ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

கர்ப்பத்தடை


- தந்தை பெரியார்

குழந்தைகள் பெறுவதைக் குறைத்தல் அவசியம்

ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும் பலமும், வீரமும் சுயமரியாதையும் அறிவுமுள்ள வர்களாக இருக்க  வேண்டுமானால் அவர்கள் குழந்தைப் பருவம் முதற் கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும் வளர்க்கப்பட வேண்டும்.  அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டு மானால் பெற்றோர்கள் தங்கள் தகுதிக் கும் சக்திக்கும், போதுமான அளவே குழந்தைகள் பெறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  அப்படி இல்லாமல் சக்திக்கும் அளவுக்கும் மீறி பெற் றோர்கள் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத்திற் குள்ளாவதுடன் குழந்தைகளும் பல வீனர்களாகவும் சௌகரிய மற்றவர் களுமாகி அவர்களைக் கொண்ட தேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகிவிடுகின்றார்கள்.
உதாரணமாக, நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுவோமேயானால் நாளுக்குநாள் ஜனங்களின் எண் ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை யோர்கள் தொழிலில்லாமல், வாழ் வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் காப்பாற்றவும், படிப்பிக்கவும், சக்தியில்லாமல் கஷ்டப் பட்டுக்கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதும் நாம் அனுபவித்தும் பார்த்தும் வருவதுமானச் சம்பவங்களாகும்.  சில குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும் பங்களுக்கும் அதிகமாக பிள்ளைக் குட்டிகளைக் கொண்ட பெரிய குடும் பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிகின்றோம்.  முதலாவது, பிள்ளை களை அதிகமாக பெறப்பெற பெற் றோர்களின் சுகபோகங்கள் தானாகவே குறைந்துகொண்டு வருகின்றன.  அது போலவேதான் ஒரு நாடும் தனது சக்திக்கு மேற்பட்ட மக்களையுடைய தாக ஆகிவிட்டால் அது சதாகாலமும் பஞ்சத்தினாலும் நோயினாலும் துன்பப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதோடு அது தன் அழகையும் முற்போக்கையும் இழந்து சுயமரியாதையையுமிழந்து தயங்க வேண்டியதாகி விடுகின்றது.
இந்த உண்மையை அறியாமலே இதுவரை அநேக சமுக சீர்திருத்தக் காரர்கள் என்பவர்களும். பொருளாதார சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும் தங்கள் நாட்டின் மக்கள் சமுகத்தின் முற்போக்கிற்கும் பொருளாதார முற் போக்கிற்கும் வேறு எத்தனையோ துறைகளில் உழன்று கஷ்டப்பட்டும் பயனடையாமல் சலிப்பின் மீது கடைசியாக ஒரு நாட்டு மக்களை மற்றொரு நாட்டுமக்கள் வெறுக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். சதா காலமும் பிறர் மீதே குற்றம் சொல்ல வேண்டியவர்களாகவுமாகி விட்டார்கள்.  நன்றாய் வாழுபவர்களின் மீது பொறாமை படவேண்டியவர்களாகவும், மற்றவர்களைப் பட்டினி போட்டால் தான் தாம் வாழலாம் என்று நினைக்க வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள். ஆனாலும், சமீபகாலத்தில் சில நிபுணர்கள் இவ்விஷயங்களை நடுநிலைமையிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்த்து இவ்விதக் கொடு மையான நிலைமைக்கு உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்திருக் கிறார்கள்.
அஃதென்னவென்றால், முதலில் குறிப்பிட்டதான அதாவது ஜனங்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று ஜனசமுகத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது என்பதேயாகும். ஆகவே, இந்த முடிவானது இப்போது மேல் நாட்டின் அறிவாளிகள் பலராலும், மற்றும் பொது நல சேவைக் காரர்கள் பலராலும், வைத்திய நிபுணர்கள் பொருளாதார நிபுணர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இத்துறைகளில் இறங்கி, மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து மிக்க முற்போக்கான மார்க்கங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்றியும், இந்தத் தத்துவத்தை அநேக அறிஞர்கள் தங்கள் வாழ்க்கைகளில் அமலுக்குக் கொண்டு வந்து கொண்டுமிருக்கின்றார்கள்.  அதாவது மேல் நாட்டார்களின் படித்த வர்கள் என்று சொல்லப்படும் கூட்டத் தார்களிலேயே அநேகர் கர்ப்பம் தரிக்காமலிருக்கத்தக்க பல உபாயங்களைக் கையாண்டு வருகின்றார்கள்.  இதற்காகப் பல சாதனங்களையும் கண்டுபிடித்து பொது ஜனங்களுக்கு அறிவித்து சில சாதனங் களை வினியோகித்தும்  வருகின்றார்கள்.  ஆனால் சாதாரண ஏழை ஜனங்களும், பாமர ஜனங்களும் இதன் உண்மைத் தன்மையை உணரவோ, பயன் அடைய முடியாமலோ இருந்து வருகிறார்கள் உண்மையிலேயே இம்மாதிரி அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் கருத்தரிக்க விடாமல் - இருக்கக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் மிக்க ஏழை மக்களேயாவார்கள்.
ஆனால், இவர்களோ, இம்மாதிரியான அதாவது கருத்தரிக்காமல் இருப்பதற்கான காரியங்களைப் பற்றிப் பேசுவது கூட நாகரிக விரோதமான பேச்சு என்று கருதுகின்றார்கள். அறிவில்லாத பொது ஜனங்களும் மத விஷயத்திலும், கடவுள் விஷயத்திலும் கண் மூடித்தனமான மூட பக்தியுள்ளவர்களும் இதை மத விரோதமானதென்றும், பாவகரமானதென் றும், கடவுள் கோபத்திற்கு இலக்கான காரியமென்றும்பேசி இந்தத் தத்துவங்களை எதிர்த்து வருவதால் ஏழை மக்களும் பாமர மக்களும் இப்படி ஒரு மார்க்கம் இருக் கின்றது என்று அறியக்கூட சவுகரியமில் லாமல் போய்விட்டது.  ஆனால், மேல் நாட்டில் டாக்டர் மோரீஸ்டோப்ஸ் (விணீக்ஷீஹ் ஷிஷீஜீஷீமீ) என்கின்ற ஒர் ஆங்கிலப் பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து எவ்விதப் பழிப்புக்கும், எதிர்பிரச்சாரத்திற்கும் அஞ்சாமல் இவ்விஷயத்தைக் கர்ப்பத் தடையை பிரச்சாரம் செய்யத் துணிந்ததன் பயனாய், இப்போது இவ்விஷயம், மேல் நாட்டில் எங்கும் சாதாரணமானதும், சகஜமானதுமான விஷயமாய் பேசிக் கொள்ளும்படியாக ஆகிவிட்டது.  அது மாத்திரமல்லாமல், மேல் நாடுகளில் பல இடங்களில் பிள்ளைப் பேற்றை தடுக்கும் படியான வசதிகள் சம்பந்தமாக, பல வைத்திய சாலைகள் ஏற்படுத்தப்பட்டும் இருக்கின்றன.  கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமென்ற ஆசை உடையவர் களுக்கு அம்மார்க்கங்களைக் கற்றுக் கொடுப்பதுடன் அதற்கு வேண்டிய சாதனங் களையும் கையாளும் முறைகளையும் போதிக்கின்றார்கள்.  மருந்து வியாபாரக் கடை முதலியவைகளில்கர்ப்பத்தடைக்கு, அனுகூலமான மருந்துகளும், சாதனக் கருவிகளும் விற்பனை செய்யவும் ஏற் பாடுகள் செய்து இருக்கின்றார்கள்.
இவைகள் வைத்திய நிபுணர்களாலும், சமுகச் சீர்திருத்த ஆராய்ச்சிக்காரர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால் இதைச் சட்ட விரோதமென்று யாரும் சொல்லத் துணியவில்லை.  இது எவ்விதத்திலும் சட்டவிரோதமான காரியமுமல்ல என்பதை யாவரும் உணர வேண்டும்.  ஏனெனில், சட்டவிரோதமான காரியம் என்பதெல்லாம் அன்னியனுக்கும் தனக்கும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய காரியங்களுக்குத்தான் சொல்லலாம். இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ அதிருப்தியோ ஏற்படுவதற் கில்லை.
அன்றியும், இந்தக் கர்ப்பத்தடை முறை என்பது கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கப்பதற்கு உரியதே ஒழிய, கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனை கலைப்பதற்காக ஏற்பட்டதல்ல.  அதற்கு இந்த முறைகள் பயன்படவும் மாட்டாது.  அன்றியும், கர்ப்பம் ஏற்பட்ட பிறகு கலைப்பது என்பது தாயின் சரீர சக்திக்கும், சில சமயங்களில் உயிருக்கும், ஆபத்தை விளைவிக்கக் கூடியதாயிருப்ப தால் கண்டிப்பாக அந்த முறையை யாரும், கையாளக் கூடாது  என்பதே நமதபிப் பிராயம். கர்ப்பத்தைக் கலைக்கும் முறை எதுவானாலும் அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதேயாகும்.  தேசப் பொது நன்மையையும், சமுக நன்மையையும் மாத்திரமே உத்தேசித்து, அறிஞர்கள் கர்ப்பத்தடையைக் கண்டுபிடிக்கவில்லை மற்றும் என்னென்ன காரியங்களுக்கு கர்ப்பத்தடை அவசியமென்பதையும் சற்று விளக்குவோம்.
பெண்ணானவள் திட சரீரியாயில்லா மலும், காயலாவுடனும், சரியான அமைப்புப் பொருந்தி சரீரமாயில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்து, பிள்ளைகளைப் பெறுவது என்பது அவளுக்கு மிகவும் அபாயகரமானதாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்.   உதாரணமாக. ட்சயரோகத் தாலும் நீரிழிவு வியாதியாலும், நெஞ்சு துடிதுடிப்பினாலும்பீடிக்கப்பட்டிருக்கின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் அதிகமாக சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிக்க ஆபத்துக்கும் கஷ்டத்திற்கும் உள்ளான கெடுதியாகும். தொற்று வியாதி, மேக சம்பந்தமான வியாதி, காக்கை வலிப்பு, பைத்தியம், கேனம் முதலிய வியாதியுள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதும் பயனற்றதும் வாழ்க்கையில் மிக்க கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதுமாகி விடும். பிரசவத்தினால் சரீரமெலிவும், பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவசரீர முடையவர்கள்  சுபாவசரீரமுடையவர்கள் மறுபடியும், மறுபடியும் கர்ப்பமானால், சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும். ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையைப் பெற்று, அது நன்றாக பால் குடித்து வளர்வதற்கு முன்னாலும் முதலில் கர்ப்பமாகி பிள்ளை பெற்ற பலவீனம் நீங்குவதற்கு முன்பும் கர்ப்பமாகி விட்டால், முதல் குழந்தை சௌகரியமில்லாமல்  மட்டு மல்லாமல்  மறு குழந்தையைப் பெறு வதற்கும் போதிய சக்தியில்லாமல் போய்விடும்.
பெண்ணும், ஆணும் தகுந்த வயது அடைவதற்கு முன் அதாவது பெண்கள் 22 வயதுக்கு முன்னும், புருஷர்கள் 25 வயதுக்கு முன்னும், சதிபதிகளாயிருக் கும் போது பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டால், அந்தக் குழந்தைகள் மிக்க இளமைப்பருவத்தின் காய்ப்பாகி உறுதி யற்ற சரீரக் கட்டுடையதாகி விடும்.  குடும்பத்திற்குப் போதியவரும்படி இல்லாத நிலையில் பெண்கள் பிள்ளை களைப் பெற்று விட்டால் குடும்பத்திற்குத் தரித்திரமும், கஷ்டமும் அதிகமாகி வாழ்க்கை திருப்தியுமற்றதாகி  விடும். அன்றியும், ஆண், பெண் ருதுசாந்தியான வுடன் பெண் கர்ப்பமாகிவிட்டால் கொஞ்சகாலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம். கல்வி இன்பம் அடைவதற்குச் சாவகாசமில்லாமல் போய்விடும். இவ் வளவு விஷயங்களில், பெண்கள் கர்ப்ப மாவது அசம்பாவிதமா யிருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கு இந்தக் கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக் கின்றது.  என்னவெனில் பெண்களுக்குக் கர்ப்பத்தை உண்டாக்குகின்ற பொறுப்பு மாத்திரம் ஆணை சேர்ந்ததாயிருக்கின் றதே தவிர, மற்றபடி கர்ப்பமான நிமிஷ முதல் பிள்ளை பெறும் வரை, அதன் பொறுப்பு முழுவதும் பிள்ளை பெறும் போது அடையும் பிரசவ வேதனையும், அதனால் உண்டாகும் ஆபத்துகளும்  பெண்களே  அடைகின்றார்கள்.  பிள் ளையைப்பெற்ற பின்பும், தாயானவள் தான் இரத்தத்தைப் பாலாக்கி, குழந்தை களுக்கு ஊட்டி வளர்க்கின்றாள்.
குழந்தைக்கு வரும் வியாதிகளுக்குக் தானே பத்தியமிருக்க வேண்டியவளா கிறாள்.  அதைச் சுமந்து போஷிக்கும் வேலை முழுவதும் தாயே செய்ய வேண்டியவளாகிறாள்.  பெண்ணானவள் ஒன்று இரண்டு பிள்ளைகளைப் பெற்ற வுடனேயே சகல விதசுகபோகங்களிலும் விரக்தியுடையவளாகிவிட வேண்டிய வளாகிறாள்.
குழந்தை பெற்ற உடனே குழந்தையின் போஷனையையும், வளர்ச்சியையும் உத்தேசித்துத் தனது சுதந்திரத்தைவிட்டு புருஷனுக்கும். குடும்பத்திற்கும் அடிமையாகிவிட வேண்டிய வளாகிறாள்.
புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும் பெண் ஜாதி ஒரு புருஷனைத் தவிர, வேறு புருஷனை எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த  தடையாயி ருக்கின்றது.
பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்கு சுதந் திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டு விட நேரிடுகின்றது.
சிறிதளவா வது  சுயேச்சையுள்ள பெண்ணாய் விளங்குவதைவிட, பிள்ளைகளைப் பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்க வேண்டியதாய் இருக்கின்றது.  கூறி வந்தவைகளாலும், இதுவரை இன்னும் பல காரணங்களாலும் பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும் என்று சொல்லுகின்றோம்.
ஆகவே, இந்தத் தலையங்கத்தில் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி ஒருவாறு விளக்கினோம்.  இனி அடுத்த வியாசத் தில் அதன் உபாயங்கள் என்ன என் பதைப் பற்றி நிபுணர்கள் என்பவர்களின் அபிப் பிராயத்தை எடுத்து விளக்கம் எண்ணியுள்ளோம்.

- குடிஅரசு - கட்டுரை - 01.03.1931
- விடுதலை,1.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக