செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஆய்வுலகின் பார்வையில் பெரியார்!

செ. இளவேனில்


தமிழகத்தில் பெரியாரைக் கொண்டாடு பவர்களும் இருக்கிறார்கள், வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்பு களிலுமே அவர் தவிர்க்கவியலாத ஆளுமை யாகவே  இருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஆய்வுப் புலத்தில் பெரியாரை எப்படிப் பார்க்கிறார்கள்?




வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருதுகிறார். தனது "மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா" நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார்." புரட்சிகர சீர்திருத்தவாதி" என்பது பெரியாரைப் பற்றிய அவரது கட்டுரையின் தலைப்பு.

குஹாவின் நூலில் பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தோடு அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தும் பேச்சும் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. 1927-இல் ஆகஸ்ட்டில் குற்றாலத்திலும் அதே ஆண்டு அக்டோபரில் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பெரியார் பேசிய இரண்டு உரைகளின் தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதிகளை வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங் கடாசலபதி மொழிபெயர்த்திருக்கிறார்.

தமிழில் முறையே மதப்புரட்டு, சமய சீர்திருத்தம். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கு 1926 ஆகஸ்ட்டில் "குடிஅரசு" இதழில் வெளிவந்த மதிப்புரை, 1930-இல் "குடிஅரசு இதழில் வெளிவந்த கர்ப்பத்தடை என்ற தலையங்கம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் திருவிசலூரில் கல்யாண விடுதலை என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

புனிதங்களைக் கட்டுடைத்தவர்


அரசியல் துறைப் பேராசிரியரான சுனில் கில்னானி,  "பிபிசி ரேடியோ" 4 வானொலியில் இன்கார்னேஷன்ஸ்! இந்தியா இன் 50 லைவ்ஸ், என்றொரு வரலாற்றுத் தொடரைத் தொகுத்து வழங்கினார். இந்திய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 ஆளுமைகளில் ஒருவராக பெரியாரைப் சுனில் பட்டியலிட்டிருக்கிறார். அத்தொடர் பின்பு அதே தலைப்பில் கட்டுரைத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கிறது. பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு 'புனிதப் பசுக்களைச் சுட்டுத் தள்ளிய வீரர்'.

'பிராமண' ஆதிக்கத்தை எதிர்ப்பவராகவும் கடவுள் சிலையை உடைப்பவராகவும் அடையாளப்படுத்தப் படும் பெரியாரின் அரசியல் வாரிசுகளே அறுபதுகளின் இறுதியிலிருந்து தமிழகத்தை ஆட்சிசெய்கிறார்கள், இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளாத அவரின் மொழிக்கொள்கை இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தைப் பாதுகாத்திருக்கிறது என்கிறார் சுனில்.

காசி பயணம், வைக்கம் போராட்டம், சோவியத் பயணம் என்று பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தை வழங்கும் சுனிலின் கட்டுரை பெண்ணுரிமைக்கான பெரியாரின் போராட்டங்களை வியக்கிறது. இதிகாசப் பெண் பாத்திரங்களைக் கடுமையாக விமர்சித்த பெரியார் பெண் கல்வியையும், பெண்களுக்கான சொத்துரிமையையும், குடும்பக் கட்டுப்பாட்டையும் வலியுறுத்தியவர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு இன்று முன்னிலை வகிப்பதற்கு பெரியாரின் தொடர் பிரச்சாரம் முக்கிய காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் சுனில்.

காந்தி- பெரியார் ஒப்பீடு


கேரளத்தைச் சேர்ந்த இளம் வரலாற்றாய்வாளர் மனு எஸ்.பிள்ளையின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பான "தி கோர்ட்டிசன், தி மகாத்மா அண்ட் தி இத்தாலியன் பிராமின்" இந்திய வரலாற்றை அறுபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் வழியே வெவ்வேறு கோணங்களி லிருந்து விவாதிக்கிறது. இத்தொகுப்பில் பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு "தேசவிரோதிகளின் காலகட்டத்தில் பெரியார்."

"40 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் 'தேச விரோதிகளின்' பட்டியலில் எந்த இடத்தில் இருப்பார் என்பதைக் கற்பனை செய்யத் தேவையில்லை. நல்ல வேளையாக, அவர் வாழ்ந்த காலத்தில் "தேசவிரோதிகள் என்பது போன்ற அடைமொழிகள் உருவாக்கப்பட வில்லை, காந்தியின் எதிரி" என்ற அளவிலேயே அவர் அறியப்பட்டார் என்கிறார் மனு.

காந்தியையும் பெரியாரையும் ஒப்பிட்டு மனு எழுதியிருக்கும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை. 'துறவியின் பக்தியே உருவானவர் காந்தி என்றால், பெரியார் கலகத்தின் உதாரணம். கிராமக் குடியிருப்பு களை விதந்தோதியவர் காந்தி, பெரியாரோ ஆகாய விமானங்களையும் இயந்திரங்களின் வளர்ச்சியையும் வரவேற்றவர். காந்தியின் சீடர்கள் வெள்ளாடை உடுத்தி, பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார்கள் என்றால், பெரி யாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து ஜாதியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தி வாழ்நாள் முழுவதும் உடலைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கப் போராடிக்கொண்டிருந்தார், பெரியாரோ தனது ஆடையைத் துறந்து நிர்வாணச் சங்கத்தில் சேரவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தயங்க வில்லை. ஒரு வைதீக இந்துவாக எரியூட்டப்பட்டார் காந்தி, பெரியாரோ புதைக்கப்பட்டார்' என்று தொடர் கிறது அந்த ஒப்பீட்டுப் பட்டியல்.

காந்தியையும் பெரியாரையும் எதிரெதிராக சித்தரிப் பது அவரின் நோக்கம் அல்ல, இருவரது அணுகு முறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை விவாதிப்பதே. ராமாயண நாயகியான சீதையை இந்தியப் பெண்களின் தூய்மைக்கும் சுயதியாகத்துக்கும் உதாரணமாக காந்தி வர்ணிக்கும்போது, அந்த இதி காசத்தையே அபத்தம் என்று சாடியவர் பெரியார். லட்சியப் பெண்ணை உருவாக்குவதற்காக காந்தி முயன்றுகொண்டிருந்தபோது, பெரியாரோ சாதாரணப் பெண்களை தெய்வங்களாக மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்கிறார் மனு.

பெண்ணுரிமைப் போராட்டத்தில் ஆண்களிட மிருந்து நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்பது பூனைகளால் எலிகளுக்கு எப்படி விடுதலை கிடைக் குமென்று நம்புவதைப் போன்றது என்று பெரியார் எச்சரித்ததும் கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் அக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. புனிதங்களை மறுகட்டமைக்க காந்தி முயற்சித்துக் கொண்டிருந்தபோது பெரியார் அவற்றைக் கட்டு டைத்தார் என்பதே ஒப்பீட்டின் முடிவு. பெரியார் இப்போது நம்மோடு இருந்தால், பின்பற்றுவதைக் காட்டிலும் சிந்திக்கவே சொல்வார் என்று முடிகிறது அந்தக் கட்டுரை.

தமிழகத்தின் அம்பேத்கர்


மகாராட்டிராவில் பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய ஜோதிராவ் பூலே - அம்பேத்கருக்கு இணையாகப் பெரியாரை ஒப்பிட்டு ராமச்சந்திர குஹா தனது கட்டுரையைத் தொடங்கியிருந்தாலும் அவரது கட்டுரை பெரிதும் பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளையே விவாதிக்கிறது. மனு, சுனில், குஹா ஆகியோரின் பெரியாரைப் பற்றிய கட்டுரைகளில் கருத்தடையை வலியுறுத்தும் பெரியாரின் பிரச்சாரமே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் கட்டுரையாளர்களைக் கவர்ந் திருக்கின்றன.

தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் மூவரும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறார்கள். இந்தியச் சூழலில், அம்பேத்கரின் அளவுக்கு பெரியார் இன்னமும் விவாதிக்கப்படவில்லை. அம்பேத்கரைப் போல பெரியார் தனது கருத்துகளை அனைத்திந்திய அளவில் முன்வைக்கவில்லை, தென்னகத்தின் திராவிட கலாச் சாரத்துக்குள்ளேயே அவர் வேரோடிவிட்டார் என்கிறார் சுனில். பெரியாரை காலதேச வர்த்தமானங்களுக்குள் அடக்கிவிட முடியாது.

பெரியாரின் எழுத்தும் பேச்சும் இன்னும் குறைந்த பட்ச அளவில்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படவில்லை. இந்தக் குறை தொடர்வதே பெரியார் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படாததற்கான முக்கி யக் காரணம். பெரியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் தேசியம், பண்பாடு, வாழ்க்கை முறை, தொழிலாளர் உறவு குறித்த அவருடைய குறிப்பிட்டத்தக்க மற்ற கருத்துகளும் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படும் சூழல் நிச்சயம் உருவாகும்.

நன்றி: "இந்து தமிழ் திசை" 17.9.2019

முக்கிய குறிப்பு: தந்தை பெரியார் அவர்களின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிட கழகம் தீவிரமாக முனைந்துள்ளது - கழகத் தலைவர்

- விடுதலை நாளேடு, 18. 9 .19

பெரியார் பிறந்த நாள் செப்.17: பெண்களுக்காக ஆண்கள் பேசத் தேவையில்லை



பிருந்தா சீனிவாசன்


பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நாட் களில்  ஆண்டுக்கொரு முறை சடங்குக்காக மட்டும் நினைவுகூரப்பட வேண்டியவர் அல்ல பெரியார். ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொரு செயலிலும் பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார். காரணம், ஜாதிய ஒடுக்குமுறைகளும் ஆணா திக்கமும் மேலோங்கியிருந்த காலத்திலேயே பெண்ணுரிமையைப் பேசியவர் அவர்.




அறிவிலும் சிந்தனையிலும் நாம் முன்னேறிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலேயே பெண்ணுரிமை குறித்துப் பேசுவது பாவச்செயல் போல் கருதப்படுகையில் நூறு ஆண்டு களுக்கு முன்பே பெண்ணுரிமைச் சிந்தனையைப் பரப்பியதாலேயே அவர் பெரியாராக உயர்ந்துநிற்கிறார்.

பெண்களுக்கும் எதிரி


பண்பாடு, கலாச்சாரம் போன்றவை பெண்களை எப்படி காலங்காலமாக அடிமைப்படுத்தி வைத்திருக் கின்றன என்பதைப் பொதுவெளியில் போட்டுடைத்தவர் அவர். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பின. ஆனால், எதைக் கண்டும் சளைக்காமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். ஆண்களைச் சாராமல் தனித்து வாழும் உறுதி பெண்களுக்கு இருக்கையில் ஏன் தேவையில்லாத சங்கிலிகளைப் பூட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவரது கேள்வி, ஏராளமான பெண்களை பெண்ணியத்தை நோக்கி நகர்த்தியது. குடும்ப அமைப்பையும் அதில் மலிந்து கிடக்கிற பிற்போக்குத்தனங்களையும் மூடப்பழக்க வழக்கங் களையும் விமர்சித்தார். ஆணுக்கு அடங்கி நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு என்று போதிக்கப்பட்டுவந்த பெண்கள் மத்தியில் நின்றுகொண்டு, ஆண்களால் செய்யக்கூடிய அனைத்தையும் பெண்களாலும் செய்ய முடியும் என்று சொன்னார். அந்த வகையில் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்குமே பெரியார் எதிரியானார்.

அரசியலைக் கைப்பற்ற வேண்டும்


'இளம் வயது விவாக விலக்கு மசோதா' குறித்து 1928-இல் தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட்டபோது அதை எதிர்த்துக் குரல்கொடுத்த தமிழகப் பிரதிநிதிகளின் செயலைக் கண்டித்து 'குடிஅரசு' இதழில் எழுதினார் பெரியார். குறிப்பாக, "பால்ய விவாக இல்லா விட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை. புருஷர்களுக்குச் சிறைத் தண்டனை அளித்துவிடுவதால் பெண்களின் நடத்தை அதிகக் கேவலமாகிவிடும்" என்று எம்.கே. ஆச்சாரியா பேசியதைச் சுட்டிக்காட்டி, "இது மனிதத் தன்மைக்கு ஏற்றதாகுமா? சகோதரி களுக்குச் செய்யும் நியாயம் ஆகுமா?'' என எழுதிய துடன், தேசியம் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கும் வீணர்களின் வலையில் இருந்து தப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எழுதினார். உண்மையான சீர்திருத்தத்துக்கும் சுயமரியாதைக்கும் ஏற்ற கொள்கை களில் ஈடுபட்டு, அரசியலையும் சமூக இயலையும் கைப்பற்றி அதைத் தக்க வழியில் திருப்ப வேண்டியது அவசியம் என்றார்.

மாற்றம் தரும் மறுமணம்


கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்ட நாட்டில் ஏன் இன்னும் விதவை மறுமணம் மறுக்கப்படுகிறது என்ற கேள்வி பெரியாருக்கு இருந்தது. கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது கற்புக்குப் பங்கம் விளைவிப்பது என்ற கருத்தை அவர் மறுத்தார். இதைப் பேச்சுடனும் எழுத்துடனும் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயல் படுத்தியும் இருப்பதாக 1926இல் 'குடிஅரசு' கட்டுரையில் சொல்லியிருக்கிறார். திருமணம் செய்துகொடுத்த தன் தங்கையின் பத்து வயது மகள் 60-ஆவது நாளில் அவளுடைய 13 வயது கணவனை இழந்துவிடுகிறாள். அந்தப் பெண் ஓரளவு பக்குவப்பட்டதும் தன் மைத் துனரின் துணையோடு மறுமணம் செய்துவைத்ததையும் அதனால் குடும்பத்தினரின் கோபத்துக்கு ஆளான தையும் அந்தக் கட்டுரையில் பெரியார் குறிப்பிட்டி ருக்கிறார். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்துகொள்வது வழக்கமாகிவிட்ட நம் சமூகத்தில் கைம்பெண் மறுமணம் என்பது இன்றும் கானல் நீராகத்தான் இருக்கிறது.

சொத்துரிமை அவசியம்




பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றவர் சொத்துரிமையை ஏன் பெண்கள் கைக்கொள்ளவில்லை என்று கேட்டார். சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வதாலேயே ஒருவர் பகுத்தறிவாளர் ஆகிவிட முடியாது என்று தன் கழகத்தாரிடமே சொன்ன அவர், "அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகிவிடாது. பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்கிற கொள்கையை ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்?'' என்று விருதுநகரில் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில் 1930இல் பேசியிருக்கிறார் பெரியார்.

அடிமையல்ல, எஜமானி


வீட்டுவேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதைப் பெண்கள் மறந்துவிட்டுப் புருஷனுக்குத் தலைவியாக இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாக இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்துச் செயல்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் தினமுமோ வாரத்துக்கு ஒன்றி ரண்டு நாட்களோ பொது இடத்தில் கூடிப் பத்திரி கைகளைப் படிக்க வேண்டும்; படிக்காதவர்களுக்குப் படித்தவர்கள் படித்துக்காட்ட வேண்டும் என்று சொன் னார். பெரியார் இப்படிச் சொல்லி 90 ஆண்டுகள் கடந்த நிலையில் பொதுவெளியில் அச்சமும் தடையும் இன்றி இயங்குவது பெண்களுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறதா?

பண்டங்களா பெண்கள்?


பெண்கள் தங்களைக் காட்சிப் பொருளாக்கிக் கொள்வதைக் கேள்விக்குள்ளாக்கினார். "பெண்களுக்கு மக்கள் மனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன் என எந்தப் பெண்ணாவது, பெற் றோராவது, கட்டினவராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறினைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங் கரித்துக்கொண்டு பிறர் கவனத்தைத் தன் மீது திருப் புவது இழிவு என்றும் அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப் பொருள் என்ற கருத்தேயாகும்" என்று சொல்லும் பெரியார், "பெண்கள் நகை மாட்டும் ஸ்டேண்டா?" எனக் கேட்கிறார். அதற்காக டீசென்ஸி வேண்டாம் எனத் தான் சொல்லவில்லை என்கிறவர், "சுத்தமும் கண்ணுக்கு வெறுப்பில்லாத தன்மையும் ஃபேஷன் அலங்காரத்தால் அல்ல; சாதாரண குறைந்த தன்மையினால் முடியும் என்றும் உணர வேண்டும்" என்று சொல்லி பகுத்தறிவும் சுயமரியாதையுமே பெண்களின் அழகு என்பதை உணர்த்தினார்.

பெண்களை அடிமைப்படுத்தும் சனாதன முறைகளை அடியோடு எதிர்த்தார். கற்பு நிலையைக் கேள்விக்குள்ளாக்கியவர், கற்பு அவசியம் என்றால் பிறப்பால் சமமாக இருக்கும் இருபாலருக்கும் அது வேண்டும்தானே என்றார். குழந்தைகள் பிறப்பது கடவுளின் வரமாகக் கருதப்பட்டுவந்த காலத்தில் கர்ப்பத்தடையைப் பரிந்துரைத்த சான்றோர் அவர்.

ஆண்மையும் பெண்மையும்


ஆண்மை என்பதே கற்பிதம் என்பதை ஆண்கள் உணர்ந்தால்தான் பெண்மை என்பதும் கற்பிதம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். "பெண்கள், ஆண்க ளுக்கு அடிமைகள் அல்ல; அவர்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமாக இருக்கத் தகுந்தவர்கள் என்பதை நாம் முதலில் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும்" என்று ஆண்களிடம் சொல்கிறார் பெரியார். பெண்மை தழைக்க வேண்டும் என நாம் விரும்பினால் முதலில் ஆண்மை அழிய வேண்டும் என்றவரும் பெரியாரே. ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன் பெண்கள் என்றுமே விடுதலை பெற முடியாது என்றார். "எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எனக் கேட்கும் பெரியார், பெண் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதும் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே என்கிறார். ஆணாக இருப்பதால் தான் சொல்வதைக்கூட கேட்கத் தேவையில்லை என்று சொல்லும் அவர், பெண்கள் தங்கள் அறிவு சொல் வதைத்தான் கேட்க வேண்டும் என்றார். பெண்கள் பகுத்தறிவும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர் கண்ட கனவுகளில் ஒன்று. பெரியார் சொன்னதுபோல அதை நிறைவேற்றி உயர்வது பெண்களாகிய நம் கைகளில்தான் இருக்கிறது.

நன்றி: "இந்து தமிழ் திசை"

(பெண் இன்று -  ஞாயிறு 15.9.2019)

- விடுதலை நாளேடு, 17. 9 .19

இந்திய வரலாற்றில் எந்த ஆட்சியாளரும் சாதிக்காததை சாதித்தவர் அறிஞர் அண்ணா!



தந்தை பெரியார் பெருமிதம்!


பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த பம்பாய் பெருநகரத்தில் அண்ணா அவர்களது பிறந்த நாள், எனது பிறந்த நாள் என்னும் பெயரால் இவ்வளவு ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்து எங்களை வரவேற்றுள்ளீர்கள். அண்ணா அவர்கள் வரும்படியான வாய்ப்பு நமக்கு இல்லை. என்னை அழைத்து எனக்குப் பெரிய மரியாதை ஆடம்பரம், பாராட்டுரைகள் இவைகளைச் செய்துள்ளீர்கள். உங்கள் அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் நன்றி செலுத்துவதுடன், இந்தப் பெருமைகளுக்காக என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன்.

வேறு எவரையும்விட அண்ணா அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில், அவரைப் பாராட்டுவதில் ரொம்ப பொருள் உண்டு.

இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்கு சாதிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன் பலன் அந்த அளவுக்கு ஏற்படவில்லையே இனி மேல் தான் ஏற்படவேண்டும் ஏற்படும் என்று ஆசைப் படுகிறேன். என் முயற்சி எதுவும் வீண் போகவில்லை. தரவேண்டிய அளவுக்கு பலன் தரவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை. எனது அருமைத் தோழர்கள் என்னைப் பின்பற்றி முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதில் வெற்றியும் அடையக்கூடும் என்று நாம் நம்புகிறோம்.

பகுத்தறிவு ஆட்சி - பிரமாண்டமான சாதனை

அண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்த வராவார். இந்நாட்டில் நமக்கு சரித்திரம் தெரிய எவன் எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன், வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன் வேறு எவன் எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும் அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவ ருமே சாதித்ததில்லை, இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை.

ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி  வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங் கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல பிரம்மாண்டமான சாதனை யாகும்.

நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.

அண்ணா செய்த காரியம் இதற்கு முன்னால் ஆண்ட வர்கள் பலரும் செய்ததற்கு மாறான காரியத்தை அல்லவா அண்ணா செய்தார்கள்!

மூவேந்தர்களும் பார்ப்பனர்களும்

சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள்?  அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே!

அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள்!

மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப் பட்டது!

மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.

துணிந்து  கைவைத்தது  அண்ணா  ஆட்சி

பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன் பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே!

முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், சம்பிர தாயம் - இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக் காரன் சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன் வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள். அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற் றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறி வாளர் ஆட்சியாக உள்ளது.

என்னால்கூட பேசவே முடிந்தது

அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப் பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தைச் சின்னாபின்னப் படுத்தி அமைப்பு ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன் வரவில்லையே!

இந்த நிலையில் இருந்த ஆட்சியை திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையை புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்கினார். என்னைப் போன்ற வர்கள் கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஒரு ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே.

அண்ணா ஒருவர்தான் இதைச் சாதித்தார். கடவுள், மதம், ஜாதி, இவைகளை ஒழித்து அந்தக் கொள்கையின் பேரால் ஒரு ஆட்சியை - பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.

பச்சையாகவே அண்ணா சொன்னாரே

தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்?

தி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழிய வேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் என்பது தானே அதன் கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல் லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண் டாக்கி காட்டி விட்டாரே!

அண்ணா அவர்கள் மத்தி யில் காலமானார் என்றாலும் இன்னமும் அந்தக் கொள் கையைக் கொண்ட ஆட்சி தானே நிலையாக இருந்து அதற்கான காரியத்தை செய் கிறது? பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன் என்று அதற்குப் பொருள் என்ன?

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் தீர்ந்தது

கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை - அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பது தானே! ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என் பதைத்தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திரும ணங்களை செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார்.

இது எதைக்காட்டுகிறது கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே இதன் தத்துவம் என்ன? கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், பார்ப்பான் எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே!

வங்காள எம்.பி.யின் வியப்பு

கல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்டு எம்.பி. கேட்கிறார் எங்களால் முடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது என்று?

இம்மாதிரி இந்தியாவில் உள்ள பலரும் ஆச்சரியப் படும்படி அல்லவா அண்ணா அவர்கள் காரியங்களைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்! அண்ணா ஜெயித்தவுடன் நான் இது பார்ப்பான் ஆட்சியாகத்தான் இருக்கும் முன்னேற்றக் கழக ஆட்சியாக இருக்காது. பார்ப்பான் காலடியில் உள்ள ஆட்சியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், எழுதினேன்.

பெருங்காயம் இருந்த காலிடப்பா

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பார்ப்பனரும் வெகு பாடுபட்டார்கள். பார்ப்பனத் தலைவர் ராஜாஜி அவர்களும் அதற்கு ரொம்ப பாடுபட்டார். தி.மு.க. ராமசாமியிடம் இருந்த கட்சி என்றாலும், பெருங்காயம் இருந்த டப்பா, ஆனால் இப்போது காலி டப்பா, நான் வழித்து எறிந்து விட்டேன் என்று கூறினார். அண்ணா இவற்றை ஏதும் மறுக்கவே இல்லை.

இந்த இரண்டையும் பார்த்த நான் இதற்காகவே எதிர்த்தேன். அண்ணா வெற்றி பெற்றவுடன் என்னை வந்து பார்த்தார். எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றார். நானும் ஆகட்டும் என்றேன். பார்ப்பனரும் ராஜாஜியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை சபாநாயகர் தேர்தல் முதற்கொண்டே காட்ட ஆரம் பித்தனர்.

கடவுள் மறுபிறப்பு போன ஜென்மம் பாவம் புண்ணியம் இதை நம்புகிறவரை நமக்குள்ள இழிவு மாறுமோ?


மாற வழி உண்டா?


இழிவு இருக்கிறது என்று சும்மா நினைத்தால் போதுமா; அதற்குள் பின் பரிகாரத்தை தேடினால்தானே அந்த இழிவைப் போக்க முடியும்?


கடவுள், கடவுள் செயல் என்று நினைத்துக் கொண்டே மூளையெல்லாம் அது நிறைந்துபோய் இருந்தால் நம் சாதி இழிவு பிறவி பேதம் ஒழிய முடியுமோ?


அதை ரத்தத்திலே கலந்து அல்லவா அவன் நம்மை கீழ்சாதி ஆக்கியிருக்கிறான்?


செருப்பாலடிக்கும் பிற ஆட்சிகள்

ஆனாலும் அண்ணா அவர்கள் அவரது கொள் கைகளை அமல்படுத்தும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். அதன் காரணமாக மக்கள் ஆதரவும் அதற்குப் பெருக ஆரம்பித்ததுடன், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது.

மற்ற ஆட்சிகளைப் பார்க்கிறோமே மரியாதை கெட்டு, மானம் கெட்டு, ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்வது கட்சிவிட்டு கட்சிமாறுவது, கொலை, கொள்ளை சர்வசாதாரணம் என்றும் தானே ஆட்சிகள் எல்லாம் நடைபெறுகிறது?

மற்ற ஆட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது எவருக்கும் சுலபமாக விளங்கும்.

என் கஷ்டம் எனக்கல்லவா தெரியும்

மற்றபடி என்னை நீண்ட நாள் வாழவேண்டும் என்று பலர் கூறினீர்கள். சொல்லுகிறபடி நடக்கும் சக்தி அதற்கு இருக்குமானால் இன்னும் அதிக நாள் சொல்லலாமே! வாழும் எனக்குத்தானே அதிலுள்ள கஷ்டம் என்ன வென்று தெரியும். நான் படுகிறபாடு எனக்குத் தானே தெரியும்?

மற்றொரு செருப்பு எங்கே?

என்னுடைய கடமை தொண்டு கொள்கைகளை இறுதிவரை பரப்பி மக்களுக்குப் பயன்படும் வகையில் பாடுபடவேண்டும் என்பதுதான் எனது ஆசையாகும்.

மற்றவனெல்லாம் சொல்ல பயப்படுகிறானே என்பது தான் எனது கவலை. நாம் சொல்லும் அருமையான கருத் துக்களைக் கேட்டு ஜீரணிக்கும் அளவுக்காவது மக்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்குள்ள திருப்தி.

அதற்குமுன் எவ்வளவு கடுமையான எதிர்ப்பு நண்பர் வீரமணி அவர்களது ஊரான கடலூரில் சுமார் 25 ஆண்டு களுக்கு முன் என்மீது செருப்பை வீசினார்கள். ஏன் ஒரு செருப்பை மட்டும் வீசுகிறாய் மற்றொன்றும் எங்கே? என்றவுடன் அதையும் வீசினார். எடுத்து என் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

பல ஊர்களில் அழுகிய முட்டை, முட்டை கூட்டுக்குள் மலத்தை நிரப்பி வீசியிருக்கிறார்கள். இப்படி பல மாதிரி எதிர்ப்பு, சங்கடங்கள். இவைகளையெல்லாம் தாண்டித் தானே இந்த அளவுக்கு எங்கள் நாடு பக்குவப்பட்டிருக்கிறது.

குட்டிச்சுவர்கூட கோயிலாகி இருக்கும்

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளை பரப்பினவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று இப்போது இம்மாதிரி அட்டை களை அச்சிட்டு சிலைகள் அடியில் வைப்பதும் கல் வெட்டுகளை பதிப்பிப்பதுமான அளவுக்கு மக்கள் அங்கு தெளிவுபெற்று சிந்திக்கும் பக்குவத்தைப் பெற்றுள் ளார்கள்.

மக்கள் இந்த அளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறார்களே என்ற திருப்திதான் எனக்கு.

இப்படி நாங்கள் பிரச்சாரம் செய்திராவிட்டால் தி.மு.க. ஆட்சி வந்திருக்காவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குட்டிச்சுவரையும் ரிப்பேர் செய்து கோயில் ஆக்கியிருப்பார்கள். வயதானவர்கள் கிழடுகள் எப் படியோ தொலையட்டும் இளைஞர்கள் இது குறித்து துணிச்சலாகச் சிந்தித்து மாறவேண்டும். இன்று இளை ஞர்கள் நன்றாக இக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோமே!

நான் கடவுளானால்...

கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள், பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்றெல்லாம் நாங்கள் பிரச்சாரம் செய்தோம் என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும். எங்களுக்கு அதன் மீது இருக்கிற கோபமா? அல்லது கடவுளுக்குப் பதிலாக கடவுளுடைய இடத்தைப் பிடித்து நாங்கள் கடவுள் ஆக வேண்டும் என்கின்ற ஆசையா?

நான் கடவுள் ஆனேன் ஆனால் என்ன நடக்கும்? என்னால் இப்படி இருக்க முடியுமா? பார்ப்பான் நினைத்த போது பூட்டுவான் நினைத்தபோது திறப்பான், அவன் என்னை வணங்கினாலும் நான் பார்த்துக்கொண்டே தானே இருக்கவேண்டும். அவன் எதைச் செய்தாலும் நான் பார்த்துக் கொண்டுதானே இருக்கவேண்டும். அது என்ன பெருமைக்குரிய பதவியா? பொம்பளை சாமியை ஆம்பிளை அர்ச்சகர் கழுவி குளிப்பாட்டுகிறதை பார்த்து கிட்டு இருக்கிற மாதிரி நானும் பார்த்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்?

கடவுளைக் கண்டுபிடித்து அப்படி ஒன்றை பரப்பின தற்கே காரணம் மக்களை மடையவர்களாக்குவதற்குத் தானே?

சந்திரமண்டல சாதனை எதனால்?

மனிதன்தான் எல்லா ஜீவராசிகளைவிட மேலான பகுத்தறிவு படைத்தவன் மற்ற ஜீவராசிகளுக்கு மாறுதல் கிடையாது. பழக்க வழக்கங்களில் வளர்ச்சி கிடையாது. மற்ற ஜீவன்களுக்குப் பிறக்கும் என்ன அறிவோ அதே அறிவுதான் அவை இறக்கும்போதும் கூட. மனிதன் ஒருவன் தான் சிந்தித்து வளரக்கூடியவன். மனிதனின் தனித்தன்மையே இதில்தான் இருக்கிறது. அதிசயம் அற்புதம் ஆகியவைகளை கண்டுபிடிக்கும் வாய்ப் புள்ளவன் மனிதன் தான்.

சந்திர மண்டலத்துக்குப் போய் திரும்பி வந்து விட்டானே! இங்கிருந்து ஏறத்தாழ 4 லட்சத்து அறுபதாயிரம் மைல் போக வர உள்ள தூரத்தை மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் பறந்து சென்று இறங்கி, அப்பாலோவில் திரும்பிவிட்டது மட்டுமல்ல, அங்குள்ள கல்லையும் மண்ணையும் எடுத்துக் கொண்டு வந்து நமக்குக் காட்டுகிறானே? மனுஷன் பிறந்து எத்தனையோ நாளாகியும் இன்று எப்படி அவனால் அதைச் சாதிக்க முடிந்தது? பகுத்தறிவும் சுயசிந்தனையும்தானே!

எல்லாம் கடவுள் செயல் என்றும், பகவான் செயல் என்றும் சொல்பவன் எந்த வேலையைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு இவன் சும்மா இருக்கிறான்? கடவுள் இல்லாமல் ஒரு மயிர் கூட அசையாது என்று கூறுபவன் இவன் தானே சீப்பை எடுத்து தலையை வாரிக் கொள் கிறான்?

இப்படியே நாம் நம்பி நம்பி அசல் காட்டுமிராண் டிகளானோமே தவிர கண்ட பலன்தான் என்ன?

நாம் அனுபவிக்கிற அத்தனை விஞ்ஞான வசதிகளும் கண்டுபிடித்தது யார்?

நம்ம கடவுளுக்கும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் வெங்காயங்களுக்கும் என்ன சம்பந்தம்? சாஸ்திரம் வேதம் புராணம் இவற்றால் ஏதாவது முடிந்ததா?

கெட்டகாரியம் எல்லாம் அவன் செயல்தானே!

கடவுளை நம்புவது என்பது இன்று அவரவர்களுக்கு ஒரு பழக்கம் போல இருக்கிறதே தவிர நம்பிக்கை என்பது ஒரு சடங்கு என்று ஆகிவிட்டதே தவிர வேறு என்ன? உண்மையாகவே கடவுளை நம்புபவர்கள் யாராவது இருந்தால் இங்கு என் முன்னால் வரட்டுமே!

சும்மா முட்டாள் தனமாக கடவுள் இல்லாமல் நீ எப்படி என்று சிலர் கேட்பார்களே தவிர அறிவுக்கு வாதத்திற்கு அது நிற்குமா? நிற்காதே!

எல்லாம் அவன் செயல் என்றால் நாட்டில் நடக்கும் அவ்வளவு கெட்ட காரியம் விபத்து திருட்டு புரட்டு நாசம் கொலை கொள்ளைக்கு கடவுள்தானே காரணம். இதை எவராவது மறுக்க முடியுமா?

எல்லாம் அவன் செயல் என்பவனைப் பார்த்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தால் அவன் என்ன செய்வான்? நம்மை அல்லவா திருப்பி அடிக்க வருவான்? நாம் உடனே அவன் செயல் அப்பா என்று சொன்னால் உடனே சரி பகவான் செயல் என்று எவனாவது தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ளுவானா?

நாய் கடிக்க வந்தால் யார்மீது கோபம்?

எல்லாம் அவன் செயல் என்றால் அப்புறம் அதற்காக யாரைக் கோபிக்க வேண்டும். என் நாய் உங்கள்மீது கடிக்க வந்தால் உடனே அதை வளர்க்கும் எஜமான் மீதுதானே கோபித்துக் கொள்வீர்கள். என்னய்யா உன் நாயை ஏவிவிடுகிறாயே என்றல்லவா கோபிப்பீர்கள்? ஆனால் அதுமாதிரி ஒருவன் அடித்தால் அது அவன் செயல் அல்ல, அவனைப் பார்த்து கடவுள் செயல் என்று கருதி எந்த பக்தன் சும்மா இருக்கிறான்?

நமது முட்டாள்தனத்தால் தான் நாம் வளர்ச்சியடைய முடியாமல் நாம் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். நாமெல்லாம் இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறோம். இதனை ஏற்றுக் கொள்பவர்களில் 100க்கு 97 பேர் நாம் கீழ் ஜாதிக்காரர்கள் 3 பேர்களான பார்ப்பனர்கள் மேல் ஜாதிக்காரர்கள்.

உழைக்கும் நாம் ஏன் கீழ் ஜாதி, உழைக்காமல் வாழும் 100க்கு 3 பேர்களாக இருக்கும் பார்ப்பனர் ஏன் மேல் ஜாதி என்றால் அது கடவுள் செயல் அவன் தான் உன்னை சூத்திரனாக பறையனாக என்னை பிராமணாளாக பார்ப்பானாக படைத்திருக்கிறான். அதற்கு நீயும் நானும் என்ன சொல்லமுடியும் என்கிறான். அவன் மட்டுமா அப்படிச் சொல்கிறான்?

யார் மிகப் பெரும்பாலானோர் இருந்தும் கீழ் ஜாதி ஆகியுள்ளோமோ அந்த பள்ளன் பறையன் சக்கிலி சூத்திரன் இவர்களையே கேட்டால், ஆம் நாங்களெல்லாம் இழி ஜாதிதான் அது ஆண்டவன் படைத்தது என்கிறான்!

சும்மா நினைத்தால் மட்டும் போதாது

இன்னமும் சூத்திரன் என்றால் பார்ப்பனனின் வைப்பாட்டி மகன் தாசிபுத்திரன் என்று சாஸ்திரத்தில் இந்து மத சட்டத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது! எத்தனை நாளாக இந்தக் கொடுமை இருக்கிறது. இது பற்றி மான உணர்வோடு எவனும் கவலைப்படுவது இல்லையே! இதை சகித்துக் கொண்டுதானே நாம் இருக்கிறோம்.

நமக்கெல்லாம் மானம் முக்கியமல்லவா? இப்படி ஓர் உணர்ச்சி வந்து நாம் ஏன் கீழ் ஜாதி, பிறவி இழிவு எதற்கு நமக்கு என்றெல்லாம் கேட்டால் உடனே அடுத்த ஜென்மத்தில் ஆண்டவன் மாற்றுவார், போன ஜென் மத்தில் புண்ணியம் செய்தான் அவன் பிராமணனாய்ப் பிறந்தான். நீ போன ஜென்மத்தில் பாவம் செய்தாய். பறையனாய் சூத்திரனாய் பிறந்தாய் என்கிறான், இது என் செயல் அல்ல கடவுள் செயல் பகவான் செய்தது என் கிறான் - ஆதாரத்திற்கு மதத்தை சாஸ்திரத்தைக் காட்டு கிறான்.

கடவுள் மறுபிறப்பு போன ஜென்மம் பாவம் புண்ணியம் இதை நம்புகிறவரை நமக்குள்ள இழிவு மாறுமோ? மாற வழி உண்டா?

இழிவு இருக்கிறது என்று சும்மா நினைத்தால் போதுமா; அதற்குள் பின் பரிகாரத்தை தேடினால்தானே அந்த இழிவைப் போக்க முடியும்?

கடவுள், கடவுள் செயல் என்று நினைத்துக் கொண்டே மூளையெல்லாம் அது நிறைந்துபோய் இருந்தால் நம் ஜாதி இழிவு பிறவி பேதம் ஒழிய முடியுமோ? அதை ரத்தத்திலே கலந்து அல்லவா அவன் நம்மை கீழ் ஜாதி ஆக்கியிருக்கிறான்?

நான் தோன்றித்தானே கடவுளைப் பழிக்க மதத்தை ஒழிக்க சாஸ்திரம் புராணக் குப்பைகளை யெல்லாம் புரட்டு என்று காட்டியபிறகு அல்லவா இன்று பல பேர் இதனை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். இவ்வளவு பெரிய கூட்டத்தில் நெற்றியில் சாம்பலும் நாமமும் அடித்த முட்டாள்கள் 10 பேர்கள் கூட உங்களில் இல்லையே. இது எதைக் காட்டுகிறது? எங்கள் பிரச்சாரம் வீண் போகவில்லை. தகுந்த பலனை அளித்துக் கொண்டி ருக்கிறது என்பதைத்தானே!

நமது பிரசாரத்தின் வலிமையைக் கண்டு எங்கள் நாட்டில் பார்ப்பானும் அவனுக்கு வால் பிடிக்கும் சிலரும் வைதீகரும் எதிர்ப்பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள். அவ்வளவு நெருக்கடி தங்களுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார்கள். ஓட்டு வாங்கி வயிறு வளர்க்கும் நிலையில் இல்லாததால் நாங்கள் துணிந்து சொல்ல முடிகிறது!

(1.11.1970 முதல் 5.11.1970 வரை பம்பாயில் பல்வேறு இடங் களில் நடைபெற்ற தந்தை பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொண்டு, பேரறிஞர் அண்ணா படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரைகளின் தொகுப்பு)

- விடுதலை, 12.11.1970, 13.11.1970

 - விடுதலை நாளேடு, 15. 9 .19