புதன், 11 ஏப்ரல், 2018

ஜாதி முறை

தந்தை பெரியார்



ஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே!

முன் 16.10.30ம் தேதி குடிஅரசு தலையங்கம் ஒன்றில் "ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்" 4000 ஜாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டதோடு அந்த ஜாதிகளே தான் எல்லா பஞ்சம ஜாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள ஜாதி ஆதா ரங்களை எடுத்துக் காட்டி னோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளு பவர்களில் ஒரு சிலர் மேற்படி ஜாதிக்கிராமத்தை அதாவது ஆதி ஜாதி என்பவை களான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த் தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற் றிலும் தாங்கள் நாலாம் ஜாதி என்றும் ஒரு கற் பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்ட வர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாயிருக்க வேறு பல ஜாதிகள் ஏற்பட்டு இருப் பதாகவும் அவர்கள் தான் "பள்ளு பறை பதினெட்டு ஜாதிகள்" என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வடமொழிப் படி பார்த்தாலும் சரி, தென் மொழிப் படி பார்த்தாலும் சரி, வேளாளர் 4 வது ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதி லிருந்து அறியக் கிடக்கின்றது. அந்தப்படி கூறப்படும் பள்ளு, பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் "பணி செய்யும் பதினெண் வகைச் ஜாதியார்" என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இவை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணை வாணிகன், ஒச்சனகல் தச்சன், வண்ணான், குயவன், கொல்லன் கோயிற் குடியன், தச்சன், தட்டான், நாவிதன் பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட் டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)

ஆனால் இதே பதினெண் மக்களை அபிதான கோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள் களாக, சிவிகையர், (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணை வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதி னெட்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் "கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும், உப்பமைப்ப வர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்" என்று குறிக்கப் பட்டிருக்கின்றது.

இவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்ன வென்றால் சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளான் செட்டிகள். இவர்கள் சோழ புரத்தார், சித்தக் காட்டார், பஞ்சுக்காரர், முதலிய பல திறப்பட்டவர்கள். இதற்கடுத்தப்படியிலுள்ளோர் கார் காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர். இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தப்படியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாமிச போசனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம் படியர், அவரிற் தாழ்ந்தோர் மறவர். அவரிற் தாழ்ந்தோர் கள்ளர். அவரிற் தாழ்ந்தோர் இடையர். இவர்கட் கடுத்தபடியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்த படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எதிலும் "பிராமணர்கள்" விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும், தாழ்வு கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்குச் சிறிதும் இட மில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக்  கவனித் தால் ஜாதியின் சூழ்ச்சித்தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி சத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆட்சேபணைகளும் சத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங் களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவுபடுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியட்சமாய் காண்கின்றோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் ஜாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் "பிராமணர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் பார்ப் பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்டவர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வா தாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதா ரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன் படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.

எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள். அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது "விபசாரம்" "கீழ் மேல் ஜாதி கலப்பு" என்று சொல்லும் படியான இழிதன்மையில் பிறந்த வர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவ மாயிருக்கின்றதை யாரும் மறுக்கமுடியாதென்று உறுதி கூறுவோம்.

மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர ஜாதிக் கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கு ஆதாரமான வேதம், சாதிரம், தர்மம் என்று சொல்லப் பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய் சொல்லுவோம்.

இவை ஒருபுற மிருக்க இந்த ஜாதிக் கிராமத்தில் பார்ப் பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற் படுத்தப்பட்டிருக் கும் யோக்கியதைகளை யும், உரிமை களையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத் தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர் கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதி பேரை சொல்லிக் கொள்ள முடியாத படியும் அதை கனவிலும் நினைக்க முடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது "நாலாவது ஜாதியார்களாக சூத்தி ரர்கள் என்று சொல் லப்படும் வகுப்பாருக் குப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கும் உரிமையானது எப்படி இருக்கின்றது". என்று பார்த்தால் இப் போது "பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்" (அதாவது கிரிமினல்ட்ரைப்) என்று சொல்லக் கூடிய வர்களுக்குச் சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்பந்தத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிது கூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரி யாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரண மாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.

அதுவும் தர்ம சாதிரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.

"ஸ்நாத மவம், கஜமத்தம் ரிஷபம்

காம மோஹிதம் சூத்தரமக்ஷரசம்

யுக்தம் தூரதப் பரிவர்ஜையேல்"

அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.

"ஜப, தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ் ஜய, மந்தர சாதனம் தேவதாரா

தனம் சசய்வதிரீ சூத்திர பத தானிஷள்" அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.

"நபடேல் சமகிருதம் வாணீம்" (சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்.

"நைவ சாதிரம் படே நைவ சுருணுபாத் வைதி காக்ஷரம் நநாயாது தயால் பூர்வம் தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்"

(சூத்திரன்) சாதிரம் படிக்கவோ, வேதத்தைக் கேட் கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்ய வும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.

"இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி"

இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.

"சாதுர்வர்னியம்

மயாசிருஷ்டம்

பரிசரியாத் மகம்

கர்மம் சூத்ரஸியாபி பாவனாம்"      (கீதா லோகம்)

நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்குப் பிராமண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.

இது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாதிரங்கள் பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.

எந்த காரணத்தாலோ இந்து மதத் தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டிய தல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலி யுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ் வொருவரும் தங்கள் தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஏதோ "பொல்லாத விதிவசத்தினால்" இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் திரு. காந்தியாரும் வருணா சிரமத்தைக் கோரும் "தேசிய" தலைவர்களும் கேட்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒரு காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

இன்றையதினம் தேசியவாதிகளாய் இருக்கின்ற வர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மையான ஆசை யுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள் ளைக்கார ஆட்சியிருக்கும் போதே ஜாதி வித்தி யாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டிதுதான் அறிவுள்ள வேலை யாகும். அதைவிட்டு விட்டு முதலில் "நீ போய் விடு நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்" என்று சொன்னால் அது "தான் சாவதற்குதானே மருந்து குடித்தது" போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொரு வரும் மேல்ஜாதி ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதும் தனக்கு கீழ் பலஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது மான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள் கையும், ஜாதி ஆதிக்கத்திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆட்சியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதி கொடுமைகளும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும். என்பதையோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.

இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக் குமானால் இந்தியா ஒரு நாளும் அன்னியர் ஆட் சிக்கோ அடிமை தனத்திற்கோ, அடிமையாகி இருக் கவே முடியவே முடியாது. ஆனால் "அம்பேத்கர் களையும், ஜின்னாக்களையும், ராமசாமி முதலியார் களையும், ராதாபாய்களையும் ஏதாவது ஆசைக்காட்டி ஏமாற்றி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், இழிவுகளையும் மறைக்க வைத்து எங்கள் நாட்டு ஜாதி உயர்வு தாழ்வு விஷயமும் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டு இழிவுபடுத்தும் சமுகக் கொடுமை விஷயமும் நாங்கள் எப்படியோ சரிபடுத்திக் கொள்ளுகிறோம். இப்பொழுது நீங்கள் போங்கள்" என்று சொல்லச் செய்து விடலாம். ஆனாலும் நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதை யெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்பட்டு பின் அயலானை வெளியில் போகச் சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றையதினம் உள்ள இழிவையும் கொடுமையையும், அடிமைதனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதி வைப்போம்.

ஆகவே எப்படியாவது ஜாதிப் பிரிவையும் அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்று அதற்கு ஆரம்பவிழா செய்ய அடுத்து வரும் சென்ச ஒரு சரியான சந்தர்ப்பம் என்றும் அதில் காணப்பட்ட ஜாதியையும், மதத்தையும் தெரிவிக் காதீர்கள் என்றும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.

- 'குடிஅரசு' - தலையங்கம் - 30.11.1930

- விடுதலை நாளேடு, 8.4.18

புதன், 4 ஏப்ரல், 2018

தீண்டாமை

தந்தை பெரியார்



கனவான்களே!

தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதாக நீங்கள் யாரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின் றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக் காமலோ; எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமுகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சைத் தர்மத்தோடும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும், இம்மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? என்பதும் எனக்கு விளங்கவில்லை.

இம்மாதிரி ஒரு பெரிய மனித சமுகத்தை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா? என்று கேட்கின்றேன். சிலர் சுயராஜ்யம் வந்துவிட்டால், பூரண சுயேச்சை வந்துவிட்டால் இவைகள் ஒழிந்து போகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். சுயராஜ்யம் மட்டுமல்ல; தர்மராஜ்யமும், அவதார ராஜ்யமுமாகிய ராமராஜ்யமும், சத்திய சந்தன ராஜ்யமாகிய, அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில்தானே இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும், இவற்றைச் சரிவர பரிபாலித்து வந்ததாகவும், இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. எனவே மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வரு மானால் இந்தக் கொடுமைகள் குறையுமா? அதிகமாகுமா? என்று கேட்கின்றேன். ஆதலால் இக்குற்றங்கள் நமது நாட்டை விட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்கள் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்களதும் முக்கியமான கடமையேயாகும்.

கல்வி

இனி கல்வி என்பதைப் பற்றியும் சீர்திருத்தக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டியது அதிகமுண்டு. 'கல்' என்பதற்கு 'அறி' என்று பொருள். கல்வி என்றால் அறிவி, தெரிவி என்பதுதான் பொருளாகயிருக்க வேண்டும். எனவே, எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையும், மனிதத் தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும். மற்றவைகள் வித்தையாகும். இதற்கு உதாரணமாக, 'ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள்' வைக்கப்படும்

உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது. ஆதலால் உலக நிலையையும், அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத் தன்மையுமே முக்கியமாகக் கொண்டு கல்வி என்பது மனிதத் தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொறுத்த மானதல்ல. குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் தேசத்துரோகிகளுமாக, ஆக்கி தனது காலடியிலேயே அமுக்கி வைத்துக் கொண்டு நிரந்தரமாய் தன் இச்சைப்படி ஆட்சி புரிய வேண்டும் என்று கருதுகிற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகிறது. அது மாத்திரமல்லாமல் ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது.

எனவே இது அடியோடு மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கடவுள் பக்தி, மதபக்தி இராஜபக்தியாகிய அறிவுத்தடையும், அடிமைப் புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்விச் சாலைக்குள் தலை காட்டவே கூடாது. ஏனெனில் கடவுளிடத்திலும், மதத்தினிடத்திலும் அரசனிடத் திலும் பக்தியாய் இருக்கும்படி அவ்வவைகளே செய்து கொள்ள வேண்டுமே ஒழிய இதற்காக ஒரு பள்ளிக்கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத் தனத்தின் முதல் பாகமாகும். கல்வி கற்பிக்கும் வேலை இது சமயம் முக்கியமாய் பெண்களுக்கும், தீண்டாதார் ஆக்கப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமே செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கின்ற சமுகத்திற்கும், பாரம்பரியமாகவே கல்வி அறிவோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர்களுக்கும் பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்பவர் களுக்கும் இப்போது சிறிதும் கல்வி கற்பிக்க வேண்டியதே யில்லை. எனவே குறைந்தது ஒரு பதினைந்து வருஷத் திற்காவது உயர்தர கலாசாலைகளையும், எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களையும் காலி செய்து, கதவைச் சாத்தி மூடிவிட்டு முன் சொன்ன கல்வியும், அறிவும் இல்லாதவர்கள் என்கிற கூட்டத்திற்கே பள்ளிக் கூடம் வைத்துக் கற்பிக்க வேண்டும். யோக்கியமான அரசாங்கம் இதைத்தான் முதலில் செய்யும். உண்மையான சீர்திருத்தக்காரர்களும் கல்வித் துறையில் இதைத்தான் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

