சனி, 30 நவம்பர், 2019

பெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்

தந்தை பெரியார்

ஒருவனைப் பார்த்து, “நீ ஏன் சூத்திரன், கீழ்ஜாதி, நாலாஞ்ஜாதி’’ என்று கேட்டால் அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறானென்றால், மதப்படி _ சாஸ்திரப்படி, கடவுள் அமைப்புப்படி என்கின்றான். நீ ஏண்டா பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்றால், அதற்கு அவன் மதப்படி, சாஸ்திரப்படி கடவுள் அமைப்புப்படி என்றுதான் பதில் சொல்லுகின்றான். அது போலத்தான் பணக்காரனும் கடவுள் கடாட்சத்தால்தான் பணக்காரனாக இருக்கிறேன் என்கிறான். நாள் பூராவும் உழைக்கின்ற நீ ஏண்டா ஏழையாக இருக்கிறாய் என்றால் அது கடவுள் செயல், கடவுள் கஷ்டப்படுவதற்காக என்னை அப்படிப் படைத்துவிட்டார் என்கிறான். இப்படிச் சமுதாயத்தில் உள்ள குறைகளுக்குக் காரணமாக இருப்பது நம் மதம், சாஸ்திரம், கடவுள் இவையே. நம் மக்களின் இழிவிற்கும், பேதத்திற்கும், கவலைக்கும், மானமற்ற தன்மைக்கும் காரணமாக இருப்பதால், இவற்றை ஒழித்தால்தான் நமது சமுதாயமானது அறிவு பெற்று நல்வாழ்வு வாழமுடியும் என்பதால் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டியது அவசியமாகிறது.

40 ஆண்டுகளாக இவற்றை ஒழிக்கப் பாடுபட்டும் முடியவில்லை என்றால், அதற்குக் காரணம், நம்மைவிட நம் எதிரிகளிடம் பத்திரிகை பலமும், பணமும், பிரச்சார பலமும் நிறைய இருக்கின்றன. சாதாரண அனாமதேயங்களை எல்லாம் பிரச்சாரத்தின் பலத்தாலும் பெரிய மகானாக்கிக் காட்டுகிறார்கள். நம் மக்களுக்குப் போதிய அறிவில்லாத காரணத்தால் அதனை நம்புகின்றனர். நம் பிரச்சாரத்தால் மக்கள் சிறிதளவு அறிவு பெறுகின்றனர். என்றால், அதைவிடப் பல மடங்கு பிரச்சாரத்தாலும், விளம்பரத்தாலும் மக்கள் தங்கள் சிந்தனாசக்தியையும், அறிவையும் இழக்கின்றனர். பத்திரிகைகள் யாவும் கட்டுப்பாடாக மூடநம்பிக்கை _ முட்டாள் தனமான பிரச்சாரங்களையே கருதி விளம்பரம் செய்து வருகின்றன. நம்மிடமும் ஒரு கோடி ரூபாயிருந்து, ஒரு 100, 150 பத்திரிகைகள் இருந்து, 500 பிரச்சாரகர்கள் இருந்தால் அறிவுத்துறையில் கழுதையைக்கூட மகானாக்கிவிட முடியும். விளம்பரத்தால் சாதித்து விட முடியும்.

நம் நாட்டின் பெரிய கேடு _ இதுவரை அறிவுத்துறையில் மக்களைத் திருப்ப ஒருவர் கூட தோன்றாததேயாகும். ஓரிருவர் தோன்றியிருந்தாலும் கூட அவர்களும், அவர்களின் கருத்துகளும் மறைக்கப்பட்டு விட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றினார். அதன்பின் அறிவுப் பிரச்சாரத்திற்கு ஆளே இல்லாமல் போனதோடு, மக்களிடம் மடமையை வளர்க்கும் பிரச்சாரங்களும், சாதனங்களும் மிக அதிகமாகி மக்களை அறிவற்ற மடையர்களாக்கி விட்டன. ரஷ்யாவிலே அவர் தோன்றினார், துருக்கியிலே அவர் தோன்றினார், லண்டனிலே ஒருவர் தோன்றினார், அமெரிக்காவிலே ஒருவர் தோன்றினார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதுபோல ஓர் ஆள் _ அறிவில் சிறந்த ஓர் _ ஆள் நம் நாட்டில் தோன்றினார் என்று சொல்ல முடியாதே!

நம் நாடு புண்ணிய பூமி, ஜீவபூமி என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும், நம் நாட்டில் பெரிய மகான்கள், மகாத்மாக்கள், ரிஷிகள், தெய்வசக்தி பொருந்தியவர்கள், கடவுள் அருள்பெற்றவர்கள், என்றெல்லாம் தோன்றினாலும் கூட, இவர்கள் அனைவருமே மக்களின் முட்டாள்தனம், மூடநம்பிக்கை, அறிவற்ற தன்மை ஆகியவற்றை வளர்க்கவே பாடுபட்டார்களே ஒழிய, ஒருவர்கூட மக்கள் அறிவைப் பற்றியோ, இழிவைப் பற்றியோ, மானமற்ற தன்மை பற்றியோ சிறிதும் சிந்தித்தவர்கள் கிடையாது. நம் இலக்கியங்கள், மத நூல்கள் சாஸ்திரங்கள் எல்லாம் மடமையை வளர்க்கத் தக்கனவாக அமைந்தனவே தவிர, அவற்றால் மக்கள் சிந்தனை அறிவு பெற வழியே இல்லாமல் போய் விட்டது என்பதோடு நமக்கிருக்கிற நூல்களில் அறிவிற்கு மாறான, சிந்தனைக்கு மாறான மூடநம்பிக்கைக்கு ஆதாரமான பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையினாலே நம் மக்கள் அறிவு பெறவோ, சிந்தனை பெறவோ வழியின்றி அந்த ஆதாரங்களை நம்பி மூடநம்பிக்கைக்காரர்களாக, பகுத்தறிவற்ற ஜீவன்களாக வாழ வேண்டியவர்களாகி விட்டார்கள்.

உண்மையாக எவன் பெரியவனோ _ உண்மையாக எவன் மக்களுக்குத் தொண்டு செய்கிறானோ அவனுக்கு மதிப்பில்லாமல் போய், பொதுவாழ்க்கையின் மூலம் எவன் பிழைக்கிறானோ, பொறுக்கித் தின்கின்றானோ அவனுக்குத்தான் மதிப்பும், விளம்பரமும் அதிகமிருக்கிறது என்பதோடு, தங்கள் இனத்திற்கு ஆதரவாக இருக்கிற அனாமதேயங்களை எல்லாம் பார்ப்பான் பார்த்து மகான் என்கிறான், ரிஷி என்கிறான், மகாத்மா என்கிறான். பத்திரிகைகளும் அதற்கு ஆதரவாக இருந்து விளம்பரப்படுத்துகின்றன. தற்போது பத்திரிகைகள் யாவும் பார்ப்பானிடமும், பணக்காரனிடமும், பார்ப்பானின் அடிமைகளிடமும், சிக்கிவிட்டதால், புரட்டு _ பித்தலாட்டங்கள் மூலம் மனிதனை மடையர்கள் ஆக்கவே முயற்சிக்கின்றன; பாடுபடுகின்றன. அவற்றிற்கு முட்டாள்களுடைய  மூடநம்பிக்கைக் காரர்களுடைய ஆதரவு அதிகமிருப்பதால், அவைதாம் அதிகம் விற்பனையாகின்றன. பாமர மக்களிடையே பரவுகின்றன. மனிதன் அறிவையும், சிந்தனையையும் வளர்க்கக் கூடிய பத்திரிகைகள் ஒன்றிரண்டு இருக்கின்றன என்றாலும், மக்கள் அவற்றை விரும்புவது இல்லை, வாங்கிப் படிப்பதும் கிடையாது. எனவே, மக்களுக்கு உண்மையான அறிவு வளர்வதற்கு இடமில்லாமல் போய் விட்டதோடு, மூடநம்பிக்கை _ முட்டாள் தனமான கருத்துக்களுக்குத்தான் மக்களிடம் செல்வாக்கு அதிகமாகி விட்டது.

மக்களுக்கு அறிவைப் புகுத்த முதலில் அவர்களிடம் இருக்கும் மடமையை அகற்ற வேண்டும். அந்த மடமைக்கு அஸ்திவாரமாக இருக்கும் முட்டாள்தனத்திற்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையை ஒழித்து, முதலில் அவர்கள் மூளையில் படிந்திருக்கும் மடமையினை ஒழித்தாக வேண்டும். பிறகுதான் அறிவைச் செலுத்த முடியும். அவர்களைச் சிந்திக்கத் தூண்டமுடியும் என்பதால்தான், முதலில் கடவுளை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறோம்.

9.6.1968 அன்று புதுவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

- ‘விடுதலை’ - 24.6.1968

- உண்மை இதழ், 1-15.10.19

வெள்ளி, 29 நவம்பர், 2019

அயோக்கியத்தனம் எது?

28.10.1944  - குடிஅரசிலிருந்து....

நன்றாய் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்துகொண்டு, அய்யா, மூன்று நாளாக கஞ்சியே காணவில்லை; காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால், அது போலவே இருந்துகொண்டு யாதொரு விதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்துவிட்டுப் போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தைவைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாக கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம்.

பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக்கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது, முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் தப்பு என்ன இருக்கிறது?

தொல்லை எது?

பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும், மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அதுபோலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக்கொண்டு கோவில், மடம்  கட்டிக்கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமார்த்தனை முதலிய செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மன திற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள்

பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கிவிட்டால் பணக்காரனும் தரித்திரனும் தானாகவே மறைந்து போவார்களா - மாட் டார்களா?

- விடுதலை நாளேடு 29 11 19

பகுத்தறிவு திருமணம்

22.07.1944  - குடிஅரசிலிருந்து...

தோழர்களே! இப்போது நடைபெறும் திருமணத்தில் நாம் ஒன்றும் பெரிய மாறுதலைக் காணவில்லை. தலைகீழாக ஒன்றும் நடைபெறப் போவதில்லை. ஒரு சிறிய மாறுதல் மட்டும் உண்டு. மாறுதல்கள் இயற்கையாகவே பல இனங்களாலே, பல இடங்களிலே இன்று கையாளப் பட்டுத் தான் வருகிறது.

இங்கே நாம் என்ன மாறுதலைக் காண்கிறோம்? சடங்கில்லை. வேறு இனத்தவன் எவனும் மணத்தை நடத்துவ தில்லை. சுயமரியாதைக்கும், பகுத்தறிவிற்கும், இயற்கைக்கும் பொருந்திய மணம் வேண்டுகிறோம். அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தை நாஸ்திகத் திருமணம் என்று பலர் சொல்லக்கூடும். மற்றும் நமது தாய்மார்கள் கலிகாலம் அய்யர் இல்லை யென்றாலும், அம்மியாவது இருக்கக் கூடாதா? நெருப்பாவது (ஓமம்) இருக்கக் கூடாதா? விளக்காவது இருக்கக் கூடாதா? என்றெல்லாம் சொல்லு வார்கள். நமக்குப் பார்ப்பனர் மீதோ, அம்மி மீதோ, நெருப்பின் மீதோ, குத்து விளக்கின் மீதோ, தனிப்பட்ட வெறுப்பு ஒன்றுமில்லை. நெருப்பு அடுப்பில் இருக்க வேண்டியதுதான். அம்மி அரைக் கப் பயன்படட்டும். இரவில் விளக்கு இருக்கட்டும். ஒவ்வொன்றும் பயன்பட வேண்டிய இடத்தில் இருக்கட்டும். பகுத் தறிவிற்கும், நம் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

ஒவ்வொன்றிற்கும் ஏன் என்ற கேள் வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது. மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றது என்பதைப் பொறுத்துத் தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகின்றது. இதற்காகத்தான் நாம் உழைக்கிறோம். இந்தத் திருமணத்தின் முதல் வெற்றி, பார்ப்பனன் இல்லாதது. ஆதலால் இதை சுயமரியாதைத் திருமணம் என அழைக் கிறோம். தான்தான் உயர்ந்த ஜாதி என்ற ஆணவங் கொண்டு, நம்மைத் தொடாதே, கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்கார வைத்து காரியம் நடத்தினால் தமிழனுக்கு மானமுண்டு என்று சொல்ல முடியுமா?

இரண்டாவது வெற்றி என்னவென் றால், இது பகுத்தறிவுத் திருமணம். பகுத் தறிவு என்று சொல்லுவதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண் ணுகிறோமோ, அவை நாளைக்கு மூடப் பழக்கவழக்கங்கள் என தள்ளப்படும். நாம்கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற் றையே, பழைய கருத்துக் களெனத் தள்ளி விடவில்லையா? அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஓர் காலத்தில் இராமசாமி என்ற மூடக்கொள் கைக்காரன் இருந்தான் என்று சொல்லு வார்கள். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத் தின் சின்னம். எனவே பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத் துக்கு அவர்கள் செய்தது சரி என்பதா னாலும், அப்போது அவ்வளவுதான் முடிந் தது என்பதானாலும், இன்று மாறித்தான் ஆகவேண்டும், சக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து எடிசன் அப்புறம் படிப் படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப்போது நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அய்ம்பது வருடங் களுக்கு முன்பிருந்ததைவிட கடவுளைப் பற்றி எண்ணம் தெய்வீக சக்தி படைத் தவர்கள், பெரிய மனிதர்கள் என்பவர் களைப் பற்றிய எண்ணம், வீடுவாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எவ்வளவோ எண் ணங்களில் பொருள்களில் பெரிய மாற்றத் தைக் காண் கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன், பெண் ஜாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்.

அடுத்தபடியாக, இங்கு பொருட் செலவு அதிகமில்லை, நேரமும் பாழாவ தில்லை. முன்பெல்லாம் பல நாட்கள் திருமணம் நடைபெற்றது. இப்போது பார்ப்பனர்கள் கூட டிநே னயல டிடேல அதாவது ஒரு நாள் திருமணம் என்பதாக அழைப்பிலேயே குறிப்பிடுகிறார்கள்.

மற்றும், இந்தத் திருமணத்தில் ஆணுக் கும், பெண்ணுக்கும் சம உரிமை இருக் கின்றது. ஆரியரின் எட்டுவகைத் திருமண முறைகளில் ஒன்றில்கூட பெண் ஓர் உயி ருள்ள பொருளாகக் கூட மதிக்கப் படுவ தில்லை.

ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால், அந்த முறையில் நாம் மக்களை வளர்ப்பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண்ணை அடைக் கிறோம், பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட இப்பெண்களைத் தங்களுக்கு வேண்டிய வைகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் படி சொன்னால் டிராமா (நாடக) கார னைத்தான் தெரிந்தெடுப்பார்கள். அவர் களுக்குக் குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொடுப்பதில்லை. மேல் நாடுகளில் சிறு குழந்தைகளுக்குக் கூட குசநளா யசை அதாவது நல்ல காற்று முதலியவற்றின் அருமை தெரிகின்றது.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டு பொருத்தம் பார்க்கச் சொன்னால், அவனுக்கு மண மக்களைப் பற்றி என்ன தெரியும். அண்ணன் தங்கை ஆகிய இருவர் சாதகங்களை கொடுத்தால், ஒரு வருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லு வான். மனிதனுக்கும் நாய்க் குட்டிக்கும்கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம். ஜாதகம் இல்லையென்றால், பெயரைச் சொல்லச் சொல்லிப் பொருத்தம் பார்ப் பான். அதற்கு மேல் பல்லி, கருடன் ஆகிய வைகளின் ஒப்புதல் வேண்டும்.

வாழ்க்கை யையே பிணைக்கக் கூடிய திருமணத்தில், இவ்வளவு பேதமை அநேக நல்ல பொருத்தங்கள் என்பவை பெண் ணின் முதுகுக்கும் கணவனின் கைத் தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடி கின்றது. வரும் காலத்தில் வாலிபர்களுக்கும் பெண் களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லை யென்றால் உரிமையுடன் இருக்கப் போகும் அவர்கள் நம் தடை களை விலக்கி முன் னேறுவார்கள். எனவே முதலிலேயே உரி மையளித்து விடுவது நல்லது. தங்களனை வருக்கும் வணக்கம்.

(12.07.1944 அன்று பேரளத்தில்  என்.மகாதேவன் அவர்கள் புதல்விகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

-  விடுதலை நாளேடு 29 11 19

தேவாரப் பெருமை இதுதானா? -சித்திரபுத்திரன்-

12.08.1944 - குடிஅரசிலிருந்து..

மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கவுசிகம் என்னும் தலைப்பில், 3ஆம் பாட்டு

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத் திருவாலவா யாயருள்

பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண்

டெண்ணற் கற்பழிக்கத் திருஉள் ளமே

என்பதாகும்.

இதன் கருத்து என்ன?

திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் ஆரி யப் பிரசாரம் செய்வதற்கு முன்பு, தமிழ் நாட்டில் இருந்த மக்கள் யார்? திராவி டர்கள்தானா - அல்லவா?

அந்தத் திராவிட மக்கள்தானே இந்தச் சம் பந்தர் முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத் தாலும், ஜாலவித்தைகளாலும் பலாத்கார கொடுமைச் செயல்களாலும் சைவர்களாக ஆனார்கள்.

இந்தத் திராவிடர்களின் (பெண்களை) மனைவிகளைத்தானே கற்பழிக்கத்திரு உளமே என்று சம்பந்தர் பாடினது? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கின்ற விபரத்தைப் பண்டிதர்கள், சைவப் பண்டிதர்கள் அல்லது கிருபானந்த வாரியார், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கட்டுப்பாடுடையவனாக இருப்பேன்.

-  விடுதலை நாளேடு 29 11 19

வியாழன், 28 நவம்பர், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! - 2

* தந்தை பெரியார்

திராவிடன் அன்றே எதிர்த்தான்!

அன்பர் கலியாண சுந்தரனார் திராவிட நாடு வேறு, ஆரிய நாடு வேறு, திராவிடப் பண்பு வேறு, ஆரியப் பண்பு வேறு என்று இன்று காலை தெரிவித்தது போல், திராவிட நூல் வேறு, ஆரிய நூல் வேறுதான், திராவிடர்கள் எப்போதுமே ஆரியர்களை ஆரிய கலாசாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்த புராண ஆரம்பத்தில் காணலாம்.

சிவபெருமானுடைய கல்யாணத்தின் போது தேவர்களும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்து விட்டதென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற்குப் பரிகாரம் உடனடியாகச் செய்யப்பட வேண்டு மென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதி லிருந்து தென்னாட்டினர் உயர்வு ஆரியர்களால் எவ் வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார். பரிகாரம் செய்ய மிகமட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்துவந்த வாதாபியும், வில்லவனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்தபுராணத்தில் சித்திரிக்கப் படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்று விட்டதாகவும் ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடியவில்லை என்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப்படுகிறது.

மடப்புலவர்களின் மதித்திறமை!

இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந்தறியாமல் இதையொட்டி 'அகத்தியன் வளர்த்த தமிழ்' என்று புகழ் பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள் போல் தமிழ் கற்று நமது தர்மங்களை. ஒழுக்கங்களை மாற்றி யமைத்து இருக்கக்கூடும். இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள் நமது மடப் புலவர்கள். 'நாய் நன்றி காட்டுவதெல்லாம் அன்னியனிடத் துத்தான்' என்பதுபோல், பழங்கால இப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்துவிட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்தி விட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும், ராவணனுடைய தம்பிக்கும், ராமன் பட்டம் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏதேனும் பொருத்தம் இருக் கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகள் எல்லாம் அபிதான சிந்தாமணியில் கொடுத்துக் கொடுக்கப்பட்டி ருக்கிறது அவற்றைப் படித்துப் பாருங்கள் தெரியும். ஆரியர் திராவிடம் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று.

காட்டிக் கொடுக்கும் கயவர்களின் முன்னோன் விபீஷணன். இப்போது எப்படி சில திராவிடர்கள் அறி விழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலை வர்கள் என்றுகொண்டு, தாம் பணியாற்றும் வகையில், ஏனைய திராவிடர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ அதுபோல், வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு விபீஷணனைக் கொண்டு வந்து அனுமார் சேர்க் கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது என்று - அதற்கு ராமன் என்ன  சொல்லுகிறான் பாருங்கள்.

"என் லட்சியத்திற்கு அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்விதானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந்தால் என்ன? அவனை, நண்பனாக கொள்ள வேண் டியது தானே! மேலும் அவன் எப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ, அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்குத் துரோகம் செய்ய முடியாதே. அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்கு செய்ய முடியும். இவனை விட்டால் ராவணனை எனக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய வேறு ஆள் ஏது?" என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.

ஆச்சாரியார் ராமநாதர்களை அறிமுகப்படுத்திய முறை

இதே மாதிரிதான், தம்முடைய லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டு இன்றையப் பார்ப்பனர்களும் மானாபிமானம் அற்று தம் கட்சிக்கு ஆள் தேடித் திரி கிறார்கள். நமக்கு எவன் துரோகம் செய்கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன். மகாதேசபக்தன். அவர்களுடைய போற் றுதலுக்கு உரியவர்கள். புகழ்பெறுபவர்கள். நம்முடைய துரோகி களின் மூலம்தான், அன்றுதொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை, இந்த நாசமாய் போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கி சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோபாலாச்சாரியார், அன்று அனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே. "ராமநாதன் வந்துவிட்டார். பழையபடி அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும்" என்று.

ராவணனை விட்டு விபீஷணன் நீங்கியதற்கும், சுயமரியாதை கட்சியை விட்டு ராமநாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே ராஜகோபாலாச்சாரியார். இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன் னார். இந்த ராமாயண சம்பிரதாயந்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

கீதையை ஆரியர்கள் போற்றுவதேன்?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள், பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் 4 ஜாதிமுறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் - கடவுளுக்கும் பெரிய வர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு, வர்ண அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்திகளுக்கும், பார்ப்பனர் களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளிள் 2 வரி கூடத் தெரியாதது ஏன்? என்பதையும் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு திராவிடர் கூடக் கீதைப் பிரசாரம் செய்துவருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீதை எவ்வளவு அக்கிரமத்துக்கும் முக்காடுபோட்டுவிடும் காவி உடையைப் போல் ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்.

பித்தலாட்ட போர்வை கீதை!

அதற்கு பெரிய நெருப்பு குறள்!

தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதிமுறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.

கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும், ஒழுக் கத்தையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ளபோது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதைக் கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துக் கொள் என்றோ சுலபமாகப் பதில் கூறிவிடலாம். ஆனால் குறளைப் படித் தாலோ தர்மத்தின்படி நடக்க வேண்டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்தலாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத் துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியது தான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.

மனித சமுதாயத்திற்கே வழிகாட்டி குறள்!

குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப் பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது?

முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனுதர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள். எனவே தான், எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.

எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் தம்மவர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரை தம்மவர் என்று கூறி ஜடாமுடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோற்றுகிறார். ஒரு இடத்தில் "மயிரும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக்கொள்ள வேண்டியதில்லை. யோக்கியனாய் இருக்க வேண்டுமானால்" என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

இராமாயணக் கூத்து ஏன்?

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று? இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

எவளோ ஒருத்தி சொன்னாளாம் "பன்னாடைக்குப் பிறந்ததெல்லாம் பந்தம் பிடிக்குது. பண்டாரத்துக்கு பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது" என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல், மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன என்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசுதாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள்வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர் பண்டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். தாசி வீட்டில் மிராசுதாரர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாசி மக்கள் தொழிலையொட்டி கோயிலில் பந்தம் பிடிக்கும். ஆனால் மிராசுதாரர் பேரால் பண்டாரத்திற்கு அவர் வீட்டில் பிறந்த குழந்தைகள் மிராசு பார்க்கும் என்று கற்பனைக் கதை சொல்லுவார்கள், இதைக் குறிப்பதுதான் அப்பழமொழி. அதுபோல் உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப்பையிலே கிடக்க, திராவிடர் துரோகி தீட்டிய ராமாயணமும் ஆரியர் தீட்டிய கீதையும் அதி காரத்தில் இருந்து வருகிறது.

ஏன் இந்தத் திறப்பு விழா?

இந்த இழிதன்மையை, மானமற்ற தன்மையை, கவலையற்ற தன்மையை உங்களிடம் முறையிட்டுக் கொள்ள வேண்டித்தான் வள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க ஒப்புக் கொண்டேன். குறளுக்குள் நான் இன்று புகவில்லை. மற்றொரு சமயம் எடுத்துக்காட்டுகிறேன்.

இந்து மதத்தில்தான் 'தாழ்த்தப்பட்ட' கிளை!

'தாழ்த்தப்பட்ட' வகுப்பார் உணரவேண்டும், இந்துக் களாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பாரென் கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை. குறள் இந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுள்ள சத்துக்களையெல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்.

விரும்பிப்படித்து அதன்படி நடக்கவேண்டும். ஒவ்வொருவனும் தான் இந்து அல்ல திராவிடனே - 'திருக் குறளானே' என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்னமதம் என்றால் குறள் மதம், மனிததர்ம மதம் என்று சொல்லப் பழகவேண்டும். யார் எதைச் சொல்லியபோதிலும், எது எத்தன்மை யுடையதாய் இருப்பினும், ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்துப் பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்யவேண்டும். சுய அறிவே பிரதானம் என்ற, 'வாலறிவன் நற்றாள்' என்ற வள்ளுவர் கருத்துப்படி அனைவரும் நடக்க வேண்டும். உருவ வழிபாட்டை ஒதுக்கிவிட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு விண்ணப்பம்!

முஸ்லிம் தோழர்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களை ஏனோ எங்களுடன் நன்கு சேர ஒட்டாமல் உங்கள் தலைவர்கள் தடுத்து வருகிறார்கள். ஜின்னாசாகிப் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் யாரும் வேறு கட்சியில் சேரக் கூடாது என்று கூறினார் என்றால், அதற்கு அர்த்தம் இருந்தது. முஸ்லிம்களின் லட்சியமான பாகிஸ்தானை அடைய எல்லா முஸ்லிம்களும் ஒரே கட்சியின் கீழிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அவ்விதம் சொல்லியிருந்தார். அப்பொழுது நானும் முஸ்லிம் கட்சியிலிருந்தேன். பாகிஸ்தான் பெற்றாகிவிட்டது. எனவே அவர் கூறியது காலாவதியாகிவிட்டது. (லிமிடேஷன் பார் ஆகிவிட்டது) இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வது தான் நல்லது. இன்றுள்ள இம்மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும், பயத்துக்காகவும், சுயநலத்திற்காகவும் காங்கிரஸ் காரர்களின் காலடியில் இருந்துக் கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்து அவர்களைக் கோழை களாக்கி விட்டனர் இதை முஸ்லிம் பாமரமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து கொள்வதா யிருந்தால் தாராளமாகச் சேர்ந்து கொள்ளுங்கள் நாம் வேண்டாமென்று கூறவில்லை. 100க்கு 90-பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களா 100க்கு 7பேரான உங்களுக்கு வளைந்து கொடுக்கப் போகிறார்களா? எங்களைப் பொறுத்த வரை, இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்த வர்களாகத் தான் கருதி வருகிறோம். நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல், இந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு; குறளை ஒரு போதும் வெறுப்பவர்கள் அல்ல; ஒன்றும் முடியாது போனால் உங்களைப் போன்ற குல்லாயாவது போட்டுக் கொள்ளலாம் என்று தான் நாங்கள் கருதியிருக்கிறோம்.

எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக, உங்களை இந்த அளவுக்கு அளவளாவும், ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள் அல்லது வட நாட்டானால் பல கோடி செலவிட்டு பத்திரிகைகளைக் கொண்டு தீவிர பிரசாரம் செய்து இந்துக்களைத் தூண்டி விட்டு உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப் பனர்களோடாவது சேர்ந்துக் கொள்ளுங்கள். சேருமுன் கொஞ்சம் தீர்க்கமாக யோசித்து விட்டு மட்டும் சேருங்கள். திருவண்ணாமலையும், ஈரோடும், திருநெல்வேலியும் உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.

கிறிஸ்தவர்களே! நீங்களும் சிந்தியுங்கள்!

முஸ்லிம்களை விடக் குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்குச் சொல்லுகிறேன். கிறிஸ்தவர்களாகி விட்ட தாலேயே நீங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள். உங்கள் நன்மையை பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால் ஜாதி, சமய, பேதமின்றி பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளை பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து மனிதத் தன்மையேற்படப் பாடுபட்டு வரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றி வரும் கழகம் என்பதை நீங்கள் உணர்ந்து ஆன எல்லா உதவியையும் அதற்கு அளித்து ஆதரியுங்கள்.

(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)

'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948

 - விடுதலை நாளேடு, 24.11.19

கடவுள் கருணை!

09.06.1935,  குடிஅரசிலிருந்து...

பீகாரில் நடந்த பூகம்பத்தின் அதிர்ச்சி இன்னும் நமது மனதைத் திடுக்கிடச் செய்து கொண்டி ருக்கிறது; அதனால் ஏற்பட்ட கஷ்டங் களினின்றும் மக்கள் இன்னும் விடுபட வில்லை; நஷ்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

இதற்குள் திடீரென்று சென்ற 31.05.1935 காலை நாலு மணிக்கு மக்கள் அயர்ந்து உறங்குகிற சமயத்தில் பலுஜிஸ்தானத்தைச் சேர்ந்த குவெட்டா நகரத்திலும், அதைத் சுற்றியுள்ள கிராமங்களிலும் பூமி அதிர்ச்சி உண் டாகி ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் பெண்டு, பிள்ளை, தாய், தந்தை, சகோதர, சகோதரி, உறவினர், வீடு, சேர்த்து வைத்திருந்த சொத்து முதலியவைகளுடன் விழுங்கி விட்டது.

பூகம்பத்தின் போதும், அதன் பின்னும் மக்கள் பட்ட அவதிகளை நினைக்கும் போதும் எத்தகைய கல் மனதும் உருகாமற் போகாது.

சென்ற ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தைக் கடவுள் சித்தம் என்று தோழர் காந்தியாருள்ளிட்ட சிலர் கூறினார்கள். வைதிக பிண்டங்களும் தலையசைத்தார்கள். இவ்வாண்டு ஏற்பட்ட இந்த பூகம்பத்தை யாருடைய சித்தம் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை.

கடவுள் சித்தத்தால் உண்டான இந்தப் பூகம்பத்தில் மக்கள் மாத்திரம் மடிந்து போக இல்லை; அவர்கள் சொத்துச் சுதந்திரங்கள் மாத்திரம் அழியவில்லை; அந்த கடவுளின் இருப் பிடம் என்று கருதப்படுகின்ற கோயில்கள் இடிந்தன; சர்ச்சுகள் தகர்ந்தன; மசூதிகள் விழுந்தன; ஆதலால் எந்தக் கடவுளின் கோபத்தால் இந்த பூகம்பம் நிகழ்ந்ததென்று தெரியவில்லை; இந்துக்கள் மடிந்தனர்; முஸ்லிம்கள் மடிந்தனர்; கிறிஸ்தவர்கள் மடிந்தனர்; வெள்ளையர்கள் மடிந்தனர்; பார்சிகள் மடிந்தனர். இன்னும் எந்தெந்த மதத் தினர் அங்கு இருந்தார்களோ அவர்கள் எல்லோரும் மடிந்தனர். ஆயிரக் கணக்கான மக்கள் காயம் பட்டனர்; காலொடிந்தனர்; கையிழந்தனர்; கண்ணிழந்தனர்; மூளை சிதறினர் - இவ்வாறாக எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும், எல்லா மதக் கடவுளும் சேர்ந்து துன்பத்தைக் கொடுத்தார்களா? ஏன் அந்தக் கடவுள்களுக்கு இவ்வளவு கோபம்? அங்கிருந்த மக்கள் எல் லோரும் நம்மைப் போல கடவுள்களுக்கு விரோதமான சுயமரியாதைக் காரர்களா? இல்லையே!

ஆனால், பூகம்பம் எப்படி ஏற் படுகிறது என்பதை அறிந்தவர்கள் இந்தக் கடவுள் சித்தம் என்று சொல்லி மக்களை மூடர்களாக ஆக்க இதையும் ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்திக் கொள்வதை ஒப்புக் கொள்ள மாட் டார்கள். பூகம்பத்தைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுவதை கவனிப்போம்.

பூமியின் அடியில் நெருப்புக் குழம்பு இருந்து கொண்டிருக்கின்றது. அதில் குளிர்ச்சி பட்டால் உடனே கொதிப்பு உண்டாகிறது. சாதாரணமாக எரியும் விளக்கில் சிறிது தண்ணீர்த் துளி தெறித்தால் அவ்விளக்கின் ஜூவாலை எப்படி குதிக்கிறதோ அது போலவே இக்கொதிப்பும் உண்டாகிறது. இவ் வாறு கொதிப்பு உண்டானவுடன், அதனால் பூமியின் மேலுள்ள மலைகள் அசைய ஆரம்பிக்கின்றன. இந்த அசைவி னாலேயே பூகம்பம் உண்டா கிறது. பூமியின் அடியில் நெருப்புக் குழம்பின் கொதிப்பு அதிகப்பட்டால், பூமி வெடித்து அதன் வழியே நெருப்புக் குழம்பு மேலே வருவதும் உண்டு. இதுதான் எரிமலை என்று சொல்லப் படுவது.

ஆகவே பூகம்பம், எரிமலை முதலி யவைகள் தோன்றுவதற்கு உண்மைக் காரணங்கள் இதுவேயாகும். இந்த இயற்கை நிகழ்ச்சி யாருடைய சித்தத்தி னாலும் உண்டாவதல்ல, யாருடைய கருணை யினாலும் நிறுத்தப்படுவதல்ல.

இயற்கையின் வேறுபாடே பூகம்பம் போன்ற தீமைகள் நேருவ தற்குக் காரணமாக இருக்கின்றது. இப்படிப் பட்ட இயற்கையின் கோளாறினா லேயே சென்ற ஆண்டில் பீகார் பூகம்பம் நிகழ்ந்தது. இப்பொழுதும் குவெட்டாவில் நடந்திருக்கின்றது. அதனால் உண்டான முழுச் சேதத் தையும், பற்றி வேறு ஓரிடத்தில் பிரசுரித்திருப்பதை படித்தால் உண்மை விளங்கும்.

ஆதலால் இயற்கையில் நிகழ்ந்த இந்தப் பூகம்பத்தை யாரும் கடவுள் என்ற அர்த்தமற்ற சொல்லின் மேல் பழி போட்டுச் சும்மாவிருக்க வேண் டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். கடவுளால் நிகழ்ந்ததென்றால், அதனால் உண்டான கஷ்ட நஷ்டங் களை நிவர்த்திப் பதற்கு நமக்கு எப்படி முடியும்? அந்தக் கடவுள் தானே நிவர்த்திக்க முன்வர வேண்டும்? கடவுள் கஷ்டத்தை நிவர்த்தி செய்து விடுவா ரென்று நாம் சும்மாவிருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஆதலால் இந்த முட்டாள் தனத்தைக் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டுக் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து காப்பாற்று வதற்கு முன் வருவது மனிதாபிமான முள்ள மக்களின் கடமையாகும்.

இறந்து போனவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில் பயனில்லை. 35 கோடி மக்களில் - அதுவும் அடிமை களாகவும், தரித்திரர்களாகவும், சதா கஷ்டத்தையே அனுபவிப்பவர் களாகவும் மனதிருப்தியற்ற வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருக்கின்ற மக்களில் ஒரு அறுபதினாயிரம் மக்கள் இறந்தார்களென்றால் - அறுபதினாயிரம் மக்கள் விடுதலைப் பெற்றுக் கஷ்டத்தினின்றும் நீங்கினார்கள் என்றுதான் நாம் நினைத்துச் சந்தோஷப்பட வேண்டுமேயொழிய துக்கப்பட வேண்டுமென்று நமக்குத் தோன்றவில்லை. இவ்வாறு கஷ்டப் படுகின்ற மக்கள் எவ்வளவுக் கெவ் வளவு இறக்கின்றார்களோ அவ் வளவுக்கவ்வளவு லாபந்தான். நமது வருத்தமெல்லாம், இப்பொழுது குவெட்டாவில் இறந்து போகாமல் உயிருடன் இருப்பவர்களைப் பற்றியது தான். அவர்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, தங்க இடமின்றி அங்கஹீணர் களாய், உதவியற்ற வர்களாய்ப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதே நமது கடமையாகும்.

நமது அரசாங்கம் முழு மனது வைக்குமாயின், வறுமைப்பட்டுத் தவிக்கும் மக்களை இன்னும் வறுமைப் பட விடாமல் தாங்களே முன் வந்து இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்து விட முடிமாயினும், அவர்கள் அவ்வாறு உதவி செய்யப் போவதில்லை. அத்த கைய முறையிலும் நமது அரசாங்க அமைப்பு இல்லை. ஆதலால் ஓரள வாவது அரசாங்கத்தார் செய்வதற்கு முன்வரும் உதவியைப் பாராட்டிப் பொது ஜனங்களுக்கும் குவெட்டாவில் உள்ள மக்களின் கஷ்டத்தை நீக்கு வதற்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச் சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறை யில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு, காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடு வதுதான் என் பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

- விடுதலை நாளேடு 22 11 19

முட்டாள்களுக்கு வரி (சித்திரபுத்திரன்)

27.01.1935 - குடிஅரசிலிருந்து...

முட்டாள்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்கின்ற ஆசையின் மீதே நமது அரசாங்கத்தார் லாட்டரிச் சீட்டுகளையும், போட்டிப் பரிசுகளையும், குதிரைப் பந்தயங்களையும் அனு மதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தரும தேவதை சொப்பனம் அருளுகிறது. இதை மிகவும் சரி என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக, ஒரு தாசி தன் தாயாரை நோக்கி எனக்கு இன்பம் கொடுக்கும் ஆடவர்கள் எனக்குப் பணத்தையும் கொடுத்து என்னை வணங்குவதும் ஏன் என்று கேட்டபோது அந்த தாசியின் தாயாரானவள் மகளைப் பார்த்து, நல்ல காரியத்துக்கு தங்கள் பணத்தை செலவு செய்யாத அயோக்கியர்கள் பணம் செலவாவதற்காக வேசிகளாகிய நம்மையும், கள்ளுச் சாராயத் தையும், சூது ஆட்டங்களையும் கடவுள் அனுமதித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னாளாம்.

அதற்கு ஒரு பாட்டும் உண்டு.

அன்னையே அனையதோழி

அறந்தனை வளர்க்கும்மாதே,

உன்னையோர் உண்மை

கேட்பேன், உரை

தெரிந்துரைத்தல் வேண்டும்,

என்னையே வேண்டுவோர்கள்

எனக்கும் ஓர்இன்பம் நல்கி,

பொன்னையும் தந்து

பாதப் போதினில்

வீழ்வதேனோ? (அம்மா) பொம்மெனப் புடைத்து விம்மி

போர்மதன் மயங்கி வீழும்,

கொம்மை சேர்முலையினாளே

கூறுவேன் ஒன்று கேளாய்,

செம்மையில் அறஞ்செய்யாதார்

திரவியம் சிதற வேண்டி,

நம்மையும் கள்ளும் சூதும்

நான்முகன் படைத்த வாறே.

அதுபோல் பகுத்தறிவில்லாத முட்டாள்களுக்கு வரிப் போடுவதற்காக அரசாங்கத்தார் கருதி போட்டிப் பரிசு பத்திரிகைகள், லாட்டரிச் சீட்டுகள், குதிரைப் பந்தயங்கள், எலக் ஷன்கள், சர்வீஸ் கமிஷனுக்கு உத்தியோகத்துக்காக விண்ணப் பங்கள், 1 ரூ 15 அணாவுக்கு கடிகாரமும், 125 சாமான்களும் என்கின்ற விளம்பரங்கள் மூன்று வேளை மருந்தில் முப்பது ஸ்திரீகளை கொஞ்சும்படி செய்யத்தக்க மன்மத சிந்தாமணி, வீரியவிர்த்தி, தாதுபுஷ்டி லேகிய விளம்பரங்கள், தாயத்து விளம்பரங்கள் ஆகியவைகளை அரசாங்கத்தார் அனுமதித்து வருகிறார்கள். இதனால் போட்டிப் பத்திரிகை மீதாவது, விளம்பரக் காரர்கள் மீதாவது சத்தியமாய் நாம் சிறிதுகூட குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் நம் நாட்டு முட்டாள்கள் எத்தனை பேர்கள் என்று கணக்கெடுக்க இது ஒரு பதிவு (ரிஜிஸ்ட்டர்) புஸ்த்தகமாகும். ஆதலால் இது நடக்க வேண்டி யது தான். இதுபோலவே அறிவாளிகளுக்கு வரி போடவும், அறிவாளிகளைக் கணக்கெடுக்கவும் சில காரி யங்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்னால் தெரிவிக்கலாம். இப்போது ஒன்றும் அவசரமில்லை.

- விடுதலை நாளேடு 22 11 19