வெள்ளி, 2 மார்ச், 2018

கார்த்திகைத் தீபம் - தந்தை பெரியார்



கார்த்திகைத் தீபப் பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை சுப்ரமணியன் என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்-கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப் பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங்களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய், செலவு, சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களும் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

இந்த மூடப் பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன. முதலாவது, ஒரு சமயம் அக்னித் தேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங் கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்து விடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள்தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுபவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்தபோது அதை எடுத்து வளர்த்தார்களாம்!

அடுத்து, இதன்மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவிகள் இருக்க வேண்டும் என்பது.

இவ்வாறு நம் மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்!

அடுத்த கதை!

ஒரு சமயம் பிரம்மா, விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழு முதற்கடவுள் தாம் தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டு, பிறகு அடிபிடிச் சண்டை ஆகிவிட்டதாம். இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி, இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர்தான் பெரியவர் என்றானாம்.

உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காண முடியாமல் திரும்பி விட்டானாம்.

பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காண மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்து கொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், தாழம்பூவே எங்கிருந்து, எவ்வளவு காலமாய் வருகின்றாய்? என்று கேட்கவும், நான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டு இருக்கின்றேன் என்றதாம். உடனே பிரம்மன், நான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சினானாம். அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக் கண்ட சிவன் கோபங் கொண்டு பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூ இனிமேல் பூசைக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபமிட்டாராம்.

உடனே, பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி - திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக, இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும் என்று கேட்க, அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும், கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னானாம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப் பண்டிகையாகும்.

இவ்வாறு, முரண்பட்ட வேடிக்கையான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா? மேலும், நமது நாட்டில் பொருட் செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப் போக்கும் கொண்டவர்களுக்கு எடுத்துக்கூறத் தொடங்குபவர்களுக்கு உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத் துரோகி, மதத் துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றார்கள். சிறிதாவது பொறுமை கொண்டு, நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.

 - உண்மை இதழ், 1-15.11.16


மற்றொரு ‘சனியன்’“கார்த்திகைத் தீபம்”



மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக்காட்டிப்பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூடநம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை. அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுக்களை வெளிப்படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக்கொண்டு வருகிறோம்.

சென்றமாதத்தில் தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம். அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பலன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள் இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணிவாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும், கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாயிருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழைமக்கள், கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், வொயின், பீர், ராமரசம் முதலிய வெறிதரும் பானங்களை குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது. இவ்வளவு மாத்திரம் அல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக்கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்ட மடைந்தது எவ்வளவு! வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப் பட்ட காரியங்கள் எவ்வளவு! தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப்பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுக்களிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைபட்ட காரியங்கள் எவ்வளவு?

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச்சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதங்கூட ஆகவில்லை, சரியாய் 15 நாட்களுக்குள்ளாகவே மற்றொரு ‘சனியன்’ தொடர்ந்து வந்து விட்டது. இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் ‘சனியன்’ பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும் மதத்தின் முக்கிய பகுதி என்று சொல்லப் படுவதாகவும் இருந்து வருகிறது. இப்பொழுது வரும் ‘சனியனாகிய’ பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பது தான்.
இந்தக் கார்த்திகைத் தீபப்பண்டிகையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர் வீரசைவர், மர்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாகக் கார்த்திகை நட்சத்திர தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள்  என்பவர்கள் விரதங்களும், பூஜைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளைவிட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப்பணத்தைச் செலவு செய்து விட்டுத் திரும்பும்போது அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீஸ்வரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும், ஆகும்போது பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா? இதில் எவ்வாறு பொருள் வீணக்கப்படுகிறதென்பதை நினைத்துப் பாருங்கள்! தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தங்கிக்கிடக்கும் பட்டாசுகளுக்குச் செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும். மேடுகளிலும், குப்பைகளிலும், குளங்களிலும், எண்ணற்ற 100, 1000, 10000, 1000000கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்காகும் செலவு எவ்வளவு! கார்த்திகைப்பண்டிகைக்காக திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்கு கூம்புக்கு (சொக்கப்பானை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற் றிற்காகும் செலவு எவ்வளவு? இவ்வாறு பல வகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளவாவது பயனுண்டா என்று  ஆலோசித்துப் பாருங்கள்.

