திங்கள், 5 ஜூன், 2017

கருப்புச் சட்டைப் படை:

தந்தை பெரியார்



கருப்புச் சட்டைப் படை என்பதாக ஒரு படை ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் திரட்டப் படுவது பற்றிப் பலருக்குக் கிலி ஏற்பட்டு அந்தக்கிலியைப் பரிகாசம் செய்வதன் மூலமாகப் பல இடங்களில் காட்டி வருகிறார்கள். நாட்டில் அரசியலின் பேராலோ மதத்தின் பேராலோ, சமுதாயத்தின் பேராலோ ஏற்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்சியாரும் அக்கட்சித் தொண்டாற்றுவதற்கு என்று ஒவ்வொரு படையை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ராம தண்டு, அனுமான் சைனியம், செஞ்சட்டை, நீலச்சட்டை, இந்துஸ்தான் சேவாதளம் என்பன போன்ற பல படைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் எவரும் ஏதும் பேசாமல் இருந்துவிட்டு, கருப்புச் சட்டைப்படை என்பதற்கு ஆக மாத்திரம் ஏன் இத்தனை பேர்கள் பரிகாசம் செய்யவும், ஜாடை பேசவும் (கேலிச்சித்திரம்) பொம்மை போட்டுக் காட்டவுமான காரியங்கள் செய் கிறார்கள் என்பது விளங்கவில்லை. எப்படி இருந்தபோதிலும் கருப்புச் சட்டைப்படை என்பது மற்றப் படைகளைவிட மக்கள் கவனத்தை அதிகமாகக் கவர்ந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை என்பதோடு, அதற்கேற்றபடியே மக்கள் கவனத்தை ஆழ்ந்து செலுத்தும்படியான அளவுக்குக் கருப்புச் சட்டைப்படை வேலை செய்யப் போகிறது என்பதிலும் அய்யமில்லை.

கருப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக்கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ, அல்லது நாசவேலை செய்து நம் மக் களையே பலி கொடுக்கவோ, நம் பொருளையோ பாழாக்கிக்கொள்ளவோ அல்ல என்பதைத் தெளிவாக வலியுறுத்திக் கூறுவோம். மற்றபடி அப்படை எதற்கு ஆக என்றால் இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என் பதைக் காட்டவுமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும்.

கருப்புச் சட்டைப் படை என்கின்ற பெயர் சிலருக்கு இழிவாக இருப்பதாகக் காட்டப்படுகிறது. அனுமான் படை, வானர சைனியம் என்று சொல்லப்படுவதை மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதி பொறுத்துக் கொண்டிருக்கும்போது, கருப்புச் சட்டைப் படை என்பது மாத்திரம் மக்களுக்கு எந்த விதத்தில் இழிவாக கருதப்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. சிலரால் கருப்புச் சட்டை பார்வைக்கு அசிங்கமாக இருப்ப தாக சொல்லப்படுகிறது. பகுத்தறிவு உள்ள மக்கள் உச்சிக் குடுமியும், மழுங்கச் சிரைத்த தலையும்,பட்டை நாமமும், சாம்பல் பூச்சும், தொப்பை வயிறு தொப்புள் குழியுடன் தெரியும்படியான பஞ்சகச்சமும்; சூத்திரன் என்று ஒரு ஜாதியும், பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன், சக்கிலி என்று ஒரு ஜாதியும் அதற்கு ஒவ்வொரு மாதிரி அடையாள வேஷமும் கொண்டு அவற்றை அந்தந்த மக்களும் ஏற்றுக் கொண்டு நடக்கும் காட்சியைவிடவா கருப்புச் சட்டை அசிங்கமாகவும் கேலியாக வும் இருக்கக்கூடும் என்று கேட்கிறோம்.

மற்றும் கன்னான் வார்த்துக் கொடுத்த செம்புப் பொம்மைகளைச் சுவாமிகள் என்று சொல்லி அதை வண்டியில் வைத்து வாத்தியத்துடன் இழுப்பதும், அதற் குக் கல்யாணம் காரியாதி செய்வதும் பிள்ளை குட்டிகள் இருப்பதாகக் காட்டுவதும் சோறு பலகாரம் படைப்பதும் ஆன முட்டாள் தனமான காரியங்களைவிடவா கருப்பு சட்டைக்காரர்கள் மக்களுக்குக் கேலிக் கிடமாய் நடந்துகொள்ளுகிறார்கள் என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறோம்.

இந்த நாட்டில் உண்மையான முட்டாள் தனத்தை யும், காட்டுமிராண்டித் தனத்தையும், சுயநல சூழ்ச்சிக் காரர்கள் மக் களுக்குள் கடவுள், மதம் என்னும் மயக்க வஸ்துக்கள் பேரால் புகுத்தி மடையர் களாகவும், மானமற்றவர்களாகவும் இழிவுபடுத்தி வைத்திருக்கும் காரியங்களைப் பற்றி இந்நாட்டு மக்கள் சிறிதும் கவலையும் இல்லாமல், மான உணர்ச்சியும் இல்லாமல் பொறுத்துக்கொண்டு, பின்பற்றி வந்த கார ணத்தாலேயே அவைகளை ஒழிக்கவோ, அவ்விழிவுகளிலும், மடமையிலும் இருந்து வெளிவரவோ எவராலாவது செய்யப்படும் முயற்சிகளையெல்லாம் அம்முயற்சியின் எதிரிகள் பரிகாசம் செய்தும், பழி சுமத்தியும், குறும்புப் பிரசாரம் செய்தும், மற்றும் பல வழிகளில் வஞ்சகம், துரோகம், பலாத்காரம் முதலியவைகளைச் செய்தும், அடக்கி வைத்தும், ஒழித்தும் வந்திருக்கிறார்கள். அதுபோலவே திராவிட மக்களின் இழி வையும், மடமையையும் நீக்க இன்று முன் வந்திருக்கும் கருப்பு சட்டைப் படையைப் பற்றி எதிரிகள் கேலி செய்து பழி சுமத்தி குற்றம் கற்பிப்பது இப்போது அதிசயமல்ல என்போம்.

வெள்ளைக்காரனை ஓட்டுவது என்று பெயரை வைத்துக்கொண்டு அதற்கு ஆக என்று ராட்டினம் சுற்றுவதும், வெள்ளையனை ஓட்டும்படை (தேசிய வீரன்) என்று பெயர் வைத்துக்கொண்டு கோணிச்சாக்கை (கதர் துணியை) கட்டிக்கொண்டு குரங்கு குல்லாயை (கதர் குல்லாயை) தலையில் மாட்டிக்கொண்டு திரிகிறதுமான பைத்தியக் காரத்தனத்தை விட, ஆபாசக் காட்டு மிராண்டி செய்கையை தோற்றத்தைவிடக் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு இருப்பது எந்தவிதத்தில் ஆபாசமாகவும், பைத்தியகாரத்தனமாகவும் ஆகிவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

மனிதனுக்கு மானம் பிரதானமே ஒழிய அழகு பிரதானமல்ல. அழகு என்பது நாம் ஏற்படுத்திக் கொள் வதாகும். நம் பெண்கள் ஆபாசமாய் வேஷம் போட்டுக் கொள்ளுவதைக் காதிலும், மூக்கிலும் ஓட்டைகள் போட்டுக் கொள்ளுவதை, அதில் விகா ரமாய் நகைகள் என்று கண்ட கண்ட வைகளை மாட்டிக் கொள்ளுவதை அழகென்கிறோம். அப்படி இல்லாமலிருப்பதை அசிங்கமாக இருப்பதாகக் காண்கிறோம். ஆனால் மானமும், மடமையும் நாம் ஏற்படுத்திக் கொள்வதல்ல. நமக்கு இயற்கையாகவே அவை அறியப்படக் கூடிய வைகளாகும்.

