புதன், 20 மார்ச், 2019

வித்தியாசங்களின் வேர்



10.01.1948  - குடிஅரசிலிருந்து....

சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ் வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போக வேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும் படியான காரியமல்ல.

அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காம லிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை மாத்திரம் வெட்டினால், மறுபடியும் அது நன்றாய்த் துளிர்த்து தழைத்துக் கொண்டுதான் இருக்கும். எனவே உற்பத்தி தானமாகிய பார்ப்பனர்களிடமிருந்து அதை ஒழிக்க வேண்டும். அவர்களால்தான் இவ்வித்தியாசங்கள் பரவுகின்றன.

உதாரணமாக எங்கள் வீட்டிற்கு முன் ஒரு குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பனச் சகோதரி வரும்போது ஒரு சுண் டைக்காய் பிரமாணம் புளியும், பஞ்சபாத்திரத்தில் தண்ணீரும் கொண்டு வந்து குழாயைப் புளியால் விளக்கிக் கழுவி, பின்பு தண்ணீர் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தாள். இதைப் பார்த்த நம் சகோதரிகள் நெல்லிக்காய் அளவு புளியும், ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து புளியால் விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள்.

இதைக் கண்ணுற்ற நம் முகமதிய சகோதரிகளும் கொளுமிச்சங்காய் அளவு புளியும், முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள்.

அந்த முகமதிய சகோதரியை தடுத்து உங்கள் மதத்திற்கு வித்தியாச மில்லையே; நீங்கள் கூட ஏன் இப்படிக் கழுவித் தண்ணீர் பிடிக்கிறீர்கள்? என்றால், எனக்கு என்ன தெரியும்? இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ என்று கருதி நான் செய்து வருகிறேன் என்கிறாள்.

இவ்வளவுக்கும் காரண மாயிருந்தவர்கள் யார் என்று பாருங்கள். பார்ப்பனர்கள் இப்படிச் செய்யாதிருந்தால் இவ்வித வழக்கங்கள் பரவ வழியில்லை.

- விடுதலை நாளேடு, 16.3.19

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)

10.01.1948 - குடிஅரசிலிருந்து...

பிச்சைக்காரன் என்பவன் யார்?

பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்.

செல்வவான்கள் என்பவர்கள் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்கு மேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

தரித்திரர்கள் என்பவர்கள் யார்?

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் - நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். தங்கள் வரவுக்கும், தகுதிக்கும் மேல் வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்.

 - விடுதலை நாளேடு, 16.3.19

“வைஷ்ணவாள் செம்பு” (1)

04.12.1948 - குடிஅரசிலிருந்து....

இந்திய யூனியனின் மத்திய சர்க்கார் நேரடி நிர்வாகப் பொறுப்பிலுள்ள ரயில்வே இலா காவில் நமது நாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் அடியெடுத்து வைத்தவுடன் சீர்திருத்த வேலையைச் செய்யத் தொடங்கி இருக் கிறார்கள்! இவர்களின் இந்தச் சீர்திருத்தத்தைப் பார்க்கும் போது இந்தத் தொடக்கமே முடிவாகவும் இருந்து விடட்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இப்படி நாம் ஆசைப்படுவதற்கு காரணம், இவர்களின் சீர்திருத்தப்பணியை நோக்கும்போது, அய்யர் பார்ப்பனர்கள் என்பவர்கள், அய்யங்கார் பார்ப்பனர்களைப் பற்றிக் கூறும் கிண்டல்தான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அய்யர், அய்யங்கார் ஆகிய இருவகைப் பார்ப்பனர் களும், பார்ப்பன சமுதாயம் பற்றிய பொதுக் காரியங்களில்தான் ஒருவருக்கொருவர் எவ்வளவு பகையாய் இருந்தாலும் - எவ்வளவு கருத்து மாறுபாடுடைய கொள்கைக்காரர்களாய் இருந்தாலும் - அவைகளை எல்லாம் அப் போது மறந்துவிட்டு ஒன்றுகூடிக் கொள்வார் களேத் தவிர, மற்றபடி அவர்களுக்குள்ளேயே ஏதாவது தகராறு என்றால் அது மிக மிக பிரபலமாகவும் ருசியுள்ளதாகவும் இருக்கும். காலதேச வர்த்தமானங்களை அனுசரித்து இந்த இரண்டு வகைப் பார்ப்பனர்களும் கோவில் முறையில் சண்டையிட்டுக்கொண்டு, கோர்ட்டுக்கு போய் திராவிடன் பணத்தைப் பங்குபோடும் பழக்கம் இப்போது சில கால மாகக் குறிப்பிடத்தகுந்த முறையில் இல்லை என்றாலும் சுமார்த்தப் பார்ப்பனர்களும், வடகலை அய்யங்கார்களும் சாதாரண வாழ் விலேயே சண்டை பிடித்துக் கொள்வதை சர்வ சாதாரணமாகக் காணலாம். ஆனால் அவர் களோடு சற்று நெருங்கிப் பழக வேண்டும். அய்யங்கார் பாப்பனர்களைப் பற்றி குறை சொல்ல வேண்டும், என்றெண்ணுகிற அய்யர் பார்ப்பனர்கள் போடாப்போ! எல்லாம் ஒங்க வைஷ்ணவாள் செம்புதான்! என்று வேடிக் கையாகவும் அதே சமயத்தில் மானமுள்ள நெஞ்சை ஈட்டியால் குத்துவதைப் போலவும் நறுக்கென்று கூறுவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். இதற்கு அவர்களும் வேடிக்கையாக ஏதாவது திருப்பிக் கூறுவார் களே தவிர மானரோஷத்துடன் நம்மைப்போல் கைகலந்துவிடமாட்டார்கள். இந்த வைஷ்ண வாள் செம்பின் ரகசியம் தெரியாதவர்களுக்கு, இதை அனுபவிக்க முடியாது. ஆகவே அந்த ரகசியத்தை கூறிவிடுகிறோம். இது பித்தளையினாலோ தாமிரத்தினாலோ, அல்லது இரண்டும் கலந்தோ செய்யப்படுகிற செம்பு. அடிப்பாகம் (வயிறு) பெருத்திருக்கும், வாயின் விரிவுக்கேற்றபடி கழுத்தும் இல்லாமல் கையே நுழைய முடியாதபடி கழுத்து மிகமிக சிறுத் திருக்கும். இந்த செம்பு துலக்கியவுடன் நல்ல பளபளப்பாக, முகம் காட்டும் கண்ணாடி போல காட்சி அளிக்கும். ஆனால் உள்ளேயோ...! அது தான் கையே நுழைய முடியாதே. அதற்குள் புகுந்திருக்கும் பாசியை -அழுக்கை எப்படி போக்குவது! உள்ளே அழுக்கும் வெளியே மினுமினுப்பும் உடையதுதான் அய்யங் கார்கள் செயல்கள் என்பது இதன் ரகசியம்.

நம் நாட்டு ரயில்களில் சமீப காலத்தில் யாரேனும் பிரயாணம் செய்து, ரயில்வே ஜங்ஷன்களில் செய்யப்பட்டிருக்கும் பெயர் மாறுதல்களை உற்றுப் பார்த்திருந்தால், இந்த சீர்திருத்தம் என்ன என்பது தெரியும். ஜங்ஷன் களில் உள்ள உணவுக் கடைகளின் பெயர்கள் எல்லாம், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மாற்றி எழுதப்பட்டிருக்கின்றன. அய்ரோப் பியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்பது அய்ரோப் பியன் டையில் ரெவ்ரமெண்ட் ரூம் என்ப தாகவும், இந்தியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்பது வெஜிடேரியன் (சைவ) ரெவ்ரமெண்ட் ரூம் என்பதாகவும், முஸ்லிம் டீடால் என்பது ஜெனரல் டீ ஸ்டால் என்பதாகவும் புகுத்தியும் மாற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கோபால்சாமி அய்யங்கார் ஒருவர் மட்டும்தான் பொறுப்பா? அல்லது சந்தானம் அய்யங்காரும் சேர்ந்தா? என்பது எப்படி இருந்தாலும், இந்தப் பெயர் மாற்றம் வைஷ்ணவாள் செம்பைத்தான் நினைப்பூட்டுகிறது.

மதம், சாதி, இனம், ஆண் அல்லது பெண் ணாயிருந்தால் பிறந்த இடம் ஆகியவற்றின் ஒன்றில் அல்லது பலவற்றின் காரணமாக எந்த பிரஜைக்கும் எதிராகச் சர்க்கார் பாரபட்சமாக நடக்கக் கூடாது என்று 4 நாளைக்கு முன் அரசியல் நிர்ணய நாடக சபாவில் நிறைவேற்றப் பட்டிருக்கிற, அடிப்படை உரிமை என்கிற தீர்மானம் இருக்கிறதே அதை முன்னறிந்து பிரதிபலித்ததுதான் இந்த ரயில்வே கடைகளின் பெயர் திருத்தம் என்றாலும் சரி. தீர்மானம் எப்படி பிற நாட்டவர்களின் கண்களில் மண் ணைத் தூவிவிட்டு, உள்நாட்டில் வருணாசிரம பாகுபாடும் அதன் வக்கிரமப் போக்கும் தலைவிரித்தாட இடங்கொடுக்க உதவுகிறதோ, அதைப் போலவேதான் பெயர் திருத்தமும் வெளித் தோற்றத்தில் மிகவும் உயர்ந்த சமத்துவ முறையிலும் நடைமுறையில் வருணாசிரம முறையிலும் அமைந்திருக்கிறது. நமது நகைச் சுவையரசு என்.எ.கே. அவர்கள் கூறுவது போல், திராவிட நாட்டிலேயே தீண்டாமை இல்லாத இடம் ரயில்களும் ரயில்வேக்களும் தான். தீண்டாமையைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாத இந்த திராவிட நாட்டு ரயில்வே நிலையங்களில் மட்டும் எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? இந்து - முஸ்லிம் வித்தியாசத்தை நீக்குவதற்காக என்றால் அது நம் திராவிட நாட்டைப் பொறுத்தவரையிலும், இல்லாத ஒன்றை உண்டென்று பெயர் பண்ணி, அதை ஒழித்துக்கட்ட முயலும் முயற்சியாகும். இந்து-முஸ்லிம் சாயாக்களுக்கு இடமும், அதையொட்டி மதவெறிக்கு இடமுமாக இல்லாத திராவிட நாட்டில், தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் ஏன் இந்தத் திருத்தத் திருப்பணியில் இறங்க வேண்டும்?

பழைய, இண்டியன் ரெவ்ரமெண்ட் ரூமை எடுத்துக் கொண்டால் சமைப்பதும், அதைச் சப்ளை பண்ணுவதும், அதை ஏற்று நடத்தும் மானேஜிங் பொறுப்பும் பார்ப்பன சமுகத்துக்கே ஏகபோகமாயிருந்து வந்திருக்கிறது. இப்போது இண்டியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்பது வெஜிட்டேரியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்று மாற்றப்பட்டிருப்பதால் சமைப்பவர்கள் மாறிவிடுவார்களா? சப்ளையர்கள் மாறிவிடு வார்களா? மானேஜர்கள் மாறிவிடுவார்களா? அதாவது சைவ உணவு தயாரிக்கும் மற்ற திராவிடர்களும், வெஜிட்டேரியன் ரெவ்ர மெண்ட்டை ஏற்று நடத்த அய்யங்காரர்களின் இந்தத் திருத்தம் பயன்படுமா? அப்படியில்லாத வரையிலும் ஏன் இந்தக் கண் துடைப்பு வேலை?

- தொடரும்

- விடுதலை நாளேடு, 16.3.19

“பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா?

பார்ப்பான் காவடி தூக்குகிறானா?”


05.06.1948 - குடிஅரசிலிருந்து...

கடவுள் என்றால் கல், களிமண், புல், பூண்டு, செடி, கொடி, கழுதை, குதிரை, சாணி, மூத்திரம் இத்தனையும் கடவுளா? கடவுள் என்றால் அறிவுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டாமா? திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறீர்களே! சாமி மயிரா கேட்கிறது? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே? மொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடி விடுகிறார்களே! அப்படி இருக்க உங்கள் மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரைக் காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே அது தகுமா? எந்தப் பார்ப்பானாவது பழனி ஆண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷர்கள் போதாதென்று 6 ஆவது புருஷனையும் விரும்பிய துரவுபதியம்மாளை போய்க் கும்பிடுகிறீர்களே! அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே, உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷர்கள் வேண்டுமென்று வரங்கேட்கவா, அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?
- விடுதலை நாளேடு, 15.3.19

கீழ் ஜாதியார்கள் யார்?

10.01.1948, குடிஅரசிலிருந்து...


கீழ் ஜாதியார்கள் யார்?

ஏவலாள்கள். அதாவது எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையைச் செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக்கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள்.

மேல்ஜாதியார் என்பவர்கள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள், என்பவைகளை மாத்திரம் செய்து கொண்டு கூடுமான வரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளைச் செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள்.

- விடுதலை நாளேடு, 15.3.19

நீங்கள் இன்ப வாழ்வு வாழ.....? -தந்தை பெரியார்

05.06.1948, குடிஅரசிலிருந்து... தாய்மார்களே! நீங்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும். கல்லை கடவுளென்று நம்புவ தையும், பார்ப்பானைக் கடவுள் அவதாரம் என்று நம்பி அவனுக்கு அரிசி பருப்பு அழுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும். சாணி மூத்திரத் தைக் கலக்கிக் குடிப்பது மதம் அல்ல. மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பதுதான் மதம் என்பதை, மனிதனை மனிதனாக மதித்து நடத்துவது தான் மதம் என்பதை, நீங்கள் உய்த்துணர வேண்டும். புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினிமாக் களுக்கோ, புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் என்பன வற்றிற்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. இவை யாவும் பார்ப்பனர்கள் உங்கள் காசைப் பறித்துச் சுகபோகவாழ்வு வாழ்வதற்கு வகுத்துக் கொண்ட வழிகள். நீங்களும் மேல்நாட்டுப் பெண்களைப் போல் சகல உரிமைகளும் பெற்று இன்ப வாழ்வு வாழ வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்களைப் போல் படிக்க வேண்டும். உங்களுக்குச் சட்டத்தின் மூலம் பல உரிமைகள், சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகிய உரிமைகள் வரக் காத்தி ருக்கின்றன. அவ்வுரிமைகளை அனுபவிக்க உங் களுக்குக் கல்வியறிவு அவசியமாகும். நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக்குள்ள பிரியத்தை ஒழித்து விடுங்கள். இவற்றில் பிரியம் வைத்துக் கொண்டிருப் பீர்களானால் ஜவுளிக்கடையிலும், நகைக்கடையிலும் சேலை விளம்பரங்களுக்காக, அவ்வப்போது வெவ் வேறு சேலையுடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்தி வைக்கும் வெறும் பொம்மைகளாகத் தான் நீங்கள் ஆக நேரிடும். ஆகவே, அவ்விருப்பங் களை விட்டு கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத்தாய்மார்களாக ஆக ஆசைப்படுங்கள்.
- விடுதலை நாளேடு, 15.3.19

திங்கள், 18 மார்ச், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள் (1)

13.11.1948 - குடி அரசிலிருந்து...

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச் சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறை களையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?


ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரியநூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள் வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப் பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர் களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்


மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறுகிறன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்து ணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற் கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்தி ருக்கக் கூடியனவும் ஆன கருத்துக் களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக்கின்றன. திருக் குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத் திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு ராமாயணக் காலட்சேபமா?


நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டு மென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க் கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப் பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப்பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!


கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டி லேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட்டுக்காரப் பையன் வரையும், எல்லோ ருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்தி ருக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரைகளும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது. திராவிடர்களை இழிமக்களென்று வலியுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மை யைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும் படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்


ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக்கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழி தன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டதுதான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற் பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற் பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படு கின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

தொடரும்..

 - விடுதலை நாளேடு, 15.3.19