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்குண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப்பழக்க வழக் கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக்கதை இரண்டு. அவைகளில் ஒன்று:-

ஒரு சமயம் அக்னி தேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதை அறிந்து  அவன் மனைவி சுவாகாதேவி என்பவள் அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால் தன் கணவன் சபிக்கப்படுவான் என்று  என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களை போல் உருவங்கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம்.  இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம்.  இவைகள் தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப் படுவதாம்.  இந்த நட்சத்திர பெண்கள் தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி குழந்தையாக இருக்கும்போது அதையெடுத்து வளர்த்தார்களாம்! என்பது ஒருகதை.

இக்கதையினால் தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையை பாருங்கள்; பிறர் மனைவி மேல் ஆசைப்பட்டு விபசாரம் பண் ணுவது குற்றம்  என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத்தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடு பட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று.  இவைமட்டும் அல்லாமல் இயற்கைப் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூட நம்பிக்கையை உண்டாக்கும் துர்போதனை ஒன்று ஆகவே இவற்றை ஆராயும்போது இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்டவிதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்

இனி, கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:- ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்னும் கடவுளும் தாம் தாமே ஆதி மூலக்கடவுளர் என்று கூறிக்கொண்டதனால் இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகி, பிறகு அது கைச்சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடி சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கும் வரவில்லையாம். ஆகையால் அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு, வானத்திற்கும் பூமிக்குமாக நின்றாராம். உடனே சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம், அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக் கடவுள் ஏ பிரம்ம விஷ்ணுகளே! இந்த ஜோதியின் அடி முடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரீ) வார்த்தை சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றி உருவம்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்றும் காணமுடியாமல் திரும்பி வந்து விட்டாராம்.  பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது வழியில் ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன் தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக  வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க; அது நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம். உடனே பிரம்மன் நான் சிவனுடைய முடியைப்பார்த்து விட்டதாக சிவனிடத்தில் எனக்காக சாட்சி சொல்லுகிறாயா என்று கேட்க,அதுவும் சம்மதிக்க, இருவரும், பரமசிவனிடம் வந்து முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூவும் அதை ஆமோதித்ததாம். அதுகண்ட சிவன் கோபங்கொண்டு, இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமற் போகக் கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக்கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும் விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்று எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம், பரமசிவனும் அதற்குச் சம்மதித்து ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை பண்டிகையில் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப்புராணத்தில் சொல்லப் படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியார்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களைவிட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக்காட்டிச் சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப்புராணங்களும், தேவாரங் களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை.  இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல இவ்வாறு மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற்காரணமாக இருப்பதை அறியலாம். இந்தக்கதையில் தாழம்பு பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்குள்ளேயே சண்டை வந்தது ஒரு விந்தை! இதுபோலவே ஆராய்ந் தால் பரிகாசத்திற்கும் வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அனேகம் செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறு இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டு பக்தியும், மூட நம்பிக்கையும்; முட்டாள் தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா? இது நிற்க மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்கு பெருமை கற்பிக்கிறதென்று நம்பி கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார் களென்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் கடவுளை மலந்தின்னும் பன்றியாக்கிக் கேவலப்படுத்தி யிருப்பதுடன் சிவனுடைய பாதத்தைக்கூட காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தியிருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாடச் சம்மதிப்பார்களா? இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கை யில்லாததுதானே கடவுள் என்னும் கொள்கையுடைய மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும்போது இவர்கள் முட்டாள் தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டியதிருக்கிறது. அல்லது அறிந்தோ அறியாமலோ நமது மக்கள் மனத்தில் பண்டிகைகள் புண்ணிய நாட்கள், அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு. கொண்டாடாவிட்டால் பாவம் என்னும் ஒரு   மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள். இவ்வாறு தேசீய பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒருபுறமும், புராணப் பிழைப்புக்காரர்களும், குருக்கள்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரசாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

- ‘குடிஅரசு’ - தலையங்கம் - 22.11.1931
- தந்தை பெரியார்
- உண்மை இதழ், 1-15.11.17

வியாழன், 1 மார்ச், 2018

பெரியார் பேசுகிறார்: என்னைப்பற்றி நான் சொல்கிறேன்



என்னைப்பற்றி உங்கள் எல்லோ ருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர் களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.

எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும், அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை என் பதும் நீங்கள் அறிந்ததே. அதனா லேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடை யாது. சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அநேக வீடுகளுக்கு நான் வரா விட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட  கால் மணி, அரை மணி காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளி யேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்த வனாகிய நான், இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும் இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்பந்தமான நட்பு தவிர, மற்றபடி உலக வழக்கமான பொது ஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக் குத் தெரியும். ஏன் அப்படி சொல் லுகிறேன் என்றால் அனேக துறைகளில் பொது ஜன அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக்கதிதான். ஆனால், இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனேகருக்கு இதுகூட சாத்தியப் படாமல் அடிக்கடி கரணம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல் லுவேன்.

சாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லு வதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத சாதியா? என்றால், அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ் தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும், தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர் களும் செய்திருக்கிறார்கள். இதோ எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில், நான் முன்னின்று கட்டி வைத் ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக்கிறதல் லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.

கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தானக் கமிட்டியில் நான்தான் - என் தலைமையில்தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமலுக்குக் கொண்டு வந்ததில் கோவில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும், தோழர் ஈஸ்வரன் அவர்களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை யாயிற்று என்றாலும், அந்தத் தீர்மானம் கேன்சல் செய்யவே வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்தேன். அதற்கப்புறமே சாமியையும், கோவிலையும், மதத்தை யும், அடியோடு அழிக்கத் துணிந்தேன்.

(15.11.1936, ஈரோடு பார்ப்பனரல்லாதார் வாலிப சங்க பொதுக்கூட்ட சொற்பொழிவு)

‘குடிஅரசு’, சொற்பொழிவு - 06.12.1936

ராஜரிஷி என்று அழைக்கப்பட்டவன் நான்!

நானும் ஒரு காலத்தில் சட்ட மறுப்பு மறியலும், சத்தியாகிரகமும் செய்து பார்த்து அதற்காக பல தடவை சிறை சென்றுமிருக்கிறேன். இந்நாட்டில் எல்லாரையும் விட பெரிய தேசப் பக்தனாகயிருந்து பார்த்துமிருக்கிறேன். வருணாசிரம தருமிகளெல்லாம் என்னை ராஜரிஷி என்றும் பிரமரிஷி என்றும் சொன்னதோடு உற்சவங்களில் தேர்களில் கூட எனது படத்தை இழுத்திருக்கிறார்கள்.

ஆகவே ஒரு மாசமோ, மூன்று மாசமோ, ஆறு மாசமோ  ஜெயிலுக்கு போவதால் எனக்கொன்றும் ஆபத்து வந்து விடாது. சத்தியாகிரகத்தில் சேர்ந்து கொள்வதால் எனக்கொன்றும் மரியாதையுங் குறைந்து விடாது. ஆதலால் நான் எவ்வித சத்தியா கிரகத்திற்கும் எந்த ஜெயிலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பின்னேயேன் அதை  ஆதரிக்க வில்லை என்றால் அதன் உண்மையும் அனுபவமும் எனக்குச் சிறிதாவது தெரியும். சுமார் பத்து வருடத்திற்கு முன் ஏற்பட்ட ஒத்துழையாமையின்போது முப்பதினாயிரம் பேர்கள் சிறை சென்றோம். ஒரு கோடி ரூபாய் செல வுஞ் செய்தோம். ஒரு வளைந்துபோன பின் (றிவீஸீ) ஊசிக்கும் பயன்படவில்லை. நான் அவ்வளவு பாடுபட்டும், எவ் வளவோ தேசியப்பிரசாரம் செய்தும் இன்றும் திருவிசலூர் அக்கிரகாரத்தில் தடியும் கையுமாய் பார்ப்பனர்கள் நின்று கொண்டிருப்பதை மாற்ற முடியவில்லையென்றால் யோக்கி யனுக்கு வேலை அங்கா? இங்கா? என்று பாருங்கள். உண்மையில் எந்த வைதீகர்களும் வருணாசிரம தருமி களும் என்னைப் பெரிய ராஜரிஷி என்றும், பிரமரிஷி என்றும், தேசப் பக்தன் என்றும், தேசிய வீரனென்றும் அழைத்தார்களோ அவர்களேதான் இன்றைய தினம் என்னைத் தேசத் துரோகி என்றும், மதத் துவேஷி என் றும் அழைக்கப்படுவதை நான் பார்க்கிறேன்.

ஆகவே, இதிலிருந்தே நான் முன் செய்த தொண்டு வைதீகர்கட்கும், வருணாசிரமிகட்கும் அனுகூலமான தென்றும் இப்போது நான் செய்வது அவர்களுக்கு விரோதமானதென்றும் நன்றாய் விளங்கவில்லையா? இவற் றிலிருந்து தான் எனது தொண்டில் எனது அபிப்பிராயத்தில் நாளுக்கு நாள் உறுதிப்பட்டுக் கொண்டு வருகின்றது.

- ‘குடிஅரசு’ , சொற்பொழிவு -  10.08.1930

எனது குடும்பம்

எனக்கு அரைவயிற்றுக்காவது சோற்றுக்கு மார்க்கமிருக்கிறது.  காங் கிரசுக்கு வரும்போதே பல பதவிகளும் இருந்தன.  ஆதலால் தேசியத் தொண் டினாலோ, அல்லது பொது வாழ்வி னாலோதான் வயிற்றைக் கழுவ வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ எப்போதுமில்லை. கவுரவத்தை உத்தேசித்தோமென்றால் அதுவும் காங்கிரசின் பொது வாழ்விற்கு முன்னரே மக்களால் எவை, எவை உயர்ந்த கவுரவமான ஸ்தானங்களாக கருதப்பட்டனவோ, அவைகளிலேயும் ஓரளவு அங்கம் வகித்தும், தலைமை வகித்தும் பதவி பெருமைகள் அனு பவித்து வந்திருக்கிறேன். நான் காங் கிரஸ் பாரத்தில் கையெழுத்துப் போடும்போது 1). எனது இன்கம்டாக்ஸ் வருஷம் 900 ரூபாய்.  2). எனது வீட்டு வரி வருஷம் 2500 ரூபாய்; எனது பொதுநல கவுரவப் பதவியோ முனிசி பல் சேர்மென் பதவியை ராஜினாமா செய்த பின்பும் சர்க்கார் எனக்கு ஆனரரி இன்கம்டாக்ஸ் கமிஷனர் வேலை கொடுத்தார்கள். அதற்கு தினம் 100 ரூபாய் அலவன்சும் இரட்டை முதல் வகுப்பு ரயிலில் படியும் உண்டு. இவைகளுக்கு எல்லாம் இப்போதும் சர்க்காரில் ரிகார்டு இருக்கிறது. இவை யெல்லாம் பொய்யாக இருக்க முடியாது. ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்றால், என்னைப் பற்றிய விஷமத் தனமாக இங்கு விஷயங்கள் விவகா ரத்திற்கு வந்ததினால்தான். ஏதோ என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமலிருப் பதற்கே ஒரு பயனுள்ள தொண்டைச் செய்யலாமென்று கருதி இதில் ஈடுபட்டிருக்கின்றேனேயன்றி பதவிக்கோ பணத்துக்கோ எதற்காக வுமல்ல!

‘குடிஅரசு’, சொற்பொழிவு - 23.01.1938

- விடுதலை ஞாயிறு மலர், 16.9.17