ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் - தந்தை பெரியார்



சகோதரிகளே! சகோதரர்களே!!

இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென் பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ, அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் படவேண்டியதில்லை. ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ மனைவியாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண் களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது  இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லுகின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் நடப்புக்கு விரோமான தத்துவங்கள் எதுவும் அதிலில்லை.

நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசைப்படுகிறான். அவற்றில் சிலது அனுபவிக்க கிடைத்துவிட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுபவித்ததாக மகிழ்ச்சியடை வதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அடைகின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசியமாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான் மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திருமண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண்ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய் தோன்றாது.

பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவைத் தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்பட்டு விட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய் விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை அவர்களுக்குள்ள சுதந்திரத்தினால் தங்களின் அப்படிப் பட்ட ஒரு நிலையைக் காட்ட ஒரு பெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள்.

சாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் (கீவீபீஷீஷ், கீவீபீஷீஷ்மீக்ஷீ) என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என்பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வடமொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தை களுக்குள்ள சம்பந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூழ்ச்சிதான் விதவைத் தன்மைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.

அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக்கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும். தவிரவும் பெண் ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச்சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000ரூ பெறுமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம்மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.

சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம்கூட சில வகுப்புகளில் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம்படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டிமார்கள் சில வகுப்புப் பண்டாரங்கள் என்பவர்கள் சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத் தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சிலவற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருதுகின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுப வத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்றவைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதை கவனியாமல் இப்போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கிறது. எனது தங்கைப் பெண்ணுக்கு விதவை மணம் செய்யப்பட்டி ருக்கின்றது.

ஆகவே இம்மாதிரி மணம் புதியதென்று சொல்லு வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப்பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றும் நான் கருதமாட்டேன்.

சாதாரணமாக, நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதாவது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப்படுகின்றனர். சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும்படியான எந்தக் கொள்கைகளும், சட்டங் களும் ஒரு நாளும் சரியாக நடைபெறவே நடைபெறாது. அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவனுக்கு நல்ல போஷணையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக்கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்து விடும் என்று நான் கருது கிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.

தவிர சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்த மற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசிய மான அதிகச் செலவும், அதிகக் காலக் கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும். ஆதலால் உள்ள சடங்குகளையும், பணச்செலவையும், காலச் செலவையும் குறைத்து நடத் துவதே இத்திருமணத்தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும், இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என்பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது சுயமரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தென்றும் "ஆத்மார்த்தத்"திற்கு என்றும், அதில் ஏதோ "தெய்வீகம்" இருக்கிற தென்றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந்திரங்களையும், இயற்கை இன்பங்களையும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதே முக்கியமானதாகும்.

தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரணமாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறிவற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப்படு கின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன் படும்படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத்தையும் இப்படிபட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணம் ஆக்குவதற்கும் அடிமையாக்குவதற்குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை. தெய்வீகக் கலி யாணத்தில், ஆத்மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜமான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற்படுத்த வேண்டும்? தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாச முண்டா? ஆத்மார்த்தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மாவென்கின்ற பிரிவுண்டா?

எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழக்கப்பட்டுவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக் காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதைத் தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லை என்பது தான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப்பிராயம். இம்மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டதற்கு அவர் களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சி யத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத்திற்காகவே அழைக் கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக்கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டியதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொறுப்போ உரிமையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது பெண் தான் புருஷனுக்கு அடிமை யாயிருக்க கடவுளால் பிறப்பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சியற்ற ஜீவனென்றோ "கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்", அவன் அடித்தாலும், உதைத்தாலும் அன் னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கணவனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளுகிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ உணர்ச்சியிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ண வேண்டியது மாத்திரமல் லாமல் ஒவ்வொருத் துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்கள்தான்; பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்த வர்களாவார்கள். முக்கியமாய் இதற்காக வேண்டியேதான் ஆத்மார்த்தம் தெய்வீகம் என்பவை களிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப்படுத்தப்படு கின்றோம். இது போலவே மணமகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டென்றும் தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடியும் என்றும் கருதி அனுப வத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண்டும். தனக்கு அடிமைக்காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண் டோமென்கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.

இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டு மானால், விபசாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டுமானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப்பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும் கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங்களே பெரிதும் மனிதத் தன்மைக்கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூறாய் இருந்து வருகின்றது. பெண்களைப் பெற் றோர்களும் ஒருவிஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.

அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒருவிதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது. பெண்ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவதாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத்தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும்படி கற்றுக் கொடுக்கக் கூடாது.

அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள பெண்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண்கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.

இப்பொழுது பெரும்பான்மையான தெய்வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமணமாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுபொறுப்பும் விடப்பட்டதாகவும், நிர்ப்பந்தத்திற்கும், ஒரு கட்டுப்பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந்தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய தாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.

இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையானாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.

இதற்கு முன் பக்குவமான "சாந்தி முகூர்த்தமான" விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.

வேறு ஜாதியில் ஒரு "விதவை"யைக் கல்யாணம் செய்து கொண்டபோது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப்பிராயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது. ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அடிமைகளுக்கு லட்சணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் "முடியாது போ, உன் வேலையை பார்" என்றுதான்  சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத்தால் பெரிய மூட்டையாய் இருந் தாலுங் கூட "தூக்குவதற்குள் என்னய்யா அவசரம்" என் பார்கள். ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டுமானால் அமிதமான கொள்கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டிருப்பார்கள் என்று பேசியவுடன் மணமக்கள் தங்கள் ஒப்பந்தம் சொல்லி மாலை மாற்றிய பின் திருமணம் முடிந்தது.

'குடிஅரசு' - சொற்பொழிவு -  28.09.1930

- விடுதலை நாளேடு, 15.4.18

புதன், 11 ஏப்ரல், 2018

சைவர்களின் மதப்பிரச்சாரம்

15.04.1928-  குடிஅரசிலிருந்து...


நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர் களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து சிவநேசன் என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித் தார்கள். அப்பத்திரிகையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்டதாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலாவது மலர் அனு பந்தத்தில் கோபிசந்தனம் என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது.

தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற்றியை குறுக்காகவே படைத் திருப்பதை யாவரும் காணலாம்.

இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல்லியிருப்ப தானது ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த்துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டா ரகம். அதாவது பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வ தற்காகவே சர்வசனங்களின் நெற்றிகளையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்ட மாக வேனும் படைத் திலர், அப்படியிருக்க சிலர் அவ் விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலு கிறார்கள் என்று விளங்குதலால் அறியலாம் என்கிறார்.

இனி கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உபநிஷத் தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறு வதாவது: கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்தபோது அப்பெண்களின் ஸ்தனங்களிலிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவ தால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங் கும் என எழுதியிருக்கிறார்.

எனவே சைவர்கள் பூசும் விபூதியாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைணவர்கள் பூசும் கோபி சந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்க வில்லை. ஏனெனில் அவர் சொல்வது இன்ன இன்ன சாஸ் திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக் கவும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக்குத் தெரிய வேண்டும். அதாவது:- கிருஷ்ணனும் கோபிகளும் கலந்த பின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷணையும் அல்ல வென்று தோன்றும்போதும் ஆண்குறியும், பெண் குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைண வர்கள் சொல்லி இந்து மத ஆதாரங்களில் இருந்தே மேற் கோள்கள் எடுத்துக்காட்டுவது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷணையும் அல்லவென்று வைணவர் களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம்மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமயதூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின்றார்கள் என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. தவிர மதப்பித்துக் கொண்ட பெயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானிகளைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை.

ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர் களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவதும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்துமத ஆதாரங்கள் என்பவை களில் உள்ளவைகளா? உள்ள வைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும் பேடிப் பிரச் சாரமும் செய்யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப் படாதீர்கள்.

உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்து தான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப் பனர்களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறிவற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இது வரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங்கள். முடியா விட்டால் சப்தத்திற்கும், எழுத்துக்கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள்ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.
- தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 6.4.18

ஜாதி முறை

தந்தை பெரியார்



ஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே!

முன் 16.10.30ம் தேதி குடிஅரசு தலையங்கம் ஒன்றில் "ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்" 4000 ஜாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டதோடு அந்த ஜாதிகளே தான் எல்லா பஞ்சம ஜாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள ஜாதி ஆதா ரங்களை எடுத்துக் காட்டி னோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளு பவர்களில் ஒரு சிலர் மேற்படி ஜாதிக்கிராமத்தை அதாவது ஆதி ஜாதி என்பவை களான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த் தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற் றிலும் தாங்கள் நாலாம் ஜாதி என்றும் ஒரு கற் பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்ட வர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாயிருக்க வேறு பல ஜாதிகள் ஏற்பட்டு இருப் பதாகவும் அவர்கள் தான் "பள்ளு பறை பதினெட்டு ஜாதிகள்" என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வடமொழிப் படி பார்த்தாலும் சரி, தென் மொழிப் படி பார்த்தாலும் சரி, வேளாளர் 4 வது ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதி லிருந்து அறியக் கிடக்கின்றது. அந்தப்படி கூறப்படும் பள்ளு, பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் "பணி செய்யும் பதினெண் வகைச் ஜாதியார்" என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இவை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணை வாணிகன், ஒச்சனகல் தச்சன், வண்ணான், குயவன், கொல்லன் கோயிற் குடியன், தச்சன், தட்டான், நாவிதன் பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட் டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)

ஆனால் இதே பதினெண் மக்களை அபிதான கோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள் களாக, சிவிகையர், (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணை வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதி னெட்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் "கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும், உப்பமைப்ப வர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்" என்று குறிக்கப் பட்டிருக்கின்றது.

இவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்ன வென்றால் சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளான் செட்டிகள். இவர்கள் சோழ புரத்தார், சித்தக் காட்டார், பஞ்சுக்காரர், முதலிய பல திறப்பட்டவர்கள். இதற்கடுத்தப்படியிலுள்ளோர் கார் காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர். இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தப்படியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாமிச போசனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம் படியர், அவரிற் தாழ்ந்தோர் மறவர். அவரிற் தாழ்ந்தோர் கள்ளர். அவரிற் தாழ்ந்தோர் இடையர். இவர்கட் கடுத்தபடியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்த படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எதிலும் "பிராமணர்கள்" விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும், தாழ்வு கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்குச் சிறிதும் இட மில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக்  கவனித் தால் ஜாதியின் சூழ்ச்சித்தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி சத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆட்சேபணைகளும் சத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங் களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவுபடுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியட்சமாய் காண்கின்றோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் ஜாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் "பிராமணர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் பார்ப் பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்டவர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வா தாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதா ரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன் படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.

எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள். அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது "விபசாரம்" "கீழ் மேல் ஜாதி கலப்பு" என்று சொல்லும் படியான இழிதன்மையில் பிறந்த வர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவ மாயிருக்கின்றதை யாரும் மறுக்கமுடியாதென்று உறுதி கூறுவோம்.

மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர ஜாதிக் கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கு ஆதாரமான வேதம், சாதிரம், தர்மம் என்று சொல்லப் பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய் சொல்லுவோம்.

இவை ஒருபுற மிருக்க இந்த ஜாதிக் கிராமத்தில் பார்ப் பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற் படுத்தப்பட்டிருக் கும் யோக்கியதைகளை யும், உரிமை களையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத் தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர் கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதி பேரை சொல்லிக் கொள்ள முடியாத படியும் அதை கனவிலும் நினைக்க முடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது "நாலாவது ஜாதியார்களாக சூத்தி ரர்கள் என்று சொல் லப்படும் வகுப்பாருக் குப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கும் உரிமையானது எப்படி இருக்கின்றது". என்று பார்த்தால் இப் போது "பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்" (அதாவது கிரிமினல்ட்ரைப்) என்று சொல்லக் கூடிய வர்களுக்குச் சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்பந்தத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிது கூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரி யாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரண மாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.

அதுவும் தர்ம சாதிரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.

"ஸ்நாத மவம், கஜமத்தம் ரிஷபம்

காம மோஹிதம் சூத்தரமக்ஷரசம்

யுக்தம் தூரதப் பரிவர்ஜையேல்"

அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.

"ஜப, தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ் ஜய, மந்தர சாதனம் தேவதாரா

தனம் சசய்வதிரீ சூத்திர பத தானிஷள்" அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.

"நபடேல் சமகிருதம் வாணீம்" (சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்.

"நைவ சாதிரம் படே நைவ சுருணுபாத் வைதி காக்ஷரம் நநாயாது தயால் பூர்வம் தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்"

(சூத்திரன்) சாதிரம் படிக்கவோ, வேதத்தைக் கேட் கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்ய வும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.

"இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி"

இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.

"சாதுர்வர்னியம்

மயாசிருஷ்டம்

பரிசரியாத் மகம்

கர்மம் சூத்ரஸியாபி பாவனாம்"      (கீதா லோகம்)

நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்குப் பிராமண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.

இது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாதிரங்கள் பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.

எந்த காரணத்தாலோ இந்து மதத் தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டிய தல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலி யுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ் வொருவரும் தங்கள் தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஏதோ "பொல்லாத விதிவசத்தினால்" இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் திரு. காந்தியாரும் வருணா சிரமத்தைக் கோரும் "தேசிய" தலைவர்களும் கேட்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒரு காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

இன்றையதினம் தேசியவாதிகளாய் இருக்கின்ற வர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மையான ஆசை யுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள் ளைக்கார ஆட்சியிருக்கும் போதே ஜாதி வித்தி யாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டிதுதான் அறிவுள்ள வேலை யாகும். அதைவிட்டு விட்டு முதலில் "நீ போய் விடு நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்" என்று சொன்னால் அது "தான் சாவதற்குதானே மருந்து குடித்தது" போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொரு வரும் மேல்ஜாதி ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதும் தனக்கு கீழ் பலஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது மான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள் கையும், ஜாதி ஆதிக்கத்திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆட்சியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதி கொடுமைகளும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும். என்பதையோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.

இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக் குமானால் இந்தியா ஒரு நாளும் அன்னியர் ஆட் சிக்கோ அடிமை தனத்திற்கோ, அடிமையாகி இருக் கவே முடியவே முடியாது. ஆனால் "அம்பேத்கர் களையும், ஜின்னாக்களையும், ராமசாமி முதலியார் களையும், ராதாபாய்களையும் ஏதாவது ஆசைக்காட்டி ஏமாற்றி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், இழிவுகளையும் மறைக்க வைத்து எங்கள் நாட்டு ஜாதி உயர்வு தாழ்வு விஷயமும் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டு இழிவுபடுத்தும் சமுகக் கொடுமை விஷயமும் நாங்கள் எப்படியோ சரிபடுத்திக் கொள்ளுகிறோம். இப்பொழுது நீங்கள் போங்கள்" என்று சொல்லச் செய்து விடலாம். ஆனாலும் நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதை யெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்பட்டு பின் அயலானை வெளியில் போகச் சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றையதினம் உள்ள இழிவையும் கொடுமையையும், அடிமைதனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதி வைப்போம்.

ஆகவே எப்படியாவது ஜாதிப் பிரிவையும் அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்று அதற்கு ஆரம்பவிழா செய்ய அடுத்து வரும் சென்ச ஒரு சரியான சந்தர்ப்பம் என்றும் அதில் காணப்பட்ட ஜாதியையும், மதத்தையும் தெரிவிக் காதீர்கள் என்றும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.

- 'குடிஅரசு' - தலையங்கம் - 30.11.1930

- விடுதலை நாளேடு, 8.4.18