எனவே, கருப்புச் சட்டையைப் பற்றி மற்றவர்கள் (நம் எதிரிகள்) கேலி செய்கிறார்கள் என்று படை வீரர்கள் யாரும் கருதிவிடக் கூடாது என்பதோடு நிர்ப்பந்த மாக ஏற்படக்கூடிய சமயம் தவிர மற்ற சமயங்களில் கருப்புச் சட்டை மாத்திரமல் லாமல் கருப்பு உடை அதாவது வேஷ்டியும் அல்லது பைஜாமா என்றும் கால் சட்டையும் கூட கருப்பாய் இருந்தாலும் நலமேயாகும். சட்டைகளை கருப்பு சட்டைப் படை ஸ்தாபனத்தில் இருந்தே விலைக்குச் சப்ளை செய்ய முயற்சிகள் நடந்துவருகின்றன.

பெண்களும் இப்படையில் சேரலாம். அவர்கள் கருப்புச் சேலை அல்லது குறைந்த அளவு கருப்பு ரவிக்கையையே சதா அணிந்து கொள்ள வேண்டும். கூடுமான வரையில் நகைகளை வெறுத்துத் தள்ள வேண்டும்.

இன்று நம்மைப் பரிகாசம் செய் கிறவர்கள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும்படியான அளவுக்கும், நம்மைப்போல் அவர்களும் காப்பி அடிக்கும்படியான அளவுக்கும் நாம் வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம், வேலை செய்யவும் போகிறோம். இதற்கு ஆக நாம் ஒவ்வொருவரும் குடும்பம் வாழ்வு என்பவைகளைத் துச்சமாகக் கருத வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்று தோன்றியுள்ள இந்த திராவிடர் கருப்புச் சட்டைப் படை இயக்கம் பொதுநல வாழ்வின் பேரால் தொப்பை வளர்க்கவோ யோக்கியதைக்கு மேற்பட்ட சுகவாழ்வு வாழவோ ஏற்பட்டதல்ல, அப்படிப் பட்டவர் என்று சந்தேகிக்கப்பட நேர்ந்த எவருக்கும் கூடத் திராவிட இயக்கம் இடம் கொடுத்தால் இயக்கம் தற்கொலை செய்து கொள்ளச் சம்மதித்தது போலாகும்.

இயக்கத்திற்குத் தொண்டாற்றுவதில் எவரும் தன் நலத்தைச் சிறிதாவது விட்டுக் கொடுக்கத் தயாராகவும், தனது மானாவ மானத்தைக் கூட லட்சியம் செய்யாமல் இயக்கத்திற்கு தலை கொடுக்கக் கூடியவர் களாகத் துணிவுகொள்ள வேண்டும். விளம் பரத்திற்கும், சுயநல வாழ்வு மேம்பாட்டிற்கும் என்று கருதி இயக்கத்தை ஏணிப் படிக்கல்லாக உபயோகிக்கக் கருதுபவர்கள் திடீர் என்று கவிழ்க்கப்பட்டு விடுவார்கள் என்பதை மனதிலிறுத்திக் கொண்டு இதில் கலக்க வேண்டும். உண்மையான இயக்கத் தில் இது இயற்கை. ஆதலால் சொந்த வெட்கம், மற்றவர்கள் செய்யும் பரிகாசம், விஷமத்தனமான போதனை ஆகியவை களுக்குக் கருப்புச் சட்டைக்காரர்கள் சட்டை செய்து காது கொடுக்கக்கூடாது என்பதை நன்றாய் வலியுறுத்திக் கூறு கிறோம். அடுத்த மாதம் சென்னையில் கூடும் நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் கருப்புச் சட்டை விதிகள் மற்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படும்.

இப்போது படைவீரர்கள் தங்கள் கழுத்து அளவு, மார்பு அளவு, உயரம் முதலியவை களைத் தெரிவிக்க வேண்டும். சட்டை 1க்கு ரூபாய் 1-12-0 அல்லது 2-க்குள் விலையாக லாம். சட்டை தேவை உள்ளவர்கள் எவ் வளவு வேண்டும் என்பதையும் எழுத வேண்டுகிறோம்.

- ‘குடிஅரசு’ தலையங்கம் - 17.11.1945

-விடுதலை,21.5.17

சைனா - சைவம் -சித்திரபுத்திரன்


09.02.1930 - குடிஅரசிலிருந்து...



சைவன் : - அய்யா தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா?
வைணவன் : - ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டுகால் பிராணிகளில் ஏணி வகையராவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகையராக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டுமரம் முதலியவைகளையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக் காரர்களைப் பின்பற்றுவ தாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன்.

சைவன் : - அப்படியா இது நல்ல சைவம்தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போகவேண்டும். நான் போய்விட்டு வருகிறேன். (என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ? என்று நினைத்து ஓடி விட்டார்.)

-விடுதலை,27.5.17

கணவர்களைத் திருத்துங்கள்

தந்தை பெரியார்

 

 

 

தலைவரவர்களே! தாய்மார்களே!

இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட் டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது.

சென்னையைப் பற்றி...

இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும் என நான் நினைக்கவில்லை. சென்னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிட மானது என்று நான் சொல்லுவதுண்டு. இதை நான் அடிக் கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக் கிறேன். சென்னையிலுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் மூடநம்பிக்கையை விடுங்கள். பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள், நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும், அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள் வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார் களே என்றும், உங்களை இழித்துக் கூறி உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பலதடவை கேட்டிருக்கிறேன். ஆனதால் தான் வெளி ஜில்லாக்களைப்போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள்கைகள் அவ்வளவு அதிகமாக பரவ வில்லையோ என்றும் கருதுவதுண்டு. ஆனால், இன்று இப் பெண்கள் மாநாட்டையும் இங்குள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும், இங்கு நடந்த உபன் யாசங்களையும் தீர்மானங் களையும் பார்க்கும்போது எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது, சென்னை பெண்மக்கள் ஆண்மக்களை விட எந்த வகையிலும் பின்னடைந்தவர் களல்லர் என்பதைக் காட்டுகிறது. ஆச்சாரி யாருக்கு நன்றி

இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண்கிறேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரியதொரு வெளிச் சத்தையும், தைரியத்தையும் கொடுக் கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய ஆதாரம் எனது பழம்பெரும் தோழராகிய கனம் ஆச் சாரியாருடைய பெருங் கருணையேதான். இதற்காக அவருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி செலுத்துகிறேன். பின்னும் இக்கிளர்ச் சியும் உணர்ச்சியும் மேலும் மேலும் வளர வேண்டுமானால், இன்றைய அடக்கு முறை ஆட்சியை இதுபோலவே குறைந் தது இன்னும் ஒரு வருஷத்திற்காவது நடத்தி உதவ வேண்டுமென்று எனது அருமைத் தோழர் ஆச்சாரியாரை மற்று மொருமுறை வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

உண்மையில் இன்றைய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரதி நிதித்துவம் வழிந்தோடுகின்றது. அநேக பிரபல பெண்கள் கூடியிருக்கிறீர்கள். பல அருமையான தீர்மானங்களையும் செய்தீர்கள்.

சூழ்ச்சி மகாநாடு

ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரியாத சில பெண்கள் கூடிக் கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்கள் அபிப்ராயத் துக்கு நேர்மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள் பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப் படுத்தியிருக்கின்றன. அது எதற்காகச் செய்யப்பட்டது என்றால், இம்மாநாடு கூடப்போவது தெரிந்து இம் மாநாட்டுத் தீர்மானங்கள் அரட்டை செய்யச் செய்வதற் காகவும், இங்கு செய் யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிநிதித் துவம் பெற்றதல்லவென்று கருதும்படி செய்வதற் காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மிடையில் (தமிழர் களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை அறியாத இரண்டு பெண்களைக் கொண்டு நம்மைக் கேலி செய்யவும், தாழ்வாக நினைக்கவும் இடம் உண்டாக்கப் பார்க்கிறார்கள்.

வடமொழிச் சார்புடையது - ஆரியக் கலைகளுக்காக இருக்கிறது என்றும், அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தி என்கின்ற ஒரு மொழியை நம் குழந்தைகளுக்கும் புகட்டி, நம்மக்கள்தம் மானத்தை மாசுபடுத்தும் ஒரு சூழ்ச்சியை எதிர்ப்பதற்காக நாம் இங்கு கூடினோம். நம்மில் பல கருத்துக் காரர்களிருக்கலாம். சைவ, வைணவ மதக்காரர்களிருக்க லாம். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இருக்கலாம், மேல்ஜாதி கீழ் ஜாதிக்காரர்கள் என்பவர்களிருக்கலாம். எந்த மதத்தை யும், ஜாதியையும் நம்பாதவர்களுமிருக்கலாம்.

எனவே, நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள் கைக்காக நாம் ஒன்றுசேர்ந்து பாடு படவேண்டுவது இன்றியமையாததாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரண மாகவே நம் மானத்துக்கு ஏற்க கலைகள், உணர்ச்சிகள் காரணமாகவே நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். உண்மை யிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மை யில் ஏற்படுமானால் - அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும். மேலும், அவர் கடினமான அடக்கு முறை களைக் கையாளுவாரானால், அதனால் தமிழர்கள் மனங்கொதிப்படையுமானால் அது எங்குபோய் நிற்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத் திலும் ஏன் இட்லருணர்ச்சியை உண்டாக் காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?

பெண்கள் பாராட்டு

இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம் நிறைவேற்றிய போது உண்மையிலேயே எனக்கு பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! ஆண்கள் சென்றதைப் பற்றி நீங்கள் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண் மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்? நீங்கள் ஏன் செல்லக் கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோயில் பிரவேச விஷயத்தில் திருவி தாங்கூர் ராஜாவைப் பாராட்டிவிட்டு, தோழர் எம்.சி. ராஜாவை ஏமாற்றிவிட்டது போலல்லவா இருக்கிறது. (சிரிப்பு) இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து, தான் சிறைக்குப் போகத் தயார் என்றார். அந்தப் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

ஆனால், அது நாளைக்குத் தெரியப் போகிறது. அக்காலம் - அதாவது தமிழ்ப் பெண்களை சிறை செய்யும் காலம் வந்தால் தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி னார். நான்கூட அப் போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்தோமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு பெருமையாய்ப் பேசினார். ஆனால், பழம் பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவது போல்தானே இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர் கள் கடமையைப் பற்றியும் பேசினால் தானே நீங்கள் உரிமை பெறலாம் - நன்மையடையலாம். பெரியவர்கள் தேடிவைத்த சொத்தைக் கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கு வகை என்ன? இவை கட் கெல்லாம் - பெண்கள் முன்னேற்றத் திற்கும் வீரத்திற்கும் - இம்மாநாடு ஒரு வழி காட்டிவிட்டது.

பார்ப்பனர்கள், ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்து, தங்களைப் பற்றியே தங்களுக்குத் தெரியாத பெண்களைப் பிடித்தும் படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம், பதவி வாங்கிக் கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாராக உள்ள, நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில் இருக்கின்றார்கள். ஆனால், நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின் றனர்.

நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக்கும், கனம் சுப்பராயனுக்கும் பல ஊர்களில் எத்தனையோ பார்ப்பனப் பெண் கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார் மீது அவர்கள் குறை கூறினார்கள்? பெண்களா கிய நீங்கள் தலைநிமிர்ந்து எங்கள் உரி மையில் தலையிட்டால் நாங்கள் சும்மா யிரோம் என்றால் என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன் இருக்கிறது? ஆணுடன், பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட்டத் தில் ஆணுக்கு ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே, ஆண்களைப் போல் பெண்களும் தமிழ்ப் போராட்டத்தில் இறங்கினால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.

கணவர்களைத் திருத்துங்கள்

நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக் கூடாது? சிறை என் றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டுவதில்லை. எந்தச் சட் டத்தையும் மீறவேண்டியதில்லை. காங்கிரஸ் பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்துவேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டியதில்லை. தமிழ் வாழ்க! என்றால் சிறை பிடிப் பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே ஆச்சாரியார், சிறைக்கு வா என அழைத்துக்கொள் வார். (கைத்தட்டல்) எனக்கு ஒரு பயம்! என்னவென்றால், எங்கே அவர் பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால் பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போகவேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல் லைக்கோ எல்லையில்லை. இந் நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது - நாட்டுக்குப் பாடுபடாது ஆண்கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக் கும் இடம் பார்த்து அவர்களைக் குத்த வேண்டும். வீட்டிற்குள்ளே அனு மதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதேபோல் அநேக நாடு களில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துத் திருத்திய தாகச் சரித்திரம் கூறுகின்றது. அனேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக் காண பயப்படுகிறார்களாம். அவர்களைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கட்குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின்வந்து விடு வார்கள். நம்மில் ஜாதிமத உயர்வுகளையும், சுயநலத்தையும், மறக்க வேண்டும்.

இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்படவில்லை), ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒருவரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப்பட்டவனாயிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத்தானே நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால், நாஸ்திகன் என்று சாமான் வாங்க மாட்டீர்களா? அன்றி நான் ஏறின ரயில் வண்டியில் ஏறமாட்டீர்களா? அல்லது உங்கள் வண்டியில்தான் எனக்கு இடம் கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. ஏனெ னில், இது சில காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. அதைக் கேட்டு சில சோணகிரிகள் ஏமாற லாம்.

இழி குணமில்லை

இன்று தேசிய மகாசபை என்று கூறப்படும் காங்கிரஸ் தலைவராக, ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவகர்லால் தலைவராயிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல் லிக்கொள்கிற முறையில் எனக்குச் சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கை யில்லையென்பதாகக் கூறி, கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூற மறுத் திருக்கிறார். இன்று அவருடைய வீரத்தைப் பற்றி சூரர், தீரர் என்று பாராட்டுகிறார் களே ஒழிய, எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவகர்லால் நாஸ்திகர் என்பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால், எங் களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.

ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிருந்தாலும் நாம் என்ன செய்தால் வாழமுடியும் என்பதை யோசிக்க வேண் டும். காடு வா வா என்கிறது. எனக்கு மட்டி லும் இதிலென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன்; பார்ப்பனர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப் பேசுகிறார் கள் - எழுதுகிறார்கள். ஒரு குரங்குப் பத்தி ரிகை, தோழர் சண்முகம் செட்டியாரைப் பற்றி செக்கு போட்டு - செக்கு ஆட்டுகிற மாதிரி படம்போட்டு இழிவுபடுத்திற்று.

நம்மைக் கழுதை என்றும், நாய் என்றும் வயிற்றுச் சோற்றுக்காரர்களென்றும் கூறி வருகிறது. இதைப் பார்த்து உங்கள் ரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந் நிலையில் வீணே தமிழ்நாடு தமிழனுக்கு என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம், காப் பாற்றப்பட - நாடு வளர வேண்டுமானால் பெண்மணிகளாகிய நீங்கள் துணிந்து முன்வரவேண்டும். இதைக்கருதியே இம் மாநாட்டைக் கூட்டினீர்கள், பல தீர்மானங் கள் நிறைவேற் றினீர்கள். பெண்கள் உண்மையில் வீரமுடையவர்கள்தான். நினைத் ததை முடிக்கும் ஆற்றலுடைய வர்கள் தான் என்பதை செயலில் காட்ட வேண்டும். ஆனால், சிறைக்குச் செல்லும் ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது, நீங்கள் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலாகாது. (நீண்ட கைத்தட்டல்)

13-11-1938 ஆம் தேதி அன்று சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தலைவர் ஈ.வெ.ரா. பேசியது.

குடிஅரசு - சொற்பொழிவு - 27-11-1938

-விடுதலை,28.5.17