புதன், 17 டிசம்பர், 2025

கார்த்திகைப் பண்டிகை! (அருணாசல புராணத்திலிருந்து)

 

-தந்தை பெரியார்

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பவர் களின் பகுத்தறிவுச் செல்வம், எப்படிக் கொளுத்தப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு கார்த்திகைத் தீபம். ஆண்டுக்கொருமுறை குடம் குடமான நெய்களைக் கொட்டி நெருப்பெரித்துக் காட்டும் மகா புனிதமான சிறு பிள்ளை விளையாட்டு வேடிக்கை, இந்த ஆண்டிலும் இன்னும் 3, 4 நாட்களில் வரப்போகிறது என்பதைப் பார்ப்பன நவீன பஞ்சாங்கங்கள் (தேசிய தினசரிகள்) அறிவித்து விட்டன. அறிவும், செல்வமும், அருமையான காலமும் வீணாக்கப்படும் இந்தக் கொளுத்தும் பண்டிகைக்கு மகா ஜனங்களே வந்து போவீர்! மாபெரும் புண்ணியத்தைக் கட்டிக் கொள்வீர்! என்று கூறிவிட்டார்கள் நமது மதச் சார்பற்ற சர்க்கார். உணவுக்குத் திண்டாட்டமில்லை, ரூபாய்க்கு 2 படி அரிசி தர ஏற்பாடு என்கிறது அதிகாரிகளின் அறிக்கை. திருவண்ணாமலையைச் சுற்றிலும் காலரா! ஆனாலும் அக்கறையில்லை! புறப்படுவதற்கு முன்னே காலரா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள்! எப்படியும் வந்து போங்கள்! என்று அறிவிக்கின்றார்கள் மதச்சார்பற்ற சர்க்காரின் சுகாதார அதிகாரிகள்.

இவ்வளவு தடபுடலாக சர்க்கார் வரவேற்புக் கூற, மத ஆதிக்கக்காரர்கள் மடமையை விலை கூறி விற்க, பார்ப்பனர்கள் தெய்வத்தின் பேரால் பகற்கொள்ளை அடிக்கும் இந்தப் பண்டிகை ஏன் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை நாம் பலமுறை விளக்கி வந்திருக்கிறோம். இருப்பினும் சுருக்கமாக இப்போதும் கூறுகிறோம்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று கடவுள்கள். ஒரு காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் தான் பெரியவர்கள் என்கிற விஷயத்தில் சண்டை உண்டாகி விட்டதாம். வாய்ச்சண்டையில் ஆரம்பித்தது கைச்சண்டையில் முடிந்தும் சண்டை நின்ற பாடில்லையாம். இந்த 2 கடவுள்களும் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்பதையறிந்து 3ஆவது கடவுளான சிவன் அவர்களுக்கு மத்தியில் ஜோதி உருவாக வந்து நின்றாராம். சண்டை போட்டவர்கள் அதை நிறுத்திவிட்டுத் திகைத்து நிற்க, ஜோதி சிவன் அவர்களைப் பார்த்து, இந்த ஜோதியின் அடியையோ, முடியையோ யார் முதலில் பார்த்துவிட்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்பதாக அசரீரியாகச் சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றியாக உருவெடுத்து அடியைக்காண புறப்பட்டாராம். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து முடியைக் காணப் பறந்தாராம். பறந்தவர் பறந்துகொண்டே இருந்தாராம். வழியில் ஒரு தாழம்பூ கீழ்நோக்கி வந்ததாம், ஏ தாழம்பூவே! நீ எங்கிருந்து வருகிறாய்? என்று பிரம்மா அதைக் கேட்டாராம். நான் கோடிக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் பரமசிவனுடைய முடியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறியதாம் அந்தத் தாழம்பூ. தாழம்பூவின் சரித்திரத்தைக் கேட்ட பிரம்மா தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொல்லி, தான் முடியைக் கண்டுவிட்டதாகக் கூறுவதற்குச் சாட்சி சொல்ல வேண்டுமென்று கெஞ்சினாராம். அதற்குத் தாழம்பூ ஒத்துக்கொள்ளவே, ஜோதியிடம் வந்து முடியைக் கண்டு விட்டேன் என்றாராம் பிரம்மா! ஆமாம், பார்த்துவிட்டார் என்றதாம் தாழம்பூ! உடனே சிவன் கோபங்கொண்டு பொய் சொன்னதற்காக இருவரையும் சபித்துவிட்டாராம். அதனால்தான் பிரம்மாவுக்கு கோவில் இல்லையாம், தாழம்பூவைச் சிவனுக்குச் சூட்டுவதில்லையாம். பிரம்மா சாபம் பெற்ற பிறகு, பிரம்மாவும், விஷ்ணுவும் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்பதை ஒப்புக்கொண்டு, இதன் அடையாளமாக, இந்த மலையின் மேல் ஜோதி வடிவாக இருக்க வேண்டுமென்று சிவனை வேண்டிக் கொண்டார்களாம். அதற்குச் சிவன் ஒத்துக்கொண்டு ஒவ்வொரு கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்திலும் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்றாராம். இதுதான் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருவதற்குக் காரணமாக அருணாசல புராணம் கூறும் கதை.

இந்த கார்த்திகைப் பண்டிகைக்கு மற்றொரு கதையும் கூறப்படுகிறது என்றாலும், திருவண்ணாமலைக்கும், அந்தக் கதைக்கும் சம்பந்தமில்லையாதலால், அதை இப்போது விட்டுவிட்டு இந்தக் கதையை ஆராய்ந்து பார்ப்போம்.

கதையினுடைய முடிவுப்படி, அதாவது சிவன் என்கிற கடவுள் மற்ற இரண்டு கடவுள்களுக்கு வாக்குக் கொடுத்தபடி இப்போதெல்லாம் வாக்கைக் காப்பாற்றுவதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆண்டுதோறும் அவரே ஜோதியாக நின்று வந்தார் என்பதற்கும் கதைப்படியும் கூட எவ்வித ஆதாரமும் இல்லை. அந்தக் கடவுளுடைய பக்தர்கள்தான் அந்தக் கடவுளுடைய மானத்தைக் காப்பாற்றுவதாகக் கருதிக்கொண்டு, நாம் அறிந்தவரை செயற்கை முறையில் ஜோதியை உண்டு பண்ணிக் காட்டி வருகிறார்கள்.

இந்தக் கதையை உண்மையென்று வைத்துக்கொண்டால்,

  1. முதலில் கடவுள்கள் மூன்றுபேர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  2. கடவுளர்கள் ஒருவருக்கொருவர் கர்வத்தால் வாய்ச்சண்டையும் போடுவார்கள்,
    காயம் படாமல் கைச்சண்டையும் போடுவார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  3. கடவுளர்களாயிருந்தாலும் மேலே பறப்பதாயிருந்தால் பறவை வடிவமாகவும், கீழே போவதாயிருந்தால் பன்றி வடிவமாகவும் ஆகித்தான் போகவேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  4. கோடிக்கணக்கான வருஷங்களாக வான்வெளியில் வாடாமல், கருகாமல் வந்து கொண்டிருக்கும், தாழம்பூ என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்; தாழம்பூ வாய்விட்டுப் பேசும் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  5. கடவுள்களே சமயம் வந்தால் பொய் சாட்டிவிடத் தயாராய் இருந்தார்கள், பொய்சாட்சி கூறச்செய்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இப்படியாக, இந்தக் கதையிலிருந்து, இன்றைய மனிதனின் அறிவுக்கு ஒவ்வாத முறையில் பல இருந்தாலும் கூட. இந்தக் கதை கடவுள்களுடைய பெருமையைக் காட்டப் பயன்படுகிறதா? அல்லது கடவுள்
களுடைய அயோக்கியத்தனங்களைக் காட்ட
ஆதரவாயிருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்கும்படி நமது முதல் மந்திரி ஓமந்தூராரி
லிருந்து மற்றைய பக்த சிரோன்மணிகள் வரை பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆபாசமான இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்படும் ஒரு பண்டிகைக்கு எத்தனை மக்களுடைய எவ்வளவு பணம் வீண் செலவாக்கப்படுகிறது? இதனால் மற்ற ஊர்களுக்கும் தொற்று நோய்கள் எப்படிப் பரவுகிறது? அதனால் உயிர்ப்பலியாவோர் எத்தனை பேர்? என்பதையும் சிந்திக்கட்டும்! பிறகு கூறட்டும் இந்தக் கொளுத்தும் பண்டிகை அவசியந்தானா? மதச்சார்பற்ற சர்க்கார் அதை ஆதரிக்க வேண்டியதுதானா?

(11.12.1948 ‘குடிஅரசி’லிருந்து…)

உண்மை இதழ்,1-15.11.25

செவ்வாய், 16 டிசம்பர், 2025

ஏழைத் தொழிலாளர் கஷ்டத்தையும் இழிவையும் நீக்க கடவுளும் மதமும் மறைந்துதான் ஆக வேண்டும்

 


தந்தை பெரியார்

இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது.

இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம் உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக்காரணமாய் இருந்து சோம்பேறிகளுக்கும், பேராசைக் காரர்களுக்கும், மரடர்களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும் பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆஸ்திகமே” யாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆஸ்திகம் என்பதாக ஒன்று இல்லாதிருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக் காரனுக்கு இடமேது? குருமார்கள், முல்லாக்கள், பாதிரிமார்கள் அர்ச்சகர்கள் புரோகிதர்கள் பண்டாரசன்னதிகள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர் களுக்கு இடமேது? பிரபுக்கள் முதலாளிகள் லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள், ஜமின்தாரர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள் ஆகியவர்களுக்கு இடமேது?

அன்றியும் இந்த ஆஸ்திகம் என்பது இல்லா திருக்குமானால் கீழ் ஜாதிக்காரன், ஏழை, பிச்சைக்காரன், கூலி வேலையாள் முதலிய இழிவுபடுத்தப்பட்ட அடிமைப் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமேது? என்பவைகளைக் கூர்ந்த அறிவு  கொண்டு நடுநிலை என்னும் கண்ணாடி மூலம் பார்த்தால் யாவருக்கும் இதன் உண்மை நன்கு விளங்கும்.

அன்றியும் இன்றைய ஆஸ்திகப் பிரசாரகர்கள் எல்லாம் எங்கு பார்த்தாலும் சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல், நோகாமல் உட்கார்ந்து கொண்டு ஊரார் உழைப்பில் உண்டு உடுத்தித் திரியும் சோம்பேறிகளும் நயவஞ்சகர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய வேறு யாராவது இவ்வளவு இருக்கிறார்களா? என்பதைக் கவனித்தாலும் உண்மை விளங்காமல் போகாது.

பாமர மக்களின் மூடநம்பிக்கையை….

மேலும் இந்த ஆஸ்திகக் கூட்டம் எல்லாம் நாத்திகத்திற்கு அணுவளவாவது பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல் இருந்தாலும் நாத்திகம் பரவுவதற்குக் காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடித்து அதை சரிப்படுத்துவதற்கு யோக்கியதையோ இஷ்டமோ இல்லாமல் இருந்தாலும் அதைப் பற்றிக் கவனிப்பதென்பதில்லாமல் ஒரே அடியாய் “இது ரஷியப் பிரசாரம், போல்ஸ்விக் பிரசாரம், இவை மக்களை மிருகப் பிராயத்திற்குக் கொண்டு வரும் பிரசாரம், என்று சொல்லிப் பாமர மக்களின் மடமையை உபயோகப்படுத்திக் கொண்டு அவர்களை வெறியர்களாக்கி அதனால் ஆத்திகத்தை நிலைநிறுத்தி விடலாம் என்றே கருதுகிறார்கள் பாமர மக்களும், ஏழை மக்களும் தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்ட மக்களும் என்றென்றைக்கும் மூடர்களாகவே இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகத் தான் முடியுமே அல்லாமல் மற்றபடி அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி.

நாத்திகம் “ரஷ்யாவிலிருந்து  பரவுகின்றது” என்று சொல்லிவிடுவதன் மூலமாகவே ஆத்திகர்கள் நாத்திகத்திற்கு ஒரு இழிவு கற்பிக்க முயற்சிக்கின்றார்கள் அதற்கு உதாரணமாக  ரஷியாவின் நாத்திக திட்டத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

அதாவது “ரஷிய சர்க்கார் தங்கள் நாட்டில் 5 வருஷங்களுக்குள் கடவுள், மதம், கோயில் ஆகியவைகள் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த 5 -வருஷ நாத்திக திட்டத்தைப் பற்றி லண்டன் பார்லிமெண்டு மெம்பர் தோழர் ஆதல்டச்ச என்பவர் பேசிய ஒரு விருந்துப் பேச்சில் குறிப்பிட்டதென்னவென்றால்

  1. முதல் வருஷத்தில் கோவில்களையும், மார்க்க ஆராதனைகளையும் இடங்ளையும் மூடிவிடுவது.
  2. இரண்டாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் பிரார்த்தனைக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுடன், சர்க்கார் உத்தியோகத்தில் மத சம்பந்தமான எண்ணமுடையவர்கள் யாவரும் இல்லாமல் செய்து விடுவது மத சம்பந்தமான புத் தகங்கள் ஆதாரங்க ளெல்லாம் அழிக்கப் பட்டாகவேண்டும். நாத்திக படம், நாடகம், சினிமா முதலியவை நூற்றுக் கணக்காக நடத்த வேண்டும்.
  3. மூன்றாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் கடவுள் என்ற உச்சரிப்பே இல்லாதபடி செய்து விடுவது. இந்த உத்திர வுக்கு கீழ் படியாதவர்களை தேசத்தை விட்டு வெளியாக்கி விடுவது.
  4. எல்லாக் கோவில்களையும் பிரார்த்தனை தலங்களையும் பொது நன்மைக்கு பயன்படும்படி சினிமா இளைப்பாறும் மண்டபம், காலப் போக்கு ஸ்தலம் ஆகியவைகளாக மாற்றுவது.
  5. அய்ந்தாவது வருஷத்தில் அதாவது 01-05-1937க்குள் கடவுளுக்கு வீடோ வணங்க இடமோ நினைக்க உள்ளமோ ரஷிய எல்லைக்குள் இருக்கக் கூடாது. என்பதாகும். இந்த காரியங்களில் ரஷியர் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு இப்போதே அங்கு பல அறிகுறிகள் காணப்படுகின்றன. அன்றியும் ரஷ்யா இந்த நிலை எய்தி விட்டால் அங்குள்ள மனித சமுக விடுதலையும் சமத்துவமும் சுதந்திரமும் பெற்றுக் கவலை இன்றி மேன்மையாய் வாழ்வார்கள் என்பதற்கும் அங்கு அநேக அறிகுறிகள் தோன்றுகின்றன. எப்படியெனில் ரஷியர்கள் கடவுளையும் மதத்தையும் அழிக்கவேண்டும் என்று கருதியது இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே கருதிவந்திருக்கிறார்கள்.

என்றைய தினம் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏழை மக்களுக்கு, தொழி லாளிகளுக்கு தங்கள் கஷ்டத்தையும் இழிவையும் பசிக் கொடுமையையும் நீக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற உண்மையான எண்ணம் உதிக்கின்றதோ அன்றே கடவுளும் மதமும், ஒடித்தான் தீர வேண்டும், மறைந்துதான் ஆகவேண்டும்.

மதத்தின் பேரிலும் பாய்ந்து….

ஆகவே, ரஷிய ஜனங்கள் கொடுங்கோன்மை யாலும், முதலாளிகள் பிரபுக்கள்மார் ஆதிக்கத் தினாலும் அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து மீள வேண்டும் என்று கருதிய  நிமிடமே கடவுள் பேரிலும், மதத்தின் பேரிலும் பாய்ந்து அவற்றின் பிடித்தத்தை மக்களிடை இருந்து தளர்த்தி விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது வெற்றி முரசொலி “கடவுளை ஒழிப்பது பணக்காரர்களை ஒழிப்பதாகும்” “மதத்தை ஒழிப்பது, உயர்வு தாழ்வை அழிப்பதாகும்” என்பதேயாகும்.

இந்த முரசை ரஷியாவெங்கும் அடித்து ரஷிய மக்களின் உள்ளத்தில் கல்லின் மேலேழுதிய  எழுத்துப்போல் பதியவைத்த பிறகு தான் கொடுங் கோன்மை வேருடன் சாய்ந்தழிந்தது பணக்காரத் தன்மை அதன் கிளைகளுடனும் சுற்றங்களுடனும் மறைந் தொழிந்தது.

கடவுளும், மதமும் ஒழிந்து விட்டதால் “மக்களுக்கு” ஆபத்து என்பது ரஷியாவில் ஓரளவுக்கு ருஜுப்படுத்தப் பட்டதை நாமும் நன்றாய் மனப் பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் எந்த மாதிரியான மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். எனவே எப்படிப்பட்ட மக்களுக்கு ஆபத்து வந்து விட்டது என்றால், இன்றைய தினம்  இந்தியாவில் ஆத்திகப் பிரசாரமும், மத பிரச்சாரமும் செய்யும் மக்களைப் போன்ற மக்களுக்குத் தான் ரஷியாவிலும் கடவுளும் மதமும் ஒழிந்ததால் ஆபத்து வந்துவிட்டது. இப்படிப்பட்ட மக்கள் அங்கு 100க்கு 5 பேர்களோ 7 பேர்களோ தான் அதாவது சக்ரவர்த்திகளாகவும், அரசர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும், முதலாளிகளாகவும் பெரியபெரிய உத்தியோகஸ்தர், டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற பல ஊரான் உழைப்பில் கொள்ளை அடிப்பவர்களாகவும், பாதிரிகளாகவும் முல்லாக் களாகவும், குருமார்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருந்து வந்த மக்களுக்கே தான் ஆபத்து வந்து விட்டது.

மற்றபடி இவர்கள் தவிர்ந்த மற்ற 100க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஏழைகள் தொழிலாளிகள் கீழ்மைப்பட்டவர்கள் என்று சொல்லத்தக்க மக்கள் யாவருக்குமே மேன்மை கிடைத்து விட்டது.

அதுவும் தூங்கும் போது கீழ் மகனாய் கூலியாய் அடிமையாயிருந்து விழித்தெழும்போது மேன்மகனாய் விடுதலை பெற்றவனாய் சமவுரிமை அடைந்தவனாய் ஆனதுபோல் நிலைமை உயர்ந்து விட்டது.

ஆகவே, கடவுளும் மதமும் ஒழிவதின் மூலம் மக்கள் சமுகத்திற்கு எந்த நாட்டிற்கும் இவ்வித “ஆபத்து” நிலைமைதான் ஏற்படகூடும். இந்தப்படியான “ஆபத்து” நிலையை தாழ்த்தப்பட்ட அடிமைப் படுத்தப் பட்ட ஏழைத் தொழிலாளிமக்கள் அதுவும் இந்தி யாவில் மாத்திரமல்லாமல் ரஷியா தவிர உலகமெங்கணும் 100க்கு 90 பேர்களாயி ருப்பவர்கள் மேளதாளம் வைத்து வருந்தி வருந்தி அழைத்து வரவேற்க வேண்டிய வர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை இனி ஹரிபஜனையினாலும் ஆண்டவன் மகிமையினாலும் – அடியார்கள் தூதர்கள் பெருமையினாலும் ஒரு நாளும் மறக்கடித்து விட முடியாது.

உயர்வு – தாழ்வு இல்லாமல்…

உலகத்தில் எந்த ஆண்டவனை நம்பின சமுகமும் எற்த மதத்தை ஏற்ற சமுகமும், இந்த கதியில்தான் இருந்து வருகின்றதேயொழிய “ஆண்டவனையும் அவனை அடையும் மார்க்கத்தையும்” ஒழித்த ரஷியாவைப்போல் மனித சமுகம் உயர்வுதாழ்வு இல்லாமல் சமதர்மமாய் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா?

பணக்காரர்கள் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் கட்டியதினாலும், வேத பாட சாலைகள், யுனிவர்சிட்டிகள் மதராசாக்கள் கட்டி விட்டதினாலேயும், பத்திரிகைகாரர்கள் வேதத்தின் பெருமையையும், புராணத்தின் மகிமையையும், பக்கம் பக்கமாய் எழுதி “ஆண்டவனையும் மார்க்கத்தையும்” புகழ்ந்து கொண்டு “நாஸ்திகர்”களை வைவதினாலேயும் ஏழை மக்கள், இழிவுபடுத்தப்பட்ட மக்கள், பாடுபட்டுப் பட்டினி கிடக்கும் மக்கள் எழுத்து வாசனை அறிய வகையில்லாமல் தடுத்து தாழ்த்திவைக்கப் பட்டிருக்கும் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு விடமுடியுமா? என்றுதான் கேட்கின்றோம்.

இப்படிப்பட்ட மக்கள் எந்த நாட்டில் எந்த மார்க்கத்தில் எந்த ஆண்டவன் படைப்பில் இல்லாமலிருக்கின்றார்கள்? என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம். இந்த குறைகளுக்கு கொடுமைகளுக்கு ஆண்டவன் செயல்” என்பதல்லாமல் வேறு என்ன பதில்? இந்த ஆத்திகர்கள் சொல்லக் கூடும் என்று பணிவாய்க் கேட்கின்றோம். உலகம் தோன்றிய பல “லட்சக்கணக்கான” காலங்களாகி விட்டன. “கடவுள்கள்” தோன்றி வெகு காலம் ஆகிவிட்டன. மார்க்கங்கள் தோன்றின ஆயிரக்கணக்கான வருஷங்களாகி விட்டன. இத்தனை கால கடவுள் – மத ஆட்சியிலும் மனித சமுகம் சீர்படவில்லை கவலை யல்லாமல் வயிற்றுக்கு ஆதாரமில்லை. மனிதனுக்கு மனிதன் அடிமைப் பட்டு உழைக் காமல் வாழ முடியவில்லை என்கின்றதான நிலைகள் இன்னமும் இருக்குமானால் இந்த கடவுள்களும், மார்க்கங்களும் இனி அரை நிமிஷமாவது உலகில் இருக்க அருகதை உண்டா? என்றுதான் கேட்கின்றோம்.

சமதர்ம ஆட்சியே வேண்டும்

160 வருஷ காலம் இந்தியாவை பிரிட்டிஷார் ஏகபோக சர்வாதிகார சக்கிரவர்த்தியாய் ஆண்டும் இந்தியாவில் 100க்கு 90 தற்குறிகளும், 100க்கு 97க்கு கீழ் ஜாதியாரும், மற்றும் தீண்டாத ஜாதியும், தெருவில் நடக்காத ஜாதியும் இன்னும் இந்தியாவில் இருப்பதினால் அவர்கள் இந்தியாவை ஆள ஒரு சிறிதும் யோக்கியதை  கிடையாது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அவர்களை விரட்டி அடிக்க எப்படி பாடுபடுகின்றோமோ, அதுபோல் தான் ஏன்? இன்னும் அதற்கும் மேலாகத்தான் இந்தக் கடவுள்களையும், மார்க்கங்களையும் விரட்டி அடிக்க கடமைப்பட்டிருக்கின்றோம் எப்படி எந்த மதமும் எந்த மார்க்கமும்  மக்களை சமமாக பாவிக்காது சமமாக ஆக்காது. இதுவரை பாவிக்கவும் இல்லை ஆக்கவும் இல்லை என்று சொல்லுகிறோமே அதுபோல் தான் இன்று உலகில் வேறு அந்த அரசும், ஆட்சியும் மக்களை சமமாக  பாவிக்க வில்லை – நடத்த வில்லை என்று சொல்லி எப்படிப்பட்ட ஆட்சியும் வேண்டியதில்லை சமதர்ம ஆட்சியே வேண்டும் என்கின்றோம். இதனால் யாருக்கு என்ன கஷ்டம்? என்பது நமக்கு விளங்க வில்லை. யாராவது எங்கள் ஆண்டவன் கட்டளை எங்கள் மார்க்க கொள்கை எங்கள் அரசியல் முறை இதுதான்” என்று சொல்ல வருவார்களானால் குஷாலாய் வரட்டும் மண்டியிட்டு வரவேற்க காத்திருக்கிறோம். அவர்களோடு ஒன்று பட கலர முன்னிற்கிறோம். அதில்லாமல் “இது போல்ஷவிக் பிரசாரம்”, “இது மனித சமுகத்திற்கு ஆபத்து”, “இது தேசியத்திற்கு ஆபத்து”, “இது சுயராஜ்ஜியத்திற்கு ஆபத்து”, “இது சட்டத்திற்கும் நீதிக்கும் அமைதிக்கும் ஆபத்து என்கிறதான பூச்சாண்டிகளைக் கொண்டு ஏழைகள் பட்டினி கிடக்கின்றவர்கள் – கீழ்மைப்படுத்தப்பட்டவர்கள் கண்களில் மிளகு பொடியைக் தூவ முற்பட்டால் கண்கள் போனாலும் உயிர் போனாலும் எத்தனை காலமாவதானாலும் எப்பாடு பட்டாகிலும் இதைச் சாதித்துத் தீர வேண்டுமென்றுதான் சொல்லுவோம் – அவர்களுக்கு இதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லுவோம்.”

‘குடிஅரசு’ – தலையங்கம் – 04.12.1932

- விடுதலை நாளேடு,7.12.25

வெள்ளி, 5 டிசம்பர், 2025

நீதிக்கட்சி பற்றி பெரியார்!

 

சமூகநீதிப் புரட்சி செய்த இயக்கம்!

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது.

அதி தீவிர காங்கிரஸ்வாதி யாகவும், அதி தீவிர தேசிய வாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும். அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால் அதற்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.

இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம் முயற்சியின் வெற்றியும் வெகுகாலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்கும், அவர்களது ஆதிக்கத்துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேஷத்துக்கும், விஷமப் பிரச்சாரத்துக்கும் ஆளாக வேண்டியதாய் இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியானது, பார்ப்பனரல்லாதாருக் குள்ளும் பிரிவினையையும் கட்சி பேதங்களையும் உண்டாக்கித் தொல்லைப்படுத்த வேண்டியதாகிவிட்டது.

எது எப்படி இருந்த போதிலும், பல காரணங்களால் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இன்று சென்னை அரசாங்கத்தில் ஒரு அளவுக்காவது நிலைநிறுத்தப்பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங்கத்தையும் எட்டிப் பார்க்கும்படி செய்துவிட்டது.

இந்த நிலையானது, இனி எப்போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் (ஒழியாது) ஒழிந்து விட்டாலும்கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசாங்கத்தார் உணர்ந்து விட்டார்கள். ஆனதால் அக்கொள்கை இனி மாற்றப்படுவது என்பது சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகிவிட்டது. பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோகங்களிலும் இன்று இருந்து வரும் விகிதாச்சார எண்ணிக்கை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் குறைவாக இருக்கின்றது. என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக் கொள்ளப்பட்டாய் விட்டது என்பது எவரும் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தியே ஆகும்.

