வெள்ளி, 2 செப்டம்பர், 2016

பார்ப்பான் பணக்காரனானால்? தந்தை பெரியார்


இந்த நாட்டில் பார்ப்பனர்மீது பாமரமக்களுக்கு வெறுப்பு உண்டாகும் படி செய்துவரும் (என்னால்  தோற்று விக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச் சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு, பாங்கு, வியாபாரம், இயந்திரசாலை முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு, ஏராளமான பணம் சம்பாதித்து, அவர் களில் அநேகர் செல்வவான்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் ஆகிவிட் டார்கள். இதுதான் துவேஷப் பிரச் சாரத்தால், ஏற்பட்டபயன் என்று, பார்ப்பனர்கள் மீது வெறுப்பு கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகிறார் கள்.
இது உண்மையானால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.
எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து என்ன வென்றால் ஒரு பார்ப்பான் கூட ‘‘மேல் ஜாதியான்’’ என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரானாகக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டு என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பொப்பிலி ராஜா, சர்.சண்முகம் செட்டியார், சர். இராமசாமி முதலியார் போன்றவராக, கோடீஸ்வரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும் சிறிது கூட நமக்கு மேல் ஜாதியி னன் என்பதாக இருக்கக் கூடாது என்பது தான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல. அந்த முறை தொல்லையானது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும், தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும் இயற்கையில் மாறக்கூடி யதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.
ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்கு, பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும்; அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சம உரிமையையும் தடுப்பதுமாகும். ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாகக் வேண்டும் என்பது எனது பதிலாகும்.
‘குடிஅரசு’ 9.11.1946
-விடுதலை,6.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக