” கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் “வக்காலத்து பெற்று” மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங் களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத் தையும் காப்பாற்றிவிட முடியாதென்றோ சொல் லுவோம். இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.

– ‘குடிஅரசு’ – கட்டுரை – 26.08.1928

-விடுதலை நாளேடு, 24.08.2025

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

கடவுள் – மத கற்பனை



 23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை

 

சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன்.  பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும் அளவைவிட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது.  நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு-ஜாதி இழந்தவனெனவும், தேசத்துரோகியெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும், அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன்,  விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.

இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன்.  உங்கள் வரவேற்புப் பத்திரத்துக்கு நன்றி செலுத்துகிறேன்.

 வீண் விவாதத்தைக் கிளப்புகிறார்

இப்போது என்னை பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம், கடவுள், மதம் என்பதாகும்.  வேறு எந்த விதமான பிரச்சாரகர் வந்தபோதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களைபற்றி அவர்களை கேட்பதில்லை.  ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள்.  நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவே சீவன மார்க்கராகவோ கொண்டவனுமல்ல அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றியே பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல.  எங்களுடைய வேறு முக்கியமான-நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும் போது, அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடையில் இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களை கொண்டு வந்து விடுகிறார்கள்.  எப்படி இருந்தபோதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை.

கடவுள் – மத கற்பனை

மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல்- தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது.  காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும், அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான்.  இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை, சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்கு கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப் பற்றி கவலை இல்லை, அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்துக்கு தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர-சுகவாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார்-மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு-கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கேகொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.

மதம்

உதாரணமாக, மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து, ஆண்டான் அடிமை தன்மைமாறி ஆணும்பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழித்தால் தமது உயர்வும் தமது பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கேபோட்டு, எங்களைத் தடைப்படுத்தும் போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்கவேண்டுமெனக் கூறுகிறோம். தீண்டாமையை மேல்ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்கிறோம்.  தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது.  அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டிவந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, ‘மதம் போச்சுது மதம் போச்சுது’ என்று விஷமப் பிரச்சாரம் செய்து, எங்களை மதத் துரோகி என தூற்றிட அவர்களால் சுலபமாக முடிகிறது.

“கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக் கொண்டு பார்ப்போம். அதுவும் இப்படித்தான்.  அதாவது கடவுளைப் பற்றி விளக்க இதுவரை, எத்தனையோ ஆத்ம ஞானிகள் சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடுபட்டிருக்கின்றனர்,  ஆனால் முடிந்ததா? முடிவு  இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரியவைக்க முடிந்ததா?

“கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது” என அடுக்கிகொண்டே போய் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.

இன்று இந்நாட்டினரால் மனித ‘ஆத்மாவுக்கு’ மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி ‘மகாத்மா’ என்று சொல்லப்படுபவராகிய தோழர் காந்தியார் ‘சத்தியம் தான் கடவுள்’ என்கிறார்!

சைவசமயிகள் (அன்பே சிவம்) ‘அன்பு தான் கடவுள்’ என்கின்றனர்.

இராமலிங்க சுவாமிகள் என்று சொல்லப்பட்ட வள்ளலார் பெரிய அறிவுதான் கடவுள் (அறிவே தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோட்ச நரகங்களைக் கொடுக்கும் கடவுள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்களென பச்சையாகச் சொல்லிவிட்டார். தோழர்களே! உங்களை ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன்  இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?

ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது, அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித வாழ்வுக்கு நன்மையும் அவசியமுமான காரியங்கள் குணங்கள் எவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள்.  இதை பார்த்தாவது மனிதனுக்கு அறிவு உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன். ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி எவரிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின் படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாக கருதப்படுவானா ? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்று தான் கேட்கின்றேன்.  அன்பு அறிவு உண்மை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்ன தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை  தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட கடவுளைப் பற்றி கவலைப்படாமல் கடவுளுக்குப் பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தன் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன்.  இந்த உணர்ச்சியினாலேயேதான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல் நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை  அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன்.    நான் கூறின மேல்கண்ட தத்துவங்கள் மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.

மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர்.  ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்கஇடமில்லையே!

மகா அறிவாளியான சங்கராச்சாரியார் “அஹம் பிரம்மாம்சி  நானே கடவுள்” என்று கூறினார்.  அதற்காக சைவர்கள் அவரைத் தானே “கடவுளெனும் பாதகத்தவர்” என்று தண்டிப்பதுமுண்டு.

இதைப்போன்றே சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் “இயற்கையே கடவுள்” எனக் கூறி விவாதத்தை முடித்துக் கொண்டார்.  அது கண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே பிறகு அவர், அழகே கடவுள் அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன் ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது. என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற் போல் அவர் அடிக்கடி “என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்” என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.

இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல் “இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா” என்று கேட்கின்றனர்.  ஏதோ ஒரு சக்தி இருக்கட்டும்.  இருக்க வேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்து விட்டோமா? அதைப் பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன்.  மேலும் மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா? என்று கேட்கிறார்கள்.  வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ, வாழ்க்கையில் நீதி அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ, அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர் மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்திலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படி செய்து விட்டார்கள்.

உதாரணமாக, ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரை யாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமோ? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்ரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணிய ஸ்தலயாத்திரையை புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் – ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா?

இன்று சிறையிலுள்ள 2 லட்சம் கைதிகளில் சம்சய வாதிகளோ, (கடவுள் பற்றி கவலைப் படாதவர்கள்) நாஸ்திகர்களோ, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள்.  மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித அசந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும்.  ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாபநஷ்டப்படி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

– ‘குடிஅரசு’, 30.01.1938

-விடுதலை நாளேடு, 17.08.25