செவ்வாய், 26 ஜூன், 2018

இந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’


தந்தை பெரியார்



மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.
ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்.

இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு, இம்சைப் படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.
மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப் படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.

அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப் படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும்  அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன. தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில்விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப் படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன். (காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)

            - ‘குடிஅரசு’- 12.05.1935

- உண்மை இதழ், 1-15.5.18

செவ்வாய், 19 ஜூன், 2018

சமுக சீர்திருத்தமும் சமயக் கொள்கையும்

தந்தை பெரியார்




தலைவர் அவர்களே! இளைஞர்களே!! சகோதரர்களே!!!  2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார்.  இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன்.  ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர்களுமாய் இருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள்.  நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு  வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நண்பர்களே! சமுக சீர்திருத்தம் என்றால் எந்த சமுகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என்பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு  அவசியமாகும். நான் இப்போது பொதுவாக மனித சமுகம் என்பதையும் பொதுவாக மனித சமுகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளுகிறேன்.  பிறகு அவசியமிருந்தால் தனிச் சமுகம்,தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.

பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமுகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப் பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவதுமாகும்.

ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கை களாகும்.  இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும்.  ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு  இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப் பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததேயாகும்.

அதாவது, எப்படி ஒரு குழந்தையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப்பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியாதென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில் போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும் படியான 'பூச்சாண்டி' பிடித்துக் கொள்வான் என்றும்,  'பேய்', 'பூதம்'  பிடித்துக் கொள்ளும்  என்றும், 'துண்டித்தக்காரன்' பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய்  சொல்லுவதோடு கையையும், முகத்தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற்கென்று ஏற்படுத்தப் பட்ட கொள்கைகளை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள்.

அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன்றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவை களாகும்.  மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவை களுமாகும்.  அது மாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறிவுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார்.  பகவான் சொன்னார், முனிவர் சொன்னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக்கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப்பிடியாய் பிடித்து சிறிது கூட காலத் திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக் குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று.

அன்றியும் திருந்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று.  ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச்சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக் கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச் சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌகரியமு முடையது என்று சொல்லப் படுவதாயின் அது எந்த மதமாயினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறி வுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண் டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமுக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.

ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமுகத்தையும், இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமுகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றன.  அப்படிக் கருதிக் கொண்டிருப்பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமுக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களையெல்லாம் விட்டுவிட்டு அக்கொள்கைகளை நிறை வேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத் திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கைகளைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.

காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமுகம் இன்றும் சுய அறிவற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது?  என்பவைகளைக் கவனிக்காமல் கீழ் நிலையிலேயே இருந்துகொண்டு சீர்திருத்தமடையவோ, முன்னேற்றமடையவோ முடியாமல் தவிக்கின்றன.  உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்துகொள்ளும் பான்மையும் ஒரே மாதிரியாகஇருப்பதைக் காண்கின்றோம்.  ஆனால், ஆண்களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன்  இந்து, இவன் சைவன், இவன் வைணவன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.  ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாத படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

ஆகவே, மதம் என்பதும் சமயம் என்பதும் யாருக்கும் அநேகமாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதேயொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக்  கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கொள்கை களை அடியோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள்  பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை  வற்புறுத்தாததேயாகும்.

எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான்  பிரதான மான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான், எந்த சமய மக்களிடம் சமய உண்மைக்கொள்கைகளைப் பார்க்க முடியாமால்  போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள்கையைச் சொன்னா லும்  லட்சியம் செய்யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத்திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம்  நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி  ஆகியவைகள் என் பவைகள்  எல்லாம் மேல்கண்ட வேஷமாத்திரத்தாலே  கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டுவிட்டதாலும் வெறும்  வேஷத்தை போடு கின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான  சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனைகளையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலைவிதி, கடவுளின்  பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப்  பிறக்க லாம்  என்பவைகளையும்,  சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும்.  அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப்பட்ட நல்ல கொள்கை யுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும்,  பிரத்தியட்ச அனுபவத்தையும்   பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர் களையே நடந்து  கொள்ளும்படி விட்டுவிடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும்  பாட்டிக்கதைச் சமயங்கள்  இன்றைய சமுக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது  என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.

உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி  அறிவு சௌகரிய மில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர்  பிரயாணம் போய் வரட்டுமென்று கருதி அந்த ஊருக்குப் போனால் புண்ணியம்,  இந்த சாமியை தரிசித்தால்  மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்  பிறப்பான் என்றெல்லாம்   சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக்  கதைகள் எழுதி  வைத்ததுடன் ஜீவகாருண்யம் என்பதையும்  உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கட்டும் என்று  கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம்  கிடைக்குமென்று  எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார்,  ஆகாயக்  கப்பல் ஆகியவைகள் ஏற் படுத்தப்பட்டு  மலிந்த பிறகு கூட நடந்து யாத்திரை போக  வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இது போலவேதான் அநேக  விஷயங்களை சமயத்தின்  பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி  அடிமைகளாய்  கஷ்டப்படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் சமயத்தின் உண்மை தத்துவத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும்.  அதன் போலித் தத்துவங்களை தைரியமாக அழிக்க வேண்டும், அதோடு போலிக்கற்பனை  நிபந் தனைகளுக்கு  ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம், புண்ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திரவங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன்.  இந்த உபத்திரவங்களும்  மடத்தனஙகளும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக் கின்றதென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து  சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும் படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடியாக சீர்திருத்தம் செய்ய சற்றும்  ஒன்றுபடாததாக இருந்து வரு கின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்ற மடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது  ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமுகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.

(சென்னை - பச்சையப்பன் கலாசாலையில் சமுக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 25.01.1931

- விடுதலை நாளேடு, 17.6.18