வெள்ளி, 21 அக்டோபர், 2016

தீபாவளி” பற்றித் தமிழறிஞர்கள் கருத்து

தீபாவளிப் பண்டிகை - தமிழர்க்கு எவ்வகையிலும் ஒவ்வாதது” என்றும், “காட்டுமிராண்டிக் காலக் கற்பனை கள் நிறைந்தது” என்றும், “அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், உண்மை நிலைக்கும், இயற்கைத் தன்மைக்கும் முரணானது” என்றும், தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கத்தவர்களாகிய நாமும் முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டிலே பேசியும், ஏட்டிலே எழுதியும் அறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். என்றாலும், நாம் எதிர்பார்த்தவாறு மக்கள் இன்னும் திருந்தி தெளிந்த அறிவு பெற்றார்கள் இல்லை. தீபாவளி மோகம் மக்களை இன்னமும் வாட்டி வதைத்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் நமது பகுத்தறிவு - நாத்திக இயக்கத் திற்கு முற்றிலும் மாறுபாடான, வேறுபாடான எண்ணம் கொண்ட தமிழக ஏழு பெருந்தமிழ் அறிஞர்களின் கருத்துரைகள் நமது கொள்கைக்கு வலுவூட்டி அரண் செய்வதாக அமைந்திருக்கின்றன. மொத்தத்தில் அத் தமிழறிஞர்களின் கருத்துரைகள் “தீபாவளி தமிழர் விழா அன்று என்பதையும், தீபாவளிக்கு இலக்கியச் சான்றுகள் ஏதும் இல்லை என்பதையும், தீபாவளி வடநாட்டுப் பண்டிகை என்பதையும், தீபாவளி சமண சமயப் பண்டிகை என்பதையும் நன்கு தெளிவுபடுத்துகின்றன”. தீபாவளி கொண்டாடி மகிழும் பக்த அன்பர்களாம் தமிழ்ப் பெருமக்கள் மதி நலமும், மான உணர்வும் பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அத்தமிழ் அறிஞர் களின் கருத்துகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.

1. தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படு கிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடின மாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.  
(ஆசிரியர்: தமிழறிஞர் கா. சுப்பிரமணியன் (பிள்ளை), நூல்: “தமிழர் சமயம்“ பக்கம்: 62.)

2. வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்தி லிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்தத் திருநாள் அன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியன்று புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: “மதுரை நாயக்கர் வரலாறு” பக்கம்: 433-434)
-விடுதலை,20.10.16

“தீபாவளி” பற்றித் தமிழறிஞர்கள் கருத்து (2)

3. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!

வடநாட்டில் அக் காலத்திலிருந்த தமிழ் மேன்மக் கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வட நாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திரு நாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையா யிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக்கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகா சுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் யாதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவலி நரகாசுரன் கதைக்குச்சிறிதும் இசைவது அன்று.

(ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நூல்: “தமிழர் மதம்“ பக்கம்: 200-201)

4. அகராதிக் குறிப்பில்...

இரண்யாட்சதன்: இவன் கதா பாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒரு முறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணு மூர்த்தி சுவேத வராக (பன்றி)ருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மத வாதத்தை வற்புறுத்துகிறது) (169)

நரகாசுரன்: வராக (பன்றி) உருக் கொண்ட விஷ்ணு விற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)

சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப் பெயர் அடைந்த தேவர்.

(சுரா பாணம் என்பது ஒரு வகை மது; அதை உண்டதால் அவர் சுரர் ஆனார்) (705).

அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந் தும் ஆரியப் பார்ப் பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
(ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ. சிங்காரவேலு முதலியார், நூல்: அபிதான சிந்தாமணி)

5. சமண சமயப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்த போது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற் பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆன படியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண் டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்த படியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக்கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வர வழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை : தீபாவலி) மகாவீரர் விடி யற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவலி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்த மற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகா சுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவலி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதை தான் நரகாசுரன் கதை.

(ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர்
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: “சமணமும் தமிழும்“ பக்கம்: 79-80)
-விடுதலை,21.10.16

வியாழன், 20 அக்டோபர், 2016

திராவிடர் கழகமே ஜாதியை ஒழிக்கும்

தந்தை பெரியார்



எந்தப் பார்ப்பான் தொழிலாளியாக இருக்கிறான்? விவசாயம் செய்யும் பார்ப் பனன் உண்டா?  மில்லில் கூலி வேலை செய்யும் பார்ப்பனன் உண்டா? அத்தனை தொழிலாளர்களும் தமிழ் மக்கள்தானே?

எனவே, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்தின் மீது அவர்களிடம் ஆத்திரமூட்டி, தூண்டிவிட்டு முதலாளியிடம் இவ்விதம் வம்புக்குப் போகும்படி செய்துவிட்டு வேடிக்கை பார்க் கிறார்களே பார்ப்பனர்களும்  அவர்களுக்குத் துணை புரியும் கம்யூ னிஸ்டுகளும். இவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருப்பதனால், முதலில் ஜாதியை ஒழிக்கப்பாடுபட வேண் டும்.  ஜாதிப் பாகுபாடு நிலைநாட்டப்பட்டிருப்பதால்தானே, உழைக் கும் தொழி லாளியும், உழைக்காமல் சுகமாக வாழும் பார்ப்பனரும் இருக்கின்றார்கள். ஜாதிப் பிரிவு இல்லை யானால், தொழிலாளி-முதலாளி என்ற பிரிவும் மறைந்து போகும். எனவே, ஜாதியின் பெயரால் இருக்கும் சின் னங்களையும், உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கான எண் ணங்களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.  ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் முதலாவது தன் கையில் கத்தரிக் கோலை எடுத்துக் கொண்டு பார்ப்பாரத் தெருவில் புக வேண்டும்.  அங்குள்ள பார்ப்பனர்களின் ஒரு உச்சிக் குடுமியோ, பூணூலோ இல்லாமல் அடியோடு கத்தரித்து விட வேண்டும். முதலில் இதில் ஈடுபட்டால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

ஆனால், இந்த முயற்சியில் புகுந் தீர்களேயானால் முதன் முதலில் தங் களுக்குத் தலைவர்களாக உள்ள பார்ப் பனர்களின் பூணூலைக் கத்தரித்துவிட்டுத் தான் மற்ற பார்ப்பனர்களிடம் போக நேரிடும்.  ஆனால், இவற்றால் ஜாதி ஒழியும் என்று கூறுவதற்கில்லை.

இன்னமும் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற யாருடைய முயற்சியாலும் ஜாதி ஒழிவதற்கு வழியே கிடையாது.  இதுவரை கீழ்ஜாதி என்பவர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் மரியாதை இருந் திருக்குமானால், அவர் களுடைய முயற்சினால் தான் வந்திருக்கும்.  காந்தியார் கூட மேல் ஜாதிக்காரனுக்கு என்று தனியாக கோயிலும் குளமும் வேண்டும், கீழ் ஜாதிக்காரனுக்னென்று தனியாகக் கோவிலும் குளமும் வேண்டும் என்றார். நாங்கள் பிறகு கூப்பாடு போட்டு இரண்டு பேருக்கும் தனித்தனியே இருக் குமானால் அந்தக் கோவிலும் குளமும் பறையன் கோவில், பறையன் குளம் என்று பெயரிடப்பட்டு அவை உள்ளவரை அந்த ஜாதியும் மறைவதற்கு வழி இல்லை என்று சொன்னோம்.

அதன் பிறகுதான் ஒரே கோவிலில் எல்லோரும் சாமி கும்பிடலாம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னமும் பார்ப்பான் கோவிலில் அனுபவிக்கும் சுதந்திரம் சூத் திரனும் பறையனும் அனுபவிக்கமுடியாது.  பார்ப்பான் மட்டும்தான் சாமிக்குப் பக்கத்தில் போகமுடியும். அந்த இடத்தில் நாம் போக முடியாது.

இப்படிக் கோவிலுக்குப் போக வேண் டிய அவசியம்தான் என்ன இருக்கிறது? இன்னமும் இந்த மூடங்கள் அவிழ்த்துக் கொடுக்கின்றன. பார்ப்பான் வாங்கி இடுப் பில் சொருகிக் கொண்டே இருக்கிறான். 1956 ஆம் ஆண்டிலும் இந்த அக்கிரமம் நடக்கலாமா? இதையல்லவா கம்யூ னிஸ்ட்கள் ஒழிக்க வேண்டும்? எந்த நாட்டில் கம்யூனிஸ்ட்களுக்குப் பாதிரி தலைவனாக இருக்கிறான்? கம்யூனிஸ்ட் என்றாலே பாதிரிக்கு வேலை இல்லை.

இந்தப் பாதிரியை விட மகாக் கொடுமையும், பித்தலாட்டமும் செய்யும் முதல்தரப் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்ட்க்குத் தலைவராக இருக்கின்றனர். ஏன்? நம்முடைய ஆளுக்கு யோக்கியதையும் திறமையும் இல்லையா?  பார்ப்பனர் கம்யூனிஸ்ட்களின் தலைவராக இருக்க என்ன யோக்கியதை உடையவர்கள்?  எப்படி யாவது உண்மை கம்யூனிசம் நம் நாட்டில் பரவினால் பார்ப்பனர்களுக்குச் சீட்டுக் கொடுத்தனுப்பும் நிலையைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதற்காகப் போலி கம்யூனிசம் நாட்டில் பார்ப்பனர்களால் பரவச் செய்யப் படுகிறது.

உண்மைக் கம்யூனிசம் இந்த நாட்டில் பரவுமானால் இங்கே பார்ப்பனருக்கும், மதம் சாஸ்திரம் புராணங் களுக்கும், கடவுள்களுக்கும் வேலையே இருக்காது. எனவே, இந்த மதமும் ஜாதியும் ஒழிய வேண்டுமானால், எங்களைத் தவிர வேறு யாரும் கவலை கொள்பவர்கள் கிடையாது. நாங் கள்தான் முதன் முதலில் ஜாதி ஒழிய வேண்டும் என்றும் கூறியவர்கள்.

காந்தியார் கூட செத்துப் போவதற்குப் பத்து நாட் களுக்கு முன்பாகத்தான் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார். அதற்கு முன் ஜாதியைப் பற்றிய கவலை காந்திக்கு இருந்ததேயில்லை. ஜாதியைக் காப்பாற்றிய தால்தான் அவர் ``மகாத்மா என்று போற்றப்பட்டார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளு வரும், புத்தரும் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறி யிருக்கிறார்கள். இதைத்   தவிர இப்போது முதன் முதலில் எங்களைத் தவிர வேறு யாரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினதுமில்லை.  நாங்கள் சொன்ன பிறகு, டாக்டர் அம் பேத்கர், காந்தியின் தவறுகளை உணர்ந்த பின் தான் அவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினார். அதற்கு முன் அவரும் காந்தியுடன் சேர்ந்து ஏமாற்றப்பட்டவர் தான். காந்தியார் ஜாதியைக் காப்பாற்றத் தான் முயற்சிக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னர் ஜாதி  ஒழியவேண்டும் என்று கூறினார்.

இப்போது தென்னாட்டில் நாங்களும், வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும்தான் ஜாதியை ஒழிக்கப்பாடு படுகிறோம்.

முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்ட மிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத் தனர். இவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.  மாநாடு நடத்தும் தினம்  நெருங்குவதற்கு ஆரம் பித்தது.  அம்பேத்கரை, நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும் என்று கேட் டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவ தாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுளின் மீதும் கையை வைக்காதே என்று கூறினர்.

ஆனால், அம்பேத்கர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது.  என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டு மானாலும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதற்கு ஆட் சேபணை இல்லை என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.

இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள்.  ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிர வேசிப்பதில்லை. நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று அடிக்கடியும் கூறுகிறார். ஆனால், முதலில் அவருடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அப்படியே வைத்துக் கொண்டு ஜாதி ஒழியவேண்டும் என்று கூறுகிறார். ஆகக்கூடிய காரியமா?

சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று உண்மையில் நினைப் பாராகில் அதற்கென்று சட்டமே இயற்றிவிடலாம். இனி மேல் யாரும் ஜாதிச் சின்னம் அணியக் கூடாது. பூணூலை அறுத்து எறிய வேண்டும். இல்லையேல் இந்தச் சட்டப்படி போலீசார் கத்தரித்து விடுவார்கள். கோவில்களில் பார்ப் பனர் மட்டுமல்லாது பறையன்,  சக்கிலியன் யாவரும் மணி அடிக்கலாம் என்று சட்டமியற்றி விட்டால் சீக்கிர மாகவே ஜாதியை ஒழிக்கலாம். அதன்றி வாயினால் சொன்னால் மட்டும் போதாது. ஆனால், நேரு அப்படிக் கூறுவ தற்கு அவருக்குப் பைத்தியம் பிடித்தால் ஒழியக் கூறமுடியாது. பச்சைப் பார்ப்பனராக இருந்து கொண்டு அப்படிக் கூறுவாரா? அவருடைய ஆட்சியே பார்ப் பனர்களின் நன்மைக்கென்று இருக்கையில் பார்ப் பனர்கள் விஷயத்தில் கை வைக்க மாட்டார்.

இப்போது கூட நான் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்ற காரணம் என்ன? அரசாங்கம் பார்ப்பனருடையது.. பார்ப் பனரை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்.  ஆகையால்தான் நான் அரசாங்கத்திற்கு எதிரானவன். நான் என் வேலையை விட்டு, இனிமேல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். ஏதோ இதுவரை தெரியாமல் பார்ப் பனர்கள், சாஸ்திரம், கடவுள் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று கூறினேன். இப்போது பகவான் என் முன் தோன்றி இதுவெல்லாம் கூடாது என்று சொன்னார். ஆகவே, பார்ப்பனர்கள் பூலோகத் தேவர்கள் என்று காமராசருக்கு மட்டுமல்ல. நேருவுக்கும் தந்தி கொடுத் தேனாகில், உடனே மறு தந்தியில், உனக்கு ஒரு மந்திரி மட்டும் போதுமா? அல்லது இரண்டு மந்திரி உத்தியோகம் வேண்டுமா? சென்னை அரசாங்கத்தில் வேண்டாம். மந்திய அரசாங்க மந்திரியாகவே அமர்ந்து விடலாம். எந்த இலாகாவுக்கு என்று கவலைப்பட வேண்டாம். இலாக்கா பொறுப்பு இல்லாத  இலாக்கா என்று ஒன்று அமைத்து அந்த இலாக்காவுக்கு மந்திரியாக இருக்கலாம் என்று  தெரிவிப்பாரே.

ஏனெனில், என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலை நாட்டப் பாடு பட்டவர்கள் யாருமே இல்லை.  முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு வாலன்டியராக இருந்தாராம்.  அவர் அப்போது இருந்த இடமே தெரியாது. விருதுநகர் மாநாடு ஒன்றுக்கு நான் தலைவராக இருந்த போது எனக்கு வாலன்டியராக இவரை அமர்த் தினதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன்.  அதற்கு நான் அவரிடம் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறேன்.  எனக்கு வாலன்டியராக இருந்தவர் சென்னை முதன் மந்திரியாக இருக்க, நான் இந்தியாவின் பிரதம மந்திரி யாகக் கூட ஆக முடியும். ஆனால், இப்போது என் முயற்சி எல்லாம் இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியின் கொடுமை அடியோடு ஒழிய வேண்டும்.  நான் மற்றவர் களைப் போல் சும்மா பணக் காரன் ஒழிய வேண்டும் என்று கூறுகிறவன் அல்ல. ஆனால், இதுவும் என்னால் ஆக முடியாத காரியம் என்று அல்ல. கடவுளையே ஒழிக்க முற்படுபவனாகிய எனக்கு இந்தப் பணக் காரன்களை ஒழிப்பதா பெரிய காரியம்?

மேலும் இப்போது கூறுகிறேன்.  மந்திரி களைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை.  சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும்  சட்டத்தில் உள்ள ஜாதிப்  பாகு பாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் நான் கொஞ்சம் அயர்வேன்.

பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல, வைப்பாட்டி யாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும்.  ஆனால், பார்ப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கண வனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்தச் சட்டத்தைக் கொளுத்தி விட்டு பிறகு நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று  சொன்னால், அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.

காமராசராவது ஓரளவு தம்மால் இயன்ற அளவு ஜாதியினால் ஏற்பட்ட கொடுமை களையாவது உணர்ந் திருக்கிறார். வேறு யாருடைய ஆட்சியிலும் இல்லாத முறையில் நல்லவர்களுக்கு உதவி செய்கிறார். தேவஸ் தான இலாகா மந்திரியாக பஞ்சம ஜாதி என்று இகழப் படுபவரை (பரமேஸ் வரன்) அமர்த்தினார். அர்ச்சகப் பார்ப்பனர் எல்லாம் இவரைக் கண்டால் கை கட்ட வேண்டும். இந்த அளவுக்காவது பார்ப்பனத் திமிரை ஓரளவு அவரால் அடக்க முடிந்தது. மேலும் அவர் காலியாகிற உத்யோகங் களை எல்லாம் தமிழர்களுக்கே கொடுத்து  வருகிறார்.  இதைவிட இன்னமும் அவர் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர் பார்க்க முடியும்? மேலும் அவரும் வடநாட்டுப் பார்ப் பனத் தலைமை பீடத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவர்.

வடநாட்டினர் கிழித்த கோட்டைத் தாண்ட முடியாத நிலைமையில் ஆட்சியில் இருந்து கொண்டு நமக்கு இவ்வளவாவது நன்மை செய்கிறார் என்பதைக் கொண்டு நாம் சந்தோஷமடைய வேண்டும்.

அதைவிட அவருடைய ஆட்சிக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சிப்பது மிகவும் அறிவீனமாகும். அவரைப் பற்றி ஏதேதோ இல்லாதவைகளைச் சேர்த்துப் பேசி அவர் மேல் மக்களுக்கு வெறுப்பூட்ட நினைக் கிறார்கள். இதுவரை அவர் அந்த இடத்தில் இருக்க வில்லையானால், அந்த இடத்தில் நண்பர் ஆச்சாரியார் இருப்பார். அவர் அவருடைய தொழிலான ஜாதி வளர்ப்புத் தொழிலையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் இல்லையேல் பூணூல் இல்லாத பார்ப் பனர்களாகிய சுப்ரமணியமோ அல்லது பக்தவத்சலமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.

பூணூல் உள்ள பார்ப்பனரையாவது கொஞ்சம் நம்பலாம். இந்த பூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது.  பார்ப் பானாவது பதவியின் பேரால் கொஞ்சம் கோழைத்தன்மை உடையவர்கள்.  தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட தமிழர்கள் எந்தக் கொடுமையும் துணிந்து செய்வர்.

உங்கள் குல வேலையை நீங்கள் பார்த்த பிறகல்லவா பிறருக்குப் புத்தி சொல்ல வேண்டும்? என்றேன். இதைக் கேட்டு அவர் ராமசாமிக்கு ஜாதித் துவேஷம் ரொம்பவும் முத்திப் போச்சுது என்றாராம்.

பிறகு இந்த ஆள் ஒழுங்குபடமாட்டார் என்று தெரிந்து அதற்காக கத்தியும், பெட்ரோலும் தயாரா இருக்கும்படி செய்திருந்தேன். அதன் பிறகுதான் ஒரு வழிக்குச் சரியாக வந்தது. அவரும் ஆட்சியை விட்டுப் போனார். மறுபடியும் காமராசர் வர முடிந்தது.

இவருக்குத் தொல்லை கொடுப்பவர்கள் இப்போது மலிந்து போய்விட்டார்கள். அவர்கள் எல்லாம் பீர்மேடு, தேவிகுளம் என்று தாண்டிக் குதிக்கிறார்கள். தேவிகுளம், பீர்மேடு வேண்டாம் என்ற ஆட்க ளெல்லாம்  இப்போது விளம்பரத் திற்காக மாற்றிக் கூறுகிறார்கள். தேவிகுளம், பீர்மேடு நம்முடையதாகவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்ட போது, இதே கம்யூ னிஸ்ட்கள் நடுநிலைமை வகித்தார்கள். சோஷலிஸ்ட்கள்தான் இதன் சம்பந்தமாக என்ன யோக்கியதை உடையவர்கள்?  பட்டம் தாணுவின் சர்க்கார் நடக்கும் சமயத்தில் தேவிகுளம், பீர்மேடு வேண்டுமென்று கேட்ட தமிழர்களைச் சுட்டுக் கொன்றதைப் பார்த்து இப்படித்தான் சுட்டுக் கொல்ல வேண்டும். தேவிகுளம் பீர்மேட்டைக் கேட்க தமிழர்கள் தகுதி யற்றவர்கள் என்றெல்லாம் இங்குள்ள சோஷ லிஸ்டுகள் கூறினார்கள். அப்படிப் பட்ட கம்யூனிஸ்ட்டும், சோஷலிஸ்ட்டும் இன்றைக்குத் தேவிகுளம் பீர்மேடு வேண் டும் என்று கிளர்ச்சி செய்கிறார்களாம்.

17.2.1956 இல் மாயூரம் மணல்மேட்டில் 
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

(`விடுதலை, 5-3-1956)

--விடுதலை,16.10.16

திங்கள், 17 அக்டோபர், 2016

ஆஸ்திகப் பெண் - நாஸ்திகன் உரையாடல்


- சித்திரபுத்திரன்- 

02. 03. 1930 குடிஅரசிலிருந்து...

ஆஸ்திகப் பெண்:- என்ன அய்யா நாஸ்திகரே, மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றிய ஆட்சேபணைகள் எப்படி இருந்தாலும் பெண்களைக் கடவுளே விபசாரிகளாய் பிறப்பித்து விட்டார்.

ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண் கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக் கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன்.

நாஸ்திகன்:- அம்மா, அப்படித் தாங்கள் சொல்லக் கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல்வதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆ.பெண்:-    அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்கின்றீர்கள்? இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை? எல்லாப் பெண்களுமா விபசாரிகள்?

நா:- ஆம் அம்மா, எல்லாருமேதான் விபசாரிகள். இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை.

ஆ. பெண்:-    என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா நீங்கள் விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள்.

நா:- ஆம், ஆம், ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்லாமல் மேல் உலகத்தில் உள்ள பெண்களையும் கூடத்தான் நான் கற்பு உள்ளவர்கள் என்று சொல்லு வதில்லை.

ஆ.பெண்:- இப்படிச் சொல்லுவது தர்ம மாகுமா?!

நா:- கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத் தின் சாரமான மனுதர்ம சாஸ்திரம் சொல்வது எப்படிப் பொய்யாகும் - அதர்மமாகும் சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால் அது சரியென்று நான் ருஜுப்படுத்தவும் தயாராயிருக்கிறேன்.

ஆ.பெண்:- என்ன ருஜு,  நாசமாய் போன ருஜு சற்று காட்டுங்கள். பார்ப்போம்.

நா:-  நமது பெரியவர்கள் கற்பைப் பரீட்சிக் கத் தக்க பரீட்சைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.

ஆ.பெண்:- என்ன பரீட்சை அய்யா அது.

நா:-  சொல்லட்டுமா! கோபித்துக் கொள் ளக் கூடாது.

ஆ.பெண்:- கோபமென்னையா. மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். தாராள மாய்ச் சொல்லுங்கள்.

நா:- தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் பெய்யெனப் பெய்யும்மழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா?

ஆ.பெண்:- ஆம். கேட்டிருக்கின்றேன்.

நா:-  கற்புடைய மங்கையர்கள் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேத வாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?

ஆ.பெண்:- ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா; சரி. . . .ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடி தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உளவு 
(2 அங்குலம்) மழைப் பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆ.பெண்:- இது நம்மாலாகின்ற காரியமா! தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடி யும். இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால் இந்தப் பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.

நா:- எந்தப் பாவி எப்படித் தவித்தாலும் நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால் மழை பெய்யென்றால் பெய்துதானே ஆக வேண் டும் அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீரவேண்டும். எப்போது பெண்கள் சொன் னால் மழை பெய்வதில்லையோ அப்போதே பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்லர். - விபசாரிகள் என்று ருஜுவாகவில்லையா? பொறுமையாய்  யோசித்துப் பாருங்கள்.

ஆகையால், இனிமேல் சாஸ்திரங்களைப் பற்றி சந்தேகப் படாதீர்கள். அதிலும் ரிஷி களும், முனிவர்களும் சொன்ன வாக்கியமும் கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்து மதத்திற்கு ஆதாரமானதும், மோட் சத்திற்கு சாதனமானதுமான மனுதர்ம சாஸ் திரம் பொய்யாகுமா அம்மா? அதனால்தானே நான்கூட கல்யாணமே செய்து கொள்ள வில்லை.

ஆ. பெண்:- எதனால்தான்?

நா: - பெண்களை கல்யாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள் அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டுமென்றிருக்கிறதினால் தான்.

ஆ.பெண்:-    பின் என்ன செய்கின் றீர்கள்.

நா:- கடவுளோ பிறவியிலேயே பெண் களை விபசாரிகளாய் பிறப்புவித்து விட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. ஆதலால் எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும். கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்ப தாகக் கருதி சிவனே என்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா? என்கின்ற தைரியம் உண்டு.

ஆ.பெண்:- அப்படியானால் நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்ததில் ஒன்றும் குற்றமில்லை. இது மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யா மொழியும், நீதியும் இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக் கொண்டதோ ஆன கடவுள்களும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நமது எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.
-விடுதலை,14.10.16

கர்ப்பத்தடை

6.4.1930- குடியரசிலிருந்து...

கர்ப்பத்தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும், மற்றவர்கள் கருதும் கார ணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன.

அதாவது பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும் பிள்ளைகளின் தாஷ் டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திரதிசையை உத்தேசித்தும், குடும்பச்சொத்து குலையாமல் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்தும், கர்ப்பத் தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டினர் பலர்கூட ஆதரிக்கின்றார்கள். ஆனால் நமது கருத்தோ இவை  எதையும் பிரதானமாய்க் கருதியது அல்ல.

மற்றெதைக் கருதி என்றால்  முன்சொன்னது போல் பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுயேச் சைக்குமே கர்ப்பம் விரோதியாய் இருப்பதால் சாதாரணமாய் பெண்கள் பிள்ளைபெறுவது என்ப தையே அடியோடு நிறுத்திவிட வேண்டும் என் கிறோம், அது மாத்திரமல்லாமல் பல பிள்ளைகளை பெருகின்ற காரணத்தால் ஆண்களும்கூட சுயேச் சையுடனும், விடுதலையுடனும் இருக்க முடியாத வர்களாகவே இருக்கிறார்கள்.

இதன் உண்மை சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும், திரீயும் தங்கள் சுதந்திரங்களுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக்கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.

ஒரு மனிதன்தான்  கஷ்ட நிலையில் பேசும்போது நான் தனியாயிருந்தால் ஒரு கை பார்த்துவிட்டு விடுவேன். 4, 5 குழந்தையும் குட்டியும் ஏற்பட்டு விட்டதால், இவைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கின்ற கவலையால், பிறர் சொல்லுவதை யெல்லாம் கேட்டுக்கொண்டு ஆளாயிருக்கவேண்டி இருக்கின்றது என்றே சொல்லுகின்றான்.

அது போலவே ஒரு திரீயும் புருஷனாலோ அல்லது வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும்போது நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின்மேல் துணியை போட்டுக்கொண்டு போய்விடுவேன் அல்லது ஒரு ஆற்றிலாவது, குளத்திலாவது இறங்கி விடுவேன். இந்த கஷ்டத்தை சகித்துக்கொண்டு அரை நிமிஷமும் இருக்கமாட்டேன். ஆனால், இந்த குழந்தைகளையும், குஞ்சுகளையும் நான் எப்படி விட்டுவிட்டுப் போகமுடியும் என்றே சொல்லு கின்றாள். ஆகவே இந்த இருவரும் அவர்களது சுயேச்சையையும், விடுதலையையும் கெடுப்பது இந்த குழந்தைகளும் குஞ்சுகளும் என்பவை களேயாகும்.

உலகத்தில் மக்கள் கஷ்டப்பட்டு தன் தன் ஜீவனத்திற்கு பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்று அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும்போது பிள்ளைகளையும், குட்டிகளையும் காப்பாற்றவேண்டிய அவசியமும் தலைமேல் இருக்குமானால், அந்த இடத்தில் எப்படி சுயேச்சை இருக்கமுடியும்? ஆகையால் ஆண் பெண் இருவர் களின் சுயேச்சைக்குமே கற்பமாவதும், பிள்ளை களைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியாயிருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆகவேண்டும் என்கின்றோம்.

அன்றியும், பெண்கள் வியாதிதர்கள் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் இந்த கர்ப்பம் என்பதே மூலகாரணமாயிருக்கின்றது.

தவிரவும் ஆண்களில் பிரம்மச்சாரிகளும், சன் யாசிகளும், சங்கராச்சாரியார் களும், தம்பிரான்களும், பண்டார சன்னதிகளும் ஏற்பட்டிருப்பதுபோல் பெண்களில் பிரம்மச்சாரி களும், சங்கராச்சாரி முதலியவர்களும் ஏற்படுவ தற்கும் இந்த கர்ப்பமே தடையாயிருந்து வருகின்றது. இந்நிலையில்தான் பெண்கள் விடுதலைக்கும், சுயேச் சைக்கும்,  முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம்.

இந்தப்படி நம்மில் ஒருவருக்கொருவர் கருதும் காரணம் எப்படி இருந்த போதிலும் நமக்கும் மற்ற கர்ப்பத் தடைக்காரருக்கும் கர்ப்பத்தடை அவசியம் என்பதில் அபிப்பிராய பேதமில்லாதிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.

- தந்தை பெரியார்

-விடுதலை,14.10.16