மூடப்பழக்க வழக்கங்களும் சடங்குகளும்

சீர்த்திருத்தக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு, நம்பிக்கைகளையும் ஒழிப்பது என்பது எவ்வளவு முக்கிய மானது என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்த விஷயமே இப்போது எங்கும் பேச்சாயிருக்கின்றது. இந்த மூடப்பழக்க வழக்கங்களால் பிழைக்கின்ற கூட்டம் தவிர மற்றவர்கள் எல்லோரும் இதன் அறியாமையை நன்றாய் உணர்ந்திருக் கின்றார்கள். ஆனாலும் அவர்களுடைய தைரியமற்ற தன்மையினால் அதை மாற்றிக்கொள்ள முடியாதவர்களா யிருக்கிறார்கள்.

கடவுள், மதம், பக்தி, வேதம் முதலியதுகள் மாத்திரம் அல்லாமல் உற்சவம், சுபம், அசுபம் என்பது சம்பந்தமான சடங்குகள், நோன்பு, விரதம், வேண்டுதல், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம், காணிக்கை ஆகியவைகள் போன்ற அநேக விஷயங்களில் நாம் நடந்துகொள்ளும் நடவடிக்கைகள் முழுவதும் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகள் ஆகியவைகளின் பாற்பட்டதேயாகும்.

இந்த மூடப்பழக்க வழக்க குருட்டு நம்பிக்கையும் செய்கையும் நம்முடைய அறிவு ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு முதலியவைகளை யெல்லாம் அடியோடு கெடுத்து விடுகின்றது. நல்ல காரியங்களுக்குப் பணமும், அறிவும் இல்லாமல் செய்து விடுகிறது. உலகத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றை யும் விட, இயற்கையிலேயே எல்லா வளமும் சவுகரியமும் பொருந்தியதான நமது நாடு மட்டும் உலகத்தில் உள்ள மற்றெல்லா நாடுகளையும்விட மிகவும் மோசமான நிலைமையில் என்றுமே விடுதலை அடையமுடியாத அடிமைத் தன்மையிலும், அறியாமையிலும் ஆழ்ந்து கிடப்பதற்குக் காரணமே இந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு நமது மக்கள் கண்மூடித்தனமாக அடிமையா யிருப்பதுதான்.

நமது நாட்டைவிட மிகவும் பின்ன ணியிலிருந்து மற்ற நாடுகள் இன்றைய தினம் எல்லா நாடுகளையும்விட முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அந்நாட்டார்கள் மூடப்பழக்க வழக்கங் களையும், குருட்டு நம்பிக்கைகளையும் அறவே ஒழித்து அவர்களது பகுத் தறிவுக்கு மதிப்பும் கொடுத்து ஆராய்ச்சிச் துறையில் அவர்களது அறிவையும் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் முயற்சியையும் செலவு செய்வதன் பலனே ஒழிய வேறில்லை.

நாம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றா யறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டு மானாலும் நடுங்குகின்றோம்; தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும், ஸ்மிருதியும், புராணமும் வந்து தடைக்கல்லாய் நிறுத்தி விடுகின்றது. இவைகளையெல்லாம்கூட ஒருவிதத்தில் சமாளித்து விடலாம். ஆனாலும் 'பெரியவர்கள் நடந்த வழி' என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான தடை பெரிய தடை யாய் விடுகின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும் தாட் சண்ணியமில்லாததும் தயங்காததுமான அழிவு வேலையே மிகவும் தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன்.

இந்த மூடநம்பிக்கை குருட்டுப் பக்தி என்கின்ற துறையில் நமது மக்கள் பணம் வருஷம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகின்றது. நமது தென்னாட்டில் மட்டும் வருஷத்தில் ஒரு லட்சம், இரண்டு லட்சம், அய்ந்து லட்சம், பத்து லட்சம், இருபது லட்சம் வரும்படியுள்ள கோயில்கள் பல இருக்கின்றன. வருஷத்தில் பத்து லட்சம், இருபது லட்சம், அய்ம்பது லட்சம் செலவு செய்து கூட்டங்கூடும் யாத்திரை ஸ்தலங்கள் நமது தேசத்தில் அநேகமிருக்கின்றன; இவைகள் யாவும் ஒருசில கூட்டத்தாரின் சுயநலத்திற்காக வஞ்சகக் கருத்துக் கொண்டு உண்டாக்கப்பட்ட மோசடியே அல்லாமல் வேறல்ல. இதற்காக எழுதி வைத்த புராணங்களும், ஆகமங்களும், சமயாச்சாரியார்கள் என்பவர்களின் சரித்திரங்களும், ஸ்தல மான்மியங்கள் தீர்த்த விசேஷங்கள் என்பதுகளும், புண்ணிய தினங்கள், திதி, திவசம் என்பதுகளும் சுயநலம் கொண்ட அயோக்கியர்களாலேயே பாமர மக்களை ஏமாற்றச் செய்த சூழ்ச்சியேயாகும்.

உதாரணமாக இரயில்வேக்காரர்களை எடுத்துக் கொள் ளுங்கள். அவர்களுக்கு நமது தெய்வங்கள் என்பவைகளி னிடத்திலாவது, புண்ணியஸ்தலம், தீர்த்தம், சிரார்த்தம், புண்ணியதின ஸ்நானம், தேர்த்திருவிழா, உற்சவம், தீபம், மேளம் என்பவைகளிடத்திலாவது கடுகளவு நம்பிக்கையா கிலும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது அவர்கள் உண்மையிலேயே நம்மைப்போன்ற அவ்வளவு முட்டாள்களா? ஒருக்காலமும் இல்லை என்றும் அல்லவென்றும் வெகு தைரியமாய்ச் சொல்லுவேன். ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்.

("துலா ஸ்நானத்திற்குப் போகவில்லையா?" "வைகுண்ட ஏகாதசிக்குப் போகவில்லையா?" "ஆடி அமாவாசைக்குத் தனுஷ்கோடிக்குப் போகவில்லையா?" "பிரயாசைக்குச் சிரார்த்தம் கொடுக்கப் போகவில்லையா?" "கார்த்திகை தீபத்திற்குத் திருவண்ணாமலைக்குப் போகவில்லையா?" "கும்பமேளாவுக்கு அரித்துவாரத்திற்குப் போகவில்லையா?" "மாமாங்கத்திற்குக் கும்பகோணம் போகவில்லையா?" "ஆருத்திராவுக்குச் சிதம்பரம் போகவில்லையா?") என்று விளம்பரம் செய்கின்றார்கள். கூலி கொடுத்துப் பத்திரிகை களில் போடச் செய்கிறார்கள். படம் எழுதி சுவர்களில் ஒட்டுகிறார்கள். நல்ல நல்ல பெண்களின் உருவத்தைப் படத்தில் எழுதி மக்களுக்குக் கவர்ச்சி உண்டாகும்படிச் செய்கின்றார்கள். இவைகளெல்லாம் எதற்காக? நாம் மோட்சமடைவதற்காகவா? நமக்குப் புண்ணியம் சம்பாதித் துக் கொடுப்பதற்காகவா? ஒருக்காலமும் இல்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.

ஆனால், மற்றெதற்கு? நம்மை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதற்காக நம்மிடத்தில் சற்றும் அன்பும் காதலும் இல்லாமல் தங்களை நன்றாய் அலங்கரித்துக் கொண்டு நம்முன் நின்று கண் ஜாடை காட்டும் கீழ்த்தர விபசாரிகளின் மனப் பான்மையை ஒத்ததான ஏமாற்றமல்லவா இது? இதன் மூலம் இரயில்வேக்காரர்களுக்குப் போகும் பணம் எவ்வளவு? இதுபோல் தானே புராணமும் ஆகமமும் ஸ்மிருதிகளும் எழுதியவர்கள் மனப்பான்மையும் இருந் திருக்கும் என்று எண்ண வேண்டியிருக்கின்றது. இல்லா விட்டால் நம்முடைய மோட்சத்தைப் பற்றி இந்த கூட்டத் தாருக்கு இவ்வளவு அக்கறை எதற்கு? எனவே, நமது மூடப்பழக்கம், குருட்டு நம்பிக்கையாகிய தன் மூலமாக நமது பணங்கள் எத்தனை கோடி பாழாய்ப் போகின்றது என்பதைப் பாருங்கள்.

சர்க்கார் நம்மிடம் அரசாட்சியின் பேரால் வசூலிக்கும் வரி என்னும் கொள்ளையை விட இந்த மூடநம்பிக்கையா லும், குருட்டுப் பக்தியாலும் செலவிடும் பணமும் இதன் பேரால் பலர் கொள்ளையடிக்கும் பணமும் குறைந்த தொகை கொண்டதெனக் கருதுகின்றீர்களா? சர்க்கார் அதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லையென்று கத்தும் பொருளாதாரத் திட்ட நிபுணர்கள் இந்தப்பால் வழிப்பறிக் கொள்ளைக்கு ஏதாவது கவலை கொள்ளுகின் றார்களா? இதைப்பற்றி பேசவாவது அனுமதிக்கின்றார்களா? இந்தப் பக்கம் சற்றுதலை வைத்தாவது படுக்கின்றார்களா? அனுகூலமான துறையில் ஒன்றும் செய்யாமலிருப்பதோடு இந்த ஒழுக்கமற்ற கொள்ளைக் கூட்டத்தாருக்குத் தரகர் களாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்துக் குழியில் தள்ளுவதற்கு உடந்தையாய்த் தானே இருக்கின்றார்கள்.

இந்தப் பணங்களும் நேரங்களும் கல்வியிலாவது ஆராய்ச்சித் துறையிலாவது செலவு செய்யப்பட்டிருக்குமா னால் நமது நாட்டில் 100-க்கு 93-ஆண்கள் தற்குறிகளாயி ருப்பார்களா? 1000-க்கு 999 பெண்கள் தற்குறிகளாயிருப் பார்களா? என்பதுகளை யோசித்துப் பாருங்கள். நமது நாடு தரித்திரமாயிருப்பதற்குக் காரணம் விளைவில்லையா? விளைவுக்கு விலையில்லையா? போதிய பணம் புழக்கம் இல்லையா? எல்லாப் பணமும் சாமிக்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் உற்சவத்திற்கும் சடங்குகட்கும் மூடநம்பிக் கைக்கும் சோம்பேறிகளுக்கும் ஏமாற்றகின்றவர்களுக்கும் அழுவதற்கே செலவாகிவிடுகின்றது. சூதாட்டத்தில் எப்படி சீட்டுமேஜை வாங்கினவனுக்கே எல்லாப் பணமும் போய் சேர்ந்து விடுகிறதோ அதுபோல் நம்மை மூடநம்பிக்கையில் அழுத்தி வைத்திருப்பவர்களுக்கே எல்லாப் பணமும் போய்ச் சேர்ந்துவிடுகின்றது.

எனவே, நமக்கு செல்வமே கல்வியோ, அறிவோ, ஆராய்ச்சியோ, வேண்டுமானால் இந்த மூடநம்பிக்கையை அடியோடு ஒழிக்கவேண்டும். இந்தத் துறையும் மற்றெல்லாத் துறைகளைவிட மிகுதியும் அழிவு வேலை செய்யப்பட வேண்டியதாகும். மற்றதை முடிவுரையில் சொல்லுகின்றேன்.

- 'குடிஅரசு' - சொற்பொழிவு - 02.12.1928

- விடுதலை நாளேடு, 1.4.18