ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

இனியாவது புத்தி வருமா?(கோயில் நுழைவு நாடகம்)


தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஆலயப் பிரவேசம், என்னும் பேரில் காங்கிரசு செய்து வந்த கிளர்ச்சியை அப்போதே நாம் கண்டித்து எழுதி வந்ததுடன், உலகில் கோவில்களே இருக்கக் கூடாதென்றும், அதற்கு எவரையும் செல்லவிடக் கூடாதென்றும், சொல்லியும் எழுதியும் வந்தது யாவரும் அறிந்ததாகும். மற்றும் கோவில்களைக் கள்ளர் குகையென்று கிறித்துவும், கோவில்கள் இடித்து நொறுக்கித் தள்ளப்பட வேண்டியது என்று முகம்மதுவும், கோவில்கள் விபசாரி கள் விடுதி என்று காந்தியும் சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததாகும்.
தோழர் காந்தியார் கோவில்களை விபசார விடுதி என்று ஒரு சமயத்தில் சொல்லியிருந்தாலும், இப்பொழுது இரண்டொரு வருஷ காலமாய் அவ்விபசார விடுதிக்கு ஆள் பிடித்துவிடும் வேலையை விரயமாய் செய்து வந்ததுடன் அதற்காகப் பத்து லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி வந்ததும் யாவரும் அறிந்ததாகும்.
தீண்டப்படாதாருக்கு அரசாங்கத்தார் அரசியலிலும், உத்தியோகத்திலும் தனித் தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்த பிறகு அதை ஒழிக்கக் கருதிய காந்தியார், தீண்டாதாருக்கு நல்ல பிள்ளையாகக் கருதி அவர்களுக்குக் கோவில் பிரவேசம் ஏற்பாடு செய்து கொடுப்பதாய்  வாக்கு கொடுத்து அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டும் என்று சட்டசபை சங்கத்தினர்களுக்கு உபதேசம் செய்து ஒரு மசோதாவும் கொண்டுவரக் கருதிச் செய்து அதை மற்ற மெம்பர்கள் ஆதரிக்க வேண்டு மென்றும் செய்வதாகவும் சொல்லி, அந்தப்படி ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதும் யாவரும் அறிந்ததாகும்!
அம்மசோதா பொதுஜன அபிப்பிராயத்துக்கு  சர்க்காரால் அனுப்பப்பட்ட சமயத்தில் காங்கிரசு தலைவர்கள் பண்டித மாளவியா முதற்கொண்டு டாக்டர் ராஜன், சத்தியமூர்த்தி இறுதியாக உள்ளவர்கள் அம்மசோதா இந்து மதத்துக்கு விரோதம் என்று சிலரும், அதன் கருத்து ஒப்புக்கொள்ளப் படுவதாய் இருந்தாலும் சட்டம் செய்யக்கூடாது என்று சிலரும் அபிப்பிராயங்கள் கொடுத்து பிரசாரமும் செய்து வந்ததல் லாமல் கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒரு அறிக்கை வெளியிட்டு அதை காந்தியாரையும் ஒப்பச் செய்து அம் மசோதாவின் தலையில் ஒரு அடி அடித்து அதை கசகச வென்று நசுக்கித் தள்ளிவிட்டார்கள். அவ்வறிக்கை சாரம் என்னவென்றால் :-
தீண்டாமை விலக்கு விஷயத்தில் காங்கிரசு எவ்வித அபிப்பிராயம் கொண்டிருந்த போதிலும் ஆலயப்பிரவேச விஷயத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். 1. இந்துக்களல்லாதார் கலந்து ஓட்டு பெற்று மசோதா நிறைவேறுவதைக் காந்திஜியும், காங்கிரஸ்காரரும் விரும்ப வில்லை.
2. மேல் ஜாதி இந்துக்கள் சம்மதமில்லாமல் மத சம்பந்த மான பழக்க வழக்கங்களையோ, சடங்கு களையோ தொடக் கூடாது.
3. காங்கிரசுக்காரர்கள் இம்மசோதாவுக்கு இப்போது எவ்வித அபிப்பிராயமும் கொடுக்கக் கூடாது. இதைப் பற்றி நன்றாய் தீர்க்காலோசனை செய்ய வேண்டி யிருக்கிறது என்பதாகும்.
இதைக் கண்ட பின்பும் மாளவியா எதிர் கட்சி ஆரம் பித்ததைப் பார்த்த பிறகும் தோழர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் ராஜன் முதலியோர் சட்டம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்த பின்பும், சர்க்கார் இம் மசோதா விஷயத்தில் அலட்சியம் காட்ட ஆரம்பித்ததும், பொது ஜன அபிப்பிராயம் சாதகமாயில்லை என்று சொல்ல வேண்டியிருந்ததும், கடைசியாக இதை இந்து சமுகம் ஆதரிக்காததால் சர்க்கார் எதிர்க்க வேண்டியவர்களாகி விட்டார்கள் என்று சொன்னதும், ராஜபகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தீண்டப்படாதாருக்கு மத விஷயங்களில் சமத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொன்னதும் ஆன காரியங்கள் அதிசயமான விஷயமாகாது. காங்கிரசுத் தலைவர்கள் கருப்பு (திருட்டு) பாஷையில் பேசினார்கள். சர்க்காரும் ராஜ்பகதூரும் வெள்ளையான பாஷையில் பேசினார்கள் என்பதை விட இதில் பிரமாத வித்தியாசமெதுவும் இல்லை.
கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் சமாதானமானது, குதிரை கீழே தள்ளினதுமல்லாமல் புதைக்கக் குழியும் பறித்தது என்பது போல் இந்த அறிக்கை காந்தியாரின் சம்மதம் பெற்றதாகும் என்றும் சொல்லிவிட்டார்.
இதிலிருந்து காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை தீண்டாதார் விஷயத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள நல்லதொரு சமயம் ஏற்பட்டது என்று தான் கருத வேண்டும்.
எனவே இனியாவது தீண்டப்படாதவர்களாகவும் தீண்டப் படாதவர்களாய்க் கருதப் படுபவர்களாகவும், தீண்டப்படாதார் என்று ஆதாரங்களிலும் சர்க்கார் தீர்ப்புகளிலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறவர்களாகவும், இருந்து வரும் மக்களுக்கு புத்தி வருமா?  அல்லது இன்னமும் காங்கிரசு காங்கிரசு காந்தி காந்தி என்று கட்டி அழுது ஈன ஜாதிக்காரர்கள் என்று உலகோர் கருதவும் கல் மேலெழுதவும் அனுகூலமாய் நடந்து கொள்வதையே கருமமாய் கருதுவார்களா? என்பதே நமது கேள்வி.
- பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934

சுயராஜ்யக் கட்சி செத்தது,
அது நீடூழி வாழ்க
சுயராஜ்யக் கட்சியாரின் யோக்கியதை நாடறிந்ததென்றும் அதற்கு நல்ல பேரில்லையென்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே அதன் தலைவர்கள் என்போர்கள் தெரிந்து கொண்டு விட்டதால், அதை அது பிறந்த தீட்டு வீட்டிற்குள்ளாகவே கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு காங்கிரசே சட்டசபை களுக்குப் போட்டிபோட வேண்டும்.
ஆனால் சுயராஜ்யக் கட்சியின் பிரமுகர்களே சட்டசபை போட்டி கமிட்டியில் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டார்கள். இது மக்களை ஏய்க்கச் செய்த சூழ்ச்சியே ஒழிய, மற்றபடி சட்டசபையில் போய்ச் செய்யப் போகும் காரியத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பதோடு, சட்ட சபைக்கு அபேட்சகர்களாகத் தெரிந்தெடுக்கப் போகும் நபர்களிலும் எவ்வித மாறுதல்களும் ஏற்படப் போவதில்லை.
- புரட்சி - கட்டுரை - 27.05.1934
-விடுதலை,19.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக