வெள்ளி, 14 அக்டோபர், 2022

பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்!

 


ஆகஸ்ட் 1-15,2021

உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் – பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஒரு அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. இந்த அறிவை மனிதன் மனிதனிடம் நடந்து கொள்ளும் அன்புக்கும், உதவிக்கும் பயன்படுத்தாமல், இன்னொருவனுக்குக் கேடு செய்வதிலும், திருடுவதிலும், வஞ்சிப்பதிலும் செலுத்தக் கூடாது என்றுதான் சொல்லுகிறோம். ஏன், மேலும் மேலும் வற்புறுத்துகிறோம் என்றால் மனிதன் இந்தக் கேவலமான நிலைமையிலிருந்து மீண்டு, மனித சமுதாயத்திலே மனிதனாக மனிதனுக்கு மனிதன் தோழனாக வாழவேண்டுமென்றே ஆசைப்படுகிறதனால்தான். ஆகையால் நாங்கள் சொல்வது எல்லாம் பழைய மூடப் பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டொழியுங்கள். தங்கள் தங்கள் புத்தியைக் கொண்டு, அறிவைக் கொண்டு சுதந்திரமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கூறுகிறோம். எந்தக் கடவுளாலும், எந்த சாஸ்திரத்தினாலும், எந்த மதத்தினாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கமும், நேர்மையும் தானாக வந்துவிடாது. நான் அவற்றைக் குறை கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே அவை எல்லாம் நம் சமுதாயத்திற்கோ, நம் மக்களுக்கோ உகந்ததில்லை. அவ்வளவும் புரட்டும், பித்தலாட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அதைப் பின்பற்றக் கூடியவர்கள் எப்படி ஒழுங்காக வாழ முடியும்?

இதைப்போல்தான் இன்றைய அரசாங்கமும் இருக்கிறது. சும்மா சொல்லவில்லை. எனக்கு வயது 72 என்னுடைய 60 வருட அனுபவத்தைக் கொண்டு தான் சொல்லுகிறேன். ஆகவே, இன்றைய நிலைமையில் எந்த மனிதனும் யோக்கியமாக நடந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த ஸ்தானத்திலும், எந்தப் பதவியிலும் எவன் இருந்தாலும் லஞ்சம் வாங்கித்தான் தீரவேண்டுமென்ற மனப்பான்மை பரவி விட்டது.

இன்றைய நிலையில் நான் கூட ஒரு பதவியில் இருந்தால் வாங்கித்தான் ஆக வேண்டும். என் வரைக்கும் 100, 1,000 கணக்குக்கு ஆசையிருக்காது. காரணம்? இது எனக்கு மட்டமானது. ஆனால், லட்சக்கணக்கில் ரூபாய் வருமானால் நானும் ஒரு கை பார்க்கத்தான் செய்வேன். ஏன்? இதுதான் இன்றைய தின மக்கள் இயற்கை நிலைமை, மூடக் கொள்கை. ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், சர்க்காருக்காக, பாவ புண்ணியத்துக்காக நடந்து கொள்ள வேண்டும், சமுதாயத்திற்காக நடந்து கொள்ள வேண்டுமென்பதும் இனிமேல் முடியாத காரியம். நாம், இன்னொருவனுக்கு மோசம் செய்தால் அவனுடைய வயிறு எரிகிற மாதிரிதான் நமக்கும் இன்னொருவன் மோசம் செய்தால் வயிறு எரியும் என்று நினைக்க வேண்டும். ஆகவே, நாளுக்கு நாள் திருந்தி ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமானால் நாம் நல்ல காரியங்கள் செய்யாவிட்டாலும், கெட்ட காரியங்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற தன்மை ஏற்படத்தக்க காரியங்கள் கண்டுபிடித்து அதற்கேற்ற காரியம் செய்ய வேண்டும். அதுதான் இனி மனிதத் தொண்டாக மாற வேண்டும். ஆகவே, இனியும் மக்கள் தொட்டதற்கெல்லாம் சட்டம் மீறுவதோ, இல்லாமல் அதிகாரிகளையும் சர்க்காரையும் எதற்கும் மீறும் உணர்ச்சி இல்லாமல், வரவேண்டுமென்று சொல்லுகிறேன். எதற்கும் பயந்து அல்ல! இதுதான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் அமைதிக்கும், நல்லாட்சிக்கும் பயனளிப்பதாகும். 

(24.8.1951 அன்று கள்ளக்குறிச்சி அருகே கிராமம் என்னும் ஊரில் வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போர் தோழர்களுக்கு பாராட்டுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

வியாழன், 13 அக்டோபர், 2022

கடவுளின் நடவடிக்கை

 


      ஜுலை 16-31,2021

தந்தை பெரியார்

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுள்  ஒருவர் இருக்கிறார். அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப் படுமானால், அவரை நடுநிலைமை யுடையவரென்று சொல்லுவதை விட, பாரபக்ஷம்  (ஒரு சார்பு) உடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.

அவரைக் கருணை உடையவர் என்று சொல்வதை விட, கருணையற்றவர் என்று சொல்வதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ (நடைமுறை) உதாரணங்கள் இருக்கின்றன.

அவரை நீதிவான் என்று சொல்வதை விட, அநீதிவான் என்று சொல்வதற்கே தாராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட, அவரால், அதிக தீமையே ஏற்படுகின்றது, என்று  சொல்வதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்ட யோக்கியர் என்று சொல்வதை விட, அயோக்கியர் என்று சொல்வதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கின்றாரென்பதை விட, தீமையே செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களிடம்  தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவரென்று சொல்வதை விட, அவர் காட்டுமிராண்டி என்று சொல்வதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதை விட, அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேகக் காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்து வதை விட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே!  ஆராய்ந்து பாருங்கள்!

– ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது. (‘குடிஅரசு’ 9.10.1930).

* * *

தேவஸ்தானச் செல்வங்களை

பொது நலத்திற்குப் பயன்படுத்தலாமே!

திரு.வி.வி.இராமசாமி அவர்கள் சுய மரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியேயாகும்.

நான், சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4, 5 வருஷம் தேவஸ்தானக் கமிட்டியில் பிரசிடென்டாகவும், வைஸ் பிரசிடென்டாகவும் இருந்தேன். தேவஸ்தானச் செல்வங்களைப் பொதுநலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால் அது நல்ல வேலை தான். அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தானச் சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால், அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே, நான் ராஜினாமா செய்தேன். எனது சகபாடிகள் எனது ராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும், ஆனால், பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன்னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப் படுத்தலாம் என்பதும் ஓர் அளவுக்கு உண்மைதான். இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடென்ட் திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கிறார். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற்சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக்காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.

ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும், கோவில்களின் பேராலுள்ள செல்வங்களையெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தமில்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை. ஆகையால், இந்தவித அபிப்பிராயமுள்ள திரு.இராமசாமியைத் தெரிந்தெடுத்தவர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத்திருப்பார்கள். ஏனென்றால், திரு.வி.வி.இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால், அப்படிப் பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு.இராமசாமி தனது கடமையைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

– 6.7.1931, விருதுநகரில் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு (‘குடிஅரசு’ 19.7.1931).

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்! - தந்தை பெரியார் விளக்குகிறார்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

பிள்ளை-யார்?

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

மதம் என்றால் என்ன, எது உண்மை மதம்

இது என்ன நியாயம்?

எனது விண்ணப்பம்