புதன், 25 மே, 2016

வைதிகப் பார்ப்பானுக்கும், கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை - சித்திரபுத்திரன்-


13.11.1932 -குடிஅரசிலிருந்து..
வைதிகப் பார்ப்பனர்: என்ன சாஸ்திரிகளே! நீங்கள்கூட பறப் பசங்களை கோவிலுக்குள் விடுவது சரியென்று சொல்லுகின்றீரே! நீரே இப்படி சொல்ல ஆரம்பித்துவிட்டால் பிறகு நம்ம சாஸ்திரங்கள் என்ன ஆவது?
கோயில் பிரேவேச பார்ப்பனர்: ஆமாம்! என்ன பண்றது! இனி சாஸ்திரத்தையும் மதத்தையும் சொல்லி அந்தப் பசங்களின் சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. அந்தப் பசங்களும் நம்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரிந்து கொண்டார்கள். அவர்கள் ஏதாவது கேட்கும்போது நாம் சாஸ்திரமென்றோ, மதமென்றோ சொன்னால், உடனே அவர்கள் நீங்கள் அவை களின் படி நடக்கிறீர்களா? என்று கேட்டு விடுகிறார்கள்? அதற்கு நம்மால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஆகையால் அவாள் சொல்றதை ஆமோதித்தால் தான் நம்மையும் நாலு மனுஷாள் நல்லவன் என்று  சொல்லுவான்கள் போலிருக்கிறது?
வை - பா: இதற்காகவா நாம் பயந்து விடுகிறது? பிறகு நம்ம ஜாதிக்கே ஆபத்து வந்து விடுமே சாஸ்திரம், பிராமணாளாகிய நம்ம சவுகரியத்திற்கு ஏற்படுத்தியது தானே. சாஸ்திரத்திற்கே அதிகாரிகள் நாம் தானே! நாம் அதன்படி நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? நம்மைக் கேட்க இந்தப் பசங்களுக்கு என்ன அதிகார முண்டு?
கோ-பி-பா.: சரிதான் காணும். நீர் சொல்றதை யார் காது கொடுத்துக் கேட்கிறார்கள். சாஸ்திரத்தின்படி நடந்தால் தானே நீ பார்ப்பனன்? நீ, பார்ப்பானுக்குச் சொல்லப்பட்ட எல்லா கர்மாக்களையும் செய்கிறாயா? இங்கிலீஷ் படித்து உத்தியோகம் பண்ணும்படி உங்கள் சாஸ்திரம் சொல்லுகிறதா? காப்பி கிளப் வைத்திருக்கிறவனையும், கள் குடிப்பவனையும்  கப்பலேறி செல்பவனையும் மிசேலச்சர்களாகிய ஆங்கிலேயர்களுடன் கைக்குலுக்கிறவனையும் பார்ப்பான் என்று  சொல்ல உங்கள் சாஸ்திரம் இடம் கொடுக்கிறதா?  இப்படிப்பட்டவர்களையெல் லாம் பார்ப்பனர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டு அவர்களுக்கு எல்லா விடங்களிலும் சமத்துவம் வழங்கும்போது நாங்களும் ஏன் சமத்துவம் பெறக் கூடாது? என்று கேட்கிறார்களே இதற்கு என்ன சொல்வது?
வை-பா.: இதற்குத்தானா சமாதானம் சொல்ல முடியாது? காயத்திரி ஜெபம் பண்ணும் சுதந்தரம் பார்ப்பானுக்குத்தான் உண்டு. ஆகையால், அவன் எந்தப் பாவத்தை செய்தாலும் காயத்திரி ஜெபம்  பண்ணி அதை நீக்கிக் கொள்ளுகிறான். அதனால் அவன் சுத்த பார்ப்பனாய் விடுகிறான் என்ற சமா தானத்தைச் சொல்லுமே.
கோ-பி-பா: சரி, நீர் சொல்லுற சமதானத்தையே சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம் அப்பொழுது அந்தக் காயத்திரி ஜெபத்தை எங்களுக்கும் கற்றுக் கொடுங்களேன் நாங்கள் அதை ஜெபித்துக் கொண்டு பார்ப்பானாகி விடுகிறோம்
என்று சொன்னால் என்ன சொல்லுகிறது?
வை-பா. : காயத்திரி ஜெபத்தைச் சூத்திராளுக்கும், பஞ்சமாளுக்கும் கற்றுக் கொடுக்கச் சாஸ்திரமில்லை என்று சொல்லி விட்டால் போகிறது.
கோ-பி-பா.: ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள், எல்லோ ருக்கும் காயத்திரி மந்திரத்தைக் கற்றுத் கொடுத்துப் பார்ப்பானாக்கி விடுகிறார்களே. அந்த மாதிரி நீங்களும் செய்யுங்களேன் என்று சொன்னால் என்ன சொல்லுகிறது?
வை -பா. : ஆரிய சமாஜத்தார் செய்வது தப்பு. அவர்கள்,  இந்து மதத்தைச் சேர்ந்தவாள் அல்ல அவாள் முக்கால்  நாத்திகாள் என்று சொல்லி விடுவது தான் நல்லது.
கோ-பி-பா. : சரி, நீர் சொல்ற சமாதானத்தைச் சொன்னால் எல்லாரும் கேட்பார்களா? சுயமரியாதைக் காரர்கள் கேட்கும் கேள்விகளுக்குச்  சமாதானம் சொல்ல முடியாமலிருக்கிறதே, அவர்கள் ஒரேடியாக, சாஸ்திரங்களெல்லாம் பொய். அவைகள் பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டவை. மனிதர்களுக்குள் சிறிதும் வித்தியாசமே இல்லை. எல்லா மனிதர் களுக்கும் எல்லாச் சுதந்தரங்களும் உண்டு. உலகத்தில் உள்ள வித்தியாசங்கள் எல்லாம் மனிதனால் ஏற்பட்டவை தான், அதுவும் சுயநலத்தால் ஏற்பட்டவைகள் என்று கூறி சமதர்ம வாதம் புரிகிறார்களே அவர்களை எப்படிச் சமாதானப்படுத்த முடியும்?
வை - பா: அடே அப்பா! சுயமரியாதைக்காரர்களா? அவர்கள் பெயரைக் கேட்டவுடனேயே எனது வயிறு கலங்குகிறது. எல்லாம் அவர்களால் வந்த வினைதான், அவர்கள் சொல்லும் வாதங்களுக்கு ஒன்றும் சமாதானம் கூற முடியாதுதான். அவர்கள் கொடுத்த சாட்டையால்தான், நம்ம ராஜகோபாலச்சாரி கூட இப்பொழுது  கோயில் பிரவேசத்தைப் பற்றி அதிதீவிரமாகப் பிரச்சாரம் பண்ணுகிறார். அவர்களுக்குக் கூறவேண்டிய சமாதானம் ஒன்றுதான். நீங்கள் நாத்திகர்கள், உங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட வேண்டியது தான். மற்றவர்களிடமும், அவர்களைப்பற்றி நாத்திகர்கள், மதத் துரோகிகள், தேசத்துரோகிகள் என்று கூறிவிட்டால் சரியாகப் போய்விடும். ஆகையால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்.
கோ - பி - பா: ஆமாம்  இவ்வளவு சிரமந்தான் நமக்கு எதற்கு? நம்மால்தான் சாதிரத்தின் படி நடக்க முடியவில்லை. எதோ சும்மாவாவது சாஸ்திரம்! சாஸ்திரம்! என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சொல் லுகிறபடி கோயில்களில் ஆதிதிராவிடர்கள் முதலான தாழ்த்தப் பட்டவர்களையெல்லாம் விட்டு விட்டால்தான் என்ன? சாஸ்திரம் போனால் போகிறது? இனிமேல்தானா சாஸ்திரம் போக வேண்டும், அதுதான் முன்னமே போய்விட்டதே!
வை - பா: அட பயித்தியமே! உமக்குச் சிறிதும் விஷயம் புரியவில்லையே. ஏதோ; சாஸ்த்திரம், மதம், என்று சொல்லிக் கொண்டிருப்பதனால் தான் கொஞ்சமாவது நமக்கு மதிப்பிருக் கிறது. நம்மை ஒன்றுந் தெரியாத பாமர மக்களாவது உயர்ந்த ஜாதியென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இல்லா விட்டால் அதுவும் போய்விடுமே! என்ன செய்கிறது?
கோ. பி. பா: இப்பொழுதான் நமக்கு என்ன மதிப்பிருக்கிறது? நம்மை எவன் மதிக்கிறான்; இனிமேல் தானா நம்முடைய மதிப்புக் கெடவேண்டும்? யார் நமது வார்த்தையைக் கேட்கப் போகிறார்கள்?
வை - பா: அப்படியா? எத்தனையோ சோணகிரிகள் இல்லையா? கும்பகோணத்தில் ராவ்பகதூர்  முத்துக் குமாரசாமி செட்டியார், அவர்கள் யார் போன்றவர்கள் இல்லையா? அவர் களெல்லாம் நமக்குக் கவுரவும் கொடுப்பதால் தானே நம்ம சாஸ் திரத்தையும் நம்புகிறார்கள்? அவர்கள் கோயில் பிரவேசத்திற்கு எதிராக இல்லையா? அவர்களைப் போல இன்னும் பத்து பணக்காரச் சூத்திராள் நம்மை ஆதரித்தால் போதாதா?
கோ. பி. பா: ஓகோ! கோ! இப்பொழுதான் விஷயம் புரிந்தது. நாம் சாஸ்திரத்தின்படி நடக்காவிட்டாலும், நமக்கு அதில் நம்பிக் கையில்லா விட்டாலும் நாம் சாஸ்திரங்களைத் தெய்வீகமான வைகள் என்றும் கடவுளால் ஏற்பட்டவைகள் என்றும், அவைகளை மீறி நடந்தால், பாவம், மதம் போய் விடும், தோஷம் சம்பவிக்கும் என்ற பிரச்சாரம் பண்ணுவதனால்தான், நமக்கு லாபமுண்டு என்று தெரிந்துக் கொண்டேன். இம்மாதிரி பிரச்சாரம் பண்ணினால்தான் ஒன்றும் தெரியாத பார்ப்பனரல்லாதார் நம்மை மதிப்பார்கள், நாமும் அவர்களை மிரட்டி மதத்தின் பேராலும், சாஸ்திரங்களின் பேராலும் காசு பறிக்கலாம் என்று சொல்லுகிறீர், சரி. இனி நானும் கோயில் பிரவேசப் பேச்சை  விட்டு விடுகிறேன். எதிர்ப்பிரச்சாரம் ஆரம்பித்து விடுகிறேன்.
வை - பா: சந்தோஷம், அதுதான் சரி, இப்படிச் செய்தால் தான், சுயமரியாதைக்காரர்கள் தேசாதிகாரிகளாக வரும் வரை யிலாவது நம்முடைய சூழ்ச்சிகள் நிலைத்திருக்கும். இன்றேல் பிராமணியமே அழிந்து போகும்.
-விடுதலை,23.4.16

சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கடவுளைத் திட்டவில்லையே!


தலைவரவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கு வதற்குத் தகுதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவையில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர தலைமை தாங்க தகுதி தேவை இல்லை.
தலைவரவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத் துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் இல்லை. பகுத்தறிவு என்றால் மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு என்றால் எதையும் சிந்தித்து அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பதாகும். அறிவைப் பிரித்தவர்கள் பகுத்தறிவிற்கு ஆறாவது அறிவு என்று பிரித்திருக்கிறார்கள்.
ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்கினால் அதன் தரம், விலை, மதிப்பு யாவற்றையும் சிந்தித்து அதன் பின்தான் வாங்குகின்றோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்துச் செய்கிற மனிதன் சில காரியங்களில் முன்னோர் சாஸ்திரம், புராணம், வழக்கம், கடவுள் என்று சொல்லி, சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டிருக் கின்றான். அதன் காரணமாக மனிதன் தன் அறிவினால் அடைய வேண்டிய அளவு பலன் அடையவில்லை.
மற்ற நாடுகளில் மனிதன் சந்திர மண்டலத்தில் கார் ஓட்டுகிறான் என்றால் அது அவனுடைய அறிவின் பலனாலே யேயாகும். இங்கு நமது மக்கள் அடிப்படையிலேயே அறிவற்றிருக்கிறார்கள். சிந்திக்காமல் எனது மதம், எனது இலக்கியம், எனது சாஸ்திரம், முன்னோர் சொன்னது என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.
பகுத்தறிவாளர் கழகம் என்பது மிருகப் பிரயாயத் திலிருக்கிற மக்களை மனிதப் பிராயத்திற்குக் கொண்டு வருவதேயாகும். அதற்கு முன் நாம் (சுமார் 100, 150 ஆண்டு களுக்கு முன்) கட்டை வண்டியில் பிரயாணம் சென்று கொண்டிருந்தோம். இப்போது எங்கள் முன்னோர் சென்றது, கடவுள் சென்றது, நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதற்காக எவரும் கட்டை வண்டியில் செல்வது கிடையாது.
மற்ற மதக்காரனை விட்டு நம் மதத்தை எடுத்துக் கொண்டால் உலக மக்களுக்கு அறிமுகமாகிற வகையில் நம்மை அவனுக்கு விளக்க வேண்டுமானால், சுருக்கமாகத் திராவிடன் என்று சொன்னாலும் இங்குள்ள முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் யாவரும் திராவிடர்களே ஆவார்கள்.
நம்மைத் தனித்துக் காட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இந்து என்று சொன்னால் இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆதி அடிப்படை என்ன? ஒரு கிறிஸ்து வனையோ, துலுக்கனையோ கேட்டால் அவன் தன் மதத் தலைவனையும், மத நூலையும், மதம் ஏற்பட்ட காலத்தையும் கூறுகின்றான். நீ இந்து என்ற சொல்வதற்கு உனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? உன் மதத்திற்குரிய வேத நூல் என்ன? உன் மதம் தோன்றிய காலம் என்ன என்பதற்கு எந்தப் பதிலைச் சொல்ல முடியும்?
இந்து மதம் என்பது ஒரு கற்பனையே தவிர, உண்மையில் அப்படி ஒரு மதம் இல்லை. இதைப் பற்றிக் காந்தியிடமே சொல்லி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துமதம் என்று ஒன்று இருந்தது என்பதற்கு நமது இலக்கியங்கள் எதிலும் ஆதாரம் இல்லை.
நாம் எந்தக் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ திட்டுகிறோமென்றால் அதில் நம்மைத் திட்டியிருக்கிற அளவிற்கு நாம் திட்டவில்லையே! இந்து மதப்படி எடுத்துக் கொண்டால் நீ நான்காம் ஜாதி, இழி ஜாதி சூத்திரன்தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற முட்டாள் தானே! நீ முட்டாளாக இருப்பதால்தானே  கோயிலுக் குப் போகிறாய், முட்டாளாக இருப்ப தால்தானே சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொள்கின்றாய். அறிவு இருந்தால் இதனைச் செய்வாயா?
கோயிலுக்குப் போகிறவன் முட்டாள் என்று சொல்கிறேன். நீயே சிந்தித்துப் பாரேன். நீ மிகச் சுத்தமாகக் குளித்து முழுகிவிட்டு பயபக்தியோடு கோயிலுக்குப் போகிறாய். அங்கு பார்ப்பான் இருந்து கொண்டு கர்ப்பக்கிரகம் இருக்கிற இடத்திற்கு நீ வரக்கூடாது; நீ சூத்திரன்; வெளியே நில்! என்கின்றான். அதைக்கேட்டு நீ வெளியே நின்று கன்னத்திலடித்துக் கொள்கின்றாயே தவிர, நான் ஏன் உள்ளே வரக்கூடாது என்று எவனும் கேட்பதில்லையே! இப்படிச் செய்கிறவன் முட்டாள் இல்லாமல் அறிவாளியா? என்று சிந்தியுங்கள். கோபப்படாமல் சிந்தியுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சூத்திரனாக - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருந்து கொண்டிருக்கிறதென்றால் அறிவும் சிந்தனையும் இல்லாததால்தானே!
6.12.1970 அன்று கும்பகோணத்தில் தந்தை பெரியார் அவர்கள்
ஆற்றிய உரை
(விடுதலை, 23.1.1971).
-விடுதலை,3.4.16

திங்கள், 23 மே, 2016

மதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்


- தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும், சடங்கு களையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்ததாகும். இக்கார ணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத் யோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர். பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத் தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டு மென்னும் பிரச்சாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்துகொள்ளாமலும், நடுத் தெருவில் நின்றனர். இதன் பின் சில மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங் களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநே கர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத் தினால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.
சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண் டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மா னங்களை ஒப்புக்கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத் தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளி யிடுகிறோம்.
முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்தி ரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இக்கொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.
வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாகவேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும், நமக்கும் எக்காலத் திலும் பகையில்லை. பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம். பார்ப்பனீயத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப் பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல் லாம் நமது போராட்டம் சென்றுதான் தீரவேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.
சுயமரியாதை இயக்கம் இதுவரை யிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப் படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக் கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின் றனர். தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர். இதற்கு காந்தி அவர்களின் ஹரிஜன இயக்கமும், இந்து மகாசபைப் பிரச்சாரமும் போதிய சான்றாகும். ஆகை யால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரச்சாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.
சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவ சியம் என்பது ஆலோசிக்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங் களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடி யோடு போக்கி விடவோ புதிய காரி யங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்திவிடவோ எக்காலத்திலும் இயலாது. ஆதலால் சீர் திருத்தவாதிகளுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள் கைகள் செயலில் நடைபெற வேண்டு மானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப் போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுயமரியாதை இயக்கமானது நேர்முகமா கவோ, அல்லது மறைமுக மாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக்கொண்டு தீர வேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலைசெய்து வரும். பலாத்கார முறை யையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட் டத்தைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்?
(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப் பற்றும் வேலையையும் சுய மரியாதை இயக் கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வர லாமென அபிப்பிராயப்படு கின்றவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளை யும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும். தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலை யிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் போக்குவதும், அப்பழக்க வழக்கங்களில் வைத் துள்ள நம்பிக்கையை ஒழிப் பதும், புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும். இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத் தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகி விடும். இவ்வளவே தான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத் திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்ற வில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை. சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம். இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத் தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக் கத்தையும் கொண்டு தொடங்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் அக்காலநிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்ய முடியும். சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ளுகின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது. சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகா ரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்ய வேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.
பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப் பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய கட்சி தற்பொழுது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாய கக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டி ருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம். இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் யாராயிருப்பினும் நிற வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத் தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதர வளித்து வர வேண்டுமென் பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன் றாகக் கொள்ள வேண்டும். இதற் கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசிய மாகும். இந்த ஸ்தாபனத்தில் அரசியல் நிறம் வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டாமல் மதமற்றவர்கள் எல்லோ ரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்து வர வேண்டும்.
மேற்கூறிய இரு இயக்க ஸ்தாப னங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தா பனங்களின் கொள்கைகளுக்கு மாறு படாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நடக் கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர் களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமா யிருப்பார்களாயின் அதைப் பொறுத்த வரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத் திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத் தினால் இயக்கம் வளருவதற்கே வழி யில்லாமற் போய்விடும். நமது கொள் கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது, நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்யமுடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுய மரியாதை இயக்கத் தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தா லொழிய உருப்படியான வேலை எதையும் செய்துவிட முடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்மக் கொள்கைகளையும், சுய மரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வ தற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம். ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சினைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சினையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக் கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத் திற்கு சேர்த்துக் கொண்டு இப் பிரச் சினைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல் லாம், விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.
- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, (விடுதலை, 11.7.1950 
-விடுதலை,31.1.16

சனி, 21 மே, 2016

நல்ல வர்க்கம் சித்திரபுத்திரன்

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ, நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைக் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பா£க்கின்றோம்.
ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கிறவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாகவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவுமே முடிந்து விடுகின்றது.
அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமுமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப் பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கிவிடுகின்றது. அப் பிரபுக்களின் மனைவிமார்கள் ஐயோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண் டாமா என்கின்ற கவலை மீதும்,
தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரி பண்ணிக் கொள்ளக் கருதி சமையல்காரனுடனேயோ அல்லது மோட்டார் டிரை வருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிடுகின்றது.
இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல்காரனுக்குப் பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான்.
என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்றதனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.
(குடி அரசு - 1929)
-விடுதலை,22.1.16

சங்கீதமகாநாடு


ஈரோட்டில் மே மாதம் 24, 25 முதலிய தேதிகளில் நடக்கும் இரண்டாவது சுயமரி யாதை மகாநாட்டின் ஆதரவில் வேறு பல மகா நாடுகளும் நடைபெறும் என்பது நேயர்கள் அறிந்ததாகும். அவற்றுள் சங்கீத மகாநாடு என்பதும் ஒன்றாகும்.
சங்கீத மகாநாடு கூட்டம் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையான தென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமுகத்துக்கு அது மிக்க இன்றியமை யாத தென்றோ கருதியல்ல.
உலகத்தில் மக்களுக்குள்ள அநேக விதமான உணர்ச்சி தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்பிராயம். உதாரணமாக, சங்கீதம் என்பது தேசத்திற்குத் தகுந்த படியும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்த படியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தகுந்த படியும் இருப்பதே தவிர, ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொருத்தமான தென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டு சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாயிருப்பது மற்றொரு நாட்டு வித்வா னுக்கு புரியாததாகவே இருக்கும். மேல் நாட்டு சங்கீத இன்பம் கீழ் நாட்டான் அனுபவிக்க முடியாது. அதுபோலவே, கீழ் நாட்டு சங்கீத இன்பம் மேல் நாட்டானுக்கு இன்பமாக இருக்க முடியாது. ஆனால் பொதுவில் சங்கீதம் என்னும் ஒரு கலை விஷயத்தில் உலக மக்களுக்கெல்லாம் ஒருவித போக் கிய அனுபவமிருக்கின்றதை மாத்திரம் காணலாம். ஆனாலும் அதை ஒருவர் அதிகமாக அனுபவிக்க ஆசைப்படுவார். மற்றொருவர் அதை சாதாரணமாகக் கருதுவார். எப்படி இருந்தாலும் உலகில் உள்ள பல கலைகளில் அதுவும் ஒன்றாய் இருக்கின்றது.
நம்மைப் பொறுத்தவரை, நாம் இம் மகாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றென்ன வெனில் சங்கீதத்துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகவேதான், சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்த வேண்டுமென்று கருதி நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும்.
எப்படி நமது நாட்டில் மற்ற எல்லாத் துறைகளையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள்ளாக்கி அத்துறையில் மற்ற மக்களைத் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தி வைத்திருக்கிறார்களோ அதுபோலவே சங்கீதத்துறையும் முழுதும் பார்ப்பனராதிக்கமாகி அதன் மூலம் நமது பொருள்கள் கொள்ளை போவதுடன், அதைக் கொண்டிருக்கும் நமது மக்களின் சுயமரியாதையும் கொள்ளை போயிருக்கின்றது; போய்க்கொண்டும் வருகிறது. உதாரணமாக, நமது தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் தேர்ச்சியுள்ள பார்ப்பனரல்லாத வித்வான்கள் அனேகர் இருக்கிறார்கள். அதிலும் சங்கீத சம்பந்தமான பல கலைகளிலும் தமிழ் நாட்டிற்கே சிறந்தவர்கள் முதன்மையானவர்கள் - இணையில்லாதவர்கள்  - என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே யாவார்கள். இப்படி இருந்தாலும் இவர்களது வாழ்வும், அந்ததும் பெரிதும் மிக்க சுயமரியாதையற்றத் தன்மையாகவே இருந்து வருகின்றது. பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் - அதாவது வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங் குழல், பிடில், நாதசுரம், மிருதங்கம், தவில் முதலாகிய வாத்தியங்களில் முதன்மையான பார்ப்பனரல்லாத வித்வான்கள் தங்களிலும் எவ்வளவோ கீழ்த்தரப் பார்ப்பன வித்வான்களால் மிக்க இழிவாகவே நடத்தப் படுகிறார்கள். அது மாத்திரமல்லாமல், இதன் பயனாய் பிரபுக்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள் பலரும்கூட பார்ப்பன ரல்லாத வித்வான்கள் என்றால் மிக்க இழிவாகவே கருதும் உணர்ச்சியைக் கொண்டு இருக்கின்றார்கள்.
உதாரணமாக, சென்ற இரண்டு மூன்று வருஷத்திற்கு முன் நாட்டுக் கோட்டை நகரத்தில் ஒன்றான கானாடுகாத்தானுக்கு நாம் போயிருந்த காலத்தில் தென் இந்தியாவுக்கே முன்மையான நாதசுர வித்வான் திரு. பொன்னுசாமி  அவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபா கொடுத்து ஒரு பிரபு வீட்டு விஷேசத்திற்கு வாத்தியத்திற்காக வரவழைக்கப்பட்டிருந்தார். அப்படிபட்ட அவர் நின்று வாசிக்கும்போது தனது வேர்வையைத் துடைத்துக் கொள்ள ஒரு சிறு வெள்ளைத் துவாலை தன் தோளின்மேல் போட்டுக் கொண்டு வாசிக்கத் தொடங்கினதும்  அவ்வூர் பிரபுக்கள் சிலர் மேளக்காரன் தோளில் துண்டுப் போட்டுக் கொண்டு வாசிக்கலாமா என்று குற்றம் சொல்லி வாசிப்பதைத் தடுத்தார்கள். அதற்கு அந்த வித்வான் பதில் சொல்லமாட்டாமல் விழித்தார். அப்போது சமீபத்தில் இருந்த நமது நண்பர் ஒருவர்  (பட்டுக் கோட்டை அழகிரிசாமி) அவ்வித் வானை நோக்கி நீங்கள் மேல் துவாலையை எடுக்காதீர்கள் அவர்களுக்கு கேட்கப் பிரியமில்லாவிட்டால் போய்விடட்டும் அல்லது நீங்களாவது போய் விடுங்கள்  என்று சொன்னார். இதைக் கேட்ட வீட்டுக்கார பிரபு தனது விஷேச காலத்தில் இந்தப்படி ஒருசம்பவம் நடந்தது, வாத்தியக்காரர் போய்விட்டார் என்கின்ற கெட்டபெயர் வருமே என்று பயந்து சீக்கிரத்தில் வாசிப்பை முடித்துக் கொண்டார். இம் மாதிரியான சம்பவம் அனேக இடங்களில் இன்றும் நடக்கின்றது. மற்றும் பார்ப்பனரல்லாதப் பெண் வித்வான்களாயிருந்தால் உட்கார்ந்து பாடும்போது சபைக்கு ஒவ்வொரு மனிதன் வரும் போதும் எழுந்து எழுந்து கும்பிட்டு விட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கிறது. ஆண் பாட்டுக்கார வித்வான்களோ பிரபுக்களிடம் பேசும்போதும் இடுப்பில் மேல் வேட்டியை எடுத்து சுருட்டிக் கட்டிக் கொண்டும், முழங்காலுக்கு மேல் இடுப்பு வேஷ்டியைக் கட்டிக் கொண்டும், இடக்கையை வலக்கக்கத்தில் வைத்து வலக்கையால் வாயைப் பொத்தி குனிந்து, மகாராஜா, எஜமான், வாமி, சமுகம் என்று மேல்மரியாதை வைத்து பேச வேண்டியிருக்கின்றது. இப்பிரபுக்களும், இவ்வித்வான்களிடம் பேசும்போது, நீ, அவன், டேய் என்கின்ற ஒருமை, அடிமை முறையில் பேசுவதும் வழக்கமாய் இருக்கின்றது.
இதே தொழிலிலிருக்கும் பார்ப்பனர்களும் தங்கள் சகோதரத் தொழிலாளிகள் பார்ப்பனரல்லாதவர்களாயிருந்தால் அவர்களிடமும் இப்படியேதான் நீ, அவன், அடே என்கிற வரிசை வைத்துதான் பேசுகிறார்கள். ஒரு இரண்டு மூன்று ஜாண் உயரம் உள்ள பையனாயிருக்கும் பார்ப்பன வித்வானும்கூட எட்டரை ஜாண் இருக்கும் பார்ப்பனரல்லாத வித்வானை ஒருமையிலேயேதான் அவன், நீ, அடே என்று பேசுகிறான். அந்தச் சிறு வித்வானிடம் இந்தப் பெரிய வித்துவான்கள் பேசும்போதும் வாமிகள் என்று மரியாதை வைத்துப் பேசுகின்றார்கள். நிற்க, நமது பிரபுக்கள் என்பவர்கள் பார்ப்பன வித்வான்களிடம் பேசும் போதெல்லாம் மரியாதையாகவே பேசுவதும், தாங்களாகவே முதலில் கும்பிடுவதும், இதற்கு பார்ப்பனர்கள் இடதுகையை தங்கள் இடுப்பிற்கு கீழாகக் காட்டி ஆசிர்வாதம் என்று சொல்லுவதுமான காரியங்கள் தினமும் நடந்து வருகின்றது.
ஆனால், சதுர் முதலிய கச்சேரிகளில் தாசிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களை ஆட்டுவிப்பவராயிருந்தாலும், தாளம் போடுகிற வராயிருந்தாலும், அல்லது அப்பெண்களுக்கு மாமாக்களாய்கூட இருப்பவர்களாய் இருந்தாலும் அவர்களைக் கண்டால் நமது பிரபுக்கள் கும்பிடுவதும் சுவாமிகளே என்று கூப்பிடுவதும் ஆன காரியங்கள் முக்கியமாக எல்லா கிராமாந்திரப் பிரபுக்களிடமும் இன்னமும் பார்க்கலாம். இவைகள் ஒருபுறமிருக்க, பார்ப்பன பிரபுக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கும், சடங்குகளுக்கும் மேளம் வாசிப்பதற்குத் தவிர மற்றபடி சபைக்கச்சேரிகளுக்கு பாடவோ, கதைகள் செய்யவோ கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களை கூப்பிடுகின்ற வழக்கமே ஒரு சிறிதும் இல்லை. அதுமாத்திரமல்லாமல், பார்ப்பனரல்லாதார் பாடுவதையோ, கதை செய்வதையோ புராணம், உபன்யாசம் முதலியவை செய்வதையோ பார்ப்பனர்கள் கேட்பது மதசம்பிரதாயப்படி தோஷம் என்றே கருதி இருக்கிறார்கள். ஏனெனில், சூத்திரன் வாக்கைக் கேட்கக்கூடாதாம். அன்றியும் பார்ப்பன பக்க வாத்தியக்காரர்களில் அனேகர் பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதையும் இழிவாய் கருதுகிறார்கள். பார்ப்பனரல்லாத பக்க வாத்தியக்காரர்கள்கூட ஒரு பார்ப்பனச் சிறு வித்வானுக்கு வாசிப்பதைப் பெருமை யாய்க் கருதுகின்றார்களேயொழிய பார்ப் பனரல்லாத வித்வான்களுக்கு வாசிப்பதைக் கவுரவக் குறைவாகவேக் கருதுகின்றார்கள். அன்றியும் ஒரு பார்ப்பனச் சிறுவன் பாடி னாலும், கருவிகளால் வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு பலே பலே பேஷ் பேஷ் என்று கைத்தட்டுவதும், தலையை ஆட்டு வதும் மெய்மறந்ததுபோல் கண்கள் மேலே சொருகும்படி வேஷம் போடுவதும் அதை ஒன்றுக்கு இரண்டாக விளம்பரம் செய்து அவனுக்கு பிரக்யாதி சம்பாதித்துக் கொடுப்பதிலும்  அதிகக் கவலையாய் இருக்கிறார்கள்.
ஆனால், பார்ப்பனரல்லாத வித்வான் களாயிருந்தால் அவர்கள் எவ்வளவு  பெரிய வித்வான்களாயிருந்தாலும் வேண்டுமென்றே கட்டை சாரீரம் என்பதும், கணக்கு போதாது என்பதும், மேல் தாயின் சுகப்படாது என்பதும் மற்றும் ஏதேதோ பொறுத்த மற்றவைகளைச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வது எங்கும் வழக்கமாக இருக்கின்றது.
இவைகளை நாம் சுமார் 40 வருஷத் திற்கு மேல்பட்ட நமது பிரத்தியட்ச அனுபவத்தில் கண்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே நாம் சங்கீத மகாநாட்டில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதின் முதல் காரணம் சங்கீத ஞானத்திற்கு ஆகவோ, சங்கீத கலை வளர்ச்சிக்கு ஆகவோ மாத்திரம் அல்ல என்றும் மேல்கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இதை உத்தேசித்தே சில சங்கீத சம்பந்தமான சபைகளில் நாம் பேச நேர்ந்த போதுகூட சங்கீதத்தில் இச்சை வைத்ததற்காகவும், சங்கீதத்தை தொழிலாகக் கொண்டதற்கு ஆகவும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்திற்காக இவ்வளவு கேவலமாயும், இழிவாயும் நடத்தப்படுவதாயிருந்தால் சங்கீதக் கலையே அடியோடு அழிந்து போவதே மேல் என்றும் அதனால் யாருக்காவது ஜீவனத்திற்கு கேடு வருமானால் அப்படிபட்டவர்கள் இச்சங்கீதத்திற்கு கருமாதி செய்துவிட்டு ரோட்டில் கல் உடைத்து வயிறு வளர்ப்பதே மேல் என்றும், அத்தொழிலும் ஜீவனமும், சங்கீதத்தை விட கவுரவமும், மேன்மையுமான வேலை என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.
ஆகவே, சமீபத்தில் ஈரோட்டில் நடக்கும் சங்கீத மகாநாட்டில் மற்ற சங்கீத மகாநாடுகளைப்போல் சங்கீத சாதிரம் என்பதைப்பற்றிப் பேசியே காலம் போக்காமல் சங்கீதத்தை கைக் கொண்ட பார்ப்பனரல்லாத மக்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றும் விஷயத்திலும் அதிகமான கவனம் செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நிற்க, இன்றைய தினம் தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், பிடில், மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம், கடம், கொன்னைக்கோல், நாதசுரம் முதலிய அனேகம் துறைகளில் நிகரில்லாதவர்களும் மிக்க விற்பத்தி பெற்றவர்களுமாக சுமார் 400, 500, பேர்கள் வரையில் பார்ப்பனரல்லாதார்களில் இருந்தும் அவர்களைப் பற்றிய பெயர்கள்கூட அனேகருக்குத் தெரிய முடியாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றது. அவர்களில் சிலரின் பெயர்களையும் திரு. இராமசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த லிடுப்படி மற்றொரு பக்கத்தில் காணலாம். மற்றப் பெயர்களும் பின்னால் வெளிவரும் இந்த சமயத்தில் நாம் இந்த வித்வான் எல்லோரையும் அவசியம் இம்மகாநாட்டுக்கு வரும்படி இதன்மூலம் அழைக்கின்றோம்.. அவர்களில் அனேகர் அவசியம் வரவும் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். அனேக விதமான சிரோன்மணிகள் வருவதாகவும் வந்து பாடவும் வாசிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நாம் மனப் பூர்த்தியான நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்வதோடு பொதுஜனங்களிலும் சங்கீத கலையிலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் பெருந்திரளாகக் கூடி வந்து இம்மகாநாட்டைச் சிறப்பிக்கச் செய்து அதை கைக்கொண்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு மேன்மையும் சுயமரி யாதையும் ஏற்படுவதற்கு உதவியாய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 20.04.1930 
-விடுதலை,17.5.16

திங்கள், 16 மே, 2016

மூடர்களே! மூடர்களே!! - சித்திரபுத்திரன்-


மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி.  கோவிலின் மீதிருக்கும், கலசம் திருட்டு போகின்றன. அம்மன்கள் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன.  விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.
இவைகளின் வாக னத்தில் தேரில் நெருப்பு பிடிக் கின்றது.  அச்சு ஒடிகின்றது.  இவை களின் பயனாய் பலர் சாகின் றார்கள்.  மூடர்களே!  இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலி யவைகள் இருக்கின்றதாக நினைக் கின்றீர்கள்?  உங்களிலும் மூடர் கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல் லுங்கள்.
இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவன் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின்றீர்கள்?  இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..
மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.
பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அது தான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)
மூடர் : கடவுளைப் படைப் பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.
பதில் : அப்படியானால், உலகப்படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தன மாகும்.
மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது.  ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.
குடிஅரசு - கற்பனை உரையாடல் - 04.01.1931

-விடுதலை,27.9.14

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

தொட்டால் தீட்டு என்பது உள்ளவரை நாம் சூத்திரர்கள் தானே!

கோயில்களில் இருக்கும் சிலையை நம் மக்கள்
தொட்டால் தீட்டு என்பது உள்ளவரை நாம் சூத்திரர்கள் தானே!

- தந்தை பெரியார்

இது பகுத்தறிவு மாநாடு, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதும் என்ன வென்றால், பகுத்தறிவிற்கு ஏற்ற கருத்து களைப் பரப்ப வேண்டியதும் பகுத்தறி விற்கு  மாறானதை ஒழிக்க வேண்டும் என்பதே ஆகும்.
பகுத்தறிவிற்கு விரோதமாக மனித சமுதாயத்திற்குக் கேடாக இருப்பவை நம் கடவுள், மதம், சாஸ்திர, புராண, இதி காசங்கள் என்பவை ஆகும். அவை நம் இழிவை நிலை நிறுத்துவனவாக இருப்ப தோடு, நம்மை அறிவு பெற முடியாமல் முட்டாள்தனம், மூடநம்பிக்கை ஆகிய வற்றை வளர்ப்பனவாகவும் இருப்பதோடு, இவை யாவற்றையும் ஒழித்து மக்கள் பகுத்தறிவு பெறவும், இழிவு நீங்கவுமான தொண்டினைச் செய்கின்றோம். நாம் அறிவு பூர்வமாக ஏற்பட்ட சாதனங்களை ஒழிக்க முற்பட்ட  மக்கள் காட்டுமிராண்டி களாக இருந்து தாய்- அக்காள்- தங் கையைப் புணர்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்க்கை என்பதே இன்னது என்று தெரியாமல் வாழ்ந்த காலத்தில், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள் களையும்,  மதங்களையும், புராணங்களை யும் ஒழிக்க வேண்டும் என்று, செய் கிறோம்.  இதை நாம் எப்போதோ  ஒழித் திருக்க வேண்டும். அறிவுக் காலத்தில் ஏற்பட்டவற்றை அழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை அதற்கு முன் காட்டு மிராண்டித் தன்மையுள்ள கடவுள்- மதம்-சாஸ்திரம் புராணம் போன்ற இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதைக் கடுகு அளவு அறிவுள்ளவனும் எதிர்க்க மாட்டானே; இவற்றைத் தன் பகுத்தறிவற்ற மடமையால் தன் சுயநலத்திற்காக, அயோக்கியத்தனத்திற்காகப் பாதுகாக்கின் றான் என்பதைத் தவிர வேறு காரணம் அவசியம் எதுவும் கிடையாது. தாயோடு, அக்காள், தங்கையோடு, மிருகத்தோடு புணர்ந்தவன் எல்லாம் உயர்ந்த ஜாதி. ஒழுக்கத்தோடு வாழ்ந்தவன், கீழ்ஜாதி என்று எதற்காக இப்படி இருக்க வேண் டும்?  நம் நாட்டில் தோன்றிய மகான், மகாத்மா, ரிஷி, எவனும் இதைப்பற்றிக் கவலைப்பட வில்லையே!
எதற்காக  இந்த நாட்டில் கோயில்கள்? எந்தக் கடவுள் யோக்கியன்? எந்தக் கடவுளின் மனைவி யோக்கியமாக இருந் தாள்? கடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? இவற்றை ஏற்றுக் கொள்கிறேன் என்றால் கடவுளைப் போல உன் மனைவியையும் பிறனுக்கு விட்டுக் கொடுக்க சம்மதிக்க வேண்டும். கடவுளை- மதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்கிற எவன் இதற்குச் சம்மதிப்பான்? இதைக் காப்பாற்றிய சுத்தக் களிமண் மண்டைக் காரனெல்லாம் மகான், மகாத்மாவாகிவிட் டான்.  இவற்றை ஒழித்தாக வேண்டும். எந்தவித தாட்சண்யத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. மடமையால் ஏற்படுத் தப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டவை தான் இவை ஆகும்.
மதங்கள் என்பவை- எந்த மதங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் மூட நம்பிக்கை நிரம்பியவையே ஆகும். மதத் தலைவர்கள் அத்தனை பேர்களும் அயோக்கியர்களே ஆவார்கள். மதத் திற்கு ஆதாரம் என்னவென்றால் வேதம் என்கின்றான், வேதம் எப்போது உண்டாகி யது? யாரால் உண்டாக்கப்பட்டது? என்ப தற்கு ஆதாரமே இல்லை. முட்டாள்தனத் தையும், மூடநம்பிக்கையையும் புகுத்தித் தான் மதத்தை உண்டாக்கி இருக்கின்றான். வேத- மதத்தை உண்டாக்கியவன்  மனிதனுக்குப் பிறக்கவில்லை, மனிதத் தன்மையோடு இருக்கவில்லை. நாய்க்கும், மானுக்கும், மீனுக்கும் பிறந்ததாகத் தான் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்பவன் சுத்த மடையனாக இருக்க வேண்டும். ஒத்துக் கொள்ள வேண்டும், நம்பவேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது என்று சொல்லித் தான் ஒத்துக் கொள்ளச் செய்கிறான். கிறிஸ்தவ மதத்தை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால், கிறிஸ்து, அப்பன் இல்லாமல் பிறந்தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்; இப்படி ஏதாவது முட்டாள்தனத்தை வைத் துத்தான் எந்த மதத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டும். அறிவிற்கு ஏற்ற மதம் எதுவும் கிடையாது.
மனிதன் பாரதத்தை, இராமாயணத்தை, ஒத்துக் கொள்ள வேண்டுமானால் அதி லுள்ள முட்டாள்தனங்களை, மூடநம்பிக்கை களை ஒத்துக் கொண்டாக வேண்டும்; மனிதன் 60 ஆயிரம் வருஷங்களாக வாழ்ந் தான்; 60 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டான் என்பதை நம்பியாக வேண்டும்; இவற்றை எல்லாம், அவன் ஒத்துக் கொண்டால் தான் இராமனைக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும். கடவுள் எதற்காகத் தம் மனைவியை இன்னொருத் தனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்? நாம் இந்தக் காட்டுமிராண்டித் தன்மையை உடையவற்றைத் தான் ஒழிக்க வேண்டும் என்கின்றோம். மனிதனை மடையனாக்கும் முட்டாள்தன, மூடநம்பிக்கைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
நம்மை ஏய்ப்பதற்குக் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும், காட்டுகின் றானே ஒழிய, சொல்கின்றானே ஒழிய, அதன்படி அவன் நடப்பது கிடையாது. அதில் உள்ள எதையும் அவன் கடைப் பிடிப்பது கிடையாது, நம்புவதும் கிடையாது. அவன் (பார்ப்பான்) உழைக்காமல் உயர்ந்த சாதிக்காரனாக, உயர்வாழ்வு வாழ வேண் டும் என்பதற்காக நாம் இழிமக்களாக, மடை யர்களாக வாழ வேண்டுமா? திருடர்கள் ஏமாந்து போய் விடுவார்களே என்று, நாம் கதவைத்திறந்து வைத்துக் கொண்டு படுத் துக்கொள்ள முடியுமா? இது அறிவு மடை மையாகுமா என்று சிந்திக்க வேண்டுகின் றேன்.
அயோக்கியத்தனங்களை, மடமை களை, முட்டாள்தனங்களை ஒழிக்க வேண் டும் என்றால், துணிய வேண்டும். வயிற்றுப் பிழைப்பிற்காக, சுயநலத்திற்காக, ஒவ் வொருவன் துணிந்து காரியம் செய்யும் போது, நாம் நம் சமுதாய இழிவைப் போக்கிக் கொள்வதற்காகப் போராடுவது தவறில்லையே! பார்ப்பானை விட நாம் எதில் குறைந்தவர்கள். பார்ப்பான் நம்மை விட எதில் உயர்ந்தவன்? அவன் மட்டும் கோவில் சிலைக்கருகில் போகலாம் என்கிற போது நாம் மட்டும் போகக்கூடாது? போனால் என்ன கெட்டுவிடும்? உண்மை யான கடவுள் என்றால் அதற்கு எதற்காகப் பேதம்? எதற்காக சாமிக்குக் கதவு? அரச மரத்தடியில் இருக்கிறச் சிலையை நாய் நக்கி விட்டுச் செல்கிறது, கேட்க நாதி யில்லை. அதே சிலையைக் கோவிலுக்குள் வைத்தால் மட்டும் தீட்டு- தொடக்கூடாது என்றால், என்ன அர்த்தம்? கோயிலிலி ருக்கிற சிலைக்கு என்னென்ன சடங்கு நடக்கிறதோ, அத்தனையும் தான் மரத் தடியில் இருக்கிற சிலைக்கும் நடக்கிறது. மரத்தடியிலிருக்கிற, எந்த சாமிக்கும் மனிதன் தொட்டதால், நாய் நக்கியதால் சக்திபோய்விட்டதாக சொல்லப்படுவது இல்லையே! பார்ப்பான் தன் பிழைப்பிற்காக நாம் தொடக்கூடாது என்றாக்கி வைத்திருக் கின்றானே ஒழிய, மற்றப்படி அதில் ஒன்று மில்லையே. மனிதனுக்கு அறிவு வரும், அவனே உள்ளே செல்வான்- சிலையைத் தொடுவான் என்று எதிர்பார்த்தோம். இதுவரை வரவில்லை. எனவே நாம் தான் செய்யவேண்டும். சாமியைப் பற்றிச் சொன்ன எவனும் அதைத் தொட்டால் தீட்டு என்று சொல்லவில்லை. அதைக் கொண்டு பிழைக்கிறவன், அதனால் உயர் வாழ்வு வாழ்கின்றவன் தான் சொல் கின்றான், நாம் தொட்டால் சாமி  தீட்டாகி விடும்- சூத்திரன் தொடக்கூடாது என்று. எது வரையில் இந்தக் கோயிலும், நாம் அங்குப் போனால் தீட்டு என்பதும் இருக் கின்றதோ அதுவரையில் நாம் சூத்திரர்கள் தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! நம்மில் சில மடையர்கள் இருக் கின்றார்கள். மானம் போனாலும் சரி யென்றும், வெளியில் நின்று கும்பிட்டு விட்டு வருகின்றார்கள். இவர்களைப் போன்ற மானமற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அவர்கள் வரு வார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு நாம் காரியத்தில் இறங்கியாக வேண்டும்; அவனவன் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக, சொந்த சுயநலத்திற்காகப் போராடுகின் றான், கிளர்ச்சி செய்கின்றான். நாம் போராடப் போவது நாமக்காகவோ, நம் சொந்த சுயநலத்திற்காகவோ அல்லவே! இந்நாட்டிலிருக்கிற, நம் சமுதாய மக்கள் அனைவரின் இழிவு, சூத்திரத்தன்மை, மானமற்றத் தன்மை, அறிவற்ற, முட்டாள் தன, மூடநம்பிக்கைளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தானே போராடப் போகின் றோம்.  இதற்கு நாமெல்லாம் தயாராக இருந்தால் தானே முடியும்? விரைவில் இதற்கான போராட்டத்தைத் துவக்கலாம் என்றிருக்கின்றேன். அதற்கு நீங்களெல் லாம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே, இது போன்ற மாநாடுகள் கூட்டி மக்களுக்கு விளக்கம் செய்கின்றோம்.
முன்னேற்றக் கழகத்தில் கலவரம் வரும் என்று கருதினேன். கட்சி ஒழிந்து போய் விடுமோ, என்று கூடப் பயந்தேன். ஆனால் நம் நல்வாய்ப்பாகத் தலைவர் தேர்தலில் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். தலை மைப் பதவிக்குப் போட்டியிட்ட கருணாநிதி அவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டதோடு, நாவலர் அவர்களும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இப்போது கருணாநிதி கட்சிக்கு, ஆட்சிக்கு, இயக்கத்திற்குத் தலைவர்.
20 வருஷமாகத் தலைவர் இல்லாமலி ருந்தது, அந்த கட்சி. ஏனில்லாமல் இருந்தது என்றால், அண்ணா அந்தக் கட்சியை ஆரம்பித்த போதே இந்தக் கட்சிக்குத் தலைவர் பெரியார் தான், அவர் வருகிற வரை இந்தத் தலைவர் பதவி யாருக்கும் கிடையாது. அவர் வந்து அமருகிறவரை தலைவர் நாற்காலி காலியாகவே  இருக்கும், என்று சொல்லிப் பொதுச் செயலாளர் என்கின்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு வந்தார். இன்றைக்குத் தான் இந்தத் தலைவர் நாற்காலி பூர்த்தி செய்யப்பட்டது. இந்நிலைக்குத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட நாவலர் அவர் களையும், கலைஞர் அவர்களையும், பாராட்டு கின்றேன். கட்சி இனி எவ்விதக் கலகம் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கிருந்த பெரிய கவலை தீர்ந்தது. நம்முடைய வாழ்வும், நம் எதிர் காலமும் இந்த ஆட்சியிடமே இருக்கின்றது. இவர்களால் தான் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியுமே தவிர மற்ற எவராலும் நம் மக்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்ய முடியாது.
குணம் குடி கொண்டார் உயிருக்கு உயிர்தான் இல்லாவிட்டால் என்று சொல்லி, அதை ஒப்பிட்டுக்காட்ட மிக அசிங்கமானதைச் சொன்னான். அது போல் நம் கொள்கைக்கு ஆதரவு காட்டுகிற வரை நாம் உயிருக்கு உயிராக இருப்போம். நம் கொள்கைக்குக் கேடு விளையுமானால், நாம் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நம் சமுதா யத்திற்கு நன்மை செய்கின்ற இந்த ஆட் சிக்கு நம்மாலான ஆதரவைக் கொடுக்க வேண்டும். எதிரிகளால், அவர்களுக்குத் தொல்லை வராமல் பாதுகாக்க வேண்டும்.
கடவுள் என்பது மடையர்களால், முட்டாள் தனத்தால் உண்டாக்கப்பட்டதே ஆகும். மதம் என்பது சோதாப்பசங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக, உண்டாக்கப்பட் டதே அல்லாமல் அறிவுடைய மக்களுக்கு அல்ல என்பதை உணர வேண்டும். இனிமேல், எவனும் கோயிலுக்குப் போகக் கூடாது. சாம்பல், மண் பூசக்கூடாது. பெண் களைக் கோயில்களுக்கு அனுப்பக் கூடாது, மத விழாக்கள் கொண்டாடக் கூடாது.
இந்தக் கடவுள்-மதத்தால் தான் நம்நாடு இழிநிலைக்கு வந்தது. கிறிஸ்துவ நாடு கிருஸ்துவ மதத்தால் முன்னுக்கு வர வில்லை. கிறிஸ்தவ மதத்தைத் தாக்கிய தால்- அதன் ஆபாசங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தியதால் தான் அறிவுபெற்று பல அதிசய, அற்புதங்களை  அறிவின் பயனால் செய்கின்றனர். அதைப் போன்று நம்நாட்டு மக்களும் அறிவு பெற்று முன்னேற்றமடைய வேண்டும்.
27. 7.1969 அன்று சிதம்பரத்தில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
(விடுதலை,  4.8.1969.)
-விடுதலை,27.12.15