திங்கள், 30 நவம்பர், 2020

பெரியார் பேசுகிறார் : வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்!

தந்தை பெரியார்

நகை வியாபாரி:   அய்யா, தாங்கள் என்னிடம் காலையில் காசு மாலை வாங்கி வந்தீர்களே! அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்க்ண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கிறேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாகயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.

வைதீகன்: செட்டியாரே, அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசு இருந்தது. எட்டு எண்ணிக்கைக் கொண்டது. எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயிவருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.

நகை வியாபாரி: அப்படியானால் தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

வைதீகர்: ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆட்சேபணையில்லை. காலமே நேரத்தில் வாருங்கள், கொடுத்து விடுகிறேன்.

நகை வியாபாரி: அவர் இன்று ராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர் ஆனதால் தயவு செய்து இப்பொழுதே கொடுத்துவிடுங்கள்.

வைதீகர்: செட்டியாரே, தாங்கள் என்ன நாஸ்திகராய் இருக்கின்றீர்கள்! வெள்ளிக்கிழமை, அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா?

நகை வியாபாரி: என்ன அய்யா! வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டு வருகிறேன் என்று எடுத்துக்கொண்டு வந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால் ‘வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம்’ என்கிறீர்களே, இது என்ன ஒழுங்கு. ஊரார் நகைக்கு நாள் என்ன? நேரம் என்ன? என்பது எனக்கு விளங்கவில்லையே?

வைதீகர்: (தனக்குள்ளாகவே இந்த இழவு நகையை நாம் ஏன் ‘இந்த மனிதனிடம் வாங்கி வந்தோம்’ என்று நினைத்துக்கொண்டு) என் புத்தியை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும். உம்ம கடைக்கு வந்ததே பிசகு, தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும்போதே மணி பத்தரை இருக்கும், நல்ல ராகு காலத்தில் எடுத்து வந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த்தான் தீரும். எனக்கு புத்தி வந்தது. இனி இம்மாதிரி செய்ய மாட்டேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.

நகை வியாபாரி: இது என்ன அய்யா தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால் நாள், கோள் எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்களுக்கு எவன் புத்தி சொல்லிக்கொடுத்தான். அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையை கொடுங்கள், நேரமாகுது.

வைதீகர்: நீங்கள் ‘குடிஅரசு’ பத்திரிகை கட்சியைச் சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரத்தையும், கேலி செய்கின்றீர்களே! அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை; கெட்டது இல்லை; மேல் இல்லை; கீழ் இல்லை; கோவில் இல்லை; புராணம் இல்லை; பறையனும், பார்ப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாத்திகம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல் பேசுகின்றீர்களே!

நகைக்காரர்: நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்துகொள்ளும், அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்துவிடும். பவுன் விலை இறங்கப் போகின்றது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறு ஓர் ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர், இருட்டு ஆகப்போகிறது. சீக்கிரம் எடுத்துக்கொண்டு வாரும்.

வைதீகர் (வீட்டிற்குள் போய் சம்சாரத்திடன் யோசிக்கின்றார்) என்ன செட்டியார் நகை கேட்கின்றார்!

அம்மா: இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லட்சுமியை வீட்டைவிட்டு வெளியில் கொடுக்கலாமா?

புருஷன்: எல்லாம் நான் சொல்லிப் பார்த்தாய்விட்டது. செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்.

அம்மா: (பலமாய் சத்தம் போட்டுக்கொண்டு வெளியில் வருகிறபோது பேசிக் கொண்டு வருவதாவது) செட்டியாருக்குப் புத்தியில்லை. அவர் என்ன செட்டியா, மட்டியா? வீடு வாசல் வைத்து பிழைத்த மனிதரா, நாடோடித் தடம் போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கின்றான். நான் போய் கேட்கிறேன். என்ன செட்டியாரே உமக்குப் புத்தியில்லை. இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் ஓஹோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்துவிட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்விடுவீரா அல்லது வேறு ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் என்கிறீரே, அவன் கொள்ளையில் கோய்விடுவானா? உமக்குத்தான் புத்தியில்லாவிட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்கவேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப் போய்க் கேட்கச் சொல்லாமா என்கிற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச் சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன?

(இந்தச் சமயத்தில் மகன் வந்துவிட்டான்.)

மகன்: என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?

தாயார்: இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசி மாலையைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கு நிற்கிறார்!

மகன் அதெல்லாம் இருக்கட்டும்! ஜாஸ்தி பேசாதே! நமக்கு காசி மாலையேது? நம் வீட்டில் இல்லையே - அப்பதான் வாங்க வேண்டும் என்று நேத்து மத்தியானம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள்ளாவா வந்துவிட்டது?

தாயார்: உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ! காலையில் கடைக்குப் போனார். இந்தச் செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது. அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கிவந்தார். நேற்று நினைக்கும்போதே ராகுகாலம். இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போதும் ராகு காலம், வழியில் வரும்போது பூனை குறுக்கே போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டாமென்று தலையைச் சுத்தியெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படி செய்யாமல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப் பார்த்தேன். காசு அறுபத்தி எட்டாயிருந்தது. உடனே தலையைப் சுற்றி எறிந்துவிட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார் அவசரப்படரார்; யாரோ வேறே கிராக்கி காத்துக் கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.

மகன்: அய்யய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாயிருக்குது. குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது. வெள்ளியாவது, சனியாவது, ராகுவாவது, கேதுவாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டு வெள்ளியும் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது! பேசாமல் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிடு; இல்லாவிட்டால் பெட்டியை உடைத்துவிடுவேன் தெரியுமா?

(அதற்குள் அப்பா வந்துவிட்டார்)

அப்பா: என்னடா பயலே! பலே அதிகப் பிரசங்கியாய் போய்விட்டே! நான் அப்போதே உன்னை குடிஅரசு பத்திரிகையைப் படிக்கவேண்டாம், கெட்டுப் போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டுக் குட்டிச் சுவராய் போய்விட்டாயல்லவா? கர்மம், கர்மம், இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து, ஊரிலுள்ள சிறுபிள்ளைகளையெல்லாம் நாஸ்திகராக்கிவிட்டது.

மகன்: வெகு நன்றாயிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியைப் பிடுங்கி கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக்க்ண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டான்.

பிறகு புருஷனும், பெண்ஜாதியும் ராகு காலத்தில் அந்தச் செட்டியாரிடம் நகை வாங்கி வந்ததே பிசகான காரியம். இதுவும் வரும், இன்னமும் வரும் எவ்வளவோ கெடுதியும் வரும் என்னை அடிக்கவேண்டும்..... லே.

(8.1.1928 குடிஅரசு இதழில் “சித்திரபுத்திரன்’’ என்ற புணைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.)

- உண்மை இதழ் ஜூன் 16 ஜூலை -15 .2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக