வியாழன், 27 பிப்ரவரி, 2025

‘‘ராமராஜ்ஜியம்’’ எப்படி இருக்கும்? – தந்தை பெரியார்


விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை, தந்தை பெரியார்

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் – நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும் ஏற்படுத்திவிடுவேன் என்பது பொருளாகப் பேசியிருந்ததை சுதேச மித்திரனில் உள்ளபடி ஜூலை 30ஆம் தேதி குடிஅரசில் எடுத்து எழுதி அதைப்பற்றிய நமது கருத்தையும் வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த வாரத்தில் (6.8.1939) தோழர் சத்தியமூர்த்தியார் ஸ்தாபிக்க முயற்சிக்கும் ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? அதன் கால ஒழுக்கம் என்ன? நீதி என்ன? என்பவைகளைப் பற்றியும் எழுதிவிட்டு அத்தலை யங்கத்தின் முடிவில் அவைகளுக்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் உள்ள வாசகங்களைப் பின்னால் எடுத்துக்காட்டுவோம் என்றும் எழுதி இருந்தோம்.

அது பல காரணங்களால் சென்ற வாரம் எழுதத் தவறிவிட்டதால் பல தோழர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்ததாக எழுதி இவ்வாரம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனதுபற்றி சிலவற்றை மாத்திரம் இவ்வாரம் குறிப்பிடுகிறோம்.

ராமன் பிறப்புக்குக் காரணங்கள்
ராமாயண ஆரம்பத்திற்குக் காரணம் காட்டும் போதே ராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்ததாகவும், மகாவிஷ்ணு அத்தவத்திற்கு இரங்கி, தான் தசரத ராஜனுக்கு மகனாகப் பிறந்து ராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் அரசாண்டுவிட்டு, பிறகு தேவலோகத்திற்கு வருவதாக வாக்களித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மகாவிஷ்ணு அவதாரமெடுத்தற்குக் காரணம் ராவணனைக் கொல்வதற்கு மாத்திரம்தான் என்று இருக்குமானால் ராவணனை ஏன் கொல்லவேண்டும்? ராவணன் என்ன குற்றம் செய்தான்? என்பவைகளைப் பற்றி முதலில் ஆராயவேண்டியது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், மகாவிஷ்ணு ராமனாகப் பிறப்பதற்குக் காரணம் மற்றொன்று கூறப்பட்டிருக்கிறது. அதுதான் ராமாயண ஒழுக்கத்திற்குப் பொன்மதில் அரண் என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.

அது என்னவெனில், மகாவிஷ்ணு வானவர் ஒருகாலத்தில் பிருகு மகரிஷியின் பத்தினியைக் கொன்று விட்டாராம். அதற்காக அந்த ரிஷி கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கி, “நீ என் மனைவியைக் கொன்றுவிட்ட கொலை பாதகனானதால் நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இழந்து சீரழிய வேண்டியது” என்று சபித்து விட்டாராம். அதனால் விஷ்ணு ராமனாகப் பிறந்து தனது மனைவியை இழந்து துன்பப்பட்டாராம். இது வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 51ஆம் சருக்கத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு மனிதனாகப் பிறந்தது மனைவியைப் பறிகொடுத்துத் தவித்ததற்கு ராமாயணத்தைவிடப் பழைமையானதும் முக்கியமானதுமென்று கருதப் படுவதாகிய கந்த புராணத்தில் மற்றொரு காரணம் கூறப்பட்டிருக்கிறது. அது என்னவெனில் மகாவிஷ்ணு வானவர் சலந்தராசுரன் மனைவியாகிய பிருந்தை என்பவள் சற்று அழகுடையவளாக இருந்ததால் அவளை எப்படியாவது சேரவேண்டுமென்று கருதிச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாராம். ஆனால், அவ்வசுரன் இடம் கொடுக்காமல் காவல் இருந்ததால் முடியாமல் போய்க் கடைசியாக அவ்வசுரன் சாகும் படியாக ஆன பின்பு அவ்வசுரனுடைய உடலுக்குள் புகுந்துகொண்டு புருஷன் மாதிரியாகவே இருந்து பிருந்தையை அனுபவித்து வந்தாராம். சில நாட்கள் விஷ்ணுவிடம் அனுபவித்த பின்பே அந்த கற்புக்கரசி யாகிய பிருந்தை இவன் தன் புருஷனல்ல, மகாவிஷ்ணு என்று அறிந்து உடனே மகாவிஷ்ணுவை “ஓ விஷ் ணுவே! நீ என்னை எனது இஷ்டமில்லாமல் ஏமாற்றி வஞ்சித்துப் புணர்ந்துவிட்டதால் உன் மனைவியை ஒருவன் வஞ்சனையால் எடுத்துப் போகக்கடவது” என்று சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாய் மனிதராகப் பிறந்து மனைவியை இழந்து துன்பப் பட்டார் என்றும் மேல்படி கந்த புராணம் தக்க காண்டம் 23ஆம் அத்தியாயத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்த பெருமைக்குக் காரணம் மேற்கண்ட இரண்டு மாத்திரமல்லாமல் 3ஆம் காரணமும் ஒன்று இருக்கிறது.

அதாவது, ஒரு பொல்லாத வேளையில் மகா விஷ்ணு மனித உடம்போடு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும், அதுசமயம் பிருகு ரிஷி முதலியவர்கள் அவரைக் காணச் சென்றதாகவும், வேறு சிலர் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில்கூட தான் புணர்ச்சியை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே அவர்களுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் கோபித்து விஷ்ணுவைப் பார்த்து “ஓ மானம், வெட்கம் இல்லாத விஷ்ணுவே! நீ இம்மாதிரி இழிவான காரியம் செய்ததற்காக நீ உன் மனைவியை இழந்து வருந்தக்கடவை” என்று சபித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்த உண்மை சிவரகசியம் மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலும், அது மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

ஆகவே, ராமராஜ்ஜியத்தின் மூலபுருஷரும் கடவுள் அவதாரமாக வந்தவருமான ராமனின் பிறப் புக்கே இம்மாதிரியான காரணங்கள் இருக்குமானால் இந்த இப்படிப்பட்ட ராமனுடைய அல்லது கடவுளி னுடைய ஆட்சி ராஜ்ஜிய பாரம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ரிஷி ஜாதிகள் யோக்கியதை
ரிஷிகள் மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் அசுரர்களுடைய மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் எடுத்துக் காட்டப்பட்டதில் இருந்தே ரிஷி ஜாதிகளின் யோக்கியதையும், அசுரர் ஜாதியினுடைய யோக்கியதையும் நன்றாய்த் தெரிவதோடு கடவுள் ஜாதிகளுடைய யோக்கியதையும் பளிங்குபோல் விளங்குகின்றது.

என்னவெனில், ரிஷி பத்தினியை அவள் புருஷ னுக்குத் தெரியாமல் மாத்திரம்தான் கலந்ததாகவும், ஆனால் ரிஷிபத்தினிகள் சம்மதித்து விஷ்ணுவுடன் கலந்து இன்பம் அனுபவித்ததாகவும் விளங்கும்படியாக இருக்கிறது. அசுரர்களு டைய மனைவிகளிடத்தில் அந்த ஜபம் செல்லவில்லை. புருஷன் சாகும்படியாக ஆனபின்பே அதுவும் புருஷன் போல் வேஷம் போட்டு அசுர ஸ்திரீயை ஏமாற்றித்தான் சேர முடிந்ததே ஒழிய மற்றபடி ரிஷி பத்தினிகள் மாதிரி சம்மதம் பெற்றுச் சேர முடியவில்லை. அன்றியும் ரிஷி பத்தினிகள் கற்பழிக் கப்பட்டதற்கு ரிஷிகளால் தான் மகாவிஷ்ணுக்கு சாபம் கொடுக்கப்பட்டதே தவிர, ரிஷி பத்தினியால் சாபம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அசுர ஸ்திரீகளோ வென்றால் தாங்களே விஷயம் தெரிந்த உடனே சாபம் கொடுத்து தண்டிக்கத் தக்க சக்தி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அன்றியும் கடவுள்ஜாதி ஸ்திரீயான திருமகள் அந்நிய புருஷர்கள் வந்து பார்க்கும்போதுகூட கலவி யில் இருந்து நீங்காமல் கலவிசெய்துகொண்டே இருக்கச் சம்மதித்து இருந் தாள் என்றால் அவர்களது தைரியத்தை மெச்ச வேண் டியதென்றாலும் அந்த ஜாதி எவ்வளவு இழிவுக்கும் சம் பந்தப்படக்கூடியது என்பது விளங்காமல் போகாது.

புராணப் பொய்கள்
இந்த உண்மைகள் இயற்கைக்கு மாறானவை என்றாலும் எப்படியோ இருக்கட்டும் நடந்தததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் விவகரிக்க வரவில்லை.

பொதுவாகவே இராமா யணம் மாத்திரமல்லாமல் மற்றும் அதுபோன்ற – கடவுள் சம்பந்தமான சைவ, வைணவ புராணங்கள் பொய்யென்றும், அறிவுக்குப் பொருத்தமில்லாத இழிவான ஒழுக்க ஈனமான விஷ யங்கள் கொண்ட காட்டு மிராண்டிக் காலத்து கட்டுக் கதைகள் என்றும் சொல்லி வருகிறோம். ஆனதால் அவற்றின் உண்மையைப் பற்றியும் வாதாட விரும்ப வில்லை.

ஆனால், தோழர் சத்தியமூர்த்தியார் இப்படிப் பட்ட கதையில் உள்ள இப்படிப்பட்ட சம்பவங்களில் சிக்குண்டவனாகக் காட்டப்பட்டுள்ள ஒரு பாத்திர மாகிய ராமன் என்பவனுடைய பெயரால் இருந்து வரும் கதையில் உள்ள ஒழுக்கங்களையும், நீதி களையும் கொண்ட ஒரு ராஜ்ஜிய பாரத்தை – ராஜ நீதியை இந்தியர்களுக்கு என்பதில் வடநாட்டாருக்குச் சொல்வதைப் பற்றி நமக்கு இப்போது கவலை இல்லை. தென்னாட்டாருக்கு – திராவிடர்களுக்கு – தமிழ் நாட்ட வருக்கு – தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவதும் அதற்காகவே இந்தியையும் – சமஸ் கிருதத்தையும் தமிழ் மக்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதும் இந்தக் காரியத்திற்காகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்திய அரசாட்சிக்கு சர்வாதிகாரியாக ஆகவேண்டும் என்றும் ஆசைப் படுவதாகச் சொல்வதுமாயிருந்தால் அதைத் தமிழ் மக்கள் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறோம்.

ஆரியர் வேறு தமிழர் வேறு என்பதற்கும்; ஆரியநாடு வேறு தமிழ்நாடு வேறு என்பதற்கும் இந்த புராண இதிகாசக் கலைகளே போதாதா என்று கேட்கின்றோம்.

இந்தியாவென்பது எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தேசத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பிடும் பெயராகாது என்று முன்னம் பல முறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டுக்குப் பரத கண்டம் என்றோ, பாரததேசம் என்றோ, பாரதத்தாய் என்றோ சொல்லுவது சிறிதும் பொருத்தமற்றது என்பதோடு ஒரு தமிழ் மகன் வாயில் தமிழ் நாட்டைப் பாரதநாடு அல்லது பாரததேசம் என்று சொல்லப் படுமானால், “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் அய்யப்படும்” என்ற திருவள்ளுவரின் திருவாக்குப்படி அப்படிப்பட்டவரது குலத்தைப்பற்றிச் சந்தேகப்பட வேண்டியதைத் தவிர வேறு பரிகாரமில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மக்கள் திராவிட மக்கள் ஆண்ட நம் தமிழ் – திராவிட நாட்டை என்ன காரணத் திற்கு ஆக ஒருவன் பரதன் (ஆரியன்) ஆண்டதாகச் சொல்லி இதை பரதநாடு என்று சொல்லவேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டிக்கொள்கிறோம்.

நந்தன் தேசம்
தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர்மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 20.08.1939

திங்கள், 24 பிப்ரவரி, 2025

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

 

சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் எழுச்சியுரை

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

டிசம்பர் 14 & 15 ஆகிய இருநாள்களும் தெலங்கானா – ஆந்திரா மாநிலங்களில் பரந்துபட்டு செயல்படும் மானவ விகாச வேதிகா எனும் மனித மேம்பாட்டு மன்றத்தின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. முதல் நாளான டிசம்பர் 14 அன்று மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் தந்தை பெரியாரின் சிலையினைக் காணொலி வாயிலாகத் தமிழர் தலைவர் திறந்து வைத்து இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை ஆற்றினார்.

தெலங்கானா – ஆந்திர மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முன்னோடி பகுத்தறிவாளர் மன்றங்களுள் மானவ விகாச வேதிகா ஓர் அமைப்பாகும். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தோடு பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து இணைந்து பல பணிகளைச் செய்து வரும் அமைப்பு இது. அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறது.

அய்தராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் பாட சிங்காரம் பகுதியில் மானவ விகாச வேதிகா அமைப்பின் திறந்த வெளி அரங்கம் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அத்துடன் உள் அரங்கமும் அலுவலகமும் கட்டப்பட்டு அந்த வளாகத்தில் சமூகப் புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, பாபாசாகிப் பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகளுடன் தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையும் நிறுவப்பட்டு அந்த ஆறு சிலைகளும் 20-ஆம் ஆண்டு விழாவின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டன.

தெலங்கானா மாநிலத்தில் முதன்முதலாக
திறந்து வைக்கப்படும் தந்தை பெரியாரின் சிலை

ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் 2006–ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாலையில் தந்தை பெரியாரின் முதல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்திட ஆந்திர மாநில அரசின் அமைச்சர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். ஆந்திர நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) முன்னெடுப்பில் நிறுவப்பட்டது அந்தச் சிலை. பின்னர் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின் தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு விழா இதுவாகும். மானவ விகாச வேதிகா அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளில் அவருடைய சிலையினை திறக்க முடிவாகியிருந்தது. இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிட ஜப்பான் நாட்டு டோக்கியோ நகருக்கு தமிழர் தலைவர் சென்றதாலும், அந்த சமயம் அய்தராபாத் நகரில் பெய்த பெரும் மழையினாலும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் தமிழர் தலைவரின் ஒப்புதல் பெற்று டிசம்பர் 14 – ஆம் நாளில் சிலை திறப்பு நிகழ்ச்சியினை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 12 – ஆம் நாளன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை வெகு விமரிசையாக தமிழ்நாடு அரசும், கேரள அரசும் வைக்கம் நகரில் ஏற்பாடு செய்திருந்தன. தந்தை பெரியாரின் கொள்கை வழித்தோன்றலான தமிழர் தலைவர் அவர்கள் அந்த நூற்றாண்டு விழாவில் முன்னிலை – சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிலையில் அய்தராபாத் நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தந்தை பெரியாரின் சிலை திறப்பு கூறியபடி நடந்தேறிட வேண்டும் எனக் கருதி காணொலி வாயிலாக சிலையினைத் திறந்து உரையாற்றிட இருப்பதை தெரிவித்து, அவ்விழாவிற்கு மானவ விகாச வேதிகா அமைப்பினரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ. குமரேசன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் இரா.மோகன் ஆகியோர் தந்தை பெரியார் சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சி

திராவிடர் கழகம்

இரண்டு நாள் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக பகுத்தறிவு, சமூகநீதி கருத்துகள் அடங்கிய பாடல்களை ஆந்திரா கலைக்குழுவினர் எழுச்சியுடன் பாடினார்கள்.

மானவ விகாச வேதிகா அமைப்பின் தெலுங்கு மாத இதழான ‘ஸ்வேதாலோசனா’ வின் இணை ஆசிரியர் அனுமந்தராவ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மானவ விகாச வேதிகா மத்திய கமிட்டியின் தலைவர் சீனிவாசராவ் உரையாற்றினார். பின்னர் ஆறு சமூக புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

தந்தை பெரியாரின் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் உரை

மானவ விகாச வேதிகா என்ற பெயரில் அய்தராபாத்தில் இயங்கி வரும் ஒரு அமைப்பு முழுக்க முழுக்க நம் பகுத்தறிவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. டிசம்பர் 14 ஆம் நாளன்று இவர்கள் தங்கள் அமைப்பின் இருபதாம் ஆண்டு நிறைவை கொண்டாடினர். இந்த இரண்டு நாள் மாநாட்டின் போது தந்தை பெரியாரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆசிரியரின் சார்பில் பொருளாளர்

வீ. குமரேசன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்து ஆசிரியர் ஆற்றிய உரை இது:
அனைவருக்கும் வணக்கம். மானவ விகாச வேதிகா இயக்கத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள். என் உடல்நிலை காரணமாக என்னால் நேரில் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆனாலும் என் மனம் தற்போது அங்கேதான் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரே கொள்கைக் குடும்பம்தான். நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். பல போராட்டங்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வந்துள்ள அமைப்பு உங்களுடையது. உங்கள் சாதனைகளைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. உங்களது சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்.

200 ஆண்டுகளுக்கு முன் ஜோதிராவ் ஃபூலே புரட்சிகரமான இயக்கத்தை துவக்கினார். அதன்பின் பாபா சாகேப் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரவச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களின் அடிச்சுவட்டில் நாமெல்லாம் அவர்களுடைய பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

எதிர் நீச்சல்

கொந்தளிக்கும் போராட்டக் கடலில் எதிர் நீச்சல் போட்ட தந்தை பெரியாரின் சிலையை அங்கே நீங்கள் திறந்து வைப்பது குறித்து அளவற்ற மகிழ்ச்சி. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு தன் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. சமூகத் தில் பிற்போக்குத்தனமும், காலாவதியான கோட்பாடுகளும், ஜாதி மத பேதங்களும் நிறைந் திருந்த காலக்கட்டத்தில் பெரியார் துவக்கிய இயக்கம் அது. உலகில் வேறு எங்கேனும் நம் நாட்டில் நிலவுவது போன்ற ஜாதிபாகுபாடு சார்ந்த கொடுமைகள் நடப்பதுண்டா? தகுதியையும், சாதனைகளையும் பொறுத்து மனிதர்கள் மதிக்கப் படாமல், பிறப்பு சார்ந்த பேதங்களால் அவர்கள் இழிவுப் படுத்தப்பட்டு வந்த காலத்தில் பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் துவக்கினார். ஜாதி அமைப்பு என்பதே மானுட ஒற்றுமைக்கும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கும் எதிரானது என்பதே உண்மை.

மனித உரிமை

ஜாதிகள் மக்களின் மானுடத்தன்மையை அழிக்கின்றன. இந்தக் கொடுமையை எதிர்த்து பெரியார் நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, சுயமரியாதை இயக்கம் துவங்கியதற்கு முன்பிருந்தே போராடி வந்துள்ளார். காங்கிரசுடன் அவர் இணைந்திருந்த காலக்கட்டத்திலேயே தீவிரமாக போராடிக் கொண்டிருந்தார். வைக்கம் போராட்டத்தை எவரால் மறக்க முடியும்? மகாதேவர் ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த வீதிகளில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் நடந்துச் செல்லும் உரிமையே பறிக்கப்பட்டிருந்தது. எப்படிப்பட்ட சமூக அநீதி அது! எத்தகைய கொடுமை அந்த உரிமை மறுப்பு! பெரியார் காந்தியாருக்கு கடிதம் எழுதி – “எங்கே போயிற்று மனித உரிமை?” என்று வினா எழுப்பியிருந்தார். “வைக்கம் தெருக்களில் நாய்களும், பன்றிகளும் கூட சுதந்திரமாக உலவும்போது நம் சகோதர சகோதரிகள், ஈழவ, புலையர் பிரிவைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மனிதர்களுக்கு அங்கே நடந்துச் செல்ல உரிமை இல்லையா?” என்று காந்தியாரைக் கேட்டார் பெரியார். தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை எவரும் பார்க்கவும் கூடாது, நெருங்கவும் கூடாது என்ற அவலநிலை வைக்கத்தில் 1924 ஆம் ஆண்டில் நிலவியது வரலாற்று உண்மை. இப்படிப்பட்ட சமூக அநீதி எங்காவது நிலவியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா நண்பர்களே? மானுடத்தை சீர்குலைப்பதல்லவா இப்படிப்பட்ட கொடுமை?

தாழ்த்தப்பட்ட பிரிவினர் மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்டனர். உயர்ஜாதியினர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை அன்போடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டுக் கொஞ்சி வந்தனர். ஆனால் தப்பித்தவறி தாழ்ந்த ஜாதி மனிதனைத் தொட்டுவிட நேர்ந்தால் கூட உடனே குளித்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்களாம். எத்தகைய கொடுமை இது உச்சி முதல் பாதம் வரை நீர் ஊற்றிக்கொண்டால்தான் ‘தீட்டு’ போகும் என்பார்களாம் அந்த உயர் ஜாதி வெறியர்கள். இதையெல்லாம் எதிர்த்து, மனிதர்களை மனிதர்களாக அனைவரையும் மதிக்க வைப்பதே எங்கள் பணி.

சமூக அநீதி

உருவத்தால் மட்டுமே மக்கள் மனிதர்களாக உள்ளனர். அவர்களுடைய அன்றாட வாழ்வில் எல்லாவிதத்திலும் இழிவு! அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வதால் என்ன பயன்? கல்வி கற்கவும் உரிமை மறுக்கப்படுவது சமூக அநீதியல்லவா? சுதந்திரம் பறிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் அன்றாடம் நிகழும் அராஜகம். சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த புதிய சமூகத்தை உருவாக்கவே நாங்கள் போராடி வருகிறோம். ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். ஓர் ஆங்கிலப் புதினத்தில் ராபின்சன் க்ரூஸோ தீவு பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட ஆள் அரவமற்ற தனித் தீவிலா நாம் வாழ்கிறோம்? நாம் ஒரு சமூகத்தின் அங்கத்தினர்களாக ஒன்றுபட்டு, ஒரே குடும்பம் போல் வாழ்பவர்கள் அல்லவா? உறவினர்கள், நண்பர்கள் என்று மனிதர்கள் சூழ வாழ்ந்து வருகிறோம். எனவே சமத்துவம் நமக்கு இன்றியமையாத ஒன்று. சமமான வாய்ப்புகள் நம் அனைவருக்கும் கட்டாயத் தேவை. எனவே நாம் எல்லோருமே சமூகப் போராளிகளாக மாற வேண்டியது அவசியம்.

