11.12.1948 - குடிஅரசிலிருந்து...
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பவர்களின் பகுத்தறிவுச் செல்வம், எப்படிக் கொளுத்தப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு கார்த்திகைத் தீபம். ஆண்டுக்கொருமுறை குடம் குடமான நெய்களைக் கொட்டி நெருப்பெரித்துக் காட்டும் மகா புனிதமான சிறு பிள்ளை விளையாட்டு வேடிக்கை, இந்த ஆண்டிலும் இன்னும் 3, 4 நாட்களில் வரப்போகிறது என்பதைப் பார்ப்பன நவீன பஞ்சாங்கங்கள் (தேசிய தினசரிகள்) அறிவித்துவிட்டன. அறிவும், செல்வமும், அருமையான காலமும் வீணாக்கப்படும் இந்தக் கொளுத்தும் பண்டிகைக்கு மகா ஜனங்களே வந்து போவீர்! மாபெரும் புண்ணியத்தைக் கட்டிக் கொள்வீர்! என்று கூறிவிட்டார்கள் நமது மதச் சார்பற்ற சர்க்கார். உணவுக்குத் திண்டாட்டமில்லை, ரூபாய்க்கு 2 படி அரிசி தர ஏற்பாடு என்கிறது அதிகாரிகளின் அறிக்கை. திருவண்ணாமலையைச் சுற்றிலும் காலரா! ஆனாலும் அக்கறையில்லை! புறப்படுவதற்கு முன்னே காலரா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள்! எப்படியும் வந்து போங்கள்! என்று அறிவிக்கின்றார்கள் மதச்சார்பற்ற சர்க்காரின் சுகாதார அதிகாரிகள்.
இவ்வளவு தடபுடலாக சர்க்கார் வரவேற்புக் கூற, மத ஆதிக்கக்காரர்கள் மடமையை விலை கூறி விற்க, பார்ப்பனர்கள் தெய்வத்தின் பேரால் பகற்கொள்ளை அடிக்கும் இந்தப் பண்டிகை ஏன் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை நாம் பலமுறை விளக்கி வந்திருக்கிறோம். இருப்பினும் சுருக்கமாக இப்போதும் கூறுகிறோம்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று கடவுள்கள். ஒரு காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் தான் பெரியவர்கள் என்கிற விஷயத்தில் சண்டை உண்டாகி விட்டதாம். வாய்ச்சண்டையில் ஆரம்பித்தது கைச்சண்டையில் முடிந்தும் சண்டை நின்ற பாடில்லையாம். இந்த 2 கடவுள்களும் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்பதையறிந்து 3ஆவது கடவுளான சிவன் அவர்களுக்கு மத்தியில் ஜோதி உருவாக வந்து நின்றாராம். சண்டை போட்டவர்கள் அதை நிறுத்திவிட்டுத் திகைத்து நிற்க, ஜோதி சிவன் அவர்களைப் பார்த்து, இந்த ஜோதியின் அடியையோ, முடியையோ யார் முதலில் பார்த்துவிட்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்பதாக அசரீரியாகச் சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றியாக உருவெடுத்து அடியைக்காண புறப்பட்டாராம். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து முடியைக் காணப் பறந்தாராம். பறந்தவர் பறந்துகொண்டே இருந்தாராம். வழியில் ஒரு தாழம்பூ கீழ்நோக்கி வந்ததாம், ஏ தாழம்பூவே! நீ எங்கிருந்து வருகிறாய்? என்று பிரம்மா அதைக் கேட்டாராம். நான் கோடிக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் பரமசிவனுடைய முடியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறியதாம் அந்தத் தாழம்பூ. தாழம்பூவின் சரித்திரத்தைக் கேட்ட பிரம்மா தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொல்லி, தான் முடியைக் கண்டுவிட்டதாகக் கூறுவதற்குச் சாட்சி சொல்ல வேண்டுமென்று கெஞ்சினாராம். அதற்குத் தாழம்பூ ஒத்துக்கொள்ளவே, ஜோதியிடம் வந்து முடியைக் கண்டு விட்டேன் என்றாராம் பிரம்மா! ஆமாம், பார்த்துவிட்டார் என்றதாம் தாழம்பூ! உடனே சிவன் கோபங்கொண்டு பொய் சொன்னதற்காக இருவரையும் சபித்துவிட்டாராம். அதனால்தான் பிரம்மாவுக்கு கோவில் இல்லையாம், தாழம்பூவைச் சிவனுக்குச் சூட்டுவதில்லையாம். பிரம்மா சாபம் பெற்ற பிறகு, பிரம்மாவும், விஷ்ணுவும் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்பதை ஒப்புக்கொண்டு, இதன் அடையாளமாக, இந்த மலையின் மேல் ஜோதி வடிவாக இருக்க வேண்டுமென்று சிவனை வேண்டிக் கொண்டார்களாம். அதற்குச் சிவன் ஒத்துக்கொண்டு ஒவ்வொரு கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலும் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்றாராம். இதுதான் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருவதற்குக் காரணமாக அருணாசல புராணம் கூறும் கதை.
இந்த கார்த்திகைப் பண்டிகைக்கு மற்றொரு கதையும் கூறப்படுகிறது என்றாலும், திருவண்ணாமலைக்கும், அந்தக் கதைக்கும் சம்பந்தமில்லையாதலால், அதை இப்போது விட்டுவிட்டு இந்தக் கதையை ஆராய்ந்து பார்ப்போம்.
கதையினுடைய முடிவுப்படி, அதாவது சிவன் என்கிற கடவுள் மற்ற இரண்டு கடவுள்களுக்கு வாக்குக் கொடுத்தபடி இப்போதெல்லாம் வாக்கைக் காப்பாற்றுவதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆண்டுதோறும் அவரே ஜோதியாக நின்று வந்தார் என்பதற்கும் கதைப்படியும் கூட எவ்வித ஆதாரமும் இல்லை. அந்தக் கடவுளுடைய பக்தர்கள்தான் அந்தக் கடவுளுடைய மானத்தைக் காப்பாற்றுவதாகக் கருதிக்கொண்டு, நாம் அறிந்தவரை செயற்கை முறையில் ஜோதியை உண்டு பண்ணிக் காட்டி வருகிறார்கள்.
இந்தக் கதையை உண்மையென்று வைத்துக்கொண்டால்,
1. முதலில் கடவுள்கள் மூன்றுபேர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2. கடவுளர்கள் ஒருவருக்கொருவர் கர்வத்தால் வாய்ச்சண்டையும் போடுவார்கள், காயம் படாமல் கைச்சண்டையும் போடுவார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
3. கடவுளர்களாயிருந்தாலும் மேலே பறப்பதாயிருந்தால் பறவை வடிவமாகவும், கீழே போவதாயிருந்தால் பன்றி வடிவமாகவும் ஆகித்தான் போகவேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
4. கோடிக்கணக்கான வருஷங்களாக வான்வெளியில் வாடாமல், கருகாமல் வந்து கொண்டிருக்கும், தாழம்பூ என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்; தாழம்பூ வாய்விட்டுப் பேசும் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. கடவுள்களே சமயம் வந்தால் பொய் சாட்டிவிடத் தயாராய் இருந்தார்கள், பொய்சாட்சி கூறச்செய்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இப்படியாக, இந்தக் கதையிலிருந்து, இன்றைய மனிதனின் அறிவுக்கு ஒவ்வாத முறையில் பல இருந்தாலும் கூட. இந்தக் கதை கடவுள்களுடைய பெருமையைக் காட்டப் பயன்படுகிறதா? அல்லது கடவுள்களுடைய அயோக்கியத்தனங்களைக் காட்ட ஆதரவாயிருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்கும்படி நமது முதல் மந்திரி ஓமந்தூராரிலிருந்து மற்றைய பக்த சிரோன்மணிகள் வரை பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம்.
ஆபாசமான இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்படும் ஒரு பண்டிகைக்கு எத்தனை மக்களுடைய எவ்வளவு பணம் வீண் செலவாக்கப்படுகிறது? இதனால் மற்ற ஊர்களுக்கும் தொத்து நோய்கள் எப்படிப் பரவுகிறது? அதனால் உயிர்ப்பலியாவோர் எத்தனை பேர்? என்பதையும் சிந்திக்கட்டும்! பிறகு கூறட்டும் இந்தக் கொளுத்தும் பண்டிகை அவசியந்தானா? மதச்சார்பற்ற சர்க்கார் அதை ஆதரிக்க வேண்டியதுதானா?