அய்க்கோர்ட்டு ஆட்சிக்குள்பட்ட இலாகாக்களில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை கையாளப்படாததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியின் பலமற்ற தன்மையேயாகும்.

ஜஸ்டிஸ் கட்சி பலமுள்ளதாக இருந்து, அக்கட்சித் தலைவர்கள் பொது நலத்தைவிட, சுயநலத்தைப் பெரிதாக எண்ணாதவர்களாய் இருந்து, தங்களது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்திருப்பார் களேயானால் 4, 5 வருஷங்களுக்கு முன்பாகவே, அய்க்கோர்ட் இலாகாவிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவமுறை அமுலுக்கு வந்திருக்கும்.

கட்சிக்குப் பலமும், ஒற்றுமையும் இல்லாதிருந்ததால், அய்க்கோர்ட்டாரை வகுப்புவாரி முறையைக் கையாளும்படி கட்டாயப்படுத்தத் தைரியமில்லாமல் போய்விட்டது.

என்றாலும் இப்போது பொது ஜனங்களுடய உணர்ச்சியானது அது விஷயத்தில் பலப்பட்டு விட்டதாலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இனி யாராலும் தடுக்க முடியாத மாதிரியில் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும், இனி அதை யாராலும் அசைக்க முடியாது என்கின்ற நிலைபெற்று விட்டதாலும், இப்போது அய்க்கோர்ட் டாரையும், இந்த முறையைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்கின்ற நிலையில் கொண்டு வந்துவிட்டுவிட்டது.

அதாவது “தென் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு 84 கிளார்க்குகள் வேண்டி இருக்கிறது. அவற்றுள்: பார்ப்பனரல்லாதார் 42, முகமதியர்      17, இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர், அய்ரோப்பியர் ஆகியவர்கள் 17, தீண்டப்படாத வகுப்பார் உள்பட மற்ற வகுப்பார் 8.  ஆக 84 பேர்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டியிருக்கிறது” என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

(இது 11.06.1935-ந் தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் இருக்கிறது)”

‘ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது? சுமயரியாதை இயக்கம் என்ன செய்தது?’ என்று கேட்டவர்கள், இதைச் சிறிது கவனித்துப் பார்த்துவிட்டு அப்புறம் கேட்கட்டுமென்று ஆசைப்படுகிறோம்.

(‘குடிஅரசு’ – தலையங்கம் – 23.06.1935)

- விடுதலை நாளேடு,20.11.25

‘டி.எம்.நாயர் – தியாகராயர் – நான்’ நாங்கள் இராட்சதர்களாக்கப்பட்டது எப்படி?

தோழர்களே! நீங்கள் யோசிக்க வேண்டுவது அவசியம். டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளைஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலுவலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இரயிலடியிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், ‘யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக்கின்றன?’ என்று கேட்கவும், தனக்குக் காவலாக ஓர் இரகசிய போலிஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், வேறு நபர் தன்னுடன் இல்லாமையால் அவரிடமே தன் சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஓர் இரகசிய போலீஸ் அதிகாரி பின்பற்றும் அளவுக்கு தேசியவாதியாய் இருந்த அவர்தான் – பிறகு ‘தேசத் துரோகி’யாக்கப்பட்டார். ஆரம்பத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர். நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.

ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதி யாக இருந்தவர்தான். 1914-இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங்களெல்லாம் துவக்கத்திலேயே ‘இராட்சதர்களாக’ ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல், இழிவு பற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்ற பிறகு தான் நாங்கள் ‘இராட்சதர்களா’க்கப்பட்டோம்.

பிறகுதான் அவர்கள் எங்களை விட்டுவிட்டு வேறு விபிஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத்தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறுபக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தியோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத் தான் இருந்து வந்தது.

காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும். அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்கவேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915-இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜ விசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்துவருகிறது.

ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் – வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான் – காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய,  அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது என்பது கண்கூடு.

( ‘விடுதலை’ – 14.12.1950)

விடுதலை’ – 20.11.25