சமுதாய மாற்றம்

அதிகாரங்கள் இடம் மாறிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில் சமுதாய மாற்றங்களைக் காண முடியவில்லை. மறுமலர்ச்சி இன்றுவரை ஏற்படவில்லை. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும் நிலை உருவாக, முழுமையான சமத்துவம் மலர – ஜாதிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் உட்பட பல முற்போக்குவாதத் தலைவர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கவுரவிக்கும் விதமாகத்தான் இன்று நீங்கள் சிறப்பாக விழா நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே பெருமிதமாக உள்ளது. பெரியாரின் உருவச் சிலையை நீங்கள் திறந்து வைப்பது எங்களுக்கு ஈடு இணையற்ற பெருமை. ஆனால் நாம் என்ன பயனை அடைந்து விட்டோம் என்றே கேட்கத் தோன்றுகிறது. ஏன் இன்னும் நம் துயரம் நீங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடை நமக்கு கிடைத்தே ஆகவேண்டும். முன்னோடியாக விளங்கிய தலைவர்களுக்குச் சிலைகள் எழுப்புவதும், மாலைகள் அணிவிப்பதும் மட்டும் போதாது. அவர்களுடைய சிந்தனைகள் மக்களைச் சென்றடையச் செய்வதே மிகவும் முக்கியம். நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் அந்தப் போராளிகளின் கொள்கைகள் பரவிப்படர நாம் செயலாற்றவேண்டும். அப்போதுதான் புதிய சமூகத்தை நம்மால் உருவாக்க இயலும். இதற்குத் தேவை அறிவியல் மனப்பான்மை. அறிவியல் கண்ணோட்டம் அவசியம் மட்டுமல்ல – அவசரமும் கூட.

அறிவியல் மனப்பான்மை

ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் முதல் குடியரசுத்தலைவர் வரை அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் – “நாங்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வோம்” என்று.

அரசமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு சமீபத்தில் கொண்டாடப்பட்டபோது, அதன் முகவுரை வாசிக்கப்பட்டது. இது வெறும் ஓர் அரசியல் நிகழ்வாகவோ அரசியல் சார்ந்த சடங்காகவோ இருந்து விட்டால் போதுமா? அதற்கு ஓர் சமூக நோக்கம் தேவையல்லவா? அது என்னவாக இருக்கவேண்டும்? சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் முழுமையாக மலரச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்ட முகவுரை மூலம் நாம் உணரவேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் – சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி இதில் அடங்கும். இவை மூன்று வகையான நீதிகள். ஒன்றோடு மற்றொன்றை இணைத்து நாம் குழப்பிக்கொள்வதும் சரியல்ல. பொருளாதார நீதியிலிருந்து வேறுபட்டது சமூக நீதி. இவை இரண்டிலிருந்தும் மாறு பட்டது அரசியல் நீதி. அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் மட்டும் குறிப்பிடப்படவில்லை – நம் அடிப்படை கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. 51-A என்ற பிரிவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை கொண்டு கேள்வி கேட்கும் துணிவுடனும், மனித நேய உணர்வுடனும், சீர்திருத்த நோக்கத்துடனும் வாழவேண்டும் என்பதை இந்த 51A பிரிவு வலியுறுத்தியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் இந்தக் குறிப்பிட்ட பிரிவில் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் கடந்த 75 ஆண்டு காலத்தில் எந்த அள வுக்கு இது நிறைவேறியுள்ளது என்றே கேட்கத் தோன்றுகிறது. வலியுறுத்தப்பட்ட கடமை களின்படி செயலாற்றி சிறந்த சமூகத்தை நம்மால் உருவாக்க முடிந்ததா? விடை காண முடியாத கேள்வியாகவே இது இன்றும் உள்ளது.

ஒன்றிணைந்து போராட வேண்டும்

மனிதர்கள் வருவார்கள், போவார்கள். பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் மாறி மாறி பதவி ஏற்பார்கள், விலகுவார்கள். ஆனால் நாம் காணும் மாறுதல்கள் என்ன? விளைவுகள் என்ன? நிலைமையில் மாற்றம் உண்டா? எதுவுமே இல்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது. இப்படிப்பட்ட அவலநிலையை உலகில் வேறு எங்காவது நம்மால் பார்க்க முடியுமா? எந்த ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட துயரம் உள்ளது? மனிதர்களை பார்க்கக்கூடாது, நெருங்கக் கூடாது, தீண்டக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்கும் நாடு உலகில் உண்டா? நாம் தான் இந்தக் கொடுமையை இன்றுவரை சகித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் முடிவு கட்டப்படவேண்டும். இந்தச் சமூக அநீதி அறவே அழிய வேண்டும். இதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்கான போர் நம் மக்களின் மனங்களில் நடக்க வேண்டும்.

சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் – இம்மூன்றும் நிறைந்த சமூகம் உருவாக நாம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.
நீங்கள் தெலங்கானாவிலும் நாங்கள் தமிழ்நாட்டிலும் இருப்பது போலவே நாட்டு மக்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் நம்நாடு ஒன்றுதான். நமக்குள் பிரிவினைகள் இல்லை. தனித்தன்மைகொண்ட நம் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒற்றுமையும், சமச்சீர் நிலையும் ஒன்றல்ல. இரண்டையும் சேர்த்து நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது. மாறுபட்ட இரண்டு அம்சங்களுமே நமக்குத் தேவை. நம்முடைய பகுத்தறிவுக் கண்ணோட்டம் மாறுபடக் கூடாது. இந்தப் பண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அறிவியல் பார்வை மேலும் தீவிரமடைய வேண்டும். இனவெறி, ஜாதிவெறி, மதவெறி – இவை மூன்றுமே அடியோடு அழிய வேண்டும்.

உயிர்த் தியாகம்

தபோல்கர் போன்ற சமூகப் போராளிகளும் வேறு பல புரட்சியாளர்களும் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சமூக விரோதிகள் அல்லர். அவர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. தேசவிரோதச் செயல் எதிலும் அவர்கள் ஈடுபடவில்லை. மக்கள் சுதந்திரமாக சுயமாகச் சிந்திக்க வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. எவருடைய கட்டுப்பாடும் இன்றி மக்கள் செயல்படவேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் மக்கள் அப்படி வாழ முடியாத நிலையை சில தீயசக்திகள் ஏற்படுத்திவிட்டன. இதை உணரவும் விழிப்புணர்வு அடையவும் நம் மக்கள் தவறிவிட்டனர். இந்தத் தவறுக்கு விலையாக நாம் தரப்போவது என்ன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுகிறது.

மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சுதந்திரமாக சிந்திக்கவேண்டும். இந்த நோக்கம் நிறைவேற உங்களைப் போன்ற அமைப்புகள் போராடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பகுத்தறிவே நம் வாழ்வின் அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டும். ஆறறிவுள்ள மனிதனால் மட்டுமே பகுத்தறிய முடியும். எனவே அதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டமும் அறிவியலின் வளர்ச்சிக்காக அல்ல – நம் வளர்ச்சிக்காகவே.

நம்முடைய கொள்கைகளையும் திட்டங்களையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எடுத்துச் சென்று நாம் சேர்க்கவேண்டும். அவை மக்களைச் சென்றடைய வேண்டும். மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. புதிய தலைமுறையினரை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்கள் வருங்காலத்தின் தூண்கள். கடுமையாக உழைக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தி நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

நாம் வாழ்வது செயற்கை நுண்ணறிவு யுகத்தில். இருந்தாலும் தொலைகாட்சி ஒளிபரப்புகளிலும், சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறையவே இல்லை. ஜோதிடம், வாஸ்து, ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற மூட நம்பிக்கைகள் இவற் றின் மூலம் இன்றும் பரவி வருவது நம் நோக் கத்திற்கு பெரும் தடையாக உள்ளது. இந்த மடமைகளுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் கிடையாது. இவற்றை யெல்லாம் ஒழிக்க நாம் போராட வேண்டும்.

அரசியல் விவாதங்களோடு நாம் நின்றுவிடக் கூடாது. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பெண்களின் முன்னேற்றம், சமூகநீதி, ஜாதி ஒழிப்பு – இப்படி பல சவால்கள் உள்ளன. ஜாதிகளின் படிநிலையமைப்பு மிகப்பெரிய கொடுமை. உலகின் எல்லா சமூகங்களிலும் சமத்துவம் நிலவுகிறது. நம் நாட்டில் சமத்துவமின்மை மட்டுமல்ல – படிநிலை அமைப்பில் சமத்துவமின்மையும் ஏணிப்படிகள் போல் நிலவி வருகிறது. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பிரிக்கப்பட்டு நம் மக்கள் வாழும் துயரநிலை எப்போது மாறும்? ஜாதிகள் எப்பொழுது அடியோடு ஒழியும்? நம்முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இதுதான். ஜாதிகளின் படி நிலையமைப்பே எல்லா கொடுமைகளுக்கும் மூலகாரணம் என்று டாக்டர் அம்பேத்கரும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சமூகம் உருவாக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவோம். மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வாழ்நாள் முழுவதும் அதைத்தான் செய்து வந்தார் பெரியார். எங்கள் திராவிடர் கழகம் தமிழ்நாட்டை பெரியார் மண்ணாக, சமூகநீதி மாநிலமாக மதித்து வருகிறது. பகுத்தறிவு பரவிப் படர போராடி வருகிறோம். மனித நேயம் தழைக்க எங்களால் இயன்றதைச் செய்து வருகிறோம். மக்களை விழிப்படையச் செய்ய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தப் பணியில் உங்கள் கரங்களைப் பலப்படுத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.

‘‘விடுதலை’’

எங்களுடையது மக்கள் இயக்கம். எந்தவிதமான அரசியல் ஆதாயமும் தேடாதவர்கள் நாங்கள். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் இயங்கி வருகிறோம். எங்கள் கொள்கைகளை பரவிப்படரச் செய்ய ‘விடுதலை’ என்ற பெயரில் நாளிதழ் வெளியிட்டு வருகிறோம். மாத இதழ்களும், மாதமிருமுறை இதழ்களும் கூட கொள்கைப் பரப்புக் கருவிகளாக வெளியிட்டு வருகிறோம். எங்கள் பத்திரிகைகள் தொழில் அல்ல – அவை யாவும் எங்கள் லட்சியம் – எங்கள் உயர்ந்த நோக்கம் – எங்கள் இலக்கு.

உங்கள் பணிகளும் நல்ல பயன்களை அளிக்க என் வாழ்த்துகள். “அந்தரிகீ வந்தனம்” என்று தெலுங்கில் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் சமச்சீர் அமைப்புகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒன்றுபட்ட அமைப்புகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் போதும். எங்கள் ஒத்துழைப்பு உங்கள் அமைப்பிற்கு எப்போதும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். அன்புச் சகோதர, சகோதரிகளே, ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக நீங்களும் எங்களுடன் எப்போதும் இணைந்து ஒத்துழைப்பு அளியுங்கள். நம் அனைவரின் இலக்கும் ஒன்றாக இருக்கட்டும். பழமைகளை உணவாக அல்ல – உரமாக்கிக் கொண்டு புதிய சமூகத்தை வளர்ப்போம். மூடநம்பிக்கைகளை ஒழிப்போம். எல்லாவிதமான மடமைகளையும் அழிப்போம். பகுத்தறிவு செழிக்க மேலும் தீவிரமாகப் போராடுவோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அமைப்பைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வருகை புரியுங்கள். சென்னைக்கு வந்து எங்களை நேரில் சந்தியுங்கள். எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள். எங்களுடன் கலந்துரையாடி உங்களுக்குச் சரியென்று படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

பொது மக்களின் இயக்கம்

ஒருசில மேதைகளும், அறிஞர்களும் மட்டுமே நிறைந்ததாக எந்த ஒரு இயக்கமும் குறுகலான வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் பொதுமக்களின் இயக்கமாக அது இருக்கவேண்டும். அப்படித்தான் எங்கள் திராவிடர் கழகம் உள்ளது. உங்கள் இயக்கமும் மக்கள் இயக்கமாக மேலும் மேலும் செழித்தோங்க என் வாழ்த்துகள். மக்களை உங்கள் இயக்கம் சென்றடையச் செய்யுங்கள் என்பதே என் பணிவான வேண்டுகோள். வாழ்க பகுத்தறிவு! வாழ்க சமூகநீதி! வாழ்க சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம்! விடை பெறுகிறேன். நன்றி.
தமிழர் தலைவரின் ஆங்கில உரையினை மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோர் பார்த்து செவிமெடுத்தனர். தமிழர் தலைவரின் எழுச்சிமிகு உரை தமிழர் தலைவரின் நிகழ்ச்சியில் முத்திரை பதிவாக விளங்கியது. ஆங்கில உரையின் தெலுங்கு மொழியாக்கத்தை மானவ விகாச வேதிகா அமைப்பின் தோழர் ஒருவார் வாசித்தார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றிய
உரையின் சுருக்கம்:

கருத்துச் செறிவுமிக்க தமிழர் தலைவரது உரைக்குப் பின்னர் உரையாற்றுவது சற்று கடினம். சுருக்கமாக ஒரே ஒரு கருத்தினை மட்டும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன்.

தந்தை பெரியாரின் கொள்கையின் சாரம் – மனிதர் அனைவரும் சமமானவர்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட வேண்டும். இந்த கொள்கை நடைமுறைக்கு தடையாக எதுவந்தாலும், எத்தகைய பெரிய சக்தி என்று நினைக்கப்படுவது இருந்தாலும் அவையனைத்தும் தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் வாழ்வும் பணியும். மனித சமத்துவத்திற்கு எதிராக ‘கடவுள் சொன்னார்’ என்று வந்தாலும் ‘கடவுளும்’ மறுக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல; எதிர்க்கப்பட வேண்டியவர். இந்த அடிப்படையில்தான் மற்ற புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியாரின் கொள்கையும், நடைமுறையும் வேறுபடுகிறது. மானுடம் மேம்பட முழுமையாக பயன்படுகிறது.

அண்மையில் கேரளாவில் வைக்கம் நகரில் 1924 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சத்யாக்கிரகத்தின் வெற்றி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. கோவிலில் அனைவருக்கும் நுழைவு; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சராகும் உரிமை என்று முற்போக்கு நிலவிடும் தற்போதைய நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. தீண்டாமையால் (untouchability) – தெருக்களில் நடந்து செல்லும் உரிமை மறுப்பு தாண்டவமாடியது. இதனை எதிர்த்து கேரளத்து முற்போக்கான தலைவர்கள் போராட்டத்தினை தொடங்குகிறார்கள். முதல் வாரத்திற்குள் அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுகின்றனர். போராட்டம் தோல்வி அடைந்து விடும் என்ற நிலையில் சிறையிலிருந்த தலைவர்கள் அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். வைக்கம் வந்து போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டுகின்றனர்.

முதல் போராட்டம்

உடனே பெரியாரும் வைக்கம் நகருக்கு வந்து சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் தனது எழுச்சிப் பேச்சால் மக்களைத் தட்டி எழுப்பி தொய்வடைந்த போராட்டத்தை மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றுகிறார். இரண்டு முறை கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார். அரசியல் கைதியாக அல்லாமல் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாகிறார். இறுதியில் தெருக்களில் நடக்கும் உரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கிறது. வைக்கம் போராட்ட வெற்றி விழாவில் தந்தை பெரியார் பங்கேற்கிறார். இந்தியாவில் மனித உரிமைக்கான முதல் போராட்டமாக வைக்கம் போராட்டம் இடம் பெற்றது.

அந்த எழுச்சிமிகு வைக்கம் போராட்டம்தான் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு மகாராஷ்டிரம் – ‘மகத்’ பொதுக்குளத்தில் குடிதண்ணீர் எடுக்கும் போராட்டத்தினை நடத்திட உந்து சக்தியாக விளங்கியது. இதனை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் பதிவு செய்கிறார். அந்த வரலாற்று நூலுக்கு ஒரு பெருமை உண்டு. டாக்டர் அம்பேத்கர் உயிருடன் வாழ்ந்தபொழுது அவர் படித்து ஒப்புதல் அளித்த வரலாறு நூல் தனஞ்செய் கீர் அவர்களுடையது மட்டும்தான்.

தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் இன்று நூற்றாண்டு விழாவாக உலகெங்கும் பேசப்படுகின்றது. அன்றைய அரசு பெரியாரைக் கைது செய்தது. இன்றைய அரசுகள் தந்தை பெரியாரைப் போற்றி விழா எடுக்கின்றன. இதுதான் உண்மையான புரட்சியின் வெற்றி.
இவ்வாறு கழகப் பொருளாளர் உரையாற்றினார்.

மானவ விகாச வேதிகா நிகழ்ச்சியில் விஜயவாடா நாத்திக மய்யத்தின் தலைவர் டாக்டர் சமரம், நியாந்தா மற்றும் ராஸ்மி, அனைத்து இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், செயலாளர் பேராசிரியர் முனைவர் சுதீஷ் கோடேராவ் மற்றும் பல்வேறு பகுத்தறிவாளர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மானவ விகாச வேதிகா அமைப்பின் தலைவர் சீனிவாசராவ் செயலாளர் மூர்த்தி மற்றும் அந்த அமைப்பின் தோழர்கள் வெகு சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்.

இன்றைய தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு நிகழ்வு என்ற நிலையில் தமிழ்நாட்டையும் கடந்து தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆழமாக வேர் பிடித்து பரவி வருகின்றன என்பதன் அடையாளமாகவே மானவ விகாச வேதிகா அமைப்பினர் நடத்திய நிகழ்வு அமைந்தது. உலகம் பெரியார் மயம்! பெரியார் உலக மயம் என்பதன் எதிரொலியாக – நடைமுறையாக தெலங்கானா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொகுப்பு: வீ. குமரேசன்

தந்தை பெரியாரின் சிலை நன்கொடை

விடுதலை நாளேடு

நன்கொடை

அய்தராபாத் – ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் உள்ள மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். தென்காசி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும் – தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வி. ஜெயபாலன் அவர்கள் தந்தை பெரியாரின் சிலையினை வடிவமைத்திட ஆவன செய்து – அந்தச் சிலையினை மானவ விகாச வேதிகா அமைப்பினர் நிறுவிட நன்கொடையாக வழங்கினார். நன்கொடை அளித்த விவரங்கள் பற்றிய குறிப்பு சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் சிலையினை நன்கொடையாக வழங்கிய வி. ஜெயபாலன் அவர்களுக்கு நிகழ்ச்சியில் மானவ விகாச வேதிகா அமைப்பினர் நன்றியினைத் தெரிவித்தனர்.

திங்கள், 17 பிப்ரவரி, 2025

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி பிரச்னை!

https://www.vikatan.com/education/50728-

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் பெருமகிழ்வில் இந்நாள், மேனாள் மாணவர்கள்


16

திருச்சி,ஜூன் 12- பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயருக்கு பதிலாக தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கல்லூரியின் இந்நாள் மற்றும் மேனாள் மாணவர்கள்,  பெருமகிழ்வுடன் அதற்கான படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர். 

அக்கல்லூரியின் மேனாள் மாணவரான ரஞ்சித் சேகுவேரா குறிப்பிடுகையில், நான் பயின்ற கல்லூரியின் பெயர் மாற்றம் - பெரியார் ஈ.வெ.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயருக்கு பதிலாக தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதுடன், பின்னூட்டப்பதிவில், "தோழர் அந்தக் கல்லூரி, கல்லூரி சுற்றி பல ஏக்கர் நிலங்களும் பெரியாரின் தனிப்பட்ட சொத்துக்கள் அவற்றை இலவசமாக அரசுக்கு வழங்கினார். அதற்காக அந்த கல்லூரிக்கு அவர் பெயர் வைக்காமல் வேறு யாரு பேரு வைக்கணும்?" என்றும் பதிலுரையில் வினவியுள்ளார்.

அக்கல்லூரியின் மேனாள் மாணவர்களில் ஒருவரான தஞ்சைத் தமிழன் என்பவர் பதிவில், "நான் இந்தக் கல்லூரியில்தான் 1970-1972இல் முதுகலைப் பட்டத்திற்குப் படித்தேன்..அப்போதே இந்தக் கோரிக்கையை வைத்தோம். இப்போது நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் நன்றி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லைஅக்ரோ என்பவர் பதிவில், இதுதான் திராவிடர் கழகத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தைபெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்நாள் மேனாள் மாணவர்கள் பெருமகிழ்வுடன் வரவேற்று மேலும் பதிவிட்டு வருகின்றனர்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

இந்து என்றால் என்ன? – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published February 9, 2025
தந்தை பெரியார்

பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் – அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!

கடவுளுக்கு இலக்கணம் கூறியவர்கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் – சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்; கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று கூறி விழாக்கள் – உற்சவங்கள் கொண்டாடினார்கள்.

பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளை யும், செய்யாத சங்கதிகளையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர் களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படு கின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் – பரப்பவுமே செய்யப்படுகின்றன.

அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனுமதிக்கிறேன். மக்களும் எனது தொண்டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகையில் பணம் பல பொருள்கள் முதலி யனவும் அளிக்கின்றீர்கள்.

நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக் கூடாது என்பதைக் கொள்கையாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.

நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள் கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன் னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டு களைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.

இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத்திரன் என்று எண்ணிக் கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது. ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.

நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே – எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளு கின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் தானே!

அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை – எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.

இன்றைக்கு அரசியல் துறையிலாகட்டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த் தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப் பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.

இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல்லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.

இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பது தானே.

இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.

அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.

அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே – எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!

உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக – சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.

இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கடவுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.

அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத்தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.

மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள – யோக்கிய முடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசியல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே – பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.

தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.

காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன – நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.

நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாச வேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.

தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன்றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக்களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் – பார்ப்பனர் அல்லாதவர்களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட்ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார்களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.

பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளிலும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.

இன்றைக்கு அந்த நிலை இருக்கின்றதா? அடி யோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?

29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973
அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 12.6.1973).