செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

வைதிகர்களின் முட்டுக்கட்டை

 

தந்தை பெரியார்

உலகமெங்கும், 'சுதந்திரம்', 'சமத்துவம்', 'சகோதரத்துவம்', விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக் கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சியினால், மதக் கோட்டைகளும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணா சிரமத் தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவு குண்டுகளால் அடியோடு பெயர்த்தெறியப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதிகப்  பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளை யும், பழைய பஞ்சாங்க கட்டுகளையும், சாஸ்திரக் குப்பை களையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக்கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதிகப் பிடுங்கல்களின் போக்கையும், மனப்பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20 - 06 - 1932ல் தஞ்சை ஜில்லா திருவிடை மருதூரில் கூடிய பிராமணர் மகாநாட்டின் தீர்மானங்களைக் கொண்டு உணரலாம். இனி அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டி ருக்கும் தீர்மானங்களையும் அவைகளின் மூலம் அந்த மிரட்சியடைந்த மூளையையுடைய வைதிக மக்களின் போக்கையும் கவனிப் போம்.

பெண்கள் விஷயமாக அம்மகாநாட்டில் நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானத்தில், பெண்கள் மகாநாடுகளை யெல்லாம் கண்டித்தும், பெண்கள் மகாநாடுகளெல்லாம் மேல்நாட்டு கல்விகற்ற பெண்களால் கூட்டப்படுகின்ற தென்றும்  அவர்கள் விரும்பும் சுதந்திரங்கள் மதத்திற்கும் சமுக பழக்க வழக்கங்களுக்கும் விரோதமானவை என்றும், ஆகவே, அவர்களுடைய அபிப்பிராயங்கள் இந்திய பெண்களின் அபிப்பிராயம் அல்லவென்றும், ஜன சமுகத்திற்கும் அரசாங் கத்திற்கும் எச்சரிக்கை செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வைதிகர்களின் புத்தியற்ற தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இன்று பெண்கள் விரும்பும் சுதந் திரமும், சொத்துரிமையும் கல்வியறிவும், சுகாதார வாழ்க்கையும் ஆண்களைப் போல் வயது வந்தபின் தங்கள் விருப்பப்படி மணஞ்செய்து கொள்ளும் உரிமையும் விதவைகளாகிவிட்டால் மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமையும், கணவனுடைய கொடுமையையோ நடத்தையையோ சகிக்கமுடியாதபோது மண விடுதலை செய்து கொள்ளும் சுதந்திரமும், தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் இடம் பெறும் உரிமையும் கேட்கின்றார்கள். இவ்வுரிமைகளெல்லாம் இன்று ஆண்களுக்கு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறு பெண்களுக்கும் இருக்க வேண் டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இளம் வயதில் மாடு, கன்றுகளை விற்பனை புரிவது போல பெண்களை மணம் செய்வித்து தாலியறுத்த பின் வீட்டின் மூலையில் உட்கார வைத்து, அவர்கள் தங்கள் இயற்கை உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் திருட்டுத்தனமாக அந்நிய புருஷருடன் இன்பம் அனுபவித்து கர்ப்பமாகி குழந்தை பிறந்த பின் அதை கழுத்தை முறித்து கள்ளிக் காட்டிலோ, சாக்கடையிலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எறியும்படி செய்வது மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? கணவனால் வெறுக்கப்பட்ட சொத்துரிமையும், கல்வியறிவும், ஆதரவும் அற்ற பரிதாப கரமான நிலைக்குரிய பெண்கள் விபசார வாழ்க்கையில் ஈடுபட்டு மானத்தை விற்று ஜீவனஞ் செய்யும் காரியந்தான் மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? மதம், பழக்கவழக்கம் என்று கண்மூடிக்கதறிக் கொண்டிருக்கும் அறிவிலிகளால் தான் பெண் மக்கள் மேற்கூறிய கொடிய வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருக்கிறதென்பதைப் பகுத்தறி வாளர் மறுக்க முடி யுமா? இவற்றையுணராத வைதிகர்கள் பெண்கள் விரும்பும் சுதந்திரத்தால் மதமும், பழக்க வழக்கங் களும் போய்விடும் என்று ஏன் பாழும் குரலெடுத்துக் கத்துகிறார்கள்?

அடுத்தப்படியாக ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர்மானத்தில் குருவாயூர் முதலிய இடங்களில் நடைபெறும் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகங்களைக் கண்டித்தும், தீண்டாதார் ஆலயங்களில் நுழைந்தால் சனாதன தர்மமும் இந்துமத சம்பிரதாயமும் அழிந்து விடுவதுடன் இந்து சமுகத்தில் கலகமும் வேற்றுமைகளும் உண்டாகுமென்றும் ஆகை யால் காங்கிரஸ் இவ்வியக்கத்தை ஆதரிக்கக் கூடாதெனவும் எச்சரிக்கை செய்வதாகவும் குறிப்பிடுகின்றார்கள். கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டும் என்கின்றவர்கள் இதைக் கவனிக்க வேண்டுகின்றோம். கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறச் சத்தியாக்கிரகம் பண்ணுகின்ற கஷ்டத்தையும் கோயில் பிரவேச உரிமை கிடைத்தபின், அந்தக் கல்லுச் சாமிகளுக்காகத் தாங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வங்களைப் பாழாக்கும் முட்டாள் தனத்தை போக்க பாடுபடவேண்டிய கஷ்டத்தையும் ஆலோசித்துப் பார்த்தால், இப்பொழுதே இக்கஷ்டங்களுக்கு இடம் இல்லாமல் தடுத்து விடலாமல்லவா? கோயில் பிர வேசத்திற்காகப் பாடுபடுவதைவிட, கோயில்களின் பயனற்ற தன்மைகளையும் அவைகளால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும் எடுத்துக்கூறி எவரையும் கோயிலுக்குப் போகாமலும், அதற்காக செலவு செய்யாமலும் தடுக்க முயற்சிப்பது எவ்வளவோ பயன்தரக் கூடிய தென்பதே நமது அபிப்பிராயமாகும். ஜனங்கள் கோயில் களுக்குப் போவதையும் அங்கே கொண்டு போய் பணத்தைப் பார்ப்பனர்கள் வயிற்றில் போடுவதையும் நிறுத்தி விடுவார்களானால் கோயில்களும் அழிந்து போகும்; அவைகளைக் கட்டிக் கொண்டு அழும் வைதிகர்களும், பார்ப்பனர்களும் கொட்டம் அடங்கி மூலையில் உட்கார்ந்து விடுவார்கள். இதைவிட்டு, கோயில் பிரவேசத் திற்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் கோயில்களுக்கு மதிப்பும், பாமர மக்களின் செல்வங்களுக் குக் கேடும், சோம்பேறி வைதிகர்களுக்கும், பார்ப்பனர் களுக்கும் பிழைப்பும் இருந்து கொண்டுதானிருக்கும் ஆகையால் கோயில்களை ஒழிப்பதற்கு வழி தேடுவதே சாலச் சிறந்ததென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த வகையில் பார்ப்பனர்களே கோயில்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், கோயில்களாகட்டும், குளங்களாகட்டும்; மற்ற எந்த பொது ஸ்தலங்களாகட்டும்; அவைகளில் எல்லோரும் பிரவேசிக்கக் கூடிய உரிமையை நிலை நாட்டும் பொருட்டுச் செய்யப்படும் எந்த முயற்சியையும் நாம் முழு மனத்துடன் ஆதரிக்கின்றோம் பார்ப்பனர்கள் எதையும் தங்களுடைய ஏகபோக உரிமையாக அனுபவிக்கச் சுதந்திரம் பெற்றிருந்த காலம் மலையேறி விட்டதென்று எச்சரிக்கின்றோம்.

