ஞாயிறு, 27 நவம்பர், 2016

இறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு


- தந்தை பெரியார்

தோழர்களே,
நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடை பெறும் தேர்தல் காரியங்களில் அடி யோடு விலகி நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இதைப் பல அரசியல் வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம். அரசியலை வெறுத்து இப்படி இருக்க வில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்யமானதும் ஏற்றதுமானதுமான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட்டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாயமாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறு வோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக்கிறதா? இருக்கிறவர்கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்க வர்களா? இவை ஒருபுறம் இருக்கட்டும். இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10 பேர் களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதி களாக இருக்கத் தகுதி அற்றவர்கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரி யாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத் துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.
இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன்.
அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக் கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இட மில்லாத படியாக நிலைமை ஏற்பட்டு விட்டது.
இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பதுமில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாண யக்கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.
இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழுவதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவமாடுகின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக்கிறார்கள். வைசிராய் அனுபவமற்ற வரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப் பற்றிக் கொண்டு பரவுவதுபோல் காலித் தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவ வொட்டாமல் செய்யப் பயனளிக்கும் படியான முயற்சி சர்க்காரால் செய்யப் படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள்.
இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ள வில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.
நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்ட டங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய் யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களி லும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர்களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படுகிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு ஆகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டிய வர்களாகிறோம்.
ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டிய தில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட் டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப்படுத்தப் படவும், புறக்கணிக்கப்படவும், ஏமாற்றப் படவும் தகுதி உடையவர்களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மானவுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர். சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டையார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசு தார்கள், இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் ஆன கோடீவரர்கள் இல்லையா? மற்றும் நினைத் தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டு வுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொதுநலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.
இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுற மிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். இது தான் நம் நாட்டில்  நம்மவர்களில் இத்தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.
உதாரணமாக சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கைஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்கு ஆக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன் னார்? எவ்வளவு லாபத்தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர் கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் பார்ப் பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச்சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாணயமும் சக்தியும், திற மையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக்காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப்பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண் டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (ஸ்ரீனிவாச சாதிரியா)ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனை பேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத் திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.
ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட் டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு மரணை அற்றுச் சொக்கின வர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர் வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல் வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.
இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக் கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்ய வில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக்கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்துவிட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந்தால் தலைவ ராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.
இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.
காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக் குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையாயுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லா விட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிர தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.
பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீவரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர்களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரி யாதவர்கள் உண்டா என்று கேட்கிறேன்.
இப்படிப்பட்ட மானமற்ற இன உணர் வற்ற இழிதன்மையில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக் கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்க லாம். முஸ்லிம்களில் யாராவது இருக் கிறார்களா? கிறிதவர்களில் யாராவது இருக் கிறார்களா? வெள்ளையர்களில்  யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர் களில் தானாகட்டும் யாராவது இருக் கிறார்களா?
உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன்மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?
மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூ வென்று காரித் துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற் றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த் தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீவரர் முதல், மில் முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப் பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர்னர் வைசி ராய் ஆகக்கூடிய தன்மை உடையவர் களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும் பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும்பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.
நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடுவது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது,  எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள்களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித் திரத்தில் இதுதானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர்களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப்பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவைகளால் எல்லாம் உங்களுக்கு ஏற் பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.
இனமானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம் பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.
ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவதற்கு மாணவர் இளைஞர் களே நீங்கள் மனம் வைத்தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப்பிலும், பதவியிலும் பணம் தேடுவதிலும் செல்லு மேயானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிக மிகப் பொருத்தமானது என்றே சொல் லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.
தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆச்சிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறிஸ்தவ அனாதை காப்பு இடத்திலேயோ விட்டு விட்டு வாருங்கள். உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற்றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளை களைப் பெற்று விடத்தான் நேரும். எதிரி களின் அரண் இப்போது  கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித்துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண் டையும் வெடிக்காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாராகுங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது.   (2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டுவிழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு )
குடிஅரசு - சொற்பொழிவு - 09.03.1946
-விடுதலை,10.5.15

செவ்வாய், 22 நவம்பர், 2016

ஜாதி காரணமாகவே ஒருவன் உழைக்காதிருக்கவும் மற்றொருவன் உழைக்கவும் ஏற்படுகிறது

- தந்தை பெரியார்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப் பானும் இல்லை; பறையனும் இல்லை. அவர்களுக்கு இந்த வார்த்தை வாயில் நுழைய மாட்டேன் என்கிறது. அந்த நாடுகளிலே என்னதான் அடக்கு முறைகள் இருந்ததாகச் சொல்லப் பட்டாலும் அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது; இந்த நாட்டைப்போல் அதை நினைத்தாலே கடவுள் கண் ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.
இங்கத்திய மகன் அறிவு பெற்ற வனாக இல்லை; கிணற்றுத் தவளை களாகத்தான் அவன் வளருகிறான். இந்த  நாட்டு மக்களிலே 100க்கு 85 பேர்கள் கல்வியறிவில்லாத தற்குறி மக்கள். இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றம் அடையும்படியாக ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டால் தான் முடியுமே தவிர, அதை  விட்டு விட்டு இதெல்லாம் பிற்போக்கு  சக்தி என்ற பல்லவி பாடிக் கொண்டு திரிவதில் எந்தவித பலனும் இல்லை; ஏற்படவும் ஏற்படாது.
மார்க்ஸ் லெனின், ஏஞ்செல்ஸ் முதலியவர்கள் இந்தப்படி தான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்முடைய வாதம் என்ன வென்றால் இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏஞ்சல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், இருக்கிற சமுதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது தெரியாது. அவர்கள்தங்களுடைய நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்புகளுக்கும், அவற்றின் குறைகளுக்குப் பரிகாரம் ஏற்படுகிற மாதிரியில் கொள்கைகள், திட்டங்கள் ஏற்படுத்தினார்களே தவிர, இந்த நாட்டைப் பற்றி அவர்கள் நினைக்கவுமில்லை; தெரியவும் தெரி யாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைமுறையோ இச்த நாட் டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.
ஸ்டாலின் இறப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஒருமுறை சொன்னார், அதாவது, நாம் நினைக்க முடியாத, அறிந்திருக்க முடியாத சமுதாயக் கஷ் டங்கள் இந்தியாவிலே இருக்கின்றன. எனவே அந்தச் சமுதாயக் கஷ்டங்களை ஒழிக்காமல் வெறும் பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவதால் இந்தியாவில் கம்யூனி சத்தைக் கொண்டுவந்து விடமுடியாது, என்பதாகச் சொல்லியிருக்கிறார். இது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. அப்படி அவர்களுக்கு இந்த நாட்டின் நிலைமை, கஷ்டம் அமைப்புகள் தெரியாது. அவர்களுக்கு  இந்த மாதிரியான ஒரு அமைப்பு ஒரு நாட்டிலே இருக்கும் என் பதே அதிசயமாக இருக்கிறது. அறிந்த பிற் பாடுதான் அவர்களும் சொல்லுகிறார்கள் நம்மைப்போலவே.
உண்மையாக இந்த நாட்டுக் கம்யூனிஸ் டுகள் நினைக்க வேண்டும்: அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும்; முதன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரசாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான் என்பதை. 30 வருடமாக இந்த அடிப் படையில் தானே  நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொரு ளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லு கிறார்கள். நாங்கள் பொருளாதாரத் துறை யிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியது தான். ஆனால் சமுதாயத் துறையிலே இருக்கிறபேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேத மொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல; ஆனால் சமுதாயத் துறை பேத ஒழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக்கொள்வதில்லை. இதைப் பற்றிப் பேசுவதே பாபம் என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று கருதுகிறார்கள். பிற்போக்குச்சக்தி என்று சொல்லுகிறார்கள்.
மற்றும் சொல்லுகிறேன்; தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்குச் சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றி யமைத்தாக வேண்டும்; ஆனால் சமுதாயப் புரட்சியைச் சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும், மக்கள் உள்ளத்திலே. இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி பிரத்தியட்ச நிலையை மக்களுக்கு உணர்த் தினால் போதும்.  நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமுதாய அமைப்பை, இன்றைய அமைப்பு சர்க்கார் இருக்கும் போதே மாற்றிவிட முடியும், மக்கள் பகுத்தறிவு பெறும்படி செய்வதன் மூலமாக. 30 வருடங்களுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம் திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவமும், திமிரும்? 30 வருடங்களுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! 30 வருடங் களுக்கு  முன் எவ்வளவு தேர், திருவிழா நடைபெறும்! சாமிக்கு எவ்வளவு கூட்டம் சேரும்! இன்றைய தினம் சாமி ஊர்வலத் தின் போது பார்ப்பான், தூக்குகிறவர்கள், தீவட்டி பிடிப்போரைத் தவிர வேறு யாரும் காணுவ தில்லையே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத் தறிவு உணர்ச்சி ஏற்படும் படியாகச் செய்த தன் காரணமாக நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. எதற்குச் சொல் லுகிறேன், சர்க்காரைக் கவிழ்க்காமலேயே ஒழிக்காமலேயே மக்கள் உள்ளத்திலே உணர்ச்சியை அறிவை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த சமுதாயப் புரட்சியைச் செய்யமுடியும் என்பதற்கு  ஆகவே சொல்லுகிறேன்.
முதலில் இந்தக் காரியத்தைச் செய் வோம்; பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட  முடியும்; பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவராமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போ மானால், தானாகவே பொருளாதார உரிமை வந்து விடும். ஆகவே இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.
இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே (மாவட்டத்தையே) எடுத்துக் கொள்ளுங்களேன்; யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன்  பார்ப்பான்; அதற்கடுத்த படியாக பணக்காரன், நிலைமுடையோன் - சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படு கிறவர்கள். அதற்கடுத்த படி தூக்கியவன் தர்பார் என்பது போல  இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லை யென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற வனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே யில்லை. இப்போது சொல்லுங்கள்: பணக் காரன் - ஏழை என்கிற பாகுபாடு உயர்ஜாதி தாழ்ந்தஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா இல்லையா?......... என்று.
இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின்  எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத் திலும், பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால் தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம்.
இன்னமும் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன் னேற்றம் காண முடியாது என்று உறுதி யாகக் கூறுவேன்.
(மன்னார்குடியை அடுத்த வல்லூரில் 27-4-1953 -ல் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: விடுதலை  5-5-1953)
-விடுதலை,7.6.15

சர்வ சக்தியா? சர்வ சைபரா?- சித்திரபுத்திரன்


சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.
ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.
சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?
ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?
சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?
ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?
சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?
அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.
-  சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

இராமாயணம் கற்பனை கதையே
இந்தோ- ஆரியர் போரைக் குறிப்பது
இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்ச  தந்திரக் கதையிலுள்ள கற்பனைக் கதையைப் போன்றவை என்பதே என் கருத்து
- நேரு, டிஸ்கவரி ஆஃப் இந்தியா
-விடுதலை,5.6.15

திங்கள், 21 நவம்பர், 2016

யார்? ஆரியரா? அவர் அடிமைகளா?


 

1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தவர் யார்?

2. திராவிட இராவணப் பெரியாரை இராமாவதாரங்கொண்டு கொன்றது யார்?

3. திராவிட சூரபத்மனை முருகனாக வந்து கொன்றது யார்?

4. திராவிட இரணியனை நரசிம்ம ரூபம் கொண்டு கொன்றது யார்?

5. கம்சனைக் கிருட்டிணனாக வந்து கொன்றது யார்?

6. திராவிட நரகாசுரனை மகாவிஷ்ணு ரூபத்தில் கொன்றது யார்?

7. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?

8. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?

9. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?

10. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி இவைகளைச் சுட்டுத் தின்று சுராபானம்  அருந்தியது யார்?

11. வருணாசிரம தருமத்தைப் பிறப்பித்தவன் யார்?

12. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?

13. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?

14. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?

15. உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்கள் யார்?

16. மோட்சலோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட்டு கொடுப்பவன் யார்?

17. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?

18. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்துபவன் யார்?

19. திராவிடன் கட்டிய சத்திர மானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?

20. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியவர் யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?

21. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில் சாய்ந்து சாப்பிடுவது யார்?

22. பல ஜாதிகளையும், மதங்களையும் உண்டு பண்ணியது யார்?

23. உடன் கட்டை ஏறும்படி செய்து பெண்களை வஞ்சித்தது யார்?

24. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?

25. திராவிடன் ஆரியப்பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?

26. திராவிடன் ஆரியப் பாஷையைக் காதால் கேட்டிருந்ததற்காகக் காதில் ஈயத்தைக் காய்ச்சி விட்டது யார்?

27. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதி வைத்தவன் யார்?

28. திராவிட சோதரி சூர்ப்பநகையை மானபங்கம் செய்தவன் யார்?

29. வாலியைக் கொன்று மனைவியை சுக்ரீவனுக்குக் கூட்டி வைத்தது யார்?

30. இராவணனைக் கொன்று விபீடணனுக்குப் பட்டம் கட்டியது யார்?

31. சூரனைக் கொன்று சிங்கமுகனுக்குப் பட்ட மளித்தது யார்?

32. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?

33. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?

34. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவன் யார்?

35. கடவுளைத் தரிசிக்க தரகனாக இருப்பவன் யார்?

36.    ஆரிய சமாஜம், ராஷ்டீரிய சேவாசங்கம், இந்து மகாசபை, கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி இவைகளுக்குத் தலைவன், காரியதரிசி யார்?

37. வெள்ளையனை வெளியேற்றி, தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?

38. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?

39. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?

40. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடது கையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?

41. பெண்ணை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?

42. தமிழ்நாடு வெறுத்த இராஜாஜியை வங்காளக் கவர்னராக்கியது யார்? இன்று கவர்னர் ஜெனரலாக்கியது யார்?

43. கதர்வேட்டி கட்டிக் காங்கிரசில் தலைமைப் பதவி

யிலிருப்பவர் யார்?

44. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சம் கேட்கும் பஞ்சாங்கம் யார்?

45. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?

46. நான்கு ஜாதிகளை உண்டு பண்ணியவன் யார்?

47. மதவெறி பிடித்தலையும், மடையனும் முட்டாளும் யார்?

48. முதல் ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?

49. ஜமீன் ஒழிப்பு மசோதாவைத் தடை செய்தது யார்?

50. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?

51. வில்வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?

52. காப்பி ஓட்டல் முதல் கலெக்டராபீஸ் வரை உயர்ந்த பதவியிலிருப்பவன் யார்?

53. உலகில் கோடீஸ்வரனாயும், ஜமீன்தாரியாயும் இருப்பவன் யார்?

54. தாசில் வந்தால் கொம்பு ராஜினாமாக் கொடுத்து விட்டால் சொம்பு என்று சொன்னது யார்?

55. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?

56. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?

57. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?

58. ஜாதி வித்தியாசமேயில்லை எல்லோரும் ஒன்று எனக் கூறுபவன் யார்?

59. ஜாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?

60. ஜாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்தும் கை வாளேந்தும் என்றவன் யார்?

61. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?

62. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?

63. காந்தியார் சாம்பலை நதிகளில் கரைத்து விட்டது யார்?

64. காந்தியாருக்கு ராம்தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?

65. காந்தியார் மகனுக்குப் பெண் கொடுத்தது யார்?

66. காந்தியாரை மகானாக்கி, மகாத்மாவாக்கியது யார்?

67. காந்தியாருக்கு நிதி திரட்டி ஏப்பமிடுவது யார்?

68. காந்தியாருக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்வது யார்?

69. காந்தியார் கோயிலுக்கு அர்ச்சகனாக வரப் போகிறவர் யார்?

70. காந்தியார் கொலை வழக்குகளைப் பிரசுரிக்கக்

கூடாதென்பவர் யார்?

71. பெரியார் சொன்ன காந்தி சகாப்தம், காந்தி மதம், காந்தி தேசம் வேண்டாமென்றது யார்?

72. திராவிடர் இழிவு நீங்க அணிந்திருந்த கருப்புச் சட்டைகளுக்குத் தடை விதித்தது யார்?

73. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்து விட்டது யார்?

74. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்திரவு போட்டுச் சோதனையிட்டவர் யார்?

75. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?

76. திராவிடனைத் தலையெடுக்காமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?

77. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?

78. சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் யார்?

79. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?

80. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?

81. உலகம் போற்றும் உத்தமர் காந்தியார் உயிருக்கு உலை வைத்த கூட்டம் எது?

82. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?

83. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?

84. சமணர்களைக் கழுவேற்றியது யார்?

85. சந்திர குப்தனுக்கு சாம்ராஜ்யம் கிடைக்கும்படி செய்தது யார்?

86. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?

87. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?

88. வல்லாள மகாராசாவின் மனைவியை பெண்டாளக் கேட்டது யார்?

89. அசோக வம்சத்தாரை அழித்தவன் யார்?

90. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராமபுராணமும் கட்டியது யார்?

91. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?

92. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பவன் யார்?

93. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியவன் யார்?

94. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

95. பல காமாந்தகாரக் கடவுளர்களை உண்டு பண்ணியது யார்?

96. நம்மைப் பல ஜாதிகளாக்கி மொழி, கலை, நாகரிகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?

97. எண்ணத் தொலையாத இறைவனை உண்டாக்கி எழுதியது யார்?

98. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளைகுட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?

99. எவ்விதத் தொடர்புமின்றி சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?

100. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?

- குடிஅரசு - துணுக்குகள் - 22.01.1949
-விடுதலை,20.11.16

சனி, 12 நவம்பர், 2016

'பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்?


ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.

மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் ஸ்திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சாஸ்திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.

அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.

‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,

¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.

¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.

¨ அவன், ஏர் உழுதால் பாவம்!

¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!

¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!

¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.

¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!

¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.

¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.

--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!

¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.

இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!

இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சரஸ்வதி முதலிய ஏராளமான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.

மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல்லுங்கள்.

_----01-05-1957 ‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை

திங்கள், 7 நவம்பர், 2016

இந்நாட்டு சமதர்மத்தின் முதல் படி

தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.

ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொதுவுடைமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு தாழ்வு பேதாபேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாகவேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல் படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்மவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக்காமல் அடக்கி வருவதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்கவேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்டதாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கொள்ளப்படுகின்றது.

மகமதியர்கள் குரானை மதிப்பதைவிட கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதை விட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிராமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும், உயர்வு- தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப்படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.

ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப் படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்ட கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.

ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக் கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டுக்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால் தொழில் முறையினால் மன வலிமையினால் சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதார மாயிருந்த முறையை  யார்தான் சரியான முறையென்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்க ளுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?

அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங்கோன்மைக் காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப் பட்ட கடவுளைப்பற்றி அது இருந்தாலும் அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குருவாய், சங்கராச்சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச்  சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.

1935 செப்டம்பர் தேவக்கோட்டையில் முதல் வாரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

(விடுதலை, 2.12.51)
விடுதலை,6.11.16