ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் விலக்கப்பட வேண்டும்!

 

2022 பெரியார் மே 16-31 2022

தந்தை பெரியார்
“பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, நண்பர் நட்சத்திரம் அவர்களே!
நாம் இங்கு கூடி இருப்பது நண்பர் திரு. நட்சத்திரம் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு குழுமி இருக்கின்-றோம். இப்படி புதுமனை புகுவது எல்லோரும் செய்கின்றார்கள். மற்றவர்கள் செய்வதற்கும் நண்பர் நட்சத்திரம் செய்வதற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது.
சாதாரணமாக ஒரு புதுமனையில் வாசம் செய்ய முற்படுபவர்கள் இது மற்றவர்களுக்குத் தெரியும்படி செய்ய வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி இல்லாமல் இருந்தால் ஜனங்கள், இவர் பழைய வீட்டில் இருப்பதாகத்-தான் எண்ணுவார்கள். திருமணம் கூட இப்படித்தான். இன்னார் இதுவரை தனியாக இருந்தார்கள். இதுமுதல் இருவரும் சேர்ந்து வசிக்கின்றார்கள் என்பதை மற்றவருக்கு உணர்த்தவேயாகும். ஒருவர் புதுக்கடை வைத்தால்கூட விளம்பரப்படுத்தி அனை-வருக்கும் அழைப்புக் கொடுத்து திறப்பது விளம்பரத்துக்காகவேதான். இது மிகவும் அவசியமாகும்.
இம்மாதிரி காரியங்களுக்கு ஏராளமாக செலவு செய்வதைக் கூட நான் கண்டித்து வருகின்றேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சியைக் கூட மதத்தோடு புகுத்திப் பிணைத்து விட்டார்கள். இப்படி வீடு அமைக்க நிலை இப்படி இருக்க வேண்டும், மனை இப்படி இருக்க வேண்டும், ஜன்னல் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி இதற்காக மனை சாஸ்திரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்கள். நம்முடைய சாஸ்திரம் கிறிஸ்துவனுக்கு, முஸ்லிமுக்குப் பொருந்தாது; அவன் சாஸ்திரம் நமக்குப் பொருந்தாது என்பார்கள். எல்லோருக்கும் வாழக் கூடியதாக ஒன்றை நிர்ணயிக்கும் போது ஏன் இப்படிப்-பட்ட முட்டாள்தனம்?
நாள், நட்சத்திரம் பார்த்து அஸ்திவாரம் போடுவது, முகூர்த்தம் பார்த்து நிலை வைப்பது இப்படி எல்லாம் செய்கின்றனர். நான் 40, 50க்கு மேல் வீடுகள், கட்டடங்கள் கட்டி இருப்பேன். இன்னும் கட்டடம் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஒன்றுகூட நாள், நட்சத்திரம், முகூர்த்தம் பார்த்துக் கட்டவே இல்லை. எல்லா வீடுகளும் எல்லாமும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆனால், நாள், நட்சத்திரம் பார்த்து கட்டிய எங்கள் சொந்தக்காரர்கள் வீடுகள் இன்று கடனுக்குப் போனதையும் காண்-கின்றேன். எனவே, இப்படிப்பட்ட செய்கைகள் எல்லாம் மிக மிக முட்டாள்தனமானதாகும்.
எங்கள் இயக்கம் சொல்லுவது எல்லாம் மனிதன் பகுத்தறிவுப்படி நடக்கணும். முட்டாள்தனமாக அர்த்தமற்ற சடங்குகள் செய்யக் கூடாது என்பது தான். இப்படிப்பட்ட சடங்குகள் செய்து முட்டாளாக, ஓட்டாண்டி-யாக ஆனவர்கள் எல்லாம் நாம்தான். இதனால் பலன் அடைந்து வருபவன் எல்லாம் பார்ப்பானேயாகும். அரசாங்கம் கூட முட்டாள்-தனமாக கப்பல் கட்டிவிட வேண்டு-மானால் கூட நாள், நட்சத்திரம் பார்த்து தேங்காய் உடைத்து விடுகின்றான். பார்ப்பான் ஆதிக்கம் இருப்பதால் இப்படிச் செய்கின்றார்கள்.
தோழர்களே, இப்படி பகுத்தறிவுப்படி இந்த விழாவை ஏற்படுத்திய நண்பர் நட்சத்திரம் அவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். இந்தப் புதுமனையில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்துள்ளார். இது மிகவும் புத்திசாலித்தனமான செய்கையாகும். இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட படம் இல்லாமல் சிவன் படம், விஷ்ணு படம், காளி படம் போன்றவைகளை வைத்தால் என்ன பிரயோசனம்? வீடுகளை அலங்கரிக்க படங்கள் வைக்க வேண்டும் என்று கருதினால் அறிவுக்குப் பொருத்தமான இதுபோன்ற படங்களை வைக்க வேண்டும்.
எங்களுக்கு வாழ்த்தில் நம்பிக்கையில்லை. வாழ்த்தில் நம்பிக்கை வைத்து, வாழ்த்து கண்டு சந்தோஷப்பட்டால், வசவு கண்டு, விசனப்-படவும் வேண்டுமே? நாங்கள் ஆசைப்படுவ-தெல்லாம், நண்பர் நட்சத்திரம் அவர்கள் எப்படி மூட நம்பிக்கையை ஒழித்து இப்படி அறிவுக்குப் பொருத்தமான காரியத்தைச் செய்துள்ளாரோ, அதுபோலவே மேலும் மேலும் நடந்து பொதுத் தொண்டுக்கும் உதவ வேண்டும்’’ என்பதே என்று கூறி முடித்தார்.
18.7.1962 அன்று வள்ளியூர் ஸ்டார் இல்லத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை – “விடுதலை” – 28.7.1962
«««
சிந்தித்து அறிவின்படி எக்காரியமும் செய்ய வேண்டும்!
“பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, மணமக்களே!
உலகில் மக்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, நம்பிக்கைவாதிகள். முன்னோர்கள் சொன்னது என்ன? சாஸ்திரம் என்ன சொல்கிறது? புராணம் என்ன சொல்கின்றது? முன்னோர் நடப்பு என்ன என்று பார்த்து அதன்படி நடப்பவர்கள். இரண்டாவது சாரார், அறிவுவாதிகள். மேலே சொன்னவற்றில் நம்பிக்கை வைக்காது, அறிவு கொண்டு அலசிப் பார்த்து அறிவுக்குச் சரி என்று படுகின்ற வழியில் நடப்பவர்கள்.
நான் வெறும் அறிவை ஆதாரமாகக் கொண்டே பேசுகின்றேன். எனது அறிவுக்குச் சரி என்று எது படுகின்றதோ, அதனையே பேசுகின்றேன். அதைச் சரியா? தப்பா? என்று சிந்தித்துப் பார்க்கக் கூடிய அறிவும் உங்களிடம் இருக்கின்றது. ‘சம்சாரம், துன்பசாகரம்’ என்று ஒருவர் குறிப்பிட்டார். அது சுத்த முட்டாள்-தனமான கூற்றாகும்.
மனிதனுக்கு அறிவு இருக்கின்றது. நன்மை தீமையை உணரும் சக்தியுள்ளது. இப்படிப்பட்ட மனிதன் தம் வாழ்க்கையை ஏன் துன்ப சாகரம் என்று கூற வேண்டும்? நல்ல முறையில் திருத்திக் கொள்ள சக்தி அற்ற சோம்பேறிகளின் கூற்றாகும்.
«««
மக்களை எந்தக் காரியத்தையும் அறிவின்படி நடக்க வேண்டும். இம்மாதிரியான நிகழ்ச்சி-களில் அர்த்தமற்ற மூடச் சடங்கு-களோடு முட்டாள்தனமான செலவுகளும் செய்வதுதான் கவுரவம் என்று கருதும் நிலை மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. ஆடம்பரமான கச்சேரி வைப்பது இதனால் எவருக்கு லாபம்? 3 மணி நேரம் 3,000 பேரை வேலை மெனக்கெட்டு உட்கார வைப்பது எவனுக்கு பாட்டின் பொருள் புரியும்? சங்கீத ஞானம் எத்தனை பேர்களுக்கு இருக்கும்? நான்கு சோம்பேறிகள் முன்னாடி உட்கார்ந்து தலையை ஆட்டுவது கண்டு மற்றவர்களும் தலை ஆட்டுவதைத் தவிர, இதைப் பற்றி என்ன தெரியும்?
பணம் 2,000 அல்லவா நஷ்டம் ஆகின்றது. எனவே, எந்தக் காரியமும் பகுத்தறிவுப்படி சிக்கனமாகத்தான் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றோம்.
மணமகன் நாகராஜன் நமது கழகத் தோழர். நமது கொள்கையில் தீவிரமானவர். முதலாவது இவரைப் பாராட்ட வேண்டும். சம்பிரதாயப் பாராட்டு அல்ல, இப்படி பல்லாயிரக்கணக்கான பிரமுகர்களையும், பொதுமக்களையும் கூட்டி இப்படி அறிவு சம்பந்தமான பிரச்சாரம் நிகழ்த்தச் செய்த பயனுள்ள காரியத்துக்காகவே பாராட்ட வேண்டும் என்கின்றேன். செலவு சிக்கனமாகச் செய்து இருக்கலாம். அது அவரால் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்களைப் போல இதற்கு விலக்காக முடியவில்லை.
இப்படிப்பட்ட காரியங்களுக்கு எதற்காக ஆடம்பரமான செலவு? பெரிய விருந்து போடுவது இதனால் திருமண வீட்டாருக்கோ, சாப்பிட்டவர்களுக்கோ கால்துட்டாவது பலன் உண்டா? திருமணத்துக்கு வந்துள்ளவர்கள் தங்கள் வேலை வெட்டிகளை விட்டு மானங்கெட்டு வந்து உள்ளார்கள்.
இவர்கள் சாப்பாட்டுக்காக இங்கு காத்துக் கிடப்பதில் எவ்வளவு அவர்களுக்கு அசவுகரியம்? அவர்கள் வீட்டில் ஆகும் சாப்பாட்டுச் செலவு அவர்கள் இங்கு சாப்பிடுவதினால் குறைந்து விடவா போகின்றது? இல்லை, ஏழைகளுக்கு என்பீர்கள். சோம்பேறிகள் ஆக்குகின்றீர் என்பதுதான் பொருள்.
பிச்சைக்காரர்களுக்கு உதவி என்று கூறினால் சோம்பேறிகளை நாட்டில் வளர்க்கின்றீர்கள் என்பதுதானே அர்த்தம்? திருமண வீட்டாரும், மற்றவர் தம்மை பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கடனை வாங்கிச் செலவு செய்தால், கடனை, பிறகு யார் கட்ட வேண்டும்?
இதனால்தான் நான் எங்கள் தோழர்-களுக்குக் கூறுவதுண்டு. திருமணத்தை மாலையில் 5:00 மணிக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். சிக்கனமாகும். சாப்பாட்டுச் செலவு ஆகாது. திருமணம் முடிந்து வெத்திலை, பாக்கு எடுத்துக் கொண்டதுடன் போய் விடுவார்கள்.
அர்த்தமற்ற சடங்குகளால் நாம் மடையர்களாக ஆவதோடு, நாமே இழிந்த ஜாதி மக்கள் என்கின்ற தன்மையை ஒத்துக் கொள்ளுவதாகவும் ஆகும். மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும், மக்கள் பேற்றிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.’’
22.7.1962 அன்று பாபநாசத்தில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’ 1.8.1962.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக