திங்கள், 12 பிப்ரவரி, 2018

சித்திரகுப்தன் -வினா விடை 16-11-1930 -குடிஅரசிலிருந்து....

வினா: நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?

விடை: பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலிகட்டுவது இல்லை என்பதாகும்.

வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது.

விடை: பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.

வினா: பெண்களை படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்துகிறார்கள்?

விடை: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல்

அடிமையாக்குவதற்காக.

வினா: மனிதனுக்கு கவலையும் பொறுப்பும் குறைய வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளா விட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.

வினா: பெரிய மூடன் யார்?

விடை: தனது புத்திக்கும் பிரத்தியச அனுபவத்திற்கும் தோன்று வதை நம்பாமல் எவனோ ஒருவன்  எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா: ஒழுக்கம் என்பது என்ன?

விடை: ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா: இந்தியா அடிமையானதற்கு காரணம் என்ன?

விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய் போனதற்குக் காரணம்  அவர்கள் மதமும், கடவுளும் ஆகும்.

வினா: கிருஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தாலும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை: மதவிஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையில் அவர்கள் (பாப்பார்கள்) எல்லோரையும்

விட முன்னேறியிருக்க முடிந்தது. மதவிஷயத்தில் பார்ப்பனர் களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள்.  ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடையவேண்டி யவர்களாவார்கள்.

வினா: ஆண் விபசாரகர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத் திற்குப் போக நேர்ந்து விட்டால்  அங்கு போய் தங்கள் வியபாசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

விடை: அதற்காக எந்த விபசாரகனும் விபூதிபூசுபவரும் பயப்பட வேண்டியத்தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவரம் பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலை கூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென் றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.

வினா: சமயக்கட்டுப்பாடு சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை: மனிதனை தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது  தான் சாதி சமயக்கட்டுபாடாய் இருக்கின்றது.

வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை: கடவுள் எங்கு மறைந்து போவாறோ, என்று பயந்து அவரைக்க காக்க பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா: இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

விடை: இந்தியார் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.

வினா: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

விடை: தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா: இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவை களுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும்.
- விடுதலை நாளேடு, 9.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக