ஞாயிறு, 16 ஜூன், 2024

பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துகள் கொண்டதே இராமாயணம் – தந்தை பெரியார்




பெரியார் பேசுகிறார்! 

நானும் என்னுடைய கழகமும் கடந்த முப்பது ஆண்டுகளாக திராவிட மக்களின் நன்மைக்கெனவே பாடு
பட்டு வருகிறோம். நான் எதையும் எடுத்துக் கூறுகிறபொழுது பிறருடைய சலுகையை எதிர்பார்த்தோ, புகழை எதிர்பார்த்தோ கூறுவதில்லை. என்னுடைய மனதிற்கு நன்மை என்று தோன்றுகிற உண்மைகள் வேறு யாருக்கும் துன்பத்தை உண்டாக்குவதாகவோ, மனத்துயரை விளைவிக்கக் கூடியதாகவோ இருந்தாலும் நான் அவற்றை எல்லாம் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில், நான் அவர்களுடைய தயவை எதிர்பார்ப்பவனல்ல. அவர்களிடம் நான் நல்லவன் என்றோ அவர்களுக்கு நல்ல பிள்ளை என்றோ பெயரெடுத்து அதனால் எந்தப் பதவிக்கும், உத்தியோகத்திற்கும் போக வேண்டிய எண்ணம் எனக்குக் கிடையாது. இன்னமும் கூற வேண்டுமானால், நான் மற்றவர்களிடமிருந்து புகழ் வார்த்தைகள் கூட விரும்பவில்லை. ஆனால், இவ்வித முறையில் மற்ற கட்சிக்காரர்கள் இல்லாததால்தான் அவர்கள் உண்மையை எடுத்துக் கூற முடியாத நிலையில் உள்ளனர். அப்படி என்னைப் போல் அவர்களும் எந்த உண்மையையும் எடுத்துக் கூறினால், அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது. பார்ப்பனரை ஒழிக்க வேண்டும். சாஸ்திர புராணத்தை எரிக்க வேண்டுமென்று கூறிக் கொண்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டால் ஒருவராவது ஓட்டுப் போட மாட்டார்கள்.

ஆகவே, அவர்களிடம் ஓட்டுக் கேட்க வேண்டியதற்காகவாவது பார்ப்பனரை ஆதரித்தும், நான் செய்யும் கிளர்ச்சிக்கும், போராட்டங்களுக்கும் எதிராக சிலர் வேலைகள் செய்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் என்னுடைய கழகத்தின் பெயரைக் கூறிக் கொண்டு தேர்தலில் கலந்து கொள்வதில்லை என்றும், ஓட்டுப் பெற்று பாராளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் செல்வதில்லை என்றும் தீர்மானித்துள்ளோம். அப்படி இதுவரை சென்ற எந்தக் கட்சிக்காரர்களாவது நல்ல காரியத்தைச் சாதித்துள்ளனரா? என்பதைப் பார்க்கும் பொழுது, சென்றவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்கென்று பணத்தையும், புகழையும், பெருமையையும் சம்பாதித்தார்களே தவிர, வேறு பொது மக்களுக்கென்று நன்மை ஒன்றும் செய்ததாகக் கூற முடியாது. தன்னுடைய வியாபாரத்துக்கும், கான்ட்ராக்ட் தொழிலுக்கும் லைசென்ஸ்_- பர்மிட் இவை வாங்கவும் மற்றும் பிறருக்கு வேண்டியவைகளைச் செய்கிறேன் என்று கூட அவர்களிடம் லஞ்சம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் வழிகள் இருக்கின்றதே தவிர, வேறு இவர்களால் எதையும் சாதிக்க முடியாத அளவில் அமைந்துள்ளது. அப்படி ஏதாவது ஓரிருவர் பெரிய காரியத்தைச் சாதித்தார்கள் என்றால் தங்கள் தங்கள் ஜாதிக்கு மட்டும் வேண்டிய ஓரிரு சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.

இப்படி இவர்கள் தங்கள் நலனுக்கென்று மக்களிடம் எதையும் மனம் கூசாது அன்பு வார்த்தைகளால் ஆசையைப் புகட்டி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கிறது. அவர்கள் கூறுவதுதான் உண்மை, அதை அப்படியே நம்பினால் உடனே பலன் கிட்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்.
இதைப் போன்றுதான் ஆதி முதற்கொண்டே தாங்கள் கூறியவைகளையே நம்ப வேண்டும், ஆராய்ந்து அறியக் கூடாது என்று கூறி, இதுவரை மூட நம்பிக்கையிலேயே ஆழ்த்தி விட்டனர். இன்னமும் ரிஷிகளும், தேவர்களும் கூறியதுதான் சாஸ்திரம், அவர்கள் எழுதியதுதான் புராணங்கள், அவர்களால் உண்டாக்கப்பட்டதுதான் மதம், இதை நம்பினால் தான் மோட்சம் கிடைக்கும், அறிவைக் கொண்டு ஆராய்ந்து எதிர்த்துக் கேட்டால் நரகம் சம்பவிக்கும்” என்று கூறி வந்துள்ளனர்.

ஆனால், நாங்கள் கூறுவதோ எதையும் கூறியவுடன் நம்பிவிடக் கூடாது. ஒவ்வொன்றையும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பதுதான் மனிதப் பண்புக்கு ஏற்றது. அதன்படி அறிவுக்கு ஏற்றவைகளின் படி நடக்கக் கோருகிறோம். இவ்விதமான நோக்கங்களைக் கொண்டதால்தான் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த மூட நம்பிக்கைகள் இன்று வெளியாகின்றன. பார்ப்பனர்களின் மதம், சாஸ்திரம், புராணம் இவற்றின் அர்த்தமற்ற கொள்கையும் அநாகரிகப் பழக்க வழக்கங்களும் அம்பலமாகின்றன.

பொதுவாக இராமாயணத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் இதுவரை மக்கள் உண்மையாகவே அதை நடந்த கதை யென்றும், கடவுள் அவதாரம் எடுத்த சரித்திரம் என்றும் நம்பி வந்துள்ளனர். ஆனால், அது எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் – அதில் குறித்துள்ளவற்றைக் கொண்டே பார்த்தால் – முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது.

இராமாயணம் சுமார் 13 லட்ச ஆண்டுகள் கொண்ட திரேதாயுகத்தில் நடந்த கதை என்று கூறப்படுகிறது. ஆனால், 13 லட்சம் ஆண்டுகள் கொண்ட அந்த யுகத்தில் 50 லட்சம் ஆண்டுகள் ஆயுளாகக் கொண்ட இராவணன் வசித்தான் என்று கூறப்படுகிறது. நான்கு யுகங்களையும் சேர்த்தால் கூட 50 லட்சம் ஆண்டுகள் கிடைக்காது. அப்படி இருக்க திரேதா யுகத்திற்கு மட்டும் 50 லட்சம் ஆண்டுகள் எங்கிருந்து வந்தது?

அடுத்து இராமாயணம் எழுதப்பட்டது திரேதாயுகத்தில். அதாவது, 25 லட்சம் ஆண்டு-களுக்கு முன் என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இராமாயணத்திலேயே 2,500 ஆண்டுகளுக்கு உட்பட்டு வசித்த புத்தரைப் பற்றிய விஷயங்கள் வருகின்றன. புத்த பிட்சுகளைப் பற்றியும், புத்த ஆலயம் என்ற சொல்லும் வருகின்றன. பாண்டிய அரசர்களைப் பற்றியும், சோழ நாட்டினைப் பற்றியும் வருகின்றன. இப்படி 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் 2,500 ஆண்டுக்குட்பட்ட விஷயங்கள் வருவதற்கு என்ன பொருத்தமுள்ளது? ஆகவே, இந்நூல் பார்ப்பனர்கள் இந்நாட்டிற்கு வந்த பிறகுதான் இதை எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதன்றியும், இக்கதையை ஒருவன் தன் சொந்த மூளையைக் கொண்டு கற்பனை செய்து எழுதப்பட்டதுமல்ல, இப்பொழுது ஒருவர் சினிமாக் கதையை மற்றவர் காப்பியடித்து எழுதி விட்டனர் என்று சண்டை போட்டுக் கொள்வதைப் போல் அப்பொழுதும் வைஷ்ணவர் கதையை சைவர் காப்பி யடிப்பதும் சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து எழுதும் தொழிலில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஆகவே, கந்தபுராணம் என்ற சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து அதைத் தழுவியே இராமாயணத்தை எழுதி இருக்கின்றனர். கந்தபுராணம் முந்திய நூல் என்பதற்கும் இராமாயணம் பிந்திய நூல் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. கந்தபுராணத்தின் குறிப்புகள் இராமாயணத்தில் உள்ளன. இராமாயணத்தைப் பற்றி கந்தபுராணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
இவை, இரண்டிலும் ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக 50க்கு மேற்பட்ட விஷயங்கள் தென்படுகின்றன.

ஆரம்பம் முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு இறப்பு
வரையிலும், அவற்றில் கூறப்பட்ட ஒப்பாரி முதற்கொண்டு ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக இருக்கிறது. இதை நன்றாக உணர வேண்டுமானால் ஆர்.பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘வேலும் வில்லும்’ என்ற ஆராய்ச்சி நூலில் தெளிவுறக் காணலாம்.
இப்படியாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் இதுபோன்ற அர்த்தமற்ற செய்திகளும், பொருத்தமற்ற விஷயங்களும் தென்படுவது மல்லாமல், இராமன் கடவுள் அல்ல; சீதை பத்தினி அல்ல; தசரதன் யோக்கியன் அல்ல; ரிஷிகள் காமப் பித்தர்கள், யாகங்கள் என்பன ஆரியரின் ஆபாச நாகரிகங்களை விளக்கும் சம்பவங்கள் என்பன போன்ற உண்மைகள் விளங்கும்.

(4.3.1955 அன்று விருதுநகர் பொதுக்கூட்டத்தில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
‘விடுதலை’ 21.3.1955

சமூக மாற்றம் இளைஞர்களின் வேகத்தில் விவேகம் வேண்டும் – தந்தை பெரியார்




நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களா லேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெறும் வார்த்தை களல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை.

ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது. உலகப்பற்று, சுயநலம், பேராசை, மனோராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும். “இளங்கன்று பயமறியா”தென்ற பழமொழிக்கொப்ப அவர் களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடையானது கிடையாது. அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்று வதைப் பயமின்றி சடுதியில் பற்றுவதாகும், பற்றி விட்டாலோ தங்குதடைகளின்றி படரக்கூடிய வேகமுடையதாகும். இந்தக் காரணங்களால் வாலிபர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உதவக்கூடியவர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது.

பெரியவர்களிடம் காண முடியாது
எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானாலும், சுய நலமற்ற தன்மையும், பயமற்ற தன்மையும், எதையும் தியாகம் செய்யும் உள்ளமும் வேண்டியதவசியமாகும். இந்தக் குணங்கள் வாலிபர்களிடமே தான் பெரிதும் காண முடியுமேயொழிய உலக வாழ்க்கையிலீடுபட்ட பெரியவர்களென்பவர்களிடத்தில் காணமுடியாது.

“நான் செத்தால் என் பெண்டு, பிள்ளைகளென்ன வாவது?” எண்கிற யெண்ணமாகிய ஒரு பெரும் விஷமே நமது மக்களின் பொதுநல உணர்ச்சியைக் கொன்று கொண்டு வருகின்றது. பொதுநல எண்ணம் ஏற்படாமல் செய்து வருகின்றது. நமது பெண்களும், அவர்களது ஆடவர்களை எவ்வித பொதுநல வேலைக்கும் லாயக்கில்லாமல் செய்து விடுகின்றார்கள். எப்படியென்றால் ‘அய்யோ! என்கணவா!! என்தெய்வமே!!! நீ செத்துப் போனால் நான் எப்படிப் பிழைப்பேன்? இந்தப் பிள்ளை, குட்டிகளை எப்படிக் காப் பாற்றுவேன்?’ என்று சதா ஜபித்துவரும் மந்திரமே, ஆண் சமுகத்தைக் கோழைகளாக்கி, சுயநலப்பித்தர்களாக்கி, நாணயமும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மையையுடையவர்களாக ஆக்கி வருகின்றது.

பொது நலத்திற்கு ஏற்றவர்கள்
நமது பெண்களுக்குச் சுதந்திரமோ, அறிவோ மற்றவர்களுதவியின்றி தானாக வாழக்கூடிய சக்தியோ மற்றும் ஆண்கள் “இந்தப் பெண்ஜாதி போனால், வேறு, ஒருத்தியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தலாம். இதற்காக அழவேண்டுமா?” என்று யெண்ணுகின்ற யெண்ணம்போல் “இந்தப் புருஷன்போனால், வேறொரு புருஷனைக் கொண்டு வாழ்க்கை நடத்தலாம்” மென்கின்ற தன்நம்பிக்கையுமிருந்தால், கண்டிப்பாக இன்று நமது நாட்டிலுள்ள ஆண் மக்களெல்லாம் உண்மையான ஆண் மகனாக யிருக்கமுடியும், சுதந்திரபுருஷனாக, மானமுள்ளவனாக இருக்க முடியும். ஆகவே, இந்தப் படியில்லாமல் போனதற்குக் காரணம், ஆண்மக்கள் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கைத் துணையானது பயங்காளியாகவும், தன் நம்பிக்கையற்றதாகவு மிருக்கும்படியான நிலையில் உள்ள பெண்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டதால்தானே தவிர, வேறில்லை.

ஆனால், வாலிபர்களெப்படிப் பொது நலத்திற் கேற்றவர்களென்கின்ற மகிழ்ச்சியும், பெருமையும் மக்கள் அடைவதற்கு லாயக்குடையவர்களாயிருக்கின்றார்களோ. அது போலவே அதற்கு நேரிடையாக அவர்கள் விஷயத்தில் நாம் பயப்படும்படி, அவர்கள் அந்த வாலிபப்பருவ பயனை முன் பின் யோசியாமலெதிலும் செலுத்தி பொது நலத்திற்குக் கெடுதியை விளைவித்து விடக்கூடிய அபாயகரமான வஸ்துவாக ஆகிவிடுவார்களென்றும் சில சமயங்களில் கருதவேண்டியதாகவும் இருக்கின்றது.

ஏனெனில், அவர்களது பரிசுத்தமான உள்ளம் எதில் பற்றுகொண்டாலும் துணிந்து, நன்மை தீமை யின்னதென்று கூட யோசிக்காமல் திடீரென்று பிரவேசித்து விடக்கூடிய சுபாவமுடையதாகி விடுகின்றது.

எழுச்சியும் – வேகமும்
வாலிபவயதிலுள்ள எழுச்சியும், வேகமும், பயமற்ற தன்மையும் பொறுப்பெதுவென் றுணர்வதற்குப் போதிய அவகாசமும், சவுகரியமும், அனுபவ முமில்லாத காலபலனும் அவர்களை யேதாவது கண்மூடித் தனமான காரியங்களிலிழுத்துவிட்டு, அருங்குணங்களை வீணாக்குவதோடு, பின்னாலும் அவர்களது வாழ்வில் கஷ்டப்படவும் செய்து விடுகின்றன. ஆதலாலேயே சிற்சில சமயங்களில் நான் வாலிபர்கள் “ஜாக்கிரதையாகவே” யிருக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்வதுடன், அவர் களது வேகம் பொருந்திய ஊக்கம் சிற்சில சமயங்களில் பாயகரமாய் நாட்டுக்குப் பயனற்றதாய் சில சமயங்களில் கெடுதியையும், ஆபத்தையுமுண்டாக்கக் கூடியதாக யேற்பட்டுவிடக்கூடுமென்று சொல்லுவது முண்டு. அவர்களது எழுச்சியின் வேகத்தினால் செய்யப்பட்டக் காரியங்கள் அவர்களுக்கு பலன் கொடுக்காததாலோ அல்லது அக்கம் பக்கத்திய சார்பால் வேறுவித எண்ணங்கள் தோன்றிவிடுவதாலோ, அதாவது தாங்கள் சகவாசம் செய்தவர்களுடைய சகவாச தோஷத்தால் மற்றும் சுயநலமோ, பெருமையோ யேற்படுத்திக் கொள்ள வேண்டுமென்கின்ற ஆசை யேற்பட்டு விடுகின்ற காரணத்தால், அவர்களது முன்னைய வேகத்தின் பலனானது கெடுதியை (Reaction) யும் சில சமயங்களில் உண்டாக்கி விடு கின்றது. அதாவது, வேகமாய்ப் போகும் எழுச்சியென்னும் வண்டியானது அனுபோக மின்மை, அறியாமை சுயநலமென்னும் சுவரில் முட்டினால், வேகத்தின் மிகுதியினால் சுவரும் கெட்டு, வண்டியும் பழுதாகி, அக்கம்பக்கத்தவர்களுக்குத் தொல்லையையும் விளைவித்து விடுகின்றது.

எச்சரிக்கை
இத்தியாதி காரணங்களால் வாலிபர்கள் மிக்க ஜாக்கிரதையாக, பொறுமையாக யோசித்தே ஒவ்வொரு காரியத்திலும் தங்களருங்குணங்களைப் பயன் படுத்தவேண்டும். வாலிபர் உள்ளம். பெட்ரோலுக்குச் சமமானது. உலக இயக்கத்தோற்றங்கள் நெருப்புக்குச் சமமானது. வகையற்றமுறையில் பக்கத்தில் வந்தால் நெருப்புப் பிடித்து எண்ணெயை வீணாக்கி மற்றவர்களுக்குத் தொல்லையை விளைவித்து விடும். ஆகவே “வாலிபர் களே! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! ”யென்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய வனாகயிருக்கின்றேன்.
வாலிப பருவத்தின் கோலத்தையும், அதனது பலனையும் நான் சிறிது அறிந்தவனேயாவேன். வெகுகாலம் நான் வாலிபனாக விருந்தவன். வாலிபனாகவேயிருந்து சாகவேண்டுமென்ற ஆசை யையுடையவன். அப்பருவத்தின் சக்தியையும் மேன்மையையு மனுபவித்தவன். அந்த அனுபவம் தப்பான வழியிலுமிருக்கலாம். சரியான வழியிலுமிருக்கலாம். ஆனால், நான் வாலிபப்பருவத்தை அனாவசியமாய் விட்டுவிடாமல், அதைப்பல வழிகளில் கசக்கிப் பிழிந்தவன், இந்த உண்மை மற்றவர்களைக்காட்டிலும் நீங்களும், உங்கள் பெரியோர்களும் நன்றாயுணர்ந்தவர்களாவீர்கள். ஏனெனில், நான் உங்களிலொருவனாகவும், உங்கள் குடும்பஸ்தர்களிலொருவனாகவும் இருந்து வந்தவன், ஆகவே, இங்கு இவ்வளவு தைரியமாய் எனது சகோதரர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லுவதுபோல் இவ்விஷயத்தில் உங்களுக்கு இவ்வளவு எச்சரிக்கை செய்கின்றேன்.

சுயநலப்போக்கு
மேலும் சகோதரர்களே! நமது நாடு இன்று இருக்கும் நிலைமையிலிருந்து சிறிது மாற்றமடையவேண்டுமானாலும், மதசம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இந்நாட்டில் சுயநலக்காரரும், சோம்பேறிகளும், மற்றவர்கள் உழைப்பில் வாழ முடிவு செய்து கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருபவர்களும் இரண்டுவித உணர்ச்சியால் மக்களைக் கட்டுப்படுத்தி மூடர்களாக்கி, அடிமைகளாக்கி வைத்துப் பயன் பெற்று வருகின்றார்கள். அவை எவை எனில், மத இயல் அரசியல் என்பவைகளாகும். மதத்தின் பெயரால் மோட்ச லட்சியமும் அரசியலின் பெயரால் சுயராஜ்ஜிய லட்சியமுமே மனிதனின் வாழ் நாளில் முக்கியமானது என்று மக்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டது. இரண்டு விஷயத்திலும் பிரவேசித்து இருக்கும் மக்களில் 100க்கு 90 பேர் இரண்டுக்கும் அர்த்தம் தெரியாதவர்களாகவே அதில் உழன்றுகொண்டு இருக்கின்றார்கள். பொருள் தெரிந்த சில பெயர்கள் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து அவற்றை வியாபாரமாய் நடத்தி வருகின்றார்கள்.
மக்களின் சுபாவம் பொருள் தெரிந்தகாரியத்திற்குப் பயப்படு வதைவிட பொருள் தெரியாத காரியத்திற்குத் தான் அதிகம் பயப்படும். ஏனெனில், பொருள் தெரிந்த காரியங்களுக்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடுமானதினால் அதற்குப் பயப்பட மாட்டான். பரிகாரம் செய்துகொள்ள முடியாததற்கே அதிகம் பயப்படுவான்.

இந்த மனப்பான்மையிலேயே தான் மனிதன் வாழ்க்கையை நடத்துகின்றான். இதனாலேயேதான் பாமர மக்கள் சிறிதும் தலைதூக்க முடியாமல் மிருகப்பிராயத்தில் இருந்து வருகின்றார்கள். ‘பகுத்தறிவைப் பயன்படுத்துவதே பாவம்’ என்று சொல்லப் பட்ட ஒரு ஆயுதமே மக்களை அழுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது. அர்த்தமற்ற உண்மையற்ற சொற்களுக்கு நடுங்கச் செய்கிறது.

மூடத்தனம்
உதாரணமாகப் பாருங்கள். மனிதனுடைய மூடத்தனத்துக்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன். மனிதன் திருடுவான், நம்பிக்கைத் துரோகம் செய்வான், மோசம் செய்வான், கொலையும் செய்வான். ஆனால் ‘‘ஒரு பறையன்’’ கொண்டுவந்த தண்ணீரைத் தொட்டுக்குடி என்றால் நடுங்குவான்.

பாவம் என்று ஒன்று இருந்தால் மோசம் செய்வதைவிட, நம்பிக்கைத் துரோகம் செய்வதைவிட, பதறப் பதற கொலைசெய்வதைவிட, வேறு ஒன்றும் அதிகபாவம் இருக்கமுடியாது. ஆனால் இவற்றையெல்லாம் பஞ்சாமிர்தம் சாப்பிடுவதுபோல் செய்துவிட்டு, பறையனை திண்ணையில் உட்காரவைப்பது என்றால் நடுங்குகின்றான் என்றால் மனித சமூகத்தை எவ்வளவு சுயநலமாக இருக்கும்படியாகவும், முட்டாள் தனமாக இருக்கும்படியாகவும் வாழ்க்கை முறைகள், மத முறைகள், மோட்ச நரக முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று பாருங்கள். இதுபோலவே அரசியலிலும் அரசாங்கத்தாருக்கு அனுகூலமாக இருக்கின்றவர்கள் யார்? யாருடைய துரோகத்தால், சுயநலத்தால் இந்நாட்டில் அக்கிரமமான அரசாங்கம் இருந்து வருகின்றது? என்பவைகளை முக்கிய காரணமாய் உணர்ந்து அந்தத் துறையில் ஒரு சிறுவேலையும் செய்யாமல் பாமர மக்களிடம் சுயராஜ்ய வியாபாரம் நடத்துவது என்பதை மக்கள் உணர முடியாமல் இருப்பதோடு, உணர்ந்து சொல்லுகிறவர்களையும் மக்கள் வெறுக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றதென்றால் அரசியலின் பேரால் மக்கள் எவ்வளவு முட்டாள்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

கிராமங்களின் பழைய நிலைமைகளை மறுபடியும் புதுப்பிப்பது என்கின்ற அர்த்தத்தில் வேலை செய்வதானால் இனி இந்த தேசத்தில் கிராமம் என்பதே இல்லாமல் போய்விடும். அந்தப் படி இல்லாமற்போவதே மேல். இருக்கும்படி செய்யவேண்டுமானால் கிராமத்திற்குள் புதிய தன்மைகளைப் புகுத்தவேண்டும். நமது கிராமங்களைப் பற்றி மேயோ சொல்லி இருக்கும் முறைகள்தான் நமது பழைய கிராம நிலையாகும். நமது அரசியல் துறையில் பாடுபடும் பெரியார் ஒருவர் சமீபத்தில் ஒரு கிராமத்தைப்பார்த்து ‘இந்த கிராமத்தைப் பார்த்ததும் எனக்குப் பழைய கால கிராம காட்சி தென்படுகின்றது. நானும் ஒரு கிராமவாசியானதால் பழைய கிராமக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்’ என்பதாகப் பேசினாராம்.

நகரமயமாகட்டும்
பழைய மாதிரி கிராமம் இருப்பதானால் கிராமங்கள் ஒழிந்தே போய்விடும். யாரும் கிராமத்தில் இல்லாமல் எல்லோரும் பட்டணங்களுக்கே குடியோடிப் போவார்கள்.

கிராமங்களைப் பட்டணமாக்க வேண்டும். பட்டணவாசிகளின் வாழ்வு முழுவதும் கிராமவாசிகளின் உழைப்பேயானதால் கிராமவாசிகளேதான் உலகபோக போக்கியங் களை அடைய உரியவர்களாவார்கள்.

கிராம வாழ்க்கை ஒருவிதம், நகர வாழ்க்கை ஒருவிதம் என்பது பித்தலாட்டக் காரியமேயாகும். கிராமவாசிகளைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் பட்டணவாசியான முதலாளியும், வக்கீலும், உத்தியோகஸ்தனும், பார்ப்பனனும் பித்தலாட்டக்காரர்க ளேயாவார்கள். அவர்களது வஞ்சகமும், கெட்ட எண்ணமும்தான் கிராமவாசிகளான பெரும்பான்மை மக்களை கால்நடைகளாக வைத்திருக்கின்றது. ஆகவே, ஒவ்வொரு விஷயத்திலும் கவலைகொண்டு பகுத்தறிவைப் பயன்படுத்தி தக்க முறையில் சேவை செய்யவேண்டுமென்று விரும்புகிறேன்.

(28.06.1931-ஆம் தேதி யுவர் சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு சொற்பொழிவு – 05-07-1931

செவ்வாய், 11 ஜூன், 2024

பகுத்தறிவும், புரட்சியும்

பெரியார் பேசுகிறார்! 

2022 டிசம்பர் 16-31 2022 பெரியார் பேசுகிறார்

தந்தை பெரியார்

இன்றைய சமுதாய மக்கள் இரண்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது ஒன்று, பகுத்தறிவு (Rational), மற்றொன்று புரட்சி (Revolutional) என்ற இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்கள்.
ஆனால், நான் முதன்முதலில் 1925-இல் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தியபொழுது அதிக எதிர்ப்புகள் இருந்து வந்தன. கூட்டங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் கற்களை வீசியும் கலகம் செய்தும் தொல்லைகள் பல கொடுத்து வந்தனர். அப்படி இருந்தும் இன்றைய தினம் அப்பொழுது எவைகளை எடுத்துக் கூறினேனோ, அதை எடுத்துரைக்கும் சமயத்தில் மக்கள் யாவரும் அங்கீகரிக்கின்றனர். இதன் காரணம், மக்களிடம் உள்ள பகுத்தறிவைத்தான் கூறவேண்டும். நாளடைவிலேயே மக்களிடம் எதையும் பகுத்தறியும் மனப்பான்மை ஏற்பட்டு நான் கூறுகின்ற ஆதாரபூர்வமானதும், அனுபவ முறையிலுமுள்ள கொள்கைகளை ஆராய்ந்தறிந்து அங்கீகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இதுவன்றியும், மனிதன் உபயோகித்த சிக்கிமுக்கிக் கற்கள் மாறி தீப்பெட்டிகள் கண்டுபிடித்தும், மற்றும் அநேக முறைகளில் பகுத்தறிவை உபயோகித்து வருகின்றனர்.

மணிக்கு இரண்டு மைல்கள் செல்லும் கட்டை வண்டி மாறி, படிப்படியாக உயர்ந்து இன்றைய விஞ்ஞான உலகத்தில் மணிக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் செல்லும் ஆகாய விமான சாதனங்களையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.
வானொலி சாதனங்களையும், பயங்கர அணுகுண்டு ஆயுதங்களையும் கண்டுபிடித்துள்ள இக்காலத்திலும் கூட ஓரிரு பண்டாரங்களும், கடவுள், மதம் முதலியவற்றைக் கட்டிக் கொண்டு வாழும் அநாகரிக கூட்டங்களும் தன் மூளையைச் சரியான முறையில் உபயோகிக்காது, பகுத்தறிவின் பயனை அனுபவிக்காது இருந்து வருகிறதை எண்ணும்பொழுது பரிதாபப்-படத்தக்க வகையிலும், ஆத்திரப்-படத்தக்க வகையிலும் இருக்கிறது. உண்மை-யிலேயே பகுத்தறியும் குணமுள்ள எவரும் இதுவரை என் கொள்கைகளை எதிர்த்ததும் கிடையாது, பகிஷ்காரம் செய்ததும் கிடையாது.
இவ்வித மனப்பான்மை ஏற்படக் காரணங்களில் ஒன்றாக வெள்ளையன் நம்மை ஆட்சி செய்ததையும் கூறலாம். ஏதோ அவன் நம் தேசத்தை ஆளும்படியாகவும், அதனால் இங்கே விஞ்ஞானத்தின் மேன்மையையும், பலனையும் அறிந்தவர்களாகி, பகுத்தறிவு கொண்ட மக்களாக வாழும் வாய்ப்பு ஏற்பட்டது. இல்லையேல், நாமும் மூடப் பழக்கவழக்கங்களைக் கொண்ட-வர்களாகவும், பார்ப்பானுக்கு அடிமைகளாகவும் ஆகி, நாளுக்கு நாள் சமுதாயத்தில் கீழ்த்தரமான முறையில் தள்ளப்பட்டிருப்போம்.

இவ்வித முறையில் பகுத்தறிவு (Rational) பயன்பட்டு, அடுத்தபடியாக புரட்சியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளோம்.
இக்காலம் மனிதன் சிந்திக்க முடியாத அவ்வளவு அரிய காரியங்களைக்கூட சாதிக்க முடியும் படியான காலம். சாதாரணமாக எந்தப் புராணத்தையோ, நாட்டு சரித்திரத்தையோ எடுத்துக் கொண்டால், அரசன் ஒருவன் ஆண்டான் என்பதில் தொடங்குமேயல்லாது, ராஜா இல்லாத கதையே கிடையாது. நம் நாட்டு சரித்திரங்களின் மூலம் ராஜாக்கள் பலரும், சிற்றரசர்கள் பலரும் நம்மை ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. வெள்ளையர் நம்மை ஆண்டது வரை சக்கரவர்த்திகளும், ராஜாக்களும் அடக்கி ஆண்டனரென்றாலும், இப்போது அந்த ராஜாக்களும், சக்கரவர்த்திகளும் எங்கே? சக்கரவர்த்தியையே நேரில் ஏன் எங்களுக்கு சக்கரவர்த்தி என்று கேட்டுவிட்டனர்.
நீ எங்களை ஆட்சி புரிந்தது போதும். வந்த வழியே சென்று விடு என்று கூறி உரிமை கொண்டாடினார்கள். இப்பொழுது ராஜா வேண்டும் என்று கூறுகிற ஒருவராவது கிடையாது. அப்படிக் கூறுகிறவர் தேசத் துரோகியாகி விட்டார். எவ்வளவோ பட்டாளங்களும், சேனா சைன்யங்கள் இருந்தும், ‘போ வெளியே’ என்றவுடன் சந்தடி ஏதுமின்றி சென்று விட்டான்.

அதனால், இந்நாட்டு மக்கள்; வீரர்கள் என்று கருத வேண்டாம். படை பலம் கொண்டு துரத்தியதாக எண்ண வேண்டாம்; வீரன் என்று தன்னைக் கூறிக்கொண்டு முன்னே சென்றவுடன் எவனாவது இரண்டே இரண்டு உதை கொடுத்தால், அதையும் வாங்கிக்கொண்டு ‘அரகரசிவா’ என்று கன்னத்தில் அடித்துக்கொண்டு அஹிம்சையைக் கொண்டவன் நான் என்று கூறிக் கொண்டு தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ளும் கோழை மனம் கொண்டவனிடம் வீரம் என்பது மருந்துக்குமேது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க சகல சக்தியும் கொண்ட அரசன் போய் விட்டான் என்றால் அறிவுக் காலம் என்பதன்றி வேறு என்ன?
மற்றும் இங்கிருந்த சுமார் 630 ராஜாக்கள் எங்கே போனார்கள்? எல்லா ராஜாக்களும் ‘இஸ்பேட்’ ராஜாவாகி திரிந்து கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு ராஜபிரமுகர் என்று பட்டம் கொடுத்து கவர்னர் வேலையும் கொடுத்திருக்கின்றனர்.

அதுவும் இன்னும் கொஞ்ச நாளில் போய் அவதியுறும் காலமும் வந்து விடும். இவர்கள் மட்டுமா? ஜமீன்தார்களின் சுகபோக வாழ்க்கை எங்கே? அவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு என்ற பெயரால் கொடுக்கப்பட்ட செல்வங்கள் எத்தனை காலத்திற்கு உதவும்? மற்றும் இன்றுள்ள நிலப்பிரபுக்கள், கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள் இவர்களுக்கு எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கை?
இவ்விதமான முறையில் அதி தீவிரமாக முன்னேற்றமடைந்து புரட்சி தாண்டவமாடும் காலத்தில் கூட சில அன்னக்காவடிகளும், ஆண்டிப்பட்டாளங்களும் கைக்கூலிக்கு ‘ஜே’ போட்டுக்கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கூத்தாடுகின்றனர். மதுரைக் கலவரத்திற்குக் காரணம், இவர்களேயன்றி வேறு பகுத்தறிவு கொண்ட ஒருவராவது இருந்ததாகக் கூற முடியாது.

ஒரு பெரிய தனவந்தருடைய வீட்டில் தன் சொத்துகள் களவு போகாவண்ணம் காப்பாற்றுவதற்காகக் காவல் காக்கும் பொருட்டு நாய் ஒன்று வளர்ப்பதுண்டு. அதைப் போன்று இவர்கள் எல்லாம் புராணக் குப்பைகளையும், மதம், கடவுள் என்ற ஆபாசங்களையும் காப்பாற்றுகிறார்கள். ஆனால், எவ்வளவோ புதுப்புது விதமாகப் புரட்சிகள் உண்டாகிக் கொண்டே வருகிற இக்காலத்திலும் இவர்கள் இந்த நிலைமையிலா இருக்க வேண்டும் என்று கூற ஆசைப்படுகிறேன்.
இனிமேல் இந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் மக்கள் துணிந்து விட்டனர். எதற்கும் அஞ்சாதவர்களாக ஆகிவிட்டனர். மேல்நாடு-களிகெல்லாம் மக்கள் எதையும் ஆராயும் குணமுள்ளவர்களாதலால் எந்தப் புரட்சியையும் சுலபத்தில் எதிர்ப்பின்றி விரைவில் கொண்டு வந்தனர். ஆனால், இங்கு நம் மக்கள் எதையும் நல்லது கெட்டது என்பதை சுலபத்தில் அறிய முடியாதவர்களாதலால் சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் காண வேண்டும்.

அதன்றியும், இன்றைய அரசாங்கம் நம் பார்ப்பன அரசாங்கமாக இருப்பதாலும் எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பும், அவர்களுக்கென்ற சட்டங்கள் கொண்டு வருவதுமாக இருந்து கொண்டு கஷ்டத்தைக் கொடுக்கிறது. இதைப் போன்ற அரசாங்க சட்ட திட்டங்கள் எந்த நாட்டிலும் கிடையாது. பர்மா, மலேயா நாடுகளில் ஜாதி வேற்றுமைகள் இருக்க வேண்டிய அவசியமில்லாததாகவே இருக்கும் நிலைமையாகி விட்டது. ஒருவன் ஜாதியின் பெயரைச் சொல்லிக்கொண்டு நான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று கூறிக் கொள்வதால் அதனால் ஒரு விதத்திலும் வரும்படியடைய முடியாது. எனவேதான், மலேயா நாட்டில் இத்தொல்லைகள் நீங்கி விடுகின்றனர். இவ்விதமான ஒவ்வொன்றையும் கவனித்து வரவேண்டும் என்றே நான் வெளிநாட்டிற்குப் பிரயாணம் செய்ய வேண்டியதாயிற்று.
(21.1.1955 அன்று ஈரோடு, பெரியார் நகர மண்டபத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -‘விடுதலை’ 29.1.1955)


ஞாயிறு, 9 ஜூன், 2024

மாட்டுக்கறி உண்பவர்கள் மட்டமானவர்களா?

பெரியாரைப் பற்றிப் பாவலரேறு இயற்றிய இரங்கற் பா

#பெரியாரைப் பற்றிப் #பாவலரேறு
இயற்றிய இரங்கற் பா இது.

பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும்புகழைச் சுமந்த உயிர்

“பெரியார்” என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்த மதி!

அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!

எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!

மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!

அணிச்சரம் போல் மளமளவென
அவிழ்கின்ற பச்சை நடை!

ஆரியத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!

தோல்வியில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!

உரையழ கிங்கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?

ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?

நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை, நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா இவ் 
வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!

எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேரமும் தொண்டோ 
டினைந்த பேச்சு! முப்பொழுதும் 
நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி!
முழங்குகின்ற
அப்பழுக்கி லாதவுரை!

அரிமாவை அடக்குகின்ற 
அடங்காச் சீற்றம்! எப்பொழுதோ, 
அடடா, இவ்
வேந்தனையித்
தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?

பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றிழந்தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; 
உணர்விழந்தோம் 
உயிரிழந்தோம்; 
உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் 
குலையுயிராய்க் கிடக்கின்ற 
தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
தெற்றுமணித் தலைவரினை,
அடடா, இத் தமிழ்நாடும்
நெகிழ்ந்ததம்மா!

பெரியாரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தங்கப் பெரியாரைப் 
பாடுகின்றோம்; பெரியார்நூல் 
கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!

உரியாரைப் போற்றுவதின் 
அவருரைத்த பலவற்றுள் 
ஒன்றை யேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியாதம்மா!

🔥பாவலரேறு பெருஞ்சித்திரனார்🔥

    பா உதவி  :-        ⚖️ #துலாக்கோல் சோம நடராசன்/ 09.06.2024⚖️

சனி, 8 ஜூன், 2024

கார்த்திகை தீபம்


பெரியார் பேசுகிறார்! 

சித்திரபுத்திரன்

தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.
இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்விகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது. இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பதுதான்.
இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்விகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்-பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன்கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?
இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்-படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
தீபாவளிக்காக வரவழைத்து விற்பனை-யாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!
கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!
இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்! இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதைகள் இரண்டு. அவைகளில்
ஒன்று:
ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகாதேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப்-படுவான் என்று எண்ணினாளாம்.
அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவதாகும்.
இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதையெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை. இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.

பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபசாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்விகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று.
ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.
இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:
ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம்.

ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம்.
உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம்.

அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.
உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல்லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.
அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம்.

பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.
பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம். இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை.
இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறியலாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக் கதையில் அநேக செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?
இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவு படுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப்பார்களா?

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாததுதானே கடவுள் என்றும் கொள்கை-யுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றை-யெல்லாம் யோசிக்கும்போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.
அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள், அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடாவிட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டிருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்கு-கின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர்களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சியெடுத்துக் கொண்டார்களா?
இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங்களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி, என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங்களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?
– (தந்தை பெரியார் – “குடிஅரசு” 22-11-1931)


வெள்ளி, 7 ஜூன், 2024

பெரியார் பேசுகிறார் : ஜாதி ஒழித்து சமத்துவம் காண்போம்!



2022 செப்டம்பர் 1-15-2022 பெரியார் பேசுகிறார் உண்மை இதழ்

தந்தை பெரியார்

சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால், எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன் கீழே விழுந்து பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின், இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். பறவைகளுக்கும் எருமை, புலி, எலி போன்றவைகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. ஆனால், மனிதன் அய்ந்து அறிவைத் தாண்டி, ஆறாவது அறிவைப் (பகுத்தறிவைப்) பெற்றிருக்கிறான். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை, சொல்வதை யோசிக்க சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது.

அறிஞர்களின் ஏற்பாட்டால் 1910இல் வெளிவந்த வாகனத்துக்கும் 1951இல் வெளி வந்திருக்கிற வாகனத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி முன்னேறிக் கொண்டு போகும்போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக் கொண்டு போகிறது. நாம் செய்யும் மாறுதல் சுகபோகி-களுக்குப் பாதகமாக இருந்தால் _ அவர்களின் இன்ப வாழ்வு பாதிக்கப்படும் என்று நினைத்தால், அவர்கள் மாறுதலை மறுப்பார்கள்; எதிர்ப்பார்கள்.
1928 என்று நினைக்கிறேன்; எங்கள் சுயமரியாதை இயக்கத்தில் பல செட்டியார்கள் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் கப்பல் ஏறி வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது. அப்படிப் போனால் ஜாதிக்குப் பாதகம் விளையும் என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று ஜாதி ஆசாரத்தையும் மறந்து, வெளிநாடுகளுக்காகக் கடல் கடந்து பிழைப்புக்-காகவும், பதவிகள் வகிக்கவும் செல்லுகிறார்கள்.

இதுவும் மாறுதல்தானே! முப்பது ஆண்டு-களுக்கு முன்பு ரோமத்தைக் கத்தரித்து ‘கிராப்பு’ வைத்திருந்தால் பள்ளிக்கூடத்தில் படிக்க இடம் தரமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்களே கிராப்பு வைத்துக் கொள்ளு-கிறார்கள். நெற்றியில் எதுவுமில்லை என்றால் பள்ளியில் மாணவர்களை நுழைய விடமாட்டார்கள்; ஆனால், இன்று 100க்கு 90 விகிதம் தமிழர்கள் நெற்றியில் எதுவும் வைத்துக் கொள்ளுவதில்லை. 150 ஆண்டுகட்கு முன்பு பெண்கள் ரவிக்கை போட்டுக் கொண்டதில்லை; மலையாளத்தில் மார்பில் துணிகூடப் போடக்கூடாது; இன்று பாட்டியம்மாள்கூட ரவிக்கை போட ஆசைப்படுகிறார்கள். நான் ஈரோடு சேர்மனாக இருந்த பொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால், என் தாயார் மட்டிலும், குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் யார் பிடித்துவிடுகிறார்களோ _ அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள். மாறுதல் வேண்டும் போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும்.

அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டுவிடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமுதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டு போய் விடுமோ! என்ன ஆகுமோ! யார் கண்டது?
நம் நாட்டு ராஜாக்களெல்லாம் கடவுளாக மதிக்கப்பட்டார்கள்; கடவுள் அவதாரமென எண்ணப்பட்டார்கள். கடவுளுக்குச் செய்வ-தெல்லாம் ராஜாவுக்கும் செய்தார்கள். ஆனால், அந்த ராஜாக்களெல்லாம் இன்று என்ன ஆனார்கள்? அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் ராஜாவாக ஆக்கப்பட்டார்கள். ஜமீன்தார்களும் இப்படியே ஒழிக்கப் பட்டார்கள். ‘கடவுள் ஒருவனை உயர்ந்த-வனாகவும், ஒருவனைத் தாழ்ந்தவனாகவும் படைத்தார்’ என்ற வருணாசிரம வேதாந்தம் எங்கே போயிற்று? இப்படியே சுதந்திர ஜனநாயக எண்ணத்துடன் ஆராய்ந்தால் மாறுதல் கண்டிப்பாய்க் கிடைக்கும்.

2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள்; ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாத குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும் ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும், ஏன் புராணத்திலும், சாஸ்திர சம்பிரதாயத்திலும் சூத்திரப் பட்டம் இருக்கவேண்டும் என்று கேட்பது தப்பா? உள்ளதைச் சொல்லி மாறுதல் விரும்பும் எங்களைக் குறை-கூறுபவர்கள், தொந்தரவு கொடுப்பவர்கள் ஒரு காலத்தில் அதே மாறுதலுக்காக உழைப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம், பிற இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

சீனாவில் சன்யாட்சன் தோன்றினார்; மாறுதலை உண்டு பண்ணினார். ‘அய்ரோப்பா-வின் நோயாளி’ என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால் பாட்சா தோன்றி மாறுதலை உண்டு பண்ணினார். ஆனால், தமிழ் நாட்டில் சித்தர்களும் வள்ளுவரும் புத்தரும் தோன்றி _ ஜாதி ஒழிய வேண்டும், மாறுதல் வேண்டும் என்று கூறியும் மாறுதல் காண முடிய-வில்லையே! உழைப்பதெல்லாம் நம்மவர்களாக இருந்தும், கீழ் ஜாதியாகத்தானே வாழ்கிறோம்! மலையாள நாட்டில் ஈழவர்கள் வீதியில் நடக்கக்கூடாது என்ற சம்பிரதாயமெல்லாம் மாறி, மாறுதல் ஏற்பட்டு, இன்று வீதியில் நடக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டப்படாதவன் இருக்கத் தானே செய்கிறான்! அது போகட்டும். நம் தாய்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்; ஆனால் தமிழுக்கு இடமில்லை. கோயிலில் வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; இந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்; தமிழில் சங்கீதம் வராது; தெலுங்கில்தான் சங்கீதம் வரும்.

சாஸ்திரம், புராணம் எல்லாம் வடமொழியில்!

காந்தியார் நம் நாட்டில் என்ன ஆனார்! மகாத்மாவாகி, மகானான அவரே மூன்று குண்டுகளுக்கு இரையானாரே! ‘சூத்திரன் படிக்கக் கூடாது’ என்கிறது மனுதர்மம்; ‘எல்லோரும் படிக்க வேண்டும்’ என்றார் காந்தியார். உடனே பாய்ந்தன மூன்று குண்டுகள்! ’முஸ்லிம் மதமா, இந்து மதமா! எல்லாம் ஒன்றுதான்’ என்றார் காந்தியார். பாய்ந்தன மூன்று குண்டுகள்! எனவே, மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும்; அதைப்பற்றிக் கவலையில்லை.
நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் _ தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! இந்நாட்டில் தமிழர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதற்காகப் பாடுபடுபவர்–களுக்கு உதவியாக இருங்கள். என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் ஜாதி ஒழிப்பேயாகும்.
(மலாயாவில், கோலப்பிறை செயின்ட் மார்க் ஸ்கூல் திடலில் 16.12.1954இல் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு – ஆதாரம் : பினாங்கு, ‘சேவிகா’ 18.12.1954 – ‘விடுதலை’, 23.12.1954)