ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஆதிதிராவிடர் வாலிபர்கள் வரவேற்பு


- தந்தை பெரியார்
தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். நீங்கள் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். அன்றியும் சுமார் 10 வருஷத் திற்கு முந்தியவரையில் உங்களுக்கும் எனக்கும் வெகு நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்திருக்கிறது. ஆதலால் உள்ளூர்க்காரர்கள் நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வது என்பது பரிசிக்கத் தக்கது என்றே கருதுகிறேன்.
உங்கள் பத்திரத்தில் உள்ளூரிலிருக்கிற உங்களை நான் முன்போல் கவனிக்கவில்லை என்று கண்டு இருக்கிறீர்கள். முன்போல் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்யவில்லை என்று சொல்லுகிறீர்கள் இவைகள் வாதவமாயிருக்கலாம். ஏனெ னில் நான் இந்த ஊர் முனிசிபல் சேர் மனாய் இருந்த காலத்தில் உங்கள் தெரு விற்கு என்ற அதிக சலுகை காட்டினது போல் இப்போது நான் ஈடுபட்டிருக்கும் காரியத்தில் தனி சலுகை என்றும், பொருள் சம்மந்தமாயும் நான் எதைச் செய்யமுடியும்? என் சொந்தத்திலும் எனக்கு முன்பு இருந்த மாதிரியான பொருள் வருவாய் கிடையாது. பொதுக் காரியங்களின் உண்மையாய் உழைப்ப வர்களுக்கு வரும்படி இல்லாமல் போவதோடு கைபொருளும் சிதைந்து போய் விடும். ஆதலால் பொருள் மூலமாய் செய்யும் நன்மைகள் செய்வது கஷ்டமான காரியம்.
மற்றபடி நீங்கள் குறிப்பிட்டப்படியே உங்கள் சமூக விஷயத்தில் பொதுவாக ஒரு புரட்சிப் போன்ற காரியத்தை சுயமரியாதை இயக்கம் செய்திருக்கிறது என்று சொல்லவதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் காங்கிரசில்  இருக்கும் போதும் தீண் டாதார் விஷயத்தைப் பற்றியே. அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தி யாகிரகம் என்பதும் தீண்டாமை விலக் குக்காகத் தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோயில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.
இன்னும் சுயமரியாதை இயக்கத் திலும் தீண்டாமை விலக்குத் தத்துவம் தான் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அது விஷயமாய் சமபந்தி போஜனம், கலப்பு மணம் முதலியவைகள் கூட ஜாதி வித்தி யாசம் என்பது சிறிதும் பாராமல் அநேக காரியங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் உணர்ந்தே இருக்கிறீர்கள். இங்கு சற்று முன் பேசிய தோழர் அன்ன பூரணியம்மாள் ஒரு பறப்பெண் அவரை மணம் செய்து கொண்ட இங்கிருக்கும் தோழர் ரத்தின சபாபதி ஒரு திருநெல் வேலி சைவர் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாச பாவிக்கப் படுவது மாறி இன்று சதிபதிகளாய் உங்கள் முன் விளங்கு வதைப் பாருங்கள். உங்கள் சமுகத்துக்கு சகலதுறைகளிலும் சர்க்கார் உத்தி யோகத்திலும் தனி பிரதிநிதித்துவம் எப்படி வந்தது? ஓர் காலத்தில் சுய மரியாதை இயக்க மந்திரிகளாய் இருந்த டாக்டர் சுப்பராயன், தோழர் முத்தையா முதலியார் ஆகியவர்கள் காலத்தில் தான் இது ஏற்பட்டது. அது போலவே சட்டசபை முதலிய தாபனங்களிலும்கூட உங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் எப்படிக் கிடைத்தது. உலகமே வெறுத்து தள்ளிய சைமன் கமிஷனை சுயமரியாதை இயக்கம் தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லி கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன் தான்  இப்போது எத்தனையோ பேர் தடுத்தும் சூழ்ச்சி செய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் தானம் பெற முடிந்தது. உங்களுக்குத் தனி கிணறும், தனிக் கோயிலும் கட்ட வேண்டு என்று சொன்ன தேசியங்களும், மாளவியாக்களும் உங்களுக்கு பொது கிணற்றில் உரிமையும், பொதுக் கோயில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக் கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுய மரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும் தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரசாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள் இந்த காரியங்களுக்காக சுயமரியாதை இயக்கமும், தோழர்களும் பொது சனங் களிடத்தில் எவ்வளவு கெட்டப் பெயர் வாங்கினார்கள், எவ்வளவு பழிப்புக் கும் தூஷணைக்கும் ஆளானார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
இவற்றை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இல்லையா என்பது நன்றாய் விளங்கும். இனிமேல் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டியதில்லை. இனியும் 10 வருஷக்காலத்திற்குள்  தீண்டாமை இந்திய நாட்டை விட்டு பறந்தே ஓடிவிடும். தேசிய சூழ்ச்சி குறுக்கிடாமலிருந்தால் இன்னும் உங்களுக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட மார்க்கமுண்டு. எப்படியெனில் உலகம் ஒரு  பெரும் புரட்சிக்கு தயாராகிக் கொண்டு வருகிறன்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும், தோல்வி, அடைந்தாலும் தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும். இந்த நாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 160 வருஷ காலமாகியும் தீண்டாமை ஒழிக்கப் படாமல் இருப்பது பிரிட்டீசாருக்குப் பெருத்த அவமானகரமான காரியமாகும். அவர்கள் இனி ஆட்சி செய்ய தகுதி யுடையவர்கள் அல்ல என்பதற்கு இந்த ஒரு காரணமே போதும். பிரிட்டிஷார் இந்திய பொது ஜனங்கள் மீது, பார்ப்பனர் மீது, இந்து மதத்தின் மீது பழி போடலாமானாலும், இவர்களுக்கு அறிவும் யோக்கிய பொறுப் பும் எங்கு போயிற்று? என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதில் சொல்லு வார்கள்.
ஆகவே இனி யாருடைய தயவும் தேவை யில்லாமலேயே காரியங்கள் நடந்து விடும். உலகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை உதயம் ஆகி விட்டது. அதன் முன் எந்த மதமும், எந்தக் கடவுளும், எந்த மகாத்மாக்களும், எந்த தேசிய மும், எந்த அரசாங்கமும் இனி தடையாய் நிற்க முடியாது. இவைகள் இத்தனையும் அதன் வேகத்தில் கலந்து கொண்டு உங்களுக்கு நாங்கள் தான் நன்மை செய்தோம் என்று சொல்லி போலி உரிமை கொண்டாடி மக்களை ஏய்க்கவே அவைகள் இப்போது பாடுபடுகின்றன. இந்த ஏய்ப்பில் நீங்கள் சிக்கி விடாதீர்கள். உங்களுக்கு விடுதலை வேண்டுமானால், சமத்துவம் வேண்டுமா னால் எந்த மதத்தையும், எந்த கடவுளையும், எந்த தேசியத்தையும், எந்த மகாத்மாவையும் எந்த அரசாங்கத்தையும் எதிர்பாராதீர்கள். இவைகள் ஒன்றினாலும் உங்களுடைய தீண்டாமையை  ஒழித்து சமதர்மம் கொடுக்க முடியாது. உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். அவ்வுணர்ச்சி உண்மையாக உங்களுக்கு ஏற்பட்டால் உங்களை அறியாமலே பெரியதொரு புரட்சி ஏற்பட்டு விடும். அதில் நீங்கள் மாத் திரம் சமத்துவமைடந்து உலக சுகபோகங் களில் சம சுதந்திரம் பெறுவதோடு நில் லாமல் உலகிற்கே சமதர்மம் வழங்கக் கூடியவர்களாகி விடுவீர்கள். ஆனால் நீங்கள் உண்மை சுயமரியாதை வீரர்களாக வேண்டும் மதத்திற்கு ஆளாவதோ, கடவு ளுக்கு அடிமையாவதோ, தேசியத்திற்கும், அரசாங்கத்திற் கும் அடிமையாவதோ ஆன காரியங்களில் எதில் கட்டுப்பட்டு விட்டாலும் உங்கள் புரட்சி அடங்கிவிடும், வலுவற்றதாகி விடும். பிறகு பழைய கருப்பன்தான் ஆய்விடுவீர்கள்.
நான் ஏன் இப்படி சொல்லுகிறேன்? எனக்கு மதமும் கடவுளும் இருந்திருக்க வில்லையா? இந்த ஊர் கோவில்களைப் போய் பாருங்கள் எங்கள் குடும்பப் பெயர் அங்கெல்லாம் இருக்கின்றதா இல்லையா? நாமம் பூசிக் கொண்டோ சாம்பல் அடித்துக் கொண்டோ இந்த ஊருக்கு வந்த பாகவதர் அடியார் என்பவர்களான சோம்பேறி களுக்கெல்லாம் சத்திரம் போல் சாப்பாடு போட்டு வந்ததை நீங்கள் அறிவீர்களா? சர்க்காரோடு தோளோடு தோள் போட்டு அதிகாரிகளுடன் உரைத்தது நீங்கள் அறிவீர்களா? தேசியத்தில் முன்னனியில் நின்று குடும்பத்துடன் அலைந்ததும் பல தடவை சிறை சென்றதும், நீங்கள் அறி வீர்களா? நீங்கள் உள்ளூர்க்காரர்கள். ஆனால் சகலமும் நேரில் பார்த்தவர்களான தால் இதை உங்களிடம் சொல்லுகிறேன். அயலூர்க்காரர்களுக்கு வேண்டுமானால் இது மயக்கத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். அப்படி இருக்க இப்போது ஏன் இவைகள் அவ்வளவும் புரட்டு என்றும் உங்களுக்கு பயன்படாதது என்றும், பணக்காரர்களுடையவும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக் காரர்களுடையவும் நன்மைக்கு ஏற்ற ஆயுதங்கள் என்றும் ஏன் சொல்லுகிறேன். எல்லாவற்றையும் நான் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னு டைய 40, 50 வருஷ உலக அனுபவமும் இவைகளை சந்தேகமற விளக்கி விட்டது. ஆகவே, நீங்கள் துணிவு கொண்ட புரட்சிக் குத் தயாராகுங்கள். நீங்கள் ஏன் கீழ் ஜாதி என்று உங்களையே கேள்வி கேளுங்கள். கடவுள் காரணம் என்று தோன்றினால் உடனே அந்த கடவுளைத் தூள்தூளாக்கி உடைத்தெரியுங்கள். மதக் கட்டளை என்று தோன்றினால். அம்மதத்தைச் சின்னாபின்ன மாக்குங்கள் அல்லது அரசாட்சி முறை என்று கண்டால் அதை அழித்திடுங்கள் அல்லது மனிதர்களு டைய சூழ்ச்சி  சுயநலப் பித்து என்று தோன்றினால் தைரியமாய் அவர்களிடம் இனிமேல் இந்தப் புரட்டு நடக்காது என்று சொல்லுங்கள் உங்கள் புரட்டு களை உணர்ந்து விட்டோம் நல்ல தனத்தில் யோக்கியமாய் நடக்கிறீர்களா? அல்லது இதற்காக எங்கள் உயிரை இழக்க வேண்டியதுதானா? என்று கேளுங்கள்.
இதில் ஒன்றும் தப்பிதமில்லை. ஏனெ னில் பாடுபட்ட நீங்கள் பட்டினி கிடக் கவும், கீழ் ஜாதியாய் இருக்கவும், சோம் பேறியாய் இருந்தவர் செல்வனாய் இருக்கவும், மேல் ஜாதியாய் இருக்கவும் ஏற்பட்ட முறைகள் எதுவானாலும் அதை ஒழிப்பது எவ்விதத்திலும் குற்ற மாகாது அவை புரட்டின் பேரிலும் சூழ்ச்சியின் பேரிலும் சுயநலத்தின் பேரிலுமே கட்டப்பட்ட கட்டடமாகும். உங்களுக்கு உண்மையான சுயமரி யாதை உணர்ச்சி வந்து விட்டால் அது மணலால் கட்டிய வீடு சரிந்து விழுவது போல் அதுதானே சரிந்து விழுந்து விடும். ஆதலால் நீங்கள் உங்கள் பங்கை அடைய எதன் பேராலும் பின் வாங்கா தீர்கள். உங்களுக்கு எந்த கோவிலுக்குள் போய் எந்த கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரை பட்டினி அவதையையும், அரை நிர்வாண அவ தையையும், கல்வி இல்லாமல் தற்குறி களாய் மடையர்களாய் ஆக்கி வைத் திருக்கும் பகுத்தறிவற்ற அவதையும் ஒரு காலமும் நீங்கிவிடப் போவதில்லை. அதற்கு ஏற்ற முயற்சிகளே செய்ய வேண்டும் அதிலே வெற்றிபெற வேண் டும் அதற்காத்தான் சுயமரியாதை உணர்ச்சி வேண்டுமென்கிறோம் என்பது வாகப் பேசி முடித்தார்.
(வெளிநாடு சென்று திரும்பியபின் ஈரோட்டில் 27.11.1932ந் தேதி ஆதிதிராவிட வாலிபர்கள் கொடுத்த வரவேற்பில் ஆற்றிய சொற்பொழிவு).
குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1932
விடுதலை,8.2.15

வியாழன், 30 ஜூன், 2016

கலை வளர்ச்சி

தந்தை பெரியார்

தமிழ் மக்களுக்குக் கலை வளர்ச் சியைப் பற்றிய கவலை, பண்டிதர் களைத் தவிர, மற்ற கலை உணர்ச்சியே இல்லாத பொது மக்களுக்கும், கலை என்றால் என்ன என்று அறிந்திராத செல்வச் சீமான்களுக்கும், கலை இன் னது என்றே உணர்ந்திராத செல்வச் சீமான்களுக்கும்,
கலை இன்னது என்றே உணர்ந்திராமல் கலையின் பேரால் வயிற்றுப்பாட்டுத் தொழில் நடத்தின தொழிலாளிகளுக்கும் இன்று திடீ ரென்று ஏற்பட்டு, கலை வளர்ப்பு முயற்சியில் இறங்கத் தோன்றின காரணம் என்ன என்பதை முதலில் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம். அதாவது இந்தியின் ஆதிக்கத்தை ஒழிக்க மக்கள் ‘தமிழ், தமிழ்’ என்று செய்த தமிழ்க் கிளர்ச்சியேயாகும்.
தமிழ்நாட்டில் ஆரியர் ஆதிக்கம் பெற்று எல்லாத் துறைகளையும் தம் வயப்படுத்திக் கொண்டு தங்கள் இன நலத்துக்கும் சுயநலத்துக்கும் ஏற்ற வண் ணம் அவைகளைப் பெருக்கிக் கொண் டார்கள். மேலும், அவற்றின் மூலமே தமிழர் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வாழ்வதல்லாமல் சமுதாயம்,
சமயம் ஆகிய துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தையும், தமிழர்களுடைய இழிவையும், அடிமைத்தனத்தையும் பெருக்க முயல்கிறார்கள். இவை சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழர் களுக்குத் தோன்றி அவர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்புகுந்து தடவிப் பார்த்து உள் இரகசியங்களை வெளிப் படுத்தியதன் பயனாகவே கலை இன, மொழி முதலிய இன்றைய கிளர்ச்சிகள் தோன்ற வேண்டியதாயிற்று.
இக்கிளர்ச் சிகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டவுடன் பண்டிதர்கள், கலைத் தொழில் வாழ்வுக் காரர்கள், பிரபுக்கள் முதலியவர்கள் இவற்றில் கவனம் செலுத்திப் பயனும், பொது நலத் தொண்டு புகழும் பெற முயல வேண்டியவர்களானார்கள். இது மிக்க நியாயமும், பாராட்டத்தக்க காரியமும் ஆகும் என்பதில் எள்ளளவும் ஆட்சேபணை இல்லை.
இசைக்கலை
ஆனால், இந்த முயற்சியினால் இம்மாதிரியான கிளர்ச்சி தோன்ற வேண்டிய உட்கருத்து என்ன இருந் ததோ அதற்கு அனுகூலம் ஏற்பட வேண்டாமா என்றும், அனுகூலம் ஏற்படா விட்டாலும், கேடாவது ஏற்படாமல் இருக்க வேண்டாமா என்றும் கேட்கிறோம். உதாரணமாக “இசை (சங்கீத)க் கலைக்கு   மொழி முக்கியமில்லை.
குரல் இனிமை, ஒலி இனிமை, தாள இனிமை தான் முக்கிய மானது. மொழி இனிமை முக்கியமல்ல என்று இருக்குமேயானால், நமக்கு இந்த இசைக் கலை வளர்ச்சி முயற்சியில் இன்று கலந்து கொள்ள வேண்டிய அவ சியமே இல்லை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் இசையில் மொழி இனிமையே முக்கியமானது.
அம்மொழி தமிழ்மொழியாய் இருக்க வேண்டும் என்று நாம் சொல்லுவதனால் அம் மொழிக்கு பொருள் வேண்டாமா?
அப்பொருளுக்கு பலன் வேண் டாமா? அப்பலன் கிளர்ச்சியின் குறிக் கோளுக்கு ஏற்றதாக, நலந்தரத்தக்கதாக இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டுகிறோம்.
உதாரணமாக சென்னைத் தமிழ் இசை மாநாட்டில் இசைவாணர் தியாக ராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.
ஒரு பாட்டு:
(ராகம்: ஷண்முகப்பிரியா)
பல்லவி
பார்வதி நாயகனே பரமசிவா
கருணாகர சம்போ

அனுபல்லவி
சர்வ பௌமனே சங்கரனே கைலாச வாசனேசந்திரசேகரா
என்பதாகும்,
மற்றொரு பாட்டு.
(ராகம்: லதாங்கி)
பல்லவி
ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி
அனுபல்லவி
ஒ ஜனநி நீயே அபயம் சாணுன் உபய சரணம் என்பதாகும்.
இப்படியே தான் அங்கு நடந்த 100க்கு 97 மற்ற பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளை தெலுங்கிலோ, சமஸ்கிருதத்திலோ, இந்தியிலோ, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி, இருந்தால் என்ன குடிமுழுகிப் போய் இருக்கும்?
இந்த மாதிரி பாட்டுகள் பாடச் செய் வதற்கு ஆகவா இருகோடீஸ்வரர்கள் கூடி, உலகத்தைத் திரட்டி பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர்ந்த திருவிழா இராப்பத்து பகல் பத்து போல் நடத்துவது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால் இதற்கு (பார்ப்பனர்களின் ஐகோர்ட் ஜட்ஜுகள், ஐ.சி.எஸ். கலெக் டர்கள் முதல்) இத்தனை “பெரியவர்கள்” விரோதம் தான் இப்பெரியார்களுக்கும், தமிழ் இசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்பட வேண்டும், என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத் தனமான வேலை என்றே தோன்றும்.
(29.1.1944 “குடிஅரசு” தலையங்கம்)
-விடுதலை,9.1.16

புதன், 29 ஜூன், 2016

காலத்திற்கேற்ப வாழுங்கள்


- தந்தை பெரியார்
நம் கழகமும், நமது முயற்சியும், பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.
பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற் றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம்.
இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது மூளை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?
நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர் களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம்.
இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந் திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படியிருக்கிறது.
நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம் நம்மில் 100க்கு 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம்.
இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும் கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இலலை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.
நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கலைப்படு வதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர் களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய் விட்டது.
நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. நம் வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வது தான் நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து விட்டது.
நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.
நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம்.
நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.
நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன.
ஆகையால், நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களையடைய வேண்டும்.
நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்ன வென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ் டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம்.
இதனால் நம்மை நாமே கீழ்மைப் படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?
இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவை களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவை களுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை  மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?
நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!
இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில் களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறு மான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா?
நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?
நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணரு கின்றீர்களா? இல்லையா?
அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக் கிறதா? இல்லையா?
அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப் படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக் கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?
ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல் லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?
நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்ற மடைந்தாக வேண்டும்.
நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப் பட்டவை, அல்லது கண்டு பிடிக்கப் பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை. நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போ துள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப் பட்டதாகும். நமது ஒழுக்கம் நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக் கேற்ப ஏற்பட்டவையாகும்.
இன்று காலம் மாறிவிட்டது, இயற்கை கூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டன. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000ஆம் 5000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா?
ஆகவே இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாக வேண்டும். இன்று எந்த ஒருஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள் மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண் டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக் கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிட மாவது உண்டா? நான் மதத்தின் மீது, கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ள வர்களால் அவை சிருஷ்டிக்கப் பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்.
இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்பதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வர வெட்கப்படு கிறார்கள்.
உதாரணமாக இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.
இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.
இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக் கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே அக்காலத்தில் கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.
பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?
கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிராயணத்தை நீங்கள் விரும்பவில்லையா?
ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதி கால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப் பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.
காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.
தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (குடிஅரசு 15.1.1949
விடுதலை,31.8.14-

செவ்வாய், 28 ஜூன், 2016

பேராசையும் சோம்பேறித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை


- தந்தை பெரியார்
பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதா வது கடவுளால் மக்கள் நடத்தப்படு கிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.
பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லு வதுண்டு.
இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும்.
தனக்கு வேண்டியவற்றை எல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் புத்தி யுத்தி, செல்வம்,  இன்பம், ஆயுள், புகழ் முதலியவையும், மறுமையில் மேல் உலகத் தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென் மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்து வரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபக மும், சர்வமும் அறியும் ஞானமும் உடைய வர் என்பதும், அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என் பதுமானவை தான் பிரார்த்தனைக்காரர் களின் கருத்தாயிருக்கிறது.
இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்கு வது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுற மிருக்க, பொருள்களைக் கொண்டும் கட வுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த் தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது கடவுளுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படு வனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த் தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், பேராசை என்று தான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும் புவது; வேலை செய்யாமல் கூலி பெறுவது.
படித்து பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த் தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில், பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்குப் போக வேண்டும் என்கிற வன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல் லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும் என்று சொல்லுவதும் தான் மிக பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
சற்று முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும், பிரார்த் தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி, கடவுளை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூட சொல்லி ஆக வேண்டி யிருக்கிறது.
எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரி யங்கள் செய்து, தகுதியாக்கிக் கொண்டு பலனடைய எதிர்பாராமல் காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக் கும் ஒரு அறிவற்றவர் என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக் கும், ஒரு தற்புகழ்ச்சிக்காரர் என்றும் தானே சொல்ல வேண்டும்.
தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவ மானது மனிதனைச் சோம்பேறியாக்கு வதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசன்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு, தண்ணீர் பாய்ச்சாமல், அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக் கொண்டு போகிற வனுக்கும், யோக் கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர் பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி கர்மபலன் கொடுக்கக் கூடிய சர்வசத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதியிருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலை யில் ஈடுபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணிய மாட்டான்.
ஏனென்றால், சகல காரியமும் கடவு ளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும், கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும், (அதா வது விதியின்படி தான் முடியும் என்றும் தெரிந்து இருந்த ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால்) பிரார்த்தனை செய் வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டு கிறோம்.
சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவல மான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன்; அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலே பிரார்த்தனை இருந்து வருகிறது.
இப்படியேதான், இதையே தான் பிரார்த் தனையைத் தூண்டும் ஆதாரங்களும், சாஸ்திரங்களும், கரும காண்டமும் கூறு கின்றன.
இதைப் பார்த்தால், இவர்கள் எல்லோ ரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக் காரர்கள் எல்லோரும் கடவுள் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்று தான் சொல்லி ஆக வேண்டும். சிலர் சொல்லு கிறார்கள், மனிதன் பாவி, அவன் பாவ கர்மத்தைச் செய்து தான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீர வேண்டும் என்கிறார்கள்.
நான் பாவம் செய்து தான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள் ளுவதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத் துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்தப் பிரார்த் தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்று தான் சொல்ல வேண்டும்.
பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட் டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத் தையும் கொடுக்காமல் போய்விடும்.
மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்து லாபம் அடைவதற்குத் தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்கு ஆக பூஜையும், பிரார்த்தனையும் ஏற்படுத் தப்படவில்லை.
குரு - (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கோ, பாதிரிக்கோ, முல்லா வுக்கோ ஏதாவது வேலை உண்டா என் பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கை யும், எண்ணமும், சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும், எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான்.
மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது, மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா? அல்லது குருவும், புரோகிதனும் பிழைக் கவா? என்பது யோசித்தால் விளங்காமற் போகாது.
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல, மனிதன் வீணாய் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம்.
சில சோம்பேறிகள் பிழைப்பதற்கு ஆக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது?
என்பவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமற் போகாது.
பூசை புரட்டு குறித்து பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை (விடுதலை 20.11.1953.).
-விடுதலை,2.3.14

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?


- தந்தை பெரியார்
இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற முட்டாள் தனம் முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வருகிறது. இதை மாற்றக் கூடாதது என்று சொல்கின்றோமே தவிர, உணவை, உடையை, மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னோர்கள் பழமையைக் கடைபிடிப்பது கிடையாது.
விளக்கெண்ணெய் அகல் விளக்கைத் தூக்கிக் குப்பையிலெறிந்துவிட்டு மனிதன் மின்சார விளக்கைப் பயன்படுத்துகின் றானே தவிர, முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!
இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோ தம் என்று சொல்லி மனிதனின் சிந் தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழையும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.
உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின்தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறி விருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன்னோர் - பெரியோர் என்கிற காரியங்களில் பயன்படுத் தாததே என்பது புலப்படுகிறது.
பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவதாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவுவாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என்கின்றேன்.
குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக் கின்றனர். எதற்காக ஒருவன் மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் என்கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலை யெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனிதனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட் டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென் கிறோம்.
நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய் தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்பதால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக்கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானு மில்லை, பறையனுமில்லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!
இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. இவற்றிலிருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.
சிந்திக்காததனாலே எவன் அதை உப யோகப்படுத்திக் கொண்டு வாழ்கின் றானோ,  அவன்தான் நம்மையெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக்கின்றான். மற்ற வற்றில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத் திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.
நாம் கடவுள் இல்லை என்று சொன் னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.
பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்பவில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்றவனையெல்லாம் கொலை செய்திருக்கிறார்களே!
சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தனர்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண் டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்றுதானே? துலுக் கன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?
1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற்பட்டதே மதத்தைப் பரப்புவ தற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டு களுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள் தான் உண்டு என்று சொன்னார். அதற் காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கை யற்றவர்களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக் கின்றார்கள்.
நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக் கிடையே இருக்கிற மடமை, முட்டாள் தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர் களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள் வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதேயாகும் என எடுத்துரைத்தார்.
10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971).
-விடுதலை,16.3.14

காட்டுமிராண்டி ஏன்?


நம்மைப் போன்ற எல்லா குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனை கடவுள் என்கின்றோம்; கடவுள் அவதாரம் என்கின்றோம்; அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டு மிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டு மிராண்டிகளாக்குகிறோம்.
இது எதற்கு? பாமர மக்களை ஏமாற்றுவதற்குத் தானே? இந்தக் குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையது அல்லவா? ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள். முஸ்லீம் யாருக்குமே கடவுள் தன்மை கொடுக்க மாட்டான்; யாருக்குமே கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகக் கூட கொடுக்க மாட்டான்.
நமக்குத்தான் குரங்கு, பாம்பு, காக்காய், கழுகு, ஆடு, மாடு, யானை, குதிரை எல்லாம் கடவுள்களாகி விடுகின்றன. தினமும், பூசை, ஆராதனைகள் கூட செய்யப் படுகின்றன. இவை போதாதா நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு?
- தந்தை பெரியார்

அந்த இருவர் சந்தித்த போது...

மதம் எப்படி உண்டாயிற்றென்றால், உலகத்தில் முதல் அயோக்கியன் ஒருவன், முதல் முட்டாள் ஒருவனைச் சந்தித்த போது அந்த முட்டாளின் மூலம் அந்த அயோக்கியன் லாபம் பெற்றுப் பிழைக்க இந்த மதப் புரட்டை உண்டாக்கினான். - வால்டையர்

பக்தி ஏன் வராது?

இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குல் பனிமொழி வேதப் புரியிறையே!

- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,

பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!
-விடுதலை,14.3.14

தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்


- தந்தை பெரியார்
இந்தத் திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங்குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர்
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்த நாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்த வர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெய ரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைத்ததாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை.
இந்த நாட்டுச் சரித்திரம் , ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறி வாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை யும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.
பழமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலைகளுக்கும், நேரப் போக்குப் பரிகாசத் துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப் பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்?
பழமை நிலைமையும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதைச் சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக்கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்ப தற்கும் ஆகவேயாகும்.
நாம் சூத்திரர்களா?
நாம் பிறவியிலோ தன்மையிலோ தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின்நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள்.
நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப்படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்படவில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை ஆனால் நாம் தான் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறோம்.
எப்படி மானமும் சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒரு பெண் மற்றொரு ஆண் மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படு கிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல் லிக்கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்.
எந்தக் காரணத் தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர் களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக்கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராத தும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும்.
ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகிவிட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசா பாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத் தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் என்ன?
சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர் களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண்டியவன், இருந் தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்ட வர்கள் அல்லாதவர்களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்க விடவேண்டும்? என்று கேட்கிறேன்.
தோழர்களே, இக்காலத்தில் உண்மை யான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு வாசல் செல்வம் தாசித்தனத்தால் வந்ததென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக் கூடாது சட்டத்தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோதரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான்.
இத்தனைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவதாசிகள் என்று பெயர் இருந்தும்கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்டவர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவுதரும்படியான காரியங்களை) அவர் களைக்கொண்டு செய்வித்துக் கொள் கிறோம்.
அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக்கொள்ளுகிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரியும்படியான குறி களையும் (ஏதாவது ஒரு அடையாளத்தை யும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலைநிறுத்துவதும், பெருக்கிக் கொள்வதுமான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உன் சொந்த இழிவை ஈனத்தை நீக்கிக் கொள்ளாத நீ, நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லா விட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும்? திராவிடனுடைய சரித் திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!
எது தேசியம்? எது விடுதலை?
ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதியில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக்கணக் கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்குத் தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில் களையும் நிர்துளியாக்குவதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?
இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக்கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுய ராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின், அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட் டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்கு மேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.
எது பொதுவுடைமை இன்றைய பொது உடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக் கியதைதான் என்ன? வெங்கடாசலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவை களின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணி தோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு?
எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்தவாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட்சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா?
இவர்கள் எல்லோரும் தனி உடைமைக் காரர்களின் நிபந்தனை இல்லாத அடி மைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலையாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத்துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப்பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?
காங்கிரஸ்
காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கியதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப்பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்தத் தேசிய மாநாட்டில் இந்தத் தன்மைகளைப் பொசுக் கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட் டது? நினைக்கப்பட்டது?
இந்த மகா உத்த மர்கள் எங்களைக் குறை சொல்லுவ தெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக்குள் முன் மண்டபத்தில் பறை யனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது?
கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?
எங்கள் கோபம்
இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளையனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள் தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள் ளையன் மீதும் கோபம்.
ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர் களும், பொதுஉடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?
எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண்டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண்டாற்றவேண்டிய காலம் இது.
நீங்கள் அடிபட வேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்பலாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்காமல் நிற்கும் துணிவு பெற வேண்டும். இதற்குத்தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.
நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டி தனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ் மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற் கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.
தோழர்களே! துணிவு கொள் ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக் குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று.
உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு.
இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத்தக்க குடி மகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும் தன் இனத்திற்கு உண்மையான தொண் டாற்றுபவனுக்கு அடையாளம் என்ன வென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்து விட்டவனாக இருக்க வேண்டும்.
இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கிய மாகும்.
(23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற் பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 01.09.1945

விடுதலை,1.6.14