அடுத்தப்படியாக, 'மத உரிமை' பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத உரிமைகளுக்கு விரோதமாகச் சட்டங்கள் ஏற்படுத்த கூடாதென சர்க்காருக்கும் சட்டசபைகளுக்கும் தடையேற்படுத்த வேண்டும் என்றும் மதச் சம்பந்தமான பழக்க வழக்கங்களில் அரசாங்கமும் சட்டசபைகளும் தலையிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த வைதிகர் களின் மனப்போக்கின்படி பார்த்தால், அரசாங்கம் என்று ஒன்று இருக்க வேண்டிய தேவையே இல்லை என்று கூறலாம். தேசமக்களின் கொடிய பழக்க வழக்கங்களைப் போக்கி அவர்களை நலமுடன் வாழச் செய்ய வேண்டியதே அரசாங் கத்தின் முக்கிய கடமை யாகும். இக்கடமையைச் செய்யாத அரசாங்கம் இருந்தும் பயனில்லை; இறந்தும் பயனில்லை. தன் மதத்தினர் தவிர அந்நிய மதத்தினரையெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறும் ஒரு மத உரிமைக்கு அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? புருஷன் இறந்த பின் அவன் மனைவியையும் கஷ்டத்தில் ஏற்றிக் கொலை செய்யும் மத உரிமையை அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? பெண்களை பொட்டுக்கட்டி விட்டு விபசாரத் தொழில் நடத்தச் செய்யும் மதவுரிமையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரமும் நெற்றி வேர்வை நிலத்தில் வரும்படி உழைப்போர் உணவின்றி வருந்திச் சாகவும் நகத்தில் அழுக்குப்படாமல் வெல்வெட்டு மெத்தையிட்ட சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டி ருக்கும் சோம்பேறிகள் ஆதிக்கம் செலுத்தும் மதவுரிமைக்கு, அக்கிரமத்திற்கு அரசாங்கம் எப்பொழுதும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? ஆகையால் தேசம் நன்மையடைய வேண்டுமானால், மதவுரிமை, ஜாதிஉரிமை, பழக்க வழக்கம் என்பவற்றையெல் லாம் மூட்டைக்கட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் போட்டு விட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத்தகைய அரசியல் சீர்திருத்தம் வருவ தாயிருந்தால்தான் சுயமரியாதைக்காரர்கள், அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதிகர்கள் விரும்புகின்றபடியும் காங்கிரஸ்காரர்கள் கேட் கின்றபடியும், மதபாதுகாப்புள்ள சீர்திருத்தம் எதுவந்தாலும் அதைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரிக்கப் போவதில்லை. ஒரு சமயம் ஆதரிக்கும் படியான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மதப்பாதுகாப்பை ஒழித்துச் சமுக சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்தவே முன்வருவார்கள் என்பதில் அய்யமில்லை. ஆதலால், வைதிகர்கள் வேண்டும் மதப் பாதுகாப்புப் பூச்சாண்டி இனிப் பலிக்காதென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

அடுத்தப்படியாக சாரதா சட்டத்தைக் கண்டித்தும், இச்சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங் களும் ஆதரிப்பதைக் கண்டித்தும் பால்ய விவாகத்தைத் தடை செய்வது மதத்திற்கு விரோதமென்றும் ஆதலால், சாரதா சட்டத்தைத் திருத்தவோ, ரத்து செய் யவோ, ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானித் திருக்கின்றார்கள். இவர்கள் தீர்மானத்திலேயே சாரதா சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாப னங்களும் ஆதரிப்பதாக குறிப்பிட்டிருக்கும் போது சிலராகிய வைதிகர்கள் ஏன் கூச்சலிட வேண்டும்? இச் சட்டம் உண்மையிலேயே ஜனசமுகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதென்பதை அறிந்துதானே பலரும் ஆதரிக்கின் றார்கள், அப்படி இருக்க ஏன் இவ்வைதிகர்கள் இதை எதிர்க்க வேண்டும்? மதம் என்ற குருட்டுத்தனம் தானே இவர்களுடைய அறிவை நன்மைதீமைகளை ஆராய்ந்து பார்க்க முடியாமல் தடை செய்கின்றது? ஆகையால் இந்த வகையிலும் இவர் களுடையத்தீர்மானம் ஒரு செல்லாக் காசு என்றுதான் நாம் கூறுவோம்.

கடைசியாக மற்றொருத் தீர்மானம் நிறைவேற்றி இருக் கின்றார்கள். அதாவது வேதம் ஆகமம் முதலிய வைகளை பிரசாரம் பண்ணுவதற்கும், புரோகிதர் கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைதிகக் காரியங் களுக்கு அழிவுவராமல் காப்பாற்றுவதற்கும் வருணாசிரம தருமசபைகள் ஏற்படுத்துவதற்கும் இந்துமத தத்துவங்களைப் பிரசாரம் பண்ணுவதற்கும் மாணாக்கர்களிடம் வைதிக ஒழுக்கங்கள் உண்டாவதற்காக சிறு விடுதிகளை ஏற்படுத்தவும் தர்ம ஊழியர் சங்கம் என்னும் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமுகத்தினரும் வேதாகமப் புரட்டுகளையும், புரோகிதப் புரட்டுக்களையும், அர்ச்சகர்களின் அயோக்கியத்தனங் களையும், வருணாசிரம தர்ம அக்கிரமங்களையும், பழைய குருட்டுப் பழக்கங்களையும் ஒழிக்க முயற்சி செய்யும் இக்காலத்தில் நமது பார்ப்பனர்கள் இவற்றை வளர்க்க முயற்சி செய்வது எவ்வளவு புத்திசாலித்தனமென்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். உண்மையில் இவர்களுக்குத் தேசத்தின் மீது கவனமோ, ஏழைகளின்மேல் அனுதாபமோ மற்ற தேசங்களைப்போல் நமது தேசமும் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசையோ இருந்தால் இவ்வாறு மகாநாடுகள் கூட்டி பிற்போக்கானத் தீர்மானங்களைச் செய்வார்களா? என்றுதான் கேட்கிறோம்.

பணபலமும், பத்திரிகை பலமும், செல்வாக்குப் பலமும் படைத்த வைதிகப் பார்ப்பனர்கள் இப்போழுது தீர்மானிக் கிறபடி, பலதுறைகளிலும் நுழைந்து பிரசாரம் பண்ணவும் பார்ப்பனர்களை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் பாமர மக்களில் பலர் இவர்கள் பிரசாரத்தினால் ஏமாறவும் கூடும்.

ஆனால் இது எப்பொழுதும் நிலைத்து நிற்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயம். காலச்சக்கரம் வெகுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்நிலையில் பார்ப்பனர்களின் வைதிகப் பிரசாரம் ஒரே முறையில் செய்யப்படும் சுயமரி யாதைப் பிரசார சண்டமாருதத்தால் சிதறிப் போய்விடும் என்பது நிச்சயம். ஆகையால் எங்கும் பகுத்தறிவும், விடுதலையும், சுதந்திரமும் உதயமாகிவரும் இக்காலத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் இவ்வாறு இன்னும் ஏமாற்றி கொண்டிருக்க நினைப்பதும் அதற்காக மகாநாடு கூட்டுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் வீண்! வீண்! வீண்! என்று எச்சரிக்கை செய்கின்றோம். இத்தகைய அழுக்குமூட்டை வைதிகர்களைக் கண்டித்ததைத் தேசியப் புலிகள் நம்மைத் 'தேசியத்துரோகிகள்' என்றும் 'சுயராஜ்ய விரோதிகள்' என்றும் கூறுவது வடிகட்டின அயோக்கியத்தன மல்லவா? இனியேனும் யார் உண்மையான சுதந்திரத்திற்குப் பாடுபடுவர்களென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டு கிறோம்.

- 'குடிஅரசு' - துணைத்தலையங்கம் - 26. 06. 1932

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

மக்களால் சேரும் பணத்தைப் பின் மக்களுக்காகச் செலவிடப் படவேண்டிய நேரத்தில், மக்கள் ஆட்சி அதில் தலையிடுவதா அக்கிரமக்குறுக்கீடு?

வியாழன், 16 பிப்ரவரி, 2023

கடவுள் - மத குழப்பம் - தந்தை பெரியார்

திங்கள், 9 ஜனவரி, 2023

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கி விடுமா?

 

மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற் காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்; வீடுகள்தோறும் கோலம் போடவேண்டும்; வாயிற் படியில் புஷ்பங்கள் பரப்ப வேண்டும்; இரவில் தாதன் ஊர் முழுதும் சுற்றிப் பாட்டுப் பாட வேண்டும்; சேமக்கலம் கொட்டவேண்டும்; தப்புத்தட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பீடை நீங்கும் என்று செய்து வருகின்றனர்.

கோயில்களிலும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே மேளதாளங்கள் முழங்கு கின்றன; பூசைகள் நடைபெறுகின்றன; பொங் கல்கள் நைவேத்தியம் பண்ணப்படுகின்றன, கோயில் அர்ச்சகர்களும், வேலைக்காரர்களும் பொங்கலைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மூக்கால் மூன்று பருக்கை விழும்படி வயிற்றுக்குள் கொட்டுகின்றனர். வண்ணான் சாலைப் போல் வயிற்றைப் பெருக்க வைக்கின்றனர். பின்பு அஜீரணத்தால் அவதி அடைகின்றனர். வைதீ கர்கள் வீடுகளில் காலையில் எழுந்தவுடன், சைவர்களாயிருந்தால், திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை என்னும் பாடல்கள் ஓதப்படு கின்றன. வைணவர்களாயிருந்தால் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஆண்டாள் பாடிய திரு வெம்பாவைப் பாடல்களை ஓதுகின்றனர். இவை மட்டும் அல்ல, மற்றொரு அதிசயமும் உண்டு. அது மிக வேடிக்கையான விஷயம்.

வைணவர்கள் பஜனை மடம் வைத்திருந்தால் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கே எழுந்திருப் பார்கள். வாலிபர்கள் மாத்திரம் அல்ல, சிறு குழந் தைகளும், வயதானவர்களும், வாலிபர்களும் விழித்துக் கொண்டு எழுவார்கள். குளிரைப் பொருட்படுத்த மாட்டார்கள்; பனியைப் பாராட்ட மாட்டார்கள்; கால் கைகள் குளிரினால் உதறும்; பற்கள் கப்பிரோட்டில் ஜட்கா வண்டி போவதுபோல் கடகடவென்று குளிரினால் ஆடும். அப்படியிருந்தும், பக்தியென்னும் முட்டாள்தனம், அவர்களை எழுப்பி விடுகிறது. இவர்களில் சிலர் குளிப்பார்கள்; குளிருக்கு அதிகமாகப் பயந்தவர்கள் கால் கைகளைச் சுத்தம் பண்ணிக் கொண்டு பட்டை நாமங்களைத் தீட்டிக் கொள்வார்கள். தாளம், மிருதங்கம், தம்பூரு அல்லது ஆர்மோனியத்தையும் தூக்கிக் கொள் வார்கள், தெருத்தெருவாக பஜனை செய்து கொண்டு வருவார்கள். இதைப் போலவே சைவ பஜனை மடம் வைத்திருக்கின்ற ஊர்களில் சைவர்கள் விபூதியைப் பட்டையடித்துக் கொள்வார்கள். ருத்திராக்கங்களைச் சுமந்து கொள்வார்கள். தங்களுடைய முஸ்தீப்புகளுடன் பாடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த பஜனைக் கோஷ்டியினர் அரிசிப் பிச்சை வாங்குவதும் உண்டு. இக்காட்சிகள், நாகரிகமுள்ள நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் நடைபெறுகின்றன. இப்பொழுது இவைகள் எல்லாவிடங்களிலும் இல்லை என்றாலும் சில இடங்களில் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் பைத்தியக்காரர்கள் இருந்துதானே தீருவார்கள்? அதற்கு நாமென்ன செய்ய லாம்? நமக்குத் தெரிந்த மருந்தைக் கொடுக்கலாம். இவ்வளவுதான் முடியும். இச்செயல்களால், சாதாரண மக்களின் மனத்தில் உண்டாகும், பக்தியும், விசுவாசமும் அதிகம். அவர்கள் இந்தப் பஜனைக் கோஷ்டியாரைப் பக்த சிரோன் மணிகளாகக் கும்பிடுவார்கள்! நமஸ்கரிப் பார்கள். என்ன அறிவு! எவ்வளவு கேவலம்!

இது போகட்டும், இவர்கள் காலையில் எழுந்து தண்ணீரில் விழட்டும்; சன்னிபிறந்து சாகட்டும்; விடியற் காலத்தில் பொங்கல் சோற்றையும், பலகாரங்களையும் உண்ணட்டும்; அஜீரணத்திற்கு உள்ளாகட்டும்; காலரா நோய்க்கு ஆளாகட்டும்; பிறருக்கும் அந்நோயைப் பரவ வைக்கட்டும்; எந்தச் சந்தியிலாவது போகட்டும்; அதைப் பற்றி நமக்குக்கவலையில்லை. இதன் மூலமாக மக்கள் மனத்தில் முட்டாள்தனத்தை ஊட்டுகிறார்களே என்றுதான் கவலைப்படுகிறோம்.

மார்கழி மாதச் சனியன் இவ்வளவோடு விட்டதா! இல்லை! இல்லை! திருவிழாவுக்காக, வைகுண்ட ஏகாதசிக்காக, ஆருத்திரா தரிசனத் திற்காக, சீரங்கத்திற்கு ஓடச் செய்கிறது, சிதம் பரத்திற்கு ஓடச் செய்கிறது. குளிர் காலத்தில் பனிக் காலத்தில் காலராக் காலத்தில் எவ்வளவு தொல்லை! எவ்வளவு அலைச்சல்! எவ்வளவு பணச்செலவு! எவ்வளவு மூட நம்பிக்கை! எவ்வளவு முட்டாள்தனம்! எதற் காகச் சீரங்கப் பயணம், எதற்காகச் சிதம்பர யாத்திரை! எல்லாம் மோட்சம் பெறத்தான்; மோட்சத்திற்கு இவ் வளவு கஷ்டம் ஏன்? மோட்சம் என்றால் சாவு என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு சாண் கயிறு கிடைக்கவில்லையா? அல்லது நமது அழகர் சொல்லுவது போல அரையணாவுக்குக் கவுரி பாஷாணம் கிடைக்க வில்லையா?

இதுவும் இல்லா விட்டால், ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்வதுதானே! இந்த மாதிரி சுகா தாரமற்ற பருவ காலத்தில் யாத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது! பணம் செலவாகிறது; உடல் நலம் குன்றுகிறது, காலம் வீணாகிறது, தொற்று வியாதிகள் வருகின்றன; இவைதானே லாபம்! வேறென்ன? அறிவிருந்தால் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

இம்மாதிரியான துன்பங்கள் ஏன் வருகின்றன? காரணம் என்ன? யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் யோசிக்காவிட்டாலும் நான் யோசித்துப் பார்த்தேன், சொல்லு கிறேன். மதம் என் னும் மடத்தனம், பக்தி என்னும் முட்டாள் தனம், மோட்சம் என்னும் கிறுக்கு, முன்னோர் வழக்கம் என்னும் மயக்கம், இவைகளால் தான் நாம் கெட்டலைகிறோம்! சீரழிகிறோம்! நான் சொல்லுவதைப் பற்றி திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். புத்தியைக் கொஞ்சம் செலவழியுங்கள்! மூளையைக் கொஞ்சம் உருகச் செய்யுங்கள்! விளங்கும். மார்கழி மாதத்தில் மேற்படி காரியங்களைச் செய்வதால் சந்தோஷமாகக் காலம் போக்குகிறோம் என்று சொல்ல வரலாம். சந்தோஷமாகக் காலம் போக்க இதுதானா வழி! முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும் உண்டாக்கக் கூடிய செயல்களைப் புரிந்துதானா சந்தோஷப்பட வேண்டும்? சந்தோஷப்படுவதற்கு வேறு அறிவு வளர்ச்சியோடு கூடிய வழிகள் இல்லையா?

மார்கழி மாதக் கடைசியில், தை மாத முதலில் பொங்கல் பண்டிகையொன்று! அதற்கு எவ்வளவு தொல்லை! மனிதனுக்கு மாத்திரமா பொங்கல்! பொங்கல் நாலு நாள்.

பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாம்! பொங்கலாம்! மாட்டுப் பொங்கலாம்! கன்னிப் பொங்கலாம்! இந்தப் பொங்கல்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை என்ன சொல்லுவது? புதுஉடைகள் வாங்கி அணிந்து கொள்வார்கள் பலர்! சம்பந்தி வீடுகளுக்கு வரிசை அனுப்புவார்கள் பலர்! இவைகளில் ஆகும் செலவு அளவு கடந்தவை. வரிசை கொடுக்கும் வகையில் ஒருவர்க்கொருவர் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் மனவருத்தங்கள் பல. எங்கும் படையல், சர்க்கரைப் பொங்கல் வேறு வெண் பொங்கல் வேறு. ஏழைகள் குடும்பங்களில் இந்தப் பொங்கல் சோறுகளை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்துக்கொண்டு தின்று வியாதி யடைவது வேறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்ணான், அம்பட்டன், தோட்டி, வேலைக்காரன் வீடுகள் தோறும் சோற்றுப் பிச்சைக்காக அலையும் பரிதாபமான காட்சி வேறு; இவ்வாறு பல வகையில் பொங்கல் பண்டிகை தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. போதும் போதாமைக்கு ஆஸ்பத்திரிகளில் மருந்துச் செலவு அதிகம். டாக்டர்களுக்குத் தொல்லை. அட அப்பா! எவ்வளவு தொல்லை! பாழும் பொங்கல் பண்ணுவதைப் பாருங்கள்!

மார்கழி மாதச் சனியன் இம்மாதிரி பல வகையில் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகின்றது, படுத்தி விட்டது; என்ன பரிதாபம்! நமது மக்கள் மூடத் தனத்தால், குருட்டுத்தனத்தால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர். எல்லா வற்றையும் யோசித்துப் பாருங்கள். இவை பயனில்லாத காரியங்கள்; வீணான காரியங்கள் என்று விளங்காமல் போகாது. இவைகளை நடத்தாவிட்டால் என்ன முழுகிப் போய்விடும். பூமி நடுக்கம் உண்டாகி நாம் பாதாளத்திற்குப் போய்விடுவோமா? கடல் புரண்டு வந்துவிடுமா? ஒன்றுமில்லையே.

அப்படியிருந்தும் ஏன் பண்டிகைகளென்றும், விரதங்களென்றும் திருநாட்களென்றும் அலை கின்றீர்கள்? அந்நியர்கள், நாகரிமுடையவர்கள் நகைக்க இடம் கொடுக்க வேண்டாம். பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்! அறிவோடு செய் யுங்கள்! நாம் மற்ற நாட்டினரைப் போலப் பெருமை யடையலாம்! சுதந்திரமடையலாம்! செல்வ மடை யலாம்! சமத்துவமடையலாம்! இது உறுதி! உண்மை!

நிச்சயமாக நம்புங்கள்! நம்பாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள்! மேலே சொல்லிய நமது விரதங்களையும், நமது பக்திகளையும், நமது பஜனைகளையும், நமது பண்டிகைகளையும், பிறர் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? நாமே நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? கேலிக்கு இடமாகத் தோன்றவில்லையா? வைதீகக் கண்ணுக்குப் பரிசுத்தமாகத் தோன்றலாம்! உண்மையாகத் தோன்றலாம்! தெய்வீகமாகத் தோன்றலாம்! அதைப் பற்றிக் கவலை இல்லை. நாகரிகக் கண்ணால் பாருங்கள்! அறிவுக் கண்ணால் பாருங்கள்! உண்மை விளங்கும். நான் பொய் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கின்றேன்; நான் ஒரு 'ஸ்க்குரூஉலூஸ்' என்று அலட்சியம் செய்ய வேண்டாம். வந்தனம், பிறகு சந்திக்கிறேன்.

'ஸ்க்ரூஉலூஸ்' என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -  'குடிஅரசு', 27-12-1931 


ஞாயிறு, 8 ஜனவரி, 2023

பொங்கல் வாழ்த்தும் - குறள் வாழ்த்தும்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

திராவிடரும் ஆரியரும்

சொர்க்கவாசல் என்னும் படுகொலை - தந்தை பெரியார்


மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங் கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறி யாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:

நாகப்பட்டினத் தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிர கத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).

சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?