தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017
கருப்புச்சட்டை ஏன்?
ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)
ஏழை என்பவன் யார்? : தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக்கூட்டத்தார் களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.
சனி, 11 பிப்ரவரி, 2017
மூடர்களே! மூடர்களே!! - சித்திரபுத்திரன்-
வெள்ளி, 10 பிப்ரவரி, 2017
இன்னுமென்ன சந்தேகம்? பிராமணா! உன் வாக்குப் பலித்தது!!
- தந்தை பெரியார்
ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகங்கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள். இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமாதானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய் யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.
அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே வந்தாய் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்த மான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது. உமது வாக்குப் பலிப்பதற்காகவே இந்தப்படி கடவுள் செயலால் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் என்ன செய்வேன்? நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர்? என்ப தாகச் சொன்னாளாம்.! அதேபோல் காங்கிரஸ் காரியக் கமிட்டியும், திரு. காந்தியும் சேர்ந்து 12.07.1931 செய்த பிரஜா உரிமை தீர்மானமானது நாம் காங் கிரசையும், அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி அவர்கள் எப்படிப்பட்ட அபிப்பிராயக்காரர் கள் என்று குற்றம் சொல்லி வந்தோமோ, அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும், வேறு எவ்வித வியாக்கியானமும், தத்து வார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப் படையாய் அழுத்தந்திருத்தமாய் சொல்லப்பட்டு விட்டது. அது என்னவென்றால்,
அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது பற்றிய, விதிப் பிரிவுகளில் இந்தியாவில் உள்ள சகல சமூகத்தாருக்கும் அவர்களது கலைகள், சமூக நாகரிகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள், பழக்க வழக்கங்கள். மதம், மத தர்மங்கள் ஆகியவை காப்பாற்றப்படும் என்பதாக ஒரு உத்திரவாதம். அதா வது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித் திருக்கின்றார்கள். மற்றும், ஒவ்வொரு சமூக உரிமைகளைப் பற்றிய சட் டங்களும் காக்கப்படும் என்பதாகவும் ஒவ்வொரு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை வகுப்புகளின் உரிமைகளின் அரசியல் உரிமை மற்றும் இதர உரி மைகள் ஆகியவை காப்பாற்றப்படும் நிபந்தனையானது அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் என்ப தாகவும் தீர்மானித்து இருக்கின்றார்கள். அது அசோசியேட் பிரஸ் சேதியாகும்.
மற்றும், 13ஆம் தேதி வெளியான எல்லாத் தினசரி களிலும் காணப்படுவதுமாகும். அன்றியும், இத்தீர் மானங்களை ஆங்கிலத்தில் உள்ளபடியே மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டுமிருக்கின்றன ஆகவே, வாசகர் களுக்கு இவ்விஷயத்தில் இன்னுமென்ன சந்தேகம் இருக்கக்கூடும்? என்பது நமக்கு விளங்கவில்லை.
கராச்சி காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது என்று வாய்த் தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த ஹம்பக் என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களின் கூற்று என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கியிருக்குமென்றே கருதுகின்றோம். ஏனெனில் ஒவ்வொரு வகுப்பாருடைய, அதாவது இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொறுத்த கலை ஆதாரங்கள் அதாவது வேத சாஸ்திர புரா ணங்கள். அவர்களது பாஷைகள், பாஷை எழுத்துக்கள் வகுப்புக் கல்விகள், வகுப்புத் தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும் நடவடிக்கை கள், ஒவ்வொரு வகுப்பாருடைய மதங்கள் அதாவது சமயம், உட்சமயம், புறச் சமயம், அந்தந்த மத தர் மங்கள், அதாவது கோவில், கோவில் சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங் கள் செய்வதற்கு விடப்பட்டி ருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவை எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண் டிருக்கின் றது.
ஆகவே, இது சமதர்மக் கொள்கையாகுமா? அல்லது சுயமரியாதை கொள்கையாகுமா? அல்லது நவ ஜவான் பாரத சபைக்கொள்கையாகுமா? அல்லது போல்ஸ்விக் கொள்கையாகுமா? என்பதை நம் நாட்டு வாலிபர்களை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகிறோம். இந்த மாதிரி யான சுயராஜ்ஜியம் ஏற்படுவதற்காக வெள்ளைக்காரன் இருக்கும் அரசியல் அதிகாரத்தைப் பறித்து இந்த மாதிரி உத்தரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரசுக் காரரிடம் மகாத்மா இடமும் திரு. ஜவஹர் லால் இடமும் ஒப்படைக்கலாமா என்று நிதானமாய் யோசித்துப்பாருங்கள் என்று மறுபடியும் நினைப் பூட்டுகின்றோம். மற்றும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பக்தர்களே, இந்த உத்தரவாதமானது காரியக் கமிட்டி உயர்திருவாளர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், பண்டித மாளவியா ஆகிய பிராம் மணோத்தமர்களால் கொண்டு வரப்பட்ட ஏகமானதாய் தீர்மானிக்கப்பட்டி ருக்கின்றது என்பதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக் கின்றது என்பதையும் உணருங்கள் என்றே சொல்லு கின்றோம். உலகில் வயிறு வளர்ப்பதேதான் பிரதான மான காரியம் என்று கருதி இருப்போமானால், மனித உருவாய் பிறந்ததற்கு வருத்தப்படவேண்டி யது தான் என்பதே எமது அபிப்பிராயம். மற்றபடி சுயமரியாதையே பிரதானமானது என்று கருதுகின்றவர்களுக்குத்தான் மனிதனாய் பிறந்ததைப் பற்றி சில சமயங்களிலாவது மகிழ்ச்சியடைய இட முண்டு என்று சொல்லலாம். நிற்க.
பம்பாய் காரியக் கமிட்டியின் உத்தரவாத தீர்மா னத்தைக் கொண்டு காங்கிரசின் உண்மையான தன் மையை ஒரு வரியில் கூற வேண்டுமானால், காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண்பட்ட ஸ்தாபனம் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்லமுடியும்? என்று அறிவும், நாணயமும், மானமும் உள்ள மக்களை யோசித்து பார்க்கும்படி வேண்டு கின்றோம். நிற்க.
காரியக் கமிட்டியின் இந்த உத்தரவாதத் தீர்மா னத்தைப் பற்றி தேசிய பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு இருக்கும் தமிழ்நாடு பத்திரிகை 13ஆம் தேதி தனது உபதலையங்கத்தில் எழுதி யிருப்பதையும் இந்தச் சமயத்தில் குறிப் பிடுகிறோம். இந்த உப தலையங்கத்தில் ஒவ்வொரு எழுத்தும் வெகு நடுக்கத்துடன் எழுதப்பட்டி ருந்தாலுங்கூட அதில் உண்மை ஒருவாறு வெளியா கியே விட்டது. அதாவது:-
இந்திய தேசிய காங்கிரசுக்குத் தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின் றோம். காங்கிரசின் தேசிய லட்சியம் இப்போது பின்ன டையவும் நேர்ந்து விட்டது. பிரதி வகுப்பாரின் பாஷை எழுத்து, கல்வி, ஆசார அனுஷ்டானம், மதம், தர்மச் சொத்துக்கள் ஆகிய விஷயங்களுக்குத் தக்க பாது காப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரியாதை, மனிதத்தன்மை ஆகிய வற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ்டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக் கமிட்டி கூறி இருந்தால் அதன்பொருள் தெளிவாக ஏற்பட்டிருக்கும். இந்தியா வில் சமதர்மத்தை நிலைநிறுத்துவதற்குக் காரியக் கமிட்டியின் முடிவு முட்டுக் கட்டையாக அமையுமென்று அஞ்சுகின்றோம் என்பதாகக் குறிப்பிட்டு இருக்
கின்றது. இவை எப்படி இருந்தபோதிலும் இன்றைய தினம் இந்த நாட்டில் இருந்துவரும் ஜாதி, மத பேதங் களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங்களும், மத தர்மச் சொத்துக்களும் காப்பாற்றுவதற்காக நமக்கு சுயராஜ்ஜியம் வேண்டும் என்ற கருத்தின்மீது தான் இன்றைய தேசியக் கிளர்ச்சி நம் நாட்டில் நடை பெற்று வருகின்றது என்று சொன்னவர்களின் வார்த்தைகளில் எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
அன்றியும், காங்கிரஸ் கூட்டத்தில் இத்தனை காலம் பிரஸ்தாபிக்கப்படாத ஒரு புதிய விஷயமும் இந்த ஜவாப்தாரி தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது, கவனிக்கத்தக்கதாகும். அதாவது பழக்க வழக்கம், தொழில், மததர்ம சொத்துக்கள் ஆகியவையும் காப்பாற்றப்படும் என்பதோடு. அதற்கு ஜவாப்தாரி தனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாகும். ஆகவே இனிமேல் இந்தியாவைக் காங்கிரஸ் பார்ப் பனிய சுயராஜ்ஜியமாக்க செய்ய வேண்டிய வேலை எது பாக்கி? என்பதாக நமக்கு விளங்கவில்லை. இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால், காங்கிரசும், காந்தி கோஷ்டியும் இப்போது உலகத்தில் ஏற்பட் டிருக்கும் சமதர்ம, பொதுவுடைமை உணர்ச்சியை அழிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்துக்கொண்டு பாமர மக்களுக்குச் செய்யும் சதியும், துரோகமும் அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
இந்த உண்மையை உணர்ந்துதானே ருஷ்ய சமதர்மக்காரர்கள், காங்கிரஸ் பொது ஜனங்களுக்குத் துரோகமான தென்றும், காந்தி பொது ஜன துரோகி யென்று தைரியமாய்ப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அன்றியும் மாஸ்கோவில் இருந்து வந்த சேதி ஒன்று தமிழ்நாடுவில் பிரசுரித்திருக்கின்றபடி ருஷியாவில் இந்தியா என்பதாக ஒரு நாடகம் ஆடப்படுவதாகவும். அதில் பிரிட்டிஷ் ஆட்சி கொடுங்கோன்மையான தென்றும், காந்தி பொது ஜனங்களைத் தப்பான வழியில் ஏமாற்றி நடத்திக் கொண்டு போகின்றவர் என்றும் கருத்து வைத்து சரித்திரம் எழுதி நாடகம் நடை பெறுகின்றதென்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இவற்றையெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும் இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப் பற்றி சிறிது கூட தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமூகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையை பொது ஜனங்களுக்குப்படும் படி விளக்க வேண்டி யதையே முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்தக் கடமைக்கு யாரும் பயப்படுவது சிறிதும் மனிதத் தன்மை யாகாதென்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இதற்காக, நாம் யாரையும் காங்கிரஸ் கூட்டத்தில் கலகம் செய்யும்படியாகச் சொல்லவில்லை. அது மிகவும் தப்பானதும், பயங்காளித்தனமானது மான காரியமாகும். ஆதலால், ஒவ்வொரு இடங்களி லும் இதற்கென்றே தனிக்கூட்டம் கூட்டியே பேச வேண்டு மென்று வலியுறுத்திச் சொல்லுகிறோம். அப்படிப்பட்ட கூட்டத்தில் காங்கிரசுக்காரர்கள் குழப்பம் செய்தால் அதற்காக யாரும் பின்வாங்க வேண்டியதில்லை அதன் மூலமாகவே காங்கிரஸ் என்பது காலித்தனமும் உடையது என்பதை ருஜிப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கூடப் பெறலாம். ஆகையால் அதற்குப் பயப்பட வேண்டிய தில்லை.
ஆனால், சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்டால், காங்கிரசின் புரட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லிவிடும் பதிலே அதற்குப் போதுமான பதிலாகும். ஏனெனில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கைகளேதான் பெரி தும் காங்கிரசில் இருப்பதை மனதார உணர்ந்தும் சுயமரியாதையும் காங்கிரஸ் கொள்கையும்ஒன்றுதான் என்று சிலர் விஷமப்பிரசாரம் செய்வதால் அதை ஜனங்கள் அறியும்படி செய்வதன் மூலமே சுயமரியாதை கொள் கைகளை எடுத்துச் சொல்ல வசதி ஏற்படுகின்றது. எனவே, இந்தச் சமயத்தில் அலட்சியமாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 19.07.1931
-விடுதலை,5.2.17
வியாழன், 9 பிப்ரவரி, 2017
எல்லாருக்குமே அவமானம்
24.08.1930- குடிஅரசிலிருந்து...
மனிதனை மனிதன் தொடக் கூடாது. பார்க்கக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்ப தானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன் . அதோடு அந்த மதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற் கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன். இந்து மதத்தில் ஒவ்வொருவனும் மற்றவனைக் கீழ் ஜாதியான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள ஆண வத்தை அனுபவிக்கின்றா னேயல்லாமல் தான் மற்றொரு ஜாதிக்கு கீழ் ஜாதியாய் இருக்கின் றோமே என்கின்ற இழிவை உணரும் உணர்ச்சியே கிடையாது. பொதுவாக இந்துக் களுக்கே சுயமரியாதை கிடையாது என்று சொல்லுபவர்களுக்கு இந்த ஒரு காரியமே போதுமான ஆதாரமாகும்.
அன்றியும் இந்து என்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் கீழ் ஜாதியாக மதித்து இழிவு படுத்துவதையும் மனித உரிமை தடுக்கப்பட்டிருப் பதையும் ஈனமான அர்த்தம் கொண்ட சூத்திரன் என்ற பேரால் குறிக்கப்பட் டிருப்பதையும் கண்டு சிறிதும் வெட்கப்படுவ தில்லை. யாராவது ஒருவர் இருவர் வெட்கப்படு வதாய் பாசாங்கு செய்தாலும் காரியத்தில் உதைத்த காலுக்கு முத்தம் வைப்பதுபோல் அந்தபடித் தன்னை இழிவு படுத்துவதற்கு அஸ்திவாரமாகவும், ஆபதமாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதத்தையும் கடவுளையும் போற்றுகின்றான். காக்கப் பாடுபடுகிறான். இப்படிப் பட்டவர்களை எந்த கணக்கில் சேர்ப் பது என்பது நமக்கு விளங்கவில்லை. எவ்வள வோ அபிலாசை களையும், பெருமைகளையும், கீர்த்திகளையும் ஆசைப்படுகின்ற மனிதன் தான் ஏன் கீழ் ஜாதியாய் மதிக்கப்படுகிறான். தன்னை ஏன் சமூக வாழ்வில் இழிவுப் படுத்தப் பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிய கவலை யே இல்லாமலிருக்கின்றான். தன்னுடைய சொந்த இழிவையும், கொடு மையையும் நீக்கிக் கொள்ளக் கவலையும் முயற்சியும் ஆற்றலும் இல்லாத மனிதன் மற்றவர்களுக்குச் சுதந்திரம் வாங்கித் தருகிறேன் என்றால் அதில் ஏதாவது நாணயமோ பொருளோ இருக்க முடியுமா? இலாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப் படலாம், பெறாமைப்படலாம். அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத்திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலானவர் களாகவும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் மதக் கொள்கையேயாகும். அதாவது சமத்துவமும், சகோதரத் துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்தசுத்தமாய் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்ப் பார்கள். ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினேகிதர்களையும், இதரர்களையும், குழந்தைகளையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவை சாத்துவான். இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கிறது. ஆகவே மதக் கொள் கைகளின் உயர்வு, தாழ்வுகளை பலனில் இருந்து பார்த்தறிகின்றதா? அல்லது நாமே எழுதி வைத்துக் கொண்டதிலிருந்து அறி கின்றதா?
இஸ்லாமிய மதம் மதிக்கப்படுவது போல் இந்து மதம் உலக மக்களால் மதிக்கப்படு கின்றதா? ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது? இந்துக் களில் 100க்கு 90பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர், புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில் சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப் படுபவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் இந்த யோக்கி யதை உள்ள மக்கள் பெரிய விஷயங்களில் ஆசைப் படுவதில் என்ன பிரயோஜனம்? அது போலவே இந்து மதத்தில் இந்துப் பெண்களின் நிலை என்ன என்று பாருங்கள். ஒரு வேசிக்கு இருக்கும் சுதந்திரமும் சுயமரியாதையும், சுகமும் கூட நமது பெண் தெய்வங்களுக்கு இல்லை. சொத்தில்லை; படிப்பு இல்லை. விவாக சுதந்திரமில்லை, விதவை ஆகி விட்டால் மறுமணமில்லை. இதற்கு என்ன பெயர் சொல்லுவதென்று எனக்குத் தெரிய வில்லை.
உயிருடன் கட்டையில் வைத்து எரிப்பதை நிறுத்தியதே அவர்களுக்கு பெரிய உபகாரம் செய்ததாய் கருதப்படுகின்றது. ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு பெரிய அபகாரமாய் முடிந்திருக்கிறது. இம்மாதிரி கொள்கைகளுடன் உலக மக்கள் முன்னால் நாமும் நம்மை எப்படி மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும். அதில்லாமல் காட்டு மிராண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா? தவிர இந்த சமயத்தில் இஸ் லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டி இருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றன. இந்துக் கோயில் களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக் கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல என்றும் சகவாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறு தல்கள் என்றும் சொல்லலாம். அது போதிய சமாதானமாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக்காரர்களும் இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோட்சம் தேடிக் கொள்ள நாம் யாத்தி ரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும் என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள் ளுகிறேன்.
ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீமாவது பட்டினியாகவும் தொழில் இல்லாமலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அது தான் யோக்கிய மான பணக்காரனின் லட்சிய மாகும். இந்த குணங்கள் இல்லாத பணக்காரன் கொள்ளைக் காரனுக்குச் சமானமானவனே யாவான்.
தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் தங்கள் மதம் உயர்ந்த மதம் என்று சொல்லிக் கொண்டி ருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப்படுகின்ற இழிவுபடுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க் கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைபடுத்த முயற்சி செய்யவேண்டும். தாங்கள் அனு பவிக்கும் சமத்துவ இன்பத்தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப் படுகின்ற மக்கள் யாவரும் அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். யான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறவேண்டும் என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கியமான மனிதனுக்கும் தலையாய தாகும். அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களே யாவார்கள். ஆகவே சகோதரர்களே! இந்த சமயத்தில் எனக்கு அளித்த சந்தர்ப்பத்தில் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். நீங்கள் தயவு செய்து அவற்றை நன்றாய் யோசித்துத் தங்களுக்குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை தயவுசெய்து தள்ளி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.
-விடுதலை4.2.17