வியாழன், 16 மே, 2019

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

தந்தை பெரியார்




இப்படிப்பட்ட தமிழ் மாணவர்களால் எப்படி வட மொழியிலேயே ஊறிய ரத்தம் பாய்ந்து கொண்டி ருக்கும் பார்ப்பனச் சிறுவர்களோடு போட்டி போட முடியும்? இதைத்தான் நான் ரெட்டியாரிடம்  எடுத்துச் சொன்னேன். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு கடைசியாக ரெட்டியார் கூறினார். (ரெட்டியார் கூறினார் என்றால் சர்க்கார் கூறியது என்று தான் அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்) "நாம் இந்துஸ்தான் யூனியனில் இருக்கிறோம். ஆதலால், இந்துதான் யூனியன் பாஷையாகிய இந்தியை படித்துத்தான் ஆகவேண்டும். கண்டிப்பாக படித்துத்தான் தீரவேண் டும்" என்று. இதற்குத்தான் "கட்டாயமில்லை" என்று அர்த்தமா என்று கேட்டுவிட்டு, இந்தியை எக்காரணம் கொண்டும் நம்மால் ஏற்க முடியாது என்று கூறி விட்டேன். எனவே, இந்தி நுழைப்பை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். அவர்கள் இந்தியைக் கைவிடுமாறு செய்யப்படும் வரைக்கும், அந்த அளவுக்கு நமது போராட்டத்தை நடத்தித்தான் ஆக வேண்டும்.

ஆச்சாரியாரின் நேர் தம்பி!


இன்று இந்தி எதிர்ப்பு பற்றி சர்க்கார் அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதைக் கூட்டத்திற்கு வரும்போதுதான் பார்க்க நேரிட்டது. அவ்வறிக்கையில் ரெட்டியார் கூறுகிறார். "மக்களுக்குப் பொறுப்பு வாய்ந்த பொதுஜன சர்க்கார், பொதுநலனை முன் னிட்டு ஏதாவதொன்றைக் கட்டாயமாக்கினாலும் அதை ஆட்சேபிக்கக் கூடாதென்பதை முதலில் குறிப் பிட விரும்புகிறேன்" என்று. ராஜகோபாலாச்சாரியார் கூட முன்பு இதையேதான் கூறினார். இவர் அவரது நேர் தம்பி. அதனால்தான் பழைய ரிக்கார்டைப் பார்த்து அப்படியே காப்பியடித்திருக்கிறார். "மக்களுக் குப் பொறுப்பு வாய்ந்த பொதுஜன சர்க்கார்" என்றால் அச்சர்க்கார் பொதுமக்கள் விருப்பப்படி நடக்க வேண் டுமா, அல்லது பொதுமக்கள் விருப்பத்திற்கு நேர் மாறாக நடக்க வேண்டுமா? ஓட்டுக் கொடுக்கும் வரை தான் இவர்கள் பொதுமக்கள் என்று கருதப்படு வார்களா? அல்லது ஓட்டுக் கொடுத்து விட்டதும் இவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று ரெட்டியார் நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

அறிவா? ஆணவமா?


"நாம் இவர்களுக்கு ஓட்டு கொடுத்தால் இவர்கள் நம் விருப்பத்தை ஈடேற்றி வைப்பார்கள்" என்றுதானே ஓட்டு கொடுத்தவர்கள் நினைத்திருப் பார்கள். அவர்களுடைய விருப்பப்படி நடப்பது தானே ஓட்டு பெற்றவர்களுக்கு ஒழுங்கும், கடமையும், அறிவுடை மையுமாகும். மக்களுக்குப் பொறுப்பு வாய்ந்த பொது ஜன சர்க்கார் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ரெட்டியார் சர்க்கார், பொதுமக்கள் விருப்பத்திற்கு மாறாக, இந்தியைத் திணித்துவிட்டு "பொதுநலனை முன்னிட்டு ஏதாவதொன்றை சர்க்கார் கட்டாயமாக்கினால் அதை ஆட்சேபிக்கக் கூடாது" என்று கூறுகிற தென்றால் அது அறிவுள்ள சர்க்காரா? ஆணவம் பிடித்த சர்க்காரா? மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் இம்மந்திரிமார்களின் யோக் கியதை இன்றுதான் எனக்குப் புரிந்தது. பொறுப்பு வாய்ந்த சர்க்காராம்! பொதுமக்கள் சர்க்காராம்! என் றாலும் மக்கள் விருப்பத்துக்கு விரோதமாக ஏதாவ தொன்றைக் கட்டாயமாக்கினால் அதை ஆட்சே பிக்கக் கூடாதாம். என்னே அநியாயம்!

ரெட்டியார் மேலும் குறிப்பிடுகிறார், "தென்னிந்தியா இந்திய யூனியனில் ஒரு பகுதியே ஆகும்" என்று தென்னிந்தியாவை இந்திய யூனிய னில் பிணைத்தது காங்கிரஸ்காரராகிய நீங்களா அல்லது திராவிடப் பொது மக்களா? "இந்துஸ்தானி இந்திய யூனி யனின் பொதுபாஷையாக அங்கீகரிக் கப்பட்டிருக்கிறது" என்று மேலும் கூறுகிறார். அங்கீகாரம் செய்தவர்கள் யார்? காங்கிரஸ்காரர்கள் தானே? காங் கிரஸ்காரர்கள் அங்கீகரித்து விட் டார்கள் என்றால், நாட்டுமக்கள் எல் லோருமே அங்கீகரித்து விட்டார்கள் என்று அர்த்தமா? அல்லது அதிகார மமதை இப்படி அறிக்கைவிடச் செய் கிறதா?

வெள்ளையனையும் மிஞ்சி விட்டார்கள்


"இந்தியாவின் பொதுப்பாஷையாகிய இந்துஸ் தானியை ஒரு குறைந்த பட்ச அளவுக்கேனும் கற்றுக் கொண்டிராவிடில் யூனியன் சர்க்காரில் தென்னிந்திய மக்கள் தங்களுக்கு நியாயமாக உரித்தான பங்கைப் பெற முடியாமற் போய்விடும்" என்று குறிப்பிட்டுள்ளார். வெள்ளையன்கூட இப்படிக் கூறவில்லையே! இங்கிலீஷ் கற்றாலொழிய நமக்கு நியாயமான உரிமை கிடைக்காதென்று. இஷ்டப்பட்டவர்களைத் தானே ஆங்கிலம் படிக்கச் செய்தான். அவனையும் மிஞ்சி விட்டார்களே இந்த "சுதந்திரவாதிகள்". அதுவும் ஒரு திராவிட மந்திரி இப்படிக் கூறுகிறாரே. இந்தி தெரியாத தால் நாளை நமது பேர் ஓட்டர் லிஸ்டிலிருந்துகூட எடுபட்டுவிடும் போல் இருக்கிறதே.

நாணயமும் தியாகமா?


இந்தி படிக்கப்படவேண்டிய அவசியத்தை இவ் வளவு வற்புறுத்திக் கூறிவிட்டு அடுத்தாற்போல் கூறுகிறார், "ஒரு மாணவர் தம் பெற்றோர்கள் விருப் பத்திற்கு எதிராகவோ அல்லது தம் விருப்பத்திற்கு எதிராகவோ இந்துஸ்தானியைப் படித்துத்தான் தீர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படவில்லை" என்று. இது முன்னுக்குப்பின் முரணாக இல்லையா? இந்தி இந்நாட்டுப் பொது மொழியாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. எனவே, அதை ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று முதலில் கூறியுள்ள அமைச்சர், பிறகு கட்டாயமில்லை என்று கூறி, மக்களை ஏமாற்றுவதற்காகத் தம் நாணயத்தைக் கூட கொஞ்சம் தியாகஞ் செய்கிறார்.

இன்னும் ஏதேதோ கூறிவிட்டுக் கடைசியாக, "மறியல் செய்யும் இடங்களில் கூட்டம் கூடாமல் மறியல் செய்பவர்களைத் தனியே விட்டுவிடுமாறு பொதுமக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மறியல் செய்பவர்களுக்கு அனுதாபிகளும், அவர் களுக்கு விரோதமாக இருப்பவர்களும் மறியல் செய்பவர்களுடன் கூடி நிற்பது அனுமதிக்கப்பட மாட்டாது" என்று இதைக் கூறியதற்காக கனம் முதல் மந்திரியார் ரெட்டியார் அவர்களை மனமார வாழ்த் துகிறேன். நீங்களும் வாழ்த்துக் கூறுங்கள்! ராமசாமி ரெட்டியார் வாழ்க! என்று வாழ்த்தொலி செய்யுங்கள்! (வாழ்த்தொலி அவ்விதமே செய்யப்பட்டது).

மேலும் கூறுகிறார், "மாணவர்களுக்கு எவ்வித தடை செய்வதையும் அனுமதிக்க முடியாது. அத்துமீறி நடப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்" என்று. நாளை போராட்டம் தொடங்குகிறது. சர்க்காரும் தம் இஷ்டம்போல் நடவடிக்கை எடுத்துக் கொள் ளட்டும். நீங்கள் மட்டும் ரெட்டியார் அறிக்கைப்படி, சர்க்கார் அறிக்கைப்படி அமைதியாக நடந்து கொள்ளுங்கள் "வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும்."

அய்தராபாத் குண்டர் ஒழிப்பு


அக்கறை நமக்கில்லையா?


இப்போது அய்தராபாத்தில் ஒரு பெரும் குழப்பம் நடைபெற்று வருகிறது. அக்குழப்பம் இந்திய சர்க்காருக்கும், நைஜாம் சர்க்காருக்கும் இடையேயுள்ள அபிப்பிராய பேதத்தால் ஏற்பட்டிருக்கும் குழப்பமாக இல்லை. அங்குள்ள சில குண்டர்களால் நடத்தப்பட்டு வரும் கட்டுப்பாடான காலித்தனத்தை நைஜாம் சர்க்காரால் அடக்க முடியவில்லை. சரியான சமயத்தில் உள்ளே புகுந்து காலித்தனத்தை அடக்காவிட்டால், அது எங்கு அய்தராபாத்தையும் தாண்டி இந்தியா விலும் பரவி விடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

அதனால் இந்திய சர்க்காருக்கும், கலகக்காரருக்கும் போராட்டம் நடைபெற இருக்கிறது. அப்போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக வளர்ந்து விடவும் கூடும். அது பெரிய யுத்தம் மாதிரியே நடக்க நேர்ந்தாலும் நேரிடலாம். அப்படிப்பட்ட நிலை நேரக்கூடுமானால் அதில் நாம் சம்பந்தப்படாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சமயத்தில் நமது போராட்டத்தை ஒரு வேளை நிறுத்த வேண்டி ஏற்படலாம். அதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நமது சார்பும் நம் மக்கள் சார்பும் கட்டாயம் இந்திய சர்க்கார் சார்பாகத்தான் இருக்கும்.

அய்தராபாத்தில் நடக்கும் போராட்டம் நவாப்பின் சர்க்கார் சார்பாக நடத்தப்படும் போராட்டமாக இல்லை. நவாப்பையும் சேர்த்தழிக்கக் கூடிய போராட்டமாகத்தான் அது காணப்படுகிறது. இதை திராவிட நாட்டு முஸ்லிம்கள் நன்கு மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். நைஜாம் எதிர்க்கப்படுகிறார். எனவே முஸ்லிம்கள் எதிர்க்கப்படுகிறார்கள் என்று கருதி யாரும் அய்தராபாத் போராட்டத்தை இந்து - முஸ்லிம் போராட்டமாக ஆக்கி இந்நாட்டில் குழப் பத்தை உண்டாக்கி விடக் கூடாது. அய்தராபாத்தைச் சுற்றி திராவிடர்களாகிய நாம்தான் இருக்கிறோம். தெற்கே நம் மாகாணமும், வடக்கே மைசூரும் தான் அய்தராபாத்தைச் சுற்றி இருக்கும் பிரதேசங்களாகும். எனவே நாம் தான் அய்தராபாத் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படக் கூடியவர்கள் ஆவோம். நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், அய்தராபாத் பிரச்சினையைக் காட்டி ஏதாவது விஷமத்தனத்தை கிளப்பிவிட்டுத்தான் நமது முயற்சியைக் கெடுக்க ஆட்சியாளர்கள் சூழ்ச்சி செய்வார்கள். அதற்கு நாம் ஆளாகி விடக்கூடாது, நாம் ஏமாந்து போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு கூறுகிறேன்.

இந்துஸ்தான் நைஜாம் சண்டையுமல்ல


இந்து - முஸ்லிம் சண்டையுமல்ல.


மறுபடியும் சொல்லுகிறேன். இது இந்து முஸ்லிம் சண்டையல்ல. இந்துஸ்தான் சர்க்கார் நைஜாம் சர்க்கார் சண்டையுமல்ல. பின் என்ன? குண்டர்களின் காலித் தனத்தை அடக்க, அவர்கள் காலித்தனத்திலிருந்து அய்தராபாத் மக்களை மீட்க, இந்திய சர்க்காரால் அய்தராபாத் குண்டர்களோடு நடத்தப்படும் போராட் டமாகத்தான் அது அமையும், நைஜாம் மன்னர் இந்திய சர்க்காருடன் ராஜியாவதைத் தடுத்து நிற்ப வர்கள் இக்குண்டர்கள்தான் என்று கூறப்படுகிறது. எனவே குண்டர்கள் மீது நடத்தப்படும் போராட்டத்தில் நாம் கட்டாயம் இந்திய சர்க்காரின் பக்கத்தில்தான் இருப்போம்.

அய்தராபாத் குண்டர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக நாம் இந்நாட்டு முஸ்லிம்களைச் சண்டைக்கு இழுக்கப் போவதில்லை இந்நாட்டு முஸ்லிம்கள் யாவரும் நம்மவர்கள், திராவிடர்கள், திராவிடக் கலாசாரத்தில் பற்றும், அனுதாபமும், நம்பிக்கையும் உடையவர்கள். அவர்கள் எல்லோரும் நம் நண்பர்கள், நண்பர் களாகவே நாம் எப்போதும் அவர்களைக் கருதி வருவோம். எனவே இந்நாட்டு முஸ்லிம்களும் நம்முடன் சேர்ந்து இந்திய சர்க்காரை ஆதரித்து குண்டர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முற்பட வேண்டியது அவசியம். அதுதான் நன்மையும் கூட. அய்தராபாத் குண்டர்கள் மீது போர் இன்றோ நாளையோ துவக்கப்படலாம். நாளை இந்திப் போர், நாளை மறுநாள் அய்தராபாத் போர் என்று நேரிட் டாலும் நேரிடலாம். இன்றைய அய்தராபாத் குழப்பத்தால் நைஜாமே உயிரை இழக்க நேர்ந்தாலும் நேரிடலாம், அவரைக் காப்பாற்றும் பொறுப்பு இந்திய சர்க்காருக்கு ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று ஒரு முக்கியமான பிரமுகர் என்னிடம் கூறினார். சமீபத்தில் சென்னையில் மறுபடி ஏ.ஆர்.பி. துவக்கப்படவும் கூடும். அப்படி நேர்ந்தால் நமது கலாசாரப் போராட்டத்தை ஒரு சிறிது காலம் ஒத்தி வைக்க நேரிட்டாலும் நேரிடலாம் என்பதைத் தவிர்த்து, வேறு எந்தக் காரணத்திற்காகவும் வெற்றி கிடைக் கும் வரை போராட்டம் நிறுத்தப்படமாட்டாது. வெற்றி கிடைக்க வேண்டுமானால், அது சீக்கிரத்திலேயே கிடைக்க வேண்டுமானால், நமக்கு அளவற்ற பொறுமை வேண்டும்; கட்டுப்பாடு வேண்டும்; சாந்தமும், சமாதான முமாக நாம் நடந்து கொள்ள வேண்டும். இவைதான் நம் வெற்றிக்கு அடிப்படை.

பொதுமக்கள் அனுமதி இல்லையாம்


மறியல் நடத்தும் தொண்டர்களுக்கு அரு காமையில் இருக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ரெட்டியார் கூறியிருக்கிறார். இதற்கு இரண்டு அர்த்தம் கொடுத்துக் கொள்ளலாம். ஒன்று "நாங்கள் தொண்டர்களை நன்றாக அடிக்கப் போகிறோம். அதில் ஏன் நீங்கள் பங்குகொள்ளப் போகிறீர்கள்" என்று கூறுவதாக இருக்கலாம். அல்லது "நாங்கள் அவர்களைச் சிறை செய்யப் போகிறோம், எனவே அருகில் இருந்து ஏன் கலகத்தை விளை விக்கப் போகிறீர்கள், எட்டி நில்லுங்கள்" என்று கூறுவதாக இருக்கலாம். நாம் நல்ல அர்த்தத்தையே எடுத்துக் கொள்வோம். அடிக்கமாட்டார்கள் அடி படாமலே பதவிக்கு வந்த காரணத்தால் என்றே கொள்வோம். எப்படியேயாயினும் மறியல் தொண் டர்கள் தவிர்த்து, மற்றவர்கள் அருகில் வராமல் இருப்பதுதான் நல்லது.

அடிபடவும் சிறைபுகவும் ஆசையா?


அவற்றைப் பார்ப்பதற்கு ஆசையா?


யாராவது தொண்டர்களாக வர, அடிவாங்க அல்லது சிறைப்பட ஆசைப்பட்டால் எங்கள் மூலமாக வாருங்கள். அடிபடவோ, சிறைப்படவோ வசதி செய்து கொடுக்கிறோம். அவர்களுக்கும் ஆசை தீர அடிக்க வசதி செய்து கொடுக்கிறோம். வேடிக்கை பார்க்க வேண்டுமானாலும் வாருங்கள். வந்தால் பேசாமல் அமைதியாக எட்டி நின்று கொண்டு பாருங்கள். எல்லா நடவடிக்கைகளும் பேசாத படக்காட்சியே போல் நடைபெறட்டும். ஏராளமான ராணுவத்தைத் தருவித்து வைத்துள்ளார்கள். அவர்களை ஏற்றிவர நிறைய வண்டிகளும் வைத்துக் கொண்டுள்ளார்கள். எனவே பயமில்லை. உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் போராட்டம் மிக வெற்றி கரமாகவே நடைபெறும்.

தனலட்சுமியாரைத் தடுத்தோம்


நாளை போராட்டம் துவங்குகிறது. தாய்மார்களும் அவ்வப்போது போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். நாளையே கூடத் தோழர் வேலாயுதம் மனைவியார் தனலட்சுமி அம்மையார் அவர்கள் மறியல் செய்யப் போகிறார்கள். அம்மையார் தனித்தல்ல. மற்ற தொண்டர்களோடு தானும் தன் வயிற்றிலுள்ள 7 மாதச் சிசுவும், தன் இடுப்பில் 3 வயதுக் குழந்தையும் ஆக மற்றும் இருவருடன் அம்மையார் மறியல் செய்ய முற்பட்டுள்ளார்கள். அவருக்குச் சமாதானம் சொல் லிப் பார்த்தோம். ஒப்புக் கொள்ளாததால் அவர்களின் வேண்டுகோளுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. எனவே, நாளை போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

வெற்றி உங்கள் கையில்தான்


எனவே போராட்டத்தின் வெற்றி இனி உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். ஊர்வலத்தில் கூட அதிகமான பேர்கள் கலந்து கொள்ளாதீர்கள். ஒரு வேளை அதையே சாக்காக வைத்துக் கொண்டு இயக்கத்தைத் தடை செய்யத் துணிவார்கள் சர்க்காரார். எனவே அமைதியும், கட்டுப்பாடும் உங்களிடையே நில வட்டும். குழந்தைகள் இது சமயம் ஆத்திரப்பட வேண்டியதில்லை அவசியமான போது அழைக் கிறோம். அப்போது வாருங்கள்; சென்னை முடிந்த பிறகு தான் வெளியூர்களிலிருந்து ஆட்களைத் தருவிக்க நினைக்கிறோம். அழைப்பு வரும்வரை பொறுமையோடு இருங்கள். கண்டிப்பாய்க் கலவரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். "இந்தப் போராட் டத்தைப் போன்ற ஒரு சாத்வீக போராட்டத்தை நான் இதுகாறும் கண்டதே இல்லை" என்று பார்ப்பனர்கள் தமக்குள்ளாகவே பேசிக் கொள்ளும் அளவுக்குப் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். பார்ப் பனர்களைப் பற்றிய எதிர்ப்புப் பேச்சு வராமல் பார்த் துக் கொள்ளுங்கள். வடநாட்டான், தென்னாட்டான் என்ற பேச்சே தலைதூக்கி நிற்கட்டும். வடநாட்டானை எதிர்ப்பதிலேயே, ஒழிப்பதிலேயே உங்கள் முழுக் கவனத்தையும் முயற்சியையும் செலுத்துங்கள். உங்கள் முயற்சியை வடநாட்டான் பக்கம் திருப்பி விட்டு விட்டுப் பார்ப்பனர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அவர்களுடைய தந்திரம் உங்களுக்குப் பதிலாகக் கிடைக்கும். வடநாட்டானும் சீக்கிரம் ஒழிய வழி பிறக்கும்.

(09.08.1948இல் பெத்துநாயக்கன் பேட்டையில்

நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில்

தந்தை பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 21.08.1948

- விடுதலை நாளேடு, 12.5.19

சனி, 4 மே, 2019

ஸ்ரீராம நவமி

28.04.1935 - குடிஅரசிலிருந்து...

ஸ்ரீராம நவமி உற்சவத்தில் தமிழ்நாட்டு மக்கள் கலந்துகொள்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்று இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

ஸ்ரீராம நவமி என்பது ராமன் பிறந்ததைக் கொண்டாடுவதாகும். ராமன் பிறவியைப் பற்றி நாம் இப்போது ஏதும் பேச வரவில்லை.

ராமன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் கதையின் யோக்கியதை என்ன? அவன் எப்படிப் பட்டவன்? அவனுக்கும் தமிழ் மக்களாகிய திராவிட மக்களுக்கும் இருந்து வந்த சம்பந்தம் என்ன? என்பவைகளைப் பற்றி தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

இவ்வாரம் 22ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிகை களில் காணப்படும் சேதிகளில் ஒன்று தோழர் ஜவகர்லால் நேரு ராமாயணத்தைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பாகும். அதில் ராமன் ஆரியன் என்றும், ராமாயணத்தில் வானரர் என்று சொல்லப்படுபவர்கள் திராவிட மக்கள் என்றும் எழுதி இருக்கிறார்.

ராமன் திராவிடப் பெண்ணாகிய தாடகையை பெண் என்று கூட பாராமல் கொன்றவன். ராவணன் தங்கையாகிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சூர்ப்பநகையை மூக்கையும், காதையும் அறுக்கச் செய்த யோக்கியன்.

ராவணனைக் கொல்ல சதி செய்ததில் ராவணன் தம்பியையும், வாலி தம்பியையும் சுவாதீனம் செய்து அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, உளவறிந்து ராவணனைக் கொன்றவன். இதனால் ராவணன், ராட்சசனானான்.  அவன் தம்பி விபூஷணன் ஆழ்வாரானான்.

அது போலவே வாலி வானரமானான்; தம்பி சுக்ரீவன் சுக்ரீவ ஆழ்வாரானான்.

குரங்காகிய அனுமார் சிரஞ்சீவியாகவும், ஆரியர் வணங்கும் தெய்வமாகவும் ஆனான். ராமன் ஆரியன் என்றும், ராவணன் திராவிட மன் னன் என்றும், திராவிட மக்களைத்தான் வானரர்கள், குரங்குகள் என்றும் பெயர் வைத்து ஆரியர்கள் ராமாயண கதைகள் எழுதி இருக்கிறார்கள் என்றும், நூற்றுக்கணக்கான பாடப் புத்தகங்கள் (இந்து தேச சரித்திர முதல்) பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட வைகள் இன்னும் பள்ளிக் கூடங்களில் பாடமாக இருக்கின்றன.

இந்த நிலையில் ஸ்ரீராம நவமி பண்டிகையை திராவிட மக்கள் -  ஆரியரல்லாதவர்கள் கொண்டாடுவது என்பது சுயமரியாதை யற்ற மானங் கெட்டத்தனமா அல்லவா? என்று கேட்கின்றோம்.

இந்துக்களுடைய ஒவ்வொரு பண்டிகை என்பதும் பார்ப்பனப் பிரச்சாரமேயாகும்.

இம்மாதிரி பிரச்சாரங்களே தான், இம்மாதிரி பண்டிகைகளைக் கொண்டாடுவதே தான் இன்று பார்ப்பன ஆதிக்கத்துக்கு முக்கியக் காரணங்களாய் இருந்து வருகின்றன. இந்த காரணங்களே தான் பார்ப்பனர்களுக்கு ஓட்டு கிடைக்க வும் சாதகமாய் இருக்கின்றன.

எலக்ஷனுக்காக வெளியிட்ட சுவரொட்டி விளம்பரத்தில்கூட அனுமாரைப் போட்டதும், எலக்ஷன் கூட்டங்களில் உதாரணங்கள் மூலம் புராணப் பிரச்சாரங்கள் நடத்தினதும், இன்றும் நாளையும் பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பனக் கூலிப்பத்திரிகைகளும், புராணப் பிரச்சாரங்கள் செய்வதும் எல்லாம் தமிழ் மக்கள் ஸ்தாபனங்கள் சுயமரியாதை இழந்து பார்ப்பனர்களுக்கும், விபூ ஷணர், சுக்ரீவன், அனுமான் போன்ற பார்ப்பனரடி மைகளுக்கும், ஓட்டுப் போடவுமே தானே ஒழிய வேறில்லை. ஆகையால் தமிழ் மக்களே ஸ்ரீராம நவமி கொண்டாடுகிறீர்களே? வெட்க மில்லையா?

 

தந்தை பெரியார்

பொன்மொழிகள்

நமக்கிருந்த சக்தி அதிகமாகும். உலகத்திலிருக்கின்ற மற்ற மக்களுக்கெல்லாம் இருக்கின்ற சக்தியைவிடத் தமிழனுக்கு இருக்கிற சக்தி அதிகமேயாகும். ஆனால், பழைமை எண்ணத்தால் அதன் பயனை அவன் அடைய முடியவில்லை. எப்படி வேக மாக ஓடக்கூடிய குதிரையைப் பின்பக்கமாகக் கட்டினால் ஓடாதோ அதுபோல் நாம் பின் னோக்கியே பழைமை. முன்னோர் என்று போவதால் சக்தி பயன்படாமலேயே போகிறது.

- விடுதலை நாளேடு, 26.4.19

ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்துவிடுமா? - ஓர் சமதர்மி

21.04.1935 - குடிஅரசிலிருந்து....


இந்துக்களுக்குள் இன்றைய பழக்கங்களில் உள்ள ஜாதிப் பிரிவுகளுக்கு இந்து மதத்தில் ஏதாவது ஆதாரமிருக்கின்றதா என்று பார்ப் போமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து வேதத்தில் பிராமணன் பிராமணரல் லாதார் என்கின்ற ஜாதிகள் தான் காணப் படுகின்றது. ரிக் வேதத்தில் ஓரிடத்தில் நான்கு ஜாதிகள் கூறப்பட்டிருப்பதாகவும், அதுவும் இடையே பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்ட தென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அந்த இரண்டு ஜாதியும் எப்படித் தெரிகின்றது என்று பார்ப்போமேயானால் பிராமணர்கள் இந்திரன் முதலிய தேவர் களிடம் செய்யும் பிரார்த்தனைகளில் தஸ்யூக் கள் என்ற ஒரு சமுகம் அந்த பிராமணர்களுக்கு விரோதமாய் இருந்து அவர்களைத் துன்பப் படுத்துவதாகவும், அவர்கள் பிராமணர் களுடைய சுகபோகங்களுக்கு விரோதமாய் இருப்பதாகவும், ஆதலால் அந்த தஸ்யூக்களை அழிக்க வேண்டுமென்றும் பிரார்த்திப்பதே பெரிதும் அந்தப் பிரார்த்தனையில் இருந்து வருவதால் அப்பிரார்த்தனைகளே வேதத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் வேத காலத்திலும், வேத ஆதாரத்திலும் இந்தியாவில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்கின்ற இரண்டு ஜாதிகள் மாத்திரமே இருந்ததாக விளங்குகின்றது.

ஆகவே, ஜாதிப் பிரிவுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமானால் அவை மனுதர்ம சாஸ்திரம், பராசர் ஸ்மிருதி ஆகிய பார்ப்பனர்களால் செய்யப்பட்ட ஆதாரங் களே முற்பட்டவை எண்ணலாம்.

அவற்றிலும்கூட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் அதாவது குரு, அரசன், முதலாளி, தொழிலாளி எனப்பட்ட நான்கு ஜாதிகள்தான் காணப்படுகின்றனவே தவிர, இன்றுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கு மனு தர்ம சாஸ்திரத்திலும் ஸ்மிருதியிலும் ஆதாரங்கள் காணக்கிடைப்பதில்லை.

அவைகளில் வேறு சில ஜாதிப் பிரிவுகளும் காணப்படுகின்றனவே என்று சொல்லப் படுமானால் அவை முற்கூறிய பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்கின்றதான 4 பிரிவுகளும் கலந்து போகாமல் இருப்பதற்கும், கட்டுப்பாடாக இருப்பதற்கும், கலப்படம் ஏற்படுத்து வதையும், ஏற்படுவதையும் மக்கள் வெறுக்கவுமான பந்தோபஸ்துக்காக கலப் படத்தினால் பிறந்த மக்களுக்கு பலவகை இழிவான பெயர்கள் கற்பிக்க ஏற்படுத்தின முறையில் வேறு சில ஜாதிப் பெயர்கள் காணப்படலாம்.

ஆனால், அவற்றிற்கும் இன்றுள்ள ஜாதிப் பிரிவுகளுக்கும் சம்பந்த மில்லை. இது தவிர வேறு ஜாதிகள் இருப்பதாகக் காணப்படு மானால் அவை தேசம், நிலம், பாஷை ஆகிய வைகளைக் குறிக்கும் முறையில் இருக்கலாமே ஒழிய பிறவியைக் குறிக்கும் முறையில் காணப்படுவது அதிசயமாகவே இருக்கும்.

மற்றபடி இன்று பிரத்தியட்சத்தில் பழக்கத்தில் உள்ள ஜாதி பாகுபாடுகளுக்கு எங்காவது ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்போமானால் அவை புராணங்களில் தான் காணப் படுகின்றன.

புராணங்கள் என்று சொல்லப்பட்டவைகள் பெரிதும் கற்பனைகள் என்பதும், அவை ஏற்படுத்தப்பட்டதின் கருத்தெல் லாம் பார்ப்பனர் களுக்கு உயர்வைக் கற்பிக்கவும், அவர்களுக்கு மற்ற மக்கள் மீது எப்பொழுதும் ஆதிக்கம் இருந்து வரவும், பொருளாதாரத் துறையில் பார்ப்பனர்களுக்கு பாடுபடாமல் செல்வம் வந்து சேரவுமான மார்க்கம் ஏற்படவும் கருத்துக் கொண்டேயாகும்.

இந்தக் கருத்துக்கள் புராணக் கற்பனையில் மாத்திரமல்லாமல் ஸ்மிருதிகள் ஏற்படுத்து வதிலும் இருந்திருக்கின்றன என்பதற்கு மனு நூலில் ஏராளமான அத்தாட்சிகள் இருக் கின்றன.

உதாரணமாக பிராமணன் கொலைக் குற்றம் செய்தால் அவன் தலை மயிரை மாத்திரம் சிரைத்து விட வேண்டுமே ஒழிய, வேறு தண்டனை எதுவும் விதிக்கக் கூடாது. ஒரு பிராமணன் ஒரு சூத்திரனைக் கொன்று விட்டால் அதற்கு ஒரு தவளையையோ, ஒரு காகத்தையோ கொன்று விட்டதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்தால் போதும்.

பிராமணன் ஞானியாய் இருந்தாலும், மூடனாய் இருந்தாலும் அவன் மேலான தெய்வத்திற்கு கொப்பாவான். பிராமணன் அயோக்கியனாய் இருந்தாலும் அவன் பூஜிக்கப்பட வேண்டியவன்.

எவ்வளவு துராசாரமுள்ள பிராமணனாய் இருந்தாலும் அவன் அரசனுக்குச் சமமானவ னுடன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளை யெல்லாம் செய்யலாம்.

சூத்திரன் விலை கொடுத்து வாங்கப்பட்ட வகையானாலும், அவன் எப்பொழுதும் பிராமணனுக்கு அடிமையாகையால் அவர் களிடம் பிராமணர் கூலி கொடாமலே வேலை வாங்கலாம். ஏனெனில் கடவுள் பிராமணனுக்கு வேலை செய்வதற்காகவே சூத்திரனை படைத்திருக்கிறார்.

சூத்திரனுடைய பொருள்களை பிராம ணன் தைரியமாகப் பற்றிக் கொள்ளலாம். சூத்திரன் அடிமையாதலால் அடிமைக்கு சொத்து வைத்திருக்க பாத்தியமில்லை.

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை துண்டித்துவிட வேண்டும்.

சூத்திரன் பிராமணனுடைய பெயரை யாவது, ஜாதியையாவது குற்றம் சொன்னால் அவன் வாயில் 10 விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை செலுத்த வேண்டும். சூத்திரன் பிராமணனை அடிக்க கை தூக்கினால் கையை வெட்டிவிட வேண்டும்.

“கால் தூக்கினால் காலை வெட்டிவிட வேண்டும்”

சூத்திரன் பிராமணர்களுக்கு அவர்களு டைய கடமையை போதிக்க வந்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றி விட வேண்டும்.

-தொடரும்...

-  விடுதலை நாளேடு, 26.4.19