செவ்வாய், 7 நவம்பர், 2023

எது இந்து மதம்? - தந்தை பெரியார்

  

 5

இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக் கொள்ளுகிறார்.

இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல் நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டுவந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமுகத்தாருடைய சடங்கு, பிரார்த்தனை, வழிபடு கடவுள்கள் முதலாகியவைகளுக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் ஒரே பெயராக இந்துமதம் அதாவது இந்தியர்களின் மதம் என்பதாகப் பெயரிட்டு விட்டார்கள்.

அக்காலத்தில் இருந்த திராவிடர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், ஆரியர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், மலைநாட்டு மக்கள் பழக்கவழக்கங்களும் இந்துமதம் என்றும், ஆரியசமாஜமும் இந்துமதம் என்றும், பிரம்மசமாஜமும் இந்து மதம் என்றும், வேதாந்தமும் இந்து மதம் என்றும், கடவுளையும் மதத்தையும் சரீரத்தையும் உயிரையும் துறந்த துறவறமும் இந்துமதம் என்றும், பவுத்தர்கள் பழக்க வழக்கங் களுக்கும் இந்துமதம் என்றும், நாத்திகர்கள் கொள்கைகளுக்கும் இந்துமதம் என்றும், இப்படிப் பலவிதமாய் அவர்கள் அதாவது கிறித்துவர்கள், மக மதியர்கள் தவிர மற்ற எவர்களது நடவடிக்கைக்கும் இந்துமதம் என்றே பேர் வைத்து விட்டார்கள். அதா வது இந்தியர்களின் மதம் எனச் சொல்லிவிட்டார்கள்.

ஆகவே, இந்துமதம் என்றால் இந்தியர்கள் மதம் என்றுதான் அர்த்தமே ஒழிய, ஒரு தனிப்பட்ட குறிப்பான கொள்கைகளுக்கு இந்து மதம் என்று பெயரில்லை என்றாலும்,  அக்காலத்தில் ஆரியர்கள் சிறிது செல்வாக்குப் பெற்று இருந்ததால் அவர்கள் தங்கள் பழக்க வழக்கம், சடங்கு, தங்களின் வழிபடு கடவுள்கள் ஆகியவைகளையே பிற இந்தியர்களின் மீதும் சுமத்தி, அதற்கு அதிகமான செல்வாக்கை உண் டாக்கி வைத்துக் கொண்டிருந்தபடியால் ஆரியர்கள் பழக்கவழக்கம், சடங்கு, வழிபடு கடவுள் அவர்களது இலக்கிய ஆதாரங்கள், சாத்திரங்கள், புராணங்கள் என்பன முதலியவைகளே இந்துக்களின் மதமாகவும், மத ஆதாரங்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டன. ஆரியர்களுக்கு எதிர்ப்பான வைகளும் ஆரியர்கள் அல்லாதவர்களும் கூட விவகாரத்திற்கு இடமில்லாமல் போகட்டும் என்கின்ற காரி யத்திற்காகவே, எல்லாம் இந்துமதம்தான் எல்லோரும் இந்துக்கள்தான் என்றும், அதுவும் இந்துமதம் இதுவும் இந்துமதம் என்றும், இந்துமதத்தில் எல்லாக் கொள்கையும் உண்டு என்றும், ஒரு இந்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும், பலசமயங்கள் சேர்ந்தது இந்து மதம் என்றும், அவ்வப்போது தோன்றிய பல பெரியார்களின் அபிப்பிராயங்கள் எல்லாமுமே இந்துமதமாக இருக்கிறது என்றும், எந்த மதக்கருத்தும் இந்துமதத்தில் உண்டு என்றும், எப்படிப்பட்டவனும் இந்துவாய் இருக்கலாம் என்றும், புத்தர்கள், சமணர்கள், ஜெயினர்கள் எல்லாருடைய அபிப்பிராயமும் இந்து மதத்தில் இருந்து வந்ததுதான் என்றும், இந்து மதத்துக்கு பொருத்தமானதே என்றும், சொல்லி பொதுவாக இன்று மகமதியர்கள் கிறிஇதவர்கள் அல்லாத எவரும் இந்துக்கள் என்றே சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்து மதம் என்பதாக, இந்துக்களுடைய பழைய ஆதாரங்கள் என்று சொல்லும்படியான எதிலும் ஒரு வார்த்தை கூடக் கிடையாது.

இந்தியாவின் பெயரைக் குறிப்பதற்கு இந்து  என்று ஒரு வார்த்தை காணப்படலாமோ என்னமோ அதுகூட தைரியமாய் சொல்வதற்கு இல்லை. இந்தியா என்கின்ற பெயர்கூட இந்துமத ஆதாரங்கள் என்பவைகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்துமதம் என்பதற்கு என்னதான் அர்த்தம் என்று பழைய அதாவது சுமார் 100 வருஷம், 200 ஆண்டு களுக்கு முந்திய அய்ரோப்பிய அகராதிகளையும், அய்ரோப்பிய கலைகளையும் பார்ப்போமானால் மகமதியர்கள் அல்லாதவர்கள் அனுஷ்டிக்கும் மதம் என்றும், ஆரியர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சொல்லும் மதப்பெயர் என்றும், ஆரியர்கள் அனுஷ்டிக்கும் ஆச்சார அனுஷ் டானங்கள் என்றும்தான் காணப்படுகின்றனவே அன்றி வேறு ஒன்றும் சொல்லப்படுவதாகக் காண முடியவில்லை.

இந்து மதம் பிரத்தியட்சத்தில் என்னமாய் இருக்கிறது என்று பார்ப்போமானால் விக்கிரகங்களை வணங்குவது, ஜாதி வித்தியாசங்களை - உயர்வு தாழ்வுகளைப் பாராட்டுவது ஆகிய இந்த இரண்டு காரியம்தான். இந்த உலகத்தில் வேறு எந்ததேச மக்களிடத்திலும் வேறு எந்த மதத்தாரிடத்திலும் இல்லாத குணங்கள் கொண்டு இருந்து வருகிறது.

இந்த இரண்டு காரியங்களைப்பற்றி அறிஞர்கள் என்பவர்கள் வெகு காலத்துக்கு முன்பே தவறுதலானது என்றும், அவசியமற்றது என்றும் முடிவு கட்டி விட்டார்கள். அதற்கும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ள பெரியார்கள் என்பவர் களுடைய வாக்கும் உபதேசமும் இருந்து வருகிறது. இவைகளையும் இந்துமத ஆதாரமாகவும் அப்பெரி யார்களையும் இந்து மதத்தில் தெய்வீக அம்சம் பெற்றவர்கள் என்றும் சொல்லப்படுவதோடு விக்கிரக ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவனும், ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவற்றை வெறுப் பவனும், இகழ்பவனும் கூட இந்துதான் என்றும், அதற்கும் ஆதாரம் இந்து மதத்தில் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே, இப்போது எது இந்து மதம் அல்லாதது என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

ஆனால் தேசியத் தலைவர்கள், மதத்தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களான தோழர்கள் காந்தியார், மாளவியா முதலாகியவர்கள் இந்துமதம் என்று எதைச் சொல்லுகிறார்கள் என்று பார்த்தால் வர்ணாசிரமத்தை பரிசுத்தமாக்கி நிலை நிறுத் துவதுதான் இந்துமதம் என்கின்றார் காந்தியார்; களிமண்ணும், கங்கை ஜலமும் கூடவே இருக்க வேண்டியது தான் இந்து மதம் என்று செய்து காட்டுகிறார் மாளவியா.

மகமதிய ஆதிக்கம் தலையெடுக்காமல் செய்வது தான் இந்துமதம் என்கிறார் மூஞ்சேயாரும் பரமானந்தனாரும். மற்றபடி சங்கராச்சாரிகளுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? இராமானுசாச்சாரியா ருடைய இந்து மதம் எப்படிப்பட்டது? பண்டார சந்நதிகளுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? மனு தர்ம சாத்திர இந்துமதம் எப்படிப்பட்டது? இதிகாச மாகிய கீதையுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? புராணங்களுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? சைவர்களுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? மற்றும் பார்ப்பனரல்லாத சைவர்கள் இந்துமதம் எப்படிப் பட்டது? வைணவர்களுடைய இந்துமதம் எப்படிப் பட்டது? என்பவைகளைப் பற்றி நாம் விவரிக்க இதில் இடம் வைத்துக் கொள்ளவில்லை.

எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்களைப் போலவும், கிறிஸ்துவர்களைப் போலவும் மதம் என்ப தற்கு இருந்துவரும் ஆதாரம், கொள்கை, குறிப்பிட்ட வர்களுடைய உபதேசம் என்பதாக எதுவும் இல்லாமல், வார்த்தையளவில் குருட்டு அபிமான அளவில் இந்துமதம் இருந்து வருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்த லட்சணத்தில் உள்ள இந்துமதம் ஒரு மனி தனை தீண்டக்கூடாதவன் என்றும், ஒரு மனிதனை தாசிமகன், வைப்பாட்டி மகன், அடிமை மகன் என்றும் சொல்லிக்கொண்டு, உரிமையும் பாராட்டி 100க்கு 97 மக்களை சுயமரியாதையற்றவர்களாக்கி, 100க்கு 

25 மக்களை தீண்டாதவர்கள், சண்டாளர்கள் என்று இழிவுபடுத்தி வருவதென்றால் இப்படிப்பட்ட இந்தமதம் உலகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? இது அடியோடு ஒழிக்கப்படுவதில் என்ன தப்பு? என்றுதான் கேட்கிறோம்.

ஜாதி அகம்பாவம் பிடித்த சோம்பேறிப் பார்ப் பனியக் கூட்டம் தங்களது சுயநலங்களை உத்தேசித்து இந்துமதம் ஒழியச் சம்மதப்பட மாட்டார்கள் என்பதோடு “இந்து மதத்தை ஒழிக்க உன்னாலும் முடியாது உங்கள் பாட்டனாலும் முடியாது” என்று சொல்லுவார்கள். ஆனால் அது வேறு விஷயம். தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த ஒரு ஆள் இந்து மதத்தை விட்டுவிடுகிறேன் என்றும், “சண்டாளர்கள்”, “இழிமக்கள்” என்று சொல்லக்கூடிய ஒரு கூட்ட மக்களின் மகாநாட்டில் ‘‘இந்து மதத்தை விட்டுவிட வேண்டும்” என்று ஒரு தீர்மானம் செய்தவுடன் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள தேசியத் தலைவர்கள், தேசியப் பத்திராதிபர்கள், மகாத்மாக்கள், மாளவியாக்கள், இந்துமதத் தலைவர்கள், “வீரர்கள்,” “தியாகிகள்”, “சத்தியாக்கிரகிகள்” எல்லோருக்குமே தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டதுடன் இதற்காக எத்தனை பொய்புரட்டு, ஏமாற்று, தந்திரமாகிய இழிகாரியங்கள் எல்லாம் செய்து, “அம்பேத்கர் அவ்வளவு பெரிய மனுஷன் அல்ல” என்றும், “பம்பாய் மாகாண தீண்டப்படாதார் மகாநாடு தக்க பிரதிநிதித்துவம் பொருந்தியது அல்ல” என்றும் தாங்கள் கூப்பாடு போடுவது போதாமல் அவ்வகுப் பிலேயே பல வயிற்றுச் சோற்றுக்கு கருப்பன்களைப் பிடித்து, ஒரு திராம் இரண்டு திராம் சாராயம் வாங்கிக் கொடுத்து எழுதச் சொல்லியும், எழுதினதாக ஒப்புக் கொள்ளச் சொல்லியும், இவ்வளவு பாடுபடுவதைப் பார்க்கும்போதே முடியாது என்று சொல்லுபவர்கள் உண்மையாக நம்புகிறார்களா? அல்லது பயந்து நடுங்கி அப்படி உளறுகிறார்களா? என்பது விளங்கும்.

இந்துமதம் நாளுக்குநாள் ஒழிகிறதா இல்லையா என்பதும், பிற மதம் நாளுக்கு நாள் ஓங்குகிறதா இல்லையா என்பதும், ஒரு 50 ஆண்டு ஜன கணிதத்தைப் பார்த்தால் தானாகவே விளங்கும்.

ஆகையால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்தவர்கள் இப்பார்ப்பனர்களுடைய மிரட்டலுக்குப் பயப்படாமல், சித்திரத்தில் படம் எழுதக்கூட ஒரு இந்துவின் பழைய சின்னம் இல்லாத அளவுக்கு, இந்து மதம் இன்னும் புரட்டான ஒரு கட்டும், சூழ்ச்சியும் அழிய வேண்டியது அவசியமென்றும் அது அழிந்துபோகப் போவது உறுதிதான் என்றும் தைரியமாய்க் கூறுவோம்.

குடிஅரசு - கட்டுரை - 19.06